எனைச் சுற்றி ஏகாந்தம்
அத்தியாயம் 8
அடுத்ததாக தமிழுக்கு உடை எடுத்து முடித்தார்கள். மீனாட்சி, சிதம்பரம் மற்றும் சரோஜாவுக்கு கூட உடை எடுத்து விட்டான். வைஷ்ணவி குடும்பத்துக்கும் அவன் எடுத்துக் கொடுக்க வைஷ்ணவியும் சேகரும் வேண்டாம் என்றார்கள். சேகரின் அன்னைக்கு கூட அவன் எடுத்துக் கொடுத்தான்.
சேகர் மறுக்க “அப்படின்னா நீங்க என்னை தம்பியா நினைக்கலையா?”, என்று கேட்டான் தமிழ். அதற்கு மேல் சேகரால் மறுக்க முடிய வில்லை. “எப்பவும் நீ என் தம்பி தான் டா”, என்று சொன்ன சேகர் அவனை அனைத்துக் கொண்டான்.
கயல் குடும்பத்துக்கும் அவன் உடை எடுப்பதாக சொல்ல சமுத்திரம் மறுத்து விட்டார். “நீங்க கயலுக்கு எவ்வளவு வேணும்னாலும் செய்யுங்க மாப்ள. நான் தடுக்க மாட்டேன். ஆனா வேணிக்கும் சித்ராவுக்கும் நீங்க செய்ய தேவை இல்லை. என் சம்பாத்தியம் மொத்தத்தையும் அவங்க தான் திங்குறாங்க. இதுக்கு மேல நீங்களும் செய்யணுமா? வேண்டாம். கயலுக்கு மட்டும் செய்ங்க”, என்றார்.
வேணி மீது இருந்த கோபத்தால் அவனும் உடனே சரி என்று சொல்லி விட்டான். அவன் மனதுக்கினியவளை காயப் படுத்தியவளை பழி வாங்க காத்திருக்கும் அவன் வேணிக்கு உடை எடுத்துக் கொடுத்து விடுவானா என்ன?
மற்ற அனைவருக்கும் உடை எடுத்த பிறகு தமிழ் மனதில் சந்தோஷம் வந்திருந்தது. இருந்த மன உளைச்சல் கூட அவனை விட்டுச் சென்றிருந்தது. நிறைவாக உணர்ந்தான். அன்னை சரி இல்லை என்றாலும் அவனுக்கு கிடைத்திருக்கும் மற்ற உறவுகளுக்காக கடவுளுக்கு நன்றி சொன்னான்.
உடை எடுத்து முடித்த பின் தாலி எடுக்கச் சென்றார்கள். அண்ணன் மனைவிக்கு நாத்தனார்கள் தான் தாலி எடுக்க வேண்டும் என்பதால் மூன்று தங்கைகளும் அதை எடுத்தார்கள். தாலிசெயினையும் அவர்களே வாங்கி விட்டார்கள். தமிழ் பணம் வேண்டுமா என்று கேட்க வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள்.
தமிழும் கயலுக்கு என ஒரு ஜிமிக்கியும் மோதிரமும் வாங்கிக் கொண்டான். அவளுக்கு தெரியாமலே. எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு மதிய உணவு உண்ண ஹோட்டலுக்கு சென்றார்கள். அனைவருக்கும் என்ன வேண்டும் என்று கேட்டு கேட்டு வாங்கிக் கொடுத்த தமிழ் இறுதியாக அனைவருக்கும் ஐஸ்கிரீமும் வாங்கிக் கொடுத்தான். அனைவருக்கும் ஆர்டர் செய்து விட்டு கயல் அருகே அமர்ந்து உண்ண ஆரம்பித்தான். யாருக்கும் தெரியாமல் டேபிள் அடியில் அவள் கையைப் பிடித்துக் கொண்டான். அவன் தொடுகையில் அவள் உண்ண முடியாமல் தடுமாறினாள்.
“பிளீஸ் கையை எடுங்க. எனக்கு என்னவோ போல இருக்கு”
“கண்டிப்பா கையை எடுக்கணுமா?”, என்று ஏக்கத்துடன் கேட்க அவளும் அவன் விரலை இறுகப் பிடித்துக் கொண்டாள். அனைவரும் கதை பேசிய படியே உண்டு கொண்டிருந்தார்கள்.
