அவ்வளவு சந்தோஷமாக இருந்தாள் கயல். அவளை தயார் செய்து விட்டு மற்றவர்கள் வெளியே சென்று அமர எப்போது தமிழ் வீட்டினார் வருவார்கள் என்று தவம் இருந்தாள்.
இரண்டு வேன்களில் வந்து தமிழ் வீட்டினர் இறங்கியதும் அந்த வீடே பரபரப்பாக இருந்தது. மூன்று தங்கைகளும் கயலுக்காக சேலை பூ சீர் வரிசைகளை கொண்டு வந்து இறக்கி இருக்க சபையே நிறைந்திருந்தது.
“ரொம்ப எளிமையா தானே இந்த கல்யாணம் நடக்குறதா இருந்துச்சு. ஆனா நடக்குறதைப் பாத்தா ரொம்ப கிராண்டா இருக்கு”, என்று வேணியே எண்ணினாள். அந்தக் அளவுக்கு நிச்சயத்துக்கு கூட்டம் குவிந்திருந்தது.
தேவியும் வைஷ்ணவியும் கயலை சபைக்கு அழைத்து வர அங்கே வந்தவள் சிறு வெட்கத்துடன் அனைவருக்கும் வணக்கம் வைத்தாள்.
அவள் கையில் நிச்சய சேலையக் கொடுத்தாள் மீனாட்சி. அதை வாங்கிக் கொண்டு அறைக்குள் வர தமிழின் மூன்று தங்கைகளும் வைஷ்ணவியும் சேர்ந்து கயலை மேலும் அழகு படுத்தினார்கள்.
அவளை அங்கு தயார் செய்து கொண்டிருக்க சமுத்திரம் மற்ற ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். கயலின் நிச்சயத்துக்கு சமுத்திரம் மெனக்கெடுவதை கண்டு வேணிக்கு எரிச்சலாக வந்தது. ஆனால் வேறு ஒன்றும் செய்ய முடியாதே என்று அமைதியாக இருந்தாள்.
கயலை தயார் செய்து சபைக்கு அழைத்து வந்து அமர வைத்தார்கள். அவள் அழகை சித்ராவே அதிசயமாக பார்த்தாள். “இவ இவ்வளவு அழகா?”, என்பது தான் அவளது எண்ணம்.
“பொண்ணு வந்து உக்காந்தாச்சு. நீ என்ன மாப்ள வெக்க பட்டுத் ஒதுங்கி நிக்குற? வா வந்து பொண்ணு பக்கத்துல உக்காரு”, என்று அழைத்தார் சிதம்பரம்.
சிறு வெட்கத்துடன் கயல் அருகே வந்து அமர்ந்தான். அவளைப் பார்க்க பார்க்க அவனுக்கு தெவிட்டவே இல்லை. அவள் அழகும் அவள் முகத்தில் இருந்த புன்னகையும் அவனை பித்து பிடிக்க வைத்துக் கொண்டிருந்தது. அவளோ வெட்கத்துடன் தலை குணிந்தே இருந்தாள்.
பெரியவர்கள் நிச்சயப் பத்திரிக்கை வாசித்தார்கள். தமிழின் அன்னை வராதது அங்கு பேசப் பட்டது. ஆனால் அதை பெரிதாக எடுக்க வில்லை. தமிழின் சார்பில் சிதம்பரம் மற்றும் மீனாட்சி தட்டைக் கொடுக்க கயல் சார்பில் சமுத்திரமும் வேணியும் தட்டைப் பெற்றுக் கொண்டார்கள்.
சமுத்திரம் மணமக்கள் கையில் மோதிரம் கொடுத்து மாற்றிக் கொள்ள சொல்ல வேணி அதிர்ந்து பார்த்தாள். அவளுக்கு இது தெரியாதே. வயிறு எரிந்தது.
கயலின் விரல் பற்றி மோதிரம் போடும் சாக்கில் தமிழ் அவள் விரலை வருட அவளுக்கு உயிர் சிலிர்த்தது. அவளும் ஆசையாக அவனுக்கு மோதிரம் அணிவிக்க நிச்சயம் நல்ல படியாக முடிந்தது.
