“இதென்ன சார் கேள்வி..! இப்போ ரன்னாகிட்டு இருக்கிறது ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ். நான் படிக்கிறது இஞ்சினியரிங். எப்படி அங்க படிக்க முடியும்..? அது மட்டுமில்லாம, உங்க காலேஜ் தான சார் நம்பர் ஒன்” என்றாள்.
“அது மாதிரி தான் எனக்கும் சில காரணங்கள் இருக்கு..” என்றான் அர்ஜூன்.
“கிளாஸ்க்கு போனா, நினைப்பு படிப்புக்கு போக மாட்டேன்னு அடம் பிடிக்குது. காலேஜ்னாலே உங்க நினைப்பு தான் சார் வருது. நான் இப்பல்லாம் உங்களை ரொம்ப சைட் அடிக்கிறேன். நீங்களும் இப்படி ஹேண்ட்சமா இருந்து என் மனசை உடைக்கக் கூடாது சார்..” என்றாள் நிஜமாகவே.
அவள் ஏதோ விளையாட்டுக்குப் பேசிக் கொண்டிருக்கிறாள் என்று அவன் நினைத்திருக்க, அவள் பேச்சில் துளியும் விளையாட்டுத் தனம் இல்லை.
“ரொம்ப ஈசி..! இதெல்லாம் இந்த வயசுல வர்ற கோளாறு. இது ஒரு பெரிய விஷயமே இல்லை..” என்றான் அர்ஜூன் மேம்போக்காய்.
“சார், மத்த பசங்க மேல வர்றதுக்கு பேரு தான் வயசு கோளாறு. புருஷன் மேல வர்றதுக்கு பேரு வயசு கோளாறு இல்லை. இதுக்கு பேரு வாலிபக் கோளாறு. முதல்ல நல்ல டாக்டரா பார்த்து செக் பண்ணுங்க சார்..” என்றவள்,
“காலேஜ் வந்திடுச்சு…! நான் வர்றேன்..!” என்று இறங்கப் போக,
“நான் தான் சொன்னேன்ல… அர்ஜூன் சார் தான் நம்ம வராஹி ஹஸ்பண்ட்ன்னு. இன்னைக்கு நேராவே பார்த்தாச்சு. இப்ப நம்புறியா..?” என்றான் குரு.
“இவ நம்மகிட்ட கூட சொல்லலை பாரேன் குரு..” என்றாள் ஆதங்கத்துடன்.
“அவளுக்கு என்ன சிட்சுவேன்ஷன்னு நமக்குத் தெரியாது மிதிலா. விடு, வராஹினி சொல்லனும்ன்னு நினைச்சிருந்தா சொல்லியிருப்பா. அவ சொல்லாம இருக்குறதுக்கு வேற ஏதாவது காரணம் இருக்கலாம். அவளே சொல்லும் போது கேட்டுக்கலாம். அதுவரைக்கும் நாமளும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க வேண்டாம்..” என்றான் குரு.
“அதுவும் சரி தான் குரு. எப்படியோ, அர்ஜூன் சாரை அவளுக்கு பிடிச்சிருந்தது. விடாம அவர் புராணம் பாடி, அவர் பின்னாடியே சுத்தி, கடைசியா அவரையே கல்யாணமும் பண்ணிகிட்டா. நல்லா இருந்தா சரித்தான்..” என்றாள் மிதிலா.
“அதெல்லாம் அர்ஜூன் சார் அவளை நல்லா பார்த்துப்பார். என்ன, இவளோட ஆட்டம் தான் தாங்க முடியாது. உங்க கூட பிரண்டா இருக்குற கொடுமை இருக்கு பாரு… அதுக்கு அழகா நாலு கழுதையை கூட மேய்ச்சிடலாம்..” என்றான் குரு.
“கோவிந்தா..” என்று மிதிலா முறைக்க,
“குருன்னு சொல்லு…” என்று முறைத்தான் குரு கோவிந்தன்.
