Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

24. கண்மணி - அன்பின் முகவரி அவள்

அன்பின் முகவரி அவள் – 29

அன்பு – 29

“என்ன கவி உன் பிரச்சனை??” என ஊடுருவும் பார்வையோடு அவளைப் பார்த்தபடி, கைகளைக் கட்டிக்கொண்டு பிரபஞ்சன் அப்படியே நிற்க,



Advertisement

அவன் பார்வையை சந்திக்க முடியாமல், முகத்தை வேறு பக்கம் திருப்பிய கவி,

Advertisement

“எனக்கென்ன பிரச்சனை?? நான் நல்லாதான் இருக்கேன்” என்று சமாளித்தாள்.

Advertisement

“நான் பேசுனா என்னைப்பார்த்து பதில் சொல்லு கவி!!!” என்று அழுத்தமாக உரைத்து, அவளைத் தன்னைப் பார்க்க வைத்தவன்,

Advertisement

“அன்னைக்கு மது ஸ்கேன் பண்ணிட்டு வந்த பின்னாடி இருந்து, உன்கிட்ட ஏதோ ஒரு மாற்றம்.. என்னை அவாய்ட் பண்ற!!! இல்லைன்னு மட்டும் சொல்லாத!!! உன்னை எனக்குத் தெரியும்.. ” என்று அவன் சரியாய் குறிப்பிட்டுக் கேட்க,

இந்த அளவிற்கு தன்னை இவன் கவனிக்கிறானா என்று ஆச்சர்யம் கொண்ட கவி,

முன்பே மது பேசியதில் சற்று தெளிவாய் யோசிக்கத் தொடங்கியிருக்க,

தானே மனதில் போட்டு அழுத்துவதை விட பிரபஞ்சனிடமே அனைத்தையும் பகிர்ந்து கொண்டு இதற்கு ஒரு முடிவு கட்டலாம் என்று தீர்மானித்தவள், ஒரு பெருமூச்சுடன் அவன் பக்கம் திரும்பி, நன்றாக அவனைப் பார்க்குமாறு நின்று,

“கொஞ்சம் பேசணும் பிரபா!!!”

“கொஞ்சம் இல்லை.. கொஞ்சம் நிறையவே!!!”

“எங்க அப்பா என்கிட்ட வந்து, உன்கூட பழகாதன்னு சொல்ற வரைக்குமே எனக்கு உன்மேல காதல் எல்லாம் இல்லை பிரபா!!! அவர் எங்க நான் உன்னை காதலிச்சிருவேனோன்னு பயந்து உன்கிட்ட என்னை பேச விடாம தடுத்தது தான், என்னை அப்படியும் யோசிக்க வைச்சது.. நீயில்லாம என்னால இருக்க முடியும்னு தோணலை.. அப்போ அது லவ் தானன்னு நான் நினைச்சுகிட்டேன்..  அதைப்பத்தி அதுக்கு மேல யோசிக்கிற பக்குவமோ, வயசோ எனக்கு இல்லை அப்போ.. என்னோட அவசரபுத்தியால என்னோட சேர்த்து உன் வாழ்க்கையும் அழிச்சிட்டேன்.. அந்த குற்ற உணர்ச்சி எனக்கு இப்போ வரைக்குமே இருக்கு.. “

“என் வாழ்க்கை!! அதைப்பத்தி முன்னாடியே உன்கிட்ட சொல்லிட்டேன்.. எப்படியெல்லாம் ஒரு பொண்ணுக்கு கல்யாண வாழ்க்கை அமையக்கூடாதோ அந்த மாதிரி ஒரு வாழ்க்கையைத் தான் கடவுள் எனக்கு கொடுத்தாரு.. ” என சிறு விரக்தியுடன் சொல்லியவள்,

“நான் உன்கிட்ட சொன்னது எல்லாமே ரொம்ப கம்மி பிரபா!!! என்னால இன்னைக்கு வரைக்கும் நிம்மதியா ஒரு நாள் கூட தூங்க முடிஞ்சதில்லை.. அவனோட வக்கிரமான பேச்சு இன்னும் என் காதுக்குள்ள கேட்டுட்டே என்னை தினமும் கொல்லாம கொல்லுது!!!  என் உடம்புல இன்னும் நான் அனுபவிச்ச கொடுமைகளுக்கு சாட்சியா இருக்க தழும்புகள், அவ்வளவு சீக்கிரம் என்னை எதையும் மறக்கவும் விட மாட்டேங்குது!!!”

