நிம்மதியான அவன் வாழ்க்கையில் வந்த தடையாக தன்னை அவன் நினைத்துவிடுவானோ என்கிற பயம் உடல் முழுதும் வியாபிக்க செய்வதறியாமல் அவன் முகத்தை தவிப்போடு பார்த்தாள்.
பேச வருவதும் தயங்குவதுமாய் இருந்தவன் ஒரு கட்டத்தில் வெடித்தேவிட்டான், “மொத்தமா சிதைச்சிட்ட ஆரோஹி” உஷ்ணம் அவன் சிரஸிலிருந்து கண்களில் மொத்தமாய் ஆக்ரமித்துவிட்டது.
அத்தனை கோவம் அதில், இவளது வார்த்தனை இன்னும் வருத்தியது மனதினை. நேசிப்பை உண்மையாய் வைத்த மனதிற்கு தான் அதிகமான அடி கிடைக்குமாம்.
அது அவன் வாழ்வில் நிரூபணமானது. அவனுக்கு இந்த நிலையென்றால் யோசிக்காமல் வெளியேறிய அஸ்வின் வார்த்தை அவன் மனைவியை சுக்கு நூறாக உடைத்துவிட்டது. அவளின் இயக்கமே நின்று போனதை போல் பெண் சிலையாகினாள்.
“ஒவ்வொரு நிமிஷமும் உன்னால செத்துட்டு இருக்கேன். யாருக்கும் கஷ்டம் குடுக்க கூடாதுனு தானே ஆரோஹி நீ நினைச்ச, ஆனா உண்மை என்னனா உன்னால மத்தவங்களுக்கு என்னைக்குமே கஷ்டம் மட்டும் தான்”
தடம் மாறிய அவன் வார்த்தை கேட்டவள் கண்களை மூடிக்கொண்டு வெறுப்புறம் திரும்பிவிட்டாள். மனைவி அழுவாள் என அஸ்வின் எதிர்பார்க்க அவளோ உடல் இறுகி கற்சிலையாய் மாறிவிட இன்னும் ஆத்திரம் அடங்கவில்லை போல அவனுக்கு.
“எத்தனை நாடகம், எத்தனை பொய்? தியாகியா மாற ட்ரை பண்றிங்களோ. பட் சாத்தியமா சொல்றேன் உன்னோட இந்த துரோகத்தை என்னால என்னைக்கும் ஏத்துக்கவே முடியாது”
விரல்களை இறுக்கமாய் உள்ளங்கைகளுக்குள் பொத்தி கொண்டவள் செயலால் அவள் உடலின் ரத்தம் நரம்பு ஊசியின் மூலம் சில நொடிகளில் ட்ரிப்ஸ் பாட்டிலோடு கலந்துவிட்டது.
நிறமற்ற அந்த திரவம் செந்நிறமாய் உருமாற அதை உடனே கவனித்த அஸ்வின் உடனே பதறி வெளியே சென்றிருந்த செவிலியரிடம் தகவல் கொடுக்க உள்ளே வந்த அந்த பெண் ஆரோகியின் செயலால் தான் அது நிகழ்ந்ததென அறிந்து, “மேடம் கைய லூஸ் பண்ணுங்க” என்றாள் வேகமாக.
அஸ்வினும் அப்பொழுது தான் அவளை பார்த்து, “ஆரோஹி கைய ப்ரீயா விடு” கொஞ்சமும் அவளது கைகளின் இறுக்கம் மட்டுப்படவில்லை.
“மேடம்…”
“ஆரூ” அவள் பார்வை வெற்று சுவற்றில் நிலைநாட்டியிருப்பதை உணர்ந்தவன் தானே அவள் விரல்களை பிரிக்க பார்க்க இரும்பா இதுவென ஆடி தான் போனான் அவள் கணவன்.
எத்தனை முயன்றும் சிறிதும் தளரவில்லை அந்த பிடி. அவளது உறுதியில் அரண்டவன் அந்த செவிலியரையும் கருத்தில் கொள்ளாது வேகமாக மனைவியின் முகத்தை கருத்தினில் போதித்து தன்னை பார்க்க வைத்தான்.
“ஆரூ… ரிலாக்ஸ் ம்மா”
“ஆரூ… என்னடா இது பார்வை?” கண் சிமிட்டாமல் தன்னை கூர்ந்து கவனிக்கும் அந்த பார்வையில் சிறிதும் அவன் ஆரோஹி தென்படவில்லை, இவள் வேறொருத்தி.
