“என்ன உங்க அம்மா பிச்சை போடுறாங்களா? அப்படி ஒண்ணும் அவசியம் இல்லை. இப்ப உங்க வீட்டுக்கு வந்த அப்புறம் அந்த பொண்ணை உங்க அம்மா கொடுமை படுத்த மாட்டாங்கன்னு என்ன உத்திரவாதம் இருக்கு? நான் சொன்னது சொன்னது தான். உங்க அம்மா அவளை பொண்ணா ஏத்துகிட்டா நான் யாருன்னு சொல்றேன்”, என்று சொல்ல தளர்ந்து போய் அங்கிருந்து சென்று விட்டாள் உமா.
கலக்கத்துடன் அந்த பெரிய அலுவலகத்துக்குள் நுழைந்தாள் மதியழகி. ஜூனியர் எம். டியின் டெரெக்ட் அப்பாயிண்மெண்ட் என்று சொல்லப் பட்டதால் நேராக அருணின் அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.
உள்ள நுழைந்ததும் “உக்காருங்க”, என்று சொன்னான் அருண்.
அவனுக்கு எதிரே அமர்ந்தவள் தன்னுடைய பைலை நீட்டினாள். கொஞ்சம் படபடப்பாக தான் இருந்தது. அதுவும் அவன் முன்பு அன்று தான் இருந்த கோலம் வேறு நினைவில் வந்து சிறு முகச் சிவப்பைத் தந்தது.
அவள் நீட்டிய பைலை வாங்கிப் பார்த்தவன் “உங்க பேர் மதியழகியா?”, என்று வியப்பாக கேட்டான்.
“ஆமா சார், ஏன் அப்படி கேக்குறீங்க?”
“இல்லை, உங்க அண்ணா மதின்னு சொன்னதும் வெண்மதி, இளமதி அப்படி ஏதோ ஒண்ணு இருக்கும்னு நினைச்சேன். ஆனா உங்களுக்கு பொருத்தமான பேரா தான் வச்சிருக்காங்க”, என்று சொல்லி அவன் பைலைப் பார்க்க அவள் முகமோ அவன் சொன்ன விதத்தில் மேலும் சிவந்தது.
அதை மறைத்துக் கொண்டு அவன் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“இன்டர்வியூ நல்லா பண்ணிருக்கீங்க மதி. கண்டிப்பா உங்களுக்கு வேலை உண்டு. எங்க அப்பா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு என்னைக்கு ஜாயின் பண்ணணும்னு மெயில் பண்ணுறேன்”, என்றான் அருண். .
“ரொம்ப நன்றி சார்”, என்று மதி எழுந்து கொள்ள அவளிடம் ராதாகிருஷ்ணனின் அந்த பெண் யார் என்று அவளிடம் கேட்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு. ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் அவன் அமைதியாக இருக்க மதி அங்கிருந்து சென்று விட்டாள்.
அடுத்து இரண்டு நாட்கள் ஆன பிறகும் அருண் ராதாகிருஷ்ணனிடம் மதியின் வேலையைப் பற்றி பேச வில்லை. எதையோ பறி கொடுத்தவர் போல இருந்த தந்தையிடம் அவனால் பேச முடிய வில்லை. அவனும் மறந்து விட்டான்.
அப்போது “அண்ணா”, என்ற படி அருணின் அறைக்குள் வந்தாள் உமா.
“வா உமா”, என்று சொன்னதும் அவன் அருகே சென்று அமர்ந்தாள்.
“அப்பாவோட இன்னொரு பொண்ணைப் பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சதா அண்ணா?”
“சிவனைத் தவிர அந்த விஷயம் யாருக்கும் தெரியாது போல மா? அவன் வாயைத் திறந்து சொன்னா தான் உண்டு. நீ கேட்டுப் பாத்தியா?”
“கேட்டேன், சொல்ல மாட்டிக்காங்க. சரி நீ மதி கிட்ட கேட்டியா?”
