அது மருத்துவமனை என கூறினால் எவரும் நம்பவே மாட்டார்கள். அந்தளவிற்கு உற்சாகமும் கேலியாக காணப்பட்டது. நேரம் இரவு ஏட்டை தாண்டியும் எவருக்கும் பசி உறக்கம் வரவில்லை போல். காரணம் அங்கு கூடியிருந்த இளவட்டங்களால் தான்.
ஆரோஹி, சித்தார்த், மாறன், திவ்யா, வருண், ப்ரியதர்ஷன் (வருண் அத்தை மகன்) என ஒரே அமளிதுமளி தான். மாலை ஆறு மணிக்கு துவங்கிய அரட்டை, இன்னும் தொடர்கிறது.
இடையிடையே ஆரோஹியின் ஆரோஹியின் ஆரோகியத்தை பரிசோதிக்க வந்த செவிலியர் கூட தயங்கி தயங்கி ஏதோ சொல்ல வந்து, பிறகு வெளியே பயத்தில் ஓடிவிட்டனர்.
மற்ற மனிதர்களாக இருந்தால் இந்நேரம் மிரட்டி முறைத்து கூட்டத்தை களைத்து விட்டிருப்பார்கள். இங்கோ மருத்துவமனையின் இளம் முதலாளிகள் இருவரும் உள்ளனரே, அவர்களை அசைத்து கூட பார்க்க இயலாதே. என்றையும் போல் அல்லாமல் இன்று அரை மணி நேரம் அதிகமாகியிருந்தது.
“சித்து அந்த பையன் வாய மூடு” ஆரோஹி கட்டளையிட, சித்தார்த் உடனே அதனை செயல்படுத்தியிருந்தான்.
“ஆஹ்…” சிரிப்போடு துவங்கிய வருண் இதழில் சிரிப்பு தாராளமாய் இருந்தது.
“காலேஜ் லாஸ்ட் இயர் இருக்கும். அவன் லவ் புட்டுக்குச்சு. மனசு வலிக்கிதுடா வருணுனு ஒரே அழுகை. சரி பாவமேனு பார் கூடி போனேன். ரெண்டு பாட்டில் ராவா அடிச்சிட்டு ரோட்டுல அவன் வாட்டுக்கு புலம்பிட்டே நடக்க ஆரமிச்சிட்டான்.
எனக்கு பயம், இவனாட்டுக்கு வண்டில விழுந்து அடிபட்டு வந்தா வீட்டுல என் தோலை உரிச்சு உப்புக்கண்டம் போட்டுடுவாங்க. என் நேரம் அன்னைக்கு ஒரு ஆள் முழு போதைல வண்டில முன்பக்க ஹாண்ட்பார் புடிச்சு பின்பக்கம் தள்ளிட்டு போறான்.
இந்த முழு போதை நாயி அதுல என்னத்த கண்டானோ அவன் குடிச்ச சரக்கு வேணும்னு நடு தெருல நின்னு ஒரே அதகளம் பண்ணிட்டான். நானும் எவ்வளவோ கெஞ்சி கூத்தாடி பாத்தேன், அடங்கவே இல்ல”
வருண், “ஆமா, சும்மாவே அவன் ஆடுவான், இவன் புடிச்ச பிடிவாதத்துக்கு வீட்டுல சிக்கி அடுத்த ஒரு மாசம் காலேஜ் முடிச்சு நைட் ஷிபிட் இங்க தான். அதுவும் எமெர்ஜன்சி வார்ட்ல, காலேஜ்ல ஆளுக்கு ஒரு பக்கம் படுத்து தூங்குவோம்”
ப்ரியதர்ஷன், “அடேயப்பா என்னமோ வேலை பாத்த மாதிரி தான். நர்ஸ் கூட கடலை போடுவடா நீ”
உடனே மாறன், “மனசு களைப்பா இருந்தா இப்டி அப்டி தான் அதை சுறுசுறுப்பாக்கணும்”
வருணுக்கு பரிந்து பேசிய மாறனின் வார்த்தையில் கிடைத்த சாக்கை விடவேகூடாதென, “அதான பாத்தேன். நீங்க அடிக்கடி ஒரு டாக்டர் கிட்ட பேசிட்டு இருக்குறப்பவே எனக்கு சந்தேகம் தான்”
“டேய் சித்து நல்லா இருக்க குடும்பத்துல கும்மி அடிச்சு விட்டுடாதடா” சாஷ்டாங்கமாக மாறன் சித்து காலை தொட்டுவிட, கணவனை பார்த்து காதல் பார்வை தான் திவ்யாவுக்கு.
