நாட்கள் அதன்வேகத்திற்கு செல்ல, வராஹினிக்கு செமஸ்டரும் நெருங்கியிருந்தது. அன்று அவளுக்கு கல்லூரி இல்லை. அர்ஜூன் மட்டும் தான் சென்றிருந்தான். அதுவே அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. நேரத்தை நெட்டித் தள்ளிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்ப்பதற்காக கார்த்திகேயன் வந்திருந்தார்.
“வாங்க அங்கிள்..!” என்றாள் மகிழ்ச்சியாக.
“எப்படிமா இருக்கீங்க..? அர்ஜூன் காலேஜ் போய்ட்டானா..?” என்றார்.
“அவர் காலையிலேயே போய்ட்டார் அங்கிள். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்.” என்றாள் வராஹினி.
“இன்னும் என்னம்மா அங்கிள்..? மாமான்னு சொல்லும்மா..?” என்றார்.
“சரிங்க மாமா..” என்றாள் உடனே.
“இது தான் கேட்க நல்லாருக்குமா..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, காபியுடன் வந்தார் மாலா.
“என்னமா மாலா..? எப்படி இருக்க..? என்ன என் மருமக பொண்ணு எப்படி ?” என்றார்.
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வராஹினி. அதுக்குத்தான் வந்தேன்..” என்றார்.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அதே புரியாத பாவத்துடன்,
“என்ன விஷயம் மாமா..?” என்றாள்.
“என்னதான் அர்ஜூன் நல்ல விதமா பேசினாலும், இன்னமும் கொஞ்சம் ஒதுக்கம் காட்டுறான். கொஞ்சம் கொஞ்சமா அவன் மாறிடுவான் அப்படின்ற நம்பிக்கையில தான் இத்தனை நாள் இருக்கேன். பிஸ்னஸ்,காலேஜ் பொறுப்பை அவன்கிட்ட ஒப்படைச்சுட்டா நானும் நிம்மதியா இருப்பேன். அர்ஜூன் கொஞ்சம் கூட பிடி குடுக்க மாட்டேங்குறான். வயசான காலத்துல நான் ஒருத்தனே எல்லாத்தையும் பார்க்க முடியலை. ரஞ்சனைப் பத்தி தான் உனக்குத் தெரியுமேம்மா… நீ அர்ஜூன் கிட்ட கொஞ்சம் எடுத்து சொல்லுமா..!” என்றார்.
“ஐயோ மாமா..? நானா..? நீங்க சொன்னாலாவது கொஞ்சம் கேட்பார். நான் சொன்னா சுத்தம்..” என்றாள்.
“ஏன்மா..? என்னாச்சு..?” என்றார்.
“எதுவுமே புரியாம, எந்த விஷயமும் தெரியாம நான் எப்படி மாமா பேச முடியும். அது மட்டுமில்லாம அவர் ஒரு விஷயம் செஞ்சா அது சரியா தான் இருக்கும். இத்தனை நாள்ல அது ஒன்னு தான் எனக்கு தெளிவா புரிஞ்சிருக்கு..” என்றாள்.
“நான் அவனை நம்பலைன்னு அவனுக்கு என்மேல் கொஞ்சம் வருத்தம்மா..! அதனால தான் இப்படி பண்றான்…” என்றார்.
“என்ன பிரச்சனை மாமா..?” என்று கேட்டாள் வராஹி.
“ரூபிணியை அவன் விரும்பினான்னு நினைச்சு அவனுக்கு நிச்சயம் பண்ணினேன். அவன் நேர்ல வந்து உண்மையை சொன்ன பிறகும் கூட, நான் அவனைத் தான் சத்தம் போட்டேன். ஒரு பொண்ணோட கண்ணீருக்கு ஆளாயிடக் கூடாதுன்னு. ஆனா, அந்த இடத்துல என்னோட பையனை நான் யோசிக்கத் தவறிட்டேன்மா. அதுக்கு பிறகு அவன் எனக்கு உண்மையை புரிய வச்சாலும், நான் அவனை நம்பலைன்ற எண்ணம் மட்டும் அவனுக்கு ஆளப் பதிஞ்சிடுச்சும்மா..” என்றார்.
