அத்தியாயம் 9_1 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:1,575
அத்தியாயம் 9
நீ அருகில் இருந்தும் தொட
விட முடியாத தவிப்பில் நித்தமும்
கரைகிறது என் காலங்கள்!!!
விக்ரம் திரும்பிப் பார்க்கும் போது அங்கே ஆதி நின்றிருந்தான். அவனைக் கண்டதும் “நீ தானாண்ணா? நான் பயந்துட்டேன். என்ன இந்நேரம் இங்க வந்துருக்க? இன்னும் தூங்கலையா அண்ணா?”, என்று கேட்டான் விக்ரம்.
“நான் தூங்குறது இருக்கட்டும். நீ இங்க இந்த நேரம் என்ன பண்ணுற?”, என்று கண்களில் கூர்மையுடன் கேட்டான் ஆதி.
“ரூம்குள்ள புழுக்கமா இருந்துச்சு. அதனால தான் காத்து வாங்க வந்தேன்”, என்று அந்த நிலவை வெறித்த படி சொன்னான் விக்ரம்.
“ரூமுக்குள்ள ஏ.சி ஓடியும் உனக்கு புழுக்கமா இருக்கா? அப்ப புழுக்கம் ரூம்ல இல்லை. உன்னோட மனசு தான் புழுக்கமா இருக்குன்னு அர்த்தம். என்ன ஆச்சு டா?”
“என்ன கேக்குற? எனக்கு புரியலையே?”
“நான் நேரடியாவே கேக்குறேன் விக்ரம். உனக்கும் ரேகாவுக்கும் இடைல ஏதாவது பிரச்சனையா?”
“எனக்கும் ரேகாவுக்குமா இல்லையே? ஏன் கேக்குற?”
“கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரத்துல இப்படி அவளை விட்டுட்டு தனியா வந்து இங்க நின்னுட்டு இருக்குறதுலே தெரியலையா? அது மட்டுமில்லாம உங்க ரெண்டு பேர் கிட்டயும் எதுவோ வித்தியாசம் தெரியுறதா காயு சொன்னா”
“அண்ணிக்கு வேற வேலை இல்லைண்ணா. என்னை கிண்டல் அடிக்க அப்படிச் சொல்லிருப்பாங்க. நானும் ரேகாவும் நல்லா தான் இருக்கோம்”
“பொண்ணுங்களைப் பத்தி உனக்கு தெரியாது டா. அவங்க கண்ணு எல்லாத்தையும் தெளிவா கண்டு பிடிக்கும். உனக்கும் ரேகாவுக்கும் இடையே காதல் இல்லைன்னு ஒண்ணும் காயத்ரி சொல்லலை. ஆனா நீங்க ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணினவங்க மாதிரி இல்லைன்னு சொன்னா. அவ சொன்னதுக்கு அப்புறம் நானும் உங்களை வாட்ச் பண்ணுனேன். நீ வேலை வேலைன்னு இழுத்து போட்டுட்டு செய்ற? எனக்கும் அப்பாவுக்கும் கூட நீ எந்த வேலையும் வைக்கிறது இல்லை. ரேகா என்னடான்னா அம்மா கூடவே திரியுறா. உன்னை எங்கயாவது ஹனிமூன் போகச் சொன்னதுக்கும் இப்ப வேண்டாம்னு சொல்லிட்ட. இப்பக் கூட சாப்பிட்டுட்டு ரூமுக்கு போன, ஆனா கொஞ்ச நேரத்துல இங்க வந்து நிக்குற? என்ன விஷயம்? ஒரு அண்ணனா உன் கிட்ட கேக்கலை டா. ஒரு நண்பனா கேக்குறேன். சொல்ல முடிஞ்சா சொல்லு”
சொல்லி அழ ஆள் கிடைத்தால் சோகம் அனைத்தும் கரைந்து விடும் என்பார்கள். அதனால் அவளுக்கு முத்தம் கொடுத்ததை மட்டும் விட்டுவிட்டு மனதில் இருக்கும் மற்ற அனைத்தையும் அவனிடம் சொல்லி விட்டான் விக்ரம். அனைத்தையும் கேட்ட ஆதிக்கு திகைப்பாக இருந்தது.