அந்த நேரம் சகோதரர்களை தேடி வந்த அர்ஜுன் இவர்கள் பேச்சில் தடைபோடாமல் அமைதியாக ஆரோஹியின் குறிப்பேட்டை எடுத்து பார்க்க, அவனை யாரும் கவனிக்கவில்லை.
“என்ன வேணாலும் சொல்லுங்க, டெய்லி நைட் வர்ற அந்த இலக்கியா சிஸ்டர் ஒரு தனி ரகம்டா, அந்த கண்ணு…” டம் என மெல்லிய சத்தம் கேட்க திரும்பி பார்த்தனர் அனைவரும்.
சித்தார்த் பேசியதை அர்ஜுன் அங்கிருந்த மேஜையில் சாய்ந்து நின்று கேட்க, அவன் கை பட்டு அங்கு வைத்திருந்த கத்திரிக்கோல் ஒன்று கீழே விழ அதில் மொத்த கூட்டமும் அங்கு திரும்பியது.
“ஓ ஹாய் டாக்டர்” சித்தார்த் எதார்த்தமாக அவனுக்கு கை காட்டி, விட்ட கதையை மீண்டும் தொடர்ந்தான்.
“அவங்க வர்ற நேரம் தானே, ஏன் வருண் பாக்குற வரை ஆள் அருமை, குணம் எப்படி?” அவன் கேட்ட கேள்வியில் வருண் தர்ஷன் இருவரும் உள்ளடக்கிய சிரிப்போடு அர்ஜுனை பார்த்தனர்.
‘பைத்தியமா நீ?’ என்னும் ரீதியாக சித்தார்த் அவளை பார்க்க, அவளோ ஒருமாதிரி கண்ணை காட்டி உருட்டினாள்.
“ஓ எஸ் பண்ணிடலாம்”
“ஓ ஹோ” வருண் தர்ஷன் இருவரும் ஒரேநேரத்தில் அர்ஜுனை பார்த்து கேலி பேச அறையின் கதவு சாட்டும் சத்தம் கேட்டது.
அடுத்த நொடி கதவை திறந்து உள்ளே வந்த இலக்கியாவை மொத்த கூட்டமும் சிரிப்போடு பார்க்க, அனைவருக்கும் பொதுவாய் தலை அசைப்பை கொடுத்தவள் அர்ஜுன் அங்கிருப்பதை பார்த்து தன்னுடைய பையிலிருந்து ஒரு உணவு பொட்டலத்தை எடுத்து அவன் பின்னிருந்த மேஜையில் வைத்தாள்.
“இலக்கியா க்கா, இன்னைக்கு என்ன டின்னர்?”
இலக்கியாவிடம் கேட்ட ஆரோஹி, வருணிடம், “டாக்டர் சார் அந்த பாக்ஸ் எடுங்க”
அவனுக்கு கட்டளை போட, சிரிப்போடு, “அர்ஜுன் எடுத்து தரியா பக்கத்துல தானே இருக்க?” வருணோ கோடு போட்டு பார்க்க அர்ஜுன் சக்ரவத்தி பார்வையோ அந்த பாத்திரத்தை வைத்த இலக்கியா மீது தான் இருந்தது.
“உனக்கு இங்க இருக்கு ஆரோஹி” தனக்காக வைத்திருந்த உணவை அவள் கையில் ஒப்படைக்க, பெற்றுக்கொண்ட ஆரோஹியிடமிருந்து அந்த குட்டி படை மொத்தமாக விழுங்கி இருந்தது.
கேட்டு வாங்கிய ஆரோஹிக்கே ஓரிரு கவளம் தான் கிடைத்தது. அத்தனை ருசியாக இருந்தது அந்த சப்பாத்தி மற்றும் பன்னீர் க்ரேவி. எளிமையான முறை தான், அதிகம் என்னை சேர்க்காமல் தேவையற்ற பொடி, காரம் சேர்க்காமல் இரவு உணவிற்கு கச்சிதமாக இருந்ததன் வாசனையே அனைவரையும் இழுத்துவிட்டது.
சப்பாத்தி போக மீதமிருந்த க்ரேவியை வெறுமனே ருசித்து பார்த்துக்கொண்டிருந்த ஆரோஹி புகழ, கேட்ட இலக்கியாவிற்கு திக்கென்றானது.
