விமான நிலையத்திலிருந்து இறங்கியவன் நேரடியாக வந்து நின்றது அன்னை வீட்டில் தான். பம்பரமாக வீட்டினுள் நுழைந்தவனை அவன் தந்தையே வித்யாசமாக பார்த்தார்.
“காங்கிராட்ஸ் அஸ்வின்” மூன்று சத்தம், ஒரு அரை சத்தம், மூன்று மேன் ஆப் தி மேட்ச், இவை அனைத்திற்கும் சேர்த்து மேன் ஆப் தி சீரிஸ் என அஸ்வின் பாராட்டு மலையில் நனைந்து தான் போனான்.
அந்த மகிழ்ச்சி தந்தை முகத்திலும் தெரிய, “தேங்க்ஸ் ப்பா” மனதார அவரை அணைத்து விடுவித்தவன் பார்வை அவரிடமிருந்து விடைபெற்று வீட்டை அலசியது.
“அம்மா எங்க ப்பா?” என்றவன் உள்ளே சென்று, “மதி…” என அழைக்க, அவரும் வந்து தன் பங்கிற்கு மகனை கொஞ்சி தீர்த்துவிட்டார்.
“ஆரோஹி எங்க, சித்தார்த் கூட வெளிய போயிருக்காளா?” என்றான் ஆர்வத்தை அடக்க முடியாமல்.
“உனக்கு தெரியாதா? அவ சொல்ல சொல்ல கேக்காம உன் வீட்டுக்கு போய்ட்டாடா. வேலைல ஏதோ பிரச்சனை போல, திடீர்னு வர சொல்லிட்டாங்களாம்”
“டேய் நான் என்னமோ தனியா விட்ட மாதிரி பேசுற, ரெண்டு மணி நேரம் என் கூட சண்டைக்கட்டி நின்னு தான் போயிருக்கா. சாப்பாடுக்கு ஆள் ஏற்பாடு பண்ணி தான் அனுப்பி வச்சிருக்கேன்” என்ற பின்னும் நிற்கவில்லை.
“சரி ம்மா நான் வர்றேன். வர்றேன் ப்பா” சிட்டாக பறந்துவிட்டான்.
வீட்டிற்கு விரைந்து வந்தவன் மனைவியை வீடெங்கும் தேடி இறுதியாக வாட்ச் மேனிடம் வந்தான்.
“பாப்பா வீட்டுக்கு மூணு நாளா வரலையே சார்” பெரிய குண்டாக அவன் தலையில் அவர் இறக்க அஸ்வின் மனைவிக்கு உடனே அழைக்க துவங்கினான்.
அழைப்பு சென்றுகொண்டே இருந்தது அவள் அதனை ஏற்கவே இல்லை. அன்று இருவருக்கும் நடந்த உரையாடலுக்கு பிறகு இருவருக்கும் இடையில் அதிகமான பேச்சு வார்த்தை இல்லை.
அஸ்வின் தன்னுடைய கவனம் மொத்தத்தையும் விளையாட்டில் செலுத்த பொதுவாகவே கைபேசியிலிருந்து, அனைத்தையும் தவிர்த்துவிடுவான். சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் கூட அவனுடைய சோசியல் மீடியா மேனேஜர் தான்.
இரண்டு நாட்கள் பிறகு கிளம்பி வருவதாக இருந்த பயணத்தை ரத்து செய்து மனைவியை இன்ப அதிர்ச்சியில் உள்ளாக்க தீர்மானித்து வந்தவனுக்கு அவள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி வைத்தாள்.
பயம் ஒட்டிக்கொண்டது. திவ்யா கைபேசி எண்ணும் அவனிடம் இல்லை. அன்னைக்கு அழைத்து கேட்டால் அதற்கும் அஞ்சுவார் என்கிற பயத்தில் தயங்கியவன் சித்தார்த்துக்கு அழைத்துவிட்டான்.