மற்ற அனைவரும் மாடிக்கு சாப்பிடச் செல்ல அப்போது சமுத்திரத்தை தனியே பிடித்த வேணி “ஏங்க என்ன மோதிரம் எல்லாம் வாங்கிருக்கீங்க? என் கிட்ட சொல்லவே இல்லை”, என்று கேட்டாள்.
“ஏன் டி லூசா நீ? நிச்சயதார்த்தம்னா மோதிரம் மாத்துறது எங்கயும் நடக்குறது தானே? நாளைக்கு சித்ரா கல்யாணம் வந்தாலும் செய்வோம் தானே?”
“சித்ராவுக்கு செயலாம். ஆனா இவளுக்கு..”, என்று வேணி வார்த்தையை விட சமுத்திரம் முறைத்த முறைப்பில் அடுத்து எதுவும் பேசாமல் சென்று விட்டாள்.
“முன்பே இப்படி முறைத்திருக்க வேண்டுமோ?”, என்று காலம் கடந்து யோசித்தார் சமுத்திரம்.
மணமக்களையும் சாப்பிட அழைத்துச் சென்றனர். இருவரையும் மாற்றி மாற்றி ஊட்டி விடச் சொல்ல போட்டோ கிராபர் அதை பதிந்து கொண்டார்.
சாப்பிட்டு முடித்ததும் மணமக்கள் ஒன்றாக அமர்ந்திருந்தார்கள். தனிமை கிடைக்க வில்லை தான். ஆனால் அவர்கள் அருகில் யாரும் இல்லை. அதனால் “இப்ப சந்தோசமா டி?”, என்று கேட்டான் தமிழ்.
“கொஞ்சம் இல்லை, ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு”, என்று மலர்ந்து சிரித்தாள்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னை கடத்திட்டு போக போறேன் என் ஊருக்கு. காலைல தாலி கட்டினா என்னோட பொண்டாட்டி தான். நாளைக்கு இந்நேரம் நமக்கு…..”
“பிளீஸ் வேண்டாமே”?”
“என்ன டி வேண்டாம்னு சொல்லிட்ட?”
“ஐயோ அதைப் பத்தி பேச்சு தான் வேண்டாம்னு சொன்னேன்”
“அப்படின்னா உனக்கு அது ஓகே வா?”,. என்று கேட்க அவள் வெட்கத்தில் திணறிக் கொண்டிருந்தாள். அவள் வெட்கம் அவனுக்கு அவ்வளவு சந்தோசத்தைக் கொடுத்தது. “கயல் பொண்ணு அழைக்க கார் பிடிக்கணும்னு தான் நினைச்சேன். ஆனா வேன்ல வந்தா நல்லா இருக்கும்னு தான் பிடிக்கலை. அது உனக்கு வருத்ததைக் கொடுக்குமா?”, என்று கேட்டான்.
“என்னைப் பத்தி தெரிஞ்சும் நீங்க இப்படி கேக்கலாமா? உங்க எல்லார் கூடவும் பேசிட்டு வரது தான் எனக்கு சந்தோசமே”, என்று சொல்ல அவன் மனம் நிறைந்தது.
அதற்கு பின்னர் மற்றவர்களும் அங்கே அமர்ந்து அவளை கிண்டல் செய்து கொண்டிருக்க நேரம் நல்ல படியாக நகர்ந்தது. அப்போது வைஷுவை அக்கா என்றும் சேகரை அண்ணன் என்றும் கயல் சொல்லி விட்டாள்.
அதற்கு ஒரு கிண்டல் அடித்தவர்கள் வைஷுவை அக்கா என்றும் சேகரை மாமா என்றும் சொல்லச் சொன்னார்கள்.
சேகரை மாமா என்று அழைத்தாலும் மனதுக்குள் அவன் அண்ணன் தானே என்று எண்ணி சரி என்று தலையசைத்தாள். ஆனால் அவள் மீண்டும் அண்ணன் என்றே அவனை அழைத்து நாக்கை கடிக்க “உனக்கு எப்படி வருதோ அப்படியே கூப்பிடு. குழப்பிக்காத”, என்றாள் வைஷ்ணவி.
