தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் ரஞ்சனோ தப்பை மட்டுமே வாடிக்கையாக செய்து கொண்டிருந்தான். பெண் பித்தும், ஈகோவும் ஒருவனை எங்கு நிறுத்தும் என்று தெரியாமல் இன்னமும் அதே எண்ணத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிறான். அளவுக்கு அதிகமான சுதந்திரம், அவனுக்கு அளவுக்கு அதிகமான தப்புகளை செய்யக் கற்றுக் கொடுத்திருந்தது.
அர்ஜூனின் பேச்சில் எரிச்சலடைந்தவன், அடுத்த நிமிடமே அங்கிருந்து கிளம்பியிருந்தான். அவனுக்கு பித்துப் பிடித்த நிலைதான். எங்கு பார்த்தாலும் அர்ஜூனாகவே தெரிந்தான் அவனுக்கு. அனைத்தையும் பணத்தை மட்டுமே வைத்து வாங்கியவனுக்கு சின்னத் தோல்வியை கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை. நினைத்தது உடனே கிடைக்க வேண்டும் என்ற மனப்பான்மையுடன் வளர்ந்தவனுக்கு, கிடைக்காமல் போன ஒன்றின் மீது வெறியும், கோபமும் அதிகரித்தது. அதற்கு காரணம் அர்ஜூன் தான் என்று அவன் மனதில் ஆளப் பதிந்ததில், விட்டால் அவனை கொலை செய்யவும் தயங்க மாட்டான் என்ற நிலையில் இருந்தான்.
அதே கோபத்துடன் வீட்டிற்கு வந்தவனுக்கு, அங்கே ரூபிணி மொபைலில் யாருடனோ சிரித்துப் பேசிக் கொண்டிருக்க, அதைப் பார்த்தவனுக்கு கோபம் எல்லை மீற, வேகமாக அவள் அருகில் சென்றவன், பட்டென்று போனைப் பிடுங்கி தூக்கி எறிந்தான். அவன் எறிந்ததில் அந்த மொபைல் மண்டையைப் பிளந்திருந்தது.
“என்னாச்சு ரஞ்சன்..? எதுக்காக இப்படி காட்டு மிராண்டித் தனமா நடந்துக்கிற..?” என்றாள் ரூபிணி.
“ஏன் கேட்கமாட்ட..? உனக்கு என்ன..? நான் இல்லைன்னா அவன், அவன் இல்லைன்னா நான். அதனால ஜாலியா இருக்க..? ஆனா, என்னோட நிலைமையைப் பார்த்தியா..? அந்த வராஹினியை எனக்கு எவ்வளவு பிடிச்சிருந்ததுன்னு உனக்குத் தெரியும் தான..? இன்னைக்கு அவ என்னை கன்னத்தில அறைஞ்சுட்டா. இதெல்லாம் யாரால..? எல்லாம் அர்ஜூனால..?” என்றான் மூச்சு வாங்க.
“உனக்கு என்ன நடந்தாலும் அதுக்கு அந்த அர்ஜூன் தான் காரணமா..? உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு..?” என்றாள் ரூபிணி.
“எனக்குப் பைத்தியமா..? ஆமாடி.. எனக்குப் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. அறிவு இருக்குறவன் எவனாவது,வராஹி மாதிரி ஒரு தேவதையை விட்டுட்டு உன்னை கல்யாணம் பண்ணுவானா…?.அதான் அந்த அர்ஜூன் முந்திகிட்டான். ஆனா, நான் மாட்டிகிட்டேனே..! எனக்கு சப்போர்ட்டா இருந்த பிரஜேஷ் கூட இப்போ என் பக்கத்துல இல்லை. அதனால கூடிய சீக்கிரம் எனக்கு பைத்தியம் பிடிச்சிடும்..” என்றான்.