வாகனத்தின் சாவியை தேடி எடுத்தவன் சித்தார்த்துக்கு அழைத்துக்கொண்டு வெளியில் வந்தான்.
அஸ்வின் பதட்டம் உணர்ந்தவன், “என்னாச்சு அஸ்வின், நீ சென்னை வந்துட்டியா?”
“கேட்டதுக்கு பதில் சொல்லுடா, இவ எங்க போனானு தெரியல. மூணு நாளா வீட்டுக்கு வரலயாம். என்ன பண்றா எங்க இருக்கானு கூடவா உங்களால பாக்க முடியல?”
கோவமாக வாகனத்தின் கதவினை அறைந்து சாத்தும் சத்தம் கேட்டு சித்தார்த் தன்னுடைய அலுவலக அறையிலிருந்து வெளியில் வந்தான்.
“அஸ்வின் நீ இரு, நான் திவ்யாக்கு கால் பண்ணி பாக்குறேன்” மாறன் எண் மட்டுமே அவனிடம் இருக்க அழைத்தால் அவனும் எடுக்கவில்லை.
“அவர் எடுக்கலடா… நான் என்னனு பாக்றேன்”
“கிழிச்ச வர போதும். அட்ரஸ் சொல்லு”
சித்தார்த், “அது ரொம்ப கூட்டமான ஏரியாடா. நீ போகாத. நான் ஆபீஸ்ல இருந்து கிளம்பிட்டேன். எனக்கு பக்கம் தான்”
அஸ்வின், “பரவால்ல, நான் பாத்துக்குறேன்”
சித்தார்த், “சொன்னா கேளுடா. நீ இரு” விடாப்பிடியாக அவனை அடக்கி இவன் சென்றாலும் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை அழைப்பு விடுத்தான் அஸ்வின் விடாமல்.
அஸ்வின் தவிப்பு புரிந்ததோ இல்லையோ அவசரமாக வீட்டினுள் நுழைந்தாள் அவன் மனைவி. அவளை பார்த்ததும் தான் மூச்சே சீரானது போல் நிம்மதி அஸ்வினுள்.
உடனே சகோதரனுக்கு செய்தி அனுப்பி வைத்து அவளை முறைத்துக்கொண்டு வீட்டினுள் அவள் பின்னே சென்றான். ஆரோஹி அவனை அங்கு எதிர்பார்க்கவே இல்லை என்றாலும் அமைதியாக அறையை நோக்கி நடந்தாள்.
“ஆரோஹி எங்க போயிருந்த?” கேள்வி கேட்டு நிறுத்தினான்.
“ஆபீஸ் போய்ட்டு வர்றேன்” முகத்தை சுளித்து பதில் கொடுத்தாள்.
“ஏன் வீட்டுக்கு மூணு நாள் வரல? எங்க போயிருந்தனு கேட்டேன்”
“நீங்க எங்க போயிருந்திங்கனு நான் கேட்டா தப்பு. அதே என்ன நீங்க கேட்டா அது சரியா?”
சம்மந்தமே இல்லாமல் கோவத்தை காட்டியவள் இந்த அவதாரம் முற்றிலும் அஸ்வினுக்கு பரிட்சயமில்லாதது. அவளை உன்னிப்பாக கவனித்தவன் கண்களுக்கு சிவந்த அவள் முகத்தை தவிர மாற்றம் வேறு தெரியவில்லை.
“ஆபீஸ்ல எதோ பிரச்சனைனு அம்மா சொன்னாங்க. என்ன ஆச்சு ஆரூ?”
“அதெல்லாம் ஒன்னுமில்ல. எனக்கு தூக்கம் வருது” என்றால் எரிச்சல் குறையாமல்.
“சரி வா சமைக்கிறேன் சாப்பிட்டு போகலாம்”
அதற்கும், “சாப்பிட்டு தான் வந்தேன்” என முகத்திலடித்தார் போல் பேசிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.
