அவளுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது, அவளது அம்மாவைப் பற்றி என பல தகவல்களைக் கேட்க அனைத்தையும் சொல்லிக் கொண்டிருந்தாள்.
மணி இரண்டு அடித்ததும் அதற்கு மேல் இருக்க அவனுக்கு தயக்கமாக இருந்தது. அவள் மடியில் இருந்து எழுந்தவன் “சரி கயல் நேரம் ஆச்சு. உன் அப்பா சித்தி எல்லாரும் வந்தாலும் வந்திருவாங்க. அவங்க வரும் போது நான் இங்க இருந்தா நல்லா இருக்காது. நான் கிளம்புறேன்”, என்றான்.
அவன் கிளம்புறேன் என்று சொன்னதும் அவள் முகம் சுருங்கிப் போக அதை அவனால் தாங்க முடிய வில்லை. “போயிட்டு திரும்பி வரேன் டி. உங்க அப்பா வந்ததும் எனக்கு ஒரு மிஸ்டு கால் கொடு. நான் வரேன். அப்புறம் கொஞ்ச நேரம் இருந்துட்டு உன் கையால டீ குடிச்சிட்டு போறேன் சரியா?”, என்று கேட்க கொஞ்சம் முகம் தெளிந்தாள்.
ஆனால் போகும் முன் அவளை இழுத்து சுவரோடு சாய்த்து நிறுத்தியவன் “கல்யாண நாள் சீக்கிரம் வராதான்னு இருக்கு டி. உன்னை விட்டு போகவே மனசு இல்லை. உன்னை என் கையோட கூட்டிட்டு போகலாம் போலவே இருக்கு”, என்றான்.
அவன் மார்பில் உரிமையுடன் சாய்ந்தவள் “எனக்கும் தான். உங்க கூடவே இருக்கணும் போல இருக்கு. அதுவும் இந்த நாலு நாள் உங்க கூட பேசாம ரொம்ப கஷ்டப் பட்டுட்டேன். இன்னைக்கு மட்டும் நீங்க என்னைப் பாக்க வரலைன்னா என்ன ஆயிருப்பேன்னு தெரியலை. சேகர் அண்ணன் கிட்ட சொல்லி உங்களை நேர்ல பாக்கணும்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா கடவுள் தான் என்னைக் கஷ்டப் படுத்தக் கூடாதுன்னு உங்களை அனுப்பி வச்சிட்டார்”, என்று சொல்லி அவனை இன்னும் இறுக அணைத்துக் கொண்டாள்.
அவளது வெற்றுத் தோளில் பதிந்த அவனது இதழ்கள் அவள் சங்கு கழுத்தில் பதிந்து இடம் மாற அங்கு பேச்சுக்கு பஞ்சமானது. மீண்டும் அவள் இதழ்களை சிறை செய்தவன் வெகு நேரம் கழித்தே அவளை விடுவித்தான்.
முகம் சிவந்து நின்றவளை ரசித்தவன் மனதில்லாமல் கிளம்பினான். போகும் முன் அவளுடன் சேர்ந்து சில பல புகைப்படங்களை எடுக்க அவன் தவற வில்லை. வீட்டை விட்டு கிளம்பியவனுக்கு கயலின் ஊரை விட்டுச் செல்ல மனதில்லை. வெகு நேரம் ஓர் ஓரமாக இருந்த மரத்தடியில் நின்றிருந்தான். அவளுடனே இருந்திருக்கலாமோ என்று எண்ணிக் கொண்டே அவளது புகைப்படத்தை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் சென்றதும் கயலும் அவன் நினைவில் தான் இருந்தாள். அவன் தீண்டலும் முத்தமும் இன்னும் நினைவில் வந்து அவளை இம்ஸித்துக் கொண்டிருந்தது. அவன் நினைவில் இருந்தவளுக்கு கதவைத் தட்டும் சத்தம் கூட கேட்க வில்லை.