“உண்மையா இன்னும் ஒரு கல்யாண வாழ்க்கைக்கு நான் தயாரவே இல்லை பிரபா!!!” இதற்கு மேல் எப்படி வெளிப்படையாக சொல்வது எனத் தெரியாமல் ஒரு நொடி தடுமாற,

“என்மேல நம்பிக்கை இல்லையா கவி???” என ஆற்றாமையுடன் கேட்டுவிட்டான் பிரபா,

“ப்ச்!! அது இல்லை டா.. நீ கண்டிப்பா என்னை நல்லாப் பார்த்துப்ப!! அதுல எனக்கு சந்தேகமே இல்லை.. ஆனா.. நான்.. என்னால உனக்கு எந்த சந்தோஷத்தையும் தர முடியும்னு தோணலை பிரபா!!! கண்ணை மூடினாலே அந்த அரக்கன் என்னைப் போட்டு படுத்தின கொடுமை தான் நியாபகம் வருது.. உண்மையா செக்**ஸ் அப்படின்ற வார்த்தையைக் கேட்டாலே எனக்கு அலர்ஜியா இருக்கு பிரபா!! புருஷன் பொண்டாட்டிக்கு இடையில இருக்க தாம்பத்யம் ஒரு அழகான உணர்வு, ஆனா எனக்கு நடந்த கொடூரம், அதை அருவெறுப்பா மாத்திருச்சு!!! என்னால அந்த எண்ணத்துல இருந்து வெளிவர முடியும்னு தோணலை பிரபா!! பிளீஸ் புரிஞ்சுக்கோ!!!” என்று மனம் திறந்து அவள் தன்னுடைய பயத்தை அவனிடம் பகிர,

பிரபாவின் உடல் இறுகிவிட்டது!!!

தன் கவி இத்தனை மனப்போரட்டத்திற்கு உள்ளாவதற்கு காரணமான அந்த ஜெயசிம்மனை மீண்டும் கொன்று புதைக்கும் ஆவேசம் எழ, கைகளை மடக்கி தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன்,

“இது மட்டும் தான் வாழ்க்கையா கவி?” என்று அவளுக்கு புரிய வைக்க நினைக்க,

“பிரபா பிளீஸ்!! இது மட்டுமே வாழ்க்கை இல்லை.. ஆனா இதுவும் தான் வாழ்க்கை..  என்னால நீ நிறைய அனுபவிச்சுட்ட பிரபா!! இனியாச்சும் நீ எல்லா சந்தோஷத்தோட நல்லா இருக்கணும்!!!” என்று கவி முந்திக்கொண்டாள்.

பிரபா அலுப்புடன் தலையை இடவலமாக அசைத்துக்கொண்டவன்,

“இவளோ பேசுற உனக்கு, நீ என் கூட இல்லாத வாழ்க்கை தான் நரகம்னு புரியலையா இன்னும்??” என இவள் புரிந்து கொள்ளவே மாட்டாளா எனும் ஆதங்கத்துடன் அவன் கேட்க,

“ப்ச்!! புரியுது டா!! புரிஞ்சதுனால தான் உன்கிட்ட இவளோ பேசறேன்.. எனக்கு நிஜமா என்ன பண்ணன்னு தெரியலை இப்போ!!  அது மட்டும் இல்லாம, இன்னொரு பிரச்சனை வேற இருக்கு!!!” என கவி தொடங்க,

இன்னும் என்ன என பிரபா அயர்ந்து விட்டான்.

“ஃபர்ஸ்ட் டைம், அவன் என்னை மிதிச்சு எனக்கு அபார்ட் ஆச்சுல.. அதிலேயே கர்ப்பப்பை கொஞ்சம் வீக்கா தான் இருந்திருக்கு.. அதுல இருந்து ரெக்கவர் ஆக டைம் கூட கொடுக்காம அகைன் அம்மு பார்ம் ஆனதுல ரொம்பவே வீக் ஆகிடுச்சு..  அதுவும் அம்மு பிறக்கும் போது நல்ல வெய்ட்!!! அதுவே, அடுத்து பேபி எல்லாம் பாசிபிலே இல்லைன்னு அப்போவே டாக்டர் சொல்லிட்டாங்க…” என்று சொல்லியவள் தன் துக்கத்தை தொண்டைக்குள் முழுங்கிக் கொள்ள,

அதை பார்த்திருந்த பிரபஞ்சனுக்கு, எத்தனை துன்பத்தை தான் இந்தப்பெண் தாங்குவாள் என ஆற்றாமையாக இருந்தது.