பல ஆசைகள், பல நிகழ்வுகளை அவளோடு பகிர்ந்து, தான் பெற்ற கோப்பைகள் பாராட்டுகளை எல்லாம் அவளிடம் சமர்ப்பித்து அதனால் அந்த முகத்தில் தோன்றும் பெருமை எல்லாம் பார்த்து மகிழ நினைத்த ஆணுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அவள் மறுத்த உணவினை அவனாலும் பருக முடியவில்லை. பசிப்பதும் வரம் தான் போல.
அடுத்த நாள் அஸ்வின் எழுந்து வரும் முன்பு ஆரோஹி விரைவாகவே அலுவலகம் சென்றிருந்தாள். அது அஸ்வினுக்கு வியப்பாகவே இருந்தாலும் அவள் வரும் முன்பு அவளுக்கு ஒரு பரிசை வாங்கி வைத்திருந்தான்.
அதனை அவளிடம் காட்டி, அந்த சிறிய முகத்தில் தோன்றும் ஆரவாரத்தை பார்த்து மகிழ்ச்சியடைய காத்திருந்தவனை அதிகம் காக்க வைத்தாள் அவன் மனைவி.
நேற்றை போல் இல்லாது ஏழு மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிட்டாள். வந்தவளை உடை மாற்ற கூட விடாமல் பிடித்து நிறுத்தினான்.
“நான் பிரெஷ் ஆகிட்டு வர்றேனே” சோர்வாய் அவன் முகம் பார்த்து கூறியவளிடம், “இத பாத்தா உன்னோட டயர்ட்னஸ் எல்லாம் பறந்து போய்டும்”
விடாப்பிடியாக அவள் கை பிடித்து வீட்டின் பின் பக்கம் அழைத்து சென்றவன் புதிதாக மின்னிய அந்த மார்டன் வகை கியர் சைக்கிள் ஒன்று அவளை கண் சிமிட்டி அழைத்தது.
அவன் அருகில் அவள். அவள் நிழல் உரச அவன்… அவள் இதழ் விரிய எழில் கொஞ்சும் சிரிப்பில் அவன் மனம் மயங்கி கிறங்க காத்திருக்க அஸ்வின் எதிர்பார்த்து வந்த எதிர்வினைக்கெல்லாம் எதிராய் நின்றாள் ஆரோஹி.
“இது என்ன பசங்க சைக்கிள்?” கருத்த வானம் காட்டும் இரக்கமற்ற கருமை அவள் முகத்தில். முகமெல்லாம் புன்னகையோடு தாவி அணைத்து நன்றி கூறுவாள் என ஒரு கற்பனை கோட்டையே கட்டி நின்றவனை மொத்தமாய் வீழ்த்தியிருந்தாள். அவளது இந்த பரிமாணம் அஸ்வின் சிரிப்பை கொள்ளையடித்திருந்தது.
“ஆரூ”
“ப்ளீஸ் அஸ்வின் இதுக்கெல்லாம் நான் ரெடி இல்ல. இதை எடுத்து ஓட்டுற வயசும் இல்ல நிலைமையும் இல்ல. இதை பெரிய விஷயமா எடுத்து வந்து டைம் வேஸ்ட் பண்ணிட்டு”
அன்றைய அவன் பெயரின் அழைப்பிற்கும் இன்றைய அவன் பெயரின் அழைப்பிற்கும் இருந்த வித்யாசத்தை அறவே வெறுத்தான். அவளுக்கு அதிர்ச்சி கொடுக்க நினைத்து அவனே அதனை அனுபவித்தான்.
விறுவிறுவென வீட்டினை நோக்கி நடந்தவள் திடீரென நின்று அவனிடம், “இத என்ன பண்ண போறீங்க?” என கேட்டாள்.
தான் கொடுத்த முதல் பரிசின் நிராகரிப்பில் இருந்தே மீளாதவன் முகத்தில் தெரிந்த அப்பட்டமான வலியை மௌனம் வைத்து அவ்விடத்திலிருந்து அகன்றான்.