“வார்த்தையை அளந்து பேசு ரஞ்சன்..! உனக்கு நான் அவ்வளவு இளக்காரமா போயிட்டேனா..? நான் லிவிங் ரிலேஷன்ஷிப்ல இருந்தாலும், உன்கூட மட்டும் தான் இருந்தேன். நான் பண்ண ஒரே தப்பு, உன்பேச்சை கேட்டு, உங்கப்பா கிட்ட பொய் சொன்னது தான். அதையும் நான் எப்பவோ உணர்ந்திட்டேன். அதுக்கப்பறம் கூட நான் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைச்சேனே தவிர வேற யாரையும் இல்லை. ஆனா, உன் புத்தி இவ்வளவு கேவலமா இருக்கும்ன்னு நான் நினைக்கவேயில்லை…” என்றாள் அவளும் அதே கோபத்துடன்.
“கல்யாணம் பண்றவன், நல்ல குடும்ப பொண்ணா பார்த்து தான் கல்யாணம் பண்ணனும்ன்னு நினைப்பான். உன்னை எப்படி கல்யாணம் பண்ண முடியும்..?”என்று அவன் கேட்டு முடிப்பதற்குள் அவனை மாறி மாறி அறைந்திருந்தாள் ரூபிணி.
“ராஸ்கல்..! என்ன நினைச்சுட்டு இருக்குற மனசுல..? உனக்கு கல்யாணம்ன்னு வரும் போது குடும்ப பொண்ணு கேட்குதா..? ஏன் எங்களைப் பார்த்தா குடும்ப பொண்ணா தெரியலையோ துரைக்கு. நீ மட்டும் ஊரெல்லாம் மேஞ்சுட்டு, கல்யாணம்ன்னு வரும் போது அடக்க ஒடுக்கமான பொண்ணு கேட்ப… ஆனா, நாங்க கேட்டா தப்பா. அப்படி பார்த்தா நான் குடும்ப பையனைக் கூட கேட்கலையே. உன்னை மாதிரி ஒரு தருதலையைத் தான கேட்டேன்..” என்று அவள் பேச பேச அவனுக்கு செருப்பால் அடித்த மாதிரி இருந்தது.
“கண்ணே,மணியேன்னு என்கிட்டே உருகி வழிஞ்சப்ப தெரியலையோ…? கல்யாணம்ன்னு வரும் போது கசக்குதா உனக்கு..! இவ்வளவு தான் மரியாதை. இனி ஒரு வார்த்தை பேசின, இருக்கிற கோபத்துக்கு கொலை பண்ணினாலும் ஆச்சர்யப் படுறதுக்கு இல்லை..” என்று அவள் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தாள்.
“என்ன பேச்சு ரூபிணி இதெல்லாம்..?” என்ற சுமித்ராவின் குரலில் இருவரும் அதிர்ச்சியுடன் திரும்பினர்.
“என்ன ரஞ்சன் இது..? இவ சொல்றது எல்லாம் உண்மையா..?” என்றார் சுமித்ரா.
அவன் எதுவும் பேசாமல் தலையை குனிய,
“என்னம்மா ரூபிணி..?” என்றார்.
“எல்லாமே உண்மைதான்..!” என்றாள் ரூபிணி. அவள் அப்படி பட்டென்று சொல்லுவாள் என்று அவர்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை போலும். ரஞ்சனின் முகத்தில் கோபம், சுமித்ராவின் முகத்தில் அதிர்ச்சி.
“கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்காது..” என்றார் சுமித்ரா.
ரூபிணி “ஏன் நடக்காது..?” என்றாள்.
“இத்தனை நாள் எங்களயெல்லாம் ஏமாத்திட்டு இருந்த பொண்ணை என்னால் மருமகளா ஏத்துக்க முடியாது..” என்றார் சுமித்ரா.
“ஏமாத்திகிட்டு இருந்த பையனை மகன் இல்லைன்னு சொல்லிடுவிங்களா..?” என்றாள் ரூபிணி.
“அதெப்படி சொல்ல முடியும். அவன் என்னோட பையன்..” என்றார்.
“கண்டிப்பா நடக்கும். நான் நடத்தி வைப்பேன்..!” என்றார் கார்த்திகேயன் பின்னால் இருந்து.
