அதன் பின்னர் அலங்கரிக்கப் பட்ட அவர்கள் காரை செல்வா ஓட்ட, தினேஷ் அவன் அருகிலும் கதிர் பின்னாடி சீட்டிலும் அமர்ந்திருந்தார்கள்.
உறவினர்கள் முன்னே நடக்க கார் ஊர்ந்து சென்றது. “இப்படி மெதுவா ஒட்டுறதுக்கு காருக்கு உயிர் இருந்தா மயங்கியே விழுந்துரும்”, என்றான் செல்வா.
மாப்பிள்ளை அழைப்பு முடிந்து வெண்ணிற பட்டு வேஷ்டி மற்றும் சட்டையில் மாப்பிள்ளை தோரணையோடு மணமேடையில் அமர்ந்திருந்தான் கதிர்.
அவனைப் பார்த்து வயது பெண்களின் கண்களில் சிறிது ஏக்கம் வந்தது மட்டும் நிஜம்.
அலையலையான கேசமும் கூர்மையான கண்களும் அதன் மேல் இருந்த இமைகளும் அவனுக்கு அழகாக இருந்தது. கூரான நாசி, எந்த கெட்ட பழக்கமும் இல்லாததால் லேசாக சிவந்த இதழ்கள் நிச்சயம் அவனுடைய அழகை பறைசாற்றியது.
சற்று வெளியே தெரிந்த அந்த தங்கச் சங்கிலி, கையில் இருந்த கைச்செயின், மோதிரம் அனைத்தும் அவனுக்கு அழகாக பொருந்தி இருந்தது.
அகன்ற தோள்களுடன் செதுக்கி வைத்த சிலை போல் இருந்தான். அவனுக்கு மேலும் அழகு சேர்த்தது பளீரென்று தெரிந்த அவனுடைய அழகான புன்னகையும் நெற்றியில் இருந்த சந்தனக் கீற்றும்.
அவனுடைய சந்தோசத்துக்கு அளவு கோலே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இத்தனை நாள் தவிப்பு மொத்தமும் தீர்ந்தது போல இருந்தது அவனுக்கு. மனதில் அவன் மறைத்து மறைத்து வைத்த சந்தோஷம் இன்று அவனை அறியாமலே வெளியே வந்திருந்தது.
அவனே அவ்வளவு அழகு என்றால் அவனுக்கு மேல் அழகு பதுமையென தோழிகள் புடை சூழ நடந்து வந்தாள் அவனின் தேன் என்னும் தேவதை.
அவளைப் பார்த்து நிமிர்ந்த தலை அப்படியே நிமிர்ந்து இருந்தது. சருகை வைத்த அந்த சிவப்பு நிறப் பட்டில் எழிலரசியாக வந்தாள் தேன்மொழி.
திருமணத்துக்கு என்று அவளுக்கு போடப் பட்டிருந்த நகைகள் அவள் அழகை மேலும் கூட்டித் தான் காட்டியது.
[the_ad id=”6605″]அவளை வாய் பிளந்து கதிர் பார்ப்பதை அறியாமல் எதை எதையோ எண்ணிய படியே வந்தாள் தேன்மொழி.
சுற்றிலும் அதிக ஆட்கள் இருப்பது அவளுக்கு தயக்கத்தை கொடுத்தது. இப்போது அவள் மனதில் குழப்பமோ வருத்தமோ கோபமோ எதுவுமே இல்லை. தன்னையே அனைவரும் பார்க்கிறார்களே என்ற கூச்சம் மட்டுமே இருந்தது.
வாய் ஓயாமல் பேசும் தேன்மொழிக்கே இன்று கூட்டத்தைப் பார்த்து தயக்கமும் நடுக்கமும் வந்திருந்தது.
மணமேடை அருகில் வரும் போது அங்கு நின்ற ராஜதுரையையும் தர்மதுரையையும் ஒரு பார்வை பார்த்தவள் அவர்கள் முகத்தில் இருந்த புன்னகையைப் பார்த்து மென்மையாக சிரித்தாள்.
அந்த புன்னகையில் அவர்களின் முகம் மேலும் மலர்ந்தது. “செல்வி தேனை மேல கூட்டிட்டு போமா”, என்று தர்மதுரை சொன்னதும் மணமேடையில் ஏறினாள் தேன்மொழி.’
