காதல் 13:
அங்கே கார்த்தியின் வீட்டில் குடும்பமே ஒன்று கூடி இருக்க, சாதனாவால் இன்னமும் நடந்ததை நம்பமுடியவில்லை. அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியும். ஆனால் அனைத்தும் இப்படி விரைவில் நடக்கும் என்று அவள் நினைக்கவில்லை. இதற்கு முழு முதற் காரணமும் கௌசல்யா தான் என்பதை அவள் நன்கு அறிவாள்.
“ரொம்ப தேங்க்ஸ் கௌசி..!” என்றாள் சாதனா. கர்ப்பகாலத்தில் காணப்படும் அனைத்து சோர்வும் சாதனா முகத்தில் தெரிய, அதையும் மீறிய ஒரு பூரிப்பும், மகிழ்ச்சியும் அவளை மேலும் அழகாகக் காட்டியது.
“நீ ரொம்ப அழகாய்ட்ட சாதனா..! எல்லாம் கார்த்தியோட கவனிப்பா..?” என்றாள் கௌசி.
“முரளி மாம்ஸ் கவனிக்கிறதை விடவா..?” என்று சாதனா காலை வார,
“ஏன்ம்மா உனக்கு இந்த கொலைவெறி..? இப்ப வரைக்கும் நல்லாத்தான போயிட்டு இருக்கு. நான் எங்க உங்க அக்காவை கவனிக்கிறேன். அவதான் என்னை நல்லா கவனிக்கிறா..!” என்று அந்த ‘நல்லா’ வில் அழுத்தம் கொடுத்து சொன்னான் முரளி.
“புரியுது மாமா..புரியுது..!” என்று சாதனா வாயை மூடி சிரிக்க,
“உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலை இல்லை. எனக்கு மனசுக்குள்ள வதக்கு வதக்குன்னு இருக்கு..!” என்றாள் கௌசி.
“என்னாச்சுக்கா..?” என்றாள் சாதனா.
“இல்லை, வருணை கூட்டிட்டு வர உங்க மாமாவே போயிருப்பார். கார்த்தி நான் போயிட்டு வரேன்னு போயிருக்கான். அங்க என்ன நடக்கப் போகுதோ..?” என்றாள் கௌசி.
“நீ கவலையே படாதக்கா..! கார்த்தி அதெல்லாம் நல்லா மேனேஜ் பண்ணிப்பான். இன்பாக்ட் நம்மதான் வருண்கிட்ட பயப்படுறோம். ஆனா கார்த்தி அப்படி இல்லை. வருண் திட்டினாலும் அவன் பின்னாடியே தான் திரிவான். எனக்கு நம்பிக்கை இருக்கு. எப்படியும் வருணைக் கூட்டிட்டு வந்துடுவான்..!” என்றாள் சாதனா.
“வருண் மேலையும் தப்பில்லை சாதனா..!” என்றான் முரளி விட்டுக் கொடுக்காமல். முரளி அப்படி சொன்னவுடன் சாதனாவிற்கு சட்டென்று கண்கள் கலங்கியது.
‘நான் உன்னைக் குத்திக் காட்டணும்ன்னு சொல்லலை சாதனா. ஆனா, வருண் இடத்துல இருந்து நீ யோசிச்சு பாரு. அவ்வளவு நாள் உயிர் நண்பனா இருந்தவன், திடீர்ன்னு சொல்லாம கொள்ளாம தன்னோட அக்காவை கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னா, அவனுக்கு என்ன நினைக்கத் தோணும். வருணுங்க போய் இதோட நிறுத்திட்டான். இதுவே அவன் இடத்துல நானா இருந்திருந்தா அவனுக்கும் மேல நான் ரியாக்ட் பண்ணியிருப்பேன்னு தான் எனக்குத் தோணுது..!” என்றான் முரளி.
“எனக்குப் புரியுது மாமா. ஆனா, அந்த நேரத்துல எனக்கு வேற வழி தெரியலை. எல்லாரும் சம்மதிக்க மாட்டிங்கன்னு நினைச்சேன்..!” என்றாள் சாதனா.
