அத்தியாயம் 7_3 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:1,840
“ஆமா டி, உன் மேல பைத்தியமா இருந்தேன். நீ தான் உலகம்னு இருந்தேன். இதே ரூம்ல எத்தனை நாள் உன்னோட நினைவுகளோட வாழ்ந்துருக்கேன்னு தெரியுமா? நீ கெட்டவன்னு தெரிஞ்ச பின்னாடியும் எனக்கு மனைவியா நீ தான் வேணும்னு என் மனசு அடம் பிடிச்சது. என்னை என்ன செய்ய சொல்ற? இப்ப கூட உன்னை நான் தான் கஷ்டப் படுத்துறேன். ஆனா உன் கண்ணுல வர கண்ணீரைப் பாத்தா எனக்கு கஷ்டமா இருக்கு. உன் மேல அளவு கடந்த வெறுப்பு இருந்தாலும் உன் மேல நான் வச்ச காதல் அப்படியே இருக்கே. உன்னைப் போய் இந்த அளவுக்கு காதலிச்சிட்டேன்னு தான் எனக்கு வெறுப்பா இருக்கு டி”
…..
“ஒண்ணு புரிஞ்சிக்கோ. நம்ம ரெண்டு பேரும் கணவன் மனைவி அப்படிங்குற உறவு வேணும்னா பொய்யா இருக்கலாம். ஆனா நான் உன் மேல வச்ச காதல் என்னைக்கும் பொய்யா போகாது. ஆனா அதே காதலோட உன்னை மன்னிச்சு ஏத்துக்குவேன்னு எல்லாம் நினைக்காத. தகுதியே இல்லாத உன்னைக் காதலிச்சதுக்கு எனக்கும் இந்த தண்டனை தேவை தான்”, என்று சொல்லி விட்டு தரையில் படுத்து விட்டான் விக்ரம். அவன் அப்படிச் சொன்னதும் இப்படி ஒரு காதல் கிடைத்தும் அதை அனுபவிக்க கொடுத்து வைக்க வில்லையே என்று நினைத்தாள் ரேகா.
அப்படியே தளர்ந்து போய் கட்டிலில் அமர்ந்த ரேகாவுக்கு யாரோ இதயத்தை கீறி ஒரு முள்ளால் குத்திக் கொண்டே இருப்பது போல வலித்தது. தன்னுடைய நிலையை எண்ணி அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
அவன் கேட்கும் கேள்வியில் நியாயம் இருக்கிறது தான். அவள் இல்லை என்று சொல்ல வில்லை. ஆனால் அதற்காக அவள் சொல்வதை நம்பவில்லை என்றால் அவள் என்ன செய்வதாம்? நெஞ்சம் முழுவதும் ஒரு வித வலி பரவியது.
“நாய்க்கு முழுத் தேங்காய் ஒட்டுமானு சொல்லுவாங்க. அதே மாதிரி எனக்கு எப்பவும் நிம்மதியான வாழ்க்கையே கிடைக்காதா?”, என்று எண்ணிக் கொண்டாள். சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். காலையில் சீக்கிரம் எழுந்ததா, இல்லை மனதுக்கு பிடித்தவள் அருகில் இருக்கிறாள் என்ற நிம்மதியா என்று தெரியாமல் சிறிது நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான் விக்ரம்.
அவனையே சிறிது நேரம் ஏக்கத்தோடு பார்த்தவள் பின் மற்றொரு தலையைனையை எடுத்து கட்டிலின் மறுபக்கம் தரையில் போட்டு படுத்துக் கொண்டாள். அவன் கட்டிலில் படுக்காமல் தான் மட்டும் கட்டிலில் படுப்பதா என்ற எண்ணம்.
படுத்தாலும் அவளுக்கு தூக்கம் தான் வர வில்லை. மதியம் நன்கு உறங்கியதாலா என்று தெரியவில்லை. வெகு நேரம் தன்னுடைய வாழ்க்கையை எண்ணி, பெற்றோர்களை எண்ணி, எதிர்காலத்தை எண்ணி அழுது கொண்டே இருந்தாள். பின் இது தான் எனக்கான வாழ்க்கை போல என்று எண்ணிக் கொண்டு தூங்கி விட்டாள்.
அடுத்த நாள் காலை ரேகா எழுந்த போது அவன் அறையில் இல்லை. அவன் போட்டிருந்த படுக்கையும் மடித்து வைக்கப் படாமல் அப்படியே கிடந்தது.
அதையும் மடித்து வைத்து விட்டு குளிக்கச் சென்றாள். அவள் குளித்து உடை மாற்றி முடித்த போது உள்ளே வந்தான் விக்ரம்.