“அண்ணா ஆன்னு பாத்துட்டு இருக்க. வாய்க்குள்ள கொசு போய்ற போகுது. கொஞ்சம் நேரம் நார்மலா இரு”, என்று அவன் காதுக்குள் தினேஷ் முணுமுணுத்ததும் ஒரு வெட்கத்துடன் தலையை திருப்பினான் கதிர்.
அவளுக்கு தன்னைப் பிடிக்காது என்று உண்மை தெரிந்தாலும் இப்போது அவள் முகத்தில் இருக்கும் புன்னகையே அவனுக்கு போதுமானதாக இருந்தது. அந்த சந்தோஷம் அவன் முகத்திலும் அதிகமாக பிரதிபலித்தது.
அவன் அருகில் அமர வைக்கப் பட்ட தேன்மொழியைப் பார்த்தான் கதிர். “செம அழகிடி நீ”, என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
அப்போது அவளும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். இருவர் கண்களும் பின்னிப் பிணைந்தது ஒரு நொடி. அடுத்த நொடி அவள் இதழ்களில் கள்ளச்சிரிப்போன்று உதயமானது. அதைப் பார்த்து கதிரின் புன்னகை அவன் முகத்தில் இருந்து சுத்தமாக தொலைந்து போனது.
“இவ என்ன இப்படி சிரிக்கிறா. ஏதாவது பிளான் போட்டுருப்பாளோ? செஞ்சாலும் செய்வா, சரியான ராங்கி. கடவுளே கல்யாணம் நல்ல படியா நடக்கணும்”, என்று எண்ணி அவனுக்கு மன அழுத்தம் அதிகமானது.
அவன் புன்னகையை தொலைத்ததும் தான் தேன்மொழிக்கு நிம்மதியானது. “இன்னைக்கு இந்த டென்ஷன் இவனுக்கு போதும். இது மட்டுமா, நீ என்கிட்ட இன்னும் படப் போற அத்தான்”, என்று உள்ளுக்குள் எண்ணிக் கொண்டாள்.
ஐயர் மந்திரம் உச்சரித்துக் கொண்டிருக்கும் போது தேன்மொழி அருகில் “அக்கா”, என்று சொல்லிக் கொண்டு வந்து நின்றாள் கீதா.
அவளைப் பார்த்து சந்தோஷமான தேன்மொழி கண்களை சுழற்றி தன்னுடைய சித்தப்பாவை தேடினாள். துரைராசு, தர்மதுரை மற்றும் ராஜதுரையிடம் பேசிக் கொண்டிருந்தார். தேன்மொழி பார்ப்பதை அறிந்ததும் அவளைப் பார்த்து சிரித்தார்.
[the_ad id=”6605″]
அவளும் சிரித்து விட்டு தலை குனிந்து கொண்டாள். அவள் சொல்லி அவர் வந்தது அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. அண்ணன் தம்பி மூவரும் சிரித்து பேசுவது மதியழகனுக்கு உள்ளுக்குள் சிறு தடுமாற்றத்தைக் கொடுத்தது.
என்ன தான் பழசை எல்லாம் மறந்துரலாம் என்று மதி எண்ணினாலும் தன்னுடைய அப்பாவை தள்ளி விட்டு அவர் சாவுக்கு காரணமான துரைராசுவைக் கண்டதும் அவர் உள்ளுக்குள் புகைந்தது நிஜம்.
அவர் முகத்தை வைத்தே அதை உணர்ந்த வேணி, “கல்யாணத்துக்கு ஆயிரம் பேர் நமக்கு தெரியாதவங்க வந்திருக்காங்க., அவங்களைப் பத்தி நாம யோசிச்சு கவலைப் படணுமா? நம்ம மகனைப் பாருங்க”, என்று சொல்லி திசை திருப்பினாள்.
அது போல் அவரும் திருமணத்தில் கவனம் செலுத்தினார். துரைராசுவை பார்க்கவே பிடிக்காமல் தன்னுடைய தந்தை இருப்பதை அறியாமல் துரைராசுவின் மகள் கீதாவை நொடிக்கொரு தரம் பார்த்துக் கொண்டிருந்தான் தினேஷ்.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க, ஐயர் தேன்மொழி மற்றும் கதிரின் கையிலும் மாலையைக் கொடுத்து மாற்றிக்க சொன்னார். தேன்மொழி புன்னகை முகமாக அவர் சொன்னதை செய்தாள். கதிர் தான் சிறு குழப்பத்திலே அவர் சொன்னதை செய்தான்.
