முகநூல் நேரலை ஓடிக்கொண்டிருக்க நூற்றுக்கணக்கானோர் அவளது நேரலையில் கருத்துகளை இட்டுக் கொண்டிருந்தனர். அங்கு நடக்கும் ஏர் ஷோவை பற்றி கருத்திட்டார்களோ இல்லையோ அவளை பற்றி கருத்திட்டவர்கள் அதிகம்.
“உங்க ட்ரெஸ் ரொம்ப நல்லா இருக்கு”, “யு ஆர் சச் எ பாசிடிவ் பெர்சன்(You are such a positive person!!) (இதில் என்ன பாசிடிவிட்டி பார்த்தானோ தெரியவில்லை?), “நீங்க ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன்!” இப்படி பல கருத்துக்கள். இதையெல்லாம் ரிபு அமிழ்தினியனிடம் காட்டி மகிழ, இனியனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. நிஜ உலகில் தங்களுக்கு கிடைக்காத நட்பை, தொடர்பை, அங்கீகாரத்தை, பாராட்டை இந்த நிழல் உலகம் வழங்குகிறது. தங்களுக்கு வேண்டியதை கொடுக்கும் இந்த நிழல் உலகத்தை மெல்ல மெல்ல நம்ப ஆரம்பித்து பின் அதுவே நிஜமென்று உறுதியாய் உணர ஆரம்பித்துவிடுகின்றனர்.அதுவே ரிபு போன்றவர்களின் பிரச்சனை. இதை சொன்னால் ஒத்துக்கொள்ளவும் மாட்டார்கள்.
“இதுக்கு தான் இங்க வந்தியா?”
“ஆமா பின்ன, இப்படி ஒரு ஆப்பர்டுனிட்டி கிடைக்குமா? போன வருஷம் கொரோனால ஷோவே கிடையாது. பார்த்தேல எவ்வளோ வியுஸ், கமெண்ட்ஸ். இந்த தடவை அந்த சஜி விட நான் தான் டாப்ல வருவேன் பாரு”
“யாரு சஜி”
“சஜி தெரியாது. பேமஸ் சோசியல் மீடியா இன்ப்ளூன்சர். 2 மில்லியன் பாலோவர்ஸ் தெரியுமா?! கிரேட்ல”
“சரி! நீ முடிச்சிட்டு வா. நான் கிளம்புறேன்”
“ஏன் அதிப்பா?”
“ஆமா நீ லைவ்ல இருக்க, அவங்க ரெண்டு பேரும் லவ்ல இருக்காங்க. நான் மட்டும் இங்க தனியா உட்கார்ந்து போர் அடிக்குது. நான் கிளம்புறேன். நீ முடிச்சிட்டு எனக்கு கால் பண்ணு. நான் வந்து கூட்டிட்டு போறேன்”
சட்டென்று தன் அலைபேசியை அணைத்து வைத்து விட்டு அவனுடன் பேச ஆரம்பிக்க, உள்ளுக்குள் சொல்ல முடியாத ஒரு இதம்!! அவளின் உறுதி, பிடிவாதமெல்லாம் நீரிலே பிறந்து நீரிலே கரையும் உப்பை போன்று அவனுள் மட்டுமே கரைந்து போகிறது என்று நினைக்க நினைக்க தெவிட்டாமல் இனித்தது!!
நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் கிளம்ப அவர்களுடன் சேர்ந்து உணவருந்தி விட்டுதான் செல்ல வேண்டுமென்று மும்பை மச்சானின் குடும்பம் வேண்டுகோள் விடுத்தனர். ரிபு தயங்கினாள். பின்னே எப்படி ‘பசவேஷ்வர் கானாவாலியில்’ சாப்பிடுவது?! அது தானே ரிபுவின் வழமை!
அவள் முகம் பார்த்த இனியன் அவள் எண்ணங்களை சரியாக கணித்துவிட்டான்.
