“எனக்கு என் டாட் (Dad) தானே எல்லாம்? அவர் எப்படி என்னை விட்டுட்டு போவார்? என்னை அவர் மறந்துடுவாரா என்ன? இன்னைக்கு காலையிலே ஜாகிங் கிளம்பும் போது கூட சாயந்திரம் வந்து என்னை படத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னார். ஆனால் அந்த கண்ணாடிப் பெட்டிக்குள்ள ஜாலியா படுத்து தூங்கிட்டு இருக்கார்!! எல்லோரும் அவரை செத்துட்டதா சொல்லி அழுவுறாங்க. மம்மியை கட்டிப்புடிச்சு அழுவுறாங்க. மம்மியும் அழுவுறாங்க. ஆனால் எனக்கு என்னமோ அவர் சும்மா நடிக்கிறாரோனு தோணுது. இதோ இப்போ எழுந்து வந்து, “பிரின்சஸ் டார்லிங் பார்த்தியா நான் உன்னை ஏமாத்திட்டேன்”னு சொல்ல போறார். இது புரியாம எல்லோரும் நான் அழலை, குழந்தைக்கு அழக் கூட தெரியலைன்னு என்னை வந்து கட்டிப்பிடிச்சு அழுதுட்டு போறாங்க. சரியான லூசுங்க”
“சரி, மத்தவங்களுக்கு தான் இது புரியல, எங்க மம்மிக்கும் புரியல பாரேன்! அவங்க ஏன் இப்படி அழுது அழுது ஓய்ஞ்சு போறாங்க? ஒருவேளை உண்மையிலேயே அப்பா என்னை விட்டுட்டு போயிட்டாரோ?! அப்படி மட்டும் ஆச்சு, நான் அவரை மன்னிக்கவே மாட்டேன். என்னை தனியா விட்டுட்டு போனவரை நினைச்சு நான் ஏன் அழனும்? மாட்டேன், அழ மாட்டேன்”
“ஆமா, இங்க அழுதுட்டு இருக்கிற இவங்களையெல்லாம் நான் இதுக்கு முன்ன பார்த்ததே இல்லையே? இவங்களை அப்பாவுக்கு தெரியுமானு கூட தெரியல? பின்ன இவங்க எல்லோரும் அழுவுறது நடிப்பா? பெரியப்பா, பெரியம்மா இருக்காங்க, அது தவிர சித்தி குடும்பம், மாமா குடும்பம், அப்புறம் அப்பாவோட பெஸ்ட் ஃப்ரெண்ட் டாக்டர் அங்கிள் ஃபேமிலி. இவங்களை தவிர வேற யாரையும் எனக்கு தெரியவும் இல்லை, அவங்க ஏன் அழுவுறாங்கனு புரியவும் இல்லை!!”
“எல்லோரும் என் பக்கத்துல வந்து என்னை தடவி தடவி பேசி, அழுது கடுப்பை கிளப்பும் போது அதிப்பா மட்டும் தான் என் பக்கத்துலேயே எதுவும் கேட்காம, பேசாம, அழாம நின்னுட்டு இருக்கான். அவனுக்கு தான் நான் என்ன நினைக்கிறேனு கரெக்டா தெரியும்”
“இன்னொருத்தன் இருக்கானே என் தம்பி! அவனே சரியான வேஸ்ட். அவனை நான் தான் இனிமே பொறுப்பா பார்த்துக்கனுமாம், எங்க மம்மியை பார்த்துக்கனுமாம். ஏன் எங்க மம்மிக்கு அவங்களை பார்த்துக்க தெரியாதா என்ன? எனக்கு அங்க நிக்கவே பிடிக்கலை. அங்கிருந்து ஓடி போயிடலாமானு இருந்துச்சு. அதிப்பா தான் என் கையை பிடிச்சு அமைதியா நிற்கச் சொன்னான்”
“இன்னும் அடுத்து என்னவெல்லாமோ செய்யச் சொன்னாங்க தெரியுமா ஷேடோ? தலையில அப்படியே ஜில் தண்ணியை ஊத்துனாங்க. அப்புறம் இடுப்புல ஒரு துண்டு கட்டி……”
“போச்சு, மம்மி கூப்பிடுறாங்க. நான் அப்புறமா வந்து மிச்ச கதையை சொல்றேன். ஒகே ஷேடோ…கேட்ச் யு லேட்டர்”
வித் லவ்
ரிபு
தட்டச்சு செய்துக் கொண்டிருந்த மின்னஞ்லை அனுப்பிவிட்டு கையிலிருந்த தன் சேம்சங் கேலக்சி எஸ்3 அலைபேசியை தலையணைக்குள் பதுக்கிய பத்து வயதான திரிபுரசுந்தரி அன்னையின் முன் சென்று நின்றாள். அங்கே அவள் அன்னை பாகீரதி கண்கலங்கியபடி உட்கார்ந்திருக்க, திரிபுரசுந்தரியின் தந்தை ஷண்முகநாதனின் மறைவு பற்றி துக்கம் விசாரிக்க சிலர் வந்திருந்தனர். அருகில் ஷண்முகநாதனின் நெருங்கிய நண்பரும் டாக்டருமான மகாலிங்கமும், அவர் மகன் அமிழ்தினியனும் அமர்ந்திருந்தனர். திரிபுரசுந்தரியின் தம்பி, அபினவ் ஒரு ஓரத்தில் விளையாட்டு வண்டியை ஓட்டி விளையாடிக்கொண்டிருந்தான்.
