சிவன், கருப்பட்டி, உமா மனதில் அப்பாடா என்ற நிம்மதி வந்தது. கண்மணி மனதிலோ சந்தோஷம் இல்லாமல் போனாலும் ஒரு அமைதி வந்தது.
“சுந்தரி நீ என்ன சொல்ற?”, என்று அதிர்ந்து போய்க் கேட்டாள் பார்வதி.
“சாகப் போற மாதிரி கிடந்த நான் இப்ப இந்த அளவுக்கு எந்திரிச்சு உக்காந்துருக்கேன்னா அதுக்கு கண்மணி தான் காரணம். அவளை என் மகனுக்கு கொடுத்துரு. என் மகன் அவளுக்கு காலம் முழுக்க காவலா இருப்பான். கண்மணிக்கு புருசனா மட்டும் இல்லை, அவ குழந்தைக்கு அப்பாவா இருப்பான். உன் மருமக எதிர் வீட்ல தான் வாழப் போறா. உன் பேரனும் இங்க தான் இருப்பான். அவங்க வாழப் போற வாழ்க்கையை நீ உன் கண்ணால பாக்கலாம். நீ என்ன சொல்ற?”
பார்வதி மகனைப் பார்த்தாள். “சுந்தரிமா சொல்றது தான் மா சரி. கண்மணியை கருப்பட்டிக்கு கல்யாணம் பண்ணி வச்சிறலாம் மா. அவ எனக்கு நல்ல பிரண்டு மா. வா போன்னு பேசிக்கிட்டாலும் அவ என்னோட அண்ணன் பொண்டாட்டி. அவ என்னோட அண்ணி. இன்னொரு அம்மா மாதிரி. அவளைப் போய் என்னால முடியாது மா… கருப்பட்டிக்கு கட்டி வைக்கலாம் மா”, என்றான் சிவன்.
“எலேய் கருப்பட்டி நீ என்ன டா சொல்ற?”
“என்னோட சம்மதம் முக்கியம் இல்லை மா. கண்மணி கிட்ட கேளுங்க”, என்று கருப்பட்டி சொல்ல அனைவரும் அவள் முகத்தைப் பார்த்தார்கள். கண்மணிக்கு தர்மசங்கடமாக இருந்தது.
“கண்மணி என்ன மா சொல்ற?”, என்று கேட்டாள் பார்வதி.
“எனக்கு சம்மதம் அத்தை”, என்று தலை குனிந்த படி சொன்னாள். அனைவருக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இப்போது மறுத்தால் வேறு யாரையாவது மாப்பிள்ளை ஆக்கி விடுவார்களோ என்று பயமாக இருந்தது. அவளைப் பொறுத்த வரை கருப்பட்டி நல்லவன். ஆனாலும் இது சரியா என்று அவளுக்கு தோன்றிக் கொண்டே தான் இருந்தது.
“அவ சரின்னு சொல்லிட்டா டா. இப்ப நீ சொல்லு”, என்று பார்வதி கேட்க “எனக்கு சம்மதம் தான். ஆனா கண்மணி ஆஸ்பத்திரில சேரும் போது வீட்டுக்காரர் பேரா என் பேரைத் தான் கொடுக்கணும். அவளுக்கு பிறக்கப் போற பையன் என்னோட மகனா தான் இந்த ஊர்ல பிறக்கணும். நான் அவனுக்கு அப்பா மாதிரி இருக்க விரும்பலை. அப்பாவா இருக்க விரும்புறேன்”, என்று சொல்ல அவனை நிமிர்ந்து பார்த்த கண்மணியின் பார்வையில் என்ன இருந்தது என்று அவனுக்கு புரிய வில்லை.
“இன்னைல இருந்தே அவ உன் பொண்டாட்டி தான். அது உங்க பிள்ளை தான். வா வந்து அவ கழுத்துல தாலி கட்டு. நீயும் என் மகன் தான் டா. வா”, என்று பார்வதி சொல்ல சந்தோசமாக சென்றான். மதி அனைவருக்கும் அட்சதையைக் கொடுத்தாள். அருணுக்கும் கொடுக்க அவள் புன்னகையை ரசித்த படியே இரண்டு கைகளிலும் அள்ளினான்.
“இவ்வளவு எடுக்க கூடாது. கொஞ்சமா எடுங்க”, என்று மதி சொல்ல சிறு சிரிப்புடன் கொஞ்சம் எடுத்துக் கொண்டான். அனைவரின் ஆசியோடு கண்மணியின் கழுத்தில் தாலி கட்டினான் கருப்பட்டி.
