“அதையே சாக்கா வச்சு பிஸ்னஸ், வீடு எல்லாம் அவ சித்தப்பா பேர்க்கு மாறிடுச்சு. அவ்ளோ தான் அவங்களுக்கு அவ தேவை போல, சென்னைல ஒரு ஹாஸ்டல்ல டென்த் சேர்த்துவிட்டு போய்ட்டாங்க.
அந்த ஒரு வருசமும் எங்களுக்கு நீ தொல்லை, இடைஞ்சல்னு வார்த்தையை கேக்க முடியாம உயிரையே விட துணிஞ்சிட்டா ண்ணா. வெளிய எவ்ளோ சிரிச்சாலும் அவளோட சோகம் அந்த சிரிப்புல மறைஞ்சு நிக்கும்.
எப்ப தான் அந்த முகத்துல உண்மையான சிரிப்பை பாக்க போறேன்னு தவிச்ச எனக்கு என்னோட வளைகாப்புல தான் நிம்மதி பிறந்துச்சு. உங்கள உங்க குடும்பத்தை முழுசா ஏத்துக்க பழகிட்டா ண்ணா. அவளோட நம்பிக்கையை வீணாக்கிடாதீங்க ப்ளீஸ்”
கை எடுத்து கும்பிட்டு திவ்யா கேட்க பட்டென அவள் கையை பிடித்து தடுத்தவன் நினைவெல்லாம் திவ்யா கூறிய ஒரு விஷயத்தில் வந்து நின்றது.
அன்று தற்கொலைக்கு முயன்ற பொழுது அவள் கொடுத்த அதே வெறித்த பார்வையோடு இன்று தான் பார்த்த ஆரோஹியின் இலக்கில்லா வெறித்த பார்வையும் ஒன்றாக இருந்துவிட கூடாதென அவன் வாகனத்தில் காட்டிய வேகம் நினைவிலாத அவனுக்கே தெரியவில்லை.
திவ்யாவை வீட்டினில் சேர்த்து புயலென மருத்துவமனை அடைந்திருந்தான். நிம்மதி மூச்சு விட முடிந்தது அவன் மனைவியை கண்ணில் பார்த்த பிறகு தான். இலக்கியா என்கிற அந்த செவிலியரோடு பேசிக்கொண்டிருந்தாள் ஆரோஹி.
நேற்று இருந்த துள்ளல் கொஞ்சமும் இல்லை. இவன் வந்ததும் பெற்றோரை அனுப்பி வைக்க அஸ்வினின் தொடர்ந்த பார்வையை உணர்ந்த அந்த செவிலியர் இருவருக்குமேயான தனிமையை கொடுத்து வெளியேறியிருந்தாள். தான் வந்ததும் மீண்டும் நாடகம் நடத்த துவங்கியிருந்தது அந்த பெண் மயில்.
நேரம் பொறுத்து பார்த்தான். அவளும் உறங்குவது போல் கண்ணை மூட சிரமப்படுவது அப்பட்டமாக தெரிந்தது.
அதற்கு மேல் பொறுக்காமல் ஊடல் என்னும் கோலத்திற்கு முதல் புள்ளியை வரைய அவளருகே சென்றவன் சுருங்கி மூடியிருந்த அந்த பட்டாம்பூச்சி இமைகளின் மேல் தன்னுடைய அழுத்தமான இதழ்களை பதித்து அவள் இடையோடு கைகளை கட்டிக்கொண்டான்.
அஸ்வின் தன்னை நெருங்குவதை அவன் வாசனை வைத்தே உணர்ந்திருந்த ஆரோஹி விழிகளை மெல்ல மலர்த்த எத்தனிக்க அவன் இதழ் சூட்டில் வியர்வையை வெளியேற்றியது அவள் கண் இமைகள். அதோடு நில்லாமல் அவளை ஒரு பக்கமிருந்து நெஞ்சோடு கணவன் அணைக்க பட்ட பாடெல்லாம் வீணானது தான் மிச்சம்.
