அத்தியாயம் 8_1 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:1,667
அத்தியாயம் 8
காலங்கள் கடந்தே போனாலும்
உன் மீதான எந்தன் கனவுகள்
என்றுமே சிதைந்து விடாது!!!
கீழே வந்த மகனையும் மருமகளையும் கண்ட சாரதாவுக்கு கண்கள் நிறைந்து போனது. ரேகாவைக் கண்டு புன்னகைத்த சாரதா “வா மா”, என்று அன்பாக அழைத்தாள்.
அவளுடைய அன்பைக் கண்டு வியந்து போனாள் ரேகா. புதிதாக வீட்டுக்கு வந்த ஒரு பெண்ணிடம் ஒருவரால் இவ்வளவு அன்பை காட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்தது ரேகாவுக்கு.
ரேகா மீது சாரதா அன்பு வைத்திருக்க காரணம் விக்ரம் மட்டும் தான். மகனின் மீதான அதிகப் படியான அன்பு தான் அவனது மனைவியான அவள் மீது அதே அன்பாக திரும்புகிறது என்று அவளுக்கு புரிந்தது.
“சாரி அத்தை, லேட்டா எழுந்துட்டேன்”, என்று மன்னிப்பு வேண்டும் குரலில் சொன்னாள் ரேகா.
“அதெல்லாம் ஒண்ணும் லேட் இல்லை. இங்க சீக்கிரம் எழுந்து என்ன பண்ண போற சொல்லு. எல்லாத்துக்கும் ஆள் இருக்கு. இன்னும் மஞ்சு, காயத்ரி யாருமே எழுந்துக்கலை. தினமும் காலைல அஞ்சு மணிக்கு எந்திச்சு வாக்கிங் போற உன் மாமாவே இன்னும் தூங்கிட்டு தான் இருக்கார். எனக்கு தான் சீக்கிரம் எழுந்து பழகிருச்சு. சரி சரி உக்காரு. நான் டிபன் எடுத்து வைக்கிறேன். மணி எட்டரை ஆகிருச்சு. இதுக்கு மேல காபி எல்லாம் வேண்டாம். விக்ரம் கண்ணா என்ன டா எங்களையே பாத்துட்டு இருக்க? நீயும் உக்காரு”, என்றாள் சாரதா.
ரேகாவை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே அங்கிருந்த சேரில் அமர்ந்தான் விக்ரம். அவன் பார்வையைக் குழப்பமாக பார்த்த ரேகா அவன் அருகே இருந்த சேரில் அமர்ந்தாள்.
சாரதா உள்ளே சென்றதும் “பாயாசம் கொஞ்சம் ஓவரா இருக்கு?”, என்று நக்கலாக சொன்னான் விக்ரம்.
“என்ன பாயாசம்?”, என்று குழப்பமாக கேட்டாள் ரேகா.
“இல்லை மாமியார் மருமக பாசத்தை தான் சொன்னேன்”, என்று அவன் சொன்னதும் அவனைப் பார்த்து முறைத்தவள் “பாசமோ பாயாசமோ எது ஓவரா இருந்தாலும் அதுல உங்களுக்கு எதுக்கு பொறாமை?”, என்று கேட்டாள்.
“எனக்கு எதுக்கு பொறாமை?”
“ஆமா பொறாமை தான். நீங்க உங்க அம்மாவோட கண்ணுக்குட்டிள்ள?”
“கண்ணுக்குட்டியா?”
“ஆமா நீங்க அவங்க கைக்குள்ள வளந்த செல்ல பிள்ளையாம். உங்களுக்கு ஒண்ணுன்னா துடிச்சு போயிருவாங்களாம். ஆதி அத்தான், மஞ்சு அண்ணியை விட நீங்க ஸ்பெஷலாம். அத்தை ஏற்கனவே சொல்லிருக்காங்களே? அதனால அவங்க என் கிட்ட பாசமா பேசின உடனே உங்களால பொறுத்துக்க முடியலை போல? அதான் கிண்டல் பண்ணுறீங்க? அது பொறாமை தானே?”, என்று அவள் சிரிப்புடன் சொல்ல அவன் முகமோ இறுக்கமாக மாறியது.
அவன் முக மாற்றத்தைப் பார்த்த ரேகா “இவனுக்கு என்ன ஆச்சு? இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்தான்?”, என்று எண்ணி “என்ன ஆச்சு?”, என்று அவனிடமே கேட்டாள்.