“ஆரோஹி…” இலக்கியா அதிர்ந்து அவளை பேசவே விடவில்லை பெண்,
“அக்கா சாரி உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். இவன் சித்து உங்களுக்கு தெரியும்ல, என்னோட கொழுந்தன். நல்ல பையன், பிஸ்னஸ் பன்றான், லவ் செட் ஆகவே இல்ல. அதான் நாங்களே நல்ல பொண்ணா பாத்துடலாம்னு முடிவு பண்ணோம். உங்கள பாத்ததும் வேற ஆப்ஷன் போகவே எனக்கு புடிக்கல. சோ உங்களையே எங்க சித்தார்த்க்கு பேசிடலாம்னு முடிவு பண்ணிட்டோம்”
இலக்கியாவின் அமைதியை பார்த்த திவ்யா ஆரோஹியை கை பிடித்து அமைதி காக்க கூற, அவளோ வீம்பிற்காகவே மேலும் தொடர்ந்தாள்.
“என்னது லவ்ஸ் வந்து பின்னாடியே சுத்துவாரா? ஓ ஹோ” வருண், தர்ஷன் இருவரும் சிரிப்போடு ராகமிழுத்து பார்க்க, புரிந்த சித்தார்த்தும் அந்த கூட்டத்தோடு இணைந்துகொண்டான்.
“நம்பிக்கை இல்லனா என் நம்பர் தர்றேன் வாங்க பழகலாம்” படு சீரியஸாக அவன் பேச தவித்தது என்னவோ இலக்கியா தான்.
“ஆரோஹி என்..”
“இலக்கியா” மொத்த அறையையும் தன் பக்கம் திருப்பியது அர்ஜுனின் ஆழமான அழைப்பு.
திடுக்கிட்டு அவனை பார்த்த இலக்கியாவிடம், “கம் டு மை கேபின்” என்றவன் அந்த டிபன் பாக்ஸை எடுத்து நகரப்போக, “சார் டிபன் பாக்ஸ் உங்களுக்கு இல்ல” ஆரோஹி வேகமாக அவனை நிறுத்தினாள்.
“ஆமா அர்ஜுன், ஸ்தெத்னு நினைச்சு மாத்தி எடுத்துட்ட போல நீ” ப்ரியதர்ஷன் அடக்கிய சிரிப்போடு தகவல் கொடுக்க, இலக்கியாவை பார்த்த அர்ஜுன்,
“ம்ம்ம்? யாரோடது?” கூரிய விழியோடு அவளை துளைக்க, சில கணங்கள் தயங்கியவள்,
“உங்க… உங்களோடது” என்றாள்.
அவளது பதிலில் திருப்த்தி அடைந்தவனாய் சென்டிமீட்டர் மேலும் கீழும் தலை அசைத்து ஆரோஹியை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்து புரிந்ததா என பார்க்க, “ஓ நல்லாவே புரிஞ்சது டாக்டர், அக்கா போங்க போங்க” என இலக்கியாவை அனுப்பி வைத்தாள் பெருகிய புன்னகையோடு.
இருவரும் நகர்ந்த பிறகு, “இந்த லவ் ட்ராக் வேற ஓடுதா?” சித்தார்த் வருணிடம் கேட்டான்.
“திருத்தம். கல்யாணம்” அவன் கூறிய பதிலில் ஆரோஹி கூட அதிர்ந்து போனாள்.
“எப்படி எப்படி?” ஆர்வமாய் கேள்வி வைக்க அதற்குள் அஸ்வினிடமிருந்து ஆரோஹிக்கு அழைப்பு வந்திருந்தது.
“அவ்ளோ தான், இனி ஆரோஹி யார்கிட்டயும் பேச மாட்டா. கிளம்பலாம்”
சித்தார்த் மொத்த கூட்டத்தையும் கலைக்க, வருண் ஆரோஹியின் இன்றைய சிகிச்சை பற்றிய தகவல் கொடுக்க திவ்யாவுக்கு ஒரு பக்கம் வலி எடுக்க துவங்கி விட்டது.
பரிசோதித்த மருத்துவர்கள் பிரசவ வலி என உறுதி செய்துவிட, அரோஹியால் அங்கு மெத்தையில் படுத்திருக்க முடியவில்லை. நொடிக்கொருமுறை நிலவரத்தை கேட்டவளுக்கு அன்றிரவு தூக்கம் போனது தான் மிச்சம்.
மறுநாள் மாலை தான் மகிழ்ச்சியான செய்தி வந்து செவிகளை அடைந்தது. ஆண் குழந்தையாம்.