வேணியை பழி வாங்க மனதில் தமிழ் ஒரு பிளான் வைத்திருக்க அது நிறைவேறவே இல்லை. ஆனால் அவனே எதிர் பாராத நேரம் அவனுக்கு அந்த வாய்ப்பு வந்தது. அனைவரும் சாப்பிட்டு விட்டு வெளியே வந்து விட்டார்கள். சிதம்பரம் பாத்ரூம் சென்றிருக்க அவருக்காக அனைவரும் ஹோட்டல் வெளியே காத்திருந்தார்கள்.
அப்போது “தமிழ் எனக்கு இன்னொரு ஐஸ்கிரீம் வாங்கி தா டா”, என்று கேட்டாள் வைஷ்ணவி.
“சின்னப் பிள்ளையா டி நீ?”, என்று சொன்ன சேகர் அவளை முறைக்க தமிழ் சிரித்த படியே “வாங்கி தரேன் வைஷு. வேற யாருக்கும் ஏதாவது வேணுமா?”, என்று கேட்டான்.
“பிரியாணி சாப்பிட்டது நெஞ்சுக்குள்ளயே நிக்குற மாதிரி இருக்கு தம்பி. ஒரு லெமன் ஜூஸ் வாங்கிட்டு வறீங்களா?”, என்று கேட்டாள் வேணி.
“சரி வாங்கிட்டு வரேன்”, என்று சந்தோஷமாக சென்றவன் ஐஸ்கிரீமும் ஜூசும் வாங்கினான். ஆனால் அவன் ஜூஸில் பேதி மாத்திரையை கலந்ததை வேறு யாரும் கவனிக்க வில்லை.
“இந்தாங்க”, என்று வேணியிடம் ஜூசை நீட்டினான். அவள் சிறு சிரிப்புடன் வாங்கிக் குடிக்க ஆனந்தமாக பார்வை இட்டுக் கொண்டிருந்தான். கயல் பட்ட கஷ்டங்களுக்கு வேணி படப் போவது சாதாரணம் என்றாலும் கொஞ்சமே கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
அதற்கு பின் பஸ் ஸ்டாண்ட் சென்றவர்கள் ஊருக்கு பஸ் ஏறினார்கள். பஸ்ஸில் போகும் போது கயல் ஒரு சீட்டில் அமர்ந்திருக்க “தங்கச்சி பக்கத்துல ஊக்காருங்க மச்சான். அதான் லைசென்ஸ் கிடைச்சிருச்சே”, என்று சொன்னான் தேவியின் கணவன். கரும்பு தின்ன கசக்குமா என்ன? ஆனந்தமாக கயல் அருகே சென்று அமர்ந்தான்.
இருவருக்குமே முதல் நாள் பயணம் நினைவில் வந்தது. அன்றும் ஒரே சீட்டில் அமர்ந்திருந்தாலும் இருவருக்கும் இடையே இடைவெளி இருந்தது. ஆனால் இப்போதோ அந்த இடைவெளி சுத்தமாக இல்லை. இருவரின் கால்களும் தோள்களும் ஆனந்தமாக உரசிக் கொண்டிருக்க கைகளும் தீண்டிக் கொண்டது. உடல்களின் உரசலால் உள்ளுக்குள் தீப் பற்றிய உணர்வு இருவருக்குமே எழுந்தது.
இப்போதே அவள் கரம் பற்றி மோதிரத்தை அணிவிக்க ஆசை தான். ஆனால் திருமணம் முடியட்டும் என்று எண்ணி அமைதியாக இருந்து கொண்டான். இருவரும் எதுவும் பேச வில்லை தான். ஆனால் அவர்கள் மனது மட்டும் பேசிக் கொண்டே இருந்தது. அந்த ஒரு மணி நேர பயணத்தை ஆனந்தமாக அனுபவித்தார்கள்.
அவ்வப்போது தமிழ் வேணியைக் கவனிக்கவும் தவற வில்லை. அவள் சீட்டில் நெளிவதும் வயிற்றைப் பிடித்துக் கொள்வதையும் கண்டவனுக்கு அவ்வளவு சந்தோஷம். பெரிதாக எதுவும் செய்ய முடிய வில்லை என்றாலும் ஏதோ சின்னதாக பழி வாங்கிய சந்தோஷம் அவனுக்கு வந்தது.
