அத்தியாயம் 9
உன் நினைவுகளை
மட்டும் எண்ணி
என்னை மறந்து வாழும்
என்னைச் சுடும் காதல் தீ நீ!!!
திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு, அவர்கள் ஊரில் இருந்த கல்யாண மண்டபம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்க பட்டிருந்தது. விடிந்தால் திருமணம் என்னும் நிலையில் வேலையாட்கள் தூங்காமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஒரு பக்கம் கதை பேசிக் கொண்டே காய் கறிகள் வெட்டிக் கொண்டிருந்தார்கள். மறு பக்கம், தாம்பூல பைகள் தயாராகிக் கொண்டிருந்தது.
அடுப்பு மூட்டப் பட்டு அதில் கடுங்காப்பி கொதித்துக் கொண்டிருந்தது.
ஒலிபெருக்கியில் இளையராஜாவின் பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தது. அந்த இசை அனைவரின் மனதுக்கும் இதத்தைக் கொடுத்தது.
தோரணம் கட்டிக் கொண்டிருந்த முத்துவிடம் “என்ன முத்து வேலை எல்லாம் முடிஞ்சிருச்சா?”, என்று கேட்டார் மதியழகன்.
“எல்லாம் முடிஞ்சிருச்சு பெரியப்பா. மீதி இருக்குற வேலையும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சிரும். வாசல்ல தோரணமும் வாழை மரத்தையும் கட்டணும்”
“அதெல்லாம் அப்புறம் கட்டிக்கலாம். இன்னும் நேரம் இருக்குல்ல? முதல்ல நீ போய் சாப்புடுப்பா”
“சரி பெரியப்பா, நீங்களும் வீட்டுக்கு போங்க. நான் நம்ம பயலுகளை வச்சு பாத்துக்குவேன். இன்னும் கொஞ்ச நேரத்துல செல்வாவும் தினேஷும் வந்துருவோம்னு சொல்லிருக்காங்க”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான் முத்து.
ஒரு முறை அங்கே அனைவருக்கும் இருக்கும் வேலையை சொல்லி விட்டு தன்னுடைய வீட்டுக்கு சென்றார் மதியழகன்.
அங்கே இரண்டு தம்பிகளும் எதையோ கதிரிடம் பேசிய படி இருந்தார்கள். மூவரின் சிரிப்பையும் பார்த்த படி நின்றார். அப்போது செல்வா கதிரின் இடுப்பில் கிள்ளுவதும் அவன் சிரித்துக் கொண்டே நெளிவதும் தெரிந்தது.
ஒரு சிரிப்புடன் தலையில் அடித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தார். அதைப் பார்த்த வேணி “என்ன ஆச்சுங்க? தலையில அடிச்சிட்டு வறீங்க? தலை வலிக்குதா?”, என்று கேட்டாள்.
“மூணு பேரும் மாடு மாதிரி வளந்துருக்கானுங்க. ஆனா கிச்சம்
காட்டி விளையாடிட்டு இருக்காங்க”, என்று சளிப்புடன் சொன்னார்.
“ஆனா அதை நீங்க ரசிச்சு சிரிச்ச மாதிரி இருந்ததே?”, என்று சொல்லி அவரைப் பார்த்து சிரித்தாள்.
“இந்த காலத்துல அண்ணன் வீட்ல இருந்தா தம்பி வெளிய போகும் போது என் பிள்ளைகள் இப்படி ஒற்றுமையா இருந்தா ரசிக்க தோணாதா வேணி?”
“முதல்ல என் பிள்ளைகளுக்கு திர்ஸ்டி சுத்தி போடணும். நீங்களே கண்ணு வைக்கிறீங்க?”
“பெரிய பூசணிக்காயை உடை. இன்னைக்கு இல்லை நாளைக்கு, வீட்டுக்கு நமக்கு இன்னொரு மகளும் வாரா”
“தேனை சொல்றீங்களா? சொன்னாலும் சொல்லாட்டியும் அவ எனக்கு மக தான்”
“அப்ப நம்ம வீட்ல மாமியார் மருமக சண்டை இருக்காதுன்னு சொல்ற?”
[the_ad id=”6605″]“அது எப்படி, எப்ப மாமியாரோ இருக்கணுமோ அப்ப நான் அவளுக்கு மாமியார் தான். இருந்தாலும் மூணு மருமகள்கள் வந்த அப்புறம் என்னோட நிலைமை கொஞ்சம் கவலைக்கிடம் தான்”
“ஹா ஹா, சரி நேரம் ஆகுது. அவனுங்களை கொஞ்ச நேரம் தூங்க சொல்லு. விடிஞ்சா கல்யாணம். அம்மா தூங்கிட்டாங்களா?”
