அந்த பேருந்து நிறுத்தத்தில் வழக்கத்தை விட எக்குத்தப்பாக கூட்டம். நெற்றியின் வியர்வை வெயிலின் தாக்கத்தால் சூடாக கன்னத்தை நனைத்தது.
கைக்கு எட்டிய தூரத்தில் தான் அந்த சொகுசு வாகனம் நிற்கிறது, அத்துனுள்ளே அமர்ந்திருந்தாலும் இதே நிலை தான் அப்பொழுதுமென தெரிந்து தான் வெளியே நிற்கிறானோ என்னவோ.
அதிகமான வெயில் கூட இல்லை, மாலை வெயில் தான். குளிர்சாதன பேட்டியின் கீழே அமர்ந்திருந்தவனுக்கு இந்த சிறு வெப்பம் கூட தாளவில்லை.
உடலுக்கு வெளியே அடிக்கும் வெப்பத்தை விட மனதின் வெப்பம் அதிகமாக இருக்கிறதல்லவா?! அதற்கு காரணமானவளே வந்தாள். பழுப்பு நிற ஒரு சுடிதார். அதோடு அவள் அணிந்திருந்த சாம்பல் நிற துப்பட்டா சிறிதும் சம்மந்தம் இல்லாமல் இருந்தது.
அதுவே அவனை பார்த்தால் மாடல் போல் காட்சி தருபவன். எதிலும் நேர்த்தி பார்ப்பவனுக்கு இந்த பெண்ணை தான் பிடித்திருக்கிறது. விதி பிடிக்க வைத்துவிட்டது. ஏன், எப்படி என கேட்டால் அதற்கு ஒரு பெரிய கதையே கூறுவான்.
சித்தார்த் பார்வை அவள் முகத்திலே நிலைத்திருப்பதை எதார்த்தமாக பார்த்த ஜனனிக்கு தெரிந்துவிட, அவனை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அவனை கடந்து கூட்டமாக இருந்த பேருந்து நிறுத்தத்தின் ஒரு மூலையில் சென்று நின்றுகொண்டாள்.
அவனும் அவளை பின்தொடரவில்லை, விலகியே நின்றான். கூட்டம் செல்வதும் வருவதுமாக இருந்தது. அரைமணி நேரம் இருவரும் அவ்விடத்தை விட்டு அசைந்தபாடில்லை. அவளுக்கு அவளது பேருந்து வரவில்லை, அவனுக்கு அவள் பார்வைகிட்டவில்லை.
மெல்ல இருட்ட துவங்கிய பின்பு வந்து நின்றது அந்த பேருந்து. தாமதமாக வந்ததால் தாராளமாக மக்களை தன்னுள் அடக்கி எந்த பக்கம் கவிழ்வதென தெரியாமல் தட்டு தடுமாறி கீரிச்சிட்டு நின்றது.
அந்த பேருந்தை தலை தூக்கி பார்த்தவளுக்கு அந்த கூட்டம் பிரமிப்பாக தான் இருந்தது. கடந்த ஒரு மாதமாகவே இப்படி தான் கூட்டம், காரணம் ஏதோ பேருந்துகளை திசைமாற்றி விடுகின்றனராம்.
நேரத்திற்கு தான் பேருந்துகள் வருவதும் போவதும். இன்று ஹோட்டலில் வேலை அதிகம் என்பதால் இதற்கு முன்பு இருந்த பேருந்தை புடிக்க முடியாமல் போனது. இந்த பேருந்தை விட்டால் இன்னும் அரை மணி நேரமாகும்.
நீண்ட பெருமூச்சை இழுத்துவிட்டவள் பேருந்தை நோக்கி நடக்கும் பொழுதே வேகமாக ஓடி வந்து கை பிடித்து நிறுத்தினான், “எங்க போற, அடுத்த பஸ்ல போ ஜனனி”
அவன் கையை உதறி மேலும் முந்நீரினாள் சித்தார்த் பக்கம் பார்வையை கூட திருப்பாமல். அவளுக்கு அவன் மேல் கோவம், அவள் பிடித்து நிறுத்திய அந்த சில நொடிகள் இடைவேளையில் அவளை முந்தி பத்து பேர் முன்னேறிவிட்டனர்.
கூட்டத்தினுள் அடித்து பிடித்து ஏற தெரியாதவளை அந்த கூட்டமே முன்னே தள்ளி ஒருவழியாக பேருந்தினுள் ஏற்றிவிட அவளுக்காகவே அவனும் பேருந்தின் படிகளில் பயணிக்க வேண்டியிருந்தது.
