இரவு விடாது பெய்த மழையால் பகல் பத்து மணி கூட அதிகாலை போல விடிந்தும் விடியாமலும் இருக்க அந்த இதமான நிலையில் மேலும் தன் மெத்தையில் புதைந்து தூக்கத்தை தொடர முனைந்த ஜென்சியை வெளியே விடாமல் கேட்ட பேச்சு குரல் இழுத்து பிடித்தது.
உறக்கம் கலைந்து சோம்பலாய் எழுந்தமர்ந்தவளுக்கு தற்போது தெளிவாய் கேட்ட அமல்ராஜின் குரலில் மொத்த தூக்கமும் ஓடிவிட,
“ஹோ மை கார்ட்.. அதுக்குள்ள வந்துட்டாங்களா..”
என நேரம் பார்த்ததும் தான் வெகு நேரம் உறங்கியிருக்கோம் என்பது புரிய லேசாய் தலையில் தட்டிவிட்டு குளியலறையில் புகுந்து கொண்டாள்.
இங்கு ஹாலில் அமல்ராஜூம் ப்ரியாவும் அமர்ந்து ரெமியிடம் பேசிக் கொண்டிருக்க சற்று தள்ளி நின்றிருந்தனர் ஜோசஃப் மற்றும் அனீ..!!
“எங்க ஜென்சியையும் காணும்.. உங்க தம்பியையும் காணும்.. தாத்தாவும் அவங்களை பத்தி பேசல.. உங்க தம்பி வந்ததும் பெரிய பிரச்சனை வருமோ..”
சின்ன குரலில் பதட்டதோடு அனீ வினவ,
“அவன் என்ன செய்வானோ ஆனால் டாட் செம்ம டென்ஷன் ஆகிடுவாங்க.. அது மட்டும் நிச்சயம்..”
என்று பதில் கூறயதில் அவள் முகம்போன போக்கில்,
“ஹே.. என்னைக்கா இருந்தாலும் இது நடந்து தான் ஆகணும் அனீ.. அது இப்பவே இருக்கட்டும்.. இங்கிருந்து கிளம்புறதுக்குள்ள எனக்கு சுத்தி நடக்கும் எல்லா கண்ணாமூச்சு ஆட்டமும் ஒரு முடிவுக்கு வந்தாகணும்…” என்றான் உறுதியாய்..
“அது சரி.. ஆனால் அவர் இருக்கும்போது ஜென்சியை இங்கே திடீர்னு பார்த்ததும்.. அவங்க சங்கடப்படுறா மாதிரி எதாவது கேட்டுட்டா.. அதான் யோசிக்கிறேன்..”
அனீயின் கூற்று அவனையும் யோசிக்க வைக்க அவள் வருமுன் தானே சொல்லிடுவோம் என்று நினைத்தவனாய்,
“தாத்தா.. ஜென்சி எங்கே காணும்..”
என்று எதார்த்தமாய் கேட்க,
“அவ இன்னும் எழும்பலடா.. இப்ப வந்திடுவா..” என்றார் அவரும் சாதாரணமாய்..
ஆனால் கேட்ட மற்ற இருவருக்கும் தான் புருவங்கள் சுருங்கியது.
“அகஸ்தீன் பொண்ணு ஜென்சியவா சொல்ற..”
என சந்தேகமாய் அமல்ராஜ் கேட்க,
“ஆமாப்பா.. வேற எந்த ஜென்சியை எனக்கு தெரியும்..” என்றான் அவனும்..
அவர் கேட்கும்முன் தானே,
“அவ ஒரு வேலை விஷயமா வந்திருந்தாள் ப்பா.. தாத்தா தான் சில்வர் ஜூபிலி ஃபங்ஷனை அட்டென் பண்ணிட்டு தான் போகணும்னு இங்க தங்க வைச்சுட்டாங்க..”
என்று சிரிப்போடு அவன் சொல்ல, ‘ஓஹோ..’ என அவர் நம்பிவிட்டாலும் ப்ரியாவின் முகம் இன்னும் தெளியவே இல்லை. என்னவோ இதில் இருப்பதாய் நெருடியது.
