அவள் மனது சுய ஆலோசனையில் விரக்தியின் எல்லைக்கே சென்றது. தன்னுடைய காதலை அடி மனதில் புதைத்து விட்டு முகம் கழுவச் சென்றாள்.
வீட்டுக்கு சென்ற மூர்த்திக்கு தன்னுடைய அக்கா மகள் அவ்வளவு பெரிய வீட்டில் வாழப் போகிறாளே என்று எண்ணி சந்தோஷமாக இருந்தது.
அதை அவளது மனைவியிடம் பகிர்ந்து கொள்ள அவளுக்கும் சந்தோசமே. அனைவரும் கிளம்பி பாரதி வீட்டுக்கு வந்தார்கள். அதன் பின் அவளது அத்தை மீனா தான் பாரதியை இன்னும் அழகாக அலங்கரிக்க ஆரம்பித்தாள்.
தமிழிடம் பொண்ணு பார்க்கச் செல்ல வேண்டும் என்று கோகிலா சொல்லியிருந்ததால் அவன் தயாராகிக் கொண்டிருந்தான். ஆனால் அவனுக்கு திருமணத்தின் மீது எல்லாம் துளி கூட நாட்டமே இல்லை. அதனால் வேண்டா வெறுப்பாக கிளம்பினான்.
சரியாக பன்னிரெண்டு மணி ஆனதும் இரண்டு பெரிய கார்களில் வந்து இறங்கினார்கள் மாப்பிள்ளை வீட்டார். முதல் காரில் பாண்டியன், கோகிலா, மற்றும் தமிழும் அடுத்த காரில் தமிழின் தாய் மாமா குடும்பமும் வந்திருந்தார்கள்.
கேசவனும் மூர்த்தியும் அனைவரையும் வரவேற்று விரித்திருந்த ஜமுக்காளத்தில் அமர சொன்னார்கள். பாரதியை பெண் பார்க்க வருகிறார்கள் என்று கேள்விப் பட்டு அக்கம் பக்கத்தினரும் அங்கே வந்திருக்க அனைவரின் பார்வையும் தமிழ் மேல் தான் இருந்தது.
ஏற்கனவே அவனை அனைவருக்கும் பிடிக்கும். அதுவும் இன்று மாப்பிள்ளையாக வந்திருந்தவனை இன்னும் பிடித்தது. ஆறடி உயரத்தில், நல்ல உடற்கட்டுடன், அடர்த்தியான மீசையும் கொண்டு கம்பீரமாக இருந்தான். அனைவரும் தன்னையே பார்க்கவும் அவனுக்கு தான் முள் மேல் அமர்ந்திருப்பது போல இருந்தது.
சம்பிராதயப் பேச்சுக்கள் எல்லாம் முடிந்ததும் தமிழின் தாய் மாமா “பெண்ணை கூட்டிட்டு வாங்க”, என்று சொன்னதும் அமுதாவும், மீனாவும் சேர்ந்து பாரதியை வெளிய அழைத்து வந்தார்கள்.
தலை குனிந்த படி வெளியே வந்த பாரதி பொதுவாக கீழே விழுந்து கும்பிட்டு வணங்கி விட்டு எழுந்து நின்றாள். சிவப்பு பட்டணிந்து, தலை நிறைய மல்லிகைப் பூச்சூடி, அளவான நகைகளுடன் தங்கத் தேர் போல நின்றவளின் அழகு அனைவரையும் சொக்க வைத்தது.
“இவ்வளவு அழகை இத்தனை நாளா இவ எங்க வச்சிருந்தா?”, என்று தான் அவளை தெரிந்தவர்கள் அனைவரும் எண்ணினார்கள்.
போட்டோவை விட நேரில் இன்னும் அழகாக இருந்த தங்களுக்கு வரப் போகும் மருமகளை ரசித்துப் பார்த்தார்கள் பாண்டியனும் கோகிலாவும்.
“மாப்ள பொண்ணை பாரு யா”, என்றார் தமிழின் தாய் மாமா. அவர் அப்படிச் சொன்னதால் அவளை நிமிர்ந்து பார்த்தான் தமிழ்.
பார்த்தவன் திகைத்து போய் கண்களைக் கூட இமைக்க மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தலை அங்கே இங்கே என்று அசையவே இல்லை. சுற்றி இருப்பவர்கள் எல்லாம் தன்னைத் தான் பார்க்கிறார்கள் என்ற சுயநினைவே இல்லாமல் அவளையே பார்த்த படி இருந்தான்.