கோட் அணிந்து படிகளில் தொங்கியே வந்தவனை வித்தியாசமாகவே பார்த்தனர். இதில் ஒரு ஆட்டோ அந்த பேருந்தை ஒட்டி உரசி வந்து, “எப்பா அந்த சட்டையை அவுத்து போடு ஓசில வூடு போய் சேத்துடுறேன்”
அவர்களையும் அந்த கூட்டத்தையும் கடந்து ஜனனி ஸ்ரீ இறங்கும் இடத்திற்கு வரவே அவனுக்கு மூச்சு முட்டிப்போனது. ஒரு பெரிய கூட்டம் இறங்க அதனோடு இறங்கு நடந்தவள் சற்று தனித்த பாதையில் நடக்கவும் நெருங்கி நடந்தான்.
“ஜனனி…” எந்த மாற்றமும் இல்லை.
அவள் போக்கில் அவள் நடந்தாள்.
“ஜனனி…” மீண்டும் சித்தார்த் அழைக்க இம்முறையும் பதில் இல்லை.
“ஸ்ரீ… இங்க பாருடி” இறைஞ்சுதலான குரலில் உருகி அழைத்தவன் உரிமை குரலா இல்லை அந்த ஸ்ரீ என்னும் அழைப்பா தெரியவில்லை அவனை திரும்பி தீயாய் முறைத்தாள்.
அழைப்பிலும் முறைப்பிலும் மட்டுமே முக்கால்வாசி காலம் ஓடிவிடுமோ என்கிற பயம் முதல்முறை அவனை அச்சுறுத்தியது.
எப்படி அழைத்தும் நிற்காமல் நடந்தவள் கை பிடித்து அங்கிருந்த சிறிய விநாயகர் கோவில் நோக்கி நடந்தான். அவன் கையை உதறி திமிறி நின்றவளை சிறிதும் சித்தார்த்தின் பிடி விளக்கவில்லை.
“நான் உள்ள வர கூடாது” அழுத்தமாக அவள் மறுக்க, எரிச்சலுற்றவன் வந்த ஒரு ஆட்டோவை மறித்து நிறுத்தி ஒரு உணவகத்தில் நிறுத்தினான்.
அவள் கையை பிடித்த சித்தார்த் கடைக்கு வந்த பிறகும் அவளை விடும் எண்ணமில்லை. பறவை போல பறந்து விடுவாளோ என்கிற பயம் அவனுக்கு.
அந்த பெண் பட்சிக்கு அவன் கைகளிலிருந்து பறந்து போக எத்தனை நேரம் பிடித்துவிட போகிறது, கடந்த ஒரு ஆண்டு காலமாக பின்னே பைத்தியமாக சுற்றும் இவன் பேச்சை இன்று ஒரு நாள் மட்டுமாவது கேட்டுக்கொள்ளலாம் என்கிற பரிதாபத்தில் அவனுக்கு செவிசாய்த்து நிக்கிறாள், அதற்காக அவன் கைகள் பிடித்து நிற்பது எரிச்சலை மூட்டியது.
அவளுக்கு இளகிய மனம் இல்லாதது போல் முகத்தில் அத்தனை கோவத்தை காட்டினாள்.
மனமே இல்லாமல் விலகி அமர்ந்தவன், “ஏன் சென்னை விட்டு போற?” அவனை திரும்பி பார்த்தவள் கண்ணில் இதற்கும் கோவம் தான்.
“போறேன்னு தெரிஞ்சவருக்கு ஏன் போறேனும் தெரிஞ்சிருக்குமே” வசந்தத்தை மட்டுமே பார்த்த அவன் விழிகளில் அவள் கேள்வியின் தாக்கத்தில் நீர் நிறைந்தது.
இதழ் கடித்து தலை கவிழ்ந்தவன் மீண்டும் தலை உயர்த்தும் பொழுது சற்று தேறி தெரிந்தது.
“ஏன் இந்த அவசர கல்யாணம்? வீட்டுல கம்பெல் பண்றங்களா? நான் வந்து பேசவா?”
“எந்த உரிமைல வந்து பேசுவீங்க?” அவள் கேள்வியில் ஆடி தான் போனான் சித்தார்த்.
“சொல்லுங்க எந்த உரிமைல வந்து கேள்வி கேப்பிங்க? இத்தனை வருஷம் விதி என்ன குடுத்துச்சோ அதை தானே அனுபவிச்சிட்டு இருக்கேன், இப்ப திடீர்னு மாத்த ஏன் முயற்சி பண்றீங்க?” அவளுக்கு சுத்தமாக புரியவில்லை அவனது நடவடிக்கை.