அனைவரும் உண்டு முடித்ததும் கயலின் ஒரு பேக் வேனில் ஏற்றப் பட அவளையும் அழைத்துச் சென்றார்கள். ஆனால் ஒன்றாக அமரக் கூடாது என்று மணமக்களை இரண்டு வேன்களில் பிரித்து விட்டார்கள். அதில் தமிழுக்கு சிறு வருத்தம் தான்.
ஊருக்கு வந்ததும் சிதம்பரம் வீட்டுக்கு தான் அவளை அழைத்துச் சென்றார்கள். தமிழ் வீட்டுக்குச் செல்ல அந்த வீட்டில் சரோஜா மட்டுமே இருக்கத்துடன் அமர்ந்திருந்தாள்.
அப்போதும் “உன் மருமகளைப் போய் பாரு மா”, என்றான்.
அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லாததால் மொட்டை மாடிக்குச் சென்று விட்டான். அவனுக்கு கயலிடம் பேச வேண்டும் போல இருந்தது. பெண்கள் கயலுடனே இருந்தார்கள். ஆண்கள் அனைவரும் தமிழின் இன்னொரு வீட்டுக்கு சீட்டு விளையாட சென்றார்கள். இன்னுமே அது தமிழின் வீடு தான் என்று சிதம்பரம், மீனாட்சி, வைஷ்ணவி, சேகரைக் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
தங்கைகள், வைஷ்ணவி அனைவரும் கலகலப்பாக கயலிடம் பேசிக் கொண்டிருக்க “கல்யாணப் பொண்ணு மருதாணி இல்லாம இருக்க கூடாது”, என்று சொல்லி மருதாணியை கொண்டு வந்து கொடுத்தாள் மீனாட்சி.
அதை தமிழின் தங்கைகள் அவளுக்கு வைத்து விட கயல் அவ்வளவு சந்தோஷமாக இருந்தாள். இரண்டு கைகளிலும் மருதாணி வைத்து விட்டு அவள் அமர்ந்திருக்க அப்போது அவளை அழைத்தான் தமிழ்.
அதை எடுத்து ஸ்பீக்கரில் போட்டது வைஷ்ணவி தான். கயல் தடுமாறிய படி அமர்ந்திருக்க “ஹாய் பொண்டாட்டி”, என்று ஆர்பாட்டமாக அழைத்தான்.
“சொல்லுங்க”
“என்ன டி பண்ணுற?”
“பேசிட்டு இருக்கேன்?”
“யாரும் உன்னை விட மாட்டிக்காங்களா? அந்த டிரம்மும் பேரலும் என்ன பண்ணுது?”
“அது யாரு?”
ஜெயாவும் அமுதாவும் தான்”, என்று சொல்ல அவர்கள் கொலை வெறியில் போனை வெறித்தார்கள்.,
அவனைத் தடுக்க எண்ணி “நாம தூங்கலாமா?”, என்று கேட்டாள் கயல்.
“ஆசையைப் பாரு கள்ளி. நாளைக்கு நைட் தான் டி நாம ஒண்ணா தூங்க முடியும்? இப்ப எப்படி முடியும்? அவ்வளவு ஆசையா டி? எனக்கும் தான்”, என்று அவன் ஏக்கமாக சொல்ல கயலுக்கு வெக்கமாக வந்தது. மற்றவர்கள் நமட்டு சிரிப்பு சிரித்தார்கள்.
“சரி அந்த எலும்பி என்ன பண்ணுறா?”, என்று கேட்டான்.
“அது யாரு?”
“தேவி தான்”
“பேசிட்டு இருக்காங்க”
“இவங்க கூட அந்த வாயாடியும் இருபபாளே? வாயை மூடவே மாட்டா. அவளை மாதிரி நீயும் மாறிறாத பட்டுக்குட்டி”, என்று சொல்ல “இது யாரு?”, என்று கேட்டாள் கயல்.