அச்சமயம் சரியாய் ஜென்சியும் அங்கே வந்துவிட்டாள்.
“இதோ.. ஜென்சியே வந்துட்டாளே..”
என ரெமிஜியஸ் சொன்னதில் தான் இங்கே இருப்பது அவர்களுக்கு தெரியும் என புரிய விளக்கம் சொல்ல அவசியம் இல்லாததால் நிம்மதி பிறக்க,
“வாம்மா ஜென்சி.. எப்படி இருக்க..”
என இன்முகமாய் பேசிய அமல்ராஜிடம் புன்னகையோடு,
“நல்லா இருக்கேன் அங்கிள்..” என்றவள்
“ஜென்சி..” என்று உற்சாகமாய் அருகில் வந்து அனீயை தானும் அணைத்து கொண்டு,
“நீங்க எல்லாம் வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சா..?” என்று மெல்ல கேட்க,
“அதெல்லாம் இல்ல ஜென்சி..” என பதில் கொடுத்த ஜோசஃப்,
“இங்க உனக்கு எல்லாம் ஓகே தானே..?? எந்த பிரச்சனையும் இல்லையே..” என்றான் அக்கறையாய்..
“ஐம் ஸோ ஹேப்பி ஜோ.. தாத்தா ரொம்ப ஸ்வீட்.. அவரோட நேரம் போறதே தெரியல..”
“தாத்தா ஸ்வீட் தான்.. ஆனால் தாத்தாவோட பேரன் அப்படி இல்லையே.. அதான் கேட்டேன்..”
என்று கேட்டவனிடம் சற்று குறும்பும் இருந்ததோ,
“அதற்கெல்லாம் அசந்தால் இங்கே வந்திருக்கவே மாட்டேனே..” என்றாள் கண்சிமிட்டலோடு..
இவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதையே யோசனையாய் ப்ரியா பார்த்திருக்க அதனை கவனித்து,
“ப்ரியா..” என அழைத்த ரெமி,
“இதயா தம்பிக்கு தான் ஆஃபிஸில் வேலை இருக்குன்னு சொல்லிட்டீங்க.. ஜெஸிகாவையாவது அழைச்சுட்டு வந்திருக்கலாமே..”
என்று கேட்க அதில் அவரும் அவர்களிடம் இருந்து கவனம் கலைந்து,
“அவளுக்கும் வர பிரியம் தான் ப்பா.. ஆனால் மரியம் அவளை சும்மாவே காலேஜ் லீவ் போட விடமாட்டாங்க.. இப்ப எக்ஸாம் வர போகுதுனு அனுப்பல..” என்று விளக்கம் கொடுத்தார்.
இப்படியாக இவர்கள் பேசிக் கொண்டிருந்தாலும் அமல்ராஜ், ப்ரியாவை தவிர மற்ற எல்லாருக்குமே எந்த நேரம் ஜோஷ்வா இங்கே வந்து நிற்பானோ என்ற சிந்தனை ஓடிக் கொண்டே இருக்க அவர்களை வெகு நேரம் காக்க வைக்காமல் அங்கே பிரவேசித்தான் ஜோஷ்வா.
கூடுதலாய் கையில் துளிதுளியாய் நீர் கோர்த்து இதழ்கள் கொண்டு புதிதாய் மலர்ந்த சிகப்பு ரோஜாக்களாலான பூங்கொத்து..!!!
அவர்களை திடீரென பார்த்ததில் ஜோஷ்வா நொடி பொழுது திகைத்தாலும் சட்டென தன்னை மீட்டு அலட்சியமாய் நிற்க அவனை கண்டதுமே அதிர்ந்து பின் ஆக்ரோஷமான அமல்ராஜ் சட்டென்று தன் மனைவியை பார்வையால் எரிக்க ஏற்கெனவே பதட்டத்தில் இருந்த ப்ரியா தனக்கு தெரியாது என்னும் விதமாய் தலையசைத்தார்.
அவரது நெருடல் சரியே..! ஜென்சியின் வருகையில் ஏதோ ஒரு வகையில் ஜோஷ்வா சமந்தப்பட்டு இருப்பான் என அவருக்கு உள்ளுணர்வு உணர்த்த சரியாய் அவனே வந்து நிற்கவும் அவரும் அதிர்ந்து தான் போனார்.