வேணியின் எண்ணில் இருந்து அழைப்பு வரவும் தான் நடப்புக்கு வந்தவள் போனை எடுத்தாள். அவள் எடுத்தது தான் தாமதம் வேணி பொரிய ஆரம்பித்து விட்டாள்.
“அறிவிருக்கா டி உனக்கு? என்ன நல்ல தின்னுட்டு தூக்கமா? எவ்வளவு நேரமா வெளிய நின்னு கதவைத் தட்டுறது? வந்து கதவைத் திற சனியனே”, என்று கத்த அவசரமாக கதவைத் திறக்கச் சென்றாள். அப்போது தமிழ் வாங்கித் தந்த சாக்லேட் அங்கே இருக்க அதை எடுத்தவள் அவசரமாக ஆடைக்குள் திணித்து மறைத்துக் கொண்டு கதவைத் திறந்தாள். அதை யாரிடமும் பங்கு போட அவளுக்கு மனதில்லை.
மீண்டும் வேணி கத்திக் கொண்டிருக்க கயல் எதுவுமே பேச வில்லை. வேணி கத்தி விட்டு அறைக்குள் சென்று விட சித்ராவும் உடை மாற்றச் சென்றாள். சமுத்திரம் சோபாவில் அமர்ந்தார்.
அவர் எதிரே நின்ற கயல் அவரையே பார்க்க “என்ன மா?”, என்று கேட்டார்.
“அவங்க வந்திருந்தாங்க”, என்று தயங்கி உரைத்தாள்.
“எனக்கு தெரியுமே மா? நான் தானே வரச் சொன்னேன்? மாப்பிள்ளை கிட்ட மனசு விட்டு பேசி சமாதானம் ஆகிட்டியா?”, என்று அவர் திருப்பிக் கேட்க ஒரு நொடி ஜெர்க் ஆனாலும் “பிராடு ஒரு வார்த்தை சொல்லலையே”, என்று வருங்கால கணவனைக் கொஞ்சிக் கொண்டாள்.
சமுத்திரம் அவள் பதிலுக்காக காத்திருப்பது புரிய “ம்ம், அவங்க பத்திரிக்கை கொண்டு வந்தாங்க. சாமி ரூம்ல இருக்கு”, என்றாள்.
“சரி நான் பாத்துக்குறேன்”, என்று அவர் சொல்ல அவள் திரும்பிச் செல்லப் போனாள்.
அப்போது “கயல்“, என்று அழைத்தார்.
“ஆன்?”
“மாப்ள கிட்ட பேசின தானே? அவர் கூட உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே? உனக்கு கல்யாணத்துல சம்மதம் தானே?”
“சம்மதம் தான். எனக்கு அவர் மேல எந்த கோபமும் இல்லை”, என்று சொல்ல அவர் முகத்தில் நிம்மதி வந்தது.
“ரொம்ப சந்தோஷம். சரி நீ போய் ரெஸ்ட் எடு”, என்று அவர் சொன்னதும் அறைக்குள் வந்தவள் அவர்கள் வந்து விட்டதாக அவனுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்தாள்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் மீண்டும் கயல் வீட்டுக்கு வந்தான் தமிழ். “வாங்க மாப்ள”, என்று வரவேற்றார் சமுத்திரம்.
“அப்பவே வந்தேன் மாமா. வீட்ல யாரும் இல்லாததுனால கிளம்பிட்டேன். பத்திரிக்கை பாத்தீங்களா?”
“பாத்தேன் மாப்ள. நீங்க கயல் கிட்ட பேசினதே எனக்கு போதும். வாங்க உக்காருங்க. அம்மாடி கயல். மாப்பிள்ளை வந்துருக்காரு. பாரு. வா வந்து டீ போடு”, என்று சொல்ல அதற்காகவே காத்திருந்தது போல வேகமாக வந்தவள் அவனைக் கண்டு புன்னகைத்து விட்டு டீ போடச் சென்றாள். வேணியும் சித்ராவும் அவனை வேண்டா வெறுப்பாக வரவேற்க அதை அவன் பெரிதாக எடுக்கவே இல்லை.
