“அப்பாடி வந்துட்டியா? மூணாவது தடவை சோறு கேட்டா ஏதாவது தப்பா நினைப்பாங்களோன்னு பயமா இருந்துச்சு. இப்ப உனக்கு வைக்கும் போது எனக்கும் வைப்பாங்கல்ல?”, என்று நித்யா சொல்ல அவளை முறைத்த படி அமர்ந்தாள் உமா.
“என்ன டி சூடா இருக்க?”, என்று கேட்டாள் நிஷா.
“வரும் போது ரெண்டு இன்ஸிடெண்ட் நடந்துருச்சு. கொஞ்சம் அவமானமா போச்சு”, என்று உமா சோகமாக சொல்ல “என்ன டி?”, என்று ஆர்வமாக கேட்டாள் தனா.
“நிஷா கால் பண்ணினதும் பாட்டு ஒடுச்சா. எல்லாரும் ஒரு மார்கமா திரும்பி பாத்தாங்க“
“ஹா ஹா, எத்தனை தடவை சொல்லிருக்கேன், அந்த பாட்டை மாத்து மாத்துன்னு? எல்லாரும் சிரிச்சாங்களா?”, என்று சந்தோஷமாக கேட்டாள் நிஷா.
“சரி இன்னொரு விஸயம் என்ன?”, என்று கேட்டாள் நித்யா.
“எல்லாரும் ஒரு மாதிரி பாக்குறாங்கன்னு வேகமா வந்தேனா வாழைப் பழத் தோல்ல காலை வச்சு வழுக்கி விழப் பாத்தேன்”
“விழுந்துட்டியா?”
“இல்லை டி, அப்ப ஒருத்தன் வந்து பிடிச்சிட்டான். இல்லைன்னா இன்னைக்கு என் மானமே போயிருக்கும்”
“யாரு டி அது? ஐயோ இந்த சீனைப் பாக்காம மிஸ் பண்ணிட்டோமே? டச்சிங் டச்சிங்கா?”, என்று கேட்டாள் நித்யா.
“கிட்டத்தட்ட கட்டிப் பிடிச்ச மாதிரி தான்”
“வாவ், அப்புறம் என்ன ஆச்சு? அவன் உன்னை ஆர்வமா பாத்துருப்பான். நீ முறைச்சு பாத்துருப்ப? கட்டிப் பிடிச்சதுக்கு…. சாரி சாரி…. தாங்கிப் பிடிச்சதுக்கு தேங்க்ஸ் சொல்லாம முறைக்கிறீங்களேன்னு கேட்டுருப்பான்? நீ உடனே நானா உன்னை பிடிக்கச் சொன்னேன்னு கேட்டுருப்ப? இது தானே நடந்தது?”, என்று கேட்டாள் தனா.
“இல்லை டி, நான் தேங்க்ஸ் சொன்னேன். பரவால்ல. பாத்துப் போங்கன்னு சொல்லிட்டு போய்ட்டான். போகும் போது அந்த வாழைப் பழத் தோலை குப்பைத் தொட்டில போட்டுட்டு வேற போறான் டி”
“இப்படி ஒரு கேரெக்டர் நம்ம லிஸ்ட்லே இல்லையே? உன்னைப் பாத்து வழிஞ்சவங்க தானே டி அதிகம்?”, என்று கேட்டாள் நிஷா.
“இப்ப அதா முக்கியம்? கீழே விழாம தப்பிச்சது தான் முக்கியம்”, என்றாள் உமா.
“எங்களுக்கு முக்கியம் அது இல்லை? உன்னைப் பாத்து ஒருத்தன் எப்படி வழியாம உன்னைக் கண்டுக்காம போகலாம்? எங்களுக்கு அவனைப் பாத்தே ஆகணும்? நம்ம போட்டோ கிராபர் கிட்ட சொல்லி அவன் கூட ஒரு போட்டோ வேற எடுக்கணும்”, என்று நித்யா சொல்ல அவளை ஆன மட்டும் முறைத்தாள் உமா. இதை எல்லாம் அவர்கள் பின்னே நின்று சிரித்த படி சிவன் கேட்டுக் கொண்டிருந்தான். அப்போது தான் அவளது பெயர் உமா என்றதும் அவனுக்கு தெரிந்தது.