“என்னங்க சொல்றிங்க..?நாம நினைக்கிற மாதிரி இவ நல்லவ கிடையாது. ரஞ்சன் என்னென்னமோ சொல்றான்…?” என்றார் சுமித்ரா.
“நாம நினைச்ச அளவுக்கு இவனும் கூட தான் நல்லவன் இல்லை. இவனை என்ன பண்ணலாம்..?” என்றார் கார்த்திகேயன்.
“நீங்க என்ன சொன்னாலும் என்னால இதை ஒத்துக்கவே முடியாது. இத்தனை நாள்ல ஒரு நாள் கூட இந்த பொண்ணு உண்மையை சொல்லலையே…” என்றார் சுமித்ரா.
“நடந்த விஷயமெல்லாம் எனக்கு எப்பவோ தெரியும். இனி புதுசா தெரியறதுக்கு ஒண்ணுமில்லை. இந்த பேச்சை விட்டுரு சுமித்ரா..” என்றார்.
“அப்போ.. எல்லாத்தையும் அவர்கிட்ட முன்னாடியே சொல்லிட்டு தான், என்னை மிரட்டிகிட்டு இருந்தியா..? அதுக்கு இந்த பெரிய மனுஷனும் உடந்தையா..?” என்றான் ரஞ்சன் கோபமாக.
“நான் பெரிய மனுஷனா இருக்கப் போய் தான் இன்னமும் உன்னை எதுவும் சொல்லாம, தெரியாத மாதிரியே இருந்து, ஒவ்வொரு விஷயத்தையும் நடத்திட்டு இருக்கேன். இப்போ கூட நீ காலேஜ்ல பண்ண விஷயம் எதுவும் எனக்குத் தெரியாதுன்னா நினைக்கிற..? எல்லாம் தெரிஞ்சும் நான் அமைதியா இருக்கேன்னா, அது அர்ஜூன் சொன்ன ஒரு வார்த்தைக்காகத் தான்..” என்றார் கார்த்திகேயன்.
“ஹோ..! அப்ப எல்லாருமே பிளான் பண்ணித் தான் பண்றிங்க..?நல்லாருக்கு… ரொம்ப நல்லாயிருக்கு..நடத்துங்க, இன்னமும் எவ்வளவு தூரம் நடத்தனுமோ நடத்துங்க…” என்றான்.
“அறியாத வயசுல தப்பு பண்ற.. போகப் போக சரியாகிடும்ன்னு நினைச்சேன். ஆனா, என்னைக்கு நீ பண்ணின எல்லாத்தையும், அர்ஜூன் தான் பண்ணான்னு முழு மூச்சா பழியைத் தூக்கிப் போட்டியோ, அன்னைக்கே நான் முடிவு பண்ணிட்டேன். உன்னை உன்னோட வழியில வந்து தான் பிடிக்கனும்ன்னு. நீ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதா ரூபிணி சொன்னப்போ, சரி, நம்ம பையன் கொஞ்சம் திருந்திட்டான் போல. இப்படியே இருந்திட்டா நல்லா இருக்கும்ன்னு மனசுல அவ்வளவு சந்தோஷப்பட்டேன். ஆனா, இன்னைக்கு நீ வராஹினிகிட்ட நடந்துகிட்ட முறையைப் பார்த்த பிறகு தான் தெரிஞ்சது, பிறவி குணத்தை எப்பவும் மாத்த முடியாதுன்னு…” என்றார் கார்த்திகேயன்.
“ஹோ..! உனக்கு அந்த எண்ணம் வேற இருக்கா..? அண்ணன் பொண்டாட்டியை கையைப் பிடிச்சு இழுக்குறது உங்க ஊர்ல தப்பில்லை, அப்படித்தான..?” என்றார் கோபமாக. அவர் இவ்வளவு அதிகமாக கோபப்பட்டு இன்று தான் பார்க்கிறார் சுமித்ரா.