அங்கே இருவருக்குள்ளும் அமைதி நிலவியது. “எங்க எல்லார்க் கிட்டயும் நிறைய பொய் சொல்லிருக்க அப்படி தானே விக்ரம்?”, என்று ஆதி கேட்டதும் அவன் தலை தன்னாலே தலை குனிந்தது.
“சரி அதை விடு. இப்ப இதுக்கு முடிவு தான் என்ன? எத்தனை நாள் அவளை குத்திக் காட்டி பேசிட்டே இருக்க போற?”
“தெரியலைண்ணா, என்னால எதையும் மறக்க முடியலை. நான் மறக்க நினைச்சாலும் என்னால முடியலை. அவளை ரொம்ப விரும்புனேன். ரூமுக்குள்ள என்னால அவ கூட இயல்பா இருக்க முடியலைண்ணா. என்னோட மனசு…. ப்ச் அதை எப்படிச் சொல்ல?”, என்று தவிப்புடன் சொன்னான் விக்ரம்.
தன்னுடைய மன உணர்வுகளை ஒரு அண்ணனே ஆனாலும் அவனிடம் எப்படி பகிர என்று தெரியாமல் தடுமாறினான் விக்ரம். அவனுக்கு நட்பு வட்டமும் குறைவு. இல்லையென்றால் முதலில் நண்பனிடம் தான் மனம் திறந்திருப்பான். ஆனால் இன்று ஆதி கேட்கவும் அவனிடம் தன்னுடைய மனக் கவலைகளை இறக்கி வைத்து விட்டான்.
“உன் மனசு எனக்கு புரியுது டா”, என்று சொன்ன ஆதிக்கு விக்ரம் நிலை புரிந்தது. அவனும் திருமணம் ஆனவன் தானே? மனைவியை பிரிந்து இருக்கும் கொடுமை என்று அவன் அறியாததா? தம்பியின் மனக் குழப்பமும் அவனுடைய நிலையும் அவனுக்கு நன்கு புரிந்தது.
சிறு வயதில் இருந்து இப்போது வரை விக்ரம் இப்படி குழம்பியதே இல்லை என்ற நினைவு தான் ஆதிக்கு வந்தது. ஆதியை விட விக்ரம் எப்போதுமே தெளிவாக இருப்பான். இப்போது அளவுக்கு அதிகமான காதல் அவனை தெளிவாக யோசிக்க விட வில்லை என்று புரிந்தது. இப்போது அவனுக்கு ஒரு அண்ணனாக, நண்பனாக ஆறுதல் சொல்ல வேண்டியது அவன் கடமை என்பதால் அவனிடம் பொறுமையாக பேச ஆரம்பித்தான்.
“இங்க பாரு விக்ரம், நீ இவ்வளவு கவலைப் படுற அளவுக்கு பிரச்சனை ஒண்ணும் பெருசு இல்லை. ரேகா ஒண்ணும் உன் கிட்ட காதலைச் சொல்லி உன் கூட ஊரைச் சுத்திட்டு அப்புறம் வீட்ல பணக்கார மாப்பிள்ளை பாத்துட்டாங்கன்னு சொல்லி உன்னை ஏமாத்தலை. அதை முதல்ல தெளிவா புரிஞ்சிக்கோ. நீ யாரு என்னன்னு அவளுக்கு தெரியாது. அதே மாதிரி அவளுக்கு பாத்துருக்குற மாப்பிள்ளை யாரு என்ன எதுவுமே அவளுக்குத் தெரியாது. அவளுக்கு உன்னைப் பாத்த உடனே பிடிச்சிருக்கலாம். அவளோட மாமா சொன்னதுக்காக நீ தான் மாப்பிள்ளைன்னு தெரியாமலே உன்னை வேண்டா வெறுப்பா கல்யாணம் பண்ண நினைச்சிருக்கலாம். அவ மனசுல அந்த நேரம் என்ன இருந்துச்சுன்னு அவ தான் சொல்லணும்”
…..
