Skip to content
Post Views: 3,075
அத்தியாயம் 16
“ஏன் சின்ன பாப்பா, எப்ப பாரு உங்க அண்ணா போட்டு விடற அருக்காணி ஜடையே போட்டுட்டு இருக்க..”
Advertisement
அருந்ததி பதில் சொல்லாமல் உர்ரென்று வில்வாவை முறைத்து பார்த்தாள்.
“அவனை எதுக்கு முறைக்கிற பாப்பா… எங்க அம்மாகிட்ட ஜடை போட்டுக்க வேண்டியது தானே, அம்மா ரொம்ப அழகா போட்டு விடுவாங்க தெரியுமா?” என்றான் பாரி.
Advertisement
Advertisement
“எங்க அண்ணா கஷ்டப்பட்டு போட்டு விடறாங்க, நல்லா இல்லைன்னு சொன்னா அவங்க வருத்தப்படுவாங்க தானே, அதுவும் இல்லாமல் முடிஞ்ச அளவு நம்ம வேலையே நாமளே பார்க்கத்துக்கணும்னு அண்ணா சொல்லி இருக்காங்க”
அவினாஷை நினைத்து இவர்களுக்கு எப்பொழுதும் ஒரு பிரமிப்பு உண்டு. தங்கள் வயது தான். ஆனால் எத்தனை கடமைகள், எத்தனை பொறுப்புகள், அதை எவ்வளவு பொறுமையாகவும் நேர்த்தியாகவும் கை ஆளுகிறான் என்று.
Advertisement
“சரி சரி உங்க அண்ணன் ஒரு கோவில் தான்… இன்னிக்கு ஈவினிங் நாங்க கிரிக்கெட் விளையாட போறோம் நீயும் வர்றியா?” என்றான் பாரி.
ஞாயிறு அன்று பக்கத்தில் உள்ள மைதானத்தில் பாரி, வில்வா, கருணா, தர்மராஜ் அனைவரும் சென்று விளையாடுவார்கள். இப்பொழுது எல்லாம் அருந்ததியும் இணைந்து கொள்கிறாள். கருணா போல விளையாடுவதில் அருந்ததிக்கு ஆர்வம் இல்லை. ஆனால் அவளுக்கு இவர்கள் விளையாடுவதை பார்க்க பிடிக்கும். அதைவிட இவர்கள் அனைவருடன் சேர்ந்து நேரம் கழிக்க மிகவும் பிடிக்கும்.
“எங்க அண்ணாக்கு கூட கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும் தெரியுமா? அங்க ஊர்ல இருக்கும் போது எங்க ஸ்கூல் டீம்ல அவங்க தான் கேப்டன். இப்ப பாவம் அவங்களுக்கு டைம் இல்ல” என்றாள் அருந்ததி வருத்தமாக.
“இதுக்காக எல்லாம் கவலை படலாமா, நாம இன்னிக்கு உங்க அண்ணாவையும் கூட்டிட்டு போகலாம்.. சரியா?” என்றான் வில்வா.
“இன்னிக்கு அவங்களுக்கு அஞ்சு கிளாஸ் இருக்கு… உங்களை மாதிரி எங்க அண்ணா என்ன வெட்டியாவா இருக்காங்க?” என்று கூறி கொண்டே தமயந்தியை பார்க்க அடுப்படிக்கு சென்று விட்டாள்.
“பார்த்தியாடா… இந்த சில்வண்டு எல்லாம் நம்மளை கிண்டல் செய்ற மாதிரி ஆயிடுச்சு” என்று கடுப்பாக பாரியிடம் பொருமினான் வில்வா.
“விடுடா.. அதுக்காக நம்ம என்ன வேலைக்கா போக முடியும்”
“அதானே.. காலேஜ் போய்ட்டு வந்து படிக்கவே நமக்கு மூச்சு முட்டுது”
“நம்ம என்ன செஞ்சாலும் நம்மளை இங்க யாரும் பாராட்ட போறது இல்ல, அப்புறம் எதுக்கு கஷ்டப்பட்டுக்கிட்டு”
இவர்கள் அரட்டை அடித்து கொண்டிருக்கையில்,
“அத்தை.. இந்தாங்க அத்தை அம்மா வாழைப்பூ வடை செஞ்சாங்க. உங்களுக்கு கொடுத்திட்டு வர சொன்னாங்க” என்று வந்தாள் கருணா.
“வாங்க அக்கா, அத்தை இன்னிக்கு பிரைட் ரைஸ் பண்றாங்க, உங்களுக்கு பிடிக்குமா?” என்றாள் அருந்ததி ஆசையாக.
