அன்று எப்போதும் போல் வேலை முடிந்ததும் சரியான நேரத்துக்கு கடையை அடைக்கச் சொல்லி மேனேஜரிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு கிளம்பினாள் ஜானகி.
எப்போதும் ஸ்ரீராம் தான் அவளை அழைத்துச் செல்வான் என்பதால் அவனுக்கு அழைத்தாள். போனை எடுத்த ஸ்ரீராம் “சொல்லு ஜானு”, என்றான்.
“எங்க இருக்க ராம்? என்னை கூப்பிட வர தானே?”
“இல்லை ஜானு, எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் வர லேட் ஆகும். நீ அப்பாவை வந்து கூட்டிட்டு போகச் சொல்லு”, என்று அவன் சொன்னதும் எரிச்சல் ஆனவள் “நாளைல இருந்து நான் என் வண்டில வேலைக்கு வந்துக்குறேன். உன்னை நம்பினா இப்படி தான் முழிக்கணும். போடா”, என்று சொல்லி விட்டு போனை வைத்தவள் ரகுவை அழைத்து தன்னைக் கூப்பிட வரச் சொன்னாள்.
அதன் பின் வீட்டுக்கு போய் வெகு நேரம் ஆன பின்னரும் கூட ஸ்ரீராம் வீட்டுக்கு வந்த பாடில்லை.
மாலை ஏழு மணி போல் பெண்கள் அனைவரும் இரவு உணவு செய்ய சமையல் அறையில் கூடியிருக்க, ரகு நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது கிரி வேலை முடிந்து வீட்டுக்கு வந்தான். “வா கிரி இன்னைக்கு ரொம்ப வேலையா? இவ்வளவு நேரம் ஆகிருச்சு?”, என்று கேட்டார் ரகு.
தந்தையின் அருகில் தளர்வாக அமர்ந்தவன் “ஆமா பா. கொஞ்சம் லோட் இன்னைக்கே அனுப்ப வேண்டியது இருந்தது. அதான் அதை அனுப்பிட்டு, இருந்து கணக்கு பாத்துட்டு வரேன்”, என்றான்.
“சரி அவன் எங்க?”
“ஸ்ரீ அப்பவே வீட்டுக்கு போறேன்னு கிளம்பிட்டானே? லோட் ஏத்துனதும் கிளம்பினான். இன்னும் வரலையா?”, என்று அவன் கேட்டதும் ரகுவின் புருவங்கள் உயர்ந்தது.
“வருவான் ஊதாரி. கல்யாணம் முடிஞ்சாலாவது பொறுப்பு வரும்னு பாத்தா… எங்க? சரி நீ போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வா. அம்மாடி யமுனா கிரி வந்துட்டான் பாரு. அவனுக்கு டீ கொண்டு போய் கொடு”, என்று குரல் கொடுத்தார் ரகு.
சிறிது நேரம் கழித்து திருட்டுத் தனமாக உள்ளே நுழைந்தான் ஸ்ரீராம். அவன் கையில் ஒரு பெரிய கவர் இருந்தது. அதை யாருக்கும் கட்டாதவாறு பதுங்கி பதுங்கி வீட்டுக்குள் எடுத்து வந்தவன் அங்கு அமர்ந்திருந்த ரகுவைக் கண்டு ஜெர்க் நின்றான்.
அவர் அசையும் வழி இல்லாததால் சோஃபாவுக்கு பின் புறமாக அறைக்கு எடுத்துச் செல்லப் பார்த்தான்.
அப்போது “டேய் நில்லு டா”, என்று ரகுவின் குரல் ஓங்கி ஒலித்தது. அவர் சத்தம் கேட்டு திகைத்து நின்றவன் பின் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு “என்னப்பா?”, என்று கேட்டான்.
“கொஞ்சம் முன்னாடி வந்து நில்லு”
“முகம் கழுவிட்டு வரேன் பா”
“அதெல்லாம் தேவையில்லை, நீ முதல்ல இங்க வா”
கொஞ்சம் தயங்கிய படியே அவர் முன் வந்து நின்றவன் கையில் இருந்த கவரை தனக்கு பின்னே மறைத்துக் கொண்டான்.