முதலில் சுந்தரியின் காலில் விழ அடுத்து பார்வதியின் காலில் விழுந்தார்கள். ராதாகிருஷ்ணன் கோதை இருவரும் அவர்களை அமர வைத்து ஆசீர்வாதம் செய்தார்கள். அதன் பிறகு மணமக்கள் இருவரையும் மனையில் அமர வைத்து வளைகாப்பு நடத்தப் பட்டது.
ஏழு வகை சாதம் செய்து கொண்டு வந்திருந்த கோதை அவளுக்கு ஊட்ட அவளை தாயாக ஏற்றுக் கொள்ள முடியாமல் தன்னுடைய அன்னையை எண்ணி கண்மணியின் கண்கள் கலங்கியது.
அவள் கண்கள் கலங்குவதைக் கண்ட கருப்பட்டி அவளுடைய கையைப் பற்றிக் கொண்டான். அவனை நிமிர்ந்து பார்த்தாள். அழாதே என்னும் விதமாய் சைகை செய்தான்.
வளைகாப்பு நல்ல படியாக முடிய அனைவரும் சாப்பிடச் சென்றார்கள். எல்லாருக்கும் உணவை சிவா ஹோட்டலில் ஆர்டர் செய்திருந்தான். மதி, செந்தில், வெண்ணிலா, சிவன், கருப்பட்டி அனைவரும் உணவு பரிமாறினார்கள்.
இடை இடையே மதியை ரசித்த படியே இருந்தான் அருண். உமா முகமோ சிறிது தெளிவுடன் இருந்தது. ஆனால் அவள் சிவனை திரும்பிக் கூட பார்க்க வில்லை. ஆனால் அவள் தன்னை ஒரு முறையாவது பார்க்க மாட்டாளா என்ற ஏக்கம் அவனுக்குள் இருந்தது.
“அப்படி அவ உன்னைப் பாத்தா, உடனே அவ கிட்ட போய் காதலைச் சொல்லிருவியா? இல்லை தானே? அப்படின்னா விலகியே இரு”, என்று அவன் மனசாட்சி எச்சரிக்கை செய்ய கவனமாக இருந்து கொண்டான்.
வளைகாப்பு முடிந்ததும் சொந்தங்கள் மட்டுமே இருந்தார்கள். “தம்பி கண்மணியை நாங்க அழைச்சிட்டு போகட்டுமா? சத்தியமா அவளை அவளை நல்லா பாத்துக்குவோம்”, என்று ராதாகிருஷ்ணன் சிவனிடம் கெஞ்சினார்.
அவ்வளவு பெரிய மனிதர் கெஞ்ச வேறு வழியில்லாமல் தாயிடம் பேசினான். அவர்கள் அனைவரும் முடிவு எடுக்க கண்மணி அமைதியாக இருந்தாள். கடைசியில் அவள் விருப்பத்தைக் கேட்காமலே கண்மணியை உமா வீட்டினர் அழைத்துச் சென்றனர்.
போகும் போது கருப்பட்டியை பார்த்த படியே தான் சென்றாள். அவள் பார்வையில் என்ன இருக்கிறது என்று அப்போதும் அவனுக்கு புரிய வில்லை.
கண்மணி வீட்டுக்கு சென்றதும் அவளுக்கு என்று தனி அறை கொடுக்கப் பட்டது. எல்லாரும் நன்றாக தான் பேசினார்கள். உமா அவளுடனே தான் பேசிக் கொண்டிருந்தாள்.
“என்ன மா வேணும்? ஏதாவது கேளு செஞ்சு தரேன்”, என்று கோதை கெஞ்சினாள்.
அவளுக்கு நகைகள், புடவைகள் என அன்றே வாங்கிக் குவித்தார் ராதாகிருஷ்ணன். பிறக்க போகும் குழந்தைக்கும் எல்லாம் வாங்கினார். அருணும் அவளிடம் அன்பாக பேசினான். அவர்கள் எல்லாம் இயல்பாக இருந்தாலும் கண்மணிக்கு அங்கே இருப்பது முள் மேல் இருப்பது போல தான் இருந்தது.
சிவன் வீட்டிலும் கருப்பட்டி வீட்டிலும் அவள் அவளாக இருப்பாள். அங்கே ஒரு உயிர்ப்பு அவளுக்கு இருக்கும். ஆனால் இங்கோ அவளால் இயல்பாக இருக்க முடிய வில்லை. இங்கிருந்து ஓடி விட வேண்டும் போல இருந்தது. ஆனால் அப்படிச் செய்தால் அனைவருக்கும் வருத்தத்தை தரும் என்பதால் அமைதியாக இருந்தாள்.