“ஓ பிடிக்குமே, உங்களுக்கும் சேர்த்து தான் வடை கொடுத்து விட்ருக்காங்க அருந்ததி.. நீ வீட்டுக்கு போகும் போது எடுத்துட்டு போ”
“அக்கா, அத்தை எவ்வளவு மெல்லிசு மெல்லிசா கேரட், பீன்ஸ் எல்லாம் கட் பண்ணாங்க தெரியுமா?”
“அவளுக்கு நல்லா சாப்பிட தான் தெரியும் சின்ன பாப்பா” என்று வாழைப்பூ வடையை மென்றுகொண்டே கூறினான் வில்வா.
“எங்க அக்காவுக்கு எல்லாம் தெரியும், உங்க இரண்டு பேரை மாதிரி இல்லை”
“பாரு டா… முதல்ல அண்ணன் ஒரு கோவில்ன்னு பாட்டு பாடுன, இப்ப எங்க அக்கா.. தங்க அக்கான்னு பாடுவ போலயே” என்றான் பாரி நக்கலாக.
“எப்பப்பாரு சின்ன பிள்ளை கிட்ட எதுக்கு வம்பு வளர்ப்பீங்களோ, போய் ஏதாச்சும் வேலை இருந்தா பாருங்கடா” என்று உள்ளிருந்தே குரல் கொடுத்தார் தமயந்தி.
“அருந்ததி, உன்கிட்ட கேக்கணும்னு நினைச்சேன் உனக்கு சைக்கிள் ஓட்ட தெரியுமா? என் குட்டி சைக்கிள் சும்மா தான் இருக்கு. டென்த்ல ப்ர்ஸ்ட் வந்ததுனால எனக்கு ஸ்கூல்ல சைக்கிள் கிப்ட் கொடுத்திருக்காங்க, நீ அதை ஓட்டலாம்”
“அண்ணா கிட்ட கேட்டுட்டு சொல்றேன் கருணாக்கா..”
“ஏன் பாப்பா உனக்கு சைக்கிள் ஓட்ட தெரியுமான்னு உங்க அண்ணாக்கு தான் தெரியுமா?” என்றான் பாரி.
“அது இல்ல… அக்கா சைக்கிள் நான் ஓட்டலாமான்னு அண்ணா கிட்ட தானே கேக்கணும்”
“அது சும்மா தானே இருக்கு, அதை ஓட்ட அண்ணாகிட்ட எதுக்கு கேக்கணும்” என்றான் வில்வா.
“சின்ன பிள்ளைக்கு இருக்கிற அறிவு உங்க ரெண்டு பேருக்கும் இருக்கா? வீட்ல பெரியவங்க கிட்ட கேக்காம யார் கொடுக்கிற பொருளையும் வாங்கிக்க முடியுமா? அவங்க வீட்ல இப்ப இவ அவங்க அண்ணாகிட்ட தானே கேக்கணும்? அவளை பார்த்து கத்துக்கங்க” என்றாள் கருணா.
“ஏன் கருணா, நீ என்னிக்காச்சும் அண்ணாகிட்ட கேக்கணும்னு யோசிச்சு இருக்கியா? இல்ல அண்ணன்னு தான் என்னை மதிச்சிருக்கியா… சின்ன பாப்பா கிட்ட இருந்து நீ தான் கத்துக்கணும்”
“அதானே… வில்வா சொல்றதுலயும் ஒரு பாயிண்ட் இருக்குல்ல” என்று நண்பனுக்கு ஒத்து ஊதினான் பாரி.
“இவங்க பேசறதை விடு அருந்ததி, நீ உங்க அண்ணாகிட்ட கேட்டுட்டு சொல்லு… எப்படி இருந்தாலும் உனக்கு சைக்கிள் ஓட்ட தெரியுமா?”
“தெரியாதே “
“செவென்த் வந்துட்ட, இன்னும் சைகிள் ஓட்ட கத்துக்கலையா? பரவாயில்லை விடு, இன்னிக்கு நான் உனக்கு சொல்லி தரேன். நம்ம இன்னொரு நாள் கிரிக்கெட் விளையாடலாம். மதியம் சாப்பிட்டு ஒரு மூனு மணிக்கு சைக்கிள் கத்துக்க போலாம். நீ போய் உங்க அண்ணா கிட்ட சொல்லிட்டு வா. நானும் போய் சாப்பிட்டுட்டு வரேன்” என்று கூறி விட்டு கிளம்பிவிட்டாள்.