அன்றைய இரவின் உணவு இருவருக்குமே தேவைப்படாமல் போக உறக்கத்தை தழுவ முயன்று அயர்ந்து தான் போனான். ஏதோ சத்தம் கேட்டு அறையை விட்டு வெளியே வந்தவன் ஆரோஹியின் அறையில் தெரிந்த வெளிச்சத்தில் புருவம் இடுங்க நெருங்கினான்.
அறையின் கதவு நன்றாகவே திறந்திருக்க உள்ளே தயக்கத்தோடு தான் எட்டி பார்த்தான். திறந்திருந்த ஜன்னல் ஒட்டி அமைத்திருந்த நீள்வாக்கு இறக்கையில் அமர்ந்து காரிருளை வெறித்திருந்தாள். நிழலாலிடிய அவன் உருவம் கண்டு திகைத்தவள் உரியவனை பார்த்ததும் தான் ஆசுவாசம் வந்தது.
இருவரும் மற்றவரை கண்ட பிறகு வார்த்தை எழாமல் சில நொடிகள் மௌனத்தை அனுபவித்தனர். ஆரோஹிக்கு அந்த அமைதி இதமாய் இருந்தாலும், அஸ்வினுக்கு நன்றாக வேதனையாய் இருந்தது.
மனம் கனக்க நகர போனவனை பார்த்து உடனே கால்களை குறுக்கி பார்த்தாள் கெஞ்சலான விழிகளோடு. நொடிகள் பல எடுத்துக்கொண்டான் அவள் கேட்டதை நிறைவேற்ற.
மெல்ல முன்னேறிய அவள் பாதங்கள் அவளுக்கு நேர் எதிரில் அமர்ந்து தான் ஆசுவாசமடைந்தன. அவனை அழைத்துவிட்டாள், அதற்கு மேல் அவனிடம் பேச முடியவில்லை வார்த்தைகள் தடுமாறியது.
இந்த கோவம் வெறுப்பு… இது எதுவும் அவள் இல்லையே.
சூழலின் கணம் புரிந்தே அவனை சுட்டது அவள் செயல்கள். கண்களில் அருவியாக பெறுக இருந்த நீருக்கு அணை கட்டி தடுத்தாள்.
கணவனுக்கோ அவள் தவிப்பு புரிந்தது போல, அவனே அவளது அமைதி கண்டு பேச முற்பட்டான், “என்ன ஆச்சு ஆரூ? நீ இது இல்லையேடா?” தலை அசைத்தாள் இல்லை என இருளை வெறித்தே.
“ஆபீஸ்ல எதுவும் பிரச்சனையா அம்மா சொன்னாங்க. நான் எதுவும் பண்ணவா? சரி என்ன விடு சித்தார்த்த எதாவது பண்ண சொல்லலாம்”
தாராளமாக கண்ணீர் மடையாய் வழிந்தது. கைதேர்ந்த சிற்பி செதுக்கிய கண்கள் போல் சொக்க வைக்கும் அந்த விழிகளின் வேதனையை அவனால் காண முடியவில்லை. அதே நேரம் அவளது செயல்களால் அவளை நெருங்கி ஆறுதலும் கூற முடியவில்லை.
பதறி தான் போனான், ஒரே நிமிடத்தில் பல வகையான சாத்தியக்கூறுகளை முடிச்சிட்டு காட்டிய சிந்தனையை திட்டி திட்டி அடக்கினான்.
“ஆரூம்மா எதுவும் பிரச்சனையா? யாரும்…” திக்கி திணறி கேட்கவே முடியாது சிரமப்பட்டவன் துடிப்பு அவளை சுட வேகமாக அவன் முகம் பார்த்து தலையை இல்லவே இல்லை என ஆட்டினாள்.