முதலில் கயலின் நிறுத்தம் வர மனமில்லாமல் அவனை பிரிந்து சென்றாள். வேணியோ அவசர அவசரமாக கீழே இறங்கி வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள். மற்றவர்கள் குழப்பத்துடன் அவள் பின்னே சென்றார்கள். அதை சிரிப்புடன் தமிழ் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பஸ் நகர்ந்தது.
வீட்டுக்குச் சென்றதும் வேணி சென்றது கழிவறைக்கு தான். அதுவும் கயல் பயன்படுத்தும் கழிவறைக்கு. கதவைத் திறந்து உள்ளே செல்லும் அளவுக்கு கூட அவளுக்கு பொறுமை இல்லை. மீண்டும் மீண்டும் அவள் கழிவறைக்குச் செல்ல “பிரியாணி சாப்பிட்டது சூட்டைக் கிளப்பி விட்டது போல?”, என்று எண்ணிக் கொண்டார்கள் மற்றவர்கள்.
தமிழ் உடையுடன் வீட்டுக்குச் செல்ல அவனை தடுத்து நிறுத்திய சிதம்பரம் “உன்னோட கல்யாண டிரஸ் எல்லாம் நம்ம வீட்ல இருக்கட்டும் தமிழ்”, என்று சொல்லி வாங்கிச் சென்று விட்டார். அவனுக்கு காரணம் புரிந்தது. சரோஜா அதை கிழித்தாலும் கிழித்து விடுவாள். அதனால் அவரிடம் பையைக் கொடுத்து விட்டு தனது வீட்டுக்குச் சென்றான். அவன் வருவது தெரிந்தும் அவனைக் கண்டு கொள்ளாமல் வாசலில் அமர்ந்திருந்தாள் சரோஜா.
“அம்மா இந்தா இது உனக்கு சேலை”, என்று கவரை நீட்டினான்.
அதைப் பிடுங்கி தூரப் போட்டவள் அவனை முறைத்துப் பார்த்தாள். கயலுக்கு என்று வாங்கிய நகைகளை அவனது பீரோவில் வைத்து பூட்டி விட்டு வெளியே வந்தவன் அன்னையின் அருகே அமர்ந்தான். அவனைக் கண்டு சரோஜா முகம் திருப்ப “நீ மாறவே மாட்டியா மா? உனக்கு என்ன தான் பிரச்சனை?”, என்று கேட்டான்.
அவள் அமைதியாக இருக்க “உனக்கு ஏன் மா என்னைப் பிடிக்கலை? நான் தானே உன்னோட முதல் பிள்ளை. உன்னை அம்மான்னு முதல்ல கூப்பிட்டது நான் தானே? அப்புறம் எதுக்கு என் மேல உனக்கு இவ்வளவு வன்மம்? நான் நல்லா இருக்க கூடாதுன்னு ஏன் நினைக்கிற?”, என்று கேட்டான்.
“நான் ஒண்ணும் நீ நல்லா இருக்க கூடாதுன்னு நினைக்கலையே? நீ நல்லா இருக்கணும்னு தான் சொல்றேன். உனக்கு தான் அது புரியலை. நான் பணக்கார சம்பந்தம் பாத்தேன்ல? நீ ஏன் சம்மதிக்கலை?”
“அப்படின்னா உனக்கு பணம் தான் முக்கியமா மா?”
“பணம் இல்லைன்னா எதுவும் இந்த உலகத்துல இல்லை தமிழ்”
“அம்மா நீ பணம் இல்லாம எங்களை வளக்க கஷ்டப் பட்டிருக்க தான். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா இப்ப நம்ம கிட்ட தேவையான பணம் இருக்கு. அப்புறம் எதுக்கு என்னோட சந்தோஷம் முக்கியம்னு நினைக்க மாட்டிக்க? கயல் நல்லவ மா. நாங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கும் போது நீ மட்டும் ஒதுங்கி இருக்குறது எனக்கு கஷ்டமா இருக்கு. நீ வேற யாரோ இல்லை. என்னோட அம்மா. நீ தானே எல்லாம் எடுத்து செய்யணும்? கல்யாணத்தை நல்ல படியா நடத்திக் கொடு மா. உன்னைக் கெஞ்சிக் கேக்குறேன்”
“என்னை அம்மான்னு நினைச்சிருந்தா என்னை விட்டுட்டு பொண்ணு பாக்க போயிருப்பியா? கல்யாணம் முடிவு பண்ணிருப்பியா?”
