அர்ஜூன் அப்படி பேசியதில் இருந்து அவனிடம் அவளாக சென்று எதுவும் பேசவில்லை. அன்றைய இரவு மட்டுமல்ல, அதற்கடுத்து வந்த நாட்களிலும் அவளின் மௌனம் தொடர்ந்து கொண்டே இருந்தது. அர்ஜூனும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவனைப் பார்ப்பதை மட்டும் அவள் நிறுத்தவேயில்லை. அவன் பார்க்காத சமயங்களில் அவனைப் பார்த்துக் கொண்டேயிருப்பாள். என்ன முயன்றும் அவன் மீதான உணர்வுகளுக்கு மட்டும் அவளால் தடை போட முடியவில்லை.
அவனுடனேயே கல்லூரி சென்றாலும், அதிகம் பேசிக் கொள்ள மாட்டாள். அவளின் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை கண்டும் காணாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜூன். கார்த்திகேயன் கொடுத்த பொறுப்புகள் அவனை வேலைக்குள் இழுக்க, இவளைப் பற்றி சிந்திக்கவும் அவனுக்கு நேரமின்றி போனது.
அர்ஜூனைப் பொறுத்தவரை அவன் செய்தது சரியே. இது ஒரு விஷயம் என்று எடுத்துக் கொண்டு, இவள் இப்படி முகத்தைத் தூக்கிக் கொண்டிருப்பாள் என்று அவன் நினைக்கவில்லை. அது அவனுக்குப் பெரிதாகவும் தெரியவில்லை.
அன்று வராஹினிக்கு செமஸ்ட்டரின் இறுதித் தேர்வு. கொஞ்சம் கடினமான பேப்பரும் கூட. காலையில் எழுந்ததில் இருந்தே கொஞ்சம் பதட்டமாக இருந்தாள். அதையும் மீறிய ஒரு சந்தோசம் அன்றுடன் செமஸ்டர் முடிகிறது, அதற்கடுத்து விடுமுறை என்பது தான்.
காலையில் இருந்து அவளின் நடவடிக்கைகளை கண்டும் காணாமல் இருந்தான் அர்ஜூன்.
‘இப்ப எதுக்கு இப்படி நெர்வஸா இருக்கா..? இன்னையோட எக்ஸாம் முடியுது. சந்தோசம் தான படனும்..’ என்று நினைத்தவன், எதுவும் கேட்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வேகமாக சாப்பாட்டு மேஜைக்கு வந்தவள், இரண்டு இட்லியை வைத்து வேகவேகமாக சாப்பிட,
‘மெதுவா சாப்பிடு பாப்பா..! இப்ப என்ன அவசரம்..? தம்பி சாப்பிட்டுகிட்டு தான இருக்கு..” என்றார் மாலா.
“ஆமாம்ல..! இன்னும் நேரம் இருக்கோ..” என்று தலையில் கை வைத்தவள், கொஞ்சம் நிதானமாக சாப்பிட்டாள். அப்போதும் அவளைப் பார்த்தானேயன்றி எதுவும் கேட்கவில்லை.
‘எப்படி பார்க்கிறார் பாரு..! ஒருத்தி இத்தனை நாள் பேசாம இருக்காளே..? ஏதாவது சமாதானப் படுத்துவோம்ன்னு தோணுதா.. பார்வைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை..’ என்றாள் அவனைப் பார்த்துக் கொண்டே மைன்ட் வாய்சில்.
‘சமாதனப் படுத்துற அளவுக்கு நான் ஒன்னும் பண்ணலையே..? அப்பறம் நான் ஏன் பேசணும். என்னோட பார்வைக்கு என்ன குறைச்சல் கண்ட..?’ என்றான் அவனும் அவளைப் பார்த்துக் கொண்டே மைன்ட் வாய்சில்.
‘யோவ்..போய்யா வாத்தியாரே..’ என்று சிலுப்பிக் கொண்டவள், சாப்பிட்டு விட்டு எழுந்தாள்.
‘ரொம்ப ஓவரா போறாளே..? இது நல்லதுக்கு இல்லையே..?’ என்று நினைத்த அர்ஜூன்,
“மாலாக்கா… இன்னைக்கு எனக்கு வெளிய ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதனால இன்னைக்கு மேடமை என்னால டிராப் பண்ண முடியாது. பேசாம ஒரு ஆட்டோ பிடிச்சு போகச் சொல்லுங்க..” என்று போறபோக்கில் சொல்லிவிட்டு அறைக்குள் சென்று விட்டான்.