“வைஷுவை தான் சொல்றேன். சேகர் அண்ணன் ரொம்ப பாவம் கயல். இவளை வச்சிக்கிட்டு என்ன பண்ணனு புலம்புறார்”, என்று அவன் சொல்ல “டேய் நான் வாயாடியா?”, என்று கத்தி விட்டாள் வைஷ்ணவி.
“ஆத்தி, என்ன வைஷு குரல் கேக்குது? கயல் நான் பேசினதை வைஷு கேட்டுட்டாளா?”, என்று அதிர்ந்து போய்க் கேட்டான் தமிழ்.
“வைஷு மட்டும் இல்லை நாங்களும் கேட்டுட்டோம்”, என்று தங்கைகளின் குரல் கேட்க “ஆமா போன் ஸ்பீக்கரில் இருக்கு”, என்றாள் கயல்.
“ஹலோ, ஹலோ. கயல் கேக்குதா? டவர் கிடைக்கலை போல? …”, என்று அவன் சீன் போட “அண்ணா…. டேய்”, என்று தங்கைகளும் வைஷ்ணவியும் அழைத்தார்கள்.
“நீங்கள் அழைக்கும் நபர் தூங்கச் செல்கிறார். நாளை சந்திக்கலாம்”, என்று சொல்லி போனை அனைத்து விட்டான் தமிழ். அவன் முகம் மலர்ந்தே இருந்தது. தமிழின் சந்தோஷத்தை உணர்ந்த பெண்களுக்கும் அவ்வளவு சந்தோஷம். அவன் வலியை உணர்ந்தவர்கள் ஆயிற்றே.
அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது. காலை ஒன்பது மணி முதல் பத்து மணி வரை முகூர்த்தம் என்பதால் நிதானமாக கிளம்பினார்கள். கயல் ஊரில் இருந்தும் அனைவரும் வந்து விட்டார்கள்.
வைஷ்ணவி அழைத்திருந்த மேக்கப் செய்யும் பெண் வந்திருக்க கயலுக்கு அலங்காரம் ஆரம்பமானது.
அலங்காரம் முடிந்ததும் அனைவரும் கோவிலுக்குச் செல்ல இதோ ஒரே மகனின் திருமணத்துக்கு கூட சரோஜா வர வில்லை. திருமண மேடையில் பட்டு வேஷ்டி அணிந்து கம்பீரமாக அமர்ந்திருந்தான் தமிழ். பூரித்து போய் அவன் அருகே அமர்ந்திருந்தாள் கயல். மீனாட்சி மற்றும் வைஷ்ணவி இருவரும் அவளை தாங்கினார்கள் என்றால் அமுதா, ஜெயந்தி, தேவி மூவரும் அவளை அண்ணி அண்ணி என்று தாங்கினார்கள்.
அவளுக்கு திருமணம் நடப்பதே கனவு என்று தான் எண்ணியிருந்தாள். அவளை எந்த வீட்டில் இருந்து பெண் கேட்டு வருவார்களாம் என்பது தான் அவளது எண்ணம். ஆனால் இப்போதோ அவளுக்கு திருமணம் நடப்பதே பெரிது என்றால் அவளைச் சுற்றி இருந்த உறவினர் கூட்டம் அதை விட பெரியதாக தெரிந்தது.
இனி இவ்வளவு சொந்தமும் அவளுக்கும் சொந்தம் தானே என்ற நிம்மதி வந்தது. இனி அவளும் ஒரு பெரிய குடும்பத்துக்கு மருமகள். அவளுக்கும் பல கடமைகள் இருக்கிறது என்ற நிம்மதி வந்தது.
ஐயர் கெட்டிமேளம் என்று சொல்ல அவள் கழுத்தில் மன நிறைவுடன் தாலி கட்டினான் தமிழ். அவன் தொடுகையில் அவள் தேகம் முழுவதும் சிலிர்த்தது.