அவள் பேசி பேசியே வரவழைத்தது போல் அத்தனை நிம்மதி. கெஞ்சி கூத்தாடி குழந்தையை பார்த்து வந்த பிறகு தான் சிரிப்பே வந்தது.
குழந்தையை கையில் ஏந்திய புகைப்படத்தை சித்தார்த்திடமிருந்து வாங்கி கணவனுக்கு அனுப்பி வைத்தாள். பார்த்தவனோ உடனே அழைத்துவிட்டான்.
இதற்கும் சரசமாகவே பதில் வந்தது அந்த பக்கம். வெட்கம் முகத்தை சிவப்பாக்க கணவனிடம் சீறினாள், “யோவ் கிரிக்கெட்டரே…”
“சொல்லுடா பட்டாம்பூச்சி”
“நான் குழந்தைய சொன்னேன்”
“நானும் குழந்தைய தான்டா சொன்னேன்” – அஸ்வின்
தலையில் அடித்துக்கொண்டாள் தீராத வெட்கத்தோடு. அவனை பொறுத்த வரை அவன் கூறியதில் பிழையில்லை, அவள் குழந்தை தான் அவனுக்கு.
“போங்க நீங்க கால் கட் பண்ணுங்க” அட்டகாசமான சிரிப்பு சத்தத்தில் அவனே நேரில் வந்து நிற்பது போல் தோன்ற இணைப்பை துண்டிக்க முடியவில்லை அவளால்.
“டேய் பட்டாம்பூச்சி இருக்கியா?” தொண்டையை கனைத்தவன் விளையாட்டை கை விட்டிருந்தான்.
“ம்ம் இருக்கேன் நாராயணா” இலகுவாகியது மனம், அவனது பட்டாம்பூச்சி அழைப்பில்.
‘இவன் வெறும் பேச்சிலே என்னை என்னமோ செய்கிறான்’ அழகாக குறைபட்டது மனது.
“பேபி எப்படி இருக்கு?”
“நாராயணாாாாா….” சிணுங்கியவளின் குரலே அவனை அங்கு இழுத்தது.
“இந்த தடவ நெஜமாவே நான் பேபிய தான் ஆரூ கேட்டேன்”
“ரொம்ப நல்லா இருக்கான். பாக்க பாக்க ஆசையா இருக்கு நாராயணா. அவனை விட்டு வர மனசே இல்ல தெரியுமா?”
“ம்ம்ஹ்ம்…?”
“ம்ம். கை கால் எல்லாம் தொட்டு பாத்தா அச்சோ அத்தனை அழகு. பஞ்சு குட்டி நாராயணா அவன். பசி எடுத்து அழுதா கூட அழகு. ஒன்னு தெரியுமா பிறந்துல இருந்து தூங்கிட்டே இருந்தவன், நான் வச்சிருக்குறப்ப தான் குட்டி கண்ண திறந்து பாத்தான்.
என் மருமகன் நாராயணா. என் கூட செல்ல சண்டை, உரிமை சண்டை போட என்னோட மருமகன் வந்துட்டான்” என்றவளுக்கு தான் எத்தனை பெருமை.
நீர் நிறைந்த ஈர விழிகளோடு அடுக்கி வைத்தவள் அடுத்த நொடி அமைதி காக்க இங்கு அஸ்வின் இதயத்தினுள் சூறாவளி கிளம்பியது.
“ஆரூ ம்மா”
“எனக்கு இந்த குடுப்பணை கிடைக்குமா நாராயணா? இல்லல? என் கர்பப்பைல தான கேன்சர், அப்போ வாய்ப்பு ரொம்ப கம்மி தான?”
“இல்லம்மா. அப்டிலாம் இல்ல”
ஆரோஹி, “இல்ல எனக்கு தெரியும். கொஞ்ச நாள் முன்னாடி ஒரு அழகான கனவு வந்துச்சு ப்பா. பொறுக்க முடியாத வலி, கால் வழியா ஏதோ ஈரம் கசிஞ்சது. பயந்து அழுத என்ன நீங்க கைல தூக்கிட்டு ஹாஸ்பிடல் போறீங்க.
ரொம்ப அழுகுறேன், எனக்கு ஆறுதல் சொல்லிட்டே என் தலையை தடவி விட்டு, “நீ தைரியமா இருந்தா தானே நம்ம குழந்தை பயப்பிடாம இருப்பாங்க”-னு சொல்றிங்க. ரொம்ப நேரம் அழுகுறேன், ஆனா பொருத்துக்குறேன் வலிய.