“நினைச்சியா…? அப்போ கார்த்தி..?” என்றாள் கௌசி.
“கார்த்திக்கு கடைசி வரைக்கும் விஷயம் தெரியாது. அவனைக் கட்டாயப்படுத்தி, எல்லாமே செய்ய வச்சது நான் தான். இல்லைன்னா தற்கொலை பண்ணிப்பேன்னு மிரட்டி தான் கல்யாணம் பண்ணிகிட்டேன். ஆனா அப்பவும் கார்த்தி யோசிச்சான். எல்லாமே என்னால தான்..!” என்று சாதனா அழுக,
அதை எதேச்சையாய் அங்கு வந்த சத்யமூர்த்தி கேட்டுவிட்டார். கேட்டவருக்கு மகிழ்ச்சியாகவா இருக்கும்..?
“நீங்க ரெண்டு பேரும் அப்போ லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலையா..?” என்றான் முரளி.
“இல்லை மாமா…! நான் தான் கார்த்தியை லவ் பண்ணேன். அவன் மனசுல அப்படி ஒரு எண்ணமே இல்லை..!” என்றாள் சாதனா.
“அன்னைக்கு வருண் அவ்வளவு பேசியும் கார்த்தி வாயைத் திறக்கவே இல்லையே..? அவன் நினைச்சிருந்தா அன்னைக்கே சொல்லியிருக்கலாம். எல்லாத்துக்கும் சாதனா தான் காரணமுன்னு. ஆனா, அமைதியா இருந்துட்டான். நிஜமாவே கார்த்தி கிரேட் தான்..!” என்றாள் கௌசி.
“ம்ம்..! அதான் அவனை மிஸ் பண்ணக் கூடாதுன்னு மிரட்டி கல்யாணம் பண்ணிகிட்டேன்..!” என்றாள் சாதனா.
“உனக்கு எல்லாமே விளையாட்டா போய்டுச்சு சாதனா..!” என்று கௌசி சொல்லிக் கொண்டிருக்க, சத்யமூர்த்திக்கு முகமே செத்துவிட்டது.
அவரின் குற்ற உணர்ச்சி அவருக்கு. வருணாவது வாய் வார்த்தையோடு நிறுத்தி விட, மூர்த்தியோ கோபத்தை கட்டுப் படுத்த முடியாமல் கார்த்தியை அறைந்திந்தே விட்டிருந்தார் அந்த சமயத்தில்.
“நீ ஒன்னும் கவலைப்படாத…! வருண் சீக்கிரம் உன்கிட்ட பேசிடுவான். ஏன்னா காதலிக்கிற அவனுக்கும் காதலோட அருமை தெரியும் தானே..?” என்ற முரளி நமட்டு சிரிப்பு சிரிக்க,
“என்னது வருண் லவ் பன்றானா..?” என்று ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்தாள் சாதனா.
“பின்ன.. நாங்க என்ன பொய்யா சொல்றோம். ஆனா, அது அவனுக்கே இன்னமும் தெரியலை. காதலியை தேடி அலைஞ்சுகிட்டு இருக்கான்..!” என்றான் முரளி.
“காதலிக்கிறான்னு சொல்றிங்க..? காதலியைத் தேடி அலையிறான்னு சொல்றிங்க..? எனக்கு ஒன்னும் புரியலையே..?” என்றாள் சாதனா.
“அதுக்கு, உனக்கு முதல்ல இருந்து சொன்னாத்தான் எல்லாமே புரியும்..” என்ற கௌசி, ஆரம்பத்தில் இருந்து அனைத்தையும் சொல்ல, குழம்பிப் போனாள் சாதனா.
“என்ன புரிஞ்சதா..?” என்றாள் கௌசி.
“எனக்கு என்னமோ நம்பிக்கை இல்லை. அவன் அவளைத் தேடி கண்டுபிடிச்சுட்டு, நான் போலீசு.. கடமைக்காகத் தான் உன்னைக் கண்டு பிடிச்சேன்னு சொல்லப் போறான் பாருங்க..!” என்ற சாதனா சிரிக்க,
“அதுவும் உண்மைதான்..! அவன் செஞ்சாலும் செய்வான்.. ஆனா எனக்கு உள்மனசு சொல்லுது, அவன் அந்த பொண்ணை லவ் பண்றான்னு..!” என்றான் முரளி.