“இவன் எதுக்கு மாமா இங்க வந்தான்..?? நான் வரும் போது அவனையும் இங்க கூட்டி வைச்சு என்னை அவமானப்படுத்த நினைக்குறீங்களா..??”
கண்கள் செந்நிறமாக ரெமிஜியஸிடம் கோபமாய் அமல்ராஜ் முறையிட,
“கோபம் வேணாம் மாப்ள.. எந்த உள்நோக்கமும் இல்ல.. என்னோட சந்தோஷத்தில் எல்லாரும் பங்கு கொள்ளணும்னு நினைச்சேன்…”
என்று அனுசரணையாகவே அவர் பேச அதற்குள் இடைபுகுந்தான் ஜோஷ்வா.
“நான் இங்க ஏன் வந்தேன்னு எல்லாம் நீங்க கேட்க கூடாது டாட்.. இது என் தாத்தா வீடு.. என்னை வர கூடாதுனு சொல்ல யாருக்குமே உரிமை இல்ல..”
என்று எகத்தாளமாய் சொன்னவன் பார்வை தன் அன்னையிடம் பதிந்து மீண்டது.
“இத்தனை நாள் இல்லாம தீடீர்னு உனக்கு தாத்தா பாசம் வந்திடுச்சா..??? காரியகாரன்… இப்ப என்ன காரியம் ஆகணும்னுடா இங்க வந்து உட்கார்ந்து இருக்க..”
“ம்ம்.. என் தாத்தா சொத்தையும் அடிச்சு புடுங்கிட்டு போகலாம்னு வந்திருக்கேன்.. என்ன செய்வீங்க இப்ப..”
அவன் தோரணையாய் நின்றதில் அவர் இரத்த அழுத்தம் எகிறியது.
“தெரியும் டா.. உன் புத்தி..!! ச்சே.. உன் முகத்துல முழிக்கவே கூடாதுனு இருந்தேன்.. இதுக்கு எல்லாம் காரணம் நீங்க தான் மாமா.. இவனுக்காக ஒவ்வொரு தடவையும் நீங்க என்னை பகைச்சுகிறீங்க.. உங்க பொண்ணைவிட இவன் தான் முக்கியமா போயிட்டான்ல.. இனியும் இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது..”
என ரௌத்திரமாய் கத்த,
“மாப்ள..”
“என்னங்க..”
பதறி ரெமியும் ப்ரியாவும் அவரை சமாதானப்படுத்த முயல ஜென்சியும் அனீயும் பதட்டமாய் முழித்து நிற்க எப்பவும் தந்தையை ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் பாய்ந்து வரும் ஜோசஃப்போ மௌனபார்வையோடு நின்றிருந்தான்.
அதனை யார் உணர்ந்தாகளோ இல்லையோ ஜோஷ்வாவின் கண்கள் கவனிக்க தவறவில்லை.
“என் புத்தி உங்களுக்கு தெரியும் சரி.. உங்க புத்தி என்னானு நான் சொல்லட்டா..?? சொன்னால் என்னை மாறி அதை ஒத்துக்க உங்களுக்கு கட்ஸ் இருக்கா..?? அதென்ன முகத்துல முழிக்க மாட்டேன்… ஏன்..? என்னை பார்த்து அவ்வளவு பயமா இல்ல குற்றவுணர்வா டாட்.. எனக்கு எந்த குறுகுறுப்பும் இல்ல.. குற்றம் உள்ள நெஞ்சம் தானே குறுகுறுக்கும்.. அதனால தான் என்னை கண்டு ஓட நினைக்குறீங்களா..?”
இப்ப ஓடலாம்.. ஆனால் சீக்கிரமே என்னை எதிர்க்கொள்ள தயாராகுங்க டாட்.. நம்ம சவாலை நான் மறக்கவே இல்ல.. என் வார்த்தையை நான் சாத்தியப்படுத்துவேன்.. அதே மாதிரி உங்க வார்த்தையை நீங்க மறக்காம இருந்தால் சரி..”