“எல்லாம் சரியாகிடும் மாமா..” என்றாள், அவருக்கு ஆறுதலாக.
இல்லம்மா,”இத்தனை நாள் அயோக்கியனா இருந்த ஒருத்தன் சொன்னதை நம்பி, யோக்கியனா இருந்த என்னை அயோக்கியன்னு நம்பிட்டிங்களே…” அப்படின்னு அவன் அன்னைக்குக் கேட்டது இன்னமும் எனக்குள்ள கேட்டுகிட்டே இருக்கும்மா. எதுவும் தேவையில்லைன்னு சொல்லி, அன்னைக்கு வீட்டை விட்டு வெளிய வந்தவன் தான். சும்மாவே வீட்டுக்கு வர மாட்டான். அதுல இந்த விஷயமும் சேர்ந்துடுச்சு. இப்போ வரைக்கும் வர்றதில்லை. வருஷம் தான் போகுது… நானும் அந்த நிமிஷத்துல கொஞ்சம் யோசிக்காம இருந்துட்டேன். எல்லாத்துக்கும் காரணம் ரஞ்சன் தான் தெரிஞ்ச பிறகும் கூட என்னால ஒன்னும் செய்ய முடியலை. இதெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியாதுமா. இல்லைன்னா, கண்டிப்பா உன்னோட வாழ்க்கையையும் இதுல சம்பந்தப் படுத்தியிருக்க மாட்டேன் வாராஹினி. உங்க அண்ணனும், அம்மாவும் அவங்க முடிவுல உறுதியா இருந்ததால என்னால வேற எதுவும் செய்ய முடியலை…” என்றார்.
“இப்ப எதுக்கு மாமா நடந்து முடிஞ்சதைப் பத்தி பேசணும். இனி நடக்கப் போறதைப் பத்தி பேசுவோம்..” என்றாள்.
“எதுவும் நடக்காத மாதிரி நீ பேசுனாலும், உனக்கு விளக்கம் சொல்ல வேண்டிய இடத்துல நான் இருக்கேன்ம்மா. இதை நான் எப்பவோ பண்ணியிருக்கணும். இப்பவும் சொல்லலைன்னா, அது சரியா இருக்காதும்மா..” என்றார் வருத்தத்துடன்.
“நீங்க இதுல இவ்வளவு வருத்தப்பட ஒன்னுமேயில்லை மாமா..” என்றாள் புரியாமல்.
“இன்னும் ரெண்டு வாரத்துல ரஞ்சனுக்குக் கல்யாணம். ஆனா அர்ஜூன் வர மாட்டேன்னு சொல்றான். என்னதான் வீட்டுக்குள்ள பகை இருந்தாலும் அதை வெளிய காட்டிக்கக் கூடாது. அதுவே நாளைக்கு பெரிய விஷயமா வந்து நிற்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்..” என்றார் கார்த்திகேயன்.
“அவரோட கோபத்துல தப்பிருக்கிறதா எனக்குத் தெரியலை. இப்ப கூட அந்த ரஞ்சனுக்காகத் தான் ஒவ்வொன்னையும் நீங்க பார்த்து பார்த்து பண்றிங்க. பார்க்க போனா, அர்ஜூன் சார் உங்க மூத்த பையன். அவருக்கு கல்யாணம் ஆன விஷயமே யாருக்கும் தெரியாது. அதுக்கு என்ன பண்ணனும்ன்னு இப்ப வரைக்கும் நீங்க யோசிக்கலை மாமா. இதுல இருந்தே தெரியலையா..?” என்றாள் வராஹினி.
“அர்ஜூன் பொறுப்பான பையன்ம்மா.அதான் நான் எல்லாத்தையும் அவன் பார்த்துப்பான்னு நினைச்சு…” என்று தடுமாறினார்.