“உன்னை கல்யாணம் பண்ணணும்னு வீட்ல சொல்லும் போதே எங்க அம்மா கிட்ட என் மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கீங்களோ அதே அன்பை நீங்க ரேகாவுக்கும் கொடுக்கணும். அம்மா இல்லாத அவளுக்கு நீங்க இன்னொரு அம்மாவா இருக்கணும்னு சொன்னதே நான் தான். இதுல நான் உன் மேல பொறாமை படப் போறேனா? இது தான் காலக் கொடுமை போல?”, என்று அவளைப் பார்த்து நக்கலாகச் சொன்னதும் அவளுக்கு என்னவோ போல ஆகி விட்டது. தனக்காக பேசிய கணவன் கிடைத்ததில் உள்ளுக்குள் சந்தோசமாக இருந்தாலும் அதை முழுதாக அனுபவிக்க முடியாத இந்த நிலையை என்ன சொல்லவாம்?
“சாரி நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன். நீங்க சீரியஸா எடுத்துப்பிங்கன்னு நான் நினைக்கலை. உங்க மனசை கஷ்டப் படுத்திருந்தா சாரி”, என்று தாழ்ந்த குரலில் சொன்னாள்.
“அடுத்தவங்க வாழ்க்கையோட விளையாடுறது தானே உனக்கு வேலை? அம்மா வராங்க. இனி எதையும் பேச வேண்டாம். அவங்க கிட்ட ஒழுங்கா நடந்துக்கோ. உன்னோட துரோகம் எல்லாம் அவங்களுக்கு தெரியாது”, என்று ஊசி போல் குத்தும் வார்த்தைகளைச் சொல்லி விட்டு முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டான் விக்ரம். அவன் பேசியது அவள் மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் சாரதாவுக்காக அந்த வருத்தத்தை முகத்தில் காட்டாமல் மறைத்துக் கொண்டாள்.
விக்ரமோ “ஐயோ எதுக்கு தான் அவளை இப்படி பேசி பேசி காயப் படுத்துறேனோ தெரியலையே? ரெண்டு பேருமே விளையாட்டுக்குத் தானே பேசிட்டு இருந்தோம்? அப்புறம் ஏன் கோப பட்டேன்?”, என்று எண்ணினான். அவன் பேசிய பேச்சில் அவனுக்கும் கஷ்டமாக தான் இருந்தது.
அவர்கள் மன நிலை உணராத சாரதா இருவருக்கும் அன்பாக உணவை பரிமாறினாள். அதிலும் ரேகா அருகில் அமர்ந்த சாரதா “இது உன்னோட வீடு. எந்த தயக்கமும் இல்லாம நல்லா சாப்பிடணும் சரியா?”, என்று சொல்லி ரேகா தலையை ஒரு முறை வருடி விட்டாள். அந்த செய்கையில் ரேகா உருகிப் போய் சாரதாவையே இமைக்காமல் பார்த்தாள்.
“என்ன மா, காரமா இருக்கா?”, என்று அன்பாக கேட்டாள் சாரதா.
“அத்தை…”, என்று அழைத்த ரேகாவின் கண்கள் கலங்கிப் போனது.
அவள் கண்ணீரைக் கண்டு “என்ன டாம்மா?”, என்று சாரதா கலவரமாக கேட்டதும் “ஒண்ணும் இல்லை.. எனக்கு அம்மா நினைவு வந்துருச்சு. அதான்”, என்றாள் ரேகா.
“அவங்க எங்கயும் போகலை. உன் கூடவே தான் இருப்பாங்க. இப்போதைக்கு நான் தான் உனக்கு அம்மா போதுமா? எனக்கு நீ வேற மஞ்சு வேற இல்லை. இனி எதுக்கும் நீ கலங்க கூடாது. நாங்க எல்லாரும் உனக்காக இருக்கோம். அதை விட உன் புருஷன் உனக்காக இருக்கான். அவன் உன்னை நல்லாப் பாத்துக்குவான்”
“சரிங்க அத்தை”, என்று சொல்லி விட்டு சாப்பிட ஆரம்பித்த ரேகா “உங்க மகன் என்னை நல்லா பாத்துக்குவாரா? என்னை வெறுத்து ஒதுக்குறவர் எப்படி என்னை நல்லா பாத்துக்குவார்? எல்லாம் நான் வாங்கி வந்த வரம் அத்தை”, என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
அப்போது “விக்ரம்”, என்று அழைத்தாள் சாரதா.
“என்ன மா?”
“இன்னைக்கு நைட் உன் அக்காவும் மாமாவும் டெல்லி கிளம்புறாங்க டா. அதனால இப்ப எங்க அண்ணன் வீட்டுக்கு விருந்துக்கு போய்ட்டு சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வந்துருங்க என்ன?”