‘என்னது ஆட்டோ பிடிச்சு போகனுமா..?’ என்றவளுக்கு அதற்கு மேல் சாப்பாடு உள்ளே போகவில்லை.
‘இதுக்குமேல நான் ஆட்டோ பிடிச்சு, என்னைக்கு காலேஜ் போய் சேர..? அதுவும் எக்ஸாம் வேற.. இவரு இன்னைக்கு வீம்புக்கே பண்ற மாதிரி இருக்கு. எதுவா இருந்தாலும் பேசிடாத வராஹி. அப்படியே சமாளி..’ என்று நினைத்தவள், வேகமாய் சாப்பிட்டு முடித்து கிளம்பினாள்.
அவன் வெளியே வருவதற்குள், அவனின் கார் சாவியை எடுத்தவள், அவனுக்கு முன்பாக காரில் சென்று அமர்ந்துவிட்டாள். அவளின் செய்கைகளைப் பார்த்தவன், வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, சென்றான். காரில் ஏறியவனைப் பார்த்து,
“இப்ப என்ன பண்ணுவ..?” என்ற ரீதியில் பார்த்து வைத்தாள்.
“ரொம்ப ஓவரா பண்ணாத..? கார்ல இருந்து உன்னை இறக்கி விட்டுட்டு போறது ஒன்னும் பெரிய வேலை இல்லை..” என்று வாயைத் திறந்து சொன்னவன், காரை எடுத்தான். அவள் அதற்கும் பதில் பேசினால் இல்லை.
அந்த பயணமும் அவர்களுக்கு அமைதியாகத் தான் போனது. ஆலிவ் க்ரீன் கலரில் சட்டை அணிந்து, ஜம்மென்று காரை ஒட்டிக் கொண்டிருந்தவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே வந்தாள் வராஹினி.
‘இவளுக்கு எப்ப பார்த்தாலும் இதே வேலையா போய்டுச்சு. ஓரக்கண்ணால பார்க்குறது, நாம பார்க்கதப்போ பார்க்கிறது.. கேட்டா அப்படியே முகத்துலையே நவரசத்தையும் பிழிய வேண்டியது…’ என்று மனதிற்குள் அவளைத் திட்டிக் கொண்டே சென்றான் அர்ஜூன்.
ஒருவழியாக அன்றைய தேர்வையும் நல்ல முறையில் எழுதி முடித்தாள் வராஹினி. மனம் கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தது. முகம் முழுவதும் மகிழ்ச்சி பொங்க வந்தவளைப் பார்த்த மிதிலா,
“எக்ஸாம் எப்பவும் எழுதுறது தான். இந்த சந்தோசம் அதுக்காக இல்லை. ஒரு வழியா பைனல் இயர் போகப் போறோம் இல்லையா…அதை நினைச்சாலே சந்தோசம் தானா வந்துடுது..” என்றாள் உல்லாசமாய்.
“ரைட்டு..! கடைசி வருஷம்… அர்ஜூன் சார் இருப்பாரு வேற… இது போதுமே.. உன்னோட சந்தோஷத்துக்கு. என்ன? நாங்க தான் பாவம். இப்பவே உன்னோட அலப்பறையை தாங்க முடியலை. இனி கேட்கவா வேணும்..” என்றாள் மிதிலா.
“நான் என்ன பேசிட்டு இருக்கேன். நீ ஏன் இப்போ பேச்சை மாத்துற..?” என்று கேட்டாள் மிதிலா.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை மிது..பைனல் இயர்னாலே ஒரு கெத்து தான… அது மட்டுமில்லாம படிப்பை முடிச்சா தான வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்குப் போக முடியும்..” என்றாள் வராஹினி.
“சரிங்க பெரிய மனுஷி..” என்றாள் மிதிலா.
அன்று அர்ஜூனுக்கு முன்பாகவே வீடு வந்தவளுக்கு பொழுது மட்டும் போவேனா என்றது. அவன் வரும் வரை எதையோ செய்து நேரத்தை நெட்டித் தள்ளிக் கொண்டிருந்தாள்.