“தினம் விடிகாலையிலேயே வண்டி எடுத்துட்டு கிரவுண்டுக்கு போய் ஜாகிங் போவார். எப்புமே ரொம்ப பொறுமையா தான் வண்டி ஓட்டுவார். அவர் மேல தப்பு இருக்க வாய்ப்பேயில்லை. என்ன கெட்ட நேரமோ, யார் வந்து இடிச்சதுனே தெரியல?”
திரிபுரசுந்தரி உள்ளுக்குள் உச்சு கொட்டினாள். நேற்றிலிருந்து இந்த வசனத்தை அவள் பலமுறை கேட்டாயிற்று.
“போலீஸ் கம்பளைன்ட் கொடுத்தீங்களா?”
“கொடுத்தாச்சு. சி.சி.டி.வி கேமரா எதுவும் அந்த ஏரியாவுல இல்லாததால இடிச்சது யாருன்னு கண்டுபிடிக்க முடியல்லை. விடிகாலை நேரம் யாரும் பார்க்கவும் இல்லை. ரொம்ப பனி மூட்டமா இருந்திருக்குது. வண்டி வரதே இவருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. இவரும் கொஞ்சம் அசால்ட்டா ரோட்டை கிராஸ் செஞ்சு மறுப்பக்கம் போக பார்த்திருக்கார். வந்த வண்டி வேகமா வந்திருக்கும் போல. இடிச்சது காரா பைக்கானு கூட தெரியல. ஆனால் இடிச்சிட்டு திரும்பி பார்க்காம போயிருக்கான். அயோக்கிய பய!” பேசி முடிக்கும் போது மகாலிங்கத்தின் குரலும் உடைந்திருந்தது.
வந்திருந்தவர்களில் ஒரு அம்மாள் கையிலிருந்த கர்சிப்பை எடுத்து வராத கண்ணீரை துடைத்து விட்டுக்கொண்டு, திரிபுரசுந்தரியின் பக்கம் வந்தார்.
“சாமி! எப்படி இருக்க சாமி? புள்ளை முகமே வாடி போச்சு!! அய்யோ! கடவுளே உனக்கு கண்ணே இல்லையா? இந்த பச்ச மண்ணுக்கு இப்படி ஒரு நிலைமையா? இனிமே உங்களை யார் பார்த்துக்குவாங்க?” அவளை கட்டிபிடித்து அவர் அழுது தீர்க்க, திரிபுரசுந்தரி அவரிடமிருந்து விலகி ஓரடி பின்னால் நகர்ந்தாள்.
“கண்டிப்பா நீங்க பார்த்துக்க போறதில்லை”
அவளின் பதிலில் அந்த அம்மாள் அழுகையை நிறுத்தி அவளை உறைந்து பார்க்க, பாகீரதி பதறி விட்டார்.
“சுந்தரி! என்ன பேச்சு பேசுற?”
அதிர்ந்து கத்தும் தன் அன்னையை பொருட்படுத்தாது அந்த அம்மாளையும் அவருடன் வந்திருந்த மற்றவரையும் பார்த்து, “ஏன் எல்லாரும் வந்து திரும்ப திரும்ப எங்க டாட் செத்து போனதை பத்தி பேசி எங்க மம்மியை கஷ்டப்படுத்துறீங்க? அதை பத்தி பேசுனாலே அவங்க தான் அழறாங்கல? பின்ன ஏன் எல்லாரும் வந்து வந்து அதையே பேசுறீங்க?”