அருந்ததி நகத்தை கடித்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.
வில்வா பாரியிடம் அருந்ததியை பார்க்குமாறு ஜாடை காட்டினான்.
“என்னாச்சு பாப்பா, ஏன் டென்ஷனா இருக்க?”
“எனக்கு சைக்கிள் ஓட்ட பயமா இருக்கு”
“இதுக்கெல்லாம் பயப்படலாமா பாப்பா?”
“சைக்கிள் ஓட்ட கத்துக்கும் போது கீழே விழுந்துடுவோம்ன்னு என் பிரெண்ட்ஸ் சொல்லி இருக்காங்க…. விழுந்தா அடிபட்டிடும்… அடிபட்டால் மருந்து போடணும்… மருந்து போட்டா எரியும்”
“அதுக்கு என்ன பண்றது? சைக்கிள் கத்துகிறது நல்லது தானே சின்ன பாப்பா..”
“ப்ளீஸ் ப்ளீஸ் அக்கா கிட்ட இருந்து என்னை காப்பாற்றி விடுங்களேன், எனக்கு சைக்கிள் கத்துக்க வேண்டாம்”
“ஹா ஹா ஹா உனக்கு சொல்லிக் கொடுக்கணும்னு கருணா முடிவு பண்ணிட்டா இனிமேல் ஒன்னும் பண்ண முடியாது”
“என்ன பார்த்தா பாவமா இல்லையா, நான் உங்க தங்கச்சி மாதிரி தானே” என்றாள் பாரியை பார்த்து.
“தங்கச்சியா? என்ன திடீர்ன்னு, எப்பவுமே எங்க ரெண்டு பேரையும் முறைச்சிட்டு தானே இருப்ப”
“முறைச்சாலும் உங்க ரெண்டு பேரையும் எனக்கு பிடிக்கும். இந்த தடவ நீங்க ஹெல்ப் பண்ணுங்க, நெக்ஸ்ட் தடவை நான் உங்களுக்கு பண்ணுறேன்”
“இவ்ளோ குயூட் தங்கச்சி எனக்கு கூட தான் பிடிச்சிருக்கு, நீ என்னடா சொல்ற” என்றான் பாரி நண்பனை பார்த்து.
“டேய் வேண்டாண்டா எனக்கு இருக்க ஒரு தங்கச்சி போதுண்டா”
“ப்ளீஸ் ப்ளீஸ்… நான் சமத்தா இருப்பேன்”
“ஓகே.. நீ கேக்கறதனால ஒத்துகிறோம். உன் வேலை முடிஞ்சதும் அப்புறம் பேச்சு மாற கூடாது”
“ப்ராமிஸ்..” என்றாள் அழகாக தலை சாய்த்து.
“அப்ப எனக்கு இரண்டு கண்டிஷன் இருக்கு என்றான் வில்வா.
“என்ன கண்டிஷன்?”
“எங்க ரெண்டு பேரையும் அண்ணா அண்ணான்னு தான் கூப்பிடணும்”
“சரி..”
“நாங்க ஏதாவது தப்பு பண்ணி மாட்டிக்கிட்டா, நீ எங்க பக்கம் தான் சப்போர்ட் பண்ணனும்”
“சரிரிரி… “
“அவ்வளவு தான். பாரி உனக்கு எதாவது கண்டிஷன் இருக்கா?”
“கண்டிஷன்லாம் இல்ல பாப்பா.. அண்ணான்னு ஒரு தடவை ஏத்துக்கிட்ட அப்புறம் அதை வாபஸ் வாங்க கூடாது”
“சரி அண்ணாஸ்”
“சரி நீ போய் சாப்பிட்டு வா, நாங்க ஐடியா யோசிச்சு வைக்கிறோம்”
“உங்களை நம்பி தான் போறேன் அண்ணாஸ், நல்ல ஐடியாவா யோசிச்சு சொல்லுங்க”
“ஏன்டா பாரி, இந்த சின்ன பாப்பா நம்மளை போய் நம்பி இந்த வேலையை கொடுத்திருக்கே, நாம இதை செய்ய முடியும்னு நீ நினைக்கிற?”
“ஏதாச்சும் பண்ணனும் டா, என்ன பண்ணலாம்?”
“பேசாம சைக்கிளை பங்சர் பண்ணி வச்சிடுலாமா?”
“சூப்பர் ஐடியா டா… “
இருவரும் யாருக்கும் தெரியாமல் கருணாவின் குட்டி சைக்கிளின் பின் பக்க டயரை பங்சர் ஆக்கி விட்டு அமைதியாக இருந்து கொண்டனர்.