“உனக்கு குழந்தைன்னா ரொம்ப பிடிக்கும்ல.. மது அக்காவோட குழந்தையை நீ ரொம்ப ஆவலா எதிர்பார்த்துட்டு இருக்க தான பிரபா??  ஆனா என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, உன்னோட அந்த ஆசையைக் கூட இந்த பாவியால நிறைவேத்தி வைக்க முடியாது டா!! புரிஞ்சுக்கோ.. நான் வேண்டாம் உனக்கு!!!” என்றவள், கடைசியில் தன்னையும் மீறி அழுது விட,

தனக்காக குழந்தை அளவிற்கு யோசித்திருக்கிறாள் என்றால், மனதளவில் கவியும் தன்னுடன் வாழ தன்னைத் தயார்படுத்த முயல்கிறாள், கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில் அவள் போராடித் தவிக்கிறாள் என சரியாக அவள் மனநிலையை கணித்து விட்ட பிரபா, சிறிதும் தயங்காமல் பட்டென அவளை அணைத்துக்கொள்ள,

அவனின் அதிரடியில் உண்டான அதிர்ச்சியில் கவியின் கண்ணீர் கூட பட்டென நின்றுவிட்டது.

“பிரபா!!” என்று அவள் அதிர்ந்து விழிக்க,

“நான் கட்டிப்பிடிச்சிருக்கது உனக்கு அருவெறுப்பா இருக்கா??” என்றான் அவளை அணைத்தபடி,

“ப்ச்!! விடு பிரபா!!” என அவனின் அணைப்பில் இருந்து அவள் வெளிவர முயல,

தன் அணைப்பை மேலும் வலுவாக்கியவன்,

“நீ பதில் சொல்லு கவி!! உனக்கு நான் தொடுறது பிடிக்கலையா?? அருவெறுப்பா இருக்கா??” என அவன் பதில் வேண்டுமென உறுதியாக நிற்க,

அவன் அணைப்பில் ஒரு தாயின் கதகதப்பு தரும் பாதுகாப்பை மட்டுமே உணர்ந்த கவி,

இல்லை என்பதாய் தலையசைக்க, மெதுவாய் அவளிடம் இருந்து விலகியவன்,

“நீ சொன்ன மாதிரி, செக்**ஸ் வாழ்க்கையோட ஒரு பகுதி!!! எனக்கு ஆசாபாசம் எதுவும் இல்லைன்னு நான் சொல்லமாட்டேன்.. ஆனா எனக்கு அதுல கிடைக்கிற சந்தோஷத்தை விட உன்னோட அருகாமை கொடுக்குற நிம்மதி மட்டும் போதும் கவி!!”

“கிட்டத்தட்ட பல வருஷமா, அனாதையா வாழ்ந்துட்டு இருக்கேன் நான்.. தனிமை எவ்வளவு கொடுமைன்னு உனக்குப் புரியாது கவி!! நீ என்னை வேணாம்னு விட்டுட்டு போனா மறுபடியும் அந்த தனிமைக்குள்ள தான் தத்தளிக்கணும்!! அது வேண்டாம் எனக்கு!!!”

“தினமும் வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு வரப்போ, பிரபுன்னு ஆசையா ஓடி வந்து கட்டிப்பிடிக்கிற என் அம்மு வேண்டும் எனக்கு!!! தினமும் நைட் மொட்டைமாடியில நடை போடுறப்போ, கை கோர்த்து கூட வர என் கவி வேண்டும்!!! என் வெற்றியை பகிர்ந்துக்கவும், துக்கத்துல தோள் சாயவும் துணையா நீ வேண்டும் கவி எனக்கு!! இத்தனை வருஷமா என்னைத் துரத்திட்டு இருக்க தனிமையில இருந்து எனக்கு விடுதலை கொடு கவி பிளீஸ்!!!” என தன் மனதின் ஏக்கங்களை பிரபா அடுக்க, கவி பேச்சற்றுப் போய் அவனைப் பார்த்திருந்தாள்.