அங்கே கார்த்தியின் பின்னால் அமர்ந்து வந்து கொண்டிருந்த வருணுக்கு சிந்தனை எல்லாம் அந்த காரைப் பற்றி தான். ஒரு விஷயம் நமக்கு பார்வை நுனியில் இருக்கும். ஆனால் சட்டென்று பிம்பமாய் தெரியாது. வருணுக்கும் இப்போது அதே நிலைமை தான். வருண் யோசனையில் இருக்க, கார்த்தி பல விஷயங்களை சிந்தித்தவாறு வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.
“என்னாச்சு சார்..? ஏதோ யோசனையில் வர மாதிரி இருக்கு..?” என்ற கார்த்தியின் குரலில் நிஜத்திற்கு மீண்டான் வருண்.
“அது தெரிஞ்சு நீங்க என்ன செய்ய போறீங்க..?” என்றான் பட்டென்று.
“வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சு” என்று மனதிற்குள் நினைத்த கார்த்தி,
“இல்லை, என்னன்னு சொன்னா ஏதோ எங்க புத்திக்கு ஏதாவது எட்டுதான்னு பார்ப்போம்.. அதான்..!” என்றான் கார்த்தி, வேண்டுமென்றே பவ்யமாய்.
“ஒரு காரை எங்கயோ பார்த்த மாதிரி இருந்தது… ஆனா சட்டுன்னு மைண்டுக்கு வர மாட்டேங்குது..!” என்றான் வருண்.
“சிம்பிள் சார்..! ஒரு காரை போலீஸ் கண்ணோட்டத்துல பார்த்தா, ரெண்டு நிமிஷம் சேர்ந்தாப்படி பார்த்திருப்போம். இல்லைன்னா பத்தோடு பதினொன்னு ..!” என்றான் கார்த்தி.
“எஸ் கரெக்ட்..!” என்ற வருண், மீண்டும் நிதானமாய் யோசிக்க, முதலில் பிடிபடவில்லை. மீண்டும் மீண்டும் அவன் முயற்சி செய்ய, வரும்பொழுது, இடையில் செக்போஸ்ட்டில் பார்த்த கார் நியாபகத்திற்கு வந்தது.
வேகமாய் அந்த வீடியோவை மீண்டும் பார்த்து, இரண்டும் ஒரே கார்தானா என்பதை உறுதிப்படுத்த பார்த்தான். அவனுக்கு உறுதியானது.
“தேங்க்ஸ் கார்த்தி..! காட் இட்..!” என்ற வருணின் மூளை வேகமாக செயல்பட்டது.
‘அப்போ அந்த கார்லதான் சக்தி இருந்தாளா..? அவளா போனாளா..? இல்லை கடத்திட்டு போனாங்களா..? அவளா போயிருந்தா கண்டிப்பா இன்னைக்கு என்னைப் பார்த்திருப்பா.. என்னைப் பார்த்திருந்தா கண்டிப்பா பேசியிருப்பா..! ஆனா அப்படி எதுவும் நடக்கலை. சோ சம்திங் ராங்..!’ என்று தனக்குத் தானே யோசித்து அனைத்தையும் ஒரு நிமிடத்தில் கோர்வையாக்கிவிட்டான்.
“கார்த்தி, இங்க வரும் போது இருக்குற செக் போஸ்டில் சிசிடிவி இருக்கா..?” என்றான்.
“இல்லை சார்..!” என்றான் கார்த்தி.
“ஷிட்..!” என்றவனின் கோபம் அதிகமாவதற்கு முன்பே,
“ஆனா, எந்த கார் வந்தாலும் அதோட நம்பர், எந்த ஊர் ரிஜிஸ்ட்ரேஷன், என்ன மாடல் எல்லாமே நோட் பண்றது வழக்கம் சார்..!” என்றான் கார்த்தி.
