அத்தியாயம் 7_2 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:2,112
“உன் மன்னிப்பு யாருக்கு வேணும்? அதை நீயே வச்சிக்கோ. அப்புறம் முடிஞ்ச அளவுக்கு என்னை விட்டு ஒதுங்கியே இரு. அது தான் உனக்கு நல்லது. நீ பேசாம இருக்குறது எனக்கு ரொம்ப நல்லது. என்கிட்ட அதிகம் பேசுற வேலை வச்சிக்காத. ஊருக்கு தான் நீ எனக்கு பொண்டாட்டி. அதை தவிர நமக்குள்ள எந்த உறவும் இல்லை. இன்னைல இருந்து நீ வேற நான் வேற”, என்று கண்களில் முழு வெறுப்புடன் சொல்ல அவள் அதிர்ந்து போய் நின்றாள்.
அவன் கோபத்தை மெதுவாக சரி செய்யலாம் என்று அவள் எண்ண அவனுடைய முகத்தில் இருந்த வெறுப்பு அவளுக்கு வாழ்க்கையைப் பற்றிய பயத்தைக் கொடுத்தது. அவள் அதிர்ச்சியை பார்த்தாலும் அதை கண்டு கொள்ளாமல் ஒரு போர்வையை எடுத்து தரையில் விரித்தவன் தலையணையை தூக்கி தரையில் போட்டு படுக்க ஆயத்தமானான்.
சிலைக்கு உயிர் வந்தது போல சுயநினைவுக்கு வந்தாள் ரேகா. அவன் மனதில் இருப்பதை கோபத்திலாவது அவன் கக்க வேண்டும். அப்படி அவன் மனதில் இருக்கும் கோபம் வெளியே வந்தால் தான் எல்லாம் சரியாகும் என்று எண்ணி அவனைப் பார்த்தாள். அவன் தரையில் படுக்க போவதை உணர்ந்து “நில்லுங்க”, என்றாள்.
“என்ன?”
“இப்படி செஞ்சா என்ன அர்த்தம்?”
“என்ன செஞ்சேன்? புரியலை”
“இன்னைக்கு நமக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கு. ஆனா நீங்க அந்த நினைப்பே இல்லாம என்னை உதாசீனப் படுத்தினா என்ன அர்த்தம்?”, என்று அவனை பேச வைத்தே ஆக வேண்டும் என்று கேட்டாள்.
“வேற என்ன பண்ண சொல்ற? உன்னைக் கட்டி புடிச்சு முதலிரவு கொண்டாடச் சொல்றியா?”, என்று நக்கலாக அவன் கேட்க அவள் முகம் சிவந்து போனது.
“எப்படி பேசுறான் பாரு?”, என்று எண்ணி உதடு கடித்த படி நின்றாள் ரேகா. அந்த நேரத்திலும் அவளுடைய சிவந்த முகம் அவனுக்குள் ஆசை தீயை மூட்டியது. எளிமையான காட்டன் புடவையில், தலை நிறைய மல்லிகைப் பூச்சூடி, கழுத்தில் மஞ்சள் தாலி மின்ன, புதிதாக பூத்த மலர் போல் இருந்தவளை அள்ளி அணைக்க அவன் ஆண்மை துடித்தது. ஆனால் கூடவே அவள் மேல் வெறுப்பும் வந்தது.
“பாவி, இவ்வளவு அழகா இருந்து படுத்துறாளே?”, என்று அவன் எண்ணிக் கொண்டிருக்க தன்னை சமாளித்துக் கொண்ட ரேகா “தேவையில்லாம பேச வேண்டாம். இப்படி கோப பட என்ன காரணம்னு தான் கேட்டேன்”, என்றாள்.
“நான் இப்ப என்ன பேசினாலும் அது உன்னைத் தான் காயப் படுத்தும். என்கிட்ட பேச்சு வாங்காம போய் படு”, என்று நிதானமாக சொன்னான் விக்ரம்.
“இது பொறுப்பான பதில் இல்லை. எனக்கு காரணம் தெரியணும்”
“இது என்ன இமாலய ரகசியமா? உன்னை எனக்கு பிடிக்கலை. தட்ஸ் ஆல்”, என்று அவன் சொன்னதும் “பொய், உங்க கண்ணுல என் மேல உள்ள காதலை நான் பாத்துருக்கேன். அது மட்டுமில்லாம எல்லாருமே நீங்க என்னமோ என்னை தெய்வீக காதல் எல்லாம் பண்ணி கல்யாணம் பண்ணிருக்குறதா சொல்றாங்க. எது உண்மை? எனக்கு உண்மை தெரியணும்”, என்றாள்.