‘இப்ப எதுக்கு அவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்க? நீதான் அவன் கூட பேச மாட்டியே..?’ என்றது மனசாட்சி.
“விளங்கிடும்..! இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பார்த்துட்டே இருக்கிறதா உத்தேசம்..?” என்றது மனம்.
“அது…அதெல்லாம் அப்படித்தான்..” என்று பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, உள்ளே நுழைந்தான் அர்ஜூன். காலையில் இருந்த அமைதி அவன் முகத்தில் இப்போது இல்லை. கண்டிப்பாக அவன் கோபமாய் இருக்க வேண்டும், அதை அவன் முகமே சொல்லியது.
அங்கு அவள் ஒருத்தி இருப்பதையே கண்டு கொள்ளாதவன் போல் சென்றவன், நேராக அவனுடைய அலுவல் அறையில் நுழைந்து கொண்டான்.
‘என்ன வந்தாரு..? அவரு பேசாம உள்ள போயிட்டாரு..? என்ன பிரச்சனையா இருக்கும்..?’ என்று யோசித்தவளுக்கு தலை வலிப்பதைப் போல் இருந்தது.
அவனுக்கு பின்னாடியே கார்த்திகேயனும் வந்து நிற்பார் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
“வாங்க மாமா..!” என்றாள்.
அவரின் முகத்திலும் ஒரு கவலை தெரிய, “என்னாச்சு மாமா..?” என்றாள்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா..! அர்ஜூன் எங்க..?” என்றார்.
“ஆபிஸ் ரூம்ல இருக்காரு. இப்ப தான் வந்தாரு..” என்றாள்.
“நான் பேசிக்கிறேன் வராஹினி..!” என்று உள்ளே சென்றவர் நெடு நேரமாகியும் வெளியே வரவில்லை.
“என்னவா இருக்கும்..?” என்று அந்த அறையின் வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு இருவரும் வெளியே வந்தனர். அர்ஜூன் முகத்தில் இப்போது கோபத்தை விட, தெளிவும் திடமும் அதிகம் இருந்தது.
“அப்போ நான் கிளம்புறேன்மா..!” என்றார் வராஹினியை பார்த்து.
“ஏதாவது பிரச்சனையா மாமா..?” என்றாள் புரியாமல்.
“பிஸ்னஸ்ல இதெல்லாம் சகஜம்டா. உனக்குத் தெரியாததா..? பெருசா ஒண்ணுமில்லை..” என்றவர் கிளம்பிவிட்டார். அதற்குமேல் அவரிடம் அவளால் கேட்கமுடியவில்லை. அர்ஜூனிடமும் எதையும் கேட்க முடியவில்லை.
“பேசலாமா? வேண்டாமா..?” என்று பட்டிமன்றம் நடத்தியவள் ஒருவழியாக வாயைத் திறந்தாள்.
“என்னாச்சு சார்..?” என்றாள்.
நின்று அவளைத் திரும்பிப் பார்த்தவன், ஏகத்திற்கும் அவளை முறைத்து வைக்க, ஒன்றும் புரியாமல் குழம்பி நின்றாள் வராஹினி.
“இப்ப நம்ம என்ன கேட்டுட்டோம்ன்னு இந்த முறை முறைக்கிறார்..?” என்று எண்ணியவள்,
“நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா..? எதுக்காக டென்ஷனா இருக்கீங்க..? மாமா எதுக்காக வந்துட்டு போறார்..?” என்றாள் மீண்டும் விடாமல்.
“இது உனக்குத் தேவையில்லாத ஒன்னு. உன்னோட வேலையை மட்டும் பாரு. தேவையில்லாத விஷயத்தில் தலையிடுற வேலையெல்லாம் வேண்டாம்..” என்றான் பட்டென்று.
வராஹினிக்கு ஒரு மாதிரி போனது. அவன் ஏதோ அவளை விலக்கி நிறுத்தி பேசுவதைப் போல் இருந்தது. காரணம் மட்டும் தெரியவில்லை, ஆனால் தன்னை சார்ந்து தான் ஏதோ பிரச்சனை என்பதை மட்டும் புரிந்து கொண்டாள்.
“கேட்டது தப்புத்தான்..! சாரி..!” என்று அறைக்குள் நுழைந்தவள், கதவை பட்டென்று சாத்திக் கொண்டாள்.
