எனைச் சுற்றி ஏகாந்தம்
அத்தியாயம் 9
மணமக்கள் இருவரும் ஆவலுடன் எதிர் பார்த்த முதலிரவு வந்தே விட்டது. அந்த வீட்டில் அவளும் அவனும் மட்டுமே. மற்றவர்கள் அனைவரும் அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டுச் சென்றிருந்தார்கள். வைஷ்ணவி அலங்காரம் செய்து விட்டு முதலிரவுக்கு என அலங்காரம் செய்யப் பட்ட அறைக்குள் அவளை விட்டுவிட்டுச் சென்றதும் கொஞ்சம் படபடப்பாக தான் அமர்ந்திருந்தாள் கயல்.
நெஞ்சம் எல்லாம் அதிர்ந்து போய் இருந்தது. அவன் ஒன்றும் அவளுக்கு புதியவன் இல்லை. இத்தனை நாள் அவனிடம் பழகியவள் தான். இன்னும் சொல்லப் போனால் அவன் முத்தத்தில் கரைந்தவள் தான். ஆனாலும் வெட்கமும் சங்கடமும் என கலவையான உணர்வுகள் அவளை ஆட்கொண்டது.
அனைவரும் சென்றதும் வீட்டுக் கதவை அடைத்து விட்டு அறைக்குள் வந்தான் தமிழ். அவனுக்குமே ஒரு மாதிரி தான் இருந்தது. ஆண்களுக்கும் வெட்கம் வரும் என்று அவர்களே உணரும் தருணம் முதலிரவு தான் போல என்று எண்ணிக் கொண்டான். பெண்ணின் வெட்கம் புதையல் என்றால் ஆணின் வெட்கம் பொக்கிஷம் தான்.
அறைக்குள் கயல் பதுமை போல அமர்ந்திருக்க அவளை ஒரு பார்வை பார்த்தவன் “இப்போதே விளக்கு அணைக்கவா? வேண்டாம். கொஞ்ச நேரம் ஆகட்டும்”, என்று எண்ணமிட்ட படி அவளை நெருங்கினான். அவளை நெருங்க நெருங்க ஒரு மாதிரி படபடப்பாக வர “என்னா உணர்வு டா சாமி”, என்று எண்ணிக் தலையைக் கோதிக் கொண்டான்.
ஆசை நரம்புகள் ரத்தத்தில் பாய்ந்து உச்சந்தலையை முடிச்சிட்டுக் கொள்ளும் உணர்வு என்று சொன்னால் சரியாக இருக்குமோ? அவளோ குனிந்த தலையை நிமிரவே இல்லை. அவன் உள்ளே வந்தது தெரியும். அறைக் கதவை லேசாக சாற்றியது தெரியும். அவள் அருகில் வந்து நிற்பதும் தெரியும். ஆனால் நிமிர்ந்து பார்க்க தைரியம் இல்லை.
இப்படிப் பட்ட உணர்வுகள் கிளர்ந்து சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என்று தான் முன்னோர்கள் இப்படியாகப் பட்ட சடங்குகளை உருவாக்கி இருக்கிறார்களோ என்று தான் தோன்றியது.
அவன் அருகில் வந்து நின்ற பிறகும் அவள் தலை குனிந்தே இருக்க அவள் வெட்கத்தில் கவரப் பட்டவன் தயக்கம் உதறி அவள் அருகே அமர்ந்தான். அவன் கண்கள் அவளையே அளவிட்டது.
கோதுமை நிற மேனியும், மீன்களின் பிம்பமாய் கண்களும், கூர்மையான அதே நேரம் சின்னதாக இருந்த மூக்கும், தழுவத் துடிக்கும் கன்னங்களும், தேன் சுரக்கும் திவ்விய இதழ்களும் என முன்னேறிய தமிழின் கண்கள் அவனுக்குள் ஒளிந்திருக்கும் கவிஞனை உயிர்தெழச் செய்து கொண்டிருந்தது.
“கயல்”, என்று கிசுகிசுப்பாக அழைக்க அவளிடம் இருந்து ம்ம் என்ற முணுமுணுப்பு மட்டுமே வந்தது.
“என்னை நிமிர்ந்து பாரு டி”, என்று சொல்ல ‘மாட்டேன்’ என்னும் விதமாய் தலையசைத்தாள்.