“போதும்டா என் பட்டாம்பூச்சி அனுபவிக்கிற வேதனை” இதழ்கள் இமைகளில் உரசிய வண்ணம் மற்றொரு இமைக்கு இடம் மாறியது.
“ரிலாக்ஸ் ஆரூ” இறகாய் வருடிய அவன் வார்த்தையின் தாக்கத்தில் கைகள் ஆறுதலை தேட துவங்கியது. அவள் வேதனை உணர்ந்தவன் கண்ணீர் வழியும் கன்னத்தை கன்னம் உரசி துடைக்க, அவன் சட்டை பிடித்து சற்று தள்ளி நிறுத்தினாள்.
அஸ்வின் உள்ளம் தன்னை இறுக்கமாய் பற்றியிருந்த மனைவியின் கைகளை குறிப்பெடுத்துக் கொண்டது. இன்னும் கோவமும் தெரியவில்லை அவள் விழியினில், நீ என் அருகில் வரவே வேண்டாம் என்னும் உத்தரவு மட்டுமே அதிலிருந்து.
“ஆரூம்மா உன் நாராயணா மேல கோவமா?” அவனை தள்ளி நிறுத்த முயன்று தோற்று போனது பெண் பாவை.
“பேசு ஆரூ” மன்றாடினான் அவள் முகம் நெருங்கி.
“உன் மேல தப்பு இருக்கு தானே ஆரூ, ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லிருக்கலாம்ல. என்ன பத்தி யோசிக்கவே இல்ல தானே நீ? எப்படி நீ இல்லாம நான் இருப்பேன்? இல்ல என் மேல நம்பிக்கை இல்லாம போச்சா உனக்கு?”
“இலக்கியா க்கா…” ஆரோஹி சத்தமாய் அந்த செவிலியரை அழைக்க அவளது அழைப்பில் வேகமாக உள்ளே வந்த அந்த பெண் அஸ்வின் ஆரோஹியை அணைத்த வாக்கில் நின்றதை பார்த்து தயக்கமாய் அப்படியே நின்றுவிட்டாள்.
அஸ்வின் தான், “நீங்க போங்க நான் பாத்துக்குறேன்” என்றான்.
அவளோ வெளியே செல்ல தயக்கமாய் ஆரோஹிக்கு தன்னுடைய தேவையோ என நிற்க, “என் ஆரூவ நான் பாத்துக்குவேன் சிஸ்டர்” அவனது உறுதியான வார்த்தையில் அந்த பெண் சன்னமான சிரிப்போடு வெளியேறியிருந்தாள்.
“என்ன தவற எல்லோர்கிட்டையும் நீ பேசுவ அப்டி தான?” அவளது மௌனம் அவனை சுட்டெரிக்க, “என் கஷ்டம் உனக்கு புரியவே இல்ல தானே ஆரூ?”
“நல்லாவே புரியிது, எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சும் உங்கள ஏமாத்திட்டேன்னு நீங்க கஷ்டப்படுறது எனக்கு ரொம்ப நல்லாவே புரியிது” ஸ்தம்பித்து போனான் அஸ்வின்.
இது என்ன தான் வாகனத்தை ஒரு வழியில் செலுத்த சக்கரமோ வேறு பாதையில் கட்டுப்பாட்டை மீறி பயணிக்கிறதே. சொல்லின், வார்த்தையின் வீரியத்தை அவள் வேதனை முதன்முறையாக அஸ்வினுக்கு உணர்த்தியது.
“டேய் ஆரூ தப்பா புரிஞ்சிகிட்ட”
“எனக்கு தூக்கம் வருது” தன்னை அணைத்திருந்த அஸ்வின் கையை பிரித்தெடுத்து திரும்பி படுத்து கண் மூடினாள்.
அவளையே சில கணங்கள் பார்த்த அஸ்வின் வெளியே சென்று விட, உள்ளே வந்த செவிலியர் ஆரோஹி கைகளில் மாட்டியிருந்த ஊசியை அவிழ்த்து வைத்தாள்.
“போகலாம் சார்” அஸ்வினிடம் அந்த பெண் கூற, அவளுக்கு நன்றியை வைத்தவன் ஆரோஹியிடம்.