அர்ஜூன் காரை விட்டு இறங்கி சென்று விட்டான் என்று நினைத்து இவர்கள் தூணிற்கு இந்த பக்கம் நின்று பேசிக் கொண்டிருக்க, தூணிற்கு அந்த பக்கம் சென்று கொண்டிருந்த அர்ஜூனின் காதில் அனைத்தும் தெளிவாக விழுந்தது. அவன் பேர் அடிபடவும் தான் நடையின் வேகத்தைக் குறைத்தான். அப்படி கேட்டதால் தான், அவனுக்கும் பல விஷயங்கள் தெரிய வந்தது.
“இவளுக்கு என்னைய முன்னமே தெரிஞ்சிருக்கு. ஆனா, தெரியாத மாதிரி அப்படி நடிச்சாளே..?” என்று நினைத்தான்.
“அவ நடிச்சதை அப்படியே நம்பிட்டியா..?” என்றது அவனின் உள் மனம்.
“அன்னைக்கு மாலில் குரு பேசினதில் இருந்து கொஞ்சம் டவுட் இருந்தது. இன்னைக்கு அதுவும் கிளியர் ஆகிடுச்சு.” என்றான் பதிலாய்.
“அடுத்து என்ன செய்ய போற..?” என்றது மனம்.
“நான் என்ன செய்ய முடியும்..? வராஹினிக்கு என்னை பிடிச்சிருந்ததா..? என் பின்னாடியே சுத்தினதா அந்த மிதிலா பொண்ணு சொல்லுது. ஆனா, நான் ஒரு தடவை கூட பார்த்ததில்லையே..?” என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
“இதுவரைக்கும் பார்க்கலைன்னா என்ன? இனிமேல் கவனி. அதுலயே தெரிஞ்சிடாது..” என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்ள, உள்ளுக்குள் சிரித்தது மனம்.
“இப்ப எதுக்கு சிரிக்கிற..?” என்றான்.
“இல்ல.. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட சொல்லிட்டு போனா, உன்னை சைட் அடிக்கிறேன். உன் ஞாபகம் தான் வருது அப்படி இப்படின்னு. அப்பவெல்லாம் தெரியாதது, இனி நீ கவனிக்க ஆரம்பிச்ச உடனே உனக்குத் தெரிஞ்சிடுமா..? அவளுக்கு உன்னைப் பிடிச்சிருக்குன்னு உனக்கும் தெரியும் தானே. என்கிட்டையே நடிக்கிறியா..?” என்றது உள் மனம்.
“அதெல்லாம் தெரியத்தான் செய்து. ஆனா, அவ சின்ன பொண்ணு. எனக்கு எப்படி..?” என்ற ஒரு விஷயம் அவன் மனதை போட்டு அழுத்திக் கொண்டிருந்தது.
“அதை அவளே பெரிசா எடுத்துக்கலை. இது ஒரு விஷயமா..?பத்து வருஷமெல்லாம் ஒரு விஷயமில்லை. நீ தான் இன்னமும் அதையே பிடிச்சு தொங்கிட்டு இருக்க..” என்று, மனம் அவனுக்கு சாதகமாக பேசிக் கொண்டிருந்தது.
அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அங்கு கார்த்திகேயனுடன் வந்து கொண்டிருந்தான் ரஞ்சன். அவனைப் பார்த்த அர்ஜூனுக்கு கோபம் தலைக்கேறியது. கோபத்தை முகத்தில் அப்பட்டமாக காட்டி, முறைத்துக் கொண்டு நின்றான் அர்ஜூன்.
அர்ஜூனைப் பார்த்த உடன், தன்னுடைய மேல் கோட்டை ஒரு உதறு உதறினான் ரஞ்சன்.
“என்னாச்சு ரஞ்சன்..?” என்றார் கார்த்திகேயன்.
“ஒண்ணுமில்லை டாட்..! தூசி” என்றான்.
அவர்களுக்கான அறையில் நுழைந்த அடுத்த நிமிடம் புயலென உள்ளே நுழைந்திருந்தான் அர்ஜூன்.
“இவனை யாரு இங்க வர சொன்னது..? இவனை இங்க வரக்கூடாதுன்னு நான் சொல்லியிருக்கேனா இல்லையா..?” என்றான் அர்ஜூன்.
“அதைச் சொல்ல நீ யாரு..? எதுவும் வேண்டாம்ன்னு சொல்லிட்டு வெளிய வந்தவன் நீ..? என்னை அதிகாரம் பண்றியா..? இங்க வர்றதுக்கு நான் யாரையும் கேட்கனும்ன்ற அவசியம் கிடையாது..” என்றான் ரஞ்சன்.