அவன் கைகள் நீண்டு அவள் நாடியைப் பிடித்து முகத்தை தூக்க ஒரு நொடி அவனைப் பார்த்தவள் அடுத்த நொடி கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
கண்கள் மூடி இருந்தாலும் அவள் இமைக்குள் கருவிழிகள் உருண்டது. சிவந்த இதழ்கள் லேசாக துடித்தது. அவளுடைய நாடியில் பதிந்திருந்த விரலை லேசாக அசைத்து அவள் இதழ்களை வருட அடுத்த நொடி அவன் கையைத் தட்டி விட்டவள் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். அவளை வெற்றி கொண்ட கர்வத்துடன் அவளை அணைத்துக் கொண்டவன் “தூக்கம் வருதா டி?”, என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.
“இல்லை”, என்ற படியே அவன் நெஞ்சில் புதைந்திருந்தாள். அவளை இன்னும் இறுக்கிக் கொண்டவனின் கரம் அவளது சேலை மறைக்காத வெற்றிடையில் பதிய அது ஏற்படுத்திய உணர்வால் சற்று தடுமாறிப் போனாள்.
அவன் இதழ்கள் அவள் காதில் முத்தமிட சற்று சிலிர்த்தது அவள் தேகம். அவள் காது மடல்கள் புல்லரிப்பதை உணர்ந்தவன் “மணி பதினொன்னு ஆகப் போகுது. தூங்கலாமா?”, என்று கேட்டான்.
“ம்ம்”, என்ற படி அவள் விலக எழுந்து சென்று விளக்கை அணைத்தவன் தன்னுடைய சட்டையை கழட்டி போட்டு விட்டு அவள் அருகே அமர்ந்தான்.
இப்போது அவனாவே அவளை இழுத்து தன் மார்பில் சாய்த்து கொள்ள அவளும் தயக்கம் உதறி அவன் மார்பில் தஞ்சமடைந்தாள். அவளை சற்று விலக்கி அவள் கன்னத்தில் இதழ் பதித்தவன் அவள் நெற்றியில் முன்னேறி இதழில் வந்து இளைப்பாறினான்.
வெகு நேரம் நீடித்த இதழ் முத்தத்தில் மூச்சு திணறிப் போனவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள். இதழில் இருந்து விலகியவனின் இதழ்கள் அவள் கழுத்தில் இறங்க அவன் சிகைக்குள் கரம் கோர்த்து இறுக்கிக் கொண்டாள். வெட்கத்தில் அவனை தன்னிடம் இருந்து விலக்க அவள் முயல அவளால் அது முடியாமலே போனது.
“கயல்….”, என்றவனின் குரல் மது போதையில் உளறியது போலவே இருந்தது. அவளை படுக்கையில் தள்ளி அவள் மேல் படர்ந்தவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க அவள் கண்களைத் திறக்கவே இல்லை. மீண்டும் ஒரு முத்த பயணம் தொடர அவன் கரங்களும் அவள் மேனியில் இறங்கியது. அவன் கரங்கள் பயணித்த வேகத்தில் சற்று விதிர்த்து போனவள் அவன் கரத்தை தடுக்க முயன்று தோற்றுப் போனாள்.
காதல் கணவனாய் அவன் அவளிடம் தன்னுடைய உரிமையை நிலைநாட்ட அவனுக்குள் முழுதாக கரைந்து போனாள். இத்தனை வருடங்களில் அவள் யாரோ அவன் யாரோ தான். ஆனால் இன்று முதல் அவனுடன் உயிரோடு உயிராக கலந்து விட்டாள். அதிக களைப்பில் கயல் முதலில் உறங்கிப் போக அவளையே பார்த்த படி அவனும் உறங்கிப் போனான். அடுத்த நாள் அவன் கண்கள் கண்டது தன் கைக்குள் உறங்கும் அவளை தான்.
கசங்கிய உடையும் கலைந்த கேசமும் என அவள் இருந்த விதம் அவன் நெஞ்சை அள்ள அவளை ரசித்துப் பார்த்தான்.
ரசனைப் பார்வை அவன் உணர்வுகளை மீட்ட ஆரம்பிக்க அவள் கன்னத்தில் இதழ் பதித்தவன் அவள் முகம் எங்கும் முத்தமிட தூக்கம் கலைந்தவள் வெட்கத்துடன் அவனைக் கண்டு சிரித்தாள். மீண்டும் அவளை கொள்ளையிட்டவன் அவளை விட்டு விலக வெட்கத்துடன் குளிக்கச் சென்றாள்.