“அப்பா இப்ப எதையும் கேக்குற நிலைமைல இல்லைண்ணா. நீயே முடிவு எடு”
“சரி இன்னைக்கே அவளை வேலைக்கு வரச் சொல்றேன். ஒரு நிமிஷம் இரு”, என்று சொன்னவன் உடனே சிவனை அழைத்து மதியை வேலைக்கு வரச் சொன்னான்.
அவன் போனை வைத்ததும் “மதி உண்மையைச் சொல்லுவாளா அண்ணா?”, என்று கேட்டாள் உமா. “கேட்டுப் பாக்கணும்”, என்று சொல்லி அலுவலகம் கிளம்பினான் அருண்.
மதியும் அவனைக் காண வந்திருந்தாள். அவள் வேலையைப் பற்றி சிறிது நேரம் பேசியவன் “சரி மதி, நீங்க உங்க டேபிள்க்கு போங்க. ஸ்டெல்லான்னு ஒருத்தங்க வந்து உங்களுக்கு டிரைன் பண்ணுவாங்க”, என்றான்.
“ஓகே சார்”, என்ற படி அவள் எழுந்து கொள்ள “மதி ஒரு நிமிஷம்”, என்றான்.
“சார்”
“உங்க கிட்ட பெர்ஸ்னலா ஒரு கேள்வி கேக்கணும்”, என்று அவன் சொல்ல அவளுக்கு ஒரு மாதிரி படபடப்பாக வந்தது.
“கேளுங்க சார்”, என்றாள்.
சட்டென்று எப்படி அவளிடம் கேட்க என்று அவனுக்கு தெரிய வில்லை. மொட்டையாக அவளிடம் எப்படிக் கேட்பது என்று யோசித்தான்.
“என்ன சார் கேளுங்க”
“உங்களுக்கு ஏதாவது ஒரு பொண்ணைப் பத்தி தெரியுமா? சாரி… அது வந்து… ஒரு பொண்ணு… அவங்க அப்பா அவங்க அம்மாவை ரெண்டாவது கல்யாணம் பண்ணி கை விட்டு… இப்ப அந்த பொண்ணோட அம்மாவும் இறந்து…. தனியா இருக்குற ஒரு பொண்ணைப் பத்தி தெரியுமா?”, என்று அவன் கேட்க அவளுக்கு சட்டென்று கண்மணி நினைவு தான் வந்தது.
“ஓ தெரி….”, என்று ஆரம்பித்தவள் சந்தேகமாக அவனைப் பார்த்து “நீங்க ஏன் இப்படி கேக்குறீங்க?”, என்று கேட்டாள். ஏனென்றால் கண்மணி விவரம் வீட்டு ஆட்களுக்கு மட்டும் தான் தெரியும். இவனுக்கு தெரிகிறது என்றால்…. அது குழப்பமாக இருந்தது. இன்னொரு விஷயம் அவனுக்கு அந்த பெண் கண்மணி என்று தெரிய வில்லை என்று புரிந்தது.
அவள் சொல்ல வந்ததைப் பார்த்து அவளுக்கு தெரியும் என்று நம்பிய அருண் “அது வந்து…. “, என்று இழுத்தான். அவள் வாயைத் திறக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். உண்மையை அவன் சொல்லாமல் வாயைத் திறக்க கூடாது என்று முடிவு எடுத்தாள்.
“நான் ஒப்பனாவே உண்மையைச் சொல்றேன் மதி. எங்க அப்பாவுக்கு ரெண்டு மனைவி. இன்னொரு மனைவி பத்தின உண்மையைச் சொன்னது உங்க அண்ணா தான். ஆனா அந்த பொண்ணு யாருன்னு சொல்ல மறுத்துட்டார். அன்னைக்கு அதை தெரிஞ்சிக்க தான் உங்க வீட்டுக்கு வந்தோம். உங்களுக்கு அதைப் பத்தி தெரியும்னு நினைக்கிறேன். தயவு செஞ்சு சொல்லுங்க. அந்த பொண்ணு யாரு? அவ என்னோட தங்கை. இனியாவது அவளை நாங்க நல்லா பாத்துக்கணும்னு நினைக்கிறோம். பிளீஸ் சொல்லுங்க”, என்று அவன் சொல்ல அவள் அமைதியாக இருந்தாள்.