அவளுக்கு அவனிடம் பேச ஆசையாக இருந்தது. அவனுடைய குரலையாவது கேட்க வேண்டும் என்றும் அவனுடைய கோபமான பார்வையாவது அவளைத் தீண்ட வேண்டும் என்றும் விபரீத ஆசை வந்தது. அதற்கு என்ன செய்யலாம் என்று எண்ணி “அடுத்தவங்களுக்காக தானே நாம புருஷன் பொண்டாட்டி. அப்ப இந்த ரூம்குள்ள உங்களுக்கு நான் யாரோ தானே? அப்படின்னா உங்களுக்காக நான் எந்த வேலையையும் செய்ய மாட்டேன்”, என்று வம்பிழுத்தாள் ரேகா.
அவள் பேச்சுப் புரியாமல் “உன்னை எனக்காக வேலை செய்ன்னு நான் சொல்லவே இல்லையே”, என்று கேட்டு புருவம் உயர்த்தினான் விக்ரம்.
அவனது அந்த செய்கை அவளுக்கு ரசிக்கும் படியாக இருந்தது. தூக்கி நின்ற அவன் புருவத்தை வருடி விட ஆவல் எழுந்தது ரேகாவுக்கு. “ஐயோ இப்படி எல்லாம் கண்ணை அசைச்சு என்னைக் கொல்லுறானே?”, என்று எண்ணியவள் “படுத்த போர்வையை கூட மடிக்காமல் போனா என்ன அர்த்தம்? நான் தான் மடிச்சு வச்சேன். எனக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொன்னப்புறம் நான் தான் செய்யணுமா?”, என்று கேட்டாள்.
“நான் உன்னை மடிக்க சொல்லலையே?”, என்றான் விக்ரம்.
“அப்ப நீங்க மடிச்சிருக்கணும். அப்படியே வா தரையில போடுறது? அதான் மடிச்சேன். இனி செய்ய மாட்டேன். நீங்களும் ரூமை நீட்டா வச்சிக்கோங்க. நான் வைக்கணும்னு எல்லாம் எதிர் பாக்க கூடாது”, என்று அவள் யாரோ போல பேசியதும் சுள்ளென்று கோபம் எகிற “நடத்தை சரியில்லாதவளுக்கு ரூம் நீட்டா இல்லாதது எதுக்கு குத்துதுன்னு தெரியலை”, என்று சொன்னான் விக்ரம்.
“விக்ரம்….”, என்று அதிர்ந்து போய் அழைத்தாள் ரேகா.
“வாயை மூடு. இனி ரூமுக்குள்ள மட்டும் இல்லை, ரூமுக்கு வெளிய கூட எனக்காக நீ எதுவும் செய்ய தேவையில்லை. சே”, என்றவன் விருட்டென்று வெளியே சென்று விட்டான்.
போகும் அவனையே சீற்றத்துடன் பார்த்தாள் ரேகா. என்ன வார்த்தை சொல்லி விட்டான் என்று எண்ணி அவள் உடல் கூசியது. “தாலி கட்டிட்டா நான் இவன் அடிமையா? இவன் கூட எப்படி வாழ் நாள் முழுக்க வாழுறது?”, என்ற மிகப் பெரிய கேள்வி அவளுக்குள் எழுந்தது.
ஒரு கூடை தணலை தூக்கி அவள் தலையில் கொட்டியது போல அவளுக்கு உடல் எல்லாம் எரிந்தது. “இப்படி கீழ்த்தனமா பேசுறவன் எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணனும்? ஒரே ரூம்ல இருந்துக்கிட்டு இப்படியே பேசிட்டு இருந்தா வாழ்க்கை என்னவாகும்?”, என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு என்ன தான் முடிவு என்று யோசித்தவளுக்கு கண்ணீர் அருவியாக வடிந்தது. கீழே சென்ற விக்ரமுக்கு அவளது அதிர்ந்த முகமே மனதில் நின்றது. கோபத்தில் அதிகப் படியாக பேசிவிட்டோம் என்று நொந்து போனான்.
“விக்ரம் கண்ணா, குளிச்சிட்டியா? ரேகா எங்க? அவளையும் கூட்டிட்டு வா. சாப்பிடலாம். அப்புறம் நீங்க என் அண்ணன் வீட்டுக்கு இன்னைக்கு விருந்துக்கு போகணும்”, என்று சொன்னாள் சாரதா.
அவன் குரலில் நடப்புக்கு வந்த விக்ரம் “சரி மா, மாமா வீட்டுக்கு போறோம். இப்ப அவளைக் கூட்டிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு அறைக்குள் வந்தவன் கண்டது குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்த ரேகாவைத் தான். அவள் அழுதது அவனுக்கு வருத்தமாக இருந்தது. அவளிடம் அப்படி பேசிய தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.