“இவ்வளவு நேரம் எங்க போய் ஊர் சுத்திட்டு வர? அப்பவே ஆஃபிஸ்ல இருந்து கிளம்பிட்டேன்னு அண்ணன் சொன்னான்”
“போட்டுக் கொடுத்துட்டானா? இனி விசாரணை பண்ணி சாவடிப்பாரே”, என்று எண்ணிக் கொண்டு “பிரண்டைப் பாக்கப் போனேன் பா”, என்றான்.
“எந்த பிரண்ட்?”
“என் கிளாஸ் மேட் விஷ்வா பா”
“ஓ, சரி கைல என்ன?”
“கைலயா? என்ன? ஒண்ணும் இல்லையே?”, என்று சொல்லிக் கொண்டே வலது கையை காட்ட “நடிக்காத, அந்த கைல என்ன?”, என்று கேட்டார்.
“என்னது வீட்ல வச்சு பைல்ஸ் பாக்க எடுத்து வந்தியா? உனக்கே இது ஓவரா தெரியலையா? உன்னைப் பத்தி எனக்கு தெரியாதா? முதல்ல உன் கைல உள்ள பையைக் இங்க கொடு டா”
“இது எதுக்கு பா உங்களுக்கு?”
“நீ பாக்குற பைலை நான் பாத்தா ஆகாதா? கொடு டா”
“அப்பா அது வந்து…”
“குண்டா ஏதோ உள்ள இருக்கு. ஆனா நீ பைல்ன்னு பொய்யா சொல்ற?”, என்று ரகு கேட்டுக் கொண்டிருக்கும் போதே அனைவரும் அங்கே வந்து விட்டார்கள்.
ஸ்ரீராம் விழித்த படியே இருக்க “என்ன ஆச்சுங்க?”, என்று ரகுவிடம் கேட்டாள் ஜெயா.
“உன் சீமந்த புத்திரன் ஏதோ பிராடு வேலை பாத்துட்டு வந்துருக்கான். அதான் என்னன்னு விசாரிச்சிட்டு இருக்கேன்”, என்றார் ரகு.
“என்ன டா பண்ணின?”
“அம்மா, நான் ஒண்ணுமே பண்ணலை மா. அப்பா தான் சும்மா என்னை வெறுப்பேத்திட்டு இருக்கார். எல்லாரும் போய் வேலையை பாருங்க. நான் குளிக்க போறேன்”, என்று சொல்லி விட்டு கழண்டு கொள்ளப் பார்த்தான் ஸ்ரீராம்.
“நான் வெறுப்பேத்துறேனா?”, என்று கேட்ட ரகு அடுத்த நொடி அவன் கையில் இருந்த கவரை பிடுங்கி உள்ளே இருந்ததை வெளியே எடுத்தார். அனைவரும் அவரையே பார்க்க உள்ளே இருந்து அழகான சிவப்பு வண்ண ரோஜா பூங்கொத்தை வெளியே எடுத்தார் ரகு.
ஸ்ரீராம் அசடு வழிந்த படி நிற்க மற்றவர்களோ சிறு சிரிப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஜானகியோ “இது எதுக்கு வாங்கிருக்கான்? ஒரு வேளை எனக்கா இருக்குமோ?”, என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
“என்ன டா இது?”, என்று கோபமாக கேட்டார் ரகு.
“இது என் லவ்வர்க்கு கொடுக்குறதுக்கு வாங்கிருக்கேன் பா”, என்று அவன் சொல்ல அனைவரும் அவனைத் திகைப்பாக பார்த்தார்கள்.
“ஐயையோ மானத்தை வாங்கப் போறான்?”, என்று எண்ணி படபடப்பாக நின்றிருந்தாள் ஜானகி.