ஒரு வழியாக அக்னி சாட்சியாக, அனைவரின் ஆசியோடு தன் மனதுக்கு இனியவளின் சங்கு கழுத்தில் தாலியைக் கட்டினான் கதிர்.
கதிருக்கு அக்கா தங்கை இல்லை என்பதால் மூன்று முடிச்சையும் அவனே போட்டான். இனி அவளை அவனிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது என்று உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டான் கதிர்.
கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிருடன் கோர்த்திருந்த பொன் தாலியைப் பார்த்த போது என்னவென்று தெரியாத ஒரு புது வித உணர்வு தேன்மொழிக்கும் வந்திருந்தது. அது என்னவென்று யோசிக்க விடாமல் அடுத்தடுத்து மணமக்களுக்கு வேலைகள் இருந்தது.
[the_ad id=”6605″]அவளுடைய நெற்றி வகிட்டிலும், தாலியிலும் குங்குமம் வைத்தான் கதிர். இருவருடைய உடைகளும் முடிச்சு போடப் பட்டு அக்னியை வலம் வர சொன்னார் ஐயர்.
அதன் பின் முதலில் அன்னம் காலில் விழுந்து வணங்கினர். தான் வாங்கி வைத்திருந்த இரண்டு செயின்களை இருவருக்கும் போட்டு விட்டாள் அன்னம்.
சண்முகம்மாள் காலில் விழும் போது அவனுக்கு மோதிரமும் அவளுக்கு ஆரமும் போட்டு விட்டாள் சண்முகம்மாள். பின்னர் மதியழகன் வேணி காலில் விழுந்து வணங்கினர்.
தர்மதுரை செல்வி, ராஜதுரை சகுந்தலா நால்வரையும் ஒன்றாக நிற்க வைத்து இருவரும் ஆசீர்வாதம் வாங்கினார்கள். பின்னர் துரைராசு காலில் விழ போகும் போது மதியழகன் அங்கிருந்து சென்று விட்டார்.
ஆனால் துரைராசுவோ இருவரையும் காலில் விழ விடாமல் தடுத்து நிறுத்தியவர் “ரெண்டு பேரும் நல்லா இருக்கணும். இது என்னோட கிஃப்ட் தேனு. இதுல பணமா தான் இருக்கு. உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ”, என்று சொல்லி ஐம்பதாயிரத்தைக் கொடுத்தார்.
அனைவரின் காலில் விழுந்து ஆசீர் வாங்கி மணமக்கள் பெண்டு நிமிர்ந்தது. செந்தில் இருவருக்கும் விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை பரிசாக கொடுத்தான். கண்ணன் நிச்சயதார்த்தம் அன்றே மோதிரம் வாங்கிக் கொடுத்ததால் இன்று ஒன்றும் செய்ய வில்லை.
தினேஷும் செல்வாவும் சேர்ந்து இரண்டு வாரம் அவர்கள் ஹனீமூன் போவதற்கான டிக்கட்டுகள் மற்றும் அவர்கள் தங்குவதற்காக செய்திருந்த இடங்களில் பணம் கட்டிய ரசிதையும் கொடுத்தார்கள்.
மற்ற சொந்தங்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்தினார்கள். இன்னும் நிறைய பேர் இருப்பதால் “முதலில் இவங்களுக்கு சாப்பாடு கொடுக்கணும் சகுந்தலா. எல்லாரும் போட்டோ எடுக்கணும்னா ரெண்டு பேரும் கிறங்கிருவாங்க”, என்று வேணி சொன்னதும் சகுந்தலா இருவரையும் சாப்பிட அழைத்தாள்.
கதிரும் தேன்மொழியும் காலை உணவை சாப்பிட சென்றார்கள். அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் மனமேடையில் நின்றார்கள். இருவர் முகத்திலும் சந்தோஷம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்க்கவும் இல்லை. இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவும் இல்லை.
போட்டோ பிடிப்பவரின் சொல் படி இருவரும் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சிறு சிறு உரசல்கள் நடந்தது. அந்த
தீண்டலில் இருவருமே சிலிர்த்தார்கள். ஆனால் அது இருவர் முகத்திலும் பிரதிபலிக்க வில்லை.
[the_ad id=”6605″]
“பொண்ணுக்கு சாப்பாடு ஊட்டுங்க”, என்று சொல்லும் போது அவன் சந்தோஷமாக ஊட்டினான். அவனுடைய சந்தோஷத்தை அவளும் பார்க்க வில்லை. அவள் கடனே என்று அவனுக்கு ஊட்டி விட்டாள்.