“பப்புமா! நீ சின்ன பொண்ணு! உனக்கு இதெல்லாம் புரியாது. பெரியவங்களை இப்படி மரியாதை இல்லாம பேசக்கூடாது. நீ உள்ள போ” மகாலிங்கம் திரிபுரசுந்தரியை விரைந்து அங்கிருந்து அனுப்ப முயன்றார். அவள் அங்கிருந்தால் மென்மேலும் என்னவெல்லாம் பேசுவாள் என்பது அவர் அறிந்ததே.
அவர்கள் கிளம்பியதும் பாகீரதியின் அழுகை வெடித்தது. மறைந்த போன தன் வாழ்க்கை துணையை நினைத்து அழுவதா, அல்லது யாருக்கும் கட்டுப்படாமல், பத்து வயதிலேயே, வயதிற்கு மீறி செயல்படும் தன் மகளை நினைத்து கவலைப்படுவதா என்று புரியாமல் அழுதார். மகாலிங்கம் அவரை சமாதானப்படுத்த முயன்று தோற்றார்.
“அம்மா! ரிபு மேல் தப்பு எதுவும் இல்லை. மறுபடியும் மறுபடியும் எல்லாரும் அவங்க அப்பாவை பத்தி பேசும்போது அவளுக்கு கஷ்டமா தானே இருக்கும்? நாம எல்லாரும் மனசுக்குள்ள வச்சிக்குவோம். அவ வெளிய சொல்லிட்டா” அமிழ்தினியன் திரிபுரசுந்தரிக்கு பரிந்து பேச, மகாலிங்கம் அவனை முறைத்தார்.
“இதோ வந்துட்டான் பெரிய மனுசன் அவன் ஃப்ரெண்ட்டை சப்போர்ட் பண்ணிட்டு”
அமிழ்தினியன் திரிபுரசுந்தரியை விட எட்டு வயது பெரியவன். திரிபுரசுந்தரிக்கு அவன் அதிப்பா. பேச தெரிந்த நாள் முதல் அப்படி கூப்பிட்டே பழக்கம்.
திரிபுரசுந்தரியின் தந்தை ஷண்முகநாதனும், மகாலிங்கமும் சிறு வயது முதல் நண்பர்கள். பள்ளி பருவம், வேலை, திருமணம், வீடு, வாசல், குழந்தைகள் என எல்லா கால நிலைகளிலும் ஒன்றாகவே பயணித்தவர்கள். எப்பொழுதும் ஒன்றாகவே சுற்றும் இவர்களை பார்த்து இவர்களை பெற்றவர்களுக்கே சந்தேகம் வந்துவிட்டது (?). திருமணத்திற்கு பின்தான் அவர்கள் சந்தேகம் தெளிந்தது?! திருமணத்திற்கு பின் இருவரின் மனைவிமாரும் உற்ற தோழிகளாகவும், அவர்களுக்கு பிறந்த குழந்தைகளான அமிழ்தினியன், திரிபுரசுந்தரி, அபினவ் மூவரும் தோழமையுடன் வளர்வது தானே உலக வழக்கம்?! அந்த உலக வழக்கத்தை கடைப்பிடிக்க அவர்களும் தவறவில்லை!
திரிபுரசுந்தரி அவள் தந்தையின் லிட்டில் பிரின்சஸ். ஷண்முகநாதன் தன் மகளை தலையில் வைத்து கொண்டாடினார் என்றால் அது வெறும் சொல்லாடல் இல்லை. உண்மையிலேயே அவர் மகளை தரையில் கால் பாவாமல் பார்த்துக் கொண்டார். சிறிது வளர்ந்ததும் மகள் கஷ்டபடக் கூடாதென்று கார் வாங்கினார். மகளுக்கென்று தனியறை அமைத்து கொடுத்தார். எல்லாவற்றிக்கும் முத்தாய்ப்பாய் அவளது பத்தாவது பிறந்தநாளுக்கு மகளுக்கென்று ஒரு அலைபேசி வாங்கிக் கொடுத்தார்.
அவள் கேட்கும் முன்னல்ல, அவள் ஒரு பொருளை பார்த்தாலே வாங்கிக் கொடுத்து விடுவார். அவள் சைனா பொம்மை கேட்டால் சைனாவுக்கே சென்று பொம்மை வாங்கி வருவதும், நிலவை பார்த்து சாப்பிட விரும்பினால் பிளைட்டில் அவளை அழைத்துச் சென்று நிலவின் அருகே சென்று காட்டுவதும் என்று அந்த லிட்டில் பிரின்சஸ் தந்தையின் அட்டகாசம் தாங்காது. இப்படியெல்லாம் செய்து விட்டு வளர்ந்த பின் பிள்ளைக்கு பொறுப்பில்லை, எந்த வேலையும் தெரியவில்லை, விட்டுக்கொடுக்க தெரியவில்லை என்று புலம்பி என்ன பிரயோஜனம்?