“அந்த பொறுப்பான பையனுக்கும் சில ஆசைகள் இருக்கலாம். சில தேவைகள் இருக்கலாம். அப்பாவா உங்ககிட்ட சில விஷயங்களை எதிர்பார்த்திருக்கலாம். சொல்ல முடியாத ஏக்கங்கள் கூட இருக்கலாம். ஒருத்தன் சரியா இருக்குறான் அப்படின்றதுக்காக, எல்லாத்தையும் அவங்களே பண்ணிப்பாங்கன்னு நினைச்சு விடுறது எந்த வகையில் சரின்னு நினைக்கிறிங்க மாமா..?” என்றாள்.
“வராஹினி..!” என்றார் அதிர்ந்து.
“மனுஷங்க ரெண்டு வகை.. ஒன்னு எல்லாத்தையும் உடனே முகத்துல காட்டிடுவாங்க. அது துக்கமா இருந்தாலும் சரி, மகிழ்ச்சியா இருந்தாலும் சரி. இன்னொருத்தவங்க இரண்டாவது வகை, எதுக்குமே எதையும் வெளிக் காட்ட மாட்டாங்க. அதுக்குக் காரணம் அவங்க வளர்ந்த சூழ்நிலையா கூட இருக்கலாம். இதுல நான் முதல் வகை, அர்ஜூன் சார் ரெண்டாவது வகை. நீங்க அவருக்கு அப்பாவா இல்லை, நல்ல கார்டியனா மட்டும் தான் இருந்திருக்கிங்க. ஒரு நாள்,அவருக்கு அப்பாவா, மனசு விட்டுப் பேசுங்க மாமா. அப்போ அவரோட உண்மையான முகம் என்னன்னு உங்களுக்கே தெரியும்…கார்டியன் மாதிரி கோரிக்கை வைக்காதிங்க, நீ இதை செய்ன்னு ஆர்டர் போடுங்க. யாரு கண்டா? நீங்க ரஞ்சனுக்கு ஆர்டர் போடுற மாதிரி தனக்கும் போடணும்ன்னு கூட அர்ஜூன் சார் எதிர்பார்க்கலாம். சில சின்ன சின்ன எதிர்பார்ப்புகள் அவருக்கும் இருக்கலாம். ” என்றாள்.
“இப்படி ஒரு கோணத்துல நான் யோசிச்சதே இல்லம்மா..?” என்றார் கார்த்திகேயன்.
“இப்ப நான் சொன்னது கூட எனக்குத் தோணினது தான் மாமா. இதெல்லாம் இருக்கலாம், இல்லாமையும் இருக்கலாம்..” என்றாள்.
“சின்ன பொண்ணா இருந்தாலும், ரொம்ப பக்குவமா பேசுறமா.. இத்தனை நாள் எனக்கு இது தோணாம போய்டுச்சு. அர்ஜூனுக்கு எது சரியா அமையலைன்னாலும், நல்ல துணையா நீ அமைஞ்சிருக்கம்மா. அதுவே பெரிய சந்தோசம்..” என்றார்.
“எங்க வீட்ல இருந்து யாராவது பேசுனாங்களா மாமா..?” என்றாள் திடீரென்று.
“உங்கப்பா மட்டும் அப்பப்ப பேசுவார். உங்க அம்மாவும், அண்ணனும் இப்போ வரைக்கும் எதுவும் பேசலைம்மா..” என்றார்.
“ஹோ..!” என்றவளுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
“ஆனா, அவங்களுக்கு அப்ப இருந்த கோபம் இப்ப இல்லைன்னு தான் தோணுது. பார்ப்போம், என்ன பண்றாங்கன்னு..” என்றவர்,
“அப்போ நான் கிளம்புறேன் வராஹினி..” என்றார்.
“இருங்க மாமா..! அர்ஜூன் சார் வந்துடுவார். பார்த்துட்டே போங்க..” என்றாள்.
“இருக்கட்டும்மா..! இன்னொரு முக்கியமான வேலை இருக்கு. நான் அர்ஜூன் கிட்ட அப்பறம் பேசுறேன்..” என்றவர், கிளம்பிவிட்டார்.