குளித்து முடித்தவள் ஒரு நைட்டி அணிந்து வெளியே வந்தாள். அவளை அவன் ரசனையாக பார்க்க “ஐயோ மறுபடியுமா? ஒழுங்கா குளிச்சிட்டு வாங்க”, என்று சொல்லி அவனைத் துரத்தி விட்டாள். அவன் குளிக்கச் செல்ல அவளோ அவன் அவளுக்காக வாங்கி வைத்திருந்த சேலைகளில் இருந்து ஒன்றை எடுத்து அணிய ஆரம்பித்தாள்.
அவன் குளித்து முடித்து வரும் போது இளம் பச்சை நிற புடவை அவள் மேனியைத் தாங்கி இருக்க அவள் அழகு இன்னும் கூடி இருப்பதாக தான் தெரிந்தது.
வெறும் துண்டைக் கட்டிக் கொண்டவன் அவளை நெருங்கி பின் பக்கமாக கட்டி அணைக்க இப்படி தன் மேல் அன்பாக இருக்க ஒருத்தன் வருவான் என்று எதிர் பார்க்காதவளுக்கு அது நடந்ததும் உள்ளம் நிறைந்தது.
“டிரஸ் மாத்துங்க. நான் இன்னும் வீட்டை விட்டு வெளியவே போகலை. வாசல் கூட தெளிக்கலை”, என்றாள்.
“அதெல்லாம் அத்தை பாத்துக்குவாங்க. இங்க ஆள் இல்லாதப்பவே அத்தை தெளிக்க தான் செய்வாங்க. நாளைல இருந்து நீ செஞ்சிக்கோ”
“எப்படின்னாலும் வெளிய போய்த் தானே ஆகணும்?”
“ஆமா டி, ஆனா கொஞ்ச நேரம் கைக்குள்ள இரு. கொஞ்ச நேரத்துல விடுறேன்”, என்று சொன்னவன் அவளை முத்தமிட்டு விலகி அவளுக்கு என வாங்கி வைத்திருந்த கம்மல் மோதிரத்தைக் கொடுத்தான். அடுத்த நொடி ஆசையாக இரண்டையும் அணிந்து கொண்டாள்.
“அழகா இருக்கா?”, என்று அவள் கேட்க “உன்னை விட அழகு கம்மி தான்”, என்று சொல்லி அவளை சிரிக்க வைத்தான்.
“கயல் இப்ப தான் ஞாபகம் வருது. உங்க அப்பா உன் கிட்ட கொடுக்கச் சொல்லி ஒரு பை கொடுத்தார் டி”, என்று சொன்னவன் அதை எடுத்துக் கொடுத்தான்.
அதைப் பிரித்துப் பார்க்கும் போது அதில் இரண்டு லட்சம் பணம் இருக்க இருவரும் ஒருவரை ஒருவர் திகைத்த படி பார்த்தார்கள்.
“என்னங்க இது?”
“எனக்கும் தெரியலை டி. உன் கிட்ட தான் கொடுக்கச் சொன்னார்”
“திருப்பிக் கொடுத்துறலாமா?”
“உன் இஷ்டம் கயல். அதுக்கு முன்னாடி இரு அவர் கிட்ட கேப்போம்”, என்றவன் சமுத்திரத்தை அழைத்தான்.
அதை எடுத்து “குட் மார்னிங் மாப்ள. கயல் நல்லா இருக்காளா?”, என்று சந்தோஷமாக கேட்டார்.
“குட் மார்னிங் மாமா. கயல் ஹேப்பியா தான் இருக்கா”
“ரொம்ப சந்தோஷம் மாப்ள”
“அப்புறம் மாமா, நீங்க கொடுத்த பையை இப்ப தான் பாத்தோம். எதுக்கு மாமா இவ்வளவு பணம்?”
“அது என் பொண்ணுக்கு இந்த அப்பனோட சீர் மாப்ள”
“அதான் நிறைய செஞ்சிட்டீங்களே? இது எதுக்கு?”
“இன்னும் நிறைய செய்ய வேண்டியது இருக்கு மாப்ள. நீங்க அதுக்குள்ளே இப்படிக் கேக்குறீங்க?”
“கயல் திருப்பிக் கொடுத்துறலாம்னு சொல்றா மாமா. எனக்கும் அது தான் சரியாப் படுது”
“நான் நாளப் பின்ன என் மகள் வீடு, என் மாப்ள வீடுன்னு உங்க வீட்டுக்கு உரிமையா வரணும்னு நினைச்சா அந்த பணத்தை நீங்களே வச்சிக்கோங்க. இல்லை இந்த அப்பனோட உறவே வேண்டாம்னு கயல் நினைச்சா அதை என் அக்கவுண்டுக்கு அனுப்பிருங்க”, என்று சொன்னவர் அடுத்து எதுவும் பேசாமல் போனை வைத்து விட்டார்.