மதியம் உணவை முடித்துக்கொண்டு இருவரும் அவினாஷ் வீட்டிற்கு சென்றார்கள்.
“என்ன ஐடியா அண்ணாஸ்” என்றாள் அருந்ததி ரகசிய குரலில்.
“கவலை படாதே சின்ன பாப்பா, நாங்க இரண்டு பேரும் ஏற்கனவே ஐடியாவை அமுல் படுத்திட்டோம். இன்னிக்கு கண்டிப்பா சைக்கிள் எடுக்க முடியாது”
“நிஜமாவா?”
“ஆமா பாப்பா, இந்த இரண்டு அண்ணாங்க உன் பக்கம் இருக்கிற வரைக்கும் நீ எதுக்கும் கவலை படாதே”
அவினாஷ் கிளாஸ் முடித்து வந்து அமர்ந்தான்.
தாத்தா மதிய உணவை முடித்து விட்டு படுத்து விட்டார்.
சாப்பிடுங்க அண்ணா என்று அருந்ததி அவினாஷிற்கு உணவை கொண்டு வந்து கொடுத்தாள்.
“ஏன் இவ்வளவு லேட்டா சாப்பிடற அவி மணி மூணு ஆகப்போகுதே?” என்றான் பாரி கவலையாக.
“இன்னிக்கு புதுசா ஒருத்தவங்க க்ளாஸ் கேட்டிருந்தாங்க. அதான் டெமோ கிளாஸ் எடுத்ததுனால லேட் ஆயிடுச்சு.”
“அவி, வேலை செஞ்சுட்டே படிக்கிற, வீட்டையும் பார்த்துகிற, உன் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கவனிக்கணும்” என்றான் வில்வா அக்கறையாக.
மனதில் பொறாமையோ போட்டிக்குணமோ இல்லாத இருவரையும் அவினாஷிற்கும் மிகவும் பிடிக்கும்.
இவன் அதிகம் பேசாவிட்டாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் அவர்களாகவே நட்புக்கரம் கொண்டு அனைத்துக்கொள்வார்கள் அவினாஷை.
“அண்ணா சாப்பிடட்டும், பேசிட்டே இருக்காதீங்க அண்ணாஸ் “ என்றாள் அருந்ததி.
“அது என்ன அண்ணாஸ் புதுசா?” என்றான் அவினாஷ்.
“நான் சொல்றேன்.. “ என்று ஆரம்பித்த வில்வாவை.
“சொல்லாதீங்க… சொல்லாதீங்க… “ என்று வேகமாக தடுத்துவிட்டாள் அருந்ததி.
“பாப்பா, இந்த ஊருக்கு வந்ததுல இருந்து நீயும் வாலாயிட்ட” என்றான் அவினாஷ். அதில் அவனுக்கு மகிழ்ச்சியே, அவளுடைய குழந்தைத்தனம் மீண்டும் மலர்ந்ததாக தோன்றியது அவினாஷிற்கு. அதற்கான பெரும்பங்கு பாரி வில்வாவை தான் சேரும் என்றே அவன் நினைத்தான்.
கருணாவின் நட்பு அவளை பக்குவப்படுத்தியது என்றால், இவர்களது அருகாமை அவளை இலகுவாகியது.
கருணா, “டேய் அண்ணா, பாரிவேந்தன்… “ என்று தெருவில் இருந்து குரல் கொடுத்தாள்.
அருந்ததி கலவரமாக இவர்களை பார்த்தாள்.
“நாங்க இருக்கிறோம் கவலை படாதே பாப்பா” என்று ரகசியமாக கூறினான் பாரி.
“டேய் அண்ணா..” மீண்டும் வெளியே இருந்து குரல் கொடுத்தாள் கருணா.
“சீக்கிரம் போடா, இல்லைனா ஊரையே கூட்டிடுவா”
“என்ன கருணா, எதுக்கு இங்க நின்னு கத்துற”
“என் குட்டி சைக்கிள் காலையில கூட நல்லா தான் இருந்துச்சு, இப்ப பார்த்தா பங்சரா இருக்கு”
“சைக்கிள் டயர் பங்சராவதுல என்ன ஆச்சர்யம்?”
“நேத்து வரை நல்லா இருந்துச்சு, திடீர்ன்னு எப்படி பங்சர் ஆகும்?
“என்னை கேட்டா எனக்கு என்ன தெரியும்? “
“அதானே.. “ என்று வந்து நண்பனுடன் இணைந்து கொண்டான் பாரி.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே உணவை முடித்துவிட்டு வெளியே வந்தான் அவி.