உணர்ச்சிகள், கவலை, கோவம், குறும்பு என மொத்தம் துறந்த வேறொரு பெண் இவள். கண்ணீர் திரையிட்ட விழிகளோடு அவள் கன்னம் வருடினான்.
இந்த பெண் அவனை வார்த்தையே இல்லாமல் அரட்டினாள், “ஹே பட்டாம்பூச்சி பயமா இருக்குடா. என்ன மன்னிச்சுடு ம்மா… ப்ளீஸ்…”
மழை மழையாய் அவன் கண்ணீர் தன்னில் சிந்தியும் அசையவில்லை, “ப்ளீஸ்… ஆரூ. ப்ளீஸ் ப்ளீஸ்… ப்ளீஸ் ரிலாக்ஸ் ஆகு. ப்ளீஸ் ஆரூ, என் மேல உள்ள கோவத்துல உன்ன நீயே ஹர்ட் பண்ணிக்காத. ப்ளீஸ்டா…”
மண்டியிட்டு அவள் கையை தன்னுடைய தலையில் வைத்து அவன் கதறிய பிறகே மெல்ல தளர்ந்தது பெண் உடல். அவளை விட்டு அசையவில்லை அவன். குன்றியிருந்த குற்றஉணர்வுகளை மேலும் தானே புண்ணை சொரிவது போல் கீறிவிட்டான் அஸ்வின்.
அந்த குற்றஉணர்வே அவள் காலடியில் மீண்டும் சரணடைய செய்துவிட்டது. தரையில் அமர்ந்து அவளது கால்களுக்கருகில் தலை வைத்து அவளை பார்த்தே அமர்ந்துவிட்டான் மன்னிப்பு கேட்கும் யாசகனை போல்.
நிமிடங்கள் கடந்தும் அவளும் அவனை பார்க்க கூட இல்லை, அவனும் அவள் முகத்தை விட்டு பார்வையை நகர்த்தவும் இல்லை. இருவருக்குமான பிடிவாதத்தில் வென்றது என்னவோ பெண் தான்.
ஏழு மணிக்கெல்லாம் வீட்டினர் வந்துவிட, ஆரோஹியின் நிலை சகஜமானாலும் அவளையே பார்த்திருக்கும் அஸ்வினுக்கும் திவ்யாவுக்கும் அவளது மாற்றம் தெளிவாக காட்டிக்கொடுத்தது.
அஸ்வின் பக்கம் பார்வையை கூட திருப்பாத தோழியின் செயலும் அவளையே ஏக்கமாய் பார்த்து அமைதியின் உருவமாய் நின்ற அஸ்வினையும் திவ்யா கவனித்துவிட்டாள்.
ஆரோஹியாலும் அதிகம் உண்மையை மறைத்து சிரிக்க முடியவில்லை, உறக்கம் வருவதாக கண் மூடி அவள் படுத்துவிட, அவளுக்கான அமைதியை கொடுத்து அனைவரும் வெளியேறினர் அஸ்வின் உட்பட. திவ்யா மட்டும் அங்கேயே இருக்க, உறக்கம் வராமல் கண் விழித்த ஆரோஹி திவ்யாவை அங்கு சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
“நீ வீட்டுக்கு போகலையா திவி?”
“உன்ன இப்டி விட்டு எப்படிடி எனக்கு போக மனசு வரும்?”
“எனக்காக வேணாம் என் மருமகனுக்காக நீ போகணும்ல…” என்றவள் தோழியை மேடிட்ட வயிற்றில் கை வைத்து, “என்னடா குட்டி பையா உன் அம்மாகிட்ட சொல்ல மாட்டியா? நீ உள்ள இருந்து ஹெல்த்தியா வந்துடுவ தானே?”
“கண்டிப்பா பைல்வானா தான் வருவ. உன் அப்பா கவனிப்பு அப்டி, டேய் குட்டி பையா உன்ன இப்பயே தூக்கணும் போல இருக்குடா”
தோழியின் வயிற்றில் பதிருந்திருந்த அவள் பார்வை திவ்யாவை பார்த்தது, “நான் அவனை ஹக் பண்ணிக்கவா திவி?” இந்த பெண்ணின் மனதினில் என்ன ஓடுகிறதென தெரியாமல் தவித்த திவ்யா தோழியின் வசதிக்காக அவள் படுத்திருந்த மெத்தையில் அமர்ந்துகொள்ள, ஒருக்களித்து படுத்த ஆரோஹி அவள் வயிற்றோடு கட்டிக்கொண்டாள்.