“எஸ் ஐ நோ..! பட் டென்ஷன்ல மறந்துட்டேன்..!” என்றவன் மீண்டும் அந்த செக்போஸ்ட்டை தொடர்பு கொண்டு, இரண்டு காரும் ஒன்று தான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டான்.
“இங்க இருக்குற பெரிய பிஸ்னஸ் மேன் தேவன் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா கார்த்தி..?” என்றான் வருண்.
“பெரிய பிஸ்னஸ் இருக்கு. அதுமட்டுமில்லாம ரெண்டு மூணு ஸ்கூல்ஸ் கூட இருக்கு..! ஆள் பார்க்க நல்லவன்னாலும், பர்சனலா எதுவும் தெரியாது. பட், கேள்விப் பட்ட வரைக்கும் நல்லவிதமா இல்லை. ஸ்டேஷன் ரெக்கார்ட்ல எந்த கேஸும் அந்த ஆள் மேல இல்லை..!” என்றான் கார்த்தி.
“ஹோ..!” என்பதோடு வருண் நிறுத்திக் கொள்ள,
“என்னாச்சு சார்..? ஏதாவது பிரச்சனையா..?” என்றான் கார்த்தி.
“எஸ்..! சக்தியை கடத்தியிருப்பாங்களோ அப்படின்னு எனக்கு சந்தேகமா இருக்கு..!” என்றான் வருண்.
“எதை வச்சு சார் சொல்றிங்க..? அவங்களுக்கும் தேவனுக்கும் என்ன சம்பந்தம்..?” என்றான் கார்த்தி.
“நிறைய சம்பந்தம் இருக்கு..! பர்ஸ்ட் ஒன் சக்தி இந்த தேவனோட ஸ்கூல்ல தான் வேலை பார்த்திருக்கா, ரெண்டாவது சென்னைல ஷிவானின்னு ஒரு பொண்ணு, சக்தியோட பிரண்ட்.. அவளும் சூசைட் பண்ணி இறந்திருக்கா. அதுக்கு முதல் நாள் தான் பயத்தோட திருச்சி பக்கத்துல சக்தி நின்னுட்டு இருந்தா, நாலஞ்சு பேர் அவளை பாலோ பண்ணாங்க. என்னோட வீட்டில் இருக்கும் போது கூட, கொலை முயற்சி நடந்தது. அவளுக்கே தெரியாம அவளோட செயின்ல ஜிபிஎஸ் ட்ராக்கர் இருந்தது.
தென் இந்த சிவப்பிரகாஷ் மர்டர் கேஸ்ல சம்பந்தப் பட்டிருக்கற லெனின் அப்படின்றவன் தான் தேவனுக்கு எல்லாமே. சோ நல்லா யோசிச்சு பார்த்தா, எல்லா புள்ளியையும் ஒரே கோடு தான் இணைக்குது. அந்த கோடு தேவன் தான்.
என்னோட எல்லா சந்தேகத்துக்கும் விடை இந்த கொடைக்கானல்ல தான் இருக்கு. இந்த கேஸும் இங்க தான் முடியும்ன்னு நான் நினைக்கிறேன்..!” என்றான் வருண்.
அவன் சொல்வதை கேட்கும் போதே கார்த்திக்கு ஆயாசமாய் இருந்தது. ஆனால் தேவனைப் பகைத்தால் என்ன நடக்கும் என்று கார்த்திக்கும் தெரியும். இதை வருணிடம் அவனால் சொல்ல முடியுமா..? சொன்னாலும் அவன் தான் விட்டுவிடுவானா..? அதனால் வருணின் போக்கிலேயே அவனை விட்டு விடுவது என்று முடிவு செய்தான் கார்த்தி.
“சார் ஒரு சின்ன விஷயம்..! ஒரு இன்ஸ்பெக்டரா என்னோட ஆப்ளிகேஷன் இது..!” என்றான் கார்த்தி.
“என்ன விஷயம்..?”
“இந்த கேஸ் முடியற வரைக்கும், நீங்க எங்க வீட்ல தான் தங்கணும். இந்த கேஸ் முடியற வரைக்கும் நான் உங்க கூட தான் இருப்பேன். சொந்த விருப்பு வெறுப்பை விட்டுட்டு, இதை நீங்க ஏத்துகிட்டு தான் ஆகணும்..!” என்றான் கார்த்தி.