“மாத்திரை போட்டதும் தூங்கிட்டாங்க. இவனுங்க கிட்ட அப்ப இருந்து சொல்றேன். கேக்காம அரட்டை அடிச்சிட்டு இருக்கானுங்க. இவனுங்களை”, என்று சொல்லி கொண்டே அவர்கள் அருகில் சென்றாள் வேணி.
“டேய், குஞ்சு அவனுக்கு நாளைக்கு கல்யாணம். அவனை தூங்க விடு. தினேஷ் நீயும் அரட்டையை நிறுத்திட்டு குஞ்சுவை கூட்டிக்கிட்டு மண்டபத்துக்கு போ”, என்றாள் வேணி.
“உன்னை யாராலயும் திருத்த முடியாது மா”, என்று சொல்லி அங்கிருந்து தினேஷுடன் சென்றான் செல்வா.
“திருத்துற ஆளைப் பாரு. சரி சரி காலைல சீக்கிரம் எந்திரிக்கணும் கதிரு. கொஞ்சம் தூங்குப்பா”
“சரி மா”,என்று சொல்லி தூங்க சென்று விட்டான். அதே நேரம்
அதிக பதற்றத்துடன், விடிந்தால் என்ன ஆகும் என்று தெரிந்தாலும் அதை தடுக்க முடியாத தன்னுடைய நிலையை நொந்த படி இருந்தாள் தேன்மொழி.
“கல்யாணம் எப்படி எல்லாம் நடக்கணும்னு ஆசைப் பட்டேனோ, அப்படியே நடக்குது. வீடு முழுக்க சொந்த காரங்க, ரேடியோல பாட்டு. எனக்கு புடிச்ச சேலை. கை முழுக்க மருதாணி. நான் பாத்து பாத்து வாங்குன என்னோட நகை, எல்லாமே எனக்கு புடிச்சதா இருக்கு. ஆனா மாப்பிள்ளை மட்டும் பிடிக்காம இருக்கே. ஒரு காதல் பார்வை இல்லை, ஒரு திருட்டு கடிதம் இல்லை. சின்ன வயசுல இருந்து இவன் என்னைப் பாத்தாலே எரிஞ்சு விழுவான். இவனாவது இதெல்லாம் செய்றதாவது. அந்த ராஜேந்திரன்
கருங்கல்லுன்னா, இவன் சரியான களிமண். போயும் போயும் எனக்கு மட்டும் மாப்பிள்ளை எப்படி யெல்லாம் அமையுறாணுங்க. சே. ராஜகுமாரன் வருவான், அப்படியே என் மேல காதலை பொழியுவான்னு கனவு கண்டேனே”, என்று எண்ணி அவள் முகம் முழுவதும் யோசனையில் இருந்தது.
அப்போது “சின்ன பொண்ணு தான் வெக்க படுது, அம்மா அம்மாடி”, என்ற பாடல் ஓடிக் கொண்டிருந்தது. அதைக் கேட்டு வெந்து நொந்து போனவள் “ஆமாங்க டா, நான் இப்ப வெக்க பட்டுட்டு தான் இருக்கேன்”, என்று எண்ணி மனதுக்குள் குமைந்தாள்.
அந்த நேரத்திலும் “தேனும்மா, காலைல சீக்கிரம் எந்திரிக்கணும் கண்ணு. நைட் முழுக்க முழிச்சிருந்தா காலைல போட்டோ பிடிக்கும் போது வாடி வதங்கி போய் தெரியுவ”, என்று செல்வி சொன்னதும் தன்னுடைய சிந்தனையை அனைத்தும் ஒதுக்கி விட்டு படுத்து விட்டாள்.
சிறிது நேரத்தில் அவளை அறியாமலே தூங்கியும் விட்டாள். ராஜேந்திரனுடன் திருமணம் என்றால் இவள் இப்படி தூங்குவாளா என்ற கேள்விக்கு கடவுளுக்கு மட்டுமே விடை தெரியும்.
திருமண நாள் அழகாக விடிந்தது. தோழிகள் மற்றும் உறவினர்கள் எழுப்பி விட்டதும், அதிகாலை தூக்கத்தை கலைத்த அனைவரையும் கொலைவெறியோடு பார்த்து விட்டு வேறு வழி இல்லாமல் குளிக்க சென்றாள் தேன்மொழி.