பின் மதிய உணவு முடிந்ததும் மணமக்களை கதிர் வீட்டுக்கு அழைத்து சென்றனர். இருவரையும் ஆலம் சுற்றி வரவேற்றாள் வேணி.
வலது காலை எடுத்து வைத்து இருவரும் உள்ளே சென்றதும் பூஜை அறைக்கு அழைத்து சென்று தேன்மொழியை விளக்கேற்ற வைத்தாள்.
பின் இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்தாள். இப்போதே மணி மூன்று ஆகி இருந்ததால் உடனே மறுவீட்டுக்கு கிளம்பினார்கள். அங்கே ஏழு மணிக்கு கறி விருந்தை முடித்து விட்டு சீர் வரிசையுடன் கதிர் வீட்டுக்கு கிளம்பினார்கள்.
தன்னுடைய அறையில் சில பொருள்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த தேன்மொழிக்கு அழுகையாக வந்தது. இத்தனை நாள் இந்த வீட்டில் ஒரு ராஜகுமாரியாக வலம் வந்தவள் இனி இந்த வீட்டுக்கு விருந்தாளி மட்டுமே. கண்களில் நீர் வழியே அப்படியே அமர்ந்து விட்டாள். அப்போது உள்ளே வந்த சகுந்தலா கண்களிலும் கண்ணீர் வந்தது.
சகுந்தலாவைப் பார்த்ததும் “நீ எதுக்கு மா அழுற? என்னை தான் உனக்கு பிடிக்காதே. என்கிட்ட நீ பேசி எத்தனை நாள் ஆச்சு தெரியுமாம்மா?”, என்று அழுது கொண்டே கேட்டாள் தேன்மொழி.
“தேனும்மா”
“பேசாதம்மா, பேசாத. இத்தனை நாள் பேசாம தான இருந்த? இனியும் அப்படியே இரு. நான் கதிர் அத்தானை தான் கட்டிக்குவேன்னு சொன்னது தான உனக்கு என் மேல கோபம்? எனக்கு உண்மையிலே அவனை பிடிக்காது மா”
“ஏய் என்ன டி சொல்ற?”
“என்னை அவன் அப்படி சொல்ல வச்சான் மா. இப்ப சொல்றேன் கேட்டுக்கோ. உன் அண்ணன் மகனை கல்யாணம் பண்ணுறது எனக்கு பிடிக்காத விஷயம். அவனைக் கண்டாலே பிடிக்காது”
“தேனும்மா, என்னன்னென்னமோ சொல்றியே டி?”
“இத்தனை நாள் என்னை தவிக்க வச்சல்ல? நான் நீ கேட்ட உடனே சொல்லணுமோ?”
“வேண்டாம் டி, வேண்டாம். நீ எதையும் சொல்ல வேண்டாம். நான் எதையும் தெரிஞ்சிக்கவும் வேண்டாம். ஆனா ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ. கதிர் என்ன சொல்லி உன்னை சம்மதிக்க வச்சிருந்தாலும் அது தப்பு தான். ஆனா இனி நீ இந்த விஷயத்தை அடுத்தவங்க கிட்ட சொல்லி அவனுக்கு அவமானத்தை தேடி தரணும்னு நினைச்சா அசிங்கம் அவனுக்கு இல்லை அது உனக்கு தான்”
[the_ad id=”6605″]“அம்மா, அப்ப என்னை பத்தி உனக்கு கவலை இல்லையா?”
“எனக்கு என்ன கவலை? உன்னை அயோக்கியனுக்கா கட்டி வச்சிருக்கேன்? கவலைப் பட? கதிரை விட நல்லவன் உனக்கு கிடைக்க மாட்டான். அவன் தப்பு செஞ்சிருந்தா அவனுக்கு தண்டனை கொடு. அதை விட்டுட்டு உன் புருஷனை நீயே அடுத்தவங்க கிட்ட விட்டுக் கொடுத்துராத. அது அவனுக்கும் உனக்கும் இருக்குற மரியாதையை கெடுத்துரும். உங்களுக்குள்ள நடந்தது வேற யாருக்கும் தெரிய கூடாது”
“அம்மா…”, என்று அதிர்ச்சி ஆனாள் தேன்மொழி.
காதல் தீயை, நீர் அணைக்குமா?….