“இல்லை சிஸ்டர். இன்னைக்கு ரொம்ப நேரமாயிடுச்சு. இங்கிருந்து நாங்க மாரத்தஹள்ளி போறதுகுள்ள மாட்டுவண்டியில சென்னைக்கே போனா கூட போய் சேர்ந்துடலாம். இன்னொரு நாள் கண்டிப்பா சாப்பிடுறோம்”
“கண்டிப்பா! அதுவும் கப்பில்ஸ்சா. என்ன பேபிமா?” மும்பை மச்சான் தன் மனைவி அகான்ஷாவை பார்த்து கேட்க, அவளும், “ஆமா பின்ன, கால்ல அடிபட்டா காலை பிடிச்சு விடுறது என்ன, கண்ணால பார்த்தே மனசுக்குள்ள நினைக்கிறதை கண்டுபிடிக்கிறது என்ன, அப்பப்பா என்ன லவ்வு?”
அமிழ்தினியன் பதிலளிப்பதற்குள் ரிபு முந்திக் கொண்டு, “மச்சான்! என்ன பார்த்தா உனக்கு பாவமா தெரியலையா? இந்த மாதிரி அட்வைஸ் அனந்தகோபன், பொறுப்பு பத்மனாபனெல்லாம் ஃப்ரெண்டா மட்டும் தான் வச்சிக்க முடியும்” சொல்லிவிட்டு இருவரும் விழுந்து விழுந்து சிரிக்க, அமிழ்தினியன் முகம் கன்றியது! எதுவும் பேசாமல் ஒரு சிறு புன்னகையை உதிர்த்து விட்டு அங்கிருந்து அகன்றான்.
நிலவில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவனை நிலத்தில் வீழ்த்தியது அந்த சிரிப்பும், சொற்களும்!! அவனது நிலத்தில் பெய்து கொண்டிருந்த சிறு மழையானது பொய்த்து அதிக வெப்பத்தை கிளப்பி விட்டது போன்றதொரு புழுக்கத்தை உணர்ந்தான்!! காலை தூக்கி வைக்கும் ஒவ்வொரு அடியும் பாரமாய் மாறி போனதொரு எண்ணம்!! காரினுள் ஏறியவன் ஒரு பாட்டில் நீரினை மடமடவென்று குடித்து துடிக்கும் இதயத்தை அமிழ்த்த நினைத்தான்!!!
தன் நட்புக்களிடமிருந்து விடைபெற்று காரில் ஏறியவளுக்கு அவனது இறுகிய தோற்றம், தன் செய்கையால் தான் என்பது புரிந்தாலும், புரியாதது போல் இலகுவாய் நடந்துக் கொண்டாள். அவனிடம் ஏதோ ஒன்றை பேசி வளவளைத்துக்கொண்டே வர, அவன் இயல்புக்கு திரும்பாது போகவே,
“என்னாச்சு அதிப்பா? ஏன் அமைதியா இருக்க? தலை ஏதாவது வலிக்குதா? தூக்கம் வருதா? என்னனு சொன்னா தானே தெரியும்? என் கிட்ட ஷேர் பண்ண மாட்டியா?”
தூங்குபவர்களை தான் எழுப்ப முடியும், தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை அல்ல!! அவனின் கோபத்துக்கான காரணம் தெரிந்தும் தெரியாதது போல் நடிப்பவளிடம் என்ன கூற முடியும்?! அவன் மறுமொழி கூறாதது அவளை மேலும் சுணக்கியது. எதை பற்றி பேசினால் அவன் வினையாற்றுவான் என்று அவளுக்கு தெரியும்.
அலைபேசியை எடுத்தவள், “ஐ சூப்பர்! நேத்து ஷேடோ கிட்ட பேசிட்டு இருக்கும் போது திடீருன்னு கரென்ட் போய்டுச்சு மொபைல் டேட்டாவும் இல்லை. அதனால பேச முடியலை. இன்னைக்கு ஷேடோ கிட்டேர்ந்து மெசேஜ் வந்திருக்குது, ‘சாரி நேத்து கரண்ட் போய்ட்டதால ரிப்ளை பண்ண முடியலனு’, எங்க ரெண்டு பேருக்கும் எவ்வளோ ஒற்றுமை இல்லை?! எனக்கு கரென்ட் போனா ஷேடோவுக்கும் கரண்ட் போகுது. செம்மல?”
அவன் பதிலேதும் கூறவில்லை. மனம் மட்டும் யோசனையில் உழன்றுக்கொண்டே வந்தது.