அதே நேரம் குளித்து முடித்து கண்ணாடி முன்பு அமர்ந்திருந்த கதிர் தேன்மொழியை நினைத்துக் கொண்டிருந்தான். “அண்ணா, இன்னும் தேன்மொழி எந்திரிச்சிருக்க கூட மாட்டா. நீ என்ன டான்னா குளிச்சு முடிச்சு உக்காந்துருக்க?”, என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தான் தினேஷ்.
“கதிர் அண்ணனாவது ஒரு மணி நேரம் முன்னாடி கிளம்பி உக்காந்துருக்கான். நீ முதல் நாளே ரெடியாகிருவியோ என்னவோ அண்ணா?”, என்று தினேஷை கிண்டல் அடித்தான் செல்வா.
“டேய், குஞ்சு காலையிலே உன் அரட்டையை ஆரம்பிச்சிட்டியா? நீ தினேஷை சொல்றது இருக்கட்டும். நீ எவளையும் வீட்டுக்கு கூட்டிட்டு வராம இருந்தா சரி”, என்று சொல்லிக் கொண்டே அங்கு வந்தாள் வேணி.
[the_ad id=”6605″]“அம்மா, காலைலே என்னை கொலைக்காரனாக்காத. சரி அதை விடு. நீ என்ன நகைக்கடை விளம்பரத்துக்கா போற? இவ்வளவு அள்ளி போட்டுருக்க?”
“டேய், நான் மாப்பிள்ளையோட அம்மா டா, இதெல்லாம் இன்னைக்கு போடாம வேற என்னைக்கு போட? சரி சரி நீங்க ரெண்டு பேரும் அண்ணனை கூட்டிட்டு வாங்க. அப்புறம் பாட்டியையும் மண்டபத்துக்கு கூட்டிட்டு வந்துருங்க”
“என்னம்மா, இப்படி சொல்ற? மாப்பிள்ளை அழைப்புக்கு நீ
இருக்கணும்ல? நீ என்னடான்னா, அண்ணனை சும்மா கூட்டிட்டு வா ன்னு சொல்ற?”, என்று கேட்டான் தினேஷ்.
“அட, ஆமா இதை நான் யோசிக்கலையே. சரி சரி முகூர்த்ததுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடி நாங்க கதிரை அழைக்க எல்லாரையும் கூட்டிட்டு வரோம். நீங்க தயாரா இருங்க. இப்ப நான் அங்க இருக்குற வேலையை பாக்கணும் டா. என்ன உங்க அப்பா இன்னும் காணும்”, என்று அவர்கள் அறையைப் பார்த்தாள்.
சட்டைக்கு பட்டன் போட்ட படியே எப்போதும் இருப்பது போல அதே கம்பீரத்தோடு வந்தார் மதியழகன். அவரை ரசித்துக் கொண்டிருந்த வேணியின் காதருகே குனிந்த செல்வா, “அம்மா நீ அப்பாவை பாத்தது போதும். கிளம்பு”, என்று சொல்லி அவளை அசடு வழிய வைத்தான்.
அவர்கள் கிளம்பி போனதும், “இன்னும் நேரம் இருக்கு டா. நீங்க ஒரு அரை மணி நேரம் தூங்குங்க. நைட் முழுக்க தூங்கிருக்க மாட்டீங்க”, என்று கதிர் சொன்னதும் அதற்காகவே காத்திருந்தது போல படுத்து விட்டார்கள் தினேஷும் செல்வாவும்.
[the_ad id=”6605″]
அதே நேரம் சுற்றி ஐந்தாறு பெண்கள் நின்று தேன்மொழியை இப்படி திரும்பு அப்படி திரும்பு என்று சொல்லி கடுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரம் கழித்து “மாப்பிள்ளையை அழைக்க போயிட்டாங்க டி. அலங்காரம் முடிஞ்சிருச்சா?”,என்று ஒரு பெண்மணி கேட்க “இப்ப முடிஞ்சிரும் பெரியம்மா”, என்று ஒரு பெண் பதில் சொன்னாள்.
தேன்மொழியோ “எப்ப டா அலங்காரம் முடியும், எப்ப கண்ணாடி பாக்கலாம்?”, என்று காத்திருந்தாள்.
மணப் பெண் அலங்காரத்தில் எப்படி இருக்கிறாள் என்று அவளுக்கு தெரிய வேண்டாமா? அலங்காரம் முடிந்ததும் கண்ணாடி முன்பு அவளை அமர வைத்தார்கள்.