அவன் வரவைக் கண்ட ரேகா அவன் முகத்தைக் கூட பார்க்காமல் கண்ணீரைத் துடைத்து விட்டு தலையில் இருந்த துண்டை அவிழ்த்து தலையைக் காய வைத்தாள்.
சிறு குழந்தை தன்னுடைய பெற்றோர் திட்டி விட்டால் எப்படி முகத்தைத் தூக்கிக் கொண்டு இருக்குமோ அப்படி இருந்தது அவள் முகம். அதைக் கண்டு புன்னகை வந்தது விக்ரமுக்கு.
அவள் தலையை உலர்த்திக் கொண்டிருந்ததால் அவளது இடையில் இருந்த சேலை விலகி அவளது இடை பளீரென்று அவன் கண்களுக்கு தெரிந்தது. அப்போது நேற்றைய ஹோட்டல் நினைவு அவனுக்கு வந்தது.
தான் தொட்டவுடன் அவள் உருகியதும் தன் மேல் சாய்ந்ததும் அவள் வாசமும், தன்னுடைய கைக்குள் அவள் மயங்கி நின்றதும், அவளுடைய மென்மையான உதட்டின் பரிசமும் என அனைத்தும் அவன் மனதில் எழுந்ததும், இப்போது அவள் அழுத்ததும் சேர்ந்து அவன் மனதில் மெல்லிய இளக்கத்தை உருவாக்கியது. அவளையே ரசித்துப் பார்த்த படி நின்றான்.
அடுத்த நொடி அவள் துரோகமும் நினைவில் வந்தது. “நேத்து ஒரு வார்த்தை உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. என்னை எங்கயாவது கூட்டிட்டு போங்கன்னு சொல்லிருக்கலாம்ல டி? எதுக்கு டி என்னை பேச விடாம செஞ்ச”, என்று எண்ணிக் கொண்டான்.
குளித்து புது மலராக இருந்தவளைக் கண்டு மோகதீ அவனுக்குள் உருவானாலும் அவள் செய்த காரியத்தால் வெறுப்பும் கூடவே உருவானது தான் அவனால் தாங்க முடியவில்லை.
“நான் தான் உன்னைக் கட்டிக்க போற மாப்பிள்ளைன்னு ஏன் அவ கிட்ட சொல்லாம போனேன்?”, என்று அவன் மேலேயே அவனுக்கு கோபம் வந்தது. அதைச் சொல்லியிருந்ததால் இப்போது இருவரும் இப்படி பிரிந்திருக்க வேண்டியது இல்லையே? என்று அவன் மீதும் தவறு இருப்பது போல எண்ணினான் விக்ரம்.
தலையை உலர்த்திய ரேகா கண்ணாடி முன்பு அமர்ந்து தலையை பின்னல் போட்டாள். அவளுடைய செய்கைகளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன். தன்னையே இமைக்க மறந்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த கணவனைக் கண்ட ரேகாவுக்கு அவன் பேசியது எல்லாம் அந்த நொடி மறந்து போனது. அவன் காதல் பார்வையில் அவள் வருத்தமெல்லாம் கரைந்து காணாமல் போனது. தனக்குள் சிரித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.
அவள் அவனை கண்டு கொள்ளாமல் இருக்கவும் “க்கும்”, என்று தொண்டையை செருமினான் விக்ரம். கூடவே அவனுக்கு சாரதா சொன்ன விஷயத்தை அவளிடம் சொல்ல வேண்டியது இருக்கிறதே.
அவன் சத்தம் கொடுத்ததும் “இப்ப என்ன பேசப் போறீங்க? பேசுங்க. நான் கேக்க கூடாத வார்த்தை எல்லாம் கேட்டுட்டேன். இனி கேக்குறதுக்கு பெருசா ஒண்ணும் இல்லை. எதுனாலும் சீக்கிரம் சொல்லிட்டு இடத்தைக் காலி பண்ணுங்க”, என்றாள் ரேகா.,
அவள் அப்படிச் சொன்னதும் “என்ன டி திமிரா?”, என்று கேட்டான் விக்ரம்.
“ஆமா, நீங்க போட்ட சோத்தை இத்தனை வருஷம் சாப்பிட்டேன்ல? அந்த திமிர் தான். போதுமா?”
“கொழுப்பு டி உனக்கு”
“முதல்ல திமிர்னு சொன்னீங்க? இப்ப கொழுப்புன்னு சொல்றீங்க? என் உடம்புல எங்க எங்க கொழுப்பு இருக்குன்னு சொன்னீங்கன்னா நான் குறைச்சிருவேன்”, என்று அவள் சொன்னதும் அவன் அவளை ஒரு மார்கமாக பார்க்க ஆரம்பித்தான்.