சிறிது நேரம் இருந்து விட்டு கிளம்பினான். சமுத்திரம் தான் வாசல் வரை அவனை வழி அனுப்ப வந்தார். வாசலுக்கு வந்ததும் “கொஞ்சம் தாகமா இருக்கு மாமா. தண்ணி வேணுமே?”, என்று அவன் கேட்க “இருங்க மாப்ள”, என்று சொன்னவர் உள்ளே நகர்ந்து “கயல் தண்ணி எடுத்துட்டு வா மா”, என்றார்.
அவர் வெளியே வருவதற்குள் தன்னுடைய சட்டைப் பையில் இருந்த பெரிய முள்ளை எடுத்து வேணியின் செருப்பில் பின் பக்கம் பதித்தான். கயலின் செருப்பு அங்கிருந்த செல்பில் இருக்க மற்ற மூவரின் செருப்பு தான் கிடந்தது. சித்ராவின் செருப்பு மார்டனாக இருக்க அவனால் எளிதாக வேணியின் செருப்பைக் கண்டு கொள்ள முடிந்தது.
ஒரு முள்ளைப் பதித்தவன் மீண்டும் மனது கேட்காமல் இன்னும் இரண்டு முள்ளை சேர்த்து பதித்தான். பின் நல்ல பிள்ளையாக கயல் கொடுத்த தண்ணீரைக் குடித்தவன் அவள் கை பற்றி செம்பைக் கொடுத்து அவள் வெட்கத்தை ரசித்து விட்டே சென்றான்.
அன்றைய நாள் இருவருக்குமே எண்ணிலடங்கா இனிமையான நினைவுகளைக் கொண்டதாக அமைந்தது. வீட்டுக்குச் சென்று சாமி முன்பு பத்திரிக்கையை வைத்த தமிழ் தனது அறைக்குச் சென்று விட்டான். அப்போது அவனை அழைத்த கயல் “வீட்டுக்கு போய்ட்டீங்களா?”, என்று கேட்டாள்.
“இப்ப தான் டி வந்தேன். ஆனா மனசு என்னவோ பண்ணுது?”
“என்ன பண்ணுது?”
“தெளிவா சொல்லத் தெரியலை. வருத்தம், சந்தோஷம் எல்லாம் சேந்தா எப்படி இருக்கும்? அப்படி இருக்கு. அழுகையாவும் வருது. வானத்துல மிதக்குற மாதிரியும் இருக்கு?”
“ஏன் அப்படி? உங்களுக்கு என்ன கஷ்டம்? நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கணும். நான் உங்களை எதுவும் கஷ்டப் படுத்திட்டேனா?”
“உன்னால என்னைக் கஷ்டப் படுத்த முடியாது டி. இது வேற?”
“என்னன்னு சொல்லுங்களேன்”
“லவ் அதிகமாகிருச்சு போல டி? பசலை நோய்ன்னு சொல்லுவாங்களே? அப்படி இருக்கு”, என்று அவன் உருகிய குரலில் சொல்ல நே என்று விழித்தாள். கூடவே சிறு வெட்கமும் உதயமானது.
“என்ன டி சைலண்ட் ஆகிட்ட? உண்மையா தான் சொல்றேன் பொண்டாட்டி. மனசு ஒரு மாதிரி பண்ணுது டி. அப்படியே உயிரைப் பிடிச்சு யாரோ திருகுற மாதிரி. உன் கிட்ட இருக்கணும், உன் மடில படுக்கணும் போல இருக்கு. இன்னைக்கு நடந்த ஒவ்வொரு நிகழ்வும் ஞாபகம் வந்து ஏதோ பண்ணுது டி. கயல் இன்னொரு உண்மையைச் சொல்லவா?”
அவன் பேச்சில் கிறங்கி இருந்தவள் “ம்ம்”, என்று சொல்ல “தப்பா நினைக்க மாட்டியே?”, என்று கேட்டான்.