“எதுக்கு..? உன்னோட பொறுக்கித் தனத்தையெல்லாம் இங்க காட்டவா..? நீ பொண்ணுங்களைப் பார்த்து ஜொள்ளு விடுறது தான் இந்த காலேஜ்கே தெரியுமே..?” என்றான் அர்ஜூன்.
“என்ன அர்ஜூன் பேசுற நீ..? ரஞ்சன் எப்பவோ மாறிட்டான். அவன் இப்போ முன்ன மாதிரி இல்லை. ரூபிணியை கூட அவனே மேரேஜ் பண்ணிக்கிறதா சொல்லியிருக்கான்..” என்றார் கார்த்திகேயன்.
‘அப்பறம், அவன் தான பண்ணியாகணும்..’ என்று மனதிற்குள் நினைத்த அர்ஜூன்,
“அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை. இவன் இங்க இருக்கிறதா இருந்தா இனி நான் இங்க வர மாட்டேன்..” என்றான் அர்ஜூன் உறுதியாக.
“அர்ஜூன் இது விதண்டாவாதம்..” என்றார் கார்த்திகேயன்.
“இல்லை..! இது தான் என்னோட முடிவு. அதுக்குமேல உங்க பிரியம்..” என்றவன் வகுப்பிற்கு சென்று விட்டான்.
“டாட், வரவர இவன் ஓவரா பண்றான். நான் ஏன் இங்க வரக் கூடாது..?” என்றான் ரஞ்சன்.
“அவன் சொல்றதும் சரிதானே ரஞ்சன். நீ நம்ம மத்த பிஸ்னஸ பார்த்துக்கோ. இனி காலேஜ் விஷயத்துல தலையிடாத..” என்றார் கார்த்திகேயன்.
“ஹோ..! இன்னைக்கு இங்க வந்துட்டேன். இப்ப நான் இருக்கணுமா..? இல்லை போகனுமா..?” என்றான் நக்கலாய்.
“இதென்ன பேச்சு ரஞ்சன்..?” என்றார் கார்த்திகேயன்.
“நியு பிளாக் பில்டிங் வொர்க் போயிட்டு இருக்கு. அது சம்பந்தமா இஞ்சினியர்கிட்ட பேசனும்ன்னு நீங்க தான சொன்னிங்க..?” என்றான் ரஞ்சன்.
“பேசனும்ன்னு சொன்னேன். உன்னைப் பேச சொன்னேனா..? அந்த இஞ்சினியரே நம்ம அர்ஜூன் தான். அந்த வொர்க்கையும் அவன் தான் பார்த்துக்கிறான்..” என்றார்.
“என்ன இருந்தாலும் நீ சின்ன பையன் தான் ரஞ்சன். உனக்கு இன்னமும் அனுபவம் பத்தாது. கொஞ்ச நாள் கத்துக்கோ. அர்ஜூன் இப்போ வரைக்கும் அதைத்தான் பண்ணிட்டு இருக்கான்..” என்றார் கார்த்திகேயன்.
“ஒன்னும் தேவையில்லை..” என்று கோபமாக வெளியேறினான் ரஞ்சன்.
“நில்லு ரஞ்சன்..! இப்ப என்ன உனக்கு. இந்த அவசர புத்தி தான் உன்கிட்ட. நீ இங்கயே வெயிட் பண்ணு. நான் அர்ஜூன்கிட்ட பேசிட்டு வந்திடுறேன்…” என்றார் கார்த்திகேயன்.
“அவன் சொல்றபடி இருக்கனும்ன்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. இதை அவன்கிட்ட தெளிவா சொல்லிடுங்க..” என்றான் ரஞ்சன்.
அந்த கல்லூரியின் உரிமையாளன் என்ற பெயரோடு, அங்கே கெத்தாக வலம் வருவதில் ரஞ்சனுக்கு எப்போதும் ஒரு அலாதிப் பிரியமுண்டு. அர்ஜூனுக்கு அதையெல்லாம் பார்த்தால் எரிச்சலாக இருக்கும். ரஞ்சனின் ஒவ்வொரு ஆசைகளுக்கும் அர்ஜூன் தடையாக இருக்கிறான் என்ற எண்ணமே, அவனின் மேல் வஞ்சத்தை கூட்டிக் கொண்டிருந்தது ரஞ்சனுக்கு.