இந்த ஜென்மத்தில் அவளுக்கு கிடைத்த முதல் உறவு அவன் தான். இனி அவனில்லாமல் அவள் இல்லை என்று குறிக்கும் வகையில் நடந்தேறியது திருமணம்.
ஏற்கனவே பேசும் போது நாத்தனார் முடிச்சைப் போட மூன்று தங்கைகளுக்கும் யார் என்று போட்டி வந்திருக்க மனதுக்குள் முடிவு எடுத்த படி மூன்று முடிச்சையும் அவனே போட்டான்.
ஐயர் அவளுடைய நெற்றியில் குங்குமம் வைக்கச் சொல்ல அதை வைத்தவன் அவள் முகம் பார்க்க அவளும் அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் ஒருவரை ஒருவர் பார்த்த படியே இருந்தார்கள்.
அவள் காலில் மெட்டி அணிவித்து அவள் கரம் பற்றி அக்னியை வலம் வரும் போது இருவர் மனமும் நிறைந்து இருந்தது. கோவிலில் இருந்து அனைவரும் வீட்டுக்கு வந்தார்கள். மணமக்கள் வாசலில் நிற்க தேவி தான் ஆரத்தி தட்டை எடுக்க வீட்டுக்குள் சென்றாள். ஆனால் சரோஜா அவளை உள்ளே விட வில்லை. அனைவரையும் வாசலில் நிற்க வைத்தவள் “எங்க வந்தீங்க? எனக்கு விருப்பம் இல்லாத வேலையை செஞ்ச யாரும் என் வீட்டுக்குள்ள வரக் கூடாது”, என்று குண்டைத் தூக்கிப் போட்டாள்.
அனைவரும் திகைத்து விழித்தார்கள். சமுத்திரமோ கலங்கி விட்டார். வேணியோ “இந்த அம்மா இவளை எப்படி வாழ விடும்னு யோசிச்சேன்? பாத்தா சொன்ன மாதிரி வீட்ல இருந்தே துரத்திட்டே?”, என்று எண்ணிக் கொண்டாள்.
“என்ன சம்பந்தி இப்படி ஆகிருச்சு?”, என்று கேட்டார் சமுத்திரம்.
“கவலைப்படாதீங்க. எல்லாம் நல்லதுக்கு தான். இந்த வீடு இல்லைன்னா என்ன? வேற வீடா இல்லை?”
“இருந்தாலும் என் மகளுக்கு வாழ புகுந்த வீடு வேண்டாமா?”
“இந்த வீட்டைக் கட்டினது தமிழ் தான். இவன் பாரின்ல இருந்ததுனால அவங்க அம்மா பேர்ல வீடு வாங்கினான். ஆனா இப்ப அவனையே துரத்துறாங்க. ஆனா இப்படி எல்லாம் நடக்கும்னு எனக்கும் தெரியும், தமிழுக்கும் தெரியும். அதான் என்னோட வீட்டை தமிழுக்கே வித்துட்டேன். அதோ அந்த வீடு அவன் பேர்ல தான் இருக்கு. தமிழ் அவன் தங்கச்சிகளுக்கு எல்லாம் செஞ்சிட்டான். அவங்க அம்மாவுக்கும் இந்த வீட்டைக் கொடுத்து கணக்கு முடிச்சதா இருக்கட்டும். இனி அவன் வாழ்க்கையைப் பாக்கட்டும். அவன் பேர்ல இருக்குற வீட்ல அவங்க வாழ்க்கையை ஆரம்பிக்கட்டும். தேவி மா, அந்த வீட்ல போய் ஆரத்தி ரெடி பண்ணு. நம்ம வீட்ல இருந்து தேவையான பொருள் எடுத்துக்கோ. வைஷு போய் எடுத்துக் கொடு”, என்று சிதம்பரம் சொல்ல அனைவரும் திகைத்து தான் பார்த்தார்கள்.
சரோஜாவுக்கே அந்த வீடு தமிழ் பெயரிலா இருக்கிறது என்று அதிர்ச்சியாக தான் இருந்தது. சொன்னது போல அனைவரும் அந்த வீட்டுக்கு சென்றார்கள். சரோஜாவை மறந்து மணமக்கள் சந்தோஷமாக அந்த வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தார்கள்.