அப்றம் திடீர்னு குழந்தை அழகுற சத்தம். பொண்ணு சொல்றாங்க நாராயணா. உங்களுக்கு பேபி கேர்ள் தானே புடிக்கும். அது தான் பொறக்குது. ஆனாலும் வலி குறையல, அப்றம் பாத்தா இன்னொரு பொன் குழந்தை. ட்வின்ஸ்… உங்கள கைலயே புடிக்க முடியல, மொத்த ஹாஸ்பிடலுக்கும் நீங்களே ஓடி ஓடி ஸ்வீட் குடுகு…”
கனவா இல்லை தன்னுடைய ஆசையை கூறுகிறாளா என அந்த பக்கம் கேட்ட அஸ்வினுக்கு நெஞ்சடைத்தது. அவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை.
மெல்ல அந்த பக்கம் விசும்பல் சத்தம் கேட்க தன்னுடைய வேதனையை மூடி மறைத்தவன், “ஆரூ, டேய்… நீ எதுக்கு அழகுற? நமக்கு பேபி பொறக்காதுனு யார் சொன்னது? நீ ஹெல்த்தியா ஆனதும் ட்வின்ஸ் என்ன ஒரே பிரசவத்துல நாலு குழந்தைங்க கூட பெத்துக்கலாம். உனக்கு அந்த அளவு ஒன்னும் பிரச்சனை இல்ல ஆரூ” கைபேசியை மெத்தை மேல் வைத்தவளுக்கு கோவமாக வந்தது.
“எந்த பிரச்னையும் இல்லாம இருக்குறவங்களுக்கே இங்க அந்த குடுப்பணை இல்ல, இப்டி கேன்சர் வச்சிருக்குற எனக்கு எப்படி கொழந்தை பிறகும்?
பொய் மேல பொய் சொல்லி என்ன சாதிக்க போறீங்க, இப்டி எந்த சந்தோஷமும் இல்லாம தவிக்கிற எனக்கு இதுக்கு பதிலா சாகுறதே எவ்வளவோ மேல்னு வருது”
பெருகிய கோவத்ததை அடக்க வழியில்லாமல் தடுமாறியவள் கைகள் சிகையை அழுத்தமாய் பற்றியது. நொடிகள் கடக்க தான் பற்றியிருந்த இறுக்கத்தின் அளவு வலியை உண்டாக்க, கையை சிகையிலிருந்து எடுத்தவளுக்கு அடுத்த பயம்.
கைகள் நடுங்க, “நா… நாராயணா” மனைவியின் குரல் நடுக்கம் இன்னும் பயத்தை கொடுக்க உடனே சித்தார்த் எண்ணுக்கு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தான் ஆரோஹி அறைக்கு விரையுமாறு.
“ஆரூ ரிலாக்ஸ்…”
“என்… என்னோட என்னோட முடி. எனக்கு மொட்டை போட்டுடுவாங்கல்ல? என் முடி மொத்தத்தையும் எடுத்துடுவாங்க. வே… வேணாம். வேணாம் சொல்லுங்க நாராயணா. எனக்கு எனக்கு… என்… “
“ஆரூ சொல்றதை கேளு”
“என் மு… முடி ரொம்ப புடிக்கும். ரொம்ப ஆ… ஆசையா வளர்த்தேன். இல்ல இல்ல எனக்கு டிரீட்மென்ட் வேணாம். எனக்கு என் முடி வேணும்”
“ஆரூ. அப்டிலாம் பண்ண மாட்டாங்கடா”
“இல்ல எனக்கு தெ… தெரியும். நடிக்காதிங்க நாராயணா” என்றவளுக்கு அழுகை கேவலாக மாற, ஆசையாக தான் வளர்த்து வரும் சிகையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.
அஸ்வின் ஏதேதோ கூறியும் துளியும் பெண் அசையவில்லை. அவன் பேசுவதை செவிமடுத்தால் தானே சமாதான வார்த்தைகள் மனதினை நெருங்கும். தானே திணறிக்கொண்டிருந்தாள் பாவை.
வேகமாக அறையினுள் வந்த சித்தார்த்க்கு கால்களை கட்டி அதில் முகம் புதைத்து அழுகும் ஆரோஹியை பார்த்ததும் அவளிடம் விரைந்தவன் அந்த பக்கம் மனைவியிடம் கெஞ்சிக்கொண்டிருந்த அஸ்வினிடம்,
“அஸ்வின் நான் வந்துட்டேன். நீ ரிலாக்ஸ் ஆகு”
“டேய் அவளுக்கு ஒன்னுமில்லல?”