ஒரு வழியாக அவர்கள் சாப்பிட்டு விட்டு கிளம்புவதற்குள் ஒரு மணி நேரம் கடந்து விட்டது. அனிதா குடும்பம் மதுரையில் பணக்காரக் குடும்பம் என்பதால் சாப்பாடு விதவிதமாக இருந்தது அனைத்தையும் ஒரு கை பார்த்தார்கள் தோழிகள் நால்வரும். பின் அனிதாவின் அருகே சென்று அமர்ந்து கொண்டார்கள்.
நடந்த விஷயங்களை அனிதாவிடமும் நிஷா சொல்ல அவளும் சேர்ந்து உமாவைக் கிண்டல் செய்தாள். “அதானே, அதிசயமாவுல இருக்கு? நம்ம உமாவை ஒருத்தன் நின்னு ரசிக்காம போனானா?”, என்று கேட்க உமாவுக்கே ஒரு சிறு சலனம்.
முதலில் அவள் அப்படி நினைக்க வில்லை தான். ஆனால் மீண்டும் மீண்டும் தோழிகள் அனைவரும் அதையே சொல்லவும் “அவன் பாக்க முடியாத அளவுக்கு மோசாவா இருக்கோம்? அப்புறம் ஏன் அப்படி கண்டுக்காம போனான்?”, என்ற எண்ணம் அவளுக்கே வந்தது.
ஒரு வழியாக மாப்பிள்ளை வீட்டினர் வந்ததும் நிச்சய விழா ஆரம்பமானது.
அனிதாவை அவளது தோழிகள் நால்வரும் சேர்ந்து அழைத்து வந்தனர். அப்போது இறங்கி வரும் மணப்பெண்ணை வீடியோ எடுப்பதற்காக லென்ஸை சரி செய்த சிவனின் கண்ணில் மிக அருகில் விழுந்தது உமாவின் பிம்பம். அந்த கூட்டத்தில் அவள் மட்டுமே அழகின் உச்சத்தில் இருப்பது போல இருந்தது. அவளிடம் இருந்து பார்வையை அவனால் எடுக்கவே முடிய வில்லை.
இது வரை அவன் இப்படி இந்த பெண்களையும் ஆர்வமாக இல்லை, அத்தியாவசியத்துக்கு கூட பார்த்ததில்லை. அவன் குடும்ப சூழ்நிலை வேறு எதுவும் யோசிக்க விட வில்லை. இப்போதோ முதல் முறையாக அவளை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் போல ஒரு எண்ணம் அவனை அறியாமலே உருவானது.
மணப்பெண் மணமகன் அருகே அமர வைக்கப் பட்ட பின்னர் நடப்புக்கு வந்தவன் அவர்களை போக்கஸ் செய்தான். ஆனாலும் அடிக்கடி அவன் கண்கள் உமா புறமும் சென்றது. கேமரா வைத்திருப்பதால் அவன் பார்வையை யாரும் உணரவும் இல்லை.
“இவன் தான் போட்டோ கிராபரா?”, என்று ஒரு நொடி எண்ணிய உமா அதன் பிறகு தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தாள். ஒரு வழியாக நிச்சயதார்த்தம் நல்ல படியாக முடிந்தது. சிவனும் ரிலாக்ஸாக ஒரு சேரில் சென்று அமர்ந்தான்.
அனிதா மாப்பிள்ளை வீட்டினருடன் பேசிக் கொண்டிருக்க தோழிகள் நால்வரும் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார்கள்.
“ஏய் உமா, உன்னைத் தாங்கிப் பிடிச்சவன் எங்க டி இருக்கான்? அவனை எங்களுக்கு காட்டேன். ஒரு குருப் போட்டோ எடுக்கணும்”, என்றாள் நிஷா.
“ஆமா டி, போட்டோ கிராபர் வேற சும்மா தான் இருக்கார். அவன் கூட எடுக்கலைன்னாலும் நம்ம எல்லாரும் போய் எடுப்போம்”, என்றாள் தனா.
“அந்த ஆளே அந்த போட்டோகிராபர் தான் டி”, என்று உமா மெல்லிய குரலில் சொல்ல “என்னது?”, என்று மூவரும் ஒரு சேர அதிர்ச்சியாக கேட்டனர்.
“ஆமா டி, அவர் தான்”, என்றாள் உமா. மற்ற மூவரும் அவனைப் பார்த்தார்கள். அங்கிருந்த எந்த பெண்களையும் நிமிர்ந்து பார்க்காமல் அவன் தன்னுடைய போனைப் பார்த்துக் கொண்டிருக்க அவர்களும் அவனையே பார்த்தார்கள்.