அவரை உசுப்பேற்றுவது போல் ஜோஷ்வா பேச அவர் முகம் பாறையாய் இறுகியது.
“நான் எங்கேயும் ஓட போறது இல்ல.. இங்க தான் இருப்பேன்.. நீ என்ன தான் செஞ்சு கிழிக்க போறேன்னு பார்க்குறேன்..”
என்று அவரும் கத்த வாக்குவாதம் முற்றுவதை உணர்ந்த ரெமிஜியஸ்,
“ஜோஷ்.. நிறுத்து.. இனி எதுவும் பேச கூடாது..”
என்று அவன் பதில் சொல்லும்முன் அதட்டினார்.
அதற்கும் அலட்சியமாய் தோள் குலுக்கி அங்கிருந்து நகர போனவன் தான் கையில் வைத்திருந்த பூங்கொத்தை பார்த்து தேங்கினான்.
அது ஜென்சிக்காக வாங்கி வந்தது. இப்பொழுது கொடுப்பதா வேண்டாமா என நொடி பொழுது யோசித்து ஜென்சியை பார்க்க அதுவரை பார்வையாளராய் நின்ற ஜென்சியின் இதயம் வேகமாய் துடித்தது. அவன் எண்ணம் புரிந்து,
‘நோ.. நோ ஜோஷ்.. கிட்ட வந்திடாத.. ஸ்வேர் ஐ வீல் கில் யூ..”
தன்னுள்ளே முணுமுணுத்தபடி தன் நான்கு கண்களால் எச்சரிக்க அவனோ அதை எல்லாம் கவனிக்கவே இல்லை. நான்கே எட்டில் அவளை நெருங்கி பூங்கொத்தை அவளிடம் நீட்டியவன்,
“மை ரிட்டன் கிஃப்ட்..” என அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லி வாங்காமல் விழிவிரிய நின்றவளின் கையில் புகுத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் அமல்ராஜ்,ப்ரியாவிடம் திரும்பிய ஜென்சி அவர்கள் பார்த்த பார்வையிலே என்ன நினைத்து இருப்பார்கள் என்று புரிய மனதில் ஜோஷ்வாவை தாளித்து தள்ளினாலும் வெளியே சாந்தமாகவே நின்றாள்.
ஏற்கெனவே கோபத்தின் உச்சத்தில் இருந்தவர் இந்த பறிமாற்றத்தை கண்டு இன்னும் பல மடங்காக,
“ஜோசஃப் நீ என்னமோ சொன்ன.. ஆனால் இங்க வேற எதோ நடக்குது போலையே..?? இது தான் நீ சொன்ன வேலை விஷயமா..”
அவளை பார்த்தபடியே சொல்ல அதில் ஜென்சிக்கும் கோபம் துளிர்த்தது.
“நீங்க நினைக்கிறா மாதிரி எதுவும் இல்ல ப்பா..”
என அவனும் ஏதோ சொல்ல முயல,
“அவ்வளவு உரிமையா கையை பிடிச்சு பொக்கே கொடுத்துட்டு போறான்.. அதை பார்த்தும் நீ சொல்றதை நம்புவேன்னு நினைக்குறீயா ஜோசஃப்.. இல்ல.. இது உனக்கும் தெரியாதா…” என்றவர் ஜென்சியிடம்,
“உன்னை என்னவோ நினைச்சேன்.. ஆனா நீ என்னான இவன் கூட போய்.. ம்ச்.. இதுல வேலை விஷயமா இங்க வந்தேன்னு பொய் வேற.. உங்க அப்பா எப்படி பட்டவன் தெரியுமா..? அவன் இருந்திருந்தால் எவ்வளவு வருத்தப்பட்டு இருப்பான்.. அவர் பேரை கெடுத்திறாதே..” என்று வெடுக்கென பேச,
அவரை நிமிர்ந்து பார்த்து,
“அப்பா வைச்சுருந்த அதே மரியாதையை தான் நானும் உங்க மேல வைச்சு இருக்கேன் அங்கிள்.. அதனால நான் உங்களை அவமதிச்சு பேசுறதா நினைக்காதீங்க..” என்றவள்,
“இப்ப எதுக்கு நீங்க இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க அங்கிள்.. என்ன இப்ப நானும் ஜோஷ்வாவும் லவ் பண்றோம்னு சொல்ல வரீங்களா… அப்படியே இருந்தாலும் ஸோ வாட்..!! யாருக்கு யார் மேல வேணாலும் லவ் வரலாம்..தட்ஸ் நேச்சர்.. அதுல என்ன தப்பு இருக்கு.. எனக்கு பொய் சொல்ல அவசியம் இல்ல அங்கிள்.. இத வெளியே சொல்லறதால எங்கேயும் நான் தாழ்ந்தும் போகல…. என் அப்பா பேர் கெடவும் வாய்பில்லை.. இன்ஃபெக்ட் சுயமா முன்னேறி என்னோட முடிவுகளை நானே எடுக்கிற அளவு தைரியமா தான் தன் பொண்ணை வளர்த்து இருக்கோம்னு பெருமை தான் படுவார்..”
