அதைக் கண்டு மனதுக்குள் உல்லாசமான தமிழ் “இப்ப உன் கை செஞ்ச வேலை எனக்கு சுத்தமா பிடிக்கல பாரதி”, என்று சீரியஸான குரலில் விட்டு அவனுடைய போனை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்று விட்டான்.
அவன் என்ன சொன்னான் என்று குழம்பியவளுக்கு அவன் சொன்னது புரிந்ததும் குப்பென்று வியர்த்துப் போனது.
நியாயப் படி பார்த்தால் அவன் பேச்சில் அவளுக்கு கோபம் தான் வர வேண்டும்? ஆனால் அவள் மனமும் அவன் பேச்சை ரசிக்கும் காரணம் தான் அவளுக்கு புரியவே இல்லை.
அவன் பேச்சும் அவன் பார்வையும் அவளை தடுமாறச் செய்ய அங்கே தமிழின் நிலையோ மிக மோசமாக இருந்தது. முத்தமிடும் போது உணர்ந்த அவளது வாசனை, அவளுடைய மென்மையான இதழ்கள், இப்போது அவன் கண்ட அவளது பரிமாணம் என அனைத்தும் சேர்ந்து அவனுடைய உணர்வுகளை கிளப்பி விட அறைக்குள் இருந்தால் அவனது கட்டுப்பாடு தகர்ந்து விடும் என்பதால் தான் மாடிக்கு வந்து விட்டான்.
திருமணம் முடிந்த ஒவ்வொரு ஆணுக்கும் தன்னுடைய மனைவியை முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எதிர் பார்ப்பு இருக்க தானே செய்யும்? அதை தவறென்று சொல்ல முடியுமா? அவனுக்கும் அந்த ஏக்கம் வந்தது, அதுவும் அளவுக்கு அதிகமாக. அவள் கோகிலா கொடுத்த நகையை மறுத்த போதே ஓரளவுக்கு அவள் நல்லவள் என்று நம்பினான். கூடவே முதல் ராத்திரியில் அவளை அவன் தொட்ட போது உடனே அவன் கைக்குள் சுருண்டு அவனுக்கு தலையணை மந்திரம் போட நினைக்காமல் இயல்பாக மனது மாற அவள் டைம் கேட்ட விதம் அவனுக்கு பிடித்திருந்தது. கூடவே அவளுக்கு அம்மா இல்லை என்று சொன்ன போது அவள் மொத்தமாக அவன் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டாள். அவள் மற்ற பெண்களைப் போல அல்ல என்று எண்ணி அவள் மேல் தன்னுடைய அன்பை அதிகமாக விதைத்து வைத்திருந்தான் தமிழ்.
அவள் மனது மாற டைம் கொடுத்தாலும் அவனுக்கு சில நேரம் அவளால் பிரம்மை பிடித்தது போல இருந்தது. அவனால் நாளுக்கு நாள் அவனுடைய தாகம் அதிகரிப்பதை வேடிக்கை பார்க்க முடியவில்லை. தினமும் ஒரே அறையில் ஒரே கட்டிலில் படுக்கும் போது அவளை அப்படியே திருப்பி இழுத்து அணைக்கச் சொல்லி அவன் தேகம் தவித்தது.
அவளது அருகாமைக்காக அவளின் தொடுகைக்காக அவன் மனம் ஏங்க ஆரம்பித்தது. அவளைப் பற்றி எண்ணினாலே அவன் உணர்வுகள் அடங்க மறுப்பதை உணர்ந்தவனுக்கு “சே இது என்ன வாழ்க்கை?”, என்ற விரக்தி தான் வந்தது.