“இந்த பொண்ணு என்ன இவ்வளவு அழகா இருக்கு? இது உண்மையான அழகு தானா? காலேஜ்ல படிச்சதுனால மேக்கப் போட்டிருப்பாளா?”, என்ற எண்ணமும் அவனுக்கு வந்தது.
மனதில் அப்படி எண்ணினாலும் அவன் கண்கள் அவளையே பார்வையால் வருடியது. அவளது சின்ன நெற்றி, அதில் இருந்த அளவான பொட்டு, கண்ணா வானவில்லா என்று தெரியாத அளவு இருந்த அவளது இமைகள், அங்கே இங்கே அல்லாடும் மான் விழிகள், சின்னதாக இருந்த மூக்கு, அதற்கு கீழ் அவன் உணர்வுகளை பார்த்த உடனே தூண்டச் செய்வது போல இருந்த சிவந்த உதடுகள் என மேலும் அவன் பார்வை அவளை வருடியது.
அவளை அணுவணுவாக ரசித்த தமிழுக்கு கடைசியாக “மொக்கையா இருக்குறவளுகளே ஒழுக்கமா இருக்குறது இல்லை. ஆனா இவ இவ்வளவு அழகா இருந்துட்டு ஒழுக்கமாவா இருந்துருப்பா? எத்தனை பேர் இவ பின்னாடி சுத்தினாங்களோ?”, என்ற எண்ணம் தான் வந்தது.
“மாப்ள, பாக்க சொன்னா முறைச்சிட்டு இருக்குற? கொஞ்சம் பார்வையை திருப்பு. எல்லாரும் உன்னைத் தான் பாக்குறாங்க”, என்று அவனது மாமா சொன்னதும் தன்னையே நொந்து கொண்டு தலை குனிந்து அமர்ந்து விட்டான்.
மற்றவர்கள் பலகாரம் சாப்பிட்டுக் கொண்டிருக்க மாப்பிள்ளையை பார்க்காமலே தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள் பாரதி.
“என்ன மாப்ள பொண்ணு பிடிச்சிருக்கா?”, என்று அவனுடைய தாய் மாமன் கேட்டதும் “நான் பொண்ணு கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்”, என்றான் தமிழ்.
அனைவரும் வாயை பிளந்த படி பார்க்க “சரி மாப்ள உள்ள போய் பேசுங்க. படிச்ச பிள்ளைல? அதான் பேசணும்னு நினைக்குது”, என்றார் கேசவன்.
தமிழும் எழுந்து பாரதி இருந்த அறைக்குள் சென்றான். கட்டிலில் அமர்ந்திருந்தவள் அவன் உள்ளே வந்ததும் அதிர்ந்து எழுந்து நின்று விட்டாள். முதல் முறையாக அவனைப் பார்த்தாள். ரிஷியை விட பல மடங்கு அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தான். எதற்கு அவள் மனம் அவனை ரிஷியுடன் ஒப்பிட்டுப் பார்த்தாள் என்று அவளே அறியாள்.
“எதுக்கு இவ்வளவு பயம்? பரவால்ல உக்காரு”, என்றான் தமிழ்.
“இல்லை வேண்டாம்”, என்றாள் பாரதி.
“என்னோட பேர் தமிழ். உன் பேர் பாரதி தானே?”
“ஆமா”
“நமக்கு பேர் கூட பொருத்தமா தான் இருக்கு. என்னை உனக்கு பிடிச்சிருக்கா?”
“ம்ம்”
“அப்படியா? நிஜமாவே என்னை உனக்கு பிடிச்சிருக்கா?”
“ஆமா”
“பிடிக்காம எப்படி போகும்? இந்த ஊர்லே பணக்கார குடும்பம் எங்க குடும்பம் தான். அப்படி இருக்கும் போது எங்க வீட்டுக்கு மருமகளா ஆகுற வாய்ப்பை விடுவியா நீ?”, என்று அவன் நக்கலாகச் சொன்னதும் விதிர்த்துப் போய் அவனைப் பார்த்தாள்.
“என்ன சொல்கிறான் இவன்? நான் இவன் பணத்துக்காக தான் இவனை திருமணம் செய்வதாக நினைக்கிறானா?”, என்று எண்ணிய பாரதி “என்ன சொன்னீங்க?”, என்று கேட்டாள்.