லேசாக திகைத்தாலும் “மாட்டேன் சொல்லுங்க”, என்றாள்.
“மனசு மட்டும் இல்லை டி உடம்பும் உன்னைத் தேடுது. உனக்கு புரியுதா?”, என்று கேட்க அதைக் கேட்ட அவளுக்கு எப்படி இருக்குமாம்? அடிவயிற்றில் பட்டாம் பூச்சி பறக்கும் உணர்வு தான்.
அவள் அமைதி அவனைக் கொல்ல “உனக்கு அப்படி எல்லாம் இல்லையா டி?”, என்று கேட்டு அவளை சோதித்தான்.
“கயல்”
“ம்ம்”
“ஐ லவ் யு டி”, என்று சொல்ல அவள் கண்கள் கலங்கி விட்டது.
“அழ ஆரம்பிச்சிட்டியா? நீ அழுதா என்னால தாங்க முடியாது மா. சாரி டி கஷ்டப் படுத்திட்டேனா?”
“எனக்கு உங்களைப் பாக்கணும் போல இருக்கு. இன்னைக்கு அவ்வளவு நேரம் என் கூட இருந்தும் எனக்கு அது பத்தலை”, என்று சொல்ல அவள் மனதும் அவனுக்கு புரிந்தது. தனக்கு இருப்பது போல தானே அவளுக்கும் இருக்கும் என்று புரிந்து கொண்டவன் “கயல் உனக்கு வீடியோ கால் பேசுற மாதிரி ஒரு போன் வாங்கித் தரட்டா?”, என்று கேட்டான்.
“வேண்டாம்”
“ஏன் டி?”
“வீட்ல ஏதாவது சொல்லுவாங்க”
“அப்படின்னா கல்யாணத்துக்கு அப்புறமாவது வாங்கித் தரவா?”
“கல்யாணத்துக்கு அப்புறம் போனுக்கு அவசியம் எதுக்கு வரப் போகுது? ஸ்ஸ்….”, என்று நாக்கைக் கடிக்க அவள் சொன்னதை புரிந்து கொண்டவன் “ஏய்”, என்று ஆர்ப்பாட்டமாக அழைத்தான். அவளுக்கு தான் சொன்னதை நினைத்து வெக்கமாக வந்தது. அடுத்த நொடி அவன் போனிலே முத்தம் கொடுக்க கயல் ஒரு வழியாகிப் போனாள். வெகு நேரம் பேசி விட்டு தான் போனை வைத்தார்கள். அதுவும் அவள் இரவு உணவு செய்ய வேண்டும் என்று சொன்னதால். இரவு உணவுக்கு பிறகு மீண்டும் அவர்கள் பேச்சு தொடர்ந்தது.
அடுத்த நாள் காலையில் எழுந்த தமிழ் குளித்து விட்டு பத்திரிக்கை கொடுக்க செல்லலாம் என்று எண்ணி அதை எடுத்துப் பார்க்க அனைத்துமே கிழிந்து இருந்தது. அதைக் கண்டு அதிர்ந்து தான் போனான். இது யார் செய்திருப்பார்கள் என்று தான் அவனுக்கு தெரியுமே? அவன் கண்கள் கூட சட்டென்று கலங்கி விட்டது. சரோஜாவின் செயல் அவனை அதிக அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றும் சொல்லலாம். ஏனோ வாழ்க்கையை நினைத்து கொஞ்சம் பயமாக இருந்தது.
நிச்சயம் சரோஜா தன்னை நிம்மதியாக வாழ விட மாட்டாள் என்று அந்த நிமிடம் அவனுக்கே புரிந்தது. இதற்கு என்ன செய்யலாம் என்று எண்ணியவனுக்கு எந்த முடிவும் எடுக்கத் தெரிய வில்லை. ஏனோ நேற்றைய உற்சாகம் கூட கலைந்தது போல இருந்தது.