இது முதல் முறை அல்ல, அமிழ்தினியனை ரிபு உதாசீனம் செய்வது அவ்வபொழுது நடக்கும் ஒன்று தான். சில சமயம் அவள் நண்பர்களுடன் சேர்ந்துக்கொண்டு அவனை முற்றிலும் தவிர்பாள். அல்லது அவன் அவளுக்கு அறிவுரை கூறுவதை அவள் நண்பர்கள் முன்னிலையில் சுட்டிக்காட்டி கேலி செய்வாள். சில சமயம் அவளுக்கு தேவையான காரியத்துக்கு மட்டும் அவனை பயன்படுத்தி விட்டு மற்ற நேரங்களில் அவனை உதாசீனப்படுத்துவாள். அப்படி அவள் செய்யும்பொழுதெல்லாம் குற்றவுணர்ச்சியும் மேவ கடைசியில் அவனை சமாதானபடுத்த முயல்வாள். அவன் சண்டையை விட்டு சரியாக பேச ஆரம்பித்த பின்பே நிம்மதி அடைவாள்.
இன்று அவள் அனுப்பிய சமாதான புறாவையெல்லாம் அவன் வறுத்தெடுத்து தின்றுக் கொண்டிருந்தான்.
பசவேஷ்வர் கானாவாலியில் “ஜோலதா ரொட்டி” சாப்பாடு ஒன்றை சொல்லிவிட்டு பருப்பு உப்பட்டையும், ஜோலதா ரொட்டியையும் பாதி சாப்பிட்டுவிட்டு வழமை போல மீதியை அவனிடம் நீட்ட, வேண்டாமென்று மறுத்து விட்டான்.
“பசிக்கும் அதிப்பா. ப்ளீஸ்”
அவளின் ப்ளீசை புறந்தள்ளிவிட்டு பில்லுக்கான பணத்தை கொடுத்துவிட்டு வரவும், வெளியே ஒரு சின்ன கூட்டம் கூடியிருந்தது. ஆம்னி வேன், கேமரா, மைக் சகிதம் இரு ஆண்களும், ஒரு பெண்ணும் அங்கு நின்றுக்கொண்டிருந்தவர்களிடம் மைக்கை நீட்டி பேட்டி எடுத்துக் கொண்டிருந்தனர். கர்நாடக லோக்கல் சேனல் ஒன்றிலிருந்து காதலர் தினத்துக்கான சிறப்பு பேட்டி அது!!
காருக்குச் செல்ல போன இனியனை இழுத்துக் கொண்டு அவர்கள் முன் வந்து நின்றாள்.
“ஹே லூசு! லவ்வர்ஸ் டேக்கு பேட்டி எடுக்கிறாங்க. வா போகலாம்”
அவன் கூறுவதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் அவன் கையை விடாப்பிடியாய் பிடித்தபடி மைக்கை வாங்கியவளிடம், “ஹலோ மேம்! உங்களை இன்ட்ரடியூஸ் பண்ணிக்கோங்க. அப்படியே உங்க லவ் ஸ்டோரியை சொல்லுங்க” எனவும்
அவள் இலகுவாக, “என் பேரு ரிபு! இது அமிழ்தினியன். எனக்கு அதிப்பா! நான் பொறந்ததும் முதன்முதல்ல அதிப்பா தான் என்னை தூக்குனான். அப்போலேர்ந்து இப்போ வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் இருக்கோம்”
“வாவ்! சைல்ட்ஹுட் லவ்வா?! சூப்பர். மேல சொல்லுங்க”
மேலும் என்ன சொல்லியிருப்பாளோ தெரியாது, அவள் கையை உருவிக்கொண்டு சட்டென்று அங்கிருந்து விலகினான்!!
“ஏன் அதிப்பா இப்படி பண்ற?”
“உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? அது காதலர் தின பேட்டி. அதுல போய் நம்மளை…..”
“இதுல என்ன இருக்குது? சும்மா தானே சொல்ல போறோம்? சொன்னா என்ன ஆயிடுமாம்? நாம பேசியிருந்தா டிவியில் நாம வந்திருப்போம்ல? நான் அதை ரீல்ஸ்ல போட்டிருந்தா எவ்வளோ லைக்ஸ் வந்திருக்கும் தெரியுமா?”
