சட்.. சட்.. என்ற தொடர்ந்த ஒலியில்.. வெள்ளிக் கடைக்குச் சென்று கொண்டிருந்த கீதா, அவ்விடம் நோக்கி நகர்ந்தாள்.
“அண்ணே.. வலிக்கிதுண்ணே.. விடுண்ணே..” எனக் குமார் தெருவில் உருண்டு கெஞ்சிக் கொண்டிருக்க, அந்த நெடியவனின் கையில் இருந்த கம்போ இடைவெளி இன்றி அவனது தேகத்தைப் பதம் பார்த்தது.
கீதா, “டேய்.. டேய்.. என்னத்துக்குடா இந்த அடி அடிக்கிற? கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்குடா அவனுக்கு, இப்பப் போயி அடிச்சிக்கிட்டு இருக்க.? ஊர்க்காரவங்களோ, அந்தப் பிள்ள வீட்டுலயோ யாரும் பார்த்தா.. என்ன நினைப்பாங்க? நாளப்பிள்ள பொண்டாட்டிக்காரி மதிப்பாளா.?”
“பொண்டாட்டி மதிக்கணும்னா, அதுக்குத் தகுந்த மாதிரி நடந்துக்கணும் அக்கா.”
“அதுசரி! இப்ப என்னத்துக்கு இந்த அடி?”
“கல்யாண மிதப்புல திரியிறான் போல? சொன்ன, ஒத்த வேலையைக் கூடச் செய்யல. அதை என்கிட்டயும் சொல்லல.”
கூலி வேலைக்குச் சென்றிருந்த குமாரின் அன்னை.. மகனிற்குச் சமைத்து வைப்பதற்காக இல்லத்திற்கு வந்த போது, அக்கம் பக்கம் வீட்டார் உரைத்ததைக் கேட்டு, பதறியபடி வந்தார்.
“ஐயோ என்பிள்ள! உன் கையி கட்டையா போக! விளங்குவியா நீயி?” என்றபடி மகனைத் தூக்க, “நானு விளங்குறது இருக்கட்டும். நீயி, என்ன சொல்லி என்கிட்டக்க இவனை வேலைக்கு அனுப்புன?”
கருவிழிகளை அங்கும் இங்குமாய் உருட்டியவர் அமைதிக் காக்க, “ஆத்தாளும் மகனும் கூட்டுக் களவாணிங்க. இனிமேலு, இவன் கடைப் பக்கம் வந்தியான் துணிய கழட்டிட்டு ஓட விட்டுடுவேன். ஒழுங்கா, வாங்குன காசு பத்தாயிரத்தை இன்னும் ஒரு வாரத்துல கொண்டு வந்து தந்துடணும். இல்ல, மறுநாளு வீட்டு வாசல்ல வந்து நிப்பேன்.”
“அண்ணே.. வேலை இல்லேனா, கல்யாணம் நின்னுப் போவும்..” என அவன் பாவமாய் உரைக்க, “நிக்கட்டும். உருப்படியா வேலை செஞ்சு சம்பாதிக்கத் துப்பு இல்லாதவனுக்கு, கல்யாணம் ஒண்ணுதான் குறை! நானே அந்தப் பொண்ணோட அப்பனை பார்த்து, ஆகாத பயலுக்கு என்னத்துக்குப் பொண்ணைக் கொடுக்குறீங்க? வேற நல்ல மாப்பிள்ளையா பாருங்கனு சொல்லீட்டு வந்திடுறேன்!” என்று விட்டு நகர,