எங்கு சுத்தியும் அவன் வந்து நிற்கும் விஷயம் இதுவாகத்தான் இருக்கிறது என்பதை வருணும் உணர்ந்திருந்தான். சமயம் பார்த்து காரியம் சாதித்துக் கொள்வதில் வல்லவன் கார்த்தி. அவனின் இந்த உரிமை கூட மனதிற்கு கொஞ்சம் இதமாகத்தான் இருந்தது வருணுக்கு. ஆனால் வெளியே எதையும் காட்டாமல் கெத்தை அப்படியே மெயின்ட்டெயின் பண்ணினான்.
“பார்ப்போம்..!” என்றான் வேண்டுமென்றே.
“நீ எப்படியும் தங்கித்தான் ஆகணும்டா மவனே..!” என்று மனதிற்குள் நினைத்த கார்த்தி, நமட்டு சிரிப்புடன் அவனை அழைத்துக் கொண்டு சென்றான்.
அப்பொழுது நிலவிய வானிலை மட்டுமே வருணுக்கு ஆறுதல். குளிர் காற்று உடலை ஊடுருவ, கொஞ்சம் மனம் இதமாவதைப் போல் உணர்ந்தான். உடல் சில்லிடும் குளிர் அவனுக்கு உறைக்கவே இல்லை.தன்னுடன் இருந்த போது, மழையை ரசித்த சக்தி, இந்த குளிரையும் ரசித்திருப்பாள் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான் வருண்.
‘வருண் நீ சரியில்லை..! எங்க சுத்தியும் சக்திகிட்ட தான் வந்து நிக்குற..?’ என்று மனசாட்சி எச்சரிக்கை விடுக்க, அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் வருண் இல்லை.
அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, கார்த்தியின் வீடும் வந்து விட, அப்போது தான் உண்மை உரைத்தது வருணுக்கு. பழைய கோபத்தை மீண்டும் குத்தகைக்கு எடுக்க, இயல்பாகவே முகம் இறுகிப் போனது.
“வண்டி சத்தம் கேட்குது…! கார்த்தி வந்துட்டான் போல..” என்று சாதனா வேகமாக வெளியே வர,
“ஹேய்..! மெதுவா போடி..!” என்று கத்திக் கொண்டே பின்னால் வந்தாள் கௌசல்யா.
“உள்ள வாங்க சார்..!” என்றான் கார்த்தி மரியாதையாக.
வருணுக்கு எரிச்சலாக இருந்தாலும், வீட்டையும் அதை சுற்றி உள்ள பகுதியையும் ஆராய்ச்சி செய்ய மறக்கவில்லை.
வீடு பெரியதுமில்லை, சிறியதுமில்லை. அளவான கட்டமைப்பில் இயற்கை அழகுடன் அழகாக இருந்தது.
“இது சொந்த வீடு தான் சார்..!” என்றான் கார்த்தி.
“இவனொருத்தன்..! நான் என்ன நினைச்சாலும் வெளிய சொல்லிக்கிட்டு..!” என்று சலித்துக் கொண்டாலும், அவனின் புரிதலை எண்ணி எப்போதும் போல் வியந்து கொண்டான் வருண்.
“வா கிருஷ்ணா..!” என்றாள் சாதனா.
அவளைப் பார்த்து முறைத்தவனால் அவளின் மேடிட்ட வயிற்றைப் பார்த்து முறைக்க முடியவில்லை. ஆனாலும் எதுவும் பேசாமல் நின்றிருந்தான்.
“டேய் உள்ள வாடா…! வெத்தலை பாக்கு வேற வைக்கணுமா..?” என்று கௌசல்யா சொல்ல, பல்லைக் கடித்தான் வருண்.
“பிளீஸ் கிருஷ்ணா..! வா கிருஷ்ணா..!” என்றாள் சாதனா.
கோபம் இருந்தாலும் அனைவரையும் கெஞ்ச வைப்பதில் வருணுக்கு உடன்பாடு இல்லை. கொஞ்சம், வேண்டாத மனநிலையுடன் தான் உள்ளே சென்றான்.