திவ்யா ஆரோஹியின் சிரசை மென்மையாக வருட வார்த்தை இல்லாத அந்த அறையினுள் மெல்ல மெல்ல ஆரோஹியின் விசும்பல் அதிகரிக்க, திவ்யாவுக்கு பயம் உச்சியை தொட்டது.
எவ்வளவு சமாதானம் கூறியும் பெண்ணானவள் சிறிதும் அசைந்துகொடுக்கவில்லை. நினைத்து நினைத்து அழுதது போல் இடைவெளிவிட்டு அழுக தானே மனம் வைத்து தான் விலகி படுத்தாள்.
“ரோஹி என்னடி எதுக்கு இந்த அழுக? வலிக்கிதா, டாக்டர் வர சொல்லவா?” எதற்கும் இல்லை என தலை அசைத்து படுத்தவள் தான் உறங்குவது போல் மீண்டும் பாவனை செய்துவிட, திவ்யா சென்று நின்றது அஸ்வினிடம்.
இரவு ஏதோ காரணம் கூறி அஸ்வினை தானே தன்னுடைய வீட்டிற்கு விடுமாறு மாறனை வைத்து பேச வைத்து விட்டாள்.
இதோ அஸ்வினோடு பயணத்தில் இருந்த பொழுது, “ரோஹி கிட்ட ஏதாவது சொன்னிங்களா?”
“உன்கிட்டயாவது ஏதாவது பேசுனாலா ம்மா?”
இல்லை என தலை ஆட்டினாள், அஸ்வினுக்கு மட்டும் கேட்கும் வகையில், “ரொம்ப அழுகை ண்ணா. அவ இப்டி அழுது நான் பாத்ததே இல்ல, ஏன் ண்ணா?” இவளும் அழுக ஏற்கனவே குற்றஉணர்ச்சியில் இருந்தவனை இது இன்னும் பாதித்தது.
“ஏன் முன்னாடியே சொல்லலனு கேட்டு கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டேன் ம்மா” என்றுரைத்தவனுக்கு அவளது எதிர்வினை இன்னும் நெஞ்சினில் திகிலூட்டியது.
“என்கிட்ட கேக்க அவளுக்கு என்ன திவ்யா இப்டி ஒரு யோசனை? பணத்துக்காக லோன் வர போய்… இப்போ கஷ்டப்படுறது யார்? அவளை இப்டி பாக்க முடியாம நான் தவிக்கிற தவிப்பு எனக்கு தான் தெரியும்…”
“உங்க கஷ்டம் எனக்கு புரியாம இல்ல, அவளுக்கு ஏதாவது ஒரு ரீசன் இருக்கும்”
“அப்டி என்ன உயிரை பணயம் வக்கிர ரீசன் இருந்துட போகுது? நல்லது பன்றேன்னு நினைச்சு எல்லாரோட நிம்மதியையும் மொத்தமா சூறையாடிட்டு போக பாக்குறா” வருத்தத்தை பிடியில் இருந்தவனுக்கு மீண்டும் கோவம் வந்து ஒட்டிக்கொண்டது.
“அண்ணா…” திகைத்தாள் திவ்யா அஸ்வினின் பேசினில்.
“இத மாதிரியே தான் ரோஹிக்கிட்ட பேசுனீங்களா?”
“இந்த மாதிரி இல்ல, இதையே தான் சொன்னேன்” என்றான் அஸ்வின் வெடுக்கென.
தோழியின் மனம் என்ன பாடுபடுமென உணர்ந்தவளுக்கு தன்னையும் மீறி அழுகை பிறந்தது.
“ஏதோ கோவம் திவ்யா, சாரி ம்மா”
“சாரி சொல்லி ஒன்னும் ஆகப்போறதில்ல ண்ணா” திவ்யாவின் கோவம் அஸ்வினை சற்று அதிர தான் வைத்தது.
“கோவம் மனுஷனை எவ்ளோ தூரம் உறவுல இருந்து தள்ளி வைக்கணும்னு தெரியாது உங்களுக்கு, அந்த கோவத்தால வர்ற வார்த்தைல மொத்தமும் இழந்து நிக்கிற என் ரோஹிக்கு தான் தெரியும்” அஸ்வின் புரியாமல் திவ்யாவை பார்த்து மீண்டும் தெருவினில் கவனம் செலுத்தினான். ‘
“ரோஹி அப்பா யார் தெரியுமா?” இல்லை என்றவனிடம், “கதிர்வேலன் இண்டஸ்ட்ரீஸ், தெரியுமா?” அது தெரியாமல் போகுமா, தென் இந்தியாவில் பிரசித்தி பெற்ற ஆடை உற்பத்தி மையம்.