அவர் கிளம்பி வெளியே வருவதற்கும், அர்ஜூன் உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது. ஒரு நிமிடம் அமைதியாக அவரைப் பார்த்தவன்,
“எப்ப வந்திங்க..?” என்றான்.
“இப்பதான் அர்ஜூன். கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் வந்தேன்.” என்றார்.
“ஒரு வாரமா உங்களை காலேஜ் பக்கம் பார்க்க முடியறதில்லை..என்னாச்சு?” என்றான் சாவகாசமாய்.
“என்ன பண்றது அர்ஜூன்..!எனக்கு ரெஸ்ட் குடுக்கணும்ன்னு என்னோட பசங்களுக்கு தோணவே இல்லையே. எல்லாத்தையும் ஒரே ஆளா கவனிக்கனும்ன்னா சும்மாவா..?” என்றார்.
“ஏன்..? ரஞ்சன் என்ன பண்றான்..?” என்றான்.
“அவருக்கு சொத்தை பிரிச்சி அவர் பேர்ல எழுதிக் குடுக்கணுமாம். அப்பத்தான் எதுவா இருந்தாலும் செய்வாராம்..” என்றார்.
“நீங்க என்ன சொன்னிங்க..?” என்றான் யோசனையுடன்.
“முடியாதுன்னு உறுதியா சொல்லிட்டேன். அவனை நம்பி எப்படி ஒப்படைக்க முடியும். உட்கார்ந்து சாப்பிட்டா உலக்கை கூட மிஞ்சாது..” என்றார்.
“அதுவும் சரிதான்..! ஆனா, அதுக்காக அப்படியே விடவும் முடியாதுல்ல..” என்றான்.
“அவன் சொன்னாலும் திருந்துற ரகம் இல்லை. கெட்டாலும் திருந்துற ரகம் இல்லை. இனி பட்டுத் தான் திருந்தனும்..” என்றார் ஆதங்கத்துடன்.
அவர்கள் இருவரும் பேசுவதை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் வராஹினி. ஏதோ பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசுவதை போல் இருந்தது இருவரின் பேச்சும்.
“அப்போ நான் வரட்டுமா..?” என்றார் கார்த்திகேயன்.
அவரை இருக்க சொல்ல அர்ஜூனுக்கும் ஆசை தான். ஆனால் அவன் சொல்லவில்லை. தலையை மட்டும் ஆட்டினான்.
அவர் செல்லும் வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவர் சென்ற பின்பு அந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையின் பொருள் என்னவென்று புரியாவிட்டாலும், அந்த கண்கள் காட்டிய பாவனையை வராஹினி கொஞ்சம் புரிந்து கொண்டாள்.
“ம்ம்க்கும்..! மாமா போய் பத்து நிமிஷம் ஆச்சு…” என்றாள்.
“ம்ம்ம்..!” என்றவன் எதுவும் பேசாமல் அவளின் அருகில் வந்தவன், சில வினாடிகள் அவளையே பார்க்க, அவளோ புரியாமல் முழித்தாள்.
“என்ன..?” என்றாள்.
“ஒண்ணுமில்லை..! வித் யுவர் பர்மிஷன்..” என்றவன், என்ன நினைத்தானோ, அடுத்த நிமிடம் அவளை இறுக்கி அணைத்திருந்தான். ஆதியும், அந்தமுமான அந்த அணைப்பில் அவன் தன்னைத் தொலைத்துக் கொண்டிருக்க, பட்டென்று இப்படி அணைப்பான் என்று தெரியாத வராஹினிக்கு உடல் லேசாக நடுங்கத் தொடங்கியது. அவனாக அவளை அணைக்கும் முதல் அணைப்பு. அதை அவள் உணர்வதற்குள்,பட்டென்று அவளிடமிருந்து விலகியவன், வேகமாய் அவனின் அறைக்குள் சென்று விட்டான்.