“நீ உன் காதில் கேட்டது சரி தான். நீ பணத்துக்காக தானே என்னைக் கல்யாணம் பண்ண சம்மதிச்சிருக்க? என்னைப் பொறுத்த வரை பொண்ணுங்க சுயநலவாதிங்க. நீயும் அப்படி தான். எனக்கு இருக்குறது ஒரே ஒரு சந்தேகம் தான். சாதாரணமா இருக்குற பொண்ணுங்களே பசங்க கூட தாராளமா பழகும் போது நீ எவனையும் பாக்காமலா இருந்துருப்ப?”
“மிஸ்டர் வார்த்தையை அளந்து பேசுங்க. என்னைப் பத்தி இப்படி நினைக்கிறவர் எதுக்கு பொண்ணு பாக்க வரணும்? இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. வெளிய போய் என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போய்கிட்டே இருங்க. பொண்ணுங்களைப் பத்தின உங்க கோட்பாடையும் நீங்களே வச்சிக்கோங்க. உங்க பணத்தையும் நீங்களே வச்சிக்கோங்க”, என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திமிராக அவனுக்கு பதில் கொடுத்தாள் பாரதி. அவளது பேச்சில் அவன் கண்களில் மின்னல் வந்தது. அவளது தைரியத்தை அவன் மனம் வியந்து பாராட்டியது.
“ஓஹோ அம்மையார் பேர் பாரதியாச்சே. அதான் இவ்வளவு தைரியமா பேசுறீங்க? பாரதி கண்ட புதுமை பெண்ணோ?”, என்று நக்கலாக கேட்டான் தமிழ்.
“பெண்களைப் பத்தி பேசியே தன்னுடைய உயிரைக் கொடுத்த அந்த பாரதியைப் பத்தி பேச உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது”, என்றாள் பாரதி.
“என்னால உன்னை வேண்டாம்னு சொல்ல முடியாது. என்னோட அம்மா அப்பா ரொம்ப தீவிரமா இருக்காங்க. வேணும்னா என்னை வேண்டாம்னு நீ சொல்லேன்”
“நான் எப்படி சொல்ல முடியும்? ஊர்லே பெரிய வீட்டு சம்பந்தம் கிடைச்சிருக்குன்னு சொல்லி தான் வேண்டாம்னு சொன்ன என்னை சம்மதிக்க வச்சிருக்காங்க. நான் போராடி தோத்து போய் தான் தயாரானேன்”
“நீ என்னை வேண்டாம்னு சொன்னியா? எதுக்கு என்னை பிடிக்கலையா? நான் அழகா இல்லையா? இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே என்னைப் பிடிச்சிருக்கான்னு கேட்டதுக்கு ம்ம்ன்னு சொன்ன?”, என்று கேட்டான் தமிழ்.
அவன் பேச்சில் குழம்பி போனாள் பாரதி. அவளை பணத்திற்காக திருமணம் செய்கிறாள் என்று குற்றம் சாட்டிய அவனே அவளிடம் நான் அழகா இல்லையா என்று கேட்கிறான். அவனை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறினாள் பாரதி.
“தேவையில்லாத பேச்சு எதுக்கு? உங்களுக்கு என்னை பிடிக்கலை. அதனால கல்யாணத்தை நிறுத்திருங்க”, என்று கேட்டாள்.
“என்னால முடியாது”, என்று அவனும் சொன்னான்.
“அப்ப இதுக்கு என்ன தான் வழி?”
“நம்ம கல்யாணம் நடக்குறது தான் வழி. நான் கிளம்புறேன். கல்யாணத்துல சந்திக்கலாம்”, என்று சிரித்தான் தமிழ்.
“இவன் என்ன லூசா?”, என்று தான் பாரதிக்கு எண்ணத் தோன்றியது. “வந்தான் பிடிச்சிருக்கான்னு கேட்டான். பணத்துக்காக கல்யாணம் பண்ணுறன்னு குத்தம் சொன்னான். கல்யாணம் பிடிக்கலைன்னு சொன்னான். அவனைப் பிடிக்கலைன்னு சொன்னதும் கவலையா பிடிக்கலையான்னு கேக்குறான். கடைசில கல்யாணத்துல பாக்கலாம்னு சொல்றான்? இவனை பெத்தாங்களா செஞ்சாங்களா?”, என்று எண்ணினாள் பாரதி.
“எங்களுக்கு பொண்ணை ரொம்ப புடிச்சிருக்கு. தமிழ் பொண்ணுக் கிட்ட பேசிட்டியாப்பா? பொண்ணை உனக்கு பிடிச்சிருக்கா?”, என்று கேட்டாள் கோகிலா.
“கேசவா, என் மகனுக்கு உங்க பொண்ணைப் பிடிச்சிருக்கு. நீங்களும் பாரதி கிட்ட கேட்டா நாங்க கிளம்புவோம்”, என்றார் பாண்டியன்.