அவன் எதிரே வந்து நின்ற சரோஜா அவன் திகைத்து விழிப்பதைக் கண்டு நக்கலாக சிரித்தாள். அவள் முகத்தில் சிறிதும் குற்ற உணர்வு இருக்க வில்லை. மகனின் கண்ணீர் கண்டு சிரிக்கும் அன்னை இவளாக தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டான்.
“நீ இப்படியே பண்ணிட்டு இரு மா. அப்ப தான் உன்னை சீக்கிரம் வெறுத்து ஒதுக்குவேன். அது எனக்கு நல்லது தான்”, என்று வெறுப்புடன் சொல்லி விட்டு வெளியே வந்தான். பின் பிரிண்டிங்க் பிரஸுக்கு அழைத்து பத்திரிக்கை பத்த வில்லை என்று சொல்லி மீண்டும் அடிக்கச் சொன்னான். அடுத்த நாள் வந்து வாங்கிக் கொள்ளும் படி சொன்னார்கள். டபுள் செலவு தான், ஆனால் வேறு வழி இல்லையே. ஆனால் இந்த விஷயம் அவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டான். இந்த விஷயம் தெரிந்தால் அனைவரும் வருத்தப் படுவார்கள் என்று தான் தெரியுமே?
இங்கேயே இருந்தால் மனம் இன்னும் வருந்தும் என்று எண்ணியவன் சிதம்பரம் வீட்டுக்குச் சென்றான். மீனாட்சியிடம் யாருக்கெல்லாம் பத்திரிக்கை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். “பத்திரிக்கை வந்துருச்சா மாப்ள? கொடுக்க போவோமா?”, என்று கேட்டார் சிதம்பரம்.
“அது மாமா… நாளைக்கு தான் வருமாம். நாளைக்கு வாங்கிட்டு கொடுக்கலாம்”, என்று சமாளித்தான்.
“பிரஸ்காரன் இன்னைக்கு தரேன்னு தானே சொன்னான்?”
“கொஞ்சம் வேலை இருந்துச்சாம் மாமா. மன்னிப்பு கேட்டான்”, என்று சொல்ல அவரும் சரி என்று சொல்லி விட்டார்.
அடுத்த நாள் காலையில் அலுவலகம் வந்ததும் கயலிடம் இருந்து தமிழுக்கு அழைப்பு வந்தது.
“சொல்லு கயல். ஆபீஸ் போய்ட்டியா? இன்னைக்கு எங்க ரீடிங்க் எடுக்க போற?”
“தெரியலை. இனி தான் சொல்லுவாங்க”
“சரி சாப்பிட்டியா?”
“இல்லை”
“இல்லையா? ஏன்?”
“காலைல கிளம்பும் போது சித்தி அடிச்சிட்டாங்க. அதான் சாப்பாடு எடுத்துட்டு வரலை. காலைலயும் சாப்பிடலை”
“என்னது? அடிச்சாங்களா?”, என்று கேட்டவனுக்கு வேணி மீது கொலை வெறியே வந்தது.
“ம்ம்”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கண்ணீரைப் பொழிந்தது.
“எதுக்கு டி அந்த பொம்பளை உன்னை அடிச்சா? எனக்கு வர கோபத்துக்கு? உன்னை அடிக்க அவ யாரு? அவளைக் கொல்லனும் போல வெறியே வருது கயல். சரி எதுக்கு அடிச்சா சொல்லு டி”, என்று கேட்டான். மரியாதை எல்லாம் மலையேறி இருந்தது. “இந்த பொம்பளை என் அம்மா மாதிரி தான் இருக்குது”, என்று மனதில் எண்ணிக் கொண்டவன் அவள் பதிலுக்காக காத்திருந்தான்.
“அப்பாவும் சித்தியும் மதுரைல இருக்குற சொந்தக்காரங்களுக்கு பத்திரிக்கை கொடுக்க கிளம்பினாங்க. அப்ப செருப்பு போடும் போது அவங்க காலுல முள்ளு குத்தி ஒரே ரத்தம். நான் தான் முள்ளை வச்சிருப்பேன்னு அடிச்சிட்டாங்க”, என்று அவள் அழுகுரலில் சொல்ல அவனுக்கு வேதனையாகவும் இருந்தது. கூடவே குற்ற உணர்வாகவும் இருந்தது. வேணி மீது கொலை வெறியும் வந்தது. ஏதாவது பெருசா செய்யணும் என்று எண்ணிக் கொண்டான்.