“என்னங்க..? என்னென்னமோ சொல்றிங்க..? நீங்க முதல்ல டென்ஷன் ஆகாதிங்க..!” என்று அவர் பதற,
“என்னை வேற என்னதான் செய்ய சொல்ற..? நானும் இவன் இன்னைக்குத் திருந்திடுவான், நாளைக்குத் திருந்திடுவான்னு பார்த்து வெறுத்துப் போயிட்டேன். அப்படி என்ன ஈகோ இவனுக்கு..?அர்ஜூன் மேல அப்படி என்ன வஞ்சம் இவனுக்கு..?இவனுக்கு நான் எதுல குறை வச்சேன்..? இதோ… இந்த பொண்ணு கூட ஆஸ்திரேலியால குடும்பமே நடத்திட்டு, இங்க வந்து என்னமா நாடகம் ஆடுனான். விஷயம் தெரியாம நானும் இவன் சொன்னதை நம்பி, இந்த பொண்ணை அர்ஜூனுக்குப் பேசி, என்னென்னவோ நடந்து போய்டுச்சு. இப்ப வரைக்கும் அர்ஜூன் இந்த வீட்டுக்கு வர்றதில்லை. அதுக்குக் காரணமும் இவன் தான்…” என்று நிறுத்தியவர்,
“இப்ப கூட அர்ஜூன் என்ன சொன்னான் தெரியுமா..?வீட்ல போய் இதைப்பத்தி எதுவும் பேச வேண்டாம். இந்த பொண்ணுக்கும் இவனுக்கும் நல்ல படியா கல்யாணம் முடிஞ்சா சரித்தான்னு சொன்னான்.. அந்த பெருந்தன்மை கூட இவன்கிட்ட இல்லையே..?” என்றார் கார்த்திகேயன்.
“அவன் பெருந்தன்மையைத் தான் நான் பார்த்தேனே..? காலேஜ்ல என்னை அப்படி மிரட்டுறான், அதைப் பத்தியெல்லாம் எதுவும் கேட்காம, அவன் அது சொன்னான், இது சொன்னான்னு கதையளக்குறிங்க..” என்றான்.
அவனின் சட்டையைப் பிடித்த கார்த்திகேயன்,
“தோளுக்கு மீறி வளர்ந்துட்டயேன்னு பார்க்கிறேன்..” என்றார்.
“இல்லைன்னா என்ன பண்ணுவிங்க..?” என்றான் அவனும் விடாமல்.
ரூபிணி..”ரஞ்சன் என்ன இது..? அங்கிள் கிட்ட இப்படி பேசிட்டு இருக்க..?” என்றாள்.
“நீ பேசாத..! எல்லாமே உன்னால தான்..!” என்றான்.
“இப்ப எதுக்குடா அந்த பொண்ணை மிரட்டுற..?” என்றார் கார்த்தி.
“சும்மா இருங்க மாம்..! அதான் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்திருச்சே, இன்னும் என்ன பயம்..? ஆமா..! எல்லாமே நான் தான் பண்ணேன், இதோ ரூபிணி விஷயம் முதற்கொண்டு, வராஹினி விஷயம் வரைக்கும் எல்லாமே என்னோட பிளான் தான். எனக்கு ஒன்னு வேணும்ன்னா வேணும். வேண்டாம்ன்னா வேண்டாம். உங்களால என்ன பண்ண முடியும். இவளைக் கல்யாணம் பண்ணினாலும், அந்த வராஹினியை நான் சும்மா விட மாட்டேன். உங்களால முடிஞ்சதைப் பாருங்க..” என்றான்.