அர்ஜூன் சொல்லும் ஞாயமான காரணங்கள் கூட, வேண்டுமென்றே சொல்லப் படுவதைப் போல் தோன்றும். சிறு வயதில் சின்ன சின்ன விஷயங்களில் தோன்றிய கோபமெல்லாம், ரஞ்சன் வளர வளர அதுவும் அவனுடனே வளர்ந்து கொண்டே வந்தது.
தந்தை காட்டிய கண்டிப்பு அவனுக்கு, அவரை விரோதியாய் காட்ட, தாய் காட்ட மறந்த கண்டிப்பு, அவனை தறுதலையாய் மாற்றியிருந்தது. கோட்,சூட் போட்ட தறுதலை என்றால் சரியாக இருக்கும். எத்தனை கம்பெனிகள் இருந்தாலும், இந்த கல்லூரி என்றால் அவனுக்கு அப்படி ஒரு ஆசை. அது கல்லூரியின் மேலா, இல்லை அங்கு படிக்கும் வராஹினியின் மேலா என்றால், கண்டிப்பாக வராஹினி என்று தான் சொல்லுவான்.
மலருக்கு மலர் தாவும் வண்டாய் இருந்தவனுக்கு, வராஹினியைப் பார்த்தப் பிறகு பித்தம் கூடித் தான் போயிருந்தது.
“டாட் வர்றதுக்குள்ள அவகிட்ட பேசியாகனுமே..?” என்று யோசித்தான் ரஞ்சன். எந்த வழியும் பிடிபடவில்லை அவனுக்கு. அவன் எத்தனை முறை போன் செய்தாலும், ஒரு முறை கூட பிரஜேஷ் போனை அட்டென் பண்ணாமல் இருந்தது ரஞ்சனுக்கு கோபத்தை தான் ஏற்படுத்தியிருந்தது. அதனால் இன்று கார்த்திகேயனுடன் கிளம்பி வந்துவிட்டான்.
குறுக்கும் நெருக்குமாய் நடை போட்டவன், பியூனை அழைத்தான்.
“வராஹினி பொண்ணை கரெஸ் கூப்பிடுறார்..” என்று பியூன் சொல்லிவிட்டு சென்றிருக்க,
“இப்போ எதுக்கு அங்கிள் கூப்பிட்டிருக்கார். கிளாஸ் அவர்ஸ்ல எப்பவும் கூப்பிட மாட்டாரே.. ஏதாவது முக்கியமான விஷயமா இருக்குமா..? அப்படி என்ன விஷயமா இருக்கும்..?” என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்.
“வராஹினி போயிட்டு வாம்மா..!” என்று கிளாசில் இருந்த ப்ரொபசர் சொல்ல, யோசனையுடன் சென்றாள் வராஹினி.
“அண்ணா, யார் யார் இருக்கா..?” என்றாள் பியூனிடம்.
“சாரோட சன் இருக்காருமா..” என்றார் அவர்.
“அர்ஜூன் சார் எதுக்கு இப்ப கூப்பிடுறார். இப்படி தினமும் கூப்பிட்டு பேசினா, எல்லாருக்கும் சந்தேகம் வந்துடாது..” என்று அவனைத் திட்டிக் கொண்டே சென்றாள்.
அர்ஜூனை எதிர்பார்த்து உள்ளே சென்ற வராஹினிக்கு அங்கே ரஞ்சனைப் பார்த்தவுடன் பக்கென்று இருந்தது.
இளம் தளிர் வண்ண சுடிதாரில் பச்சைக் கிளியாய் இருந்தவளை பார்த்தவனுக்கு ஜிவ்வென்று இருந்தது.
“ஹாய் டியர்..” என்றான் கூலாக.
“நீங்களா…? இப்ப எதுக்கு கூப்பிட்டிங்க..? எனக்கு கிளாஸ் இருக்கு..” என்று சொன்னபடி வெளியேறப் போக,
“ஒரு நிமிஷம் வராஹி. எனக்கு உன்கூட கொஞ்சம் பேசணும்..” என்றான் ரஞ்சன்.