பால் பழம் கொடுக்கப் பட்டது. சிறிது நேரம் ஓய்வெடுத்தவர்கள் மீண்டும் அந்த ஊரில் இருந்த மண்டபத்துக்கு சென்று மேடையில் நின்றார்கள். ஊர்க்காரர்கள் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள். வைஷ்ணவி கயலுக்கு வளையலும் சேகர் தமிழுக்கு தங்கத்தில் காப்பும் போட்டான். மூன்று தங்கைகளும் சேர்ந்து ஏழு பவுனில் தாலிசெயினை கயல் கழுத்தில் போட்டு விட்டு ஆளுக்கு பத்தாயிரம் என்று கவரில் வைத்து கொடுத்து விட்டார்கள். சிதம்பரம் மணமக்கள் இருவருக்கும் செயின் போட்டார்.
சமுத்திரம் வீட்டு மாப்பிள்ளைக்கு என வாங்கிய செயின், மோதிரம், பிரேஸ்லெட் என அனைத்தையும் போட வேணிக்கு நெனு வலியே வரும் படி இருந்தது. “இந்த மனுசனுக்கு இருக்கு”, என்று கருவிக் கொண்டாள்.
கயலுக்கு அவர்கள் வீட்டில் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று ஊர்க்காரர்கள் மத்தியில் பரவி இருந்த பேச்சை அடியோடு மாற்றி அமைத்த சமுத்திரம் மகளின் திருமணத்தை நிறைவாகவே செய்தார். அதில் கயலுக்கு அவ்வளவு சந்தோஷம். மதிய உணவு முடிந்து மறுவீட்டுக்கு கயலின் வீட்டுக்குச் சென்றார்கள்.
அன்று மாலை அங்கே விருந்தை முடித்து விட்டு ஊருக்கு வந்தார்கள். இங்கே ஊர் சாப்பாடு நடந்து கொண்டிருந்தது. “என்ன சமுத்திரம் பொண்ணுக்கு சீர் செய்யலையா? பொருள் ஒண்ணையும் காணும்”, என்று அவரது ஊர் தலைவரே கேட்டார்.,
“பொண்ணுக்கு என்ன தேவைன்னு பாத்து வாங்க அவளுக்கு என்ன அம்மாவா இருக்கா? அதான் நானே கடைல ஆர்டர் பண்ணிட்டேன். இப்ப வந்துரும் மாமா”, என்று சமுத்திரம் சொல்லும் போதே அங்கே லாரியில் வந்து இறங்கியது சீர்வரிசை.
வேணி அதிர்ச்சியாகவும் கோபமாகவும் கணவரைப் பார்க்க அவரோ அவளை திரும்பிக் கூட பார்க்க வில்லை.
கட்டில், பீரோ, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மெத்தை, மிக்சி, கிரைண்டர், வீட்டுக்கு தேவையான பாத்திரங்கள், சாமி போட்டோக்கள் கூட அவர் வாங்கி இருக்க கயலுக்கே தந்தையின் அன்பில் கண்கள் கலங்கி விட்டது. ஏனோ அவளுக்கு அவர் மனதில் கொட்டிக் கிடக்கும் தனக்கான அன்பின் மொத்த வெளிப்பாடாக தான் இது தோன்றியது. பொருள்கள் மட்டும் அல்ல அவளுக்கு என்று சேலைகள், உடைகள் என வந்திருக்க வேணி வயிற்றெரிச்சலுடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இரவு வந்ததும் வீட்டாள்களை தவிர மற்றவர்கள் கிளம்பினார்கள். ஊரே சரோஜாவைத் தூற்ற தான் செய்தது. அவளோ வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
கயலின் பிறந்த வீட்டு சொந்தங்களும் கிளம்பியது. “புருஷன் வீட்ல புரிஞ்சு பொழைச்சிக்கோ. பொட்டியைத் தூக்கிட்டு என் வீட்டுக்கு வந்துடாத”, என்று சொல்லி விட்டு கிளம்பினாள் வேணி. “கவலைப்படாதீங்க, செத்தாலும் உங்க கிட்ட வர மாட்டேன்”, என்று நேரடியாகவே பதில் சொல்லி விட்டாள் கயல்.