“என்னாச்சு?” என்றான் கருணாவை பார்த்து.
“இன்னிக்கு அருந்ததிக்கு சைக்கிள் ஓட்ட சொல்லி தரேன்னு சொல்லி இருந்தேன். இப்ப பார்த்தா பங்சர்”
“சைக்கிள் ஒட்டவா? நானே சொல்லி கொடுத்துப்பேன்… உனக்கு எதுக்கு சிரமம்?”
“இவ்வளவு நாள் சொல்லி கொடுக்கல.. இப்ப நான் சொன்னதும் என்ன திடீர் ஞானயோதயம்? நான் தான் எல்லாம்ன்னு பெருமை பீத்திக்கிட்டா மட்டும் போதாது, செயல்லயும் இருக்கணும்”
அவி பாவமாக நண்பர்களை பார்க்கவும், “அவளே சைக்கிள் பங்சர் ஆன கடுப்புல இருக்கா, நீ ஏன் இப்ப வாயை கொடுக்கிற?” என்றான் பாரி மெதுவாக.
“இல்ல, நீங்க அருந்ததிக்கு போட்டு விடறது அருக்காணி ஜடை, ஸ்கூல்ல எவ்வளவு பேர் அவளை கிண்டல் பண்றாங்க தெரியுமா? இரண்டு வருஷமா நீங்க தானே போடறீங்க?” என்று அவினாஷை ஒரு பிடி பிடித்தாள்.
“எனக்கு வரதை தானே நான் போட முடியும்”
“வரலைன்னா அத்தைகிட்ட விடணும், அவங்க எத்தனை தடவை ஆசையா கேக்கறாங்க. பெரிய இவரு மாதிரி என் தங்கை என் ஜடைன்னு..”
“———————”
“ஒழுங்கா ரெண்டு நாள் அத்தை எப்படி போடறாங்கனு பார்த்து கத்துக்கோங்க, அப்புறம் போட்டு விடுங்க, புரியுதா?”
‘சரி’ என்று கூறுவதை தவிர வேற வழி இல்லை என்று மண்டையை ஆட்டினான் அவினாஷ்.
“சரி சரி.. பஞ்சாயத்தை முடிச்சிட்ட இல்ல.. கிளம்பு” என்றான் வில்வா.
“சைக்கிள் எப்படி பங்சர்ன்னு கண்டுபிடிக்கிறேன், அப்புறம் இருக்கு “ என்றாள் கடுப்பாக.
“சைக்கிள் தானே பங்சர், அதுக்கு எதுக்கு இவ்வளவு டென்ஷன்” என்றான் அவினாஷ்.
“இன்னிக்கு பங்சர் கடை லீவு, நான் அருந்ததிக்கு சொல்லி தரதா முடிவு செஞ்சிருந்தேன்.. ப்ச்ச்.. “
“அவ்வளவு தானே.. சைக்கிளை கொண்டு வா, நான் சரி பண்ணி தரேன்”
பாரி, வில்வா, அருந்ததி மூவரும் இப்பொழுது திரு திருவென முழித்தனர்.
“எதுக்கு அவி உனக்கு கஷ்டம், நாங்க நாளைக்கு சரி பண்ணிக்கிறோம். உனக்கே ரெஸ்ட் கிடைக்கிறது இல்ல” என்றான் பாரி.
“இதுல என்ன இருக்கு பாரி, கருணா தானே சொல்லி கொடுக்க போறா… நான் இது கூட செய்ய மாட்டேனா?”
“இப்ப என்னடா பண்றது?”
“ஏன்டா வீட்ல எப்படி பங்சர் ஒட்ட முடியும்? நாம தான் காம்பஸ் வச்சு நல்லா கிழிச்சி விட்டுட்டோம் இல்ல?
“நமக்குன்னே பிரச்சனை வருது பாரேன்” என்று வில்வாவும் பாரியும் ரகசியம் பேசினார்கள்.
“அண்ணாஸ்… “ என்றாள் அருந்ததி பாவமாக.
“இரு பாப்பா, நாங்க இரண்டு அண்ணா இருக்கோம்ல. வேற ஐடியா யோசிப்போம்”
இவர்கள் மூவரும் யோசித்து முடிப்பதற்குள்ளே, அவினாஷ் பங்சரை சரி செய்து இருந்தான்.