“சரி மா வந்துறோம்”, என்றான் அவன்.
“அண்ணி எதுக்கு இன்னைக்கே போறாங்க? கொஞ்ச நாள் அவங்களை இங்க இருக்க சொல்லலாம்ல அத்தை?”, என்று கேட்டாள் ரேகா.
அவளை ஆழ்ந்த பார்வை பார்த்து விட்டு சாப்பிட ஆரம்பித்தான் விக்ரம்.
“மாப்பிள்ளைக்கும் வேலை இருக்கும்ல மா? ஏற்கனவே ஒரு வாரம் லீவ் எடுத்துட்டு தான் வந்தாங்க. மஞ்சுவோட மாமனார் மாமியார் நேத்து நைட்டே கிளம்பிட்டாங்க. இதுக்கு அப்புறம் அவங்களை இங்க இருக்கச் சொன்னா நல்லா இருக்காது மா”
“ஓ, சரி. இனி எப்ப வருவாங்க?”
“இனி மருமகனுக்கு எப்ப லீவ் கிடைக்குதோ அப்ப தான் வருவாங்க. எல்லாரும் இருந்ததும் வீடே நிறைஞ்ச மாதிரி இருந்தது. இனி எல்லாரும் கிளம்பினதும் வீடே வெறிச்சுன்னு இருக்கும். விக்ரம், இவங்க அப்பா, அப்புறம் ஆதி மூணு பேரும் வேலைக்கு போன அப்புறம் எனக்கு தான் நேரமே போகாது. காயத்ரியும் அவ வச்சிருக்குற பார்லர்க்கு போயிருவா. இப்ப நீ வந்தது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு. உனக்கும் வேலைக்கு போகணும்னு ஆசையா மா? நீயாவது என் கூட இருப்பியா?”, என்று கேட்டாள் சாரதா.
“கண்டிப்பா வேலைக்கு போகணும்னு எல்லாம் இல்லை அத்தை”, என்று சொன்ன ரேகாவுக்கு வேலையை விட வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இப்போதைக்கு ஆஃபிஸ்க்கு பத்து நாள் லீவ் தான் சொல்லியிருந்தாள். லீவ் முடிந்து அவள் போய் தான் ஆக வேண்டும்.
திருமணம் முடிந்து சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்தால் வேலைக்கு செல்ல வேண்டாம் தான். காதல் கணவனே அனைத்தையும் பார்த்துக் கொள்வான். ஆனால் இங்கே அவளுடைய வாழ்க்கையே கேள்வி குறியாக இருக்கும் போது இருக்கும் வேலையையும் விட்டு விட்டால் அவள் நிலைமை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்தது.
என்ன தான் விக்ரம் அவளை விட்டுவிட மாட்டான் என்றாலும் அவளது பாதுகாப்புக்கு வேலை என்ற ஒன்று வேண்டுமே. அவ்வளவு கஷ்டப் பட்டு படித்து வாங்கிய வேலையை அவசரப் பட்டு விடக் கூடாது என்று எண்ணினாள்.
இதைப் பத்தி விக்ரம் கிட்ட பேசணும் என்று அவள் எண்ணிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்க அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு கை கழுவ சென்று விட்டான் விக்ரம்.
“உனக்கு வேலைக்கு போகணும்னு ஆசை இருந்தா நீ போ மா. ஆனா சென்னைக்கு எல்லாம் வேண்டாம். இங்கயே நல்ல வேலையை விக்ரமை வாங்கிக் கொடுக்கச் சொல்றேன். இல்லைன்னா நம்ம ஆஃபிஸ்க்கே வேலைக்கு போ. ஆனா ஒரு விஷயம். கூடிய சீக்கிரமே எனக்கு பேரப் பிள்ளைகளை பெத்துக் கொடுத்துரு என்ன? குழந்தைங்க வந்தா இந்த வீடே நிறைஞ்ச மாதிரி ஆகிரும். உன்னை மாதிரி ஒரு பொண்ணு, விக்ரம் மாதிரி ஒரு பையன் சரியா?”, என்று சாரதா சிரிப்புடன் சொல்லிக் கொண்டிருக்க அதைக் கேட்ட ரேகா முகம் குங்குமமாக சிவந்தது.
சிறு வயதில் விக்ரம் எப்படி இருப்பான்? அவனை மாதிரி ஒரு குழந்தை வந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணியவளின் முகம் மலர்ந்து விட்டது.