“அவ கண்ணுல உன் மேலான காதலை நாங்க எல்லாரும் பாக்குறோம் டா. அவ உன்னோட மனைவி. அதுவும் அவ நீ லவ் பண்ணின பொண்ணு. எங்களை விட உனக்குத் தான் அவளைப் பத்தி நல்லா தெரியும். அவ கிட்ட எந்த தப்பும் இருக்குறதா எனக்கு தெரியலை. ஆனா நான் என்ன சொன்னாலும் அதை உன் மனசு ஏத்துக்குமான்னு தெரியலை. அடுத்து என்ன செய்யணும்னு நீ தான் முடிவு பண்ணனும். இந்த ஜென்மத்துல அவ தான் உனக்குன்னு கடவுள் எழுதி வச்சிருக்கான். இத்தனைக்கும் அவளை உயிருக்கு உயிரா விரும்புற. பிடிக்காத பொண்ணுன்னா ஏதாவது காரணம் சொல்லி ஒதுங்கி இருக்கலாம். ஆனா அவளைத் தான் உனக்கு பிடிக்குமே? அப்புறம் என்ன? எந்த தயக்கமும் தடுமாற்றமும் இல்லாம உன் வாழ்க்கையை ஆரம்பி. அப்புறம் எல்லாம் சரியா போகும் டா. இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் இருந்தா எதுக்குமே முடிவு வராது விக்ரம். சந்தோஷமா அவ கூட வாழ ஆரம்பி. உன் மனக் குழப்பம் எல்லாம் போய்ரும். அதுக்கு முன்னாடி அவ கிட்ட மனசு விட்டு பேசு”, என்றான் ஆதி.
“சரிண்ணா, நான் யோசிக்கிறேன்”, என்று அரை மனதாக சொன்னான் விக்ரம். அவன் முழு மனதாக சொல்ல வில்லை என்று ஆதிக்கும் புரிந்தது. தம்பியிடம் அதற்கு மேல் பேச முடியாது என்பதால் அவன் தலையை ஒரு முறை வருடி விட்டுவிட்டு “கீழே போ”, என்றான்.
“சரி சரி போறேன். அப்புறம் தாத்தா மாதிரி எனக்கு அட்வைஸ் பண்ணது இருக்கட்டும். உனக்கும் கல்யாணம் முடிஞ்சு ரொம்ப நாள் எல்லாம் ஆகலை. நீயும் உன் ரூமுக்கு போ”, என்று சொல்லி சிரித்தான் விக்ரம்.
அவன் புன்னகை ஆதிக்கு சிறிது நிம்மதியைக் கொடுத்தது. “வா போகலாம்”, என்று சொல்லி தம்பியின் தோளில் கை போட்டுக் கீழே அழைத்து வந்தவன் விக்ரம் அறைக்குள் சென்ற பின்னரே தன்னுடைய அறைக்குள் சென்றான்.
அறைக்குள் வந்த ஆதி முகம் ஒரு மாதிரி இருக்கவும் “என்ன ஆச்சுங்க? முகம் ஒரு மாதிரி இருக்கு?”, என்று கேட்டாள் காயத்ரி.
அவளிடம் அனைத்தையும் சொன்னான் ஆதி. அவன் சொன்னதைக் கேட்ட காயத்ரி “நான் சொன்னேன்ல அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை இருக்குனு. நான் நினைச்ச மாதிரியே ஆய்ட்டு. இப்ப என்னங்க பண்ணுறது?”, என்று கேட்டாள்.
“எனக்கும் தெரியலை காயு. நானும் ஒரு லிமிட் வரை தான் அவனுக்கு அட்வைஸ் பண்ண முடியும்? அப்புறம் அவன் வாழ்க்கையை அவன் தான் பாத்துக்கணும்”
“அப்படி விடக் கூடாதுங்க. அவங்களை முதல்ல தனியா எங்கயாவது அனுப்பனும். விக்ரம் வேலை வேலைன்னு அலைஞ்சா அவனால எப்படி ரேகா அன்பை புரிஞ்சிக்க முடியும்? அவங்களை எங்கயாவது அனுப்பனும்”
“அதான் அவனை கல்யாணம் முடிஞ்ச ரெண்டாவது நாளே எங்கயாவது போகச் சொல்லிட்டேனே? அவன் தான் போக மாட்டேன்னு பிடிவாதமா இருக்கான். என்ன செய்ய?”