“சாரி கயல், எல்லாம் என்னால தான். சாரி டி”, என்று அவன் மன்னிப்பு கேட்க “என்ன சொல்றீங்க? நீங்க எதுக்கு சாரி கேக்குறீங்க?”, என்று குழப்பத்துடன் கேட்டாள்.
“நான் தான் டி அவங்க செருப்புல முள்ளை வச்சது”
“என்னது?”
“ஆமா நான் தான் பண்ணினேன். உன் காலுல அவ்வளவு தழும்பைப் பாத்துட்டு என்னால எப்படி சும்மா இருக்க முடியும்? அவங்களை ஏதாவது காயப் படுத்தணும்னு தோணுச்சு. அதான். ஆனா நான் செஞ்சது உன்னைக் காயப் படுத்தும்னு நான் எதிர் பாக்கலை டி”, என்று அவன் சொல்ல அவளோ அழுகை மறந்து “ஹா ஹா”, என்று வெடித்துச் சிரித்தாள்.
அவள் சிரிப்பில் மன இறுக்கம் தளர்ந்தவன் “என்ன டி சிரிக்கிற? என் மேல கோபம் வரலையா?”, என்று கேட்டான்.
“எதுக்கு கோபம் வரனுமாம்?”
“உன்னை அடி வாங்க வச்சிட்டேன்ல?”
“கொஞ்சம் கூட கோபமே இல்லை. நீங்க மட்டும் இப்ப என் கண்ணு முன்னாடி இருந்தா….”
“இருந்தா…. என்ன பண்ணுவ சொல்லு… அடிப்பியா டி?”
“கண்டிப்பா மாட்டேன். அன்னைக்கு கன்னத்துல மட்டும் தான் கிஸ் பண்ணினேன். இப்ப என் முன்னாடி இருந்தா உங்க முகம் முழுக்க கிஸ் பண்ணிருப்பேன்”
“ஏய் என்ன டி சொல்ற?”
“ஆமா, ஒரு குழந்தையை காயப் படுத்தினா அந்த குழந்தையோட அம்மா அந்த குழந்தையை காயப் படுத்தினவங்களை உண்டு இல்லைன்னு ஆக்குவாங்க தானே? அப்படின்னா நீங்க எனக்கு அம்மா தான். எங்க அம்மா உங்க மூலமா எனக்கு திரும்பி கிடைச்சிட்டாங்க. எனக்காக… எனக்காக மட்டும் யோசிச்சு நீங்க இப்படி செஞ்சிருக்கீங்க? அது எப்படி என்னைக் கோபப் படுத்தும்?”, என்று நெகிழ்ந்து போய் உரைக்க கேட்ட அவனுக்கு எப்படி இருக்குமாம்?
“தேங்க்ஸ் டி. சாரி டி, அடி வாங்க வச்சிட்டேன்”
“பரவால்ல விடுங்க. சரி இனி நிம்மதியா போய் வேலை பாப்பேன். சாயங்காலம் கூப்பிடுறேன்”, என்று சொல்லி போனை வைத்தாள்.
அடுத்த நாள் காலை பத்திரிக்கை வாங்க பிரஸுக்கு கிளம்பினான் தமிழ். சிதம்பரத்திடம் வண்டி வாங்கச் செல்ல அவனைக் கண்ட சிதம்பரம் “இரு டா நானும் வரேன், எதுக்கு வாங்கிட்டு வீட்டுக்கு வந்து மறுபடியும் அலையனும். அங்க வாங்கிட்டு கோவில்ல சாமி கும்பிட்டுட்டு அப்படியே கொடுக்க ஆரம்பிச்சிறலாம்”, என்றார்.