“பார்த்து கவனமா போ அருந்ததி, எனக்கு கிளாஸ்க்கு டைம் ஆச்சு” என்று உள்ளே சென்றுவிட்டான் அவினாஷ்.
“கருணாம்பிகை, சைக்கிள் கத்துக்கொடுக்கிறது கஷ்டம். பாப்பா வெய்ட் சேர்த்து பாலன்ஸ் பண்ணனும்” என்றான் பாரி மெல்ல.
“அதுக்கு?”
“நாங்க இரண்டு பேரும் இன்னிக்கு பிரீயா தான் இருக்கோம், நாங்க சொல்லி தர்றோம்” என்றான் வில்வா உடனே.
“உங்களுக்கு படிக்க நிறைய இருக்குன்னு சொன்னீங்க”
“இல்ல இன்னிக்கு பிரீ தான், நாங்க சொல்லி தர்றோம்”
அருந்ததி பீதியுடன் மூவரையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“கண்டிப்பா பிரீ தானே?”
“இதை விட இன்னிக்கு வேற எந்த வேலையும் இல்லை… நாங்க பாப்பாக்கு சைக்கிள் சொல்லி தர்றோம்”
“என்ன சின்ன பாப்பா, நாங்க சொல்லி கொடுத்தா உனக்கு ஓகே தானே? நீ சொல்லு” என்றான் வில்வா அருந்ததியிடம்.
“ஆமா க்கா, நான் அண்ணாஸ் கிட்டவே கத்துகிறேன். உங்களுக்கு வேலை இருக்கும், அண்ணாஸ் பிரீ தானே”
கருணா “சரி, எல்லாரும் முதல்ல வீட்டுக்கு போவோம். அப்புறம் அங்கே இருந்து கிளம்பலாம்”
கருணா சைக்கிள்ல முன்னே செல்லவும், இவர்கள் மூவரும் பேசிக்கொண்டே பின்னே சென்றனர்.
“எப்படி காப்பாத்தி விட்டோம் பார்த்தியா?” என்றனர் பாரியும் வில்வாவும் அருந்ததியிடம்.
“தேங்க்ஸ் அண்ணாஸ்”
“இங்க பார்க் பக்கத்துல ஒரு பானி பூரி கடை இருக்கு சின்ன பாப்பா. நாம சைக்கிள் கத்துக்கலாம்னு சொல்லிட்டு அங்கே போய் சாப்பிடலாம் சரியா?”
“யாராச்சும் பார்த்துட்டாங்கன்னா?”
“பார்த்தா என்ன? பானி பூரி தானே சாப்பிட போறோம், உனக்கு பிடிக்குமா?”
என்றான் பாரி.
“அது உடம்புக்கு நல்லது இல்லைன்னு அண்ணா சாப்பிட விட மாட்டாங்க, நான் சாப்பிட்டதே இல்ல..”
“என்னது, பானி பூரி சாப்பிட்டது இல்லயா? அப்ப இன்னிக்கு கண்டிப்பா நாம சாப்பிடறோம்” என்று மூவரும் ஹை பை கொடுத்துக்கொண்டனர்.
வில்வா வீட்டு கேட் அருகில் நின்று தான் பேசினார்கள்.
“ஏன் அருந்ததி, இவனுங்க கூட நின்னா வாட்ச் மேன் வேலை தான் உனக்கும், உள்ளே வாடா” என்று பாட்டி வந்து அருந்ததியை அழைத்து சென்றார்.
“எங்க டா இன்னும் கருணாம்பிகை ஆளே காணும்” என்றான் பாரி நண்பனிடம்.
அப்பொழுது சங்கர் வாயெல்லாம் பல்லாக, கையில் இரண்டு சிறிய பக்கெட்களுடனும் ஒரு பெரிய கயிறுடனும் இவர்களை நோக்கி வந்தார்
“என்ன அங்கிள்? எதுக்கு இது எல்லாம்?” என்றான் பாரி.
சுமதி கையில் ப்ளீச்சிங் பவுடர் எடுத்துக்கொண்டு பின்னே வந்தார்.
“ரொம்ப தேங்க்ஸ் பாரி… ரொம்ப தேங்க்ஸ் வில்வா” என்றார் சங்கர்.
“இது எல்லாம் ஒரு விஷயமா, இன்னிக்கு பிரீயா இருக்கோம். அதுதான் நாங்க செய்றோம்னு சொன்னோம், எதுக்கு தேங்க்ஸ்”என்றான் பாரி குழப்பமாக.
“அதானே? எதுக்கு ஓவர் பில்ட் அப்பு” என்றான் வில்வா.