ஒரு நிமிடம் அதே இடத்தில் நின்றிருந்தவள்,
“என்ன இவரு..? வந்தாரு, நின்னாரு, பார்த்தாரு, கட்டிப் பிடிச்சாரு, இப்ப உள்ள போயிட்டாரு..” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள்.
உள்ளே சென்ற அர்ஜூனோ, கொஞ்சம் உணர்வுகளின் தாக்கத்தில் இருந்தான்.
வராஹினி, கார்த்திகேயனுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே வந்து விட்டான். அவள் எதையோ பேசுகிறாள் என்று நினைத்து நிற்க, அவள் பேசியது அவனைப் பற்றிதான் என்று நினைக்கும் போது இப்போது கூட அர்ஜுனுக்கு சொல்ல முடியாத ஒரு உணர்வாக இருந்தது.
அவள் மேலோட்டமாய் சொல்லிவிட்டாள். ஆனால் அவள் சொன்னது உண்மைதானே.
தாயை இழந்தவன், தந்தையிடத்திலும் தாயின் அரவணைப்பைத் தேடுவது இயல்பு தானே. அர்ஜூனும் அதற்கு விதிவிலக்கில்லை. அவருடைய வாழ்வில் சுமித்ராவும், ரஞ்சனும் வந்த பிறகு ஏனோ அர்ஜூனிடம் இருந்து அவர் கொஞ்சம் கொஞ்சமாக விலகித் தான் போனார்.
என்னதான் அர்ஜூன் அப்படி, அர்ஜூன் இப்படி என்று அவர் வாய் ஓயாமல் பேசினாலும், இருவருக்குமான இடைவெளி நீண்டு கொண்டு தான் சென்றது.
என் மகன் என்று வெளியே பெருமையாய் சொல்லும் தகப்பனை காட்டிலும், என் மகன் என்று அவனை பெருமையாய் அணைத்துக் கொள்ளும் தந்தையை எதிர்பார்த்தானோ என்னவோ..? அவனுக்கான சில முடிவுகளை அவரும் எடுக்க வேண்டும் என்று ஏங்கினானோ என்னவோ..? உணர்வுகளை கடத்தத் தெரியாததால் உற்ற நண்பன் என்று ஒரு உறவு கூட அவன் வாழ்வில் இல்லாமல் போனது. இறுகிப் போன உணர்வுகள் அவனை மேலும் இறுக்கமாக்கியிருந்தன.
தான் செய்வது எல்லாம் சரியாகத் தான் இருக்கும் என்ற எண்ணம் அவனுக்குள் வளர்ந்து கொண்டே தான் இருந்தது. அந்த சமயத்தில் தான், வாராஹி அவன் வாழ்வில் வந்தாள்.
அவள் விஷயத்தில் முதல் முறையாக சறுக்கிவிட்ட உணர்வு அவனுக்கு. பெண்களிடத்தில் பழகாதவன், பேசாதவன் இல்லை என்றாலும், வராஹினியிடம் மட்டும் யதார்த்தத்தையும் தாண்டிய ஒரு உணர்வு இருந்து கொண்டே தான் இருக்கிறது அவனுக்கு.
அவன் எப்படி பேசினாலும், கோபமாக பேசினாலும், சாந்தமாக பேசினாலும்.. அவள் அவனிடம் காட்டுவது எப்போதும் ஒரே முகம் தான்.
அதுவும் இன்று அவள் பேசியது….அந்த வார்த்தைகளின் உண்மை அவனை வேறு எதைப் பற்றியும் சிந்திக்க விடாமல் செய்து கொண்டிருக்கிறது.
“என்ன அர்ஜூன்..? யோசனை பலமா இருக்கு..? என்னடா இது.. சின்ன பொண்ணுன்னு நினச்சா, நம்மளை சரியா எடை போடுறாளேன்னு யோசிக்கிறியா..?” என்றது அவனின் மனம்.
“இல்லைன்னு சொல்ல மாட்டேன்..” என்றான் பதிலாய்.