“நினைச்சேன், நீ இப்படி ஏதாவது கேடி வேலை பாப்பேன்னு. தறுதலை தறுதலை என் உயிரை வாங்குறதுக்குன்னே வந்துருக்கியா டா? கல்யாணம் முடிஞ்சா மாறிருவேன்னு சொன்ன அறிவாளி எங்க?”, என்று கேட்ட ரகு ஸ்ரீராம் அருகில் நின்ற அம்பிகாவை முறைத்தார்.
மகனின் பார்வையை கண்டாலும் கண்டு கொள்ளாத மாதிரி நின்றாள் அம்பிகா.
“இப்ப எதுக்கு இப்படி திட்டிட்டு இருக்கீங்க? நான் என்ன தப்பு பண்ணேன்?”, என்று கேட்டான் ஸ்ரீராம்.
“ஏண்டா மகாலட்சுமி மாதிரி உனக்கு ஒரு பொண்ணைப் பாத்து கட்டி வச்சிருக்கேன். நீ என்ன டான்னா….?”, என்று ரகு சொன்னதும் ஜானகியை திரும்பிப் பார்த்தவன் “ஜானு, மகாலட்சுமியை விட அழகுப்பா”, என்று நேரம் காலம் தெரியாமல் சொல்லி ரகுவின் பி.பியை ஏற்றினான்.
இப்போது அவன் சொன்னதைக் கேட்டு ஜானகி முகம் தான் சிவந்தது. யமுனாவின் தோளில் தன்னுடைய நாடியை வைத்துக் கொண்டு ஸ்ரீராமைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
“உன் புருஷன் அசடு வழியுறார் டி, அப்படி என்ன சொக்குப் பொடி கேட்ட?”, என்று கேட்டாள் யமுனா.
“எப்பவுமே உன்னை பிரியாம இருக்குற கிரி மச்சானுக்கு நீ என்ன சொக்குப் பொடி போட்டியோ அதை தான் நானும் போட்டேன். முதல்ல அங்க கவனி. மாமா கிட்ட ராம் திட்டு வாங்குறதைப் பாக்குறதே ஒரு தனி சுகம் தான் கா”, என்று சொல்லி அக்காவுக்கு பதில் கொடுத்து விட்டு நடப்பதை வேடிக்கை பார்த்தாள் ஜானகி.
“உன் பொண்டாட்டி அழகுன்னு தெரியுதுல்ல? அப்புறம் ஏண்டா இப்படி பண்ணுற?”, என்று கேட்டார் ரகு.
“நான் என்னப்பா பண்னினேன்?”
“முதல்ல அவ யாருன்னு சொல்லு”
“எவ?”
“அதான் இந்த கர்மத்தை எவளுக்கோ வாங்கிட்டு வந்துருக்கியே? அவளைத் தான் கேக்குறேன். யார்னு சொல்லு. யார் டா உன் லவ்வர்”
“வேற யாரு? அது ஜானகி தான்”, என்று ஸ்ரீராம் சொல்ல அனைவரும் அவளைத் தான் திரும்பிப் பார்த்தார்கள். யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் தலை குனிந்த ஜானகி “போச்சு, மானத்தை வாங்கிட்டான் கா”, என்று யமுனாவிடம் முணுமுணுத்தாள்.
“என்ன டா சொல்ற? ஜானகி உன் லவ்வரா? அவ உன் பொண்டாட்டி டா”
“அப்பா அதெல்லாம் மறந்துருங்க”
“என்ன டா சொல்ற?”
“ஆமா பா. ஜானு, இப்ப என்னோட மனைவி கிடையாது. நாங்க கொஞ்ச நாளைக்கு லவ் பண்ண போறோம். அதான் என் லவ்வரான அவ கிட்ட என் காதலைச் சொல்ல இதை வாங்கிட்டு வந்தேன். நீங்க சொதப்பிட்டீங்க”, என்று சொல்லி சிரித்தான்.
“கடவுளே இவனுக்கு எப்ப தான் புத்தி வருமோ? எப்படியோ நல்லா இருந்தா சரி தான். இந்தா”, என்று சொல்லி அந்த பையை அவனிடம் கொடுத்து விட்டு அறைக்குள் சென்றார் ரகு. உள்ளே சென்றதும் மகனின் கோமாளித்தனத்தை எண்ணி அவர் அடக்க மாட்டாமல் சிரித்தது தனிக் கதை.