அவளின் செய்கையை பல்லைக் கடித்துக் கொண்டு பார்த்திருந்த அர்ஜூனுக்கு, அவனுடைய அறைக்குள் சென்ற பிறகும் ஆத்திரம் குறையவில்லை.
அனைத்திற்கும் காரணம் கல்பனாவின் பேச்சு தான். அதை நினைக்க நினைக்க அவனுக்கு ஆத்திரமாய் வந்தது. மகளின் வாழ்க்கையை தொழிலோடு சம்பந்தபடுத்தி மிகவும் மோசமான முறையில் பேசியிருந்தார் கல்பனா. அவருக்குள் இப்படி ஒரு மோசமான முகம் இருக்கும் என்று தெளிவாய் உணர்ந்து கொண்டான் அர்ஜூன். கடைசியாக அவர் சொன்ன வார்த்தைகள் தான் அவனின் காதிற்குள் கேட்டுக் கொண்டே இருந்தது.
“எங்களுக்கு நீங்க பேவர் பண்ணலைன்னா, வராஹினி ஒரு நிமிஷம் கூட அங்க இருக்க மாட்டா. எங்க பொண்ணை எப்படி கூட்டிட்டு வரணும்ன்னு எங்களுக்குத் தெரியும். இன்பாக்ட் நாங்க வராஹினியை உங்க வீட்டுக்கு மருமகளா அனுப்பனும்ன்னு நினைச்சதே பிஸ்னஸ்ல உங்க கூட டையப் வச்சுக்கத் தான். இதனால ரெண்டு பேருக்குமே லாபம் தான். ஆனா, மாப்பிள்ளை மாறிப் போனது தான் எல்லாத்துக்கும் காரணம். என்ன சொல்லுங்க..? ரஞ்சன்கிட்ட இருக்குற சாமர்த்தியம் உங்க பெரிய பையன் அர்ஜூன் கிட்ட இல்லை. ரஞ்சனுக்கு காரியம் சாதிக்கிற திறமை இருக்கு. ஆனா, இவரு.. இப்படி நேராத்தான் நிற்பேன்னு, எல்லாத்தையும் கெடுத்துக்கிறார்…” என்று அர்ஜூன் முன்னிலையில் கார்த்திகேயனிடம், கல்பனா பேசிய வார்த்தைகள் அவனுக்குள் கனலை மூட்டிக் கொண்டிருந்தது.
கல்பனா உடன் பார்ட்னர்ஷிப் போடுவதில் அர்ஜூனுக்கு ஆட்சேபணை கிடையாது. ஆனால் பார்ட்னர் போட்டு தொழில் செய்ய வேண்டிய அவசியம் அவனுக்கில்லை. மட்டுமின்றி, கல்பனா,பிரஜேஷிடம் நிறைய குளறுபடிகள் இருந்தது. எதிலும் உண்மையில்லை. பேசுவதிலும் பாதி பொய்யே நிறைந்திருக்க, அவர்களைக் கண்டாலே அர்ஜூனுக்கு ஆகாமல் போனது.
மகளை வைத்து தொழிலில் சாதிக்க அவர்கள் நினைக்க, அவர்களின் நினைப்பையே வேரோடு அறுக்க நினைத்தான் அர்ஜூன்.
எங்கே அவர்கள் மேல் உள்ள கோபத்தை அவளிடம் காட்டி விடுவோம் என்ற பயத்தில் தான், வாராஹினியிடம் பேசுவதை தவிர்த்தான்.
இத்தனை நாட்கள் இல்லாமல் இன்று அவளாக வந்து பேசவும் பட்டென்று கோபத்தைக் காட்டி விட்டான்.
அவளுக்காக ஒரு மனம் வருந்தவே செய்தது. அவர்கள் செய்வதற்கு இவள் என்ன செய்வாள் என்று யோசிக்கவே செய்தது. இருந்தாலும் அவனாக அவளிடம் எதையும் பேசவில்லை.