பாகீரதியும் பல முறை ஷன்முகனாதனிடம் சொல்லி பார்த்து விட்டார். அது என்னவோ மகள் என்று வந்துவிட்டால் பெரும்பாலும் தந்தைகள் “கண்மணித் தாமரை கால் கொண்டு நடந்தால் கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம்?” என்று கண்களில் நீர் பூசிக்கொண்டு உணர்ச்சிவயப்படுகிறார்களே தவிர, நிதர்சனத்தை புரிந்துக் கொள்வதில்லை. அதுவும் உச்சகட்டமாய் குழந்தைக்கு அவர் அலைபேசி வாங்கிக் கொடுக்கவும் இதன் முடிவு என்னவாக இருக்கும் என்று பாகீரதி அஞ்சினார்.
திரிபுரசுந்தரி குறை மாதத்தில் பிறந்த குழந்தை. பிரசவத்தில் சிக்கல் ஏற்பட, குழந்தை பிழைப்பதே அரிது என்று மருத்துவர்கள் கைவிரிக்க, குலதெய்வமான பால திரிபுரசுந்தரி அம்மனை சரணடைந்து பெண் பிறந்தால் அந்த தாய் பெயரையே வைப்பதாக ஷண்முகநாதன் வேண்டிக்கொண்டார். இதுவே வரலாற்று சிறப்புமிக்க(?!) இப்பெயரை அவள் பெறக் காரணமாகும்
வளர்ந்த பின் “டாட்! எனக்கு இந்த பேரே பிடிக்கலை. ஃப்ரெண்ட்ஸ் கிண்டல் பண்றாங்க” என்று மகள் அழுது கொண்டு வந்து நிற்க, தெய்வ குற்றம் ஆகி விடும் என்று அதை மட்டும் மாற்ற மறுத்துவிட்டார். அதன் காரணமே அவள் பெயர் ரிபுவாக சுருங்கியது. யாரேனும் திரிபுரசுந்தரி என்றோ, சுந்தரி என்றோ கூப்பிட்டால் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வருவாள்.
சுந்தரிக்கு பின் இரண்டு வருடம் கழித்து பிறந்தவன் அபினவ். தனக்கு மட்டும் நீட்டி முழக்கி பெயர் வைத்துவிட்டு அவனுக்கு எப்படி ஸ்டைல்லாக பெயர் வைக்கலாம் என்று சண்டை போட்டவள், மண்டையை உடைத்து யோசித்து தம்பியின் பெயரை திருநீலகண்டன், குழந்தை சாமி இப்படி ஏதோ ஒன்றாக மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விட, எப்படியோ அவளை சமாதானம் செய்து அவளின் வேண்டுகோளுக்கு முற்றுபுள்ளி வைத்தனர்.
அபினவ் சுந்தரிக்கு நேரெதிர். அமைதியான குழந்தை. சுற்றி என்ன நடந்தாலும் தானுண்டு தன் விளையாட்டு உண்டு என்று அமைதியாய் ஒரேயிடத்தில் அமர்ந்து விடுவான். பல சமயங்களில் திரிபுரசுந்தரிக்கு மூத்தவன் போல் நடந்துக் கொள்வான்.
திரிபுரசுந்தரிக்கு பத்து வயதும், அபினவ்க்கு எட்டு வயதுமே ஆன நிலையில், பாசம் பொழிந்த அவர்கள் தந்தையின் இழப்பு, கணிக்க முடியாத பெருங் கருந்துளையை அந்த வீட்டில் உருவாக்கியிருந்தது. அந்த கருந்துளைக்குள் சிறிது சிறிதாக அமிழ்ந்து போய்க் கொண்டிருந்த திரிபுரசுந்தரிக்கு வெளியே வரும் உந்துவிசை சக்தியை சாட்சாத் அந்த பால திரிபுரசுந்திரியே அருள வேண்டும்…….
கட்டிக்கரும்பும் அமிழ்து; கனிஅமிழ்து; முல்லை யரும்பமிழ்து; தேனமிழ்து; அப்பம் அமிழ்து; குழந்தை குதலை மொழியமிழ்து; குன்றாப் பழந்தமிழும், பாட்டும் அமிழ்து; தமிழ்ப் பண்அமிழ்து; திங்கள் அமிழ்து; திகழ்ஆவின் பாலமிழ்தே; இங்கெனக்கு நீஅமிழ்து, நானுனக் கெப்படியோ?