அர்ஜுன் உல்லாசமாக விசில் அடித்துக் கொண்டே வீட்டிற்கு வந்தான். அவன் முகத்தைப் பார்த்தே… ஆரு சமாதானம் ஆகிட்டாங்க போல என்று நினைத்தாள். அர்ஜுன் தன் அறைக்குச் சென்றவன், அவன் கட்டிலை பார்த்து அதிர்ந்தான். அவன் கட்டிலில் மேக்கப் பாக்ஸ் திறந்து கிடந்தது, ஐ லைனர் ஒருபக்கம் சரியாக மூடாமல் கொட்டி கொண்டிருந்தது, தலையில் வைத்து காய்ந்த பூ வேறு… அதோடு யாரோ உடையைக் கழட்டி அங்கேயே போட்டுவிட்டு சென்று இருந்தனர். “இது யார் வேலை?” அங்கிருந்த அவன் பெரியம்மாவிடம் அர்ஜுன் கேட்க… அவர் “இங்க சஞ்சனா தான் டிரஸ் பண்ணா…” என்றதும், அர்ஜுனுக்கு வந்ததே ஆத்திரம். அவள் எப்படித் தன் அறைக்குள் வரலாம் என்று நினைத்தவன், “அம்மா….” என்று அவன் போட்ட சத்தத்தில், வித்யா அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார். அவர் மட்டும் இல்லை சஞ்சனா, ஆரு இன்னும் அங்கிருந்த சிலரும் வந்தனர். “என்னடா? எதுக்கு இப்படிக் கத்துற?” என்றவரிடம் அவன் கட்டிலை காட்டினான். வித்யா அவன் கட்டிலை பார்த்து திடுக்கிட்டார். “எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியும் தான, எதுக்கு என்னோட ரூம்குள்ள யாரையும் விடறீங்க. இதெல்லாம் உங்களோட ரூம்ல வச்சுக்க வேண்டியது தான, ரெண்டு நாளா நாயா அலையறேன், ஒரு பத்து நிமிஷம் படுக்கலாம்னு வந்தா… இது வீடா இல்லை வேறேதுமா?” அர்ஜுன் கோபமாகக் கத்தியவன், ஒரு துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றான். அர்ஜுன் பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்த ஆதி ஆருவிடம் “இதெல்லம் உன்னோட ரூம்ல வச்சுக்க வேண்டியது தான ஆரு, அவனுக்குப் பாவம் ஒரே அலைச்சல்… அது தான் கத்துறான்.” என்றான். வித்யாவும், ஆருவும் சேர்ந்து வேகமாக அவன் கட்டிலை ஒழுங்கு படுத்தி வேறு போர்வை விரிக்க…சஞ்சனா அர்ஜுன் போட்ட சத்தத்தில் அரண்டவள், அந்த இடத்திலேயே சிலையாக நின்றாள். ஆரு அவளின் பொருட்களை அவளிடம் கொடுக்க… அதை எடுத்துக் கொண்டு கீழே அவள் தங்கி இருந்த அறைக்குச் சென்றாள். அங்கே அவள் அம்மாவிடம் அவள் குறை சொல்ல… “நமக்குத் தான் இந்த ரூம் கொடுத்திருக்காங்க தான, நான் உன்னை இங்க தான டிரஸ் பண்ண சொன்னேன், நீ ஏன் அங்க போன?” என்றார் அவர். “எங்க அக்கா வீடு, நான் எங்க வேணா போவேன். இருக்கட்டும் ரஞ்சனா ப்யுடி பார்லர்ல இருந்து வரட்டும், அவகிட்ட எல்லாத்தையும் சொல்றேன்.” “அப்படியே வாயிலையே ஒன்னு போடுவேன். பொண்ணு குடுத்த இடத்தில அடக்கமா தான் இருக்கணும். அவளுக்குக் கல்யாணம் ஆகி ஒருவாரம் தான் ஆகுது. அதுக்குள்ள எதாவது குழப்பம் பண்ண, கொன்னுடுவேன். நீ என் கூடத் தான் இருக்கணும்.” தன் அம்மா பேச்சில் கோபம் கொண்டு சஞ்சனா முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள… “அன்னைக்கும் நான் சொல்லச்…. சொல்ல… கேட்காம, கல்யாணமாகி முதல் தடவை புகுந்த வீட்டுக்கு போற உங்க அக்கா கூடவே போவேன்னு ஒரே அடம், ஒழுங்கா எங்களோட வந்திருக்கலாம், இது என்ன நம்ம வீடா?” என்று தொடர்ந்து அவளின் அம்மா அர்ச்சனை செய்ய… சஞ்சனா அடங்கி உட்கார்ந்தாள். ரஞ்சனா ரெடி ஆனதும் காரில் அவளை அழைக்கச் சென்ற ஆதி “ரஞ்சு, உன் தங்கை இன்னைக்கு அர்ஜுன் ரூம்ல போய் டிரஸ் பண்ணிகிறேன்னு, அங்கயே எல்லாத்தையும் விட்டுட்டு வந்திட்டா போல… அவன் கொஞ்சம் மூட் அவுட் ஆகி கத்திட்டான். சாரி… அவன் யாருன்னு தெரியாம தான் கத்திட்டான். நீ சஞ்சனாவை கொஞ்சம் சமாதானம் பண்ணிடு.” என்றவனின் குரலில், ரஞ்சனா சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமே என்ற தவிப்பே இருந்தது. “அவ எதுக்கு அங்க போனா? நம்ம ரூம்ல டிரஸ் பண்ணி இருக்கலாம் தான… எங்க வீட்ல அவ கொஞ்சம் செல்லமா வளர்ந்திட்டா… அதனால கொஞ்சம் பிடிவாதம் ஜாஸ்தி. எங்க வீட்ல நான் விட்டுக் கொடுப்பேன், எல்லா இடத்திலையும் அப்படி இருக்க முடியாது. நான் சொல்லி வைக்கிறேன்.” ரஞ்சனா சொன்னதைக் கேட்ட ஆதிக்கு நிம்மதியாக இருந்தது. குளித்து முடித்து வெளியே வந்த அர்ஜுன் அவன் அறையைப் பார்க்க நீட்டாக இருந்தது. உடையை மாற்றிக் கொண்டு கீழே வந்தவன், வித்யாவிடம் சென்று சாரி என்றான். அவர் அவனைக் கண்டு கொள்ளாமல் இருக்க… அர்ஜுன் சென்று அவர் கழுத்தை கட்டிகொண்டவன், “சாரி மா….” என்றான் மீண்டும்.
“கத்துறது எல்லாம் கத்திடு, அப்புறம் சாரி சொல்லு. பாவம் சஞ்சனா பயந்திட்டா…” என்றவர், “சரி போ… இப்படியே மூஞ்சிய தூக்கி வச்சிக்காம, கலகலப்பா இரு.” என்றார். ஆதியின் அருகே வந்த அர்ஜுன், “சாரி ஆதி, உனக்குத் தான் தர்ம சங்கடமா இருந்திருக்கும். ரியல்லி வெரி சாரி.” என்றவன், ரஞ்சனாவையும் பார்த்து “சாரி அண்ணி…” என்றான். அவள் “விடுங்க அர்ஜுன்” என்றவள், எழுந்து அவள் தங்கையைத் தேடி சென்றாள். அர்ஜுன் வெளியே செல்ல… அவனோடு வெளியே வந்த ஆதி, “யாருன்னு தெரியாம கத்திட்ட …அதுக்கு ஏன் டா இவ்வளவு பீல் பண்ற?” என்றதும், அர்ஜுன் நிமிர்ந்து ஆதியின் முகம் பார்த்தவன், “சஞ்சனான்னு தெரிஞ்சு தான் கத்தினேன்.” என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு அங்கே நிற்காமல் பைக்கை எடுத்துக்கொண்டு சென்றான். ஆதிக்கு அர்ஜுன் சொன்னது குழப்பமாக இருந்தது. அவன் நேராக ஆருவை தேடி சென்றான். அவளைத் தனியாக அழைத்துச் சென்று விசாரிக்க… ஆரு அன்று கல்யாண