“இல்லை மாமா… அது… நான் வண்டி புக் பண்ண வேற போகணும்”, என்று சமாளித்தான்.
“சரி டா, வண்டி புக் பண்ணிட்டு அப்படியே பத்திரிக்கை வாங்கிட்டு கொடுக்க ஆரம்பிச்சிறலாம்”
“நீ எதுக்கு வீணா அலையனும்? இன்னைக்கு நான் பாத்துக்குறேன். நாளைக்கு நீ வா மாமா”
“பரவால்ல, வா டா”, என்று சொல்ல அவருடன் சென்றான். வண்டியை புக் செய்து விட்டு பிரஸ் சென்றார்கள். பத்திரிகையை பார்சலில் வைத்துக் கொடுத்த பிரஸ்காரன் “இந்தாங்கண்ணே. அப்புறம் நேத்துக் கொடுத்த பத்திரிக்கைல ரெண்டு இடத்துல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்துச்சு. சாரி. இன்னைக்கு அதை சரி பண்ணிட்டேன்”, என்று கொடுத்தான்.
சிதம்பரம் தமிழைப் குழப்பமாக பார்க்க அவனோ அதை கண்டு கொள்ளாத மாதிரி “வா மாமா போகலாம்”, என்றான்.
“போறது இருக்கட்டும். நீ முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லு. நேத்தே பத்திரிக்கை வாங்கினியா? ஏன் எங்க கிட்ட காட்டலை? அந்த பத்திரிக்கை எங்க?”
“அது வந்து மாமா….”
“உன் முழியே சரி இல்லை. உண்மையைச் சொல்லு டா”
“அம்மா கிழிச்சிருச்சு மாமா”
“என்னது?”
“ஆமா மாமா, சாமி முன்னாடி வச்சிருந்தேன். ஆனா எல்லாம் கிழிஞ்சு இருக்கு”
“இதை ஏன் டா நேத்தே என் கிட்ட சொல்லலை?”
“சொல்லி என்ன ஆகப் போகுது மாமா?”
“உன் அம்மைக்கு கிறுக்கால பிடிச்சிருக்கு? அந்த கயல் வீட்ல போய் பிரச்சனை பண்ணிருக்கா. கயல் பிள்ளைக்கிட்டயும் தப்பா பேசிருக்கா. பத்தாதுன்னு பத்திரிக்கையையும் கிழிச்சிருக்கா. எந்த தாயாவது இப்படி பண்ணுவாளா?”
“தெரியலை மாமா, சைக்கோ மாதிரி பிகேவ் பண்ணுது. கொஞ்சம் பயமா இருக்கு மாமா. கல்யாணம் முடிஞ்சு வந்தா வீட்டுக்குள்ள விடுமான்னு கூட தெரியலை”
“அவ உள்ள விடலைனா என்ன மாப்ள? அதான் உனக்கு இன்னொரு வீடு இருக்கே? அதெல்லாம் பாத்துக்கலாம். உன் அம்மா பேர்ல இடம் வாங்கினது தப்பு. சரி அவளும் எங்க போவா? நாம தான் அவ கிட்ட கவனமா இருக்கணும். இப்ப வா போகலாம்”, என்று சொல்லி அழைத்துச் சென்றார். .
அடுத்த நாள் அனைவரும் திருநெல்வேலிக்கு உடை எடுக்கச் செல்வதாக இருந்தது. தமிழின் மொத்த குடும்பமும் வந்திருந்தார்கள். சரோஜாவைத் தவிர. கிளம்பும் போது பேருக்கு என்று அன்னையை அழைத்தான் தமிழ்.
“நான் எதுக்கு வரணும்? நீ கல்யாணம் பண்ணுறதே எனக்கு பிடிக்கலை. இதுல நான் வந்து அவளுக்கு சேலை எடுக்கணுமா?”, என்று கேட்டாள் சரோஜா.