“இல்லடா நல்லா தான் இருக்கா”
திருப்தியடையவில்லை அஸ்வின், “ஒரு தடவை அவ கை எல்லாம் செக் பண்ணே, முடிஞ்சா எனக்கு வீடியோ கால் பண்ணி அவளை காட்டு”
நிலைகொள்ளாமல் தவித்தவனிடம் காணொளி மூலம் காட்டினான்.
“ஆரூ…” அருகில் கேட்டது போல் இருந்த கணவன் குரலில் தலை தூக்கி பார்த்தவளுக்கு கண்ணீர் கோடாய் கன்னத்தை நனைக்க, “வேணாம் ஆரூ. உன்னை நீயே ரொம்ப வீக் ஆகிக்காத”
“இல்ல எனக்கு என்னோட முடி வேணும்”
“இதுக்கெல்லாம் இவ்ளோ பீல் பண்ணலாமாடா?” மனைவியை மென்மையாய் சமாதானம் செய்ய முயன்றான் அஸ்வின். பொறுமையை தாண்டி ஆரோஹியின் மனம் நோகாமல் எடுத்துரைக்க முயன்றான்.
அதற்கெல்லாம் இடமே கொடுக்காத சித்தார்த், “நீ சும்மா இருடா. இவளுக்கு எல்லாத்தையும் இப்டி கிளி புள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லி சொல்லி அலுத்துப்போச்சு”
சகோதரனிடம் சீரியவன் ஆரோஹி பக்கம் திரும்பி, “உனக்கு இப்போ என்ன பிரச்சனை எதுக்கு எடுத்தாலும் இப்டி அழுதுட்டே இருக்குறதுன்னு முடிவு பண்ணிட்டியா?”
“ஒவ்வொரு விஷயத்தையும் நினைச்சு நினைச்சு அழுதுட்டே இருக்கணும்னு முடிவோட தான் இருக்கியா? இதுல இங்கையே இருக்கேன்னு சொன்ன அவனையும் போட்டு டார்ச்சர் பண்றது. என்ன அவனை வர சொல்லனுமா?” வேகமாக வேண்டாம் என தலையை அசைத்தாள்.
“அடுத்து என்ன முடி எடுத்துடுவாங்கனு பயம். அப்டி தான? சாமிக்கு மொட்டை போடுறானு நினைச்சு அமைதியா இருந்துக்கோ”
“டேய் சித்து” கண்ணீர் முட்ட நின்ற மனைவியை பார்த்து தாளாமல் சகோதரனிடம் கெஞ்சினான் அஸ்வின்.
“இன்னைக்கு முடி எடுத்தா இன்னும் ஆறே மாசத்துல வளர்த்துடும். அதுக்குன்னு இப்டி அழுவியா? ஏற்கனவே நீ உண்மைய மறைச்சதுக்கு செம்ம கோவத்துல இருக்கேன், இதுக்கு மேல நீ ஏதாவது பேசுன பல்ல தட்டி கைல குடுத்துடுவேன்”
“பே… பேபி?” திக்கி திணறி கேட்டாள்.
சித்தார்த்துக்கு புரியவில்லை, “என்ன பேபி?”
“எனக்கு பேபி பொறக்காதுல?” இதழ் கடித்து கண்ணீரோடு ஆரோஹி இதற்கும் உன்னிடம் தீர்வுள்ளதா என பார்க்க, சித்தார்த் பார்வை அஸ்வினை தீண்டியது.
‘ஏதாவது பொய்யை கூறியதாவது சமாளி’ என அஸ்வின் தலை அசைத்தான்.
“இது தான் உன் பிரச்சனையா?” ஆரோஹி அருகே அமர்ந்தவன் இரவு அவளுக்கான மதியத்திற்கான அவளது மாத்திரையே கொடுத்தான்.
“லூசு ரோஹி… இந்த கேன்சர் வந்த லேடீஸ் மாக்சிமம் நாற்பத்தி அஞ்சு வயசு மேல இருக்குறவங்க தான். அவங்களே கன்சீவ் ஆகலாம்னு சொல்றாங்க. உனக்கென்ன இருபத்தி அஞ்சு வயசு இருக்குமா? ஹெல்த்தியா இருந்தா எல்லாமே நடக்க வேண்டிய நேரத்துல தானா நடக்கும்”
“நிஜமா?”