“என்ன கௌசி..? அவன் என்கிட்டே பேசாமையே போறான்..?” என்றாள் சாதனா.
“நீ செஞ்சதுக்கு அவன் இந்த அளவுக்கு இறங்கி வந்ததே பெரிய விஷயம். உடனே எல்லாமே மாறாது. ஆனா மாறிடுவான்.!” என்றாள் கௌசி.
கார்த்தியோ கண்கள் கலங்க நின்றிருந்தான். அவனின் முகத்தைப் பார்த்த சாதனாவிற்கு தன்னுடைய தவறின் அளவு புரிந்தது. அவர்களுடைய நட்பு தன்னால் தான் முறிந்தது என்று எண்ணி எண்ணி குமைந்தாள்.
அவளின் முகம் மாறுவதைக் கண்ட கார்த்தி, தன்னுடைய முகத்தை இயல்பாய் வைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.ஏனோ கார்த்திக்கும், சாதனாவிற்கும் இடையே ஒரு இடைவெளி இருப்பதைப் போல் பட்டது கௌசிக்கு. ஆனால் அது எதுவென்று தெரியவில்லை.
அங்கே தேவனின் இடத்தில்…
“என்னாச்சு லெனின்..? அவளை நம்ம இடத்துக்கு கொண்டு வந்துட்டிங்களா..?” என்றான் தேவன்.
“கொண்டு வந்துட்டாங்க அண்ணே..! நம்ம இடத்துல வச்சா போலீஸ் மோப்பம் பிடிச்சுடும். அதான் நம்ம பய ஒருத்தன் வீட்ல வச்சிருக்கோம் அண்ணே..!” என்றான் லெனின்.
“அவகிட்ட இருக்குற ஆதாரம் கிடைக்கலைன்னா கூட பரவாயில்லை. ஆனா, அவள் இருக்குற வரைக்கும் நமக்கு பிரச்சனை தான்..!” என்றான் தேவன்.
“அந்த ஆதாரத்தையும் வாங்கிட்டே, அவளை முடிக்கிறேன்..! ஆனா, அதுக்குள்ள ஒரு சிக்கல் வந்துடுச்சுண்ணே..!” என்றான் லெனின்.
“என்ன சிக்கல்..?”
“அந்த சிவப்பிரகாஷ கொலை பண்ண விஷயத்துல ருத்ரா மாட்டிகிட்டாண்ணே..! அந்த வருண் எப்படியோ அவகிட்ட வாக்கு மூலம் வாங்கிட்டான். இப்போ போலீஸ் என்னையும் அரஸ்ட் பண்ணத் தேடுவாங்க..!” என்றான் லெனின்.
“கொலை அவ பண்ணியிருக்கும் போது, உன்னை எப்படி லெனின் அரஸ்ட் பண்ணுவாங்க..?” என்றான் லெனின்.
“பிளான் என்னோடது தான அண்ணே ..! குற்றத்திற்கு உடந்தையா இருந்தேன்னு சொல்லி அரஸ்ட் பண்ண வாய்ப்பிருக்கு. ஆனா, அதுக்கு முன்னாடியே ருத்ராவை ஜாமீன்ல எடுக்கணும் அண்ணே..!” என்றான் லெனின்.
“இப்போ நமக்கு இருக்குற பிரச்சனையில இது வேறையா..? உனக்கு அந்த ருத்ராவே தான் வேணுமா..?” என்றான் தேவன்.
“எனக்கு ருத்ரா வேணும்ண்ணே..! அதே சமயம் அந்த சக்தியும் வேணுமிண்ணே..! ஒரு தடவையாவது அவளை அனுபவிக்கனும்..!” என்றான் கண்களில் காமம் மிளிர.