ஒருவாரம் சென்றிருந்த நிலையில்…
மறுநாள் ரஞ்சனின் திருமணம் …
விருப்பமே இல்லாவிட்டாலும், கார்த்திகேயனின் வற்புறுத்தலுக்கு இணங்கி, சென்றாக வேண்டிய கட்டாயம். மனதிற்குள் ஆயிரம் கோபங்கள் இருந்தாலும், அதை பெற்ற தகப்பனின் வார்த்தைக்காக ஒதுக்கி வைத்தான் அர்ஜூன். அப்படியும் திருமண நேரத்திற்கு தான் வருவேன் என்று கறாராய் சொல்லியிருந்தான்.
வீட்டிற்கு வந்தவன் வராஹினியிடம் ஒரு கவரை நீட்டினான்.
“என்னதிது..?” என்றாள்.
“இதுல புடவை இருக்கு. நாளைக்கு கட்டிக்க..” என்றான்.
“அப்படி வேண்டா வெறுப்பா யாரும் எதையும் எடுத்துத் தர தேவையில்லை..” என்றாள் பட்டென்று.
“வேண்டா வெறுப்பா எடுத்ததை நீ பார்த்தியா..? வேணும்ன்னு நினைச்சதால தான் எடுத்துட்டு வந்தேன்..” என்றான் இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.
“நடக்கிறதை பார்த்தா அப்படி தெரியலை. அண்ணனுக்கு கல்யாணம் நடந்தது ஊருக்குள்ள ஒருத்தருக்கும் தெரியாது. இதில தம்பி கல்யாணத்துல அண்ணன் பொண்டாட்டியா நான் வந்து நிக்கனுமா..? எல்லாரும் என்ன நினைக்க மாட்டாங்க..?” என்றாள் வேண்டுமென்றே.
“எல்லாரும் நீ என்னோட பொண்டாட்டின்னு தான் நினைப்பாங்க. உன்னோட மனசுல அந்த எண்ணம் இல்லைன்றதுக்காக, மத்தவங்களும் அப்படியே இருப்பாங்கன்னு எதிர்பார்க்காத..” என்றான்.
அவள் என்ன முயன்றும் அவள் நினைத்ததை அவன் சொல்லவேயில்லை. அவள் பார்வையை வைத்தே உணர்ந்து கொண்டவன்,
“தப்புத்தான்..! நிஜமான கல்யாணத்துக்கு தான் அறிவிப்பு தேவை. நடிப்புக்கு தேவையில்லை. உன்னோட பிற்கால வாழ்க்கையை அது பாதிக்கலாம்..” என்றான்.
“இப்போ கல்யாணத்துக்கு ஜோடி போட்டுட்டு வந்தா மட்டும் அது என்னோட வாழ்க்கையை பாதிக்காதா..?” என்றாள் வெடுக்கென்று.
“நீதான் ஆரம்பிச்ச. நான் முடிச்சேன். அவ்வளவு தான். உனக்கு விருப்பம் இருந்தா கிளம்பு. இல்லையா பேசாம இரு..” என்று சேலை அடங்கிய கவரை அங்கு வைத்தவன், அதற்குமேல் எதுவும் பேசாமல் வெளியேறி விட்டான்.
காரணமேயில்லாமல் அவளுக்கு அழுகை வந்தது. அவனிடமிருந்து என்ன எதிர்பார்த்தால் என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் கொஞ்சம் நெருங்கி வந்தவன், இப்போது இரண்டு பங்காய் விலகிப் போவதைப் போல் உணர்ந்தாள். அவன் விலகிப் போவதற்கான காரணம் தான் அவளுக்கு தெரியவில்லை.
‘இப்ப எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க..? அர்ஜூன் சொன்னதுல என்ன தப்பு..? உன்கிட்ட சொல்லிட்டு தான தாலி கட்டுனான். எல்லாம் தெரிஞ்சும் நீதான் அவன்கிட்ட வலிய வலிய போன. நீதான் கட்டாயப்படுத்தி அவனை ஏத்துக்க வச்ச. இப்போ இப்படி புலம்பிட்டு இருக்க..’ என்று நேரம் காலம் தெரியாமல் அவளுடைய மனமே அவளை கிண்டலடித்துக் கொண்டிருந்தது.
“நான் தான் வலிய வந்தேன். ஆனா, அவர் காட்டின அன்பு, பாசம் எதுவுமே பொய்யில்லை. நான் பேசாம இருந்தப்ப கூட நல்லாத்தான் இருந்தாரு. இடையில தான் என்னமோ நடந்திருக்கு…” என்றாள்.