“என் கூட வெளிய வருவியா ஆரூ?” இருண்டு கிடந்த அஸ்வின் முகம் அவன் மனைவியின் மனதினை நெறிக்க நீர் கோர்த்த விழிகளோடு வெளியேற, அவள் பதில் உணர்ந்தவன் அவள் பின்னோடு சென்று கைகளை அவளுக்கு வலிக்காதவாறு பிணைத்துக்கொண்டு தனியான ஒரு பாதையில் அழைத்து சென்றான்.
அது தினமும் அஸ்வின் வீட்டினர் மட்டும் பயன்படுத்தும் பாதை. மருத்துவமனையின் உள் பகுதியில் எவரும் அரிதாய் பயன்படுத்தும் பாதையை அஸ்வினுக்கும் பயன்படுத்த அனுமதி கொடுக்க பட்டிருந்தது.
மனைவியை அமர வைத்தவன் அவள் வசதிக்கு ஏற்றார் போல் தண்ணீர், மருந்து, தலையணை என சகலமும் வசதி செய்து கொடுக்க அவனது அன்பினில் நெகிழ்ந்து உருகியது ஆரோஹி மனம்.
ஆரோஹியின் நலனை அடிக்கடி திரும்பி பார்த்து உறுதி செய்தவன் அவளிடம் பேச மட்டும் இல்லை. வாகனம் இறுதியாக செல்லும் திசை, நின்ற இடம் பார்த்து அதிர்ந்த ஆரோஹி அதிர்ச்சியோடு அவ்விடமே அமர்ந்திருக்க, அஸ்வின் தான் அவளை அழைத்து செல்ல வேண்டியதாகியது.
கதவினை திறந்து அஸ்வின் வழி விட, எதுவும் பேசாமல் அந்த அடுக்கு மல்லி செடிகளை பார்வையிட்டு அமைதியாக நின்றவளிடம், “உன் பிறந்தநாள் அன்னைக்கு என்ன நீ ஏன் இங்க கூட்டிட்டு வந்தனு எனக்கு தெரியாது ஆரூ, இன்னைக்கு உன்ன இங்க கூட்டிட்டு வரணும்னு தோணுச்சு”
உள்ளுக்குள் பரவி விரிந்த உணர்வினை கட்டுப்படுத்தி மரத்தினடியில் அமர்ந்தவள் கண்களை மூடி சாய்ந்துவிட்டாள்.
அவளுக்கு தேவையான நேரம் கொடுத்து அவளையே பார்த்திருந்த அஸ்வினுக்கு மனைவியை மார்போடு அணைத்து ஆறுதல் கூற அத்தனை ஆவேசம் பிறந்தது.
ஒரு மணி நேரம் கடந்தும் மனைவி தண்ணீர் கூட அருந்தவில்லை என்பதற்காக அவள் அருகே மண்டியிட்டு அமர்ந்தவன் முடிச்சிட்டிருந்த அவள் நெற்றியினை பெருவிரல் கொண்டு மென்மையாக வருடினான்.
அவள் சோம்பலாக விழி மலர்த்தி பார்க்க, தண்ணீரை நீட்டினான் அஸ்வின். அவன் நீட்டியதை வாங்காமல் அவனையே பார்த்திருந்தவளின் பார்வை சம்பாஷணை புரியாதவன்,
“பசிக்கிதா? இரு உனக்கு புடிச்ச பூரி ஆர்டர் பண்ணேன், கார்ல இருக்கு எடுத்துட்டு வர்றேன்” நகர போன அஸ்வின் கை பிடித்து எழ விடாமல் தடுத்தவள் எண்ண ஓட்டம் புரியாமல் தடுமாறினான் அஸ்வின்.
“ஆரூ…” அவ்வளவு தான் அவன் கையை விட்டு அவன் கழுத்தை கட்டிக்கொண்டு கதறினாள்.