“ஐயோ விடுங்க டி, நான் விழப் போனேன். அவர் பிடிச்சார். அதுக்கப்புறம் இவ்வளவு பேசணுமா?”, என்று உமா கேட்க “சரி சரி விட்டுறலாம். ஆனா இப்ப சில போட்டோஸ் மட்டும் எடுப்போம்”, என்று சொன்ன தனா அனிதாவை அழைத்தாள்.
பேசிக் கொண்டிருந்த பெண்ணிடம் “ஒரு நிமிஷம்”, என்று சொல்லி விட்டு தோழிகள் அருகே வந்த அனிதா “ரொம்ப தேங்க்ஸ் டி கூப்பிட்டதுக்கு. அந்த லேடி மாப்பிள்ளைக்கு அத்தையாம். சரி மொக்கை. எப்படி டா கழண்டு வரதுன்னு யோசிச்சேன்”, என்றாள்.
“இவ்வளவு தானா? வாங்க”, என்று சொல்லி அவர்களை அழைத்துச் சென்ற அனிதா சிவன் அருகே சென்று “அண்ணா”, என்று அழைத்தாள்.
அவனும் சட்டென்று தங்கைகளின் நினைவில் “சொல்லு மா”, என்று சொல்லி விட்டு சட்டென்று நாக்கைக் கடித்து “சொல்லுங்க”, என்றான். இதை அனைவரும் கவனித்தார்கள்.
பின் அதை பெரியதாக எடுக்காமல் “இவங்க என்னோட பிரண்ட்ஸ். கொஞ்சம் போட்டோ எடுக்கணும்”, என்று அனிதா சொன்னதும் அவர்கள் ஐவரையும் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தான்.
“ஏய் நம்ம மட்டும் தனியா எடுத்துட்டு இருக்கோம்? மாப்பிளை சார் அனிதாவையே பாத்துட்டு இருக்கார் டி. அவரையும் கூப்பிடுவோம்”, என்றாள் தனா.
அனைவரும் ரஞ்சித்தை திரும்பிப் பார்க்க அவன் கண்கள் அனிதாவையே நோட்டம் விட்டது. அவன் கண்கள் எதுவோ பேசுவது போல இருக்க “நீங்க எடுங்க டி, இதோ வரேன்”, என்று சொல்லி விட்டு அனிதா அவனை நோக்கிச் சென்றாள்.
“நைசா கழண்டு கிட்டா டி. நாம வேற போஸ் கொடுப்போம்”, என்று சொன்ன நித்யா வேறு போஸ் கொடுக்க மற்றவர்களும் அதைப் போல செய்தார்கள். சிவனும் அதிகமாக போட்டோக்களை எடுத்து தள்ளினான். லென்சுக்குள் உமாவை சைட் அடித்த உண்மை அவனுக்கு மட்டுமே தெரியும்.
ரஞ்சித் அருகே சென்ற அனிதாவோ “ஏதாவது வேணுமா?”, என்று கேட்டாள்.
“வேண்டாம். ஆனா தேங்க்ஸ்”, என்று சொல்லி புன்னகைத்தான் ரஞ்சித்.
“எதுக்கு தேங்க்ஸ்?”
“இல்லை நீ உன் பிரண்ட்ஸ் கூட இருந்தியா? நம்ம கிட்ட வந்து பேசினா நல்லா இருக்கும்னு தோணுச்சு. நான் நினைச்ச உடனே வந்துட்ட? அதுக்கு தான் தேங்க்ஸ். ஆனா உனக்கு எப்படி நான் நினைச்சது தெரியும்? நான் கூப்பிடாமலே எதுக்கு இங்க வரணும்னு தோணுச்சு?”, என்று அவன் கேட்க சிவந்த முகத்தை மறைத்த படி “உங்க கண்ணு ஏதோ பேசின மாதிரி இருந்துச்சு, அதான்”, என்று பதில் கொடுத்தாள். அதைக் கேட்டு ரஞ்சித் கண்கள் ஒளிர்ந்தது.
அவர்கள் இருவரும் அங்கே ரகசியம் பேச பெண்களை பல போட்டோக்களை எடுத்து தள்ளிய சிவனுக்கு அப்போது தான் பெண் மாப்பிள்ளையை தனியே போட்டோ எடுக்க வில்லை என்ற உண்மையும் வெளியே இருந்த தோட்டத்தின் அழகும் நினைவு வந்தது. அதனால் அங்கிருந்து செல்லப் பார்த்தான்.