எந்தவித தடுமாற்றமோ தயக்கமோ இன்றி நேர்பார்வையோடு பேசியவளை கண்டு அவருக்கே சற்று வியப்பு தான்.. இந்த பெண் இவ்வளவு பேசுமா என்று..!!
அதற்கும்மேல் என்ன சொல்வது என தெரியாமல்,
“யாரோ எப்படியோ போங்க..”
எரிச்சலாய் சொல்லி அங்கிருந்து செல்ல தன் கணவன் உள்ளே மறைந்ததும்,
“ஜோஷ்வா இருக்கிறதை என்னுட்ட கூட ஏன்ப்பா சொல்லல..”
என்று தந்தையிடம் சுணங்க,
“சொன்னா.. இங்க வர வரையுமே ‘என்ன நடக்குமோன்னு..’ அதை நினைச்சே புலம்பி பயப்படுவன்னு எனக்கு தெரியாதா..? ஆனாலும் உன் புருஷனுக்கு நீ இவ்வளவு பயப்பட கூடாது ப்ரியா..” என்றார் வாஞ்சையோடு…
“எல்லாம் என் விதி..” என பெருமூச்சு விட்டவர் பின் ஜென்சி அருகில் சென்று,
“எனக்கு அன்னைக்கு ஹாஸ்பிட்டலில் பார்த்தப்பவே சந்தேகம் தான்.. ஆனால் எஸ்தர்,லிசாவை பார்த்ததும் குழம்பிட்டேன்.. எப்படியோ.. நீ தான் ஜோஷ்வாவிற்கு சரியான ஆளு.. என் பையனை எப்படியாவது நல்வழி படுத்திடுமா..!!”
என்று அவள் கன்னம் தட்டி சொன்னவர்,
“சரி.. நான் போய் அவரை சமாதானம் செய்றேன்..”
அவள் பதில் சொல்லும்முன் அவசரமாய் கூறி போய்விட,
‘இதேதுடா… இவங்க பையனை திருத்த தான் நாங்க பிறப்பெடுத்தோம் பார்… எல்லாம் இந்த பொக்கேவால வந்தது.. டேய் ஜோஷ்.. இருக்குடா உனக்கு..’
என பல்லை கடித்தவள் தன்னையே பார்த்து நின்ற மற்றவர்களை மறந்து அவனை தேடி சென்றுவிட்டாள்.
அனைத்தையும் அதிர்ச்சியாய் பார்த்து நின்ற அனீ,
“அப்போ நிஜமாவே ஜென்சி உங்க தம்பிய லவ் பண்றாளா..”
சந்தேகமாய் கேட்க,
“ம்ம்.. இதை நானும் பலவகைல கேட்டு பார்த்துட்டேன். அவ ஒத்துகிறதா இல்ல..”
என ஆயாசமாய் தலையசைத்து சொல்ல,
“அதெல்லாம் கடைசியா அப்படி தான்னு வந்து நிற்பாங்க ரெண்டு பேரும்.. நாம பொறுமையா இருந்து வேடிக்கை மட்டும் பார்ப்போம்..”
என புன்னகைத்தார் ரெமிஜியஸ்.