“தப்பு தான். சரி நான் இப்ப என்ன பண்ணனும்? சொல்லு”
“இந்த கல்யாணத்தை நிறுத்திரு”
“அம்மா”
“ஆமா நிறுத்திரு. அதுக்கப்புறம் நான் பாக்குற பொண்ணைக் கட்டிக்கோ. உன் கல்யாணத்தை நான் ஜாம் ஜாம்னு நடத்துறேன். நானும் சந்தோஷமா இருப்பேன். நீயும் சந்தோஷமா இருப்ப”
“நீ திருந்தவே மாட்டியா மா? எப்பவும் பணம் பணம்னு அலையுற?”
“திருந்த நான் எந்த தப்பும் செய்யலை. உனக்கு தான் பணத்தோட அருமை தெரியலை”
“சரி விடு, இந்த கல்யாணத்தையாவது நல்ல படியா நடத்த விடு. பத்திரிக்கையை எரிச்ச மாதிரி வேற ஏதாவது கிறுக்குதனம் பண்ணாத. நீ பத்திரிக்கையை எரிச்சதை கூட நான் தங்கச்சிங்க கிட்ட சொல்லலை”
“நான் பேசாம தானே இருக்கேன்? உன் கல்யாணத்துக்கே நான் வரலை போதுமா? நீ எப்படியும் நாசமா போ”
“நீ வரலைன்னா எல்லாரும் கேப்பாங்க மா”
“கேட்டா உன் அம்மா செத்துட்டான்னு சொல்லு”
“ஏன் இப்படி பேசுற? கல்யாணத்தை நிறுத்துறதைத் தவிர வேற ஏதாவது சொல்லு நான் கேக்குறேன். உனக்கு மாசம் மாசம் பத்தாயிரம் பணம் வேணும்னாலும் தரேன் மா. அந்த பணம் உன் ஒருத்திக்கு போதும் தானே?”
“என்ன பிச்சை போடுறியா?”
“என்ன கேட்டாலும் இப்படி விதண்டாவாதமா பேசினா நான் என்ன செய்ய?”, என்று அவன் கேட்க சரோஜா பதிலே சொல்ல வில்லை.
இவ்வளவு நேரம் பேசியதே வீண் என்று புரிந்து கொண்டான். சரோஜா மனதில் புகுந்திருக்கும் ஈகோவும் பணப் பைத்தியமும் அவளாக புரிந்து கொள்ளும் வரை அவளை விட்டுப் போகாது என்று புரிந்தது.
அன்று இரவு “அம்மா பசிக்குது, சாப்பாடு தா”, என்று தமிழ் கேட்க “இனி உனக்கு என் கையால சாப்பாடு தர மாட்டேன்”, என்று சொல்ல திகைத்துப் போய் பார்த்தான்.
“நான் உன் மகனே இல்லை அப்படி தானே? என்னை எங்கயோ இருந்து தூக்கிட்டு வந்துருக்க? அதான் நான் நல்லா வாழக் கூடாதுன்னு நினைக்கிற? என் மூலமா உனக்கு பணம் வரணும். அந்த பணத்தால உன் மூணு பொண்ணுங்களும் நல்லா இருக்கணும். நான் உன் ஆசைக்கு எதிரா இருக்கேன்னு தான் நீ இப்படி பண்ணுற சரி தானே? சொல்லு. என் அம்மா யாரு? என் அப்பா யாரு? என்னை எங்க இருந்து தூக்கிட்டு வந்த?”, என்று எரிச்சலுடன் கேட்டான்.
பதிலே சொல்லாமல் அவனை முறைத்து விட்டு சென்று விட்டாள். பசி உயிர் போனது தமிழுக்கு. மான அவமானம் பார்த்தால் வாழ முடியாது என்று புரிந்தவன் அத்தை வீட்டுக்குச் சென்றான்.
“வா தமிழு, சாப்பிடுறியா?”, என்று கேட்டாள் மீனாட்சி.
அவன் முகத்தில் இருந்த சோர்வே அவன் சாப்பிட வில்லை என்று புரிய வைத்தது. அதனால் “என்ன கேட்டுட்டு இருக்க? தட்டுல வச்சிக் கொடு மீனாட்சி”, என்றார் சிதம்பரம்.
அவள் எடுக்க போக அவன் அமைதியாக இருந்தான். “என்ன தமிழ் ஆச்சு?” என்று கேட்டார் சிதம்பரம்.