“பேசாம இப்படி செய்வோமா?”
“எப்படி காயு?”
“அவங்க ரெண்டு பேரும் தனியா தானே போக மாட்டாங்க. நாமளும் அவங்க கூட போகலாமா?”
“ஏய் என்ன டி சொல்ற? நாமளும் ஹனிமூன் போறோமா?”, என்று கண்கள் மின்னக் கேட்டான் ஆதி.
அவன் சந்தோசத்தைக் கண்டு வெட்கம் வந்தது காயத்ரிக்கு. “ஐயோ ஆசையைப் பாரு? நான் அவங்களுக்காக தான் சொன்னேன்”, என்று சிரித்தாள் காயத்ரி.
“ஏண்டி உனக்கு ஆசை இல்லையா?”
“ஆமா ஆமா நாம என்னமோ ஹனிமூன் போகாத மாதிரி தான். கல்யாணம் முடிஞ்சு அடுத்த நாள் கிளம்பி போன நாம ஒரு மாசம் கழிச்சு தான் வீட்டுக்கு வந்தோம். அப்புறம் வீட்டுக்கு வந்த அப்புறமும் கொஞ்சமாவது என்னை விட்டு இருக்கீங்களா? இதை விட வேற ஹனிமூன் வேணுமாக்கும்?”, என்று அவள் சலிப்பான குரலில் சொன்னாலும் அவள் முகத்தில் சந்தோசமே அதிகம் இருந்தது,
அவளை இழுத்து அனைத்துக் கொண்ட ஆதி “அறுபது வயசு உனக்கு ஆனாக் கூட நான் உன் கூட ஹனிமூன் கொண்டாட தான் செய்வேன். சரி சரி எங்க போகலாம்னு சொல்லு. எனக்கு இந்த பிளான் பிடிச்சிருக்கு. நாமளும் கிளம்பினா விக்ரமும் ரேகாவும் நம்ம கூட வந்து தான் ஆகணும். அப்பா இங்க இருக்குற எல்லா வேலையும் பாத்துக்குவாங்க. எங்க போக?”, என்று கேட்டான்.
“இருங்க, நான் மஞ்சு கிட்ட அங்க வரலாமான்னு கேக்குறேன்”, என்று சொல்லி மஞ்சுவை அழைத்த காயத்ரி முதலில் அங்கே உள்ளவர்களின் நலம் விசாரித்தாள். பின் விக்ரம் ரேகா பற்றிய விஷயத்தை எல்லாம் சொல்லாமல் “மஞ்சு, ஒரு ஹெல்ப்”, என்றாள்.
“அட போங்க அண்ணி, நான் தினமும் ரெண்டு பேர்க் கிட்டயும் சொல்லிட்டு தான் இருக்குறேன். ரேகா வர நினைக்கிறா. ஆனா இந்த விக்ரம் தான் தட்டிக் கழிக்கிறான். பேசாம எல்லாரும் இங்க கிளம்பி வந்துருங்களேன். ஆதி அண்ணா வந்தா கண்டிப்பா விக்ரம் வருவான்”, என்று மஞ்சு சொன்னதும் “நாங்களும் அங்க வரலாம்னு தான் நினைச்சோம்”, என்றாள் காயத்ரி.
“சூப்பர் அண்ணி, நான் இப்பவே சுதாகரை டிக்கட் போட சொல்றேன். விக்ரமை எப்படியாவது தள்ளிட்டு வந்துருங்க”, என்று சொல்லி போனை வைத்த மஞ்சு சுதாகரிடம் சொல்லி நால்வருக்கும் டிக்கட் போட்டு விட்டு தான் தூங்கவே சென்றாள்.
அதே நேரம் அறைக்குள் வந்த விக்ரம் முதலில் கண்டது தூங்காமல் கட்டிலில் அமர்ந்திருந்த ரேகாவைத் தான். எதையோ யோசித்துக் கொண்டிருந்த ரேகா உள்ளே வந்தவனைக் கண்டு முறைத்தாள். அவள் முறைப்பை உணர்ந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் கட்டிலில் இருந்த தலையணையை எடுத்தான். பின் போர்வையை எடுத்து தரையில் விரிக்க ஆரம்பித்தான்.