கயலின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்து கண் கலங்கிய சமுத்திரம் தமிழிடம் “பாத்துக்கோங்க மாப்பிள்ளை. என்னால முடிஞ்சதை என் பொண்ணுக்கு செஞ்சிட்டேன். ஆனா இது எதுவும் நான் கொடுக்க தவறிய பாசத்துக்கு ஈடாகாதுன்னு எனக்கு தெரியும். இனி நீங்க தான் அவளுக்கு எல்லாமே. என் பொண்ணைப் பாக்கணும்னு நினைச்சா நான் இங்க வரேன் மாப்ள. அவளை அங்க கூட்டிட்டு வர வேண்டாம். இனி கயலுக்கு நீங்க தான் எல்லாம். அவ உங்க பொறுப்பு. அப்புறமா இந்த பையை கயல் கிட்ட கொடுத்துருங்க”, என்று சொல்லி விட்டுச் சென்றார் சமுத்திரம். ஏதோ பை என்று எண்ணிய தமிழ் அப்போதைக்கு பீரோவில் வைத்து விட்டு அவர்களை வழி அனுப்பினான்.
தேவி, ஜெயா, அமுதா மூவரும் சீர் வரிசை பத்திரங்களை சமையல் அறையில் அடுக்கி கொண்டிருக்க வைஷ்ணவி கயலை குளிக்கச் சொல்லி அவளை கிளப்பிக் கொண்டிருந்தாள்.
தமிழ் மற்ற செலவுகளுக்கு பணம் செட்டில் பண்ணிக் கொண்டிருக்க சேகர் முதலிரவு அறையை அலங்கரித்துக் கொண்டிருந்தான். தமிழின் மாப்பிள்ளைகளும் அதில் கலந்து கொண்டார்கள்.
எல்லாவற்றையும் செட் செய்து கொடுத்தவர்கள் மணமக்களை வாழ்த்தி விட்டுச் சென்றார்கள். கயலின் தங்கைகள் அன்னையின் வீட்டுக்குச் செல்ல தயங்க “ஏன் டி உங்க அம்மா வீடு மட்டும் தான் உங்களுக்கு வீடா? அத்தைன்னு நான் இருக்குறது உங்களுக்கு தெரியலையா? உங்க புருஷன்களைக் கூட்டிட்டு உள்ள வாங்க”, என்றாள் மீனாட்சி. சிதம்பரமும் அனைவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்று அவர்கள் தூங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்.
அதே நேரம் கயலின் பிறந்த வீட்டில் சண்டை ஆரம்பித்தது. சமுத்திரம் அமைதியாக படுக்க போக “ஏங்க மாமா நீங்க உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?”, என்று கேட்டாள் வேணி..
“ஏன் என்ன நினைக்கணும்? எனக்கு புரியலை. ரொம்ப டயர்டா இருக்கு. பேசாம படு டி”, என்று எரிச்சலுடன் சொன்னார் சமுத்திரம்.
“படுக்கணுமா? முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லுங்க. நீங்க செஞ்சது உங்களுக்கு நியாயமா இருக்கா?”
“நான் என்ன செஞ்சேன்?”
“சிம்பிளா தானே கயல் கல்யாணத்தை நடத்தணும்னு பேசினோம்? ஆனா நீங்க சீர்வரிசைக்கே லட்சத்துக்கு மேல செலவு செஞ்சிருப்பீங்க போல? அது போக அவனுக்கு தங்கத்துல செயின், மோதிரம், பிரேஸ்லெட். இது எல்லாம் ஓவரா தெரியலை?”
“அதுல என்ன தப்பு?”
‘என்ன தப்பா? எதுக்கு அவங்களுக்கு அவ்வளவு செய்யணும்?”