கூடவே கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிறைப் பார்க்கும் போது அதைக் கட்டியவனின் நினைவு வேறு வந்தது. அவனுடைய அக்கறை வேண்டும் போல இருந்தது. ஆனால் இவ்வளவு பெரிய வீட்டுக்கு அவன் வர மாட்டான் என்று தெரியும்.
ஒரு போனாவது பண்ண மாட்டானா என்ற ஏக்கம் வந்தது. சிவா அழைத்தால் கூட நன்றாக இருக்கும் போல இருந்தது.
அதே நேரம் கருப்பட்டியும் என்னவோ போல தான் அமர்ந்திருந்தான். அவனுக்கு இன்னுமே திருமணம் முடிந்ததை நம்ப முடிய வில்லை. அவன் திருமணம் சாதாரண திருமணம் இல்லை என்றாலும் திருமணம் முடிந்த அன்றே மனைவியைப் பிரிந்து இருப்பது கஷ்டமாக இருந்தது. அவள் அங்கே எப்படி இருப்பாளோ என்று கவலை கொண்டான்.
அவன் அருகே திண்ணையில் வந்து அமர்ந்த சிவன் “என்ன டா யோசனை எல்லாம் பலமா இருக்கு?”, என்று கேட்டான்.
“அது வந்து டா….”
“என்ன கண்மணி நினைப்பா?”
“ம்ம்”
“போய் பாத்துட்டு வரியா?”
“அங்க போக எல்லாம் இப்போதைக்கு மனசுல தெம்பு இல்லை மச்சி. அவங்க பெரிய இடம்”
“அதுவும் சரி தான். அங்க போனா நாம தனியா தெரிவோம். சரி கண்மணியை இங்கயே கூட்டிட்டு வந்துருவோமா?”
“அப்படி தான் தோணுது. ஆனா அவ என்ன நினைப்பான்னு தெரியலை. அது மட்டுமில்லாம அவங்க அப்பா போகும் போதே குழந்தை பிறந்த பிறகு தான் மகளை அனுப்புவேன்னு சொல்லிட்டார். அது வரைக்கும் அவளைப் பாக்காம….”
“எனக்கு புரியுது டா. எனக்கும் என்ன செய்யன்னு தெரியலை”
“சரி என்னை விடு. நீ என்ன முடிவு பண்ணிருக்க?”
“என்ன?”
“உன் கல்யாணம் பத்தி… உமா பத்தி”
“என் கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசியம்? முதல்ல மதி கல்யாணம் முடியட்டும்”
“ரெண்டாவது கேள்வி கேட்டேனே? உமா பத்தி என்ன முடிவு பண்ணிருக்க?”
“அவளைப் பத்தி முடிவு பண்ண என்ன இருக்கு?”
“அவ உன்னை விரும்புறா டா. இப்பவும் அவ காதலை நீ சந்தேகப் படுறியா?”
“இல்லை, எனக்காக சாப்பாடு கூட இல்லாம உயிரை விடத் துணிஞ்சவளை இதுக்கு மேல எப்படி டா சந்தேகப் பட? அதான் அவ காதலை தெள்ளத் தெளிவா உணர்த்திட்டாள்ல?”
“அப்புறம் என்ன? அவ கிட்ட பேசு”
“அதெல்லாம் வேண்டாம் டா. அவளுக்கு எல்லாம் நான் மேட்சே ஆக மாட்டேன். அவங்க பழக்க வழக்கம் வேற, நம்மளோடது வேற. அவங்க கூட எல்லாம் என்னால ஒட்ட முடியாது டா. அது மட்டுமில்லாம இப்ப அவளோட கண்ணுல என் மேல காதலே இல்லை. என்னோட பேச்சு அவளுக்குள்ள வெறுப்பை உண்டாக்கிருக்கும். அதுவே நல்லது தான். அவளுக்கு வேற நல்ல வாழ்க்கை அமையும். அது மட்டுமில்லாம எங்க அம்மாக்கு இளா கல்யாணத்துல இருந்து நான் லவ் பண்ணிருவேனோன்னு பயம். அம்மா மனசுல இருக்குற காயம் மறையனும்னா என் கல்யாணம் அவங்க விருப்பப் படி நடக்கணும். நடக்குறது நடக்கட்டும். விடு”, என்று அந்த பேச்சை முடித்துக் கொண்டான்.