“அப்றம் ஏன்டி அழகுற? உன்ன இப்டி பாக்க முடியல” ஏதாவது பதில் சொல்லேன் என பார்த்தவன் கையை பற்றிக்கொண்டாள்.
“ஆ… ஆபீஸ்ல ஒரு முக்கியமான பேக்அப் போல்டர் டெலீட் பண்ணிட்டேன். பெரிய இஸ்… இஸ்யூ ஆகிடுச்சு. மேனேஜர் ரொம்ப ஹார்ஷா பேசிட்டாங்க.”
அவன் விரல்களை மொத்தமாய் தன்னுடைய இரு உள்ளங்கைகளுக்குள் இறுக்கமாக பொத்திக்கொண்டவள் சூடு அஸ்வினுக்கு பணியாய் குளிரூட்டியது.
“சாரி கிரிக்கெட்டரே. நான் உங்கள ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்ல. ஏதோ புத்தி பேதலிச்சு போச்சு”
விழிகள் இரண்டும் சிவந்து, கன்னம் வற்றி உயிரே இல்லாத அவள் வதனத்தை சிறிதும் பார்க்க மனம் ஒப்பவில்லை. நிறைய அழுத்திருப்பாள் என பார்த்தாலே தெரிந்தது.
“இவ்ளோ தானா? நான் என்ன என்னமோ யோசிச்சிட்டேன் ஆரூ”
“காரணமே இல்லாம இவ்ளோ பேசிருக்கேன்ல எதுவும் சொல்லாம இப்டி டக்குனு சமாதானம் ஆகிட்டீங்க”
“என்ன சொல்ல சொல்ற? உன்னோட குணம் இது இல்லனு தெரியும். அதையும் மீறி இவ்ளோ ஆடா நீ பிஹேவ் பண்றனா உனக்கு ஏதோ பிரச்சனைன்னு சின்னதா யோசிச்சேன். அவ்ளோ தான்”
“ஒரு வேலை அந்த பிரச்சனை சால்வ் பண்ண முடியாததா இருந்தா?”
மென்னகை அவனிடம், “இது என்ன உயிரா ஒன் வே பாத்னு சொல்ல. என்னனு சொல்லு நான் சொல்யூஷன் சொல்றேன்”
பதில் பேசாமல் அவனை பிடித்து வாசல் தாண்டி சைக்கிள் இருந்த இடம் அழைத்து சென்றாள். முன்பு அந்த சிறு வாகனம் நிரம்பியிருந்த இடத்தை இப்பொழுது வெறுமை நிறைத்திருந்தது.
“நாராயணா…” அவள் மொழி புரிந்து, “வேணாம் விடு ஆரூ. நான் அதை ரிட்டர்ன் பண்ண சொல்லிட்டேன்” கணவன் கண்களில் தென்பட்ட அந்த ஏமாற்றம் அவன் குரலில் இல்லாமல் போனது அவளை அதிகம் வேதனைப்படுத்தியது.
“எங்க இருக்கு?”
“சைக்கிளா?”
“ம்ம்ம்”
“பின்னாடி நிக்கும்” அவனை அப்படியே விட்டு அவள் பின் பக்கம் நோக்கி செல்ல, “ஆரூ அங்க போகாத நாய அவுத்து விட்ருப்பாங்க”
அஸ்வின் அவளை தடுக்க முயன்று பார்க்க அவளோ திரும்பி அவனை பார்த்து உதட்டை சுளித்து நிற்காமல் நடையை தொடர்ந்தாள்.
சில நொடிகள் முன்பு தூக்கி வைத்திருந்த முகத்திற்கும் இந்த முகத்திற்கும் ஆன வித்யாசம் ஏகத்திற்கும் இருக்க அவளை மீண்டும் காய்ச்சலில் விட விரும்பாமல் அஸ்வின் வேகமாக நடக்க அதற்குள் அவன் மனைவி ஓடியே சென்றிருந்தாள்.