“மாமா, கல்யாணம் முடியுற வரைக்கும் நான் இங்கயே சாப்பிடட்டுமா?”, என்று கலங்கிய குரலில் கேட்டான். ஏதோ பிச்சை எடுப்பது போல ஒரு உணர்வு அவனை கூறு போட்டது.
“ஏலேய் இதைக் கேக்கணுமா? கூறு கெட்டவன் மாதிரி பேசிட்டு இருக்க? என்ன உன் அம்மா உன் மனசை மறுபடியும் கொன்னு அனுப்பிட்டாளா?”
“ம்ம்”
“என்ன சொன்னா?”, என்று அவர் கேட்க நடந்ததை அப்படியே சொன்னான். சிதம்பரத்துக்கு கஷ்டமாக இருந்தது. உள்ளே இருந்து கேட்ட மீனாட்சியும் கண்களை புடவையால் துடைத்துக் கொண்டாள்.
ஒரு கையில் தட்டையும் மற்றொரு கையில் தண்ணீரும் எடுத்து வந்தவள் அவன் எதிரே வந்து அமர்ந்தாள். அவன் தட்டை கையில் வாங்கப் போக “கல்யாணம் முடியற வரைக்கும் நீ எங்க பிள்ளை தான் டா. என் பிள்ளைக்கு நான் ஊட்டி விட மாட்டேனா?”, என்று கேட்டு அவனுக்கு ஊட்டி விட அவன் கண்கள் கண்ணீரை அப்படியே பொழிந்தது.
அவனது கண்ணீர் மற்ற இருவரையும் அதிகம் பாதித்தது. ஒரு வளர்ந்த ஆண் மகன் சிறு பிள்ளை போல அழுவது அவர்களை வெகுவாக வருத்தியது.
“அது என்ன கல்யாணம் முடியுற வரைக்கும் தான் பிள்ளைன்னு சொல்ற? ஏன் அதுக்கப்புறம் அவன் நம்ம பிள்ளை இல்லையா?”, என்று கேட்டார் சிதம்பரம். அவர் தமிழின் மனதை மாற்ற தான் அப்படி பேசுகிறார் என்று மற்ற இருவருக்கும் புரிந்தது.
“அதானே? அது எப்படி அத்தை நீ அப்படிச் சொல்லலாம்? கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன் பிள்ளை இல்லையா? அதுக்கப்புறம் எனக்கு நீ ஊட்டி விட மாட்டியா?”
“மாட்டேன் டா”
“ஏனாம்?”
“அதுக்கப்புறம் உனக்கு ஊட்டி விட தான் உன் பொண்டாட்டி வந்துடுவாளே? கல்யாணத்துக்கு அப்புறம் நீ எங்களை எல்லாம் மறந்துட்டு அவ முந்தானையை தான் பிடிச்சிட்டு சுத்துவ?”, என்று சிரிப்புடன் மீனாட்சி சொல்ல “பாரு மாமா அத்தை சொல்றதை”, என்று சிணுங்கினான் தமிழ்.
“என் பொண்டாட்டி இன்னைக்கு தான் சரியா பேசிருக்கா”, என்று சிதம்பரம் சொல்ல மற்றவர்களுக்கும் சிரிப்பு வந்தது. மீனாட்சி ஊட்டிய உணவை உண்டு விட்டு சிறிது நேரம் மீனாட்சி மடியில் தலை வைத்துப் படுத்தவன் திருமணம் பற்றி பேசிக் கொண்டிருந்தான். பின் அவர்களிடம் சொல்லி விட்டு தூங்க அவனது வீட்டுக்குச் சென்று விட்டான். அவன் மனது சரியாக இல்லை என்று புரிந்து கொண்ட சிதம்பரம் கயலை அழைத்தார்.
அதை எடுத்தவள் “சொல்லுங்கப்பா, என்ன இந்த நேரம் கால் பண்ணிருக்கீங்க?”, என்று உரிமையாக கேட்டாள்.
“இல்ல டா மா, ஒரு விஷயம் பேசணும். அதான் கூப்பிட்டேன். சரி நீ சாப்பிட்டியா?”
“சாப்பிட்டேன் பா. என்ன விசயம் பா? ஏதாவது பிரச்சனையா? உங்க குரலே சரி இல்லை. தமிழ் எப்படி இருக்காங்க பா? அவங்களுக்கு ஒண்ணும் இல்லையே?”