அவளது அழுகை சத்தம் அவ்விடத்தையே நிறைக்க, மனைவியை தேற்ற வழி தெரியாமல் தடுமாறி போனான் அஸ்வின். இயன்ற மட்டும் அழுத்தவள் சோர்வாய் அவனை விட்டு பிரித்து அவன் முகத்தை கைகளில் பிடித்து,
“என்ன புடிக்காம போச்சா அஸ்வின் உங்களுக்கு?”
ஈர விழிகளோடு அவள் கேட்ட கேள்வி இவனை ரணமாய் வாட்டியது, “இல்லடா. நீ என் உயிருடா நீ, உன்ன புடிக்காம போகுமா”
“அப்றம் ஏன் என்கிட்ட அப்டி பேசுனீங்க?” அவனிடம் பதிலே இல்லை.
“எனக்கு… எனக்கு அப்பாகிட்ட போகணும் போல இருக்கு” உதடு துடிக்க அழுதபடியே அவள் கூறியதில் அஸ்வின் மடிந்தே போனான்.
“ஆரூ…”
“வேணாம், எனக்கு இங்க மூச்சு முட்டுது. எல்லாருக்கும் என்னால கஷ்டம் தானே, உங்களுக்கும். நான் அப்பாகிட்ட போறேன், அப்பா அம்மாவை பாக்கணும் போல இருக்கு”
சிறு பிள்ளை போல் அழுதவளுக்கு இந்த கனமான சூழலை கையாளும் சக்தியோ நம்பிக்கையோ மொத்தமாய் சிதைந்திருந்தது. துணை நிற்க ஒரு உறவு இல்லையே என்கிற ஏக்கம் வேறு அஸ்வினின் கோவ வார்த்தையில் உதிக்க, உலகினில் தனிமைப்பட்டு உணர்வு.
“தெரியாம சொல்லிட்டேன் ஆரூ, உன்னால எனக்கு என்னைக்கும் கஷ்டமே இல்ல ம்மா”
அவன் கூற இல்லை என தலை அசைத்தவள் அவன் முகத்தையே பார்க்க மறுத்தாள், “இந்த மாதிரி எல்லாம் பேசி என்ன கொஞ்சம் கொஞ்சமா கொல்லாத ஆரூ. நானும் மனுஷன் தானேடி.
ஆசை, காதல், உற்சாகம்னு ஒவ்வொன்னையும் இத்தனை நாள் கண் முன்னாடி காட்டி திடீர்னு எங்கையோ இருட்டுல மறைஞ்சு நின்ன போல நீ காணாம போக போறனு சொன்னா எனக்கும் கோவம் வரும் தானே? இது தான் வாழ்க்கை, இனி இவ தான் நம்ம உலகம்னு இந்த வாழ்நாள்ல மிச்சமிருக்க ஒவ்வொரு நாளைக்கும் என் மனசு ஒரு பிளான் போட்டு வச்சிருக்கு.
அதெல்லாம் நடக்காதுடா மடையா, உன்ன ஏமாத்த தான் வந்தேன்னு நீ கண்ணாமூச்சி ஆடிட்டு போனா எனக்கு ஏற்படுற வழி உனக்கு தெரியல தான?”
“இப்பவும் நீ பண்ண காரியம் உனக்கு புரியல, என்னோட ரெண்டு நிமிச வார்த்தை தான் உனக்கு பெருசா படுது. ஆனா எனக்கு நீ தான்டி வேணும். உனக்காக இந்த உலகத்தோடு என்ன, உன்கூடவே நான் சண்டை போட தயாரா தான் இருக்கேன்.
இதுல உனக்கு என் மேல எவ்ளோ கோவம் வந்தாலும் எனக்கு கவலை இல்லை. பேச மாட்டியா பேசாமையே இரு. இனி என்னோட முழு கவனமும் என்னோட பட்டாம்பூச்சியை மறுபடியும் சந்தோசமா பறக்க வைக்கணும். அவ்ளோ தான்”
அவ்வளவு தான் என் பேச்சு என முடித்தவன் தன் கன்னம் பற்றியிருந்த ஆரோஹி கைகளை எடுத்து, “போகலாமா?” என கேட்டான்.