“உன் பயம் எனக்குப் புரியுது கவி!!! மலையேற்றத்துக்கு பயந்தா, அதோட முடிவுல இருக்க அழகான சூரிய உதயத்தைப் பார்க்க முடியாமையே போயிடும் கவி!!! என்னை நம்பி என் கூட வா!!! எப்பவும் உன்னைத் தனியா கஷ்டப்படவே விடமாட்டேன்.. உன் பயத்தை ரெண்டு பேரும் சேர்ந்தே ஃபேஸ் பண்ணுவோம்.. தவறா போன நம்ம வாழ்க்கையே சேர்ந்தே சரியாக்குவோம்!!! வா கவி பிளீஸ்!!!” என இதற்குமேலும் என்னைத் தவிக்க விடாதே என இறைஞ்சுதலாய்ப் பார்க்க,

கவிக்கும் தன் பயத்தை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு அவனுடன் வாழ்ந்து தான் பார்ப்போமே எனும் எண்ணம் சிறிதாய் முளைவிடத் தான் செய்தது.

ஆனாலும் சட்டென அப்படி முடிவெடுத்துவிட முடியாமல், இத்தனை நாளாய் அவளுக்குள் பூட்டி வைத்திருந்த பயம் வந்து தடை செய்ய,

“என..எனக்குக்.. க்கொ.. கொஞ்சம் டைம் வேண்டும்!! ” என திக்கித் திணறி இதை சொல்வதற்குள்ளே கவிக்கு அப்படி திணறிவிட்டது.

அவள் இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே பிரபாவிற்கு ஏதோ மலையைப் பிரட்டிவிட்டது போல் பெரிய சாதனையாகத் தெரிய,  சந்தோஷத்தில் நெஞ்சடைத்தது அவனுக்கு!!!!

“தேங்க் யூ!! தேங்க் யூ சோ மச் கவி!!!” என மீண்டும் அவன் மகிழ்ச்சியில் அவளை அணைத்துக்கொள்ள,

லேசாய் அதிர்ந்தாலும் பிரபாவின் மகிழ்ச்சி அவளுக்கும் சிறு புன்னகையை உண்டாக்கியது.

“ரொம்ப மாறிட்ட பிரபா!!!” என அவள் இன்பமாய் அலுத்துக்கொள்ள,

அதில் நன்றாகவே சிரித்த பிரபஞ்சன்,

“மாற்றம் ஒன்னு தானே மாறாதது கவி!!! நீ நானா மாறிட்ட!! சோ நான் நீயா மாறிட்டேன்.. ரெண்டு பேரும் அமைதியா வெய்ட் பண்ணிட்டே இருந்தா, காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடின்னு பாடிட்டு இருக்க வேண்டி தான்.. வேற வழி இல்லையே சோ மாறித்தான் ஆகணும்!!” என்று அவன் பேசப் பேச,

‘ நீயா பேசியது ‘ என்பது போல் அவனைத்தான் விழி விரித்து பார்த்தபடி ஆச்சரியத்தில் உறைந்தாள் கவி!!

அவளின் பார்வையைக் கண்டு,

“என்ன கவி?? அழகா இருக்கேனா??” என்று வேறு கேட்டு பிரபா கண்ணடிக்க,

“பிளீஸ் பிரபா!! இப்போவே நீயா இதுன்னு எனக்கு மயக்கம் வர மாதிரி இருக்கு!! ஒரு நாளைக்கு இவ்வளவு அதிர்ச்சி போதும்!!!” என கையெடுத்து கும்பிட்டுவிட்டாள் அவள்.

அவளின் பாவனையில் பிரபா வாய்விட்டு சிரிக்க, அந்த சிரிப்பு கவியையும் கொஞ்சம் கொஞ்சமாக தொற்றிக்கொண்டது.

 கிட்டத்தட்ட பல வருடங்கள் கழித்து, மனதார நிறைவான புன்னகை இருவரிடத்திலும்!!!!

இதே மகிழ்ச்சி கடைசி வரை தொடர வேண்டும் என வானில் இருந்த தேவதைகளும் அவர்களை அந்நேரம் வாழ்த்தி விட்டே கடந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!