அத்தியாயம் 8_2 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:1,715
அவளது சிவந்த முகத்தை பார்த்த படியே அங்கே வந்தான் விக்ரம். “என்ன மா உங்க மருமக முகம் அப்படியே மின்னுது. ஏதாவது விலை மதிக்க முடியாத சொத்தை அவளுக்கு எழுதி வைக்கிறேன்னு சொல்லிட்டீங்களா? அதான் இவளுக்கு இவ்வளவு சந்தோஷமா?”, என்று நக்கலாக அவன் கேட்டதும் அவனை முறைத்தாள் ரேகா.
“அப்படியா? அப்புறம் எதுக்கு இந்த வெக்கமாம்?”, என்று அவளையே பார்த்த படி விக்ரம் கேட்க அவன் பார்வையை எதிர்க் கொள்ள முடியாமல் தலை குனிந்து கொண்டாள் ரேகா.
“கூடிய சீக்கிரம் பேரப் பிள்ளையை பெத்துக் கொடுன்னு கேட்டேன். அதான் அப்படி வெக்கப் பட்டா. சரி நீங்க பேசிட்டு இருங்க. நான் உன் அப்பாவை எழுப்பிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றாள் சாரதா.
சாரதா சென்றதும் அங்கே அமைதியே நிலவியது. குழ்ந்தைப் பற்றிய கனவில் அவள் இருக்க “பாவம் அம்மா, நடக்காததை நினைச்சு கனவு காணுறாங்க”, என்று அவன் சொன்னதும் அவள் விக்கித்துப் போய் அவனைப் பார்த்தாள். அவளுக்குள் இருந்த சந்தோஷம் அனைத்தும் அவனுடைய வார்த்தையால் மடிந்தது.
“இவன் மனசு மாறவே செய்யாதா? என்னை இவன் புரிஞ்சிக்கவே மாட்டானா?”, என்று எண்ணியவளுக்கு அடுத்து ஒரு வாய் உணவு கூட உள்ளே இறங்க வில்லை.
உடனே தட்டை எடுத்துக் கொண்டு எழுந்து கொண்டாள். தன்னுடைய பேச்சு அவளைக் காயப் படுத்தி விட்டது என்று புரிந்து கொண்ட விக்ரம் “இப்ப எதுக்கு எழுந்திக்கிற? ஒழுங்கா உக்காந்து சாப்பிடு. சாப்பாட வீணாக்காத”, என்று சொன்னான்.
“பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுறதுல நீங்க கில்லாடி தான். நான் சாப்பிடக் கூடாதுன்னு தானே கஷ்டப் படுற மாதிரி பேசுனீங்க? அதுக்கு அப்புறம் நான் சாப்பிட்டா என்ன, சாப்பிடலைன்னா என்ன? இதுக்கு மேல எனக்கு சாப்பிட முடியாது. அப்படி உங்க பணம் வீணா போகுதுன்னா இனி என் சாப்பாட்டுக்கு நான் பணம் கொடுத்துறேன்”, என்று வீம்பாக சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள். அவள் சொன்னதைக் கேட்டு அவனுக்கும் கோபம் வந்தது. அவள் அருகே இருந்தால் அவளை ஏதாவது பேசி விடுவோம் என்று எண்ணி தோட்டத்துப் பக்கம் எழுந்து சென்று விட்டான்.
கையைக் கழுவி விட்டு அறைக்குள் வந்த ரேகாவுக்கு அழுகையாக வந்தது. முன்பெல்லாம் பல கஷ்டங்கள் வந்த போது கூட மூலையில் அமர்ந்து அழ மாட்டாள். தன்னுடைய கஷ்டங்களை மனதுக்குள் வைத்து புதைத்துக் கொள்வாள். ஆனால் இப்போதோ எதற்கெடுத்தாலும் அவளுக்கு அழுகை வந்தது. விக்ரம் முன்னால் அவள் பலகீனமானவளாக மாறுகிறாள் என்று அவளுக்கே புரிந்தது. கஷ்டப் படுத்தும் அவனிடமே ஆறுதல் தேடி தவித்தது அவள் மனது.
அவனைப் பற்றி யோசித்த படியே அமர்ந்திருந்தாள். அப்போது அவன் உள்ளே வந்ததும் எழுந்து நின்றவள் அவன் முகத்தைக் கூட பார்க்காமல் வெளியே செல்லப் பார்த்தாள். இங்கேயே இருந்தால் அவன் ஏதாவது காயப் படுத்துவது போல பேசுவான் என்பதால் தான் வெளியே போகப் பார்த்தாள்.
ஆனால் அவனுக்கோ அவளுடைய உதாசீனம் எரிச்சலைத் தந்தது. “செய்றதையும் செஞ்சிட்டு எப்படி என்னை அவாய்ட் பண்ணிட்டு போறா பாரு”, என்று கோபமாக எண்ணியவனுக்கு அவள் அங்கிருந்து போவது சுத்தமாக பிடிக்க வில்லை. அவன் என்ன எதிர் பார்க்கிறான் என்று அவனுக்கே புரிய வில்லை.