‘இப்பவும் அவன் சரியா தான் இருக்கான். நீ தான் லூசு மாதிரி இருக்க..” என்றது மனம் மீண்டும்.
“இப்ப நான் என்ன தான் பண்றது..?”
“இப்ப வந்து கேளு.. பெரிய இவ மாதிரி அன்னைக்கு உன் மாமனார்கிட்ட அர்ஜூனை கல்யாணத்துக்கு கூட்டிட்டு வரவேண்டியது என்னோட பொறுப்புன்னு வசனம் பேசின..? இன்னைக்கு அவனே கூப்பிடுறான், நீதான் ஓரண்டையை இழுத்துட்டு இருக்க..” என்றது மனம்.
தனக்கு அவன் மேல் ஈர்ப்பு உள்ளது போல், அவனுக்கு கொஞ்சமாவது தன்மேல் ஈர்ப்பு உள்ளதா என்ற கேள்விதான் அவளை அரித்துக் கொண்டிருந்தது.
எது எப்படியோ..கார்த்திகேயனிடம் சொன்ன வார்த்தைக்காகவாவது செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
இவளின் வீட்டில் அங்கே இவளைப் பற்றிய பேச்சு தான் ஓடிக் கொண்டிருந்தது.
“மாம் என்ன இருந்தாலும் நீங்க அர்ஜூனை அப்படி பேசியிருக்கக் கூடாது. அவன் முகமே சரியில்லை…” என்றான் பிரஜேஷ்.
“நானும் பேசக் கூடாதுன்னு தான் பார்த்தேன். அவன் என்னமோ பெரிய இவன் மாதிரி ஆட்டிட்டியூட் காட்டுறான். கார்த்திகேயனை ஈசியா சமாளிச்சுட்டேன். இடையில இவன் வந்து கெடுத்துட்டான்..” என்றார் கல்பனா.
“அதுக்காக, ரஞ்சன் கூட கம்பேர் பண்ணி பேசியிருக்க வேண்டாம் மாம்..” என்றான் பிரஜேஷ்.
“எனக்கும் தெரியும் பிரஜேஷ்…! ரஞ்சன் கூட கம்பேர் பண்ணா அர்ஜூனுக்கு கோபம் வரும்ன்னு தெரிஞ்சு தான் பேசுனேன். சொல்லப் போனா ரஞ்சனா இருந்திருந்தா நமக்கு இவ்வளவு வேலையில்லை. எல்லாம் சுலபமா முடிஞ்சிருக்கும். எல்லாம் வராஹினியால வந்தது..” என்று அவளைத் திட்ட ஆரம்பித்தார்.
இவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்ட மோகன் குமாருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. மகனும், மனைவியும் திருந்திவிட்டார்கள் என்று அவர் நினைத்திருக்க, மீண்டும் ஆரம்பிப்பார்கள் என்று அவர் நினைக்கவில்லை.
“கல்பனா..!!” என்ற அவரின் கர்ஜனையான குரல் வீடே எதிரொலித்தது. ஆனால் அந்த எதிரொலிப்புக்கு பலனாக அவரிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை. “நீயா..?” என்பதைப் போல் பார்த்து வைத்தார்.
“என்ன நடக்குது இங்க..? உன்னை முதல்ல பிஸ்னஸ்க்குள்ள விட்டதே தப்பு” என்றார்.
அவரைப் பார்த்து முறைத்த கல்பனா…
“இல்லைன்னா மட்டும் இவர் அப்படியே கிழிச்சிருப்பார்..” என்றார் எகத்தாளமான குரலில். சொல்லி முடித்தது தான் மாயம், அவரை ஓங்கி அறைந்திருந்தார் மோகன்.
“அப்பா..!” என்று பிரஜேஷ் வர, அவனை கையமர்த்தி கோபமாக முறைத்தவர்,
“என்ன பண்ணி வச்சிருக்கிங்க ரெண்டு பேரும்..? கவர்மென்ட் சைட் அப்ரூவல் வேணும்ன்னா, பில்டிங் வொர்க்ல இருந்து பேப்பர் வொர்க் வரைக்கும் எல்லாம் சரியா வச்சிருக்கணும். அதை செய்யாம, எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லைன்னு சொன்னியாமே..? லஞ்சமா குடுக்குற பணத்தை வைச்சு, எல்லாத்தையும் சரியா பண்ண வேண்டியது தானன்னு அர்ஜூன் மாப்பிள்ளை போன் போட்டு கேட்கிறார். நான் முகத்தை எங்க கொண்டு போய் வச்சிக்கிறது..? அப்போ கூட நான் நம்பலை. இங்க வந்து பார்த்தா, அவர் சொன்னது தான் உண்மை போல…” என்றார்.