“அதை தெரிஞ்சு நீ என்ன செய்யப் போற? காலைல நான் சொல்லும் போதே கேட்டுருந்தா சொல்லிறுப்பேனோ என்னவோ?”
“அது தான் உங்க கோபமா? நான் உங்க பேச்சைக் கேட்டுருந்துருக்கணும். தப்பு பண்ணிட்டேன். இப்ப தான் எல்லாம் சரியாகிட்டே? இப்ப சொல்லுங்க. நான் கேக்குறேன். நமக்கு கல்யாணம் ஆகிருச்சு. நாம கடைசி வரை இனி ஒண்ணா தான் இருக்க போறோம். முதல் நாளே வெறுப்பு வேண்டாமே? என்னை அடிச்சா உங்க கோபம் குறையும்னா என்னை அடிக்க கூட செய்ங்க. பேசி எல்லாமே சரி பண்ணிறலாம்”
“எதுவும் சரியாகாது ரேகா. சரி நீ இவ்வளவு சொல்றதுனால உன்கிட்ட ஒரு கேள்வி கேக்குறேன். நீ நான் கட்டிக்கப் போற பொண்ணு. அதனால தான் உன்னை கூப்பிட வந்தேன். உன் மேல ஆசை வச்சு நான் உன்கிட்ட மயங்கினேன். அதை எல்லாம் ஒத்துக்குறேன். ஆனா நீ எதுக்கு என்கிட்ட மயங்கின?”, என்று அவன் கேட்டதும் அவள் பேவென்று அவனைப் பார்த்தாள்.
“ஏன் கேக்குறேன்னா நான் உன்னை ஜீப்ல ஏறச் சொன்னப்பவே நீ என்னை அறிமுகம் இல்லாத பார்வையை தான் பாத்த. அப்புறம் உங்க மாமா கிட்ட பேசிட்டு தான் நீ ஜீப்ல ஏறின. என்னைப் பாத்த கால் மணி நேரத்துல உன் கண்ணுல நான் மயக்கத்தை பாத்தேன் ரேகா. அது ஏன்?”
“அது.. அது…. வந்து…. எனக்கு உங்களை பிடிச்சிருந்தது. அதான்”
“ஓஹோ, யாருன்னே தெரியாத ஒருத்தனை கல்யாணம் பண்ணணும்னு பஸ் ஏறி வருவ. அப்ப ஜீப்ல உன்னைக் கூப்பிட வந்த என்னை உனக்கு புடிச்சிரும். சரி நம்மளை தெரியாமலே நம்ம மேல இவளுக்கு காதல் வந்துருச்சுன்னு நினைச்சு நான் சந்தோஷப் படுறப்பவே ஏற்கனவே பாத்த மாப்பிள்ளையை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லி என் வாயை அடைச்ச. உனக்கு பாத்த மாப்பிள்ளை நான் தான்னு தெரியாம என்னை விரட்டிட்டு என்னையே கல்யாணம் பண்ணிக்கிட்ட. நீ எவ்வளவு பெரிய கை காரியா இருந்துருக்கணும். ஏன் உன் மாமா ஏற்கனவே சொல்லிருந்தாரா உனக்கு பாத்திருக்க மாப்பிளை பெரிய கோடீஸ்வரன்னு?”, என்று நக்கலாக கேட்டான் விக்ரம்.
இந்த கேள்வியை அவன் கேட்டு விடக் கூடாது என்று தான் காலையில் அவனை பேச விடாமல் அவன் வாயை அடைத்தாள். ஆனால் இப்போது கேட்டு விட்டானே. பதில் சொல்ல தெரியாமல் ஒரு நொடி தடுமாறியவள் “எனக்கு கல்யாணம்னு தெரிஞ்சு தான் நான் கிளம்பி வந்தேன். நீங்க தான் மாப்பிள்ளைன்னு எனக்கு தெரியாமலே எனக்கு உங்களைப் பிடிச்சது. உங்களை பிடிச்சிருந்ததுனால தான் உங்க கிட்ட மயங்கினேன் போதுமா? நீங்க என்னை விட்டுட்டு போன அப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா? நான்….”, என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “என்ன சொல்லப் போற, நான் கல்யாணத்தை நிறுத்த தான் நினைச்சேன். ஆனா நீங்க தான் மாப்பிள்ளைன்னு தெரிஞ்சதும் தான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என் காதலும் நியாயமானது தான்னு சொல்லப் போறியா?”, என்று நக்கலாக கேட்டான் விக்ரம்.