“ஒரு வருஷமா செய்யணும் செய்யணும்னு நினைச்சது, இதுவரை செய்ய முடியலை..”
“சின்ன பாப்பா வந்தே ஏழு மாசம் தானே ஆகுது? “என்றான் வில்வா பாரியிடம் குழப்பமாக.
“அதானே..”
“சீக்கிரமா ஆரம்பிச்சிடுங்க ப்பா, இருட்டிடுச்சுன்னா கஷ்டம். இங்கே முடிச்சிட்டு அடுத்து உங்க வீட்லயும் முடிச்சிடுங்க” என்றார் சுமதி.
“எதை முடிக்கணும்?”
“சம்பும் டேங்க்கும் கழுவறேன்னு ஒத்துகிட்டிங்களாமே?”
“என்னது” என்று நண்பர்கள் இருவரும் அதிர்ச்சி ஆகிவிட்டனர்.
“நாங்க எப்ப ஒத்துக்கிட்டோம்? என்னம்மா சொல்றீங்க?”
“கருணா தான் சொன்னா.. “
“அப்ப அவளையே கழுவ சொல்லுங்க, நாங்க போய் அருந்ததிக்கு சைக்கிள் சொல்லி தரப் போறோம்”
“டேய், அது எல்லாம் கருணா பார்த்துப்பா. நீங்க ரெண்டுபேரும் சட்டுபுட்டுன்னு வேலையே ஆரம்பிங்க”
“இல்ல அங்கிள்..” என்று பாரி ஆரம்பிக்கும் போது தர்மராஜும் வந்துவிட்டார்.
“என்னடா இன்னும் ஆரம்பிக்கலயா, ஒருத்தர் உள்ளே இறங்குங்க.. ஒருத்தர் வெளியே நின்னு தண்ணீர் வாங்கி ஊத்துங்க… அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்த உள்ளே இறங்கி சுத்தப்படுத்திடுங்க”
“எங்களுக்கு படிக்க நிறைய இருக்கு ப்பா” என்றான் பாரி கடுப்பாக.
“நாங்க பிரீன்னு நீங்க சொன்னதா பாப்பா சொன்னாளே“
“பிரீன்னு தான் சொன்னோம், அதுக்கு எல்லா வேலையையும் எங்க தலையில கட்டுவீங்களா? “
“ஒரு வேலை செய்யணும்னு சொன்னா உடம்பு வளையாது, நம்ம வீட்டு வேலைன்னு நினைப்பே கிடையாது”
“அந்த அவி பையன பாருங்க, அவன் செய்றதுல ஒரு பெர்ஸன்ட் நீங்க செய்வீங்களா?”
.
“எத்தனை நாளைக்கு தான் பொறுப்பே இல்லாம இருக்கப்போறீங்க?”
சங்கரும் தர்மராஜும் மாறி மாறி அறிவுரை கூற ஆரம்பித்தனர்.
“டேய் இதுக்கு உள்ளே குதிச்சுடலாம், வா.. “என்று பாரியை இழுத்துக்கொண்டு உள்ளே இறங்கிவிட்டான் வில்வா.
“ஒருத்தர் உள்ளே ஒருத்தர் வெளியே” என்று தர்மராஜ் ஆரம்பிக்கவும்,
“எங்களை செய்ய சொல்லிட்டீங்க தானே, எப்படி கழுவறதுன்னு நாங்களே பார்த்துகிறோம், நீங்க போங்க” என்று கடுப்படித்தான் பாரி.
சோகமாக இருவரும் வேலையில் இறங்கினார்கள்.
பாட்டி கொடுத்த பலகாரத்தை சாப்பிட்டு விட்டு, கருணா அருந்ததியை அழைத்து கொண்டு கிரௌண்டிற்கு புறப்பட்டாள்.
அருந்ததி திரும்பி திரும்பி பாரி வில்வா எங்கே இருக்கிறார்கள் என்று தேடினாள்.
“யாரை பார்க்கிற அருந்ததி?”
“அண்ணாஸ் இரண்டு பேரும் வரேன்னு சொன்னாங்களே..”
“ஹா ஹா ஹா.. அவங்க இரண்டு பேருக்கும் வேற வேலை ஏற்பாடு செஞ்சுட்டேன், நீ வா..”
“குயிலை பிடிச்சு கூண்டில் அடைச்சு பாட சொல்லுகிற உலகம்..”
“பாட சொல்லுகிற உலகம்..”
“மயிலை புடிச்சு காலை உடைச்சு ஆட சொல்லுகிற உலகம்..”