“எனக்கு உங்ககிட்ட பேச ஒண்ணுமில்லை..” என்றாள் பேச்சை கத்தரித்தால் போல்.
“ஆனா, எனக்கு பேச நிறைய இருக்கு. எல்லாம் சரியா நடந்திருந்தா, இந்நேரம் நீ என்னோட மனைவியா இருந்திருக்க வேண்டியது…” என்றான் அவளைப் பார்த்துக் கொண்டே.
“எல்லாம் சரியா நடந்ததால தான் நான் தப்பிச்சேன். நான் இப்போ அர்ஜூன் சாரோட மனைவி. உங்களுக்கு அண்ணி முறையாகனும். இப்படி பேசுறது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும்..” என்று அவள் எச்சரிக்க,
“பாருடா..! வராஹிக்கு இப்படி கோபப்படக் கூடத் தெரியுமா..?” என்றான் ரஞ்சன்.
“சொல்ல எதுவுமில்லைன்னா நான் கிளம்புறேன் சார்..” என்றாள்.
“சாரா..?” என்றான் ரஞ்சன்.
“ஆமா..! நீங்க இங்க கரெஸ் பையன். நான் இங்க ஸ்டூடன்ட். அது மட்டும் தான் உறவு. வேற எதுவுமில்லை..” என்றாள்.
“சொன்னா புரிஞ்சுக்க வராஹி. அர்ஜூன் உனக்கு எந்த விதத்துலையும் பொருத்தமில்லை. அவன் என்னைப் பழிவாங்குறதா நினைச்சுகிட்டு உன்னோட வாழ்க்கையை நாசம் பண்ண பார்க்கிறான். ஆரம்பத்துல இருந்தே அவனுக்கு இதே வேலை தான். இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை, நான் உன்னை ஏத்துக்க தயாரா இருக்கேன்..” என்றான் ரஞ்சன்.
“உங்களுக்கு வெட்கமாயில்லை. என் அண்ணனோட பிரண்ட் அப்படின்ற ஒரு காரணத்துக்காகத் தான் இத்தனை நாள் நான் அமைதியா இருந்தது. ஆரம்பத்துல இருந்தே நான் உங்களை பிடிக்கலைன்னு தான் சொல்லிட்டு இருக்கேன். அர்ஜூன் சார் என்னை கட்டாயப்படுத்தி, கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணின ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்கீங்க. அவரோட தகுதியைப் பத்தி பேச உங்களுக்கென்ன தகுதியிருக்கு..? கல்யாணம் பேசி முடிச்ச பொண்ணை கட்டிலுக்கு கூப்பிட்டவன் தானே நீ.. உன்னோட லட்சணம் தெரிஞ்சு தான, நான் வீட்டை விட்டு போனேன். இப்போ எந்த மூஞ்சியை வச்சுகிட்டு என்கிட்டே பேசிட்டு இருக்கீங்க..?” என்றாள் கோபமாய்.
“அது ஒன்னு தான் நான் பண்ண பெரிய தப்பு வராஹி. நாம கட்டிக்கப் போற பொண்ணு தானேன்னு கொஞ்சம் உரிமை எடுத்து பழக நினைச்சேன். அது உனக்குப் பிடிக்கலைன்னு தெரிஞ்ச உடனே, நான் உன்னைக் கட்டாயப்படுத்தலையே..? அப்பறமும் ஏன் உனக்கு இந்த வெறுப்பு. இது நீ காட்டுற வெறுப்பு இல்லை. அந்த அர்ஜூன் இப்படி உன்னை ஆட்டி வைக்கிறான்…” என்றான் ரஞ்சன்.
“அவர் என்னை ஆட்டி வைக்கவெல்லாம் இல்லை. அப்படி ஆட்டி வச்சாலும் அவரு என் புருஷன், அதுல எனக்கு சந்தோசம் தான். அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை. இனி ஒரு தடவை என்னோட பிரச்னைக்கு வர்ற வேலை வச்சுக்காதிங்க. அப்பறம் நீங்க வேற வராஹினியை பார்க்க வேண்டி வரும்..” என்றாள் எச்சரிக்கையாய்.