கட்டிலில் இருந்து எழுந்த ரேகா “இது உங்க ரூம், இது உங்க கட்டில். இதுலயே நீங்க படுக்கலாம். நான் கீழ தான் எப்பவும் படுப்பேன். அதனால உங்க கூட பங்குக்கு எல்லாம் வர மாட்டேன். தைரியமா மேலயே படுங்க”, என்று சொல்லி விட்டு மற்றொரு போர்வை தலையணையை எடுத்து கட்டிலுக்கு அந்த பக்கம் விரித்து விட்டு படுத்து விட்டாள்.
அவள் கோபத்தை உணர்ந்தவன் கட்டிலில் அமர்ந்தான். அவளையும் கட்டிலில் படுக்கச் சொல்ல அவனுக்கு ஆசை தான். ஆனால் ஒரே ரூமிலே அவளுடன் இருப்பதே அவனை மரண அவஸ்தைக்குள் சிக்க வைக்கிறது. இதில் ஒரே கட்டிலில் என்றால் தன் நிலைமை இன்னும் மோசமாகும் என்று உணர்ந்து பேசாமல் படுத்தான்.
அப்படியே இருவரும் தூங்கிப் போனார்கள். அடுத்த நாள் காலை எப்போதும் போல் விடிந்தது. காலை உணவு வேளையின் போது அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது டெல்லி போவதைப் பற்றியே பேச்சை ஆரம்பித்தான் ஆதி.
“அப்பா ஒரு நாலஞ்சு நாள் நீங்க ஆபீஸ் பாத்துக்குவீங்களா?”, என்று கேட்டான் ஆதி.
“தாராளமா பாத்துப்பேன் பா. அதான் விக்ரமும் கூட இருக்கானே?”, என்றார் சேதுபதி.
“இல்லைப்பா நான், விக்ரம், காயத்ரி, ரேகா நாலு பேரும் டெல்லி போகலாம்னு இருக்கோம். மஞ்சு எங்களுக்கு டிக்கட் போட்டுட்டா. நாங்க போயிட்டு வர வரைக்கும் நீங்க மேனேஜ் பண்ணிப்பீங்களா?”, என்று கேட்டதும் விக்ரம் மற்றும் ரேகா இருவரும் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தார்கள்.
“அண்ணா என்ன சொல்ற? எனக்கு இங்க வேலை இருக்கு. நீயும் அண்ணியும் போய்ட்டு வாங்க”. என்று அவசரமாக சொன்னான் விக்ரம். அதில் ரேகா முகம் வாடிப் போனது.
“விக்ரம், அவன் தான் மஞ்சு டிக்கட் போட்டுட்டான்னு சொல்றான்ல? நாலஞ்சு நாள் தானே? மருமகளை அழைச்சிட்டு போயிட்டு வாடா. அதான் காயத்ரியும் ஆதியும் வராங்களே”, என்றார் சேதுபதி.
“இல்லைப்பா நாங்க இப்ப போகலை. கொஞ்ச நாள் கழிச்சு போய்க்குறோம்”, என்றான் விக்ரம்.
“விக்ரம், அதான் எல்லாரும் சொல்றாங்கல்ல? ரேகாவுக்கும் நாலு வெளிய இடத்துக்கு போனா நல்லா இருக்கும். மஞ்சுவும் அனுப்பி வைங்க மான்னு கேட்டுட்டே இருக்கா. இப்ப சுதாகர் மாப்பிள்ளை டிக்கட்டும் போட்டுட்டார். இதுக்கு அப்புறமும் போகலைன்னா வீட்டு மாப்பிள்ளையை மதிக்காத மாதிரி ஆகிரும் டா”, என்று சாரதா சொன்னதும் அதற்கு மேல் மறுக்க முடியாமல் “சரி எப்ப கிளம்பனும்?”., என்று கேட்டான் விக்ரம். அதில் ரேகா முகம் மலர்ந்தது.