அவள் அவனுடைய கண் முன்பு இருக்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு. அதனால் அவளிடம் வம்பிழுக்க எண்ணி “பரவால்ல டி நல்லா தான் நடிக்கிற? உன் முகத்தை வச்சு எங்க அம்மா நமக்குள்ள நடக்குறதை கண்டு பிடிச்சிருவாங்களோன்னு பயந்துட்டேன். ஆனா முகத்தை சாதாரணமா வச்சு நடிச்சிட்ட? எப்பவுமே நீ இப்படித் தானா? சந்தர்ப்பத்துக்கு ஏத்த மாதிரி உன்னை மாத்திக்குவியோ? நேத்துக் காலைலயும் இப்படி தான் சந்தர்ப்பவாதியா இருந்த. இப்பவும் சூப்பரா அம்மா கிட்ட நடிச்சிட்ட. நடிக்க உனக்கு சொல்லியா தரணும்?”, என்றான் விக்ரம்.
“இங்க பாருங்க சும்மா என்னை கஷ்டப் படுத்தணும்னு பேசிட்டு இருக்காதீங்க சொல்லிட்டேன். எனக்கு நடிக்க எந்த அவசியமும் இல்லை. நான் எதுக்கு நடிக்கணும்?”, என்று அவளும் வீம்பாய்க் கேட்டாள்.
“வேற எதுக்கு என் பொண்டாட்டியா நடிச்சா தானே நீ இங்க இருந்து போக வேண்டாம். இங்க இருந்தா தானே இந்த பங்களா, நகை, சொத்து எல்லாத்தையும் நீ அனுபவிக்க முடியும்? அதுக்கு தான் பாசமான மருமகள் மாதிரி நடிக்கிற? ஆனா அவங்க ஏமாறலாம். ஆனா நான் ஏமாற மாட்டேன். இது எல்லாத்துக்கும் ஆசைப் பட்டு தானே முத்தம் கொடுத்த என்னை தூக்கி எறிஞ்சிட்டு உன் மாமா பாத்த மாப்பிள்ளையை நீ கட்டிக்கிட்ட?”, என்று அவன் சொன்னதும் அவனை விசித்திரமாக பார்த்தவள் “எனக்கு முத்தம் கொடுத்ததும் என் மாமா பாத்த மாப்பிள்ளையும் நீங்க தானே? அப்புறம் என்ன பிரச்சனை?”, என்று கேட்டாள்.
“அது உனக்கு லேட்டா தானே தெரியும்? ஜீப்ல வரும் போது தெரியாதுள்ள? நான் முத்தம் கொடுத்த உடனே நீ என்ன டி செஞ்சிருக்கணும்? நான் உங்களை விரும்புறேன். எனக்கு ஊருக்கு போனா கல்யாணம். ஆனா எனக்கு உங்களைத் தான் பிடிச்சிருக்கு. அதனால என்னை உங்க கூட கூட்டிட்டு போயிருங்கன்னு சொல்லிறுக்கணும். நீ சொன்னியா? அப்படி சொல்லிருந்தா நானே சொல்லிருப்பேன் நான் தான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு. ஆனா நீ என்ன சொன்ன? என்னைப் பேசக் கூடாதுன்னும் உன் மாமா பாத்த மாப்பிள்ளையை தான் கட்டிக்க போறேன்னும் சொன்ன தானே? அப்புறம் எப்படி டி உன்னை நான் நம்புவேன்”, என்று மீண்டும் அதையே கேட்டான்.
அவன் மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தைப் பேசுவதில் இருந்தே அவன் மனது தன்னுடைய செய்கையால் எந்த அளவு காயப் பட்டிருக்கிறது என்று ரேகாவுக்கு புரிந்தது. ஆனால் அதற்கு பின் அவள் திருமணத்தை நிறுத்த எண்ணியதையும் அவன் தான் மாப்பிள்ளை என்று தெரிந்து தான் திருமணம் செய்ததையும் நம்ப மறுக்கிறானே? அதன் பிறகு அவளால் என்ன செய்ய முடியும்?
அவன் பேசியது கஷ்டமாக இருந்தாலும் அதை மறைத்தவள் “என் மேல நீங்க வச்சிருக்குற இந்த உயர்ந்த அபிப்பிராயத்துக்கு நன்றி. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. உங்களோட சொத்து., பணம், நகை எல்லாத்துக்கும் நான் ஆசைப் பட்டுத் தான் உங்களை கல்யாணம் பண்ணினேன்னு நீங்க நினைச்சா நாம இப்பவே கூட பிரிஞ்சிறலாம். நான் இங்க இருந்து போயிறேன். அப்புறம் எப்படி உங்க சொத்தை என்னால அனுபவிக்க முடியும்? நான் இப்பவே இந்த வீட்டை விட்டு போறேன். அதுக்கு அப்புறமாவது நீங்க நிம்மதியா இருங்க”, என்று ரேகா சொல்ல அடுத்த நொடி அவள் கன்னத்தில் அடித்திருந்தான் விக்ரம்.