“இந்த யோசனை உனக்குத் தேவையில்லாதது. அவளுக்கு உன்னை பிடிச்சிருக்கு. அதான் உன்னைப் பத்தி சரியா யோசிக்கிறா. உனக்கும் அவளைப் பிடிச்சிருக்குன்னு உன்னோட நடவடிக்கையே சொல்லுது… அதை ஏத்துக்காம நீதான் தேவையில்லாத வெட்டி யோசனைகளை எல்லாம் தூக்கி சுமந்து கிட்டு இருக்க. நடப்பை ஏத்துகிட்டு வாழ்ற வழியைப் பார்..” என்று அவனின் மனம் கறாராய் சொன்னது.
“வராஹினி தான் என்னோட மனைவி. என்னதான் வாய் வார்த்தையா படிப்பு முடிஞ்ச உடனே பிரிஞ்சிடலாம்ன்னு நான் சொல்லியிருந்தாலும், என்னாலயே அது முடியுமான்னு தெரியலை. அப்பறம் அவளும் கண்டிப்பா போக மாட்டா..” என்றான், மனதிடம்.
“இந்த வியாக்கியானம் எல்லாம் நல்லா பேசு. ஆனா, நீ எப்ப நல்லா இருக்க..? எப்ப சுடுதண்ணிய மூஞ்சில ஊத்திட்டு இருக்கன்னு எனக்கே தெரிய மாட்டேங்குது. அந்த பொண்ணுக்கு என்ன தெரியும்.. பாவம்..” என்றது மனம்.
“அவளா பாவம்…! அவளுக்கு புருஷனா இருக்குற நான் தான் பாவம். நானும் நல்ல வாத்தியாரா இருக்கனும்ன்னு பார்க்கிறேன். விட மாட்டா போல..” என்று பதில் சொன்னவன், அப்போது தான் ஞாபகம் வந்தவனாய், அவளுக்காய் வாங்கி வந்திருந்த புது செல்போனை எடுத்துக் கொண்டு, அவளைத் தேடிப் போனான்.
“இங்க என்ன பண்ணிட்டு இருக்க..?” என்று அவன் திடீரென்று வந்து கேட்கவும், பதட்டத்தில் கையில் இருந்த பாத்திரத்தை கீழே விட்டிருந்தாள்.
“ஹேய்..! இப்ப எதுக்கு இப்படி பதட்டப்படுற..?” என்றான்.
“கேட்குறாரு பாரு கேள்வி. சும்மா இருக்கிறவளை எதையாவது பண்ணி கிண்டி விட்ற வேண்டியது. அப்பறம் ஒண்ணுமே தெரியாத பச்ச பிள்ளை மாதிரி வந்து என்னாச்சு..? செவிடாச்சுன்னு கேட்க வேண்டியது…?” என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டாள்.
“ராஹினி உன்னைத் தான் கேட்கிறேன்..” என்றான்.
“பார்த்தா தெரியலை..! கிளீன் பண்ணி வச்ச பாத்திரத்தை எல்லாம் எடுத்து வைக்க வேண்டிய இடத்துல வச்சுகிட்டு இருக்கேன்..” என்றாள்.
“அதைத் தான் கேட்கிறேன். நீ ஏன் இதெல்லாம் பண்ணிட்டு இருக்க..?” என்றான் புரியாமல்.
“நான் கிளீன் பண்ணலை. மாலாக்கா பண்ணி வச்சுட்டு போனாங்க. நான் எடுத்து மட்டும் வைக்கிறேன்..” என்றாள்.
“அதான பார்த்தேன்..” என்றான்.
“இப்ப என்ன சொல்ல வரீங்க..? நான் செஞ்சாலும் அதிசயம், செய்யலைன்னாலும் அதிசயம்…அப்படித்தான..?” என்றாள்.
“அதான், உனக்கே தெரியுதே..” என்றான்.
“இதைச் சொல்லத்தான் இப்ப வந்திங்களா..?” என்றாள்.
“இல்லையே..!ஒன்னு குடுக்க வந்தேன்..” என்றான்.
அவன் அப்படி சொன்னதும் அவளுக்கு உள்ளுக்குள் பக்கென்று இருந்தது.