இந்த முறை அவனுக்கு இன்னும் அதிகமாய் வலித்தது!! அந்த வலி ஒரு உண்மையை அவன் மூளைக்கு கடத்தியது. தனக்கு ரிபு மேல் இருப்பது நட்பு, அக்கறை, பொறுப்பு, கடமை என்பதை எல்லாம் கடந்து காலமும் கைப்பிடித்து நடக்கும் காதலும் ஆகும் என்பதே! அந்த உண்மையை அவன் உணர்ந்த அந்த கணம், அந்த உண்மைக்கு புறம்பானவொரு நிதர்சனத்தை அவனுக்கு புரிய வைத்துக் கொண்டிருந்தாள் அவள்!! அந்த உண்மைக்கு எதிராய் அவள் மட்டுமல்ல, அவனின் இருதயம் கூட சதிராட்டம் போட்டது!! இது எப்படி சாத்தியம்? நடக்கவே கூடாத, நடக்கவே நடக்காத ஒன்றிற்கு மனம் எப்படி ஆசைப்படலாம்? இதுவரையிலும் தன் மனதில் ஒரு நிலையாய் கட்டிக் காத்தது இன்று கட்டுடைத்து அள்ளி சுருட்டி அவனை வீழ்த்திக் கொண்டிருந்தது!!
வெளியே இருட்டத் தொடங்கியிருக்க, காரினுள் இருந்த சிறு வெளிச்சம் மட்டுமே இருவருக்குள்ளும் இடைவெளியாயிருந்தது!! இருவரது மனமும் வெளியே இருந்த இருட்டினுள் ஒன்றாய் அமிழ்ந்து கரைந்துக்கொண்டிருந்தது!!!
வீடு வரை அவனது மௌன போராட்டம் தொடர்ந்தது. வீட்டிற்குள் செல்ல எத்தனித்தவள் திரும்பி வந்து, “எனக்கு அபி மேல அக்கறை உண்டு, அவனுக்கு என் மேல இல்லாட்டி போனாலும் சரி. அவன் என்ன பண்றான்னு ஓரளவு எனக்கு தெரியும்” அவளுக்கு அவன் பேச வேண்டும். அவனை சமாதானப்படுத்த ஏதோ ஒன்றை செய்ய வேண்டும். அபி பற்றி கூறினால் சமாதானம் ஆவான் என்று நினைத்தே கூறினாள்.
அபி பற்றி அவள் கூறியதைக் கேட்டதும் அவனுக்கு சிக்கலாகி கிடந்த நூற்கண்டின் நுனி பிடிபட ஆரம்பித்தது. இனி அவன் வேலை சிக்கலை பிரிப்பது மட்டுமே!! ஆனால் அது அவ்வளவு எளிதல்ல!!
வீட்டிற்குச் சென்று மனதின் வெப்பத்தையும், உடல் வெப்பத்தையும் தணிக்க குடம் குடமாய் தண்ணீரை ஊற்றிக் கொண்டவன், பசி, அசதி, மனக்குழப்பம் எல்லாம் ஒன்று சேர மெத்தையின் மீது சரிந்தான். சரியாய் அச்சமயம் அவன் சைபர் கிராம் நண்பன் அழைத்தான்.
அசதி, குழப்பமெல்லாம் பறந்தோட ஆர்வமாய் நண்பனுடன் தொடர்பு கொண்டான். அவனளித்த தகவலைக் கேட்டவன், தான் கேட்டது சரிதானா , தன் காதுகள் பசியினால் வேலை செய்யவில்லையோ என்று சந்தேகம் கொண்டான். ஒன்றிற்க்கு இரண்டு முறை நண்பன் சொன்ன தகவலை உறுதி செய்துக் கொண்டவனுக்கு ஷேடோவின் உண்மை உருவம் புலப்பட செயலிழந்து போனான் அமிழ்தினியன்!!!!
மணமும் தென்றலும் குளிரும் வாய்ந்த மாலையும் சோலையும் இருந்தும் பயனில்லை; குணமும் அழகும் வாய்ந்தான் காதல் குயில்இங்கிருந்தால் ஒருகுறையும்இல்லை.
அணங்கும் நானும் ஒன்றாய் இருந்தே அடைந்தால் பெருமை அடையும் நறுமணம் பிணத்திற்கு நலம்ஒரு கேடா, அவளைப் பிரிந்த எனக்கு மணமா குணம்தரும்?