“என்னடி செய்வ..?” என்றான் ஆத்திரமாக. ஆத்திரத்தில் இருக்கும் இடம் மறந்தது அவனுக்கு.
“ஏன்..? என்னால எதுவும் செய்ய முடியாதுன்னு நினைக்கிறியா..? முன்னாடி நான் ஓடிப் போனேன்னா, அப்போ எனக்கு சப்போர்ட் பண்ண யாருமில்லை. என் அம்மா முதற்கொண்டு அண்ணன் வரைக்கும் எல்லாரையும் உன்னோட கைப்பிடியில வச்சிருந்த. இப்போ அப்படி கிடையாது. இப்போ நான் அர்ஜுனோட மனைவி. அதை மறந்திட வேண்டாம்..” என்றாள்.
“என்னடி அவனைப் பார்த்த குழைஞ்சுகிட்டு நிக்கிற..? என்னைப் பார்த்தா அப்படியே தீயா பொறியற..?” என்று அவளின் கையைப் பிடிக்க, வேகமாய் கையை உதறியவள், அவனை ஓங்கி அறைந்திருந்தாள்.
“மேல கைவைக்கிற வேலை வச்சுகிட்ட, நடக்குறதே வேற. என் புருஷன்கிட்ட நான் குழைவேன், இல்லை அவர் கூட குலாவி கும்மியடிப்பேன். அதைப் பத்தி உனக்கென்ன வந்தது..? சத்தம் போட்டு எல்லாரையும் வரவச்சா, உன்னோட மானம் மட்டும் போகாது. கார்த்திகேயன் அங்கிளோட மானமும் தான் போகும். அதனால் அமைதியா போறேன். எல்லா நேரமும் இப்படி அமைதியா போக மாட்டேன். ஜாக்கிரதை..!” என்று எச்சரித்து விட்டு கோபமாய் வெளியேறினாள்.
வெளியேறி வந்தவள் அங்கே அர்ஜூன் நிற்பதைப் பார்த்து திகைத்தாள். அவன் ஏதும் தவறாக நினைத்துக் கொள்வானோ என்று நினைத்தவள், எதையோ சொல்ல வர,
“கிளாஸ் டைம்ல உனக்கு இங்க என்ன வேலை..? யார் கூப்பிட்டாலும் வந்துடுவியா..? கிளாஸ்க்கு போ முதல்ல..” என்றான் கோபமாக.
அவனை முறைத்தவள், வேண்டுமென்றே அவனை இடித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
“இவளுக்கு கொழுப்பு கொஞ்சம் அதிகம் தான்..” என்று பல்லைக் கடித்தவன்,
“என்ன ஹேய்..?” என்று பல்லைக் கடித்த அர்ஜூன், ரஞ்சனின் குரல்வளையைப் பிடித்துவிட்டான்.
“இப்படியே கொன்னு புதைச்சுட்டு போயிட்டே இருப்பேன். போனாப் போகுதுன்னு பார்த்தா, ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க..? அடுத்த பொண்ணை தப்பா பார்த்தாலே, எனக்கு அவ்வளவு வெறி வரும். என் பொண்டாட்டி மேல கைவைக்கிற அளவுக்கு உனக்கு தைரியம் வந்திருக்குன்னா, அது நல்லதுக்கு இல்லையே..?” என்றபடி அவன் பிடியை மேலும் அழுத்திக் கொண்டிருந்தான்.
“விடு..! விடு அர்ஜூன்..” என்று கத்தியபடி அவனின் கைகளைத் தட்டிவிட்டவனுக்கு மூச்சு வாங்கியது.
“ நீ இன்னைக்கு அக்கறையா இங்க வந்தப்பவே எனக்கு சந்தேகம். உன்னோட நரித்தனத்தை காட்டுவன்னு நான் நினைச்சது எவ்வளவு சரியா போச்சு..” என்றான் அர்ஜூன்.
“நீ பெரிய யோக்கியன் மாதிரி பேசாத அர்ஜூன். நீ மட்டும் குறுக்க வராம இருந்திருந்தா, வராஹினி இந்நேரம் என்னோட மனைவியா இருந்திருப்பா..எல்லா விஷயத்துலையும் நீதாண்டா குறுக்க வர்ற..” என்றான் ரஞ்சன்.