ஆனால் தன்னுடைய நெருக்கம் அவளுக்கு பிடிக்குமா என்று கேள்வியிலே அவளை விட்டு விலகி இருந்து துன்ப பட்டான். தன்னை விட்டு அவள் விலகி விலகி செல்வதை அவன் மனம் ரசிக்கவே இல்லை. ஆனால் இன்று அவன் அவளை நெருங்கிய போது அவளிடம் எதிர்ப்பு எதுவும் இல்லை என்று எண்ணி அவன் நெஞ்சம் உவகை கொண்டது. அவள் முகத்தில் மிளிரும் வெட்கம் அவனுக்கு நம்பிக்கையை கொடுத்தது.
அவளைப் பற்றி எண்ணிக் கொண்டே சிறிது நேரம் மாடியில் உலாவினான். ஜில்லென்ற குளிர் காற்று முகத்தில் பட்டதும் அவன் உணர்வுகள் கொஞ்சம் வடிந்தன. வெகு நேரம் கழித்து அவன் அறைக்குள் சென்ற போது அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவளை பார்த்த படியே படுத்தவன் அப்படியே தூங்கி விட்டான்.
ஒரு நாள் “பாரதி நாளான்னைக்கு என் கூட படிச்ச பிரண்டுக்கு கல்யாணம். நாம போகணும். இப்ப போய் உனக்கு ஏதாவது டிரஸ் வாங்கிட்டு வரலாமா?”, என்று கேட்டான் தமிழ்.
“கல்யாணத்துக்கு வாங்கின சேலையே நிறைய இன்னும் கட்டாம இருக்கே? அதுல ஒண்ணு கட்டிக்கிறேனே?”, என்றாள் பாரதி.
“கல்யாணம் முடிஞ்சு பத்து நாளுக்கு மேல ஆகிட்டு. ஆனா நான் இது வரைக்கும் உனக்கு ஒண்ணுமே வாங்கித் தரலை. அம்மா வேற உன்னை டவுனுக்கு கூட்டிட்டு போன்னு சொல்லிட்டே இருக்காங்க. சும்மா ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாமே?”
இதற்கு மேல் மறுத்தால் நன்றாக இருக்காது என்று எண்ணி அவனுடன் கிளம்பினாள் பாரதி.
முதலில் இருவருக்கும் டிரெஸ்ஸ் எடுத்தார்கள். பின் ஒரு காபி ஷாப் கூட்டிச் சென்று அவளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்தான்.
பின் அவளுக்கென்று ஒரு மூக்குத்தி வாங்கினான் தமிழ். “இது யாருக்கு? ஒரு வேளை அத்தைக்கு வாங்குறானோ? ஆனா அவங்க தான் பெருசா வாங்கி போட்டுருக்காங்களே? யாருக்கா இருந்தா நமக்கு என்ன?”, என்று எண்ணிக் கொண்டாள் பாரதி. அதன் பின் வீட்டுக்கு வந்ததும் அந்த மூக்குத்தி வாங்கிய நகை டப்பாவை அவளிடம் நீட்டினான் தமிழ்.
“இது எதுக்குங்க அத்தைக்கா?”, என்று கேட்டாள் பாரதி.
“இல்லை உனக்கு தான்”, என்று அவன் சொன்னதும் அவள் கண்கள் வியப்பிலும் அதிர்ச்சியிலும் விரிந்தது.
“என்ன சொல்றீங்க? எனக்கா? நான் மூக்குத்தி எல்லாம் போட்டது இல்லை. எனக்கு மூக்கே குத்தலை”, என்று அவள் புன்னகையுடன் சொன்னதும் அவன் முகம் வாடிப் போனது.
அவன் முக வாட்டம் அவளுக்கு வருத்தத்தை அழிக்க “நிஜமாவே எனக்கு மூக்குத்தி போடணும்னு ஐடியாவே இல்லைங்க”, என்று அவனை சமாதானப் படுத்தும் விதமாக சொன்னாள்.