“நிஜமா” நம்பிக்கை கொடுத்தான் சகோதரனாக சித்தார்த். முகம் கொஞ்சம் தெளிந்திருக்க தம்பதிக்கு தனிமை கொடுத்து அவள் கையில் தன்னுடைய கைப்பேசியையும் வைத்து சென்றான்.
“நான் சொன்னா நம்ப மாட்ட, அவன் சொன்னதும் கேட்டாச்சு?”
“அவன் எங்க சொன்னான், மிரட்டுறான் கிரிக்கெட்டரே. நீங்களும் கேட்டுட்டு இருக்கீங்க சண்டை போடுங்க”
“ஆரூ, அதை விடு. நம்ம கதைக்கு வருவோம். உன் மனசை இன்னும் என்ன என்ன போட்டு அழுத்துது?”
ஆரோஹி, “இல்ல அப்டி எதுவும்”
“அப்போ நீயா யோசிச்சு யோசிச்சு உன் உடம்பை கெடுத்துக்குற?” அவன் பார்வையை சந்திக்க மறுத்தது பாவை.
“டாக்டர்கிட்ட பேசுனேன் ஆரூ. நான் வந்து ஒரு வாரமாச்சு. இன்னும் உன் ஹெல்த்ல கொஞ்சமும் இம்ப்ரூவ்மென்ட் இல்லயாம். மனசு முதல சரி பண்ணி ஸ்ட்ரோங் ஆகுனா தான் ஆரூ அடுத்த ஸ்டேப் போக முடியும், இல்ல ஒவ்வொன்னையும் யோசிச்சிட்டே யாரோட முயற்சிக்கும் பலன் குடுக்காம இருக்க போறதுனா முன்னாடியே சொல்லிடு, உன்ன முந்தி நான் போயிடுறேன்”
“அஸ்வின்…” தவிப்போடு அவனை தடுத்தவளுக்கு நெஞ்சம் பாரமாகியது அவன் கூறியதை நினைக்கையில்.
“என்ன அஸ்வின் நொஸ்வின்னு? உன் மனசுல இன்னும் என்ன என்ன குப்பையை தான் வச்சிருக்க, சொல்ல தான் செய்யேன்”
“இல்ல இல்ல வேற எதுவும் இல்ல. கோவப்படாதிங்க ப்ளீஸ்”
அஸ்வின், “கோவப்படல ஆரூ, நிலைமை கை மீறி போய்டுமோனு பயத்துல வர்ற வேகம் இது”
ஆரோஹி, “இல்ல நிஜமா எந்த பயமும் எனக்குள்ள இல்ல”
மூக்கை உறிஞ்சியவள், “சரி சொல்லுங்க நாளைக்கு மேட்ச் தானே. எப்படி போச்சு இன்னைக்கு பிராக்டிஸ்?”
தலையை அலுப்பாய் ஆட்டினான், “அதெல்லாம் நல்லா தான் போச்சு, எனக்கு தான் இங்க இருக்க மனசே இல்ல”
“இப்டி பேசாதீங்க, மொத்த கவனமும் அங்க தான் இருக்கனும், அதான் மனசு இங்க இருக்கே” அவன் அணிவித்த மோதிரத்தை திரையில் காட்டினாள்.
மெல்ல சிரிப்பு படர அவளை போலவே தானும் கையை காட்டிய அஸ்வின் கையில் அந்த மோதிரம் இல்லை, அவள் அதிர, “ஓ சாரி” என்றவன் தன்னுடைய சங்கிலியில் கோர்த்திருந்த மோதிரத்தை எடுத்து,
“என்னோட மனசுக்கு” சில்மிஷ பார்வையோடு அதற்கு முத்தம் கொடுக்க, இங்கே பெண்ணுக்கு பக்கென ஆனது.
மலங்க மலங்க விழித்தவள் பேச்சை மாற்றும் விதமாக, “கேப்டன் பொறுப்பெல்லாம் எப்படி இருக்கு?”
“கொஞ்சம் ப்ரெஷர் அதிகமா தான் ஆரூ இருக்கு. ஆனா சமாளிச்சிடலாம்”
“ம்ம். இங்க எனக்காக டிவி செட் பண்ண போறாங்க நாராயணா”
“ஓ மேடம் கிரிக்கெட் பாக்க போறிங்களா?”
பெருகிய புன்னகையோடு சிரித்தாள், “ஆமா, நான் பாப்பேன்னு சொல்லிட்டேன். சித்து ஏற்பாடு பன்றேன்னு சொல்லிட்டான். ரன் அடிக்கிறிங்களோ இல்லையோ நீங்க ரொம்ப நேரம் ஆடுங்க”
இதழ் வளைய, “ஓ சைட் அடிக்க போறிங்களா மேடம்?”