பெண்ணவளோ ஒதுங்கி அமர்ந்து காய்ந்த இலை, மலர்களை ஒதுக்கி அவன் முகம் பார்த்தாள்.
“இந்த பார்வைக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல” முணுமுணுப்போடு அவள் அருகே அமர்ந்தவன் காதில், “இந்த அண்டர்ஸ்டாண்டிங்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல” என மனைவி கூறியதும் காதில் கேட்க இவன் இதழில் மெல்லிய புன்னகை.
அவன் பட்டாம்பூச்சி சிறகடிக்க தயாராகிவிட்டதென்கிற தெம்பே அவனுக்கு போதுமானதாக இருந்தது.
அஸ்வின் அமரவும் அவன் கை வளைத்து தோள் சாய்ந்தவள், “இந்த தோட்டம் அம்மாவுக்கு ரொம்ப புடிச்சது” கூறும் பொழுதே குரல் கமறியது ஆரோஹிக்கு.
“அதோ தெரியிற வீட்டுக்கு தான் நாங்க ஒரு அடிக்கடி வந்து போவோம்” அந்த தோட்டத்தின் இறுதியில் தென்பட்ட பெரிய வீட்டினை காட்டினாள்.
“சென்னைல ஒரு வேலைக்கு அப்பா இங்க இருக்க வேண்டிய சூழ்நிலை, அதுனால வீக் எண்டுல இங்க வந்துடுவோம். எங்களுக்கே எங்களுக்கான ஒரு அமைதி இங்க இருக்கும். அப்பா அம்மா விவசாயா மாறிடுவாங்க. நாங்க உருவாக்குவது தான் அங்க இருக்க தென்னை மரம் எல்லாம்.
இந்த அடுக்குமல்லி அம்மாவுக்கு அவ்ளோ இஷ்டம். அதுக்காக அப்பா நிறையா வச்சிட்டாங்க. அம்மா அதை கோர்த்து வக்கிரபோ அப்பா முகத்துல அப்டி ஒரு சந்தோசம் வரும்.
எனக்காக அந்த வீடு பக்கத்துல ஒரு குட்டி குளம் மாதிரி கட்டி விட்டாங்க, இப்டி இந்த இடம் எங்களுக்கு ரொம்ப நெருக்கம். அதுக்காக தான் உங்கள கூட இங்க கூட்டிட்டு வந்தேன்.
கோயம்பத்தூர் போனாலும் அடிக்கடி இங்க வருவோம். அப்டி ஒரு நாள் வந்தப்போ தான் அம்மா அப்பாவை கண்டல் பண்ணி ரோட்டுக்கு ஓடிட்டாங்க. துரத்திட்டே போன அப்பா பின்னாடியே நானும் போனேன்”
அன்றைய நாளில் நினைவில் அஸ்வின் கையில் கண்ணீர் துடைத்தவள் அங்கேயே நெற்றி முட்டி அவன் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.
“நைட் நேரம் கிரிக்கெட்டரே… அம்மா கவனிக்கல அங்க வந்த லாரிய. நான் பாத்து போகுறதுக்குள்ள என்ன தள்ளிவிட்டு அப்பா அம்மாகிட்ட போய்ட்டாங்க. லாரி வந்த ஸ்பீட்ல கண்ட்ரோல் இல்லாம என் கண் முன்னாடியே…” பேச முடியாமல் அவனையே ஆறுதலாய் எண்ணி அழுது கரைந்தாள்.
“ரொம்ப கஷ்ட பட்டேன் கிரிக்கெட்டரே… நினைச்சு பாக்க முடியாத அளவு அழுதேன். என் குடும்பம்னு நம்புனவங்க எங்க சொத்துக்காக மட்டுமே கூட இருந்து என்ன பைத்தியமாக்கி சொத்து எல்லாம் அவங்க பேர்க்கு மாத்திட்டாங்க. இந்த தோப்பு கூட என் சித்தப்பா பேர்ல தான் இருக்கு.