“உனக்கு அவ்வளவு தைரியம் வந்துடுச்சா.. அப்போ இதையும் கேட்டுக்கோ, அடுத்து உன்னால அந்த பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனை வந்துச்சு, பெத்த பையன்னு கூட பார்க்க மாட்டேன்… நானே போலீஸ்கிட்ட பிடிச்சு குடுத்திடுவேன். பாலியல் முயற்சி, கொலை முயற்சி, கடத்தல் முயற்சி, மிரட்டல்ன்னு எத்தனை செக்சன் இருக்கோ, அத்தனையும் உன்மேல போட சொல்லுவேன். இதுனால என்னோட கௌரவம் காத்துல பறந்தாலும் பரவாயில்லை. என்னோட பேச்சைக் கேட்டு இருக்கிறதா இருந்தா இரு. இல்லன்னா இந்த நிமிஷமே வீட்டை விட்டு வெளிய போகலாம். சொத்துல சல்லிக் காசு குடுக்க மாட்டேன்…” என்றார் உறுதியாக.
“அதெப்படி நீங்க சொல்ல முடியும்..?” என்றான்.
“நான் தான் சொல்லுவேன்..!. அடுத்த மாசம் உனக்கும்,ரூபிணிக்கும் கல்யாணம். சம்மதம்ன்னா இரு. இல்லையா போய்கிட்டே இரு. அப்படி இவன் கிளம்புறதா இருந்தா, வெளிய அனுப்பிட்டு கதவை இழுத்து சாத்திடு…” என்றவர், அடுத்து ஒரு நிமிடம் கூட அங்கு நிற்கவில்லை.
“அப்பா சொல்றதை கேளு ரஞ்சன். இதெல்லாம் தேவையா..?இனி அந்த பொண்ணு வராஹினி விஷயத்துல நீ தலையிடாத. கல்யாணத்துக்கு ரெடியாகுற வழியைப் பாரு..” என்ற சுமித்ரா உள்ளே சென்றவிட்டார்.
அவர்கள் சென்றவுடன் ரூபிணியை முறைத்தான்.
“இந்த முறைக்கிற வேலையெல்லாம் என்கிட்டே வேண்டாம். எங்க வீட்ல சொன்னேன்னு வச்சுக்க, உங்கப்பா என்ன பண்றது, அவங்களே உன்னை காணாத பொணம் ஆக்கிடுவாங்க. என்கிட்டே உன்னோட வித்தையெல்லாம் காட்டாத. இப்போ நீ பல்லு பிடுங்கின பாம்பு. அப்படியே இரு. எதுக்கு இந்த தேவையில்லாத வெட்டி வாய் உனக்கு . இப்பவும் சொல்றேன் நீ அந்த அளவுக்கு வொர்த் இல்லை. நானும் உன்னைப் பார்க்க முன்னாடி உன் பிரதரைப் பார்த்திருந்தா, கண்டிப்பா உன்னைத் திரும்பி கூட பார்த்திருக்க மாட்டேன்..” என்றாள் எப்பவும் சொல்வதைப் போல.
ரஞ்சனுக்கு இப்போது நாலு பக்கமும் முட்டுக் கட்டை. அவனே நினைத்தாலும் இனி எதையும் செய்ய முடியாது என்ற நிலை.
அந்த நேரத்தில் அவனுடைய போன் ரிங்காக… பார்த்தால் அர்ஜூன் அழைத்துக் கொண்டிருந்தான். எரிச்சலுடன், இரண்டு மூன்று முறை கட் செய்து விட்டும், மீண்டும் அழைத்துக் கொண்டிருந்தான்.
“இப்ப உனக்கு என்ன தான் வேணும்…?” என்றான் ஆத்திரத்தில்.
“கூல் பிரதரே..! என்ன? வீட்ல மாநாடு எல்லாம் முடிஞ்சதா..?” என்றான் கூலாக.
“என்ன..? எல்லாம் உன் வேலைதானா..?” என்றான்.