ஒற்றை அடியில் அவன் கையும் எரிந்தது, அவள் கன்னமும் எரிந்தது. கன்னத்தில் கை வைத்து அதிர்ச்சியாக அவனை பார்த்தாள். அவளுடைய வாழ்வில் அவள் வாங்கிய முதல் அடி இது தான்.
“என்ன டி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? போவாளாம்? போய்ருவியோ? இங்க இருந்து உன்னைப் போக விட்டுருவேனா? இன்னொரு தடவை இப்படி பேசின நான் மனுசனா இருக்க மாட்டேன்”, என்று கத்தினான் விக்ரம். அவன் பேச்சில் அவளுக்குள் மெல்லிய சாரல் அடித்தது.
அவன் அடித்த அடி கூட இப்போது இனித்தது. “என் மேல இவ்வளவு அன்பு வச்சிருக்க போய்த் தானே என்னை இங்க இருந்து போகக் கூடாதுன்னு சொல்றீங்க? இவ்வளவு அன்பு வச்சிட்டு நமக்குள்ள இவ்வளவு பிரச்சனை தேவையா? பிளீஸ் பழைய விஷயங்களை எல்லாம் மறந்துறலாமே?”, என்று கேட்டாள் ரேகா.
“ஆமா டி உன் மேல நான் அன்பு வச்சிருந்தேன் தான். ஆனா இப்ப என் மனசுல அந்த அன்பு சுத்தமா இல்லை. அன்னைக்கே உன் மேல எனக்கு இருந்த அன்பு செத்துப் போச்சு”
“அப்ப எதுக்கு இந்த இடி மாதிரியான அடி? என் மேல அன்பில்லன்னா நான் போனா உங்களுக்கு என்ன? என்னை இங்க இருந்து போ சனியன்னு சொல்லி விரட்டி விட வேண்டியது தானே?”
“நீயில்லாம என்னால எப்படி இருக்க முடியும்?”, என்று அவன் சொல்வான் என்று அவள் எதிர் பார்க்க “அப்படி உன்னை விரட்டி விட்டா என் குடும்ப மானம் என்ன ஆகுறது?”, என்று கேட்டான் அவன்.
“விக்ரம்….”, என்று அதிர்வாக அழைத்த ரேகா “இப்படி பல்ப் கொடுத்துட்டானே?”, என்று மனதில் எண்ணிக் கொண்டாள்.
“ஆமா டி, இப்ப நீ வீட்டை விட்டு போனா எல்லாருமே விக்ரம் பொண்டாட்டி அவனை வேண்டாம்னு சொல்லிட்டான்னு தான் பேசுவாங்க. எங்க குடும்பத்தோட மருமக வீட்டை விட்டுப் போய்ட்டான்னு தான் சொல்லுவாங்க. அதுக்கு தான் இந்த அடி. மத்த படி உன் மேல அன்பு எல்லாம் சுத்தமா கிடையாது”, என்றான் விக்ரம்.
“இப்ப நான் என்ன தப்பு பண்ணிட்டேனு நீங்க இப்படி பேசுறீங்க? நீங்க காயப் படுத்தணும்னு பேசுறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க”
“கஷ்டப் படு. உன் கெட்ட குணம் தெரிஞ்சப்ப எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துருக்கும். இப்ப உனக்கு அது திருப்பிக் கிடைக்குது. நல்லா அனுபவி”
“நான் எந்த தப்பும் பண்ணலை. ஒரு வேளை என் செய்கை உங்களைக் காயப் படுத்திருந்துச்சுன்னா அதுக்கு நான் மன்னிப்பு கேக்கவும் ரெடியா இருக்கேன். கொஞ்சம் என் பக்கத்தையும் நீங்க கேக்கலாமே?“
“கட்டாயம் என்னால உன்னை மன்னிக்க முடியாது. மன்னிக்க முடியலை. சில நேரம் உன்னை எதுவும் சொல்லக் கூடாதுன்னு நினைச்சாலும் என்னால முடியலை. இப்பக் கூட உன்னை எதுவும் சொல்லிரக் கூடாதுன்னு தான் தோட்டத்துக்குப் போனேன். ஆனா நீ என்ன செய்றன்னு பாக்க தான் இங்க வந்தேன். நான் வந்ததும் நீ எழுந்து போனது எனக்கு பிடிக்கலை. உன்னால நான் பைத்தியமா ஆகிட்டு இருக்கேன் டி, அது தெரியுமா உனக்கு?”, என்று கேட்டவனை வெறித்துப் பார்த்தாள் ரேகா.