“இங்க பாரு லெனின்..! எனக்கு முதல்ல அவ கதையை முடிக்கணும் அவ்வளவு தான். அதை எவ்வளவு சீக்கிரம் பண்ண முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடி..! அதுவரைக்கும் போலீஸ் உன்னை நெருங்காம நான் பார்த்துக்கறேன். அதுக்குப் பிறகு அரஸ்ட் பண்ணாலும் நான் எதுக்கு இருக்கேன். வாய்தா மேல வாய்தா போட்டு, கேசை இழுத்துட மாட்டேன். அதுக்குள்ள நடந்த விஷயம் எல்லாருக்கும் மறந்தே போயிருக்கும்..!” என்றான் தேவன்.
“இந்த தடவை மிஸ்ஸாகாம நான் பார்த்துக்கறேன் அண்ணே..!” என்றான் லெனின். அவனின் கண்களில் குரோதமும், பழி உணர்ச்சியும் தாண்டவமாடிக் கொண்டிருந்தது.
அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சக்திக்கு மெல்ல மெல்ல மயக்கம் தெளிய ஆரம்பித்தது. அவளால் கண்களைத் திறக்கவே முடியவில்லை. அறையில் ஹீட்டர் வெப்பத்தையும் தாண்டி அவளுக்கு குளிரில் உடல் நடுங்கியது.
மெல்ல கண்களைத் திறந்தவளுக்கு கொஞ்சம் நினைவு வர, அப்போதுதான் நடந்த அனைத்தும் வரிசையாக அவளுக்கு நியாபகம் வந்தது.
என்ன நியாபகம் வந்தாலும், எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தாள் சக்தி. அங்கிருந்து தப்பிப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்று அவளுக்குத் தெரியும். ஒரு முறை தப்பித்துச் செல்லவே அவள் படாத பாடு பட வேண்டியிருந்தது.
சோர்வுடன் கண்களை மூடினால் சக்தி. மூடிய கண்களுக்குள் வந்து நின்றான் வருண்.
“இந்நேரம் என்ன பண்ணிட்டு இருப்பார்…? நான் கொடைக்கானல் வந்திருப்பேன்னு நினச்சு, அடுத்த வேலையை பார்க்கப் போயிருப்பார். அவருக்கும் எனக்கும் இடையில என்ன இருக்கு..? இந்த பத்து நாளா தான் அவரைத் தெரியும். அதுக்கு முன்னாடி அவர் யாரோ..? நான் யாரோ…?” என்று எண்ணி வேதனைப் பட்டுக் கொண்டிருந்தாள்.
“மனசைத் தளர விடாத சக்தி..! எப்படியும் வருண் வந்து உன்னைக் காப்பாத்துவான்..! என்று உள்மனம் அவளுக்கு ஆறுதல் சொல்ல, விரக்தி சிரிப்பு சிரித்தாள் சக்தி.
“என்னைக் கடத்தியிருக்காங்கன்னு தெரிஞ்சாலாவது ஏதாவது முயற்சி பண்ணுவார். நான் தான் ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு இல்ல வந்திருக்கேன். அப்பறம் எப்படி என்னைக் காப்பாத்த வருவார். என் வாழ்க்கை இப்படியே முடிஞ்சுடும். என் தலையில் எழுதியதை யாரால மாத்த முடியும். (Alprazolam)
சிவாண்ணா..! நீ போன இடத்துக்கே சீக்கிரம் நானும் வந்துடுவேன்..!” என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே, அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
ஏனோ வருணின் அருகாமையை வெகுவாக நாடியது அவள் மனம். அருகில் இருந்த போது தெரியாத அவன் அருமை இப்பொழுது நன்றாகத் தெரிந்தது அவளுக்கு.
“என்னன்னு தெரியலை வருண் சார்…! சாகப் போற நேரம் நெருங்க நெருங்கத்தான் உங்க நெனப்பு அதிகமா வருது. உங்களை உண்மையாவே காதலிக்கிறேன்ன்னு நினைக்கிறேன். ஆனா, இந்த ஜென்மத்துல அந்த குடுப்பினை எனக்கு இல்லைன்னு தோணுது.. ஐ மிஸ் யு வருண் சார்..!” என்று அரற்றிக் கொண்டிருந்தாள்.