“உங்களுக்கு தெரியாதுன்னு மட்டும் சொல்லாதீங்க மதி. உங்களுக்கு தெரியும்னு எனக்கு தெரியும்”
“ஆமா தெரியும் சார்”
“அப்படின்னா சொல்லுங்க, அது யாரு?”
“சொல்ல மாட்டேன் சார்”
“மதி”
“எங்க அண்ணா ஒரு விஷயத்தை சொல்ல கூடாதுன்னு முடிவு எடுத்துருக்குன்னா கண்டிப்பா அது சரியா தான் இருக்கும். எங்க அண்ணனுக்கு எதிரா ஒரு செயலைக் கூட செய்ய மாட்டேன். சாரி அது யாருனு என்னால சொல்ல முடியாது”
“ஓ? சரி ஓகே. உங்க வேலையைப் பாருங்க”
“சார்”
“ஆன்?”
“இல்லை, அந்த உண்மையைத் சொன்னா தான் இங்க வேலை பாக்க முடியுமா?”
“சே சே, அது எங்க குடும்ப விஷயம். அதுக்கும் உங்க வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்க உங்க வேலையைப் பாக்கலாம்”, என்று சொன்னாலும் உண்மையைச் சொல்லாத அவள் மீதும் சிவன் மீதும் சற்று கோபம் வந்தது மட்டும் உண்மை. அவள் வேலையைப் பார்க்கச் சென்றாள். கூடவே கண்மணி பற்றி கவலையாகவும் இருந்தது.
அதற்கு பின் நாட்கள் மாதங்கள் ஆனது. ஆனால் யார் வாழ்விலும் எந்த மாற்றமும் இல்லை. கோதையிடம் மகனும் மகளும் எவ்வளவோ பேசி விட்டார்கள். ஆனால் கோதை அந்த பெண்ணை தன்னுடைய மகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லி விட்டாள்.
“என்னால உங்களுக்காக கூட நடிக்க முடியாது அருண். என் மனசுல அந்த பொண்ணு மேல எல்லாம் அன்பு உருவாகாது”, என்று அவள் வெளிப்படையாகவே சொல்ல ராதாகிருஷ்ணன் அவளிடம் பேசுவதையே விட்டுவிட்டார்.
அதே நேரம் கண்மணி வாழ்வும் அபப்டியே சென்றிருக்க ஒரு நாள் அவளிடம் மறு கல்யாணம் பற்றி பேசினாள் பார்வதி. சுந்தரி தான் அவளிடம் அது பற்றி பேசச் சொல்லி சொன்னாள்.
“எனக்கு இன்னொரு கல்யாணம் எல்லாம் வேண்டாம் அத்தை. அதை என்னால செய்ய முடியாது. என்னை வற்புறுத்தாதீங்க”, என்று மறுத்தாள் கண்மணி.
“இல்லை மா. நீ இப்ப புரியாம பேசுற?”
“எல்லாம் புரிஞ்சு தான் அத்தை பேசுறேன். உங்க பையனை காதலிச்சு கல்யாணம் பண்ணிருக்கேன். அதை என்னால மறக்க முடியாது”
“அதை மறக்கச் சொன்னாலும் உன்னால் மறக்க முடியாதுன்னு எனக்கு தெரியும் மா. ஆனா எத்தனை நாள் தனியா இருப்ப சொல்லு. உனக்குன்னு ஒரு துணை வேணும் டா. இப்ப இந்த நிமிஷம் தனியா வாழப் போறேன்னு சொல்றது சரியாப் படலாம். ஆனா உன் குழந்தைக்கு நீ என்ன நியாயம் செய்ய போற?”, என்று கேட்க “அத்தை”, என்று அதிர்வாக அழைத்தாள்.