மண்டபத்தில் சஞ்சனா பேசியதை சொன்னவள், “அர்ஜுனும் மீராவும் ரெண்டு நாள் பேசாம இருந்தாங்க. அதற்குக் காரணம் சஞ்சனான்னு நினைக்கிறேன்.” என்று அவள் மேலும் ஆதியை குழப்ப… ஆதிக்கு இது சாதாரண விஷயம் என்று தோன்றவில்லை, சரி… பிறகு பார்ப்போம் என்று நினைத்தான். ரஞ்சனா சென்று சஞ்சனாவை சமாதானம் செய்ய… “உங்க வீட்டு ஆளுங்க சுத்த மோசம்… எனக்கு எங்க அக்கா வீட்ல நினைச்ச எடத்தில டிரஸ் பண்ணிக்கக் கூட உரிமை இல்லையா, நீ எப்படித்தான் இவங்களோட குப்பை கொட்ட போறியோ…” எனச் சஞ்சனா வாய் ஓயாமல் பொரிய. அவளது அம்மா “அதெல்லாம் அவ நல்லா குப்பை கொட்டுவா… நீ உன் வேலையைப் பார்த்திட்டு இருந்தாலே போதும். எங்க இருந்திட்டு என்ன பேசுற? அவங்க யார் காதுளையவது விழுந்தா என்ன நினைப்பாங்க? என்னைத் தான் பெண்ணை ஒழுங்கா வளர்க்கலைன்னு சொல்வாங்க, பேசாம வாய மூடு.” என்றார். வரவேற்புக்கு எல்லோரும் கிளம்பி மண்டபம் சென்றனர். எல்லோரும் ஐந்து மணிக்கே மண்டபம் வந்துவிட்டனர். ஆறு மணியிலிருந்து தான் வரவேற்பு. அதனால் ஆளுக்கு ஒரு ஏசி அறையில் சென்று அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஆதியும், ரஞ்சனாவும் ஒரு அறையில் இருந்தனர். அவர்கள் இருவரும் தனியாக இருக்கட்டும் என்று யாரும் அவர்கள் அறைக்குச் செல்லவில்லை. ஆதி ரஞ்சனவிடம் சிலுமிஷம் செய்து அவளைச் சிவக்க வைத்துக் கொண்டிருந்தான். அப்போது சஞ்சனா வந்து அவர்கள் இருந்த அறை கதவை தட்ட… ஆதி சென்று கதவை திறந்தான். உள்ளே வந்த சஞ்சனா அவர்கள் இருவரும் தனியாக இருப்பதைப் பார்த்தும், வெளியே செல்லாமல் அங்கையே உட்கார்ந்துவிட்டாள். ஆதிக்கு ஏமாற்றமாக இருந்தது. என்ன இவளுக்குக் கொஞ்சம் கூட இங்கிதமே தெரியலை? இப்படித் தான் அவங்க வீட்ல இருக்கும் போதும் செய்வா… தனியா எங்கையும் வெளிய போகவும் விடலை. எப்பவும் அவங்க அக்கா கூட ஒட்டிகிட்டே இருக்கா. சின்னப் பொண்ணுனா கூடப் பரவாயில்லை, காலேஜ் முடிச்சிட்டா…. இன்னும் இந்த விவரம் கூடவா தெரியாது என்று மனதிற்குள் புலம்பி கொண்டிருந்தான். ரஞ்சனா ஆதியின் முகம் பார்க்க… அவன் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தான். அவனின் நிலைமை அவளுக்குப் புரிந்தது. ஆனால் சஞ்சனாவை பார்த்தாலும் பாவமாக இருந்தது. அவள் சஞ்சனாவோடு பேச…. ஆதி அந்த அறையில் இருந்து வெளியே சென்றுவிட்டான். மண்டப வாசலில் வித்யா டேபிளில் பன்னீர், சந்தனம், குங்குமம், ரோஜா பூ எல்லாவற்றையும் அடுக்க… அவருக்கு ஆரு உதவிக் கொண்டிருந்தாள். அவர்கள் அருகில் ரஞ்சனாவின் அம்மா நின்று கொண்டிருந்தார். அப்போது ஆதி அங்கே வந்தான். “நீ எதுக்குடா வெளியே