தன்னுடைய முகத்தைப் பார்த்து அவளே பிரம்மித்தாள். தலையில் இருந்த நெத்தி சுட்டியைப் பார்த்ததும் அவள் உதடுகள் புன்னகை புரிந்தது.
சிறு வயதில் இருந்து “எனக்கும் நெத்தி சுட்டி வேணும் மா”, என்று அடம் பிடித்து சகுந்தலாவிடம் அடி வாங்கியது இன்று நினைவில் வந்தது.
முகத்துக்கு சிறிது ஒப்பனை தான் செய்திருந்தார்கள். ஆனால் அது அவளை இன்னும் பேரழகியாக காட்டியது. அந்த பட்டு சேலை அவளுக்கே நெய்தது போல இருந்தது. காது கழுத்தில் இருந்த கற்கள் பதித்த தங்க நகைகள் அவளுக்கு பொருத்தமாக இருந்தது.
இடுப்பில் இருந்த ஒட்டியானமோ அவள் இடையை இன்னும் சுருக்கிக் காட்டி பிரம்மாண்ட படுத்தியது. மொத்தத்தில் தேன்மொழி அந்த கிராமத்தின் தேவதையாக இருந்தாள்.
“அழகா தான் மேக்கப் போட்டுருக்காங்க”, என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். “இன்னைக்கு தேனோட அழகுல கதிர் அண்ணா தூங்குன மாதிரி தான் டி”, என்று கிண்டல் செய்தாள் ஒரு பெண்.
“இல்லைன்னா மட்டும் ஆம்பளைங்க முதல் ராத்திரி அன்னைக்கு தூங்குவாங்களோ?”, என்று கேட்ட மற்றொரு பெண்ணுக்கு ஒரு வெட்க சிரிப்பை பரிசாக கொடுத்தாள் தேன்மொழி.
அங்கே கதிர் தயாராகி இருக்க செல்வா மற்றும் தினேஷ் அவனுடன் இருந்தார்கள். ஒரு பட்டு புடவை கட்டி தயாராகி இருந்த அன்னம் தன்னுடையை பேரனின் அழகைக் கண்டு “யார் கண்ணும் உன் மேல படக் கூடாது ராசா”, என்று நெட்டி முறித்தாள்.
“பாட்டி, அண்ணனைப் பாக்க நம்ம தாத்தா மாதிரி இருக்கா?”, என்று கேட்டான் தினேஷ்.
“இல்லை டா கண்ணு, உங்க தாத்தா வோட முக ஜாடை அப்படியே நம்ம குஞ்சு கிட்ட தான் இருக்கு. கதிர் வேற மாதிரி அழகுன்னா, குஞ்சு ஒரு மாதிரி. நீ இன்னொரு மாதிரி அழகு”, என்று சொல்லி தன்னுடைய பேரன்களை கொஞ்சினாள்.
அப்போது சோகமாக முகத்தை வைத்திருந்தான் செல்வா. “நீ ஏன் டா திடீர்னு டல்லா ஆகிட்ட?”, என்று கேட்டான் கதிர்.
“ஏண்ணா மொத்த குடும்பமே என் பேரை இப்படி கூப்பிடுறீங்களே? நாளைக்கு என் பொண்டாட்டி முன்னாடியும் இப்படியே கூப்பிட்டா என்னைப் பத்தி அவ என்ன நினைப்பா?”, என்று சோகமாக சொன்னான்.
“அடி செருப்பால? உன் அண்ணனுக்கு இப்ப தான் கல்யாணம் முடிய போகுது. அவனுக்கு அடுத்து தினேஷ் இருக்கான். உனக்கு அதுக்குள்ள கல்யாணம் கேக்குதோ?”, என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தாள் வேணி.
“நான் பேசுறது மட்டும் உன் காதுல நல்லா விழுந்துருமே, போமா”, என்று சொல்லி வேணியை முறைத்தான்.
[the_ad id=”6605″]
“அவன் கிடக்கான் வேணி, எல்லாரும் வந்துட்டு இருக்காங்களா?”, என்று கேட்டாள் அன்னம்.
“ஆமாங்க அத்தை, உங்க பிள்ளை எல்லாரையும் கூட்டிட்டு வாரார், சரி சரி எல்லாரும் தயாராகுங்க”, என்று சொல்லி அனைவரையும் கிளம்ப வைத்தாள்.
அனைவரும் வந்ததும் கதிருக்கு விபூதி பூசினார்கள். அனைவரின் காலிலும் விழுந்து வணங்கினான் கதிர்.