“இதோ அவளைக் கூப்பிடுறேன். நீங்களே கேளுங்க. பாரதி இங்க வா மா”, என்று அழைத்தார் கேசவன்.
அவள் வெளியே வந்ததும் தன்னாலே தமிழின் கண்கள் அவள் புறம் திரும்பியது.
“எங்க பையனை உனக்கு புடிச்சிருக்கா மா?”, என்று கேட்டாள் கோகிலா.
“மாமாவுக்கும் அப்பாவுக்கும் பிடிச்சிருந்தா எனக்கும் சம்மதம் தான்”, என்ற பாரதி உள்ளே சென்று விட்டாள். அப்பாவை விட தனக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் மூர்த்தி மனம் நிறைந்து போனது.
“என் அக்கா மக சந்தோஸமா இருக்கணும்”, என்று வேண்டிக் கொண்டார் மூர்த்தி.
“அப்புறம் என்ன, பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடிச்சிருச்சு. நல்ல நாள் குறிச்சிற வேண்டியது தான்”, என்று ஒருவர் ஆரம்பிக்க மற்ற பேச்சுகள் எல்லாம் பேசப் பட்டது.
“உங்க பொண்ணு கொண்டு வந்து தான் எங்க வீடு நிறையணும்னு இல்லை கேசவன். அதனால இவ்வளவு செய்ங்க, அதைச் செய்ங்கன்னு எல்லாம் நாங்க சொல்ல மாட்டோம். உங்களுக்கு விருப்பம் இருந்தா செய்ங்க. இல்லைன்னா எங்க மருமகளை கட்டின புடவையோட அனுப்பினா போதும்”, என்று பாண்டியன் சொன்னதும் வாயெல்லாம் பல்லாக போனது கேசவனுக்கும் அமுதாவுக்கும்.
அவர்கள் கிளம்பிச் சென்றதும் பாரதியைக் காண வந்த மூர்த்தி “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டா. உனக்கும் மாப்பிள்ளைக்கும் ரொம்ப பொருத்தம். உன் அம்மா உன் கூடவே இருப்பா. இனி கல்யாணம் வரைக்கும் வெயில்ல அலைய வேண்டாம். நான் தினமும் பிரவீனை இங்க கூட்டிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றார்.
“உங்களுக்காக தான் மாமா இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். நீங்க என்னை உங்க மக மாதிரி பாத்துக்கிட்டதுக்கு என்னால உங்க ஆசையை தான் நிறைவேத்த முடிஞ்சது. ஆனா வாழ்க்கையை நினைச்சா பயமா இருக்கு. அதை விட தமிழ்… அவனை நினைச்சா ரொம்ப பயமா இருக்கு. கூடவே ரிஷிக்கு துரோகம் பண்ணுறோமோன்னு மனசு அறுக்குது மாமா. எங்க அம்மா இருந்திருந்தா எனக்கு இப்படி ஒரு நிலைமை வந்துருக்குமான்னு தெரியலை மாமா. அம்மா நீ எங்க இருக்க மா? என் கூட இருக்கியா? எனக்கு வழிகாட்டியா இருந்து என் வாழ்க்கையை வழி நடத்துமா”, என்று மனதில் எண்ணிக் கொண்டே அலங்காரத்தைக் கலைத்தாள்.
எல்லா நகையையும் அவிழ்த்து கொண்டு அமுதா அருகில் சென்றவள் “இந்தாங்க சித்தி நகை”, என்று கொடுத்தாள்.
“அதை எதுக்கு டி என் கிட்ட கொடுக்குற? அது உன்னோட அம்மாவோடது தான். எனக்கு உங்க அப்பா நிறைய வாங்கிக் கொடுத்துருக்கார். அதனால உன் அம்மா நகை மேல எல்லாம் எனக்கு ஆசை வரலை. நீயே வச்சிக்கோ. உனக்கு வேணும்னா இதை அழிச்சிட்டு புது டிசைன்ல செஞ்சிக்கோ. உன் அம்மாவோட சேலை எல்லாம் அந்த பீரோல இருக்கு. அதையும் எடுத்துக்கோ”
“இந்த நகையை மாத்த வேண்டாம் சித்தி. அம்மாவோட வாசனை இதுல இருக்கும்”, என்று கண்கள் கலங்க சொல்லிக் கொண்டு போன பாரதியைப் பார்த்து முதல் முறையாக கண் கலங்கினாள் அமுதா.