“அவன் கொஞ்சம் சரி இல்லை மா”
“என்ன ஆச்சு பா?”
“அவன் அம்மாகாரி அவனை நிம்மதியா இருக்க விட மாட்டா”, என்று ஆரம்பித்தவர் எல்லாம் சொன்னார்.
“சாப்பிட்டுட்டு தூங்க போயிருக்கான் மா. நீ கொஞ்சம் அவன் கிட்ட பேசுறியா? நீ பேசினா அவன் சரியாகிருவான். உன்னால மட்டும் தான் அவன் மனசை மாத்த முடியும்”
“கண்டிப்பா அவங்க கிட்ட பேசுறேன் பா”
“சரி டா மா”
“அப்பா”
“சொல்லு கயல்”
“கல்யாணம் முடிஞ்சதும் அத்தை எங்களை சந்தோஷமா இருக்க விடுவாங்களா பா?”
“நானும் அதை தான் மா யோசிச்சிட்டு இருக்கேன். ஏதாவது வழி கிடைக்கும். பாப்போம். எந்த அளவுக்கு ஆடுறான்னு பாப்போம். நீ கவலைப் படாதே. நாங்க எல்லாம் இருக்கோம் தானே? உங்களை அப்படியே விட்டுருவோமா? நீ கவலைப்படாம அவன் கிட்ட சந்தோஷமா பேசு டா”
“சரிப்பா”, என்று சொல்லி போனை வைத்தவள் தன்னவனை அழைத்தாள்.
அதை எடுத்த தமிழ். “ஹாய் பொண்டாட்டி, சாப்பிட்டுட்டியா?”, என்று கேட்டான்.
“சாப்பிட்டேன். நீங்க சாப்பிட்டீங்களா?”
“சாப்பிட்டேன்”, என்று சொன்னவன் உற்சாகமாக அவளிடம் பேசினான். அவளும் வேறு எதுவும் கேட்காமல் இயல்பாக பேசினாள்.
“என்ன சாப்பாடு செஞ்ச டி இன்னைக்கு?”
“இன்னைக்கு கஞ்சியும் துவையலும் தான்”
“ஏன்? டிபன் செய்யலையா?”
“அந்த கதையை ஏன் கேக்குறீங்க? சித்திக்கு உடம்பு சரி இல்லை”, என்று சொல்ல அவன் கண்கள் மின்னியது.
“என்ன ஆச்சு டி?”
“சாப்பாடு ஒத்துக்கலை போல? சாயங்காலம் வீட்டுக்கு வந்ததுல இருந்து ஒரே வயித்தால போகுது போல? கிட்ட தட்ட பதினஞ்சு தடவையாவது போயிருப்பாங்க?”
“அத்தனை தடவையா? ரெண்டு மாத்திரை தானே போட்டேன்?”, என்று உளறி நாக்கைக் கடித்துக் கொண்டான்.
“என்னது? என்ன சொன்னீங்க?”
“அவங்க குடிச்ச லெமன் ஜூஸ்ல ரெண்டே ரெண்டு பேதி மாத்திரை தான் டி கலந்தேன்”, என்று சொல்ல அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.
“தமிழ் இது தப்பு இல்லையா? நீங்க எனக்காக செய்யுறது எனக்கு சந்தோஷமா தான் இருக்கு. ஆனா இனி வேண்டாமே?”
“சரி செய்யலை. நீ சொல்லிட்டல்ல? இனி அவங்களை கண்டுக்க மாட்டேன் போதுமா?”
“நிஜமாவா?”
“நிஜமா தான் டி. உனக்கு கஷ்டத்தைக் கொடுக்குற விஷயத்தை நான் எப்படி செய்வேன்? ஆனா அவங்க உன்னை ஏதாவது கஷ்டப் படுத்தினா அதுக்கப்புறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பில்லை. உண்டு இல்லைன்னு ஆக்கிருவேன்”
“இன்னும் ஒரு வாரம் தானே? நான் பேசாம இருந்துக்குறேன். அவங்களும் ஒண்ணும் செய்ய மாட்டாங்க”
“அதுக்கப்புறமும் இருக்கே டி?”
“அதுக்கப்புறம் யார் இங்க வரப் போறா?”
“என்ன டி சொல்ற?”
“நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நாம இங்க வரவே கூடாது. எனக்கு பிறந்த வீடுன்னு ஒண்ணு இல்லவே இல்லை. நான் நன்றி மறந்தவளா இதைச் சொல்லலை. இங்க இருக்குறவங்களுக்கு நான் ஒரு வேஸ்ட் பீஸ். நான் போனா அவங்களுக்கு சந்தோஷம் தான். திருப்பியும் இங்க வந்து அவங்களைக் கஷ்டப் படுத்த எனக்கு விருப்பம் இல்லை. எப்பவுமே நான் இங்க வரக் கூடாது. எனக்கு வளைகாப்பு நடந்தா கூட இங்க கூட்டிட்டு வரக் கூடாது”
“ஏன் டி எனக்கு முக்கியம் நீ தான் சரியா? நான் ஒண்ணும் மாமியார் வீட்ல விருந்து சாப்பிட ஆசைப் படலை. உனக்கே அங்க போகப் பிடிக்கலைன்னா நான் எதுக்கு அங்க போக நினைக்க போறேனாம்? ஆனா உங்க அப்பா….”
“அவருக்கு இன்னொரு பொண்ணு இருக்கா. என் பிரிவு அவரை பாதிக்காது”
“அவருக்கு உன்னைப் பிடிக்கும் டி. உனக்கு ஏதாவது கஷ்டம் வரும்னு அவர் இத்தனை வருஷம் அமைதியா இருந்துருக்கலாம்”
“நீங்க சொல்றதும் சரி தான், ஆனா கஷ்டம் வந்தப்பவும் அமைதியா தானே இருந்தார்?”
“சரி விடு. அதைப் பேசி இனி என்ன யூஸ்? அதான் அன்னைக்கே சொல்லிட்டேனே. நான் தான் உனக்கு அப்பா. நான் தான் உனக்கு அம்மா”
“அப்பா எப்ப என்னோட புருசனா இருப்பீங்களாம்?”, என்று அவள் சரத்துடன் கேட்க “அது தெரியாது. ஆனா நான் புருசனா இருக்குற ஒவ்வொரு நிமிசமும் உன்னைக் கட்டுப் பிடிச்சிட்டு தான் இருப்பேன்”, என்று சொல்ல சீ என்று வெட்கப் பட்டாள்.
“என்ன சீ? அது எல்லாம் ஒரு தனி சுகம் டி. கல்யாணத்துக்கு அப்புறம் பாரு, ஐயாவோட கொஞ்சலை”
“பாக்குறேன் பாக்குறேன். சரி என்னைல இருந்து லீவ் போடப் போறீங்க?”
“கல்யாணத்துக்கு மூணு நாள் முன்னாடி லீவ் போடப் போறேன் டி. நீ என்னைல இருந்து லீவ்?”
“நான் ரெண்டு நாள் போகணும். அப்புறம் லீவ் தான்”
“சரி டி, ஆனா வீட்லயே இருந்தாலும் உனக்கு தான் ரெஸ்ட்டே கிடையாதே”
“என்ன பண்ண? கொஞ்ச நாள் தானே?”
“ஆமா கொஞ்ச நாள் தான். அதுக்கப்புறம் என் கிட்ட வந்துருவியே? என்னோட மகாராணி ஆகிருவ. அப்புறம் உன்னோட கல்யாண சட்டை தைக்க அளவு சட்டை வேணும் டி. அத்தை கேக்க சொன்னாங்க”
“வீட்டுக்கு வறீங்களா எடுத்து தரேன்?”
“வந்தா எனக்கு அன்னைக்கு மாதிரி தனிமை வேணும். கிடைக்குமா?”
“கண்டிப்பா கிடைக்காது”
“அப்படின்னா நாளைக்கு ஆபீஸ் வரும் போது கொண்டு வா. நான் வந்து வாங்கிக்கிறேன்”
“சரி வாங்க”
“அப்புறம் கயல் உன் கிட்ட ஒண்ணு கேக்கணும்னு நினைச்சேன். நான் வாங்கித் தந்த சாக்லேட்டை சாப்பிட்டியா?”
“விடுவேனா? ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டேன்”
“ஆனா அன்னைக்கு வந்த டேஸ்ட் வந்துருக்காதே?”, என்று சொல்ல சிரித்தவள் ஆமா என்றாள்.
மேலும் சிறிது நேரம் பேசி அவர்கள் காதலை வளர்த்து விட்டு அவளை தூங்கச் சொல்லி போனை வைத்தான். அப்போது அவனை அழைத்தார் சமுத்திரம்.