“ஊரு உலகத்துல இல்லாததையா நாங்க பண்ணிட்டோம். முடியாதுன்னா நேரா சொல்ல வேண்டியது தானே..? அடுத்து யாரை வச்சு மூவ் பண்ணனும்ன்னு எனக்குத் தெரியும்..” என்றார் கல்பனா.
“உனக்கு கோபம் கூட வருது…! மாப்பிள்ளை பேசினதை கேட்ட எனக்கு எப்படி இருந்திருக்கும். நாக்கைப் பிடுங்கிட்டு சாகலாமான்னு இருக்கு. டாப் இன்டஸ்ட்ரியா இருக்குற நாங்க ஏன், அதல பாதாளத்துல இருக்குற உங்க கூட டையப் வச்சுக்கனும்ன்னு கேட்கிறார். மூஞ்சியை எங்க போய் வச்சுக்க சொல்ற..? அவர் கேட்கிறதும் சரிதான..?” என்றார் மோகன்.
“அதுக்குத்தான் நான் இந்த பாடு படுறேன். பிஸ்னஸ்ல ஏற்பட்ட நஷ்ட்டத்தை… இந்த காலேஜ் மூலமா சரி பண்ணிடலாம். ஏற்கனவே இருக்குற ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ்க்கு நல்ல பேர் இல்லை. சோ இதுலயும் சீட் நிரம்புறது கஷ்ட்டம். அதுக்காகத் தான் அவங்ககிட்ட அந்த யோசனையை சொன்னேன்..” என்றார் கல்பனா.
“என்னன்னு..? காலேஜ் வேற..மேனேஜ்மென்ட் ஒண்ணுன்னா..” என்றார்.
“ஆமா..”
“காலேஜை நீங்க எங்களுக்கே வித்துடுங்க. மொத்தத்தையும் நான் வாங்கிக்கிறேன். உங்க பிஸ்னஸ்ல இருக்குற நஷ்ட்டத்தை சரி பண்ணி தரேன்னு மாப்பிள்ளை சொன்னார்..” என்றார் மோகன், கல்பனாவின் முகம் பார்த்து.
“வாட்..!! யாரு சொத்தை யாருக்கு விக்கிறது. அவன்கிட்ட பணம் இருந்தா என்ன வேணும்ன்னாலும் பேசுவானா..?” என்றார் கோபமாக.
“வாய் வார்த்தையா சொன்னதுக்கே உனக்கு இப்படி கோபம் வருது. அப்பறம் என்ன உரிமையில நீ போய் அவங்ககிட்ட பேசுன..?” என்றார் மோகன்.
“அது…வந்து…பொண்ணு கட்டுன மாமியார் வீட்டுக்கு இந்த ஒரு பேவர் கூட பண்ணக் கூடாதா..? மாப்பிள்ளைன்ற உரிமையில கேட்டேன்…” என்றார் சமாளித்து.
“இல்லை..! நீ இதெல்லாம் எதிர்பார்த்து தான் வராஹினியை அந்த வீட்டுக்கு மருமகளாக்க முயற்சி பண்ணியிருக்க. நான் கூட பிரஜேஷ் மேல தான் தப்புன்னு நினைச்சு அவனை ரொம்ப பேசிட்டேன். ஆனா, அவனைத் தூண்டி விட்டதே நீதான்னு இப்பத்தான தெரியுது. அப்படி என்ன பணப் பைத்தியம் உனக்கு..?” என்றார்.