அவன் நக்கலே தான் இதைச் சொன்னால் அவன் நம்ப மாட்டான் என்று அவளுக்கு காட்டிக் கொடுத்தது. ஆனாலும் மனதை தளர விடாமல் “உண்மைலேயே நீங்க சொன்னது தான் விக்ரம் நடந்துச்சு. நான் கல்யாணத்தை நிறுத்த தான் நினைச்சேன்”, என்று அவன் தன்னை நம்ப வேண்டுமே என்று தவிப்புடன் சொன்னாள்.
“ஹா ஹா நினைச்சேன் டி, நீ இப்படி தான் சொல்வேன்னு. நீ சொல்ற கதை எல்லாம் நம்புறதுக்கு நான் பழைய விக்ரம் இல்லை ஓகே? இப்படியே சொல்லிட்டு இரு. அப்ப தான் உன் மேல உள்ள வெறுப்பு இன்னும் எனக்கு அதிகமாகும்”
“விக்ரம் பிளீஸ்”
“வாயை மூடு. உன்கிட்ட உண்மையே கிடையாது. உடம்பு முழுக்க சுயநலம். உனக்கு என் மேல வந்தது காதலும் இல்லை காதல் மயக்கமும் கிடையாது. ஏதோ ஒரு ஈர்ப்பு என் மேல வந்ததுன்னுவேனா ஒத்துக்குறேன். ஆனா அதுக்கப்புறம் ஜீப் டிரைவரான என்னை கல்யாணம் பண்ணுறதை விட கோடீஸ்வரனைக் கல்யாணம் பண்ண பிளான் பண்ண பாத்தியா அது தான் உன் மேல எனக்கு வெறுப்பை உண்டாக்குச்சு. நான் மாப்பிள்ளையா இல்லாம போயிருந்தா இந்நேரம் நீ வேற ஒருத்தன் கூட இருந்துருப்ப”, என்று அவன் சொன்னதும் அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
தான் என்ன சொன்னாலும் அவன் புரிந்து கொள்ள மாட்டான் என்று தெளிவாக புரிந்தது ரேகாவுக்கு. அதனால் அமைதியாக இருந்தாள்.
“என்ன டி அமைதியாகிட்ட? சொல்லு. நான் மாப்பிள்ளையா இல்லாம போயிருந்தா இந்நேரம் நீ வேற ஒருத்தன் கூட வேற ஒருத்தனோட பொண்டாட்டியா தானே இருந்திருப்ப. அவனும் உன்னை தொட்டிருந்தா இந்நேரம் அவன் கூட முழுசா கலந்துருப்ப. அப்படின்னா அன்னைக்கு என் நெஞ்சுல சாஞ்சு என் முத்தத்தை வாங்கினதுக்கு அர்த்தம் என்ன?”, என்று கேட்டு அவள் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சினான் விக்ரம்.
வேடனிடம் அம்பு பட்ட பறவை போல அவள் மனது துடித்தது. கண்களை இறுக மூடிக் கொண்டாள். கண்ணீர் மட்டும் வடிந்து கொண்டே இருந்தது. அவளுடைய கண்ணீர் அவனையும் பாதித்தது.
“இப்படி பேசுவேன்னு தெரிஞ்சு தான் அமைதியா இருந்தேன். நீ தான் பேசு பேசுன்னு சொல்லி என்னை பேச வச்சிட்ட. இனிமேலாவது என்னை விட்டு ஒதுங்கியே இரு”, என்றான் விக்ரம்.
“சரி நான் தப்பான பொண்ணுன்னு கல்யாணத்துக்கு முன்னாடியே உங்களுக்கு தெரியும் தானே? நீங்க எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணினீங்க? நீங்களே இந்த கல்யாணத்தை நிறுத்திருக்க வேண்டியது தானே? அப்படி கல்யாணம் நின்னுருந்தா இந்நேரம் நீங்களும் கஷ்டப் பட வேண்டாம். எனக்கும் இந்த வேதனை இருந்துருக்காது”, என்றாள் ரேகா.
“என்னால எப்படி கல்யாணத்தை நிறுத்த முடியும்? நான் தான் உன் மேல பைத்தியமா இருந்தேனே?”, என்று அவன் சொன்னதும் “விக்ரம்”, என்று அதிர்வாக அழைத்தாள் ரேகா.