இரண்டு வருடமாக இருந்த சுவடு தெரியாமல் மறைந்தவன் இப்பொழுது முன்னே அடிக்கடி காட்சி தருகிறான். இன்று இத்தனை உரிமையாய்… ம்ஹூம் புடிக்கவில்லை அவளுக்கு.
“ஏன்னா எல்லாமே தப்பா இருக்கு ஜனனி. கல்யாணம் பண்ண பாக்குறாங்க” உள்ளே கொதித்த கோவத்தை பிடித்து வைத்து பேசினான்.
ஜனனி, “தப்பு பத்தி நீங்க பேசுறது தான் எனக்கு வேடிக்கையா இருக்கு” எள்ளல் சிரிப்பு மாறவில்லை அவளிடம்.
“சரி நான் மட்டும் தான் தப்பு. அதுக்குன்னு உன்னோட ஆசை கனவு எல்லாம் புதைச்சு அரை கிழவனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்களா உன் வீட்டு ஆளுங்க, செகண்ட் மேரேஜ் ரெண்டு குழந்தைக்கு அப்பா.” குரலின் சுதி தனித்திருந்தாலும் அவன் கண்ணில் அத்தனை காட்டம் தான்.
“எனக்கும் இது ரெண்டாவது கல்யாணம் தானே. தப்பில்லையே” அவளை இந்த திருமணம் எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பது போல் அவள் பேசுவது அவன் ரசிக்கும்படி இல்லை.
“அவன் பொண்டாட்டி செத்து போய்ட்டா. உன் புருஷன் உயிரோட தானே இருக்கேன்” அவனது எந்த சூடு சொல்லும் அவளை சிறிதும் அசைக்கவில்லை.
கண்ணிலோ முகத்திலோ எவ்வித மாற்றமும் இல்லை, “உணர்ச்சியே இல்லாத மாதிரி இருக்காதாடி. கடுப்பாகுது” பற்களை கடித்து சிடுசிடுத்தான்.
“என் உணர்ச்சி எல்லாம் செத்து மூணு வருஷம் ஆச்சு” தலையில் கை வைத்து இமை மூடி வேதனைப்பட்டவன் சோகம் அவளை துளி கூட மாற்றவில்லை.
எவன் அவளுள் உணர்ச்சிகள் இருந்ததை உணர்த்தினானோ அவனே அதனை துடிக்க துடிக்க எரித்துவிட்டலவா சென்றுவிட்டான், பயிர் முளைக்கும் முன்பே கருகி போவதன் வலி அதனை நட்டவளுக்கல்லவா தெரியும்?!
“நான் உன் வீட்டுக்கு வந்து பேசுறேன் ஜனனி, அப்பா அம்மா கூட வர்றேன்”
அவள் முகத்தில் கசந்த புன்னகை, எழுந்து நின்றுவிட்டாள், “வாழ்க்கைல பரிதாப பிச்சை எடுத்து வாழ்ந்தே சாகணும்னு எனக்கு விதி இருந்தா யார் மாத்த முடியும்?” எத்தனை வேதனையை ஒரு புன்னகையில் வைத்து அவன் மீதே குண்டாய் வீசி சென்றுவிட்டாள்…
இல்லாத பாரமெல்லாம் அவள் சுமக்க, நிதம் முள் மேல் உறங்கினான் சித்தார்த். உண்மையான நிம்மதியான உறக்கம் கண்டு ஆண்டுகள் ஆகியது இருவரும்.
அவள் கூறுவது போல தான் அவனும் நடந்தது. பரிதாபத்தில் நடந்த திருமணம், ஆணவத்தால் அறுத்து எறியப்பட, இடையே துடித்து மடிந்தது அவள் மட்டுமே தான்.
கொஞ்சம் நொண்டி நடந்தவள் இதயத்தில் ஒரு போர்க்களமே நிகழ்ந்தது. ஆசைப்பட்ட ஒன்று காதலாகி போனது அவள் விதியின் சதி தான் போல. பரிதாபம் தானா என அவள் வாக்கியத்தின் உள்ளே ஒளிந்திருந்த மறை கேள்வி அவனுக்கு புரியாமலா இருக்கும்? ஆக எப்பொழுதும் இது பரிதாபமாக மட்டும் தான் இருக்கும் என அவனது அமைதியே கூறிவிட்டது.