“அதை எப்படி சமாளிக்கணும்..பிஸ்னசை எப்படி காப்பாத்திக்கணும்ன்னு எனக்குத் தெரியும். இனி எந்த விஷயத்துலையும் நீ தலையிட கூடாது. அதையும் மீறி ஏதாவது செய்யனும்ன்னு நினைச்சா, என் போட்டோவுக்கு மாலை போட்டதுக்கு அப்பறமா செய். உனக்கும் தான் பிரஜேஷ்..” என்று கோபமான குரலில் சொன்னவர்,
“உங்களால… என் பொண்ணோட வாழ்க்கை கேள்விக் குறியாகிடும் போல…” என்று புலம்பிக் கொண்டே போனார்.
“பார்த்தியா பிரஜேஷ்..! அந்த அர்ஜூன் உங்கப்பாவுக்கு போன் பண்ணி என்ன பண்ணி வச்சிருக்கான்னு..?” என்று கல்பனா கோபமாய் சொல்ல,
“எனக்கும் அப்பா சொல்றது தான் சரின்னு படுது மாம். என்ன இருந்தாலும் நம்ம வராஹினி வாழ்க்கையும் இதுல இருக்கு. ஏற்கனவே நான் ஒரு தடவை முட்டாள் தனம் பண்ணிட்டேன். ரஞ்சனுக்கு பிரண்டா இருந்து என்னோட மூளையும் மழுங்கிக் கிடந்தது. இடையில உங்க போதனை வேற. வராஹி வாழ்க்கையை வச்சு நாம விளையாண்டது போதும் மாம். நம்ம பக்கம் எல்லாம் சரியா இருந்தா, அர்ஜூன் ஹெல்ப் பண்றேன்னு சொல்லியிருக்கான் தானே. பார்ப்போம்..” என்றான் பிரஜேஷ்.
“என்ன பிரஜேஷ் வேற மாதிரி பேசுற..?” என்றார் கல்பனா.
“வேற மாதிரி எல்லாம் இல்லை மாம். கொஞ்சம் குற்ற உணர்ச்சியா இருக்கு. நான் இவ்வளவு பண்ணியும் வராஹி ஒரு தடவை கூட என்னை கோபமா எதுவும் சொல்லலை. என்கிட்டே எதையும் எதிர்பார்க்கவும் இல்லை. அவ எனக்கு நல்ல தங்கை தான் மாம். ஆனா, நான் தான் நல்ல அண்ணன் கிடையாது. ரஞ்சன் கூடவே இருந்தும், அவன் எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சிருந்தும் அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பார்த்தேன். எல்லாமே இந்த பணத்துக்காகத் தானே மாம். இப்படி எல்லாரோட வாழ்க்கையையும் கஷ்ட்டப்படுத்தி தான் இந்த நஷ்ட்டத்தை சரி செய்யனுமா மாம். அர்ஜூன் சொன்ன மாதிரி அவனுக்கே வித்துடுவோம். எனக்கு அது தான் சரியா படுது..” என்றான் பிரஜேஷ்.
‘இவன் இப்படி ஒரே நாள்ல திருந்துனான். என்னமோ நடந்திருக்கு..’ என்று நினைத்த கல்பனா,எதுவும் பேசாமல், அவனை முறைத்துவிட்டு சென்றார் .
மறுநாள் காலை…
காலையில் வெகு சீக்கிரமே எழுந்து,குளித்து கிளம்பியிருந்தான் அர்ஜூன். ஆனால் வராஹினி அறையை விட்டு வெளியே வரவேயில்லை.
‘என்ன பண்றா இவ..? கிளம்பிட்டாளா இல்லையா..?’ என்ற யோசனையுடன் பார்த்துக் கொண்டிருக்க,
அவளோ அங்கே புடவையை கையில் வைத்துக் கொண்டு, யூ டூபை பார்த்து புடவையைக் கட்டிக் கொண்டிருந்தாள். முதல் முறை என்பதால் அவளுக்கு கொஞ்சம் சரியாக வரவில்லை. அதிலும் பட்டுச் சேலை வேறு அவளை படாதபாடு படுத்திக் கொண்டிருந்தது.
“எப்படி அவங்க மட்டும் இப்படி டக்குன்னு அழகா கட்டிக் காட்டுறாங்க. நாமளும் அப்படித் தான் பண்றோம்… ஆனா, வர மாட்டேங்குதே…?” என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
இவளுக்கு புடைவை கட்டத் தெரியாது என்ற விஷயம் தெரியாத அர்ஜூனோ வெளியே உக்கிரமாய் நின்று கொண்டிருந்தான்.