அடுத்து எதுவும் பேசாமல் மாமா குடும்பத்துடன் கிளம்பி விட்டான். அவர்கள் வருவதற்கு முன் அவனது மூன்று தங்கைகளும் குடும்பத்துடன் அங்கே இருந்தார்கள். அவர்கள் அனைவரும் வந்து சற்று நேரத்திற்குள் கயலின் குடும்பமும் வந்து விட்டது.
காயலைக் கண்ட தமிழின் கண்கள் மின்னியது. அவன் பார்வையில் முகம் சிவந்தாலும் அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தாள் கயல்.
முதலில் அவளுக்கு உடை எடுக்கச் செல்ல எல்லாம் பத்தாயிரம் பதினைந்தாயிரம் என்று அவர்கள் சொல்ல “ஒரே ஒரு நாள் கட்டப் போற சேலை, அவ்வளவு விலைக்கு வேண்டாமே?”, என்று தமிழிடம் சொன்னாள்.
“நீ சொல்றது சரி தான் கயல். ஆனா நீ ஸ்பெஷலா தெரியணும்ல?”
“நான் உங்க கண்ணுக்கு மட்டும் அழகா தெரிஞ்சா போதும். அவ்வளவு விலைக்கு வேண்டாம். அந்த பணத்துல வேற ஏதாவது சேலை வாங்கித் தாங்க. கட்டிக்கிறேன்”, என்று சொல்ல சந்தோஷமாக சரி என்று சொன்னான்.
ஆனாலும் மனது கேட்காமல் ஐந்தாயிரத்துக்கு புடவை எடுத்துக் கொடுத்தான். தமிழ் மனதில் மற்ற அனைவருக்கும் உடை எடுக்க ஆசை தான். ஆனால் அனைவருக்கும் எடுத்தால் ஐம்பதாயிரமாவது ஆகி விடும் என்று அவன் தயங்க “என்ன டா?”, என்று கேட்டார் சிதம்பரம்.
“உங்களுக்கு அத்தைக்கு கண்டிப்பா எடுத்துருவேன் மாமா. ஆனா மத்த எல்லாருக்கும் எடுத்துக் கொடுக்க ஆசையா இருக்கு. ஆனா பணம் நிறைய செலவாகிரும். அதான் யோசனையா இருக்கு”
“புரியுது தமிழ். எங்களுக்கு கூட வேண்டாம் டா. உன் மூணு தங்கச்சி குடும்பத்துக்கு மட்டும் எடுத்துரு. நாளைக்கு ஏதாவது பேச்சு வந்துறக் கூடாது. பணத்தை பத்தி கவலைப்படாதே. நான் தரேன் டா”
“உனக்கு நிறைய கடன் பட்டிருக்கேன் மாமா. ஏற்கனவே நீ வயல்ல உழைச்சு அதுலயும் எனக்கு பங்கு கொடுக்குற? இப்ப இது வேறயா?”
“நீ என் பிள்ளை டா. அப்படி எல்லாம் பேசக் கூடாது. நாம செய்யுற முறையை சரியா செஞ்சிறனும் மாப்ள. எல்லாருக்கும் எடுக்கச் சொல்லு”, என்றார்.
அவன் அவர்களை உடை எடுக்க சொல்ல மூன்று தங்கைகளும் வேண்டாம் என்றார்கள். அவன் திருப்பி திருப்பி சொல்ல அவர்கள் மறுக்க தான் செய்தார்கள். ஆனால் அவன் கண்டிப்பாக சொல்ல வேறு வழி இல்லாமல் சம்மதித்தவர்கள் ஆளுக்கு முவ்வாயிரம் மட்டும் கொடுக்கச் சொன்னார்கள்.
அவன் திகைக்க “நீ முவ்வாயிரம் மட்டும் கொடுண்ணா. நாங்க இன்னொரு நாள் வந்து எடுத்துக்குறோம்”, என்று சொன்னாள் தேவி.
சரி அவர்கள் விருப்பப் படி எடுக்கட்டும் என்று சொல்லி பணத்தை மட்டும் அனுப்பி வைத்தான்.
தொடரும்….