இங்கே மற்ற அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க “இப்ப எதுக்கு எல்லாரும் என்னையே குறுகுறுன்னு பாத்துட்டு இருக்கீங்க? நான் என் பொண்டாட்டி கூட சாரி சாரி லவ்வர் கூட தனியா பேசணும்? எல்லாரும் போய் அவங்க அவங்க வேலையைப் பாருங்க”, என்றான் ஸ்ரீராம்.
அவன் போகச் சொல்லியும் யாரும் நகராமல் அவனை முறைத்த படியே இருக்க “நீங்க போகாட்டி என்ன? நான் போறேன். வா ஜானு”, என்றவன் படக்கென்று அவள் கையைப் பற்றி இழுத்துக்கு கொண்டு அறைக்குச் சென்றான்.
கிரியும் யமுனாவும் சிரித்த படி அவர்களின் அறைக்குச் செல்ல “என்ன அத்தை இவன் இப்படி பண்ணுறான்? இவன் எப்ப லவ் பண்ண ஆரம்பிச்சு, எப்ப ஒண்ணு சேந்து, எப்ப பேரப் பிள்ளையை பாக்குறது?”, என்று கேட்டாள் ஜெயா.
“இப்ப அவனுக்கு என்ன வயசாச்சுன்னு நீ இப்படி கவலைப் படுற? அதான் இன்னும் கொஞ்ச மாசத்துல கிரிக்கு குழந்தை பிறக்க போகுது தானே? அப்புறம் என்ன? அந்த பேரப் பிள்ளையை கொஞ்சிக்கோ. என் பேரன் பொறுமையா அவன் வாழ்க்கையை வாழட்டும். சின்னஞ்சிறுசுக. கொஞ்சம் சந்தோசமா இருக்கட்டுமே?”
“நீங்க சொல்றது சரி தான். ஆனா ஏன் இப்படின்னு குழப்பமா இருக்கு அத்தை. ஒரு வேளை ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிக்கலையோ?”
“அப்படி எல்லாம் இல்லை ஜெயா. ரெண்டு பேருக்குமே ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப பிடிக்கும். அவங்க வாழ்க்கையை அவங்க பாத்துக்குவாங்க. நீ கவலைப் படாம வா, வேலையைப் பாப்போம்”, என்று சொல்லி ஜெயாவை அழைத்துச் சென்றாள் அம்பிகா.
அறைக்குள் சென்ற ஸ்ரீராம் “சாரி ஜானு, உனக்கு புரப்போஸ் பண்ண தான் இதை வாங்கிட்டு வந்தேன். ஆனா அப்பா சோதப்பிட்டார். எனிவே ஐ லவ் யு மை டியர் ஜானு”, என்று சொல்லி புன்னகைத்தவாறே அவளிடம் நீட்டினான்.
புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்ட ஜானகி “சொதப்பினது மாமா இல்லை. நீ தான். எல்லாரும் நம்மளைப் பாத்து நல்லா சிரிச்சிட்டாங்க”, என்றாள்.
“நம்ம வீட்ல உள்ளவங்க தானே? சிரிச்சா பரவால்ல. சரி உனக்கு இது பிடிச்சிருக்கா? நீ பதிலுக்கு ஐ லவ் யு சொல்லவே இல்லையே?”
“நீயா கேட்டா எப்படி சொல்ல? எனக்கு தோனுறப்ப சொல்றேன்”
“அதை எப்ப வேணும்னாலும் சொல்லு. ஆனா என்னை லவ் பண்ணுற தானே? அதுக்கு மட்டும் பதில் சொல்லு”
“ம்ம்”
“ம்ம்னா”
“பண்ணுறேன் போதுமா?”, என்று சொன்னவளின் முகம் சிவந்தது. அதை ரசனையுடன் பார்த்தவன் அவள் கன்னத்தை கிள்ளி விட்டு சிறு சிரிப்புடன் குளிக்கச் சென்றான்.