“அப்கோர்ஸ்..! நான் இல்லைன்னு சொல்லலையே.அது அப்போ. இனி உன் பார்வை கூட அவமேல விழக் கூடாது. மீறி ஏதாவது நடந்தது, நான் கொலைகாரன் ஆனாலும் பரவாயில்லை, நீ உயிரோட இருக்க மாட்ட. அதான் ரூபிணியோட கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சே. ஒழுங்கு மரியாதையா அதுக்கு ரெடியாகு. இப்படி அடுத்தவன் பொண்டாட்டிகிட்ட சில்மிஷம் பண்ற வேலை இதுவே கடைசியா இருக்கட்டும்..” என்று எச்சரித்தான் அர்ஜூன்.
அவனைப் பார்த்து முதலில் சாதரணமாக சிரித்த அர்ஜூனின் சிரிப்பு, சில நொடிகளில் அந்த அறையே எதிரொலிக்கும் அளவிற்கு கேட்டது. அங்கிருத்த சேரை இழுத்து அதில் அமர்ந்தவன் கால் மேல் கால் போட, ரஞ்சனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனை அப்படி பார்த்த ரஞ்சனுக்குமே அவனின் ஆளுமை கண்டு உள்ளுக்குள் பொங்கிக் கொண்டிருந்தது.
“நீ என்னை என்ன நினைச்ச..? சின்ன பையன் உனக்கே இவ்வளவு இருக்கும் போது, நீ படிச்ச காலேஜ்க்கு நான் ஓனர்டா. எனக்கு எவ்வளவு இருக்கும். என்ன நினைச்ச..? பிளான் உன்னோடது, அதுல சிக்குறது நான்…அதான..?” என்று மீண்டும் சிரித்தவன்,
“நீ எவ்வளவு பிளான் பண்ணியும் எல்லாமே பிலாப் ஆனப்பவே தெரிய வேண்டாம். எல்லாத்துக்குப் பின்னாடியும் இந்த அர்ஜூன் இருக்கான்னு… எதுவுமே வேண்டாம்ன்னு சொல்லி, மொத்தத்தையும் உனக்குத் தூக்கிக் குடுத்துட்டு போக, இதென்ன உன் அப்பன் வீட்டு சொத்து மட்டுமா..? இது எல்லாமே என் அப்பன் வீட்டு சொத்தும் தான்.” என்றான் அர்ஜூன்.
“நான் ஒன்னும் உன்னைத் தூக்கிக் குடுத்துட்டு போக சொல்லலை. நீயா போனா அதுக்கு நான் பொறுப்பா..?” என்றான் ரஞ்சன்.
“நானா போகணும்ன்னு தான நீ எல்லா பிளானும் பண்ணின..?” என்று சரியாக பாயிண்ட்டைப் பிடித்தான் அர்ஜூன்.
“இப்ப எதுக்கு அந்த பேச்செல்லாம்..?” என்றான் ரஞ்சன் கோபமாக.
“சின்ன பையன்னு நினைச்சு உன்னை இத்தனை நாள் சாதரணமா எடை போட்டது என்னோட தப்பு. என்னைய போட்டுத் தள்ள நீ போட்ட பிளான் எல்லாம் எனக்குத் தெரியாதுன்னா நினைக்கிற..?” என்று அர்ஜூன் கேட்க, திகைத்தான் ரஞ்சன்.
“தம்பி… சாரி சாரி.. பிரதரே உன்னோட ஆட்டமெல்லாம் குளோஸ். இனி என்னோட ஆட்டம் தான். ஆனா, உன் அளவுக்கு கீழ்த்தரமா ஆட மாட்டேன். நமக்கு எப்பவுமே நேர்வழி தான். எனிவே அட்வான்ஸ் கங்க்ராட்ஸ் பார் யுவர் மேரேஜ் லைப் வித் ரூபிணி..” என்றவன், எழுந்து அந்த அறையை விட்டு செல்ல, அவனையே இமைக்காமல் பார்த்திருந்தான் ரஞ்சன்.
“இவன் நிஜமாகவே லேசுப்பட்டவன் இல்லை..” என்று ரஞ்சனின் புத்தியில் அப்போதுதான் தெள்ளத் தெளிவாக உரைத்திருந்தது.