“ரைட்டு…! வராஹி.. போற போக்கைப் பார்த்தா நீ செமஸ்டர்க்கு ரெடியாகுற மாதிரி இல்லை. சீமந்தத்துக்கு தான் ரெடியாவ போல..இருந்தாலும் வாத்திகிட்ட இப்படி ஒரு ஸ்பீடை எதிர்பார்க்கலை..” என்று பேசிக் கொண்டிருந்தாள்.
“ராஹினி..! உனக்கு என்னதான் ஆச்சு..” என்று அவளின் தோளைப் பிடித்து உலுக்கினான் அர்ஜூன்.
“ங்கான்..! ஒண்ணுமில்லை சார்…! அதான் குடுக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டிங்கல்ல… சீக்கிரம் குடுத்துட்டு போங்க..” என்றவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு நிற்க,
அர்ஜூன் ஒன்றும் புரியாமல், அவளின் கையைப் பிடிக்க, அவளுக்கு ஜிவ்வென்று இருந்தது. அவள் எதையோ எதிபார்த்து நிற்க, அவளின் உள்ளங்கையை விரித்தவன் அதில் மொபைல் போன் பாக்ஸை வைத்தான்.
“என்ன பண்றாரு..” என்று அவள் கையைப் பார்க்க, அதில் இருந்த போனைப் பார்த்தவளுக்கு சப்பென்று ஆனது.
“ஹூப்..! போனைத் தான் குடுக்க வந்தாரா..? அதுக்குள்ள என்னமோ யோசிச்சு, என்னமோ நினைச்சு…ஹோ காட், வராஹி உனக்கு முத்திடுச்சு..” என்று புலம்பினாள். அப்போது தான் அர்ஜூனுக்கும் விஷயம் புரிந்தது.
அங்கிருந்த சுவரில் அவளை மறைத்து, கைகளை கட்டியபடி சாய்ந்து நின்றவன்,
“ஆமா, நீ என்ன நினைச்ச..?” என்றான், வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.
“நான்..அது..நான் எதுவும் நினைக்கலையே..?” என்றாள், எதுவுமே தெரியாத பாவனையுடன்.
“இல்லையே..? எதையோ எதிர்பார்த்து, வேற எதையோ வாங்குன மாதிரி இருக்கே..” என்றான்.
“அப்படியா தெரியுது..! அப்படி தெரிய வாய்ப்பில்லையே..?” என்றாள்.
“இல்லை.. நீ வேற என்னமோ எதிர்பார்த்திருக்க… அதைக் குடுக்காம போனா தெய்வக் குத்தமாய்டும்…” என்றவன் அவளை நெருங்க,
“சத்தியமா நான் எதையும் எதிர்பார்க்கலை சார்…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவளின் அருகில் வந்தவன், அவள் கன்னத்து முடியை விரல்களால் ஒதுக்கி அருகில் செல்ல, அவளுக்கு இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.
அவள் எதையோ எதிர்பார்த்து நிற்க, அவளின் காதருகே சென்றவன்,
“போய்..ஒழுங்கா படிக்கிற வழியைப் பாரு..!” என்றான் சிரிப்புடன். அவள் பட்டென்று திரும்பி அவனை முறைக்க, சிரிப்பை மறைத்துக் கொண்டான்.
“உங்களை..!!” என்று பல்லைக் கடித்துக் கொண்டு, அவனின் கழுத்தை நெறிக்க சென்றவள், பின்பு அதை கைவிட்டவளாய்,
“ம்க்கும்..!” என்று தலையை வெட்டியபடி, அவனை இடித்துக் கொண்டு சென்றாள்.
“என்ன இவ எதுக்கெடுத்தாலும் இடிச்சுட்டு போறா..?” என்று ஒரு நிமிடம் சென்றவளைப் பார்த்து ரசித்தவன்,
‘இருந்தாலும் நீ இப்படி டியூப் லைட்டா இருந்திருக்க கூடாது அர்ஜூன்..’ என்று தனக்குத் தானே சொல்லி சிரித்துக் கொண்டான்.