ராசியில்லாதவ, அடங்காபிடாரி, திமிரு புடிச்சவ, அதிகபிரசிங்கினு என் அப்பா அம்மா போனதும் நான் வாங்காத பட்டமே இல்ல. எல்லாத்தையும் தங்கிட்ட என்னால என்னோட கஷ்டத்தை மறைச்சு சிரிச்சதுக்கு பைத்தியக்காரினு குடுத்த பேர் தான் ஏத்துக்கவே முடியல.
என் அப்பா அம்மா மேல தப்பு தானே நாராயணா? என்ன தனியா விட்டுட்டு போனது தப்பு. அன்பை தவிர சூழ்ச்சி வஞ்சகம் எல்லாம் நிறைஞ்ச மனுசங்க இந்த உலகத்துல இருக்காங்கனு சொல்லி தராம போனது அதை விட பெரிய தப்பு.
இதுகெல்லாம் மேல, பிரச்சனை வந்தா அதை எதிர்த்து நிக்க சொல்லி தராம அவங்க கைக்குள்ளயே வச்சது இப்போ வர சரியா தப்பானு எனக்கு தெரியலையே…”
“நம்ம கல்யாணம் முன்னாடி எனக்கு கேன்சர் இருக்குறது தெரிஞ்சு அதை எப்படி க்யூர் பண்றதுனு தான் யோசிச்சேன். பணம் எல்லாம் ரெடி பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டேன்.
திடீர்னு கல்யாணம். அதுல இருந்து வெளிய வந்து இன்னொரு தடவ டெஸ்ட் எதுக்கு பாக்குறப்போ தான் தெரிஞ்சது இனி ஆபரேஷன் பண்றது கூட ரிஸ்க்னு”
“ஓ நீங்களே முடிவு பண்ணிட்டிங்களா மேடம்?”
“நா… நான் பேசுகிறேன் நாராயணா” என்றவள் அவனை ஆறுதல்படுத்த முதுகை வருடினாள், “ஏதோ லூசு மாதிரி யோசிச்சிட்டேன், இனி எதுக்கு எல்லாரையும் உண்மை சொல்லி ஹர்ட் பண்ணிட்டுனு மிச்சம் இருக்குற கொஞ்ச நாள்ல சந்தோசமா உங்க கூட வாழ்த்துடனும்னு…”
திக்கி திணறி பேசியவளை இறுக்கமாக அணைத்து அவள் தோள் சாய்ந்தே அழுதான்.
அவளது முட்டாள்தனத்தை இப்பொழுது சுட்டிக்காட்டி அவளை மேலும் வேதனைப்படுத்த விரும்பாமல், அவளை சூழ்ந்திருந்த இருளை அகற்றி வெளிச்சத்திற்கு கொண்டு வர மட்டுமே முனைந்தான்.
அவனது இளவேனில் அவள், அவனது வாழ்க்கையை சிறை செய்து வாழும் பருவசிறை அவள். அந்த பனி சாரல் இல்லாது அவனது உயிர் செடி தான் துளிர்ந்திடுமா? பேதை பெண் போட்ட கணக்கு தவறி அவனை அல்லவா இப்பொழுது தாக்கிவிட்டது.
காற்றின் தூரத்து இசையில் அவளை மீட்டெடுப்பேன் என கணவன் வாக்குறுதி கொடுத்து மார்பினில் மனைவியை தங்கியிருக்க, சாபமாய் வந்தது சித்தார்த்தின் அழைப்பு,
“டிரீட்மென்ட் பண்ணலாம் அஸ்வின்… ஆனா… சான்ஸ் 75 – 25 தான்” செய்தி கொடுத்த அவனுக்கே நிலை பரிதாபமெனில், செய்தியை கேட்டு ம்ம் கொட்டி உயிரை கையில் ஏந்தி அதை பாதுகாப்பேனென சபதமெடுத்த அஸ்வினின் நிலை தான் பரிதாபமானது.
அவளென்னும் உயிர் கிடங்கை வசப்படுத்த அந்த காதல் உரிமையாளனுக்கு எத்தனை சோதனை தான் தருமோ இந்த காதல்…?!