வந்த? வேர்க்கும், ஏசி ரூம்ல இருக்க வேண்டியது தான.. ரஞ்சனா தனியாவா இருக்கா?” வித்யா கேட்க… “அவ தங்கச்சி கூட இருக்கா” என்றான் ஆதி. ஆதியின் குரலில் இருந்தே… அது அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை வித்யாவும் உணர்ந்தார். அதே போல் ரஞ்சனாவின் அம்மாவும் உணர்ந்தார். “இன்னைக்குத் தான் அக்காவும், தங்கையும் பேச முடியும். இனி ரெண்டு பேரும் அடிக்கடி பார்க்க முடியாது. அவங்க ஆசை தீர பேசட்டும்.” என்று நல்லவிதமாக வித்யா ஆதியிடம் எடுத்து சொல்ல… அவனும் புரிந்து கொண்டான். அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருந்த ரஞ்சனாவின் அம்மா அவர் பெண்களைத் தேடி சென்றார். “மாப்பிள்ளையும், உங்க அக்காவும் தனியா இருக்கும் போது, நீ எதுக்கு இங்க வந்த?” என்று அவர் சஞ்சனாவை திட்ட… “அம்மா, என்னை எப்ப பாரு திட்றாங்க.” என்று அவள் அழ… “ஏன் மா அவளைத் திட்றீங்க?” என்று ரஞ்சனா சண்டைக்கு வந்தாள். “திட்டாமல் பின்ன கொஞ்சவா சொல்ற…இவளுக்கும் அறிவு இல்லை, உனக்கும் அறிவு இல்லை. ரஞ்சனா… உன்னோட புகுந்த வீட்டு மனுஷங்க ரொம்ப நல்ல மாதிரி… கல்யாணத்துக்கு நம்ம ஊருக்கு வந்த போது கூட அவங்க நம்மை எந்தக் குறையும் சொல்லலை, இதே மத்தவங்களா இருந்தா… எவ்வளவு குறை கண்டுபிடிசிருப்பாங்க. அதனால அவங்ககிட்ட நல்லபடியா நடந்து, நல்ல பேர் வாங்கிற வழிய பாரு. இவளோட சேர்ந்தா நீயும் உருப்படமாட்ட.” என ரஞ்சனாவின் அம்மா அவளுக்கு ஒரு பெரிய சொற்பொழிவே ஆற்றினார். ரஞ்சனா எல்லாவற்றிக்கும் மண்டையை உருட்ட… சஞ்சனா அவள் அம்மாவை கோபமாக முறைத்து கொண்டிருந்தாள். அடுத்து சஞ்சனவை பார்த்து “நைட் வீட்டுக்குப் போனதும் உன் பெட்டியில எல்லாத்தையும் எடுத்து வைக்கிற… நாம நாளைக்குக் காலையில திருச்சிக்கு கிளம்பனும்.” என்றார். அதைக் கேட்டு திடுகிட்ட சஞ்சனா “நான் வர மாட்டேன், நான் இங்க தான் பிஜி சேர போறேன்.” என்றாள். “ஒன்னும் நீ படிச்சு கிழிச்சிட வேண்டாம். அப்படிக் கிழிக்கிறத அங்க வந்து கிழி. நீ இங்க இருந்தா, உங்க அக்காவை அவ குடும்பத்தில ஒழுங்கா வாழ விடமாட்ட, ஒழுங்கா என்னோட ஊருக்கு கிளம்புற வழிய பாரு.” என்றவர், அந்த அறையில் இருந்து வெளியே சென்றார். நேரம் ஆனதும் விருந்தினர் வருகைக்காக வாசலில் வரவேற்க கணேசன், வித்யா, அர்ஜுன், ஆரு நின்றிருக்க… அவர்களோடு பெரியம்மாவும் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு கார் வந்து நிற்க…. அந்தக் காரின் பின் சீட்டில் இருந்து மீராவும், வருணும் இறங்கினர். மீரா டிரைவரிடம் இரவு பத்து மணிக்கு வர சொல்ல… அவர் சரி என்று தலை ஆட்டிவிட்டு சென்றார்.