“மாட்டேன்னு சொன்னா தான் தப்பு. உங்களுக்கு இருக்குற லட்சக்கணக்கான கேர்ள் பேன்ஸ் கூட சேர்ந்து நானும் அடிச்சிட்டு போறேன்”
“பாத்துடா சிலர் மேரி மீ, லவ் யு அப்டி இப்டினு போர்டு தூக்கி நிப்பாங்க உனக்கு சங்கடமாகிட போகுது”
“ஆயிரம் பேர் காத்துல முத்தமே குடுத்தாலும் நான் கொடுக்குறது தானே அங்க வந்து சேரும்”
பேசிய பிறகே தன்னுடைய வேகத்தை உணர்ந்தவள் நாவினை கடித்து அஸ்வினை பார்க்க அவனோ சலனமற்ற பார்வையை அவள் முகத்தினில் வைத்திருக்க, “ஹிஹி சும்மா பன் பன்” என பெண் சமாளித்தாள்.
அஸ்வினோ தோடு திரையில் தெரியும் பட்டாம்பூச்சியின் கன்னத்தினை வருட, அவளுக்கு அவன் நேரிலே வந்து வருடியது போல் உடல் சிலிர்த்தது.
அதோடு அவனது காதல் பார்வை, “சேர்த்து வச்சுக்கோடா. நேர்ல பாக்குறப்போ மொத்தமா பதில் சொல்றேன். ஆனா இனிமேல் இப்டி பேசாத, அட்லீஸ்ட் மேட்ச் முடியிற வர. அப்றம் ஏன் வந்திங்கனு என்கிட்டே சண்டைக்கு வர கூடாது”
இருவருக்குமான பேச்சுகள் அழகாய் நீண்டது. ஆரோஹி தனக்கு இங்கு கிடைத்துள்ள புதிய நண்பர்கள், இலக்கியா பற்றிய கிசுகிசுக்கள் அனைத்தையும் கூற, தன்னுடைய அணியின் வீரர்கள் பயிற்சிக்கு சென்றும் மனைவியின் வார்த்தையை ஆர்வமாய் செவிமடுத்தான்.
அவனிடம் பேசிக்கொண்டே மருந்தின் வீரியத்தில் ஆரோஹி உறங்கிவிட, அவளை காண வந்த சித்தார்த் காணொளி அழைப்பை துண்டித்து சகோதரனுக்கு மீண்டும் அழைத்தான்.
“வேற என்ன இப்போதைக்கு பரவால்லடா. ஆபரேஷனோட முழுசா குண்மாகிடாது போல அஸ்வின், ஆபரேஷன்ல கொஞ்சம் தான் கேன்சர் செல்ஸ் எடுக்க முடியுமாம். மிச்சத்தை ரேடியோ திருப்பி மூலியமா தான் சரி பண்ண முடியுமாம். ஆனா சர்ஜரி சக்ஸஸ் ஆனால் போதும்ங்கிற மாதிரி தான்டா சொல்றாங்க”
“ஏதாவது நம்பிக்கை தர்றாங்களா சித்து?”
“நம்மளால எவ்வளவு முடியுதோ அவ்வளவு போராடி பாக்கலாம் அஸ்வின். நம்பிக்கை மட்டும் வை”
“அவளுக்கு குடுக்குற நம்பிக்கையை என்னால எனக்கு குடுக்க முடியலடா” இயலாமையில் பேசியவன் அழைப்பை துண்டிக்க வழக்கம் மாறாது செய்வதறியாது தவித்தான் சித்தார்த்.
அடுத்த நாள் போட்டி குதூகலமாக துவங்கியது. துறுதுறுவென ஓடிய சக வீரர்களை ஒன்று திரட்டி ஏதோ அறிவுரை கூறிய அஸ்வினை தொலைக்காட்சியிலிருந்து கண் சிமிட்டாமல் பார்த்திருந்தாள் ஆரோஹி.
அவள் மட்டுமல்லாது மொத்த கூட்டமும் அந்த அறைக்குள் தான் குழுமிவிட்டது. ஐம்பது ஓவர் கொண்ட அந்த போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சமே இல்லாமல் போனது.
ஒரு பக்கம் முதலில் எதிரணியினர் சரசரவென இலக்கை உயர்த்த, பாதி ஆட்டத்திற்கு மேல் இன்னும் சூடு பிடித்தது ஆட்டம்.