“ஆட சொல்லுகிற உலகம்..”
பாரியும் வில்வாவும் மாறி மாறி பாடும் குரல் கேட்டது.
“எங்க இருந்து க்கா பாடுறாங்க”
“சம்புக்குள்ள இருந்து தான்”
அருந்ததி குடுகுடுன்னு ஓடி எட்டி பார்த்தாள்.
“சின்ன பாப்பா உங்க அண்ணாஸ் நிலைமையை பார்த்தியாம்மா.. பார்த்தியா… உனக்கு உதவி செய்ய போய் எப்படி நிக்குறோம்னு பார்த்தியா… “ என்றான் வில்வா சிவாஜி கணேசன் பாணியில்.
“அப்ப எனக்கு ஹெல்ப் பண்ண முடியாதா?” என்றாள் சோகமாக.
“நீ தான் பாப்பா முடிஞ்சா எங்களை காப்பாத்தணும்” என்றான் பாரி.
அருந்ததிக்கு இவர்களை பார்த்து சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
“சீக்கிரம் வா அருந்ததி” என்று கருணாவின் குரலில், பயம் இருந்தாலும், இவர்களது கலாட்டாவில் மனது லேசாக சிரித்துக்கொண்டே சென்றாள்.
இரண்டு வீட்டு சம்பு டேங்க் எல்லாம் சுத்தம் செய்துவிட்டு, நண்பர்கள் இருவரும் காலை நீட்டிக்கொண்டு வராண்டாவில் அமர்ந்துகொண்டு இருந்தனர்.
பாட்டி இவர்களுக்கு சுட சுட டீ கொண்டுவந்து கொடுத்தார்.
“அண்ணாஸ் இங்கே பாருங்க..” என்று கூவிக்கொண்டே சைக்கிளை தானே ஒட்டிக்கொண்டு வந்தாள் அருந்ததி.
“ஹே சூப்பர் சின்ன பாப்பா ..”
“கலக்கற பாப்பா, ஒரே நாள்ல நீயே ஓட்டிட்டியே” இருவரும் மகிழ்ச்சியாக அவளை பாராட்டினார்கள்.
“சொல்லி கொடுத்தது யாரு, எங்க கருணாக்கா இல்ல. ஒரு தடவை கூட நான் கீழே விழுகவே இல்லை தெரியுமா?”என்றாள் பெருமையாக.
“ஏன்டா பாரி நாமதான் வழக்கம் போல ஜோக்கரா… சைக்கிள் கேப்ல நம்மளை வச்சு எல்லா வேலையும் முடிச்சிட்டாங்க பார்த்தியா?”
“அதானே..”.
“என்னத்த சொல்ல? சரி, பானி பூரியாச்சும் சாப்பிட்டு வரலாம் வா..” என்று நண்பனை அழைத்தான் வில்வா.
“நீயும் வர்றீயா பாப்பா” என்றான் அருந்ததியிடம்.
கண்களில் ஆசையுடன் போகலாமா வேண்டாமா என்று குழப்பமாக கருணாவை பார்த்தாள்.
“போயிட்டு வா அருந்ததி, பக்கம் தானே.. ரொம்ப நல்லா இருக்கும்”
“நீங்களும் வாங்களேன் அக்கா”
இப்பொழுது கருணா வில்வாவையும் பாரியையும் பார்த்தாள்.
வழக்கம் போல என்னை கூப்பிடவே இல்லைதானே நீங்க இரண்டு பேரும் என்ற குற்றச்சாட்டு இருந்தது அவள் பார்வையில்.
“நீ வந்தா ஒன்னு தான் சாப்பிடணும்னு சொல்லுவ“ என்றான் வில்வா சமாளிப்பாக.
“ப்ளீஸ்ஸ் க்கா நீங்களும் வாங்களேன்” என்று ஆசையாக அழைத்தாள் அருந்ததி.
“உனக்காக வரேன், வா “ என்று அருந்ததின் கையை பிடித்துக்கொண்டு இவர்களை கண்டுகொள்ளாமல் முன்னே சென்றாள்.
சின்ன வயதில் தமயந்தியின் கையை பிடித்து முன்னே செல்லும் கருணா தான் ஞயாபகத்திற்கு வந்தது பாரிக்கு.
செல்லும் வழியில் அவினாஷயயும் இணைத்து கொண்டார்கள்.
இப்படி சிறியவர்களின் அன்பும் பந்தமும் அழகாக ஆழமாக வேரூன்றி வளர்ந்து கொண்டே சென்றது.
error: Content is protected !!