“பரவால்ல விடு. எனக்கு மூக்குத்தி போட்டுருக்குற பொண்ணுங்களை ரொம்ப புடிக்கும். அது அம்மாவை பாத்து அந்த எண்ணம் வந்துச்சான்னு தெரியலை. உனக்கு வாங்கிக் கொடுக்கணும்னு தோணுச்சு. ஆனா உனக்கு பிடிக்கலைன்னா விட்டுரு. ஆனா இது உன் கிட்டயே இருக்கட்டும்”, என்று சொல்லி அவள் கையில் கொடுத்து விட்டுச் சென்றான்.
அன்று முழுவதும் அவனுடைய ஏமாற்றமான முகமே அவள் கண்ணில் வந்து வந்து போனது.
அடுத்த நாள் காலையில் தமிழ் மில்லுக்கு போக கிளம்பி சாப்பிட அமர்ந்தான். பாண்டியனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இருவருக்கும் பரிமாறினாள் பாரதி.
“என்ன டா மில்லுக்கு கிளம்பிட்டியா?”, என்று கேட்டார் பாண்டியன்.
“ஆமாப்பா”, என்றான் தமிழ்.
“அங்க என்ன வேலை இருக்குனு இப்படி ஓடிக்கிட்டு இருக்க? அங்க தான் எல்லாம் பாத்துக்க ஆள் இருக்கே? நீ மருமகளை அழைச்சிட்டு வெளிய போகலாம்ல?”
“நல்லா சொல்லுங்க, நானும் தினமும் நச்சரிச்சுப் பாத்துட்டேன். அசைய மாட்டிக்கான். பாரதி வீட்டுக்குள்ளே இருக்கா. அவளை நாலு இடத்துக்கு கூட்டிட்டு போகலாம்ல?”, என்று கேட்ட படி அங்கே வந்தாள் கோகிலா.
“ஐயோ அவர் கூப்பிட தான் அத்தை செய்றார். நான் தான் கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொன்னேன்”, என்று அவசரமாக சொன்னாள் பாரதி.
தனக்கு சப்போர்ட் பண்ணி பேசும் மனைவியை ஒரு பார்வை பார்த்து விட்டு சாப்பிட ஆரம்பித்தான் தமிழ்.
“அப்புறம்னா எப்ப மா? குழந்தை குட்டின்னு வந்துட்டுன்னா நாலு இடம் போக முடியுமா? இப்பவே போனா தான் உண்டு”, என்று கோகிலா சொல்ல “ஆமா இன்னைக்கு நீ மில்லுக்கு எல்லாம் போக வேண்டாம் தமிழ். பாரதியை கூட்டிட்டு இங்க இருக்குற குற்றாலத்துக்காவது போயிட்டு வா. நல்ல சீசன் போயிட்டு இருக்கு”, என்றார் பாண்டியன்.
“நான் என்ன சொல்லட்டும்”, என்ற கேள்வியோடு பாரதியைப் பார்த்தான் தமிழ்.
“என்ன மா போறீங்க தானே?”, என்று அவளிடம் பாண்டியன் கேட்க “போறோம் மாமா”, என்றாள் பாரதி. அதில் தமிழ் முகம் மலர அவன் சந்தோஷம் அவளையும் தொற்றிக் கொண்டது.
இருவரும் தேவையானவைகளை எடுத்து வைத்துக் கொண்டு காரில் ஏறி கிளம்பினார்கள்.
காரில் செல்லும் போது உற்சாகமாக வந்தாள் பாரதி. “நீங்க இதுக்கு முன்னாடி போயிருக்கீங்களா?”, என்று கேட்டாள்.
அவளைக் கண்டு புன்னகைத்தவன் “நான் வருஷம் தவறாம பிரண்ட்ஸ் கூட போய்ருவேன் பாரதி. நீ போனது இல்லையா?”, என்று கேட்டான்.
“திருநெல்வேலிக்காரின்னு தான் பேர், ஆனா நான் எங்கயும் போனது இல்லை”
“ஏன்?”
“கூட்டிட்டு போக யாருமே இல்லையே?”, என்று அவள் தலை சரித்துச் சொல்ல அவனுக்கு தான் உள்ளுக்குள் உருகி போயிற்று.