“பரவாயில்லையே..? உனக்கும் கொஞ்சம் மூளை இருக்கு. ஆக்கம், உருவாக்கம் எல்லாமே அர்ஜூன் தான். சிவனேன்னு இருந்தவனை ஆட்டத்துக்குள்ள இழுத்தவனே நீதான..? எப்போ ரூபிணியை, எனக்கு மேரேஜ் பண்ணி வச்சு, என்னை பழிவாங்கனும்ன்னு நினைச்சியோ அன்னைக்கு ஆரம்பிச்சதுடா உனக்கு அனர்த்தம். அதெல்லாம் போனா போகுதுன்னு விட்டாலும் கூட, இப்போ என்னோட பொண்டாட்டின்னு தெரிஞ்சே கையைப் பிடிச்சு இழுக்குற. சும்மா விடுவேனா நானு…? உன்னோட ப்ளே பாய் வேலையெல்லாம் இனி நடக்காது… ஓகே பிரதரே.. டாட்டா..” என்று கூலாக பேசியபடி போனை வைத்தான் அர்ஜூன்.
“அர்ஜூன்..!!!!” என்று கத்தியபடி, அவனுடைய போனையும் தூக்கி எறிந்திருந்தான்.
அன்று வீட்டிற்கு வந்த பிறகும் அர்ஜூன் அமைதியாகத் தான் இருந்தான். வராஹினியிடம் எதுவும் பேசவில்லை. பால்கனியின் நின்று எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பொறுத்து பொறுத்து பார்த்தவள்,
“என்னாச்சு..? ஏன் அமைதியா இருக்கீங்க..?” என்றாள்.
“வேண்டுதல்..” என்றான் பட்டென்று.
“என்ன சார்..? ஏன் இவ்வளவு கோபமா பேசுறிங்க..? நான் என்ன பண்ணேன்..?” என்றாள், புரியாமல்.
“நீ ஒன்னும் பண்ணலை. ஆனா, இனி யார் கூப்பிட்டாலும் எங்கயும் போகாத..” என்றான்.
“நீங்க இன்னும் அதை விடவேயில்லையா..? நீங்க தப்பா நினைச்சுகிட்டு இருக்கீங்க சார். பியூன் வந்து சொல்லவும் அங்கிள் தான் கூப்பிடுறாங்கன்னு நினைச்சேன். கரெஸ் பையன்னு சொன்ன உடனே, நீங்களா இருக்கும்ன்னு நினைச்சேன். சத்தியமா ரஞ்சன் அங்க இருக்குறது எனக்குத் தெரியாது..” என்றாள்.
“நான் விளக்கம் கேட்கவேயில்லையே..?” என்றான்.
“விளக்கம் கேட்கலை.. ஆனா, நீங்க காலேஜ்ல அப்படி சொன்னதும் எனக்கு ஒரு மாதிரியா போய்டுச்சு..அதான்..” என்றாள்.
“நான் என்ன சொன்னேன்..?” என்றான் புரியாமல்.
“யார் கூப்பிட்டாலும் வந்துடுவியா..? அப்படின்னு..” எனும் போதே அவள் கண்கள் கலங்கிவிட்டது.
“ஹேய்..! நான் தப்பா நினைச்சு எதுவும் சொல்லலை ராஹினி. யாருன்னு தெரியாம வரக் கூடாதுன்ற மீனிங்ல தான் சொன்னேன்..” என்றான்.
“அது அப்பறம் புரிஞ்சது சார். ஆனா, சடனா ஒரு மாதிரியாகிப் போய்டுச்சு..” என்றாள்.
“ஹோ காட்..! அதுக்கு ஏன் இப்படி பீல் பண்ற..? அதான் காலேஜ்லயே நல்லா இடிச்சுட்டு தான வந்த..? அந்த வராஹினி எங்க போனா..?” என்றான் சிரிப்புடன்.
“அது..அப்போ கோபம் வந்தது..! அதான்..” என்றாள்.
“மேடம் கோபம் வந்தா இடிப்பிங்களோ..?” என்றான் சன்னமான சிரிப்புடன்.
“இப்படி சிரிக்காதிங்க சார்..?” என்றாள்.
“ஏன்..?” என்றான்.
“இப்படி சிரிச்சா நீங்க இன்னமும் அழகா இருப்பிங்க. நான் சைட் அடிப்பேன். நீங்க அதுக்கும் லெக்சர் அடிப்பிங்க.. இதெல்லாம் தேவையா பாருங்க..” என்றாள்.