“என்ன செய்ய கயல்?”, என்று கேட்டான்.
“நாமளே வச்சிக்கலாம்”
“சரி நாளைக்கு மொய் ரூபாயையும் கணக்கு பண்ணி பேங்க்ல போய் போட்டுட்டு வந்துறலாம். உன்னோட பாஸ்புக்கையும் கொடு”
“உங்க பேர்ல போடக் கூடாதா?”
“ரெண்டு அக்கவுண்டுலயும் பிரிச்சு போடணும் டி. அப்ப தான் சரியா இருக்கும். இனி என்னோடது வேற உன்னோடது வேற இல்லை”, என்று சொல்ல “சரிங்க, இதுக்கு இவ்வளவு விளக்கம் கொடுக்கணுமா? நான் எது வரைக்கும் பணம்னு ஒண்ணை கையில வச்சு செலவு பண்ணினது இல்லை. இனியும் எல்லாத்தையும் நீங்களே பாத்துக்கோங்க”, என்றாள்.
“என்ன நீ இப்படிச் சொல்ற? அதெல்லாம் கணக்கு வழக்கு சரியா பாக்கணும்? நீ என்னைக் கண்டுக்காம விட்டா இஷ்டத்துக்கு செலவழிச்சிருவேன்”
“யாரு நீங்களா? உங்களுக்கு என்ன கெட்ட பழக்கம் இருக்கு வீணா செலவு பண்ண? ஒண்ணே ஒண்ணு வேணும்னா செய்வீங்க?”
“என்ன டி அது?”
“உங்க தங்கச்சிகளுக்கு செலவு செய்யணும்னு நினைப்பீங்க? அது தாராளமா செஞ்சிக்கோங்க. இப்ப எனக்கு ஒரு அண்ணன் இருந்து அந்த அண்ணன் எனக்கு செஞ்சா நான் சந்தோஷப் பட மாட்டேனா? உங்க தங்கச்சிகளுக்கு செய்யுறதை கூட நான் கேக்க மாட்டேன்”
“இல்லை கயல், அவங்களுக்கு செய்ய மாட்டேன்னு சொல்ல வரலை. வருஷம் வருஷம் பொங்கல் சீர் செய்யணும். அவங்க பிள்ளைகளுக்கு தாய்மாமன் சீர் செய்யணும். வேற எப்பவாது உதவின்னு அவங்க வந்து நின்னா அப்ப செய்யணும். இது செஞ்சா போதும் டி. சும்மா எனக்கு இருக்குறதையும் அள்ளிக் கொடுக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. எல்லாரும் கவர்ன்மெண்ட் மாப்பிள்ளைங்க. நல்ல இடத்துல நல்ல சீர் செஞ்சு தான் கட்டிக் கொடுத்துருக்கேன். அதுக்கும் மேல அள்ளிக் கொடுத்தா என் வாழ்க்கை என்ன ஆகுறது?”
“எதுக்கு இவ்வளவு யோசிக்கிறீங்க?”
“எல்லாம் யோசிக்கணும் கயல். ஒரு படம் என்னை இப்படி எல்லாம் யோசிக்க வச்சிருச்சு”
“என்னது படமா?”
“ஆமா ஆறிலிருந்து அறுபது வரை, ரஜினி படம்”
“ஓ அதுவா? ஒரு நாள் கிளைமேக்ஸ் மட்டும் பாத்தேன். கஷ்டமா இருந்துச்சு”
“ஆமா, அதை பாத்த பிறகு தான் தனக்கு போகத் தான் தானமும் தர்மமும்னு புரிஞ்சது. தர்மம் செய்யக் கூட நம்ம கைல இருந்தா தான் செய்ய முடியும்”
“சரிங்க முனிவரே. நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்”, என்று சிரித்தாள்.
“என்ன கயல் சட்டுன்னு முனிவரேன்னு சொல்லிட்ட? நான் இப்ப தான் சம்ஸாரியா ஆகிருக்கேன். இன்னும் சில விஷயங்களை முழுமையா கூட அனுபவிக்கலை”, என்று சொல்ல அவள் முகம் சிவந்து போனது.
“நாம என்ன பேசிட்டு இருக்கோம். நீங்க என்ன சொல்றீங்க?”, என்று வெட்கத்துடன் கேட்க “சரி, சொல்றேன். நான் என்ன செலவு செஞ்சாலும் நீ கணக்கு கேக்கணும் சரியா?”, என்று கேட்டான். சரி என்று கேட்டுக் கொண்டாள்.