இவள் அவனை நினைக்க நினைக்க, அங்கே கார்த்தியின் வீட்டில் இருந்த வருண் கிருஷ்ணாவுக்கு மனதில் கணம் கூடிக் கொண்டே சென்றது. சொல்ல முடியாத ஒரு தவிப்பு திடீரென்று தோன்றி அவனைப் பாடாய் படுத்தியது.
“என்னாச்சு வருண்..? ஏன் ஒரு மாதிரி இருக்க..?” என்றான் முரளி.
“ஒண்ணுமில்லை மாமா..!” என்றவனுக்கு மனதில் ஓராயிரம் இருந்தது.
‘இங்கே வந்தது தான் பிடிக்கவில்லையோ…?’ என்று நினைத்த கார்த்தி அவன் முகத்தை ஊன்றிப் பார்க்க. அது வேறு செய்தி சொன்னது.
“இவனுக்கு என்ன பிரச்சனை..? ஏன் முகம் இப்படி இருக்கு. சாதாரணமா இப்படி இருக்க மாட்டானே..?” என்று கார்த்தி நினைத்துக் கொண்டிருக்க, பட்டென்று எழுந்தான் வருண்.
“என்னாச்சு வருண்..?” என்றான் கார்த்தி பட்டென்று.
“நத்திங்..! நான் கொஞ்ச தூரம் வாக்கிங் மாதிரி போயிட்டு வரேன். என்னோட மைன்ட் ரெஸ்ட்லஸ்சா இருக்கு..!” என்றான்.
“இப்போதான வந்த கிருஷ்ணா..? இன்னும் சாப்பிடக் கூட இல்லை..!” என்று நித்யா சொல்ல,
“பசியில்லைம்மா..! ஜஸ்ட் ஆப் அன்ட் ஆர்…நான் போயிட்டு வரேன்..!” என்றான்.
“நானும் கூட வரவா வருண்..?” என்றான் முரளி.
“ஓகே மாமா..! வரணும்ன்னா வாங்க..!” என்றான்.
“முரளி அண்ணா..! நானும் வரேன்..!” என்றான் கார்த்தி மறைமுகமாக. அதற்கு வருணும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதையே சம்மதமாக எடுத்துக் கொண்டு கார்த்தியும், முரளியும் உடன் சென்றனர்.
“இப்படியே மேல போனா.. நல்ல வியூ இருக்கு..! வீடெல்லாம் கொஞ்சம் தூர தூரமா இருக்கும்..!” என்றான் கார்த்தி.
சாலையின் இரு புறங்களிலும் இருந்த பசுமையை ரசித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்த வருணுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, அவன் சக்தி இருக்கும் இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறான் என்று.
அங்கே இவனையே நினைத்துக் கொண்டிருந்த சக்திக்கும் தெரியவில்லை. ஒருவன் தனக்கு மிக அருகே வந்து கொண்டிருக்கிறான் என்று.
“என்னாச்சு மாப்பிள்ளை..? ஏன் ஏதோ யோசனையிலேயே வர..?” என்றான் முரளி.
“மாமா..! எனக்கென்னவோ சக்தி எனக்குப் பக்கத்துல இருக்குற மாதிரியே இருக்கு..!” என்றான் அமைதியாக.
“நீ தேவையில்லாம அந்த பொண்ணு நினைப்பிலேயே இருக்கன்னு தோணுது வருண். ஒருவேளை அதனால கூட இருக்கலாம்..!” என்றான் முரளி.
“இல்லை மாமா..! அந்த செக் போஸ்ட்ல அந்த கார் பக்கத்துல நடக்கும் போதும் எனக்கு அப்படித்தான் இருந்தது. ஆனா, நான் தான் அதை அசால்ட்டா விட்டுட்டேன். இப்போவும் அப்படித்தான் தோணுது..! ஆனா, இப்ப அசால்ட்டா இருக்காதன்னு என் மனசு சொல்லுது..!” என்றான் வருண்.
“நீ சக்தியை லவ் பண்றியா வருண்..?” என்றான் முரளி, நின்று நிதானமாக.
“இப்பவும் அதே பதில் தான் மாமா..தெரியலை..!” என்றான் வருண்.
கார்த்தி இவர்களை புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றான்.