“செஞ்சது தப்பா? சரி அப்படின்னா சித்ரா கல்யாணத்துக்கும் நான் எதுவும் செய்யக் கூடாதா?”
“ஆன்…. அது எப்படி?”
“என்ன எப்படி? எனக்கு கயல் சித்ரா ரெண்டு பேரும் ஒண்ணும் தான்”
“மாமா”
“என்ன கத்துற? கயலுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கணும்னு தான் இத்தனை நாள் நீ பண்ணின அழிச்சாட்டியங்களை பொறுத்துகிட்டேன். இனி பொறுக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை”
“மாமா”
“வாயை மூடு டி. மனுசியா நீ? அந்த சின்னப் பிள்ளையை போய் எவ்வளவு டார்ச்சல் பண்ணின? நான் அப்ப ஏதாவது கேட்டிருந்தா நீ அவளை கொன்னுருப்ப. இல்லை பணத்துக்கு எங்கயாவது வித்துருப்ப. அவளுக்கு உன் கிட்ட இருந்து ஒரு பாதுகாப்பு வேணும்னு தான் இவ்வளவு வருஷம் வாயை மூடிட்டு இருந்தேன். நீயெல்லாம் மனுசியா டி?”
“ஓஹோ இப்ப நான் மனுசியா தெரியலையா? ஏன் கூட படு…. போது தெரியலையா?”, என்று அவள் கோபத்தில் வார்த்தையை விட “என்னமோ நானே உன் கையைப் பிடிச்சு இழுத்த மாதிரி சொல்ற? கண்ணு முன்னாடி சேலையை விலக்கி என்னைப் பார் என் அழகைப் பார்ன்னு நின்னவ நீ. என்னை மயக்கினது நீ. அப்ப புத்தி கெட்டுப் போய் நானும் உன் வலைல விழுந்துட்டேன். உன் வயித்துல பிள்ளை இருக்குனு சொன்னப்ப நீ என் கிட்ட என்ன டி சொன்ன? என் கழுத்துல தாலி மட்டும் கட்டுங்க மாமா. வேற எந்த உரிமையையும் கேக்க மாட்டேன். எங்க அக்கா காலடிலே கிடப்பேன்ன்னு சொன்னீயே டி? ஆனா நீ அந்த புண்ணியவதியைக் கொன்னு… என் பிள்ளையை அப்பா இருந்தும் அநாதை ஆக்கி இனியும் அதை பொறுத்துக்குவேன்னு நினைக்கிறியா? ஆத்தாவும் மகளும் ஒழுங்கா இருக்குறதா இருந்தா இருங்க. இல்லை ஏதாவது குடைச்சல் கொடுத்தா காசி ராமேஸ்வரம்னு போயிருவேன்”
“அப்ப என் மக வாழ்க்கை”
“அது உன் கைல தான் இருக்கு. வாயை மூடிட்டு இருந்தா நான் அவளுக்கு நல்ல மாப்பிள்ளை பாத்து கட்டி வைப்பேன். இல்லையா, நீயே பாத்துக்கோ”
“நீங்க பேசுறது தப்பு மாமா”
“தப்பு சரி பத்தி எல்லாம் நீ பேசக் கூடாது. பேசாம படு போ”
“உங்களை இனி நம்ப கூடாது. எல்லாத்தையும் அந்த கயலுக்கே கொடுப்பீங்க. நாளைக்கே உங்க பிரண்டு வீட்ல பேசுங்க. சித்ராவுக்கு உடனே கல்யாணம் நடக்கணும்”
“அவங்க வீட்ல கேட்டது கயலைத் தான். ஆனா நான் அப்படிச் சொன்னா தான் நீ இதுக்கு சம்மதிப்பேன்னு அப்ப அப்படிச் சொன்னேன். நீ வாயை மூடிட்டு இரு. சித்ரா என் பொண்ணு. அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுப்பேன்”, என்று சொல்ல வேணிக்கு அமைதியாக இருப்பதை தவிர வேறு வழி இருக்க வில்லை.
தொடரும்…..