எந்த இடத்திலும் தேவைக்கு அதிகமான சதை இல்லாமல் இருந்த அந்த கொடியிடையாளைப் பார்த்தவன் மனதில் மயக்கம் சூழ்ந்தது.
ஹோட்டலில் வைத்து அவளை முத்தமிட்ட தருணம் மீண்டும் நினைவில் வந்தது. அவன் பார்வை மாற்றத்தை கண்டு கொண்ட ரேகா குதுகளித்த படி “என்ன சார் கொழுப்பு இருக்கா இல்லையா?”, ஒயிலாக இடையை வளைத்து நின்ற படி கண்களைச் சுருக்கி கேட்டாள்.
விழியை சுழற்றி கேள்வி கேட்டவளின் மீது வெறுப்பு வராமல் காதல் வந்து தொலைத்ததில் அவன் தான் தடுமாறிப் போனான். அவள் கண்களிலும் அவனுக்கு அழைப்பு இருந்தது போல தான் தோன்றி வைத்தது. தான் இப்போது அவளை நெருங்கினால் அவள் விலகப் போவது இல்லை என்று அவனுக்கு தெரியும். “கிட்டப் போயிரலாமா?”, என்று கூட எண்ணினான்.
இப்போது அவள் அவனை ஒரு மார்கமாக பார்க்க தெளிந்த விக்ரம் “எதுக்கு டி என்னை இப்படி முறைக்கிற?”, என்று கேட்டான்.
“ஐயா சாமி, நான் சும்மா தான் இருக்கேன். எதுக்கு என்கிட்ட வம்பு வளக்குறீங்க? இதைக் கேக்க நியாயமே இல்லையா? நான் போய் அத்தைக் கிட்ட கேக்குறேன். சும்மா இருந்தவளை கூப்பிட்டு சண்டை போடுறீங்க? இது நியாயமே இல்லை சொல்லிட்டேன்”
“அத்தையா?”, என்று கேட்டு புருவம் உயர்த்தினான்.
“உங்க அம்மா தான்”
“ஓஹோ இப்ப அவங்களை எதுக்கு இழுக்குற?”
“நீங்க தேவையில்லாம சண்டை போடுறது எனக்கு எரிச்சலா இருக்கு. அவங்க கிட்ட நியாயம் கேக்க போறேன்”
“இது நம்ம ரெண்டு பேருக்கும் இடைல உள்ளது. அடுத்தவங்களை உள்ள கொண்டு வரக் கூடாது. அம்மா ரொம்ப சென்ஸிட்டிவ். நம்ம விஷயம் தெரிஞ்சா ரொம்ப வருத்தப் படுவாங்க”
“அப்படின்னா நீங்க எதுக்கு என்கிட்ட வம்பு இழுக்குறீங்க?”, என்று அவள் கேட்டதும் “அம்மா உன்னை சாப்பிட கீழ வரச் சொன்னாங்க. நாம இன்னைக்கு எங்க மாமா வீட்டுக்கு விருந்துக்கு போகணும். அதைச் சொல்ல தான் வந்தேன். வேற எதுவும் இல்லை. நீ பெருசா உன் கூட பேச தான் நான் உன்னை வம்புக்கு இழுக்குறேன்னு எல்லாம் என்னைத் தப்பா நினைக்க வேண்டாம். எல்லாம் பெரியவங்களுக்காக தான். வா, கீழ போகலாம். அப்புறம் காயத்ரி அண்ணி ரொம்ப ஷார்ப். முகத்தை சாதாரணமா வச்சிக்கோ. எதையாவது காட்டிக் கொடுத்து நம்ம பிரச்சனையை அடுத்தவங்க பஞ்சாயத்து பண்ணுற மாதிரி வச்சிக்காத. நாம லவ் பண்ணி கல்யாணம் பண்ணிருக்கிறதா தான் எல்லாரும் நினைக்கிறாங்க. அதனால எங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு போகும் போதும் நாம லவ் பண்ணி கல்யாணம் பண்ணினது போலவே நடந்துக்கணும். புரியும்னு நினைக்கிறேன், வா, என்று சொல்லி முன்னே நடந்தான்.
“என் காதல் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லாம போனாலும் உங்க காதல் நம்மளை கட்டாயம் வாழ வைக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு விக்ரம். நான் வெயிட் பண்ணுவேன்”, என்று எண்ணிய ரேகா புன்னகையுடன் அவன் பின்னே சென்றாள்.