“அதோட ஒரே வாரிசு தான்ஆரோஹி” திவ்யாவின் செய்தியில் அஸ்வின் கைகளில் இருந்த வாகனம் சற்று தடுமாறி பின் சீரானது.
“அப்றம் ஏன்?”
“வாழ்க்கைல சந்தோசத்தை மட்டுமே பாத்து வளர்ந்த பொண்ணுக்கு திடீர்னு சந்தோஷம்னா என்னன்னே தெரியாம போனா அதோட வேதனை வார்த்தையால சொல்ல முடியாதுல… அப்டி தான் ஆராஹிக்கு.
அவ நயந்த் படிக்கிறப்போ அம்மா அப்பா ஒரு ஆக்சிடென்ட்ல அவ கண்ணு முன்னாடியே இறந்துட்டாங்க. ரொம்ப அழகான கபிள்ஸ், ஒருத்தர் ஒருத்தர் அவ்வளவு அனுசரணையா, மத்தவங்க சந்தோசத்தை முகத்தை பார்த்தே தெரிஞ்சு புரிஞ்சு நடக்குறவங்க.
அவங்க உலகமே ஆரோஹி தான். எவ்ளோ வேலை இருந்தாலும் தன்னோட குடும்பத்துக்கு குடுக்குற முக்கியத்துவம், நேரம் பாத்து எனக்கே பொறாமையா இருக்கும். ஒரு குடும்பம்னா இப்டி தான் இருக்கணும்னு பாக்குற எல்லாருக்கும் ஆசை வரும்.
அப்டி இருந்த பெத்தவங்க இறப்பு தன்னோட கண் முன்னாடி நடந்து அதுக்கு நாம எதுவுமே பண்ண முடியாம தவிக்கிரதை விட கொடுமையான விஷயம் வேற எதுவும் இல்ல.
ரொம்ப சின்ன வயசு, அவ அன்னைக்கு அழுத அழுகையை பாத்து அந்த கூட்டமே அழுதுச்சு. யாராலயும் சமாதானம் படுத்த முடியல. ரொம்ப நொறுங்கி போய்ட்டா…
இதுக்கு அவ அன்னைக்கே இறந்து போயிருக்கலாம் போல அடுத்த அடுத்த சம்பவம். அதுவரை தொழில், குடும்பத்து மேல கொஞ்சமும் அக்கறை இல்லாத அவ சித்தப்பா வந்து தொழில்ல ஆரம்பத்துல அபகரிச்சு, அப்றம் ஆரோஹிய டார்ச்சர் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டாங்க.
அவளோட பெத்தவங்க இறப்புக்கு காரணமே அவ தான், அவங்க குடும்ப நிம்மதி போனதே அவ தான்னு இல்லாததை பேசி பேசி மெண்டல் டார்ச்சர் பண்ணி சூசைட் வர போய்ட்டா ண்ணா”
வாகனத்தை ஓரம் நிறுத்தியவன் திவ்யாவை விழிகள் விரித்து பார்க்க அதில் மொத்தமும் பயம் தான்.
“என் ஆரூ…” அவனால் பேச முடியவில்லை.
“ஸ்கூல் விட்டு எல்லாரும் வீட்டுக்கு போனப்போ இவளை காணம்னு தேடிட்டு இருந்தேன் ண்ணா, அப்போ… *விசும்பல்* மாடில நின்னு குதிக்க ரெடியா இருந்தா. என்… என் *விசும்பல்* உயிரே போச்சு. கத்தினேன், அழுதேன் கேக்கவே இல்ல, பேய் புடிச்ச மாதிரி என்ன வெறிச்சு பாத்துட்டே இருந்தா.
அந்த நேரம் அங்க எதேச்சையா வந்த ரெண்டு பொண்ணுங்க அவளை புடிச்சிட்டாங்க. கொஞ்சம் விட்டிருந்தாலும் என் ஆரோஹி எனக்கு இல்லாமலே போயிருப்பா. இந்த விஷயம் அவ சித்திக்கு தெரிஞ்சு அதையும் பெருசாக்குணங்க. பைத்தியம் புடிச்சிடுச்சுனு டிரீட்மென்ட் எல்லாம் குடுத்தாங்க” அடி வயிற்றினை பிடித்து கண்களை மூடி அழுதாள் திவ்யா.