“ஆயா சத்தியமா தெரியாது சார்..! பஸ்ல தான் உங்களை முதன் முதலா பார்த்தேன்…அப்ப கூட உங்க பக்கத்துல உட்கார கொஞ்சம் சங்கட்டமா தான் இருந்தது. முன் பின் தெரியாத ஆண் பக்கத்துல எப்படி உட்கார்றதுன்னு யோசிச்சேன்…அப்பறம் உங்களைப் பார்த்தா தப்பா நினைக்கத் தோணலை. அதுக்கப்பறம் தான் பக்கத்து சீட்ல செட்டில் ஆனேன்..” என்றாள், வழிய வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்.
“ஐநூறு ரூபாய்க்கு நடிக்க சொன்னா, ஐயாயிரம் ரூபாய்க்கு நடிப்பா போலயே..? பொய்யை எப்படி உண்மை மாதிரியே பேசறதுன்னு இவகிட்ட தான் கத்துக்கணும்..” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் அர்ஜூன்.
“என்ன சார் யோசனை..?” என்றாள்.
“அது ஒண்ணுமில்லை ராஹினி..! என்னோட லவ்வர் ஞாபகம் வந்திடுச்சு..” என்று போற போக்கில் ஒரு பிட்டைப் போட்டான் அர்ஜூன்.
“என்ன சார் சொல்றிங்க..? லவ்வரா..?” என்றவளின் முகம் அப்படியே இருண்டு விட்டது.
“ஆமா, லவ்வர் தான். என்ன அந்த லவ் சக்சஸ் ஆகலை. பெயிலியர் ஆகிடுச்சு..” என்று சொன்னபடியே ஓரக்கண்ணால் அவளைப் பார்க்க, அப்போது தான் அவளுக்கு உயிரே வந்தது.
“புட்டுகிச்சா..!” என்றவளுக்கு அப்படி ஒரு சந்தோசம்.
“எனக்கு என்ன சார் சந்தோசம்..? உங்க கவலை என்னோட கவலை மாதிரியில்லையா..?” என்றாள் பாவமாய்.
“இல்லையே..! பார்த்தா அப்படித் தெரியலையே..?” என்று ஒரு மார்க்கமாய் பார்த்து வைத்தான்.
அதற்குமேல் அங்கு நின்றால் எதையாவது உளறிவிடுவோம் என்று நினைத்தவள்,
“எனக்கு வேலையிருக்கு…” என்று சொல்லிவிட்டு திரும்பினாள்.
திரும்பிய வேகத்தில் ஏதோ இடறி, அர்ஜூன் மீது விழ, அவனும் சேர்ந்து விழுந்தான்.
தன் மேல் கிடந்தவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வளவு நெருக்கத்தில் தெரிந்த அவளின் மதி முகத்தைக் கண்டு, மதி மயங்கிப் போனான் அர்ஜூன். அவளுக்கு எழவும் மனமில்லை. அவனுக்கு விடவும் மனமில்லை.
“என்னாச்சு..?” என்றான் மெதுவான குரலில்.
“கால் இடறிடுச்சு..” என்றாள் அவள். குரலில் ஏனோ சிறு தவிப்பு. நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது.
“சார்..! நான் படிக்கணும்..” என்றாள்.
“நான் வேண்டாம்ன்னு சொல்லவே இல்லையே..?” என்றான்.
“நீங்க பிடியை விட்டாத்தான் நான் எழுந்திருக்க முடியும்..” என்றாள். அப்போது தான் அவளை தன்னோடு வளைத்திருப்பதையே உணர்ந்தான் அர்ஜூன். மனமேயில்லாமல் கைகளை விலக்க, அவளும் மனமேயில்லாமல் விலகினாள். எழுந்தவள் அவளின் அறைக்குள் ஓடிப் போனாள்.
அதே இடத்தில் அமர்ந்து, தலையைக் கோதிக் கொண்டவன், வாய் விட்டு சிரித்துக் கொண்டிருந்தான்.