Skip to content
Post Views: 5,434
புது வெள்ளை மழை
அத்தியாயம் – 4
கயலும் அவள் அம்மா பத்மாவும் கீழே இருக்கும் அறை ஒன்றில் படுத்துக் கொள்வது வழக்கம். மற்றொரு அறையில் அன்பரசு இருப்பார். மாடியில் இரு அண்ணன்களுக்கும் அறைகள் இருக்கிறது. அதைத்தவிர வீட்டை சுற்றி ஆட்கள் எப்போதும் இருப்பர்.
Advertisement
அன்று மன உளைச்சலில் இருந்த கயல்விழி நள்ளிரவுக்கும் மேல்தான் மெல்ல உறங்கினாள்.
இரவு நந்தா அவன் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குச் செல்லும் வழியில்… அவனைச் சிலர் காரில் வழிமறித்தனர். அவன் காரில் இருந்து இறங்கி நிற்க…. அன்பரசுவின் மகன் நவநீத கிருஷ்ணன் பின்னால் இருந்து அவனை வெட்ட அரிவாளை ஓங்க….. வீல்லென்று கத்திக்கொண்டு கயல்விழி எழுந்து உட்கார்ந்தாள்.
Advertisement
எல்லாம் வெறும் கனவு. அவள் உடல் முழுவதும் நடுங்க…. அவளுக்கு நல்ல காய்ச்சல்.
Advertisement
அவள் போட்ட சத்தத்தில் மொத்த வீடும் அலறி அடித்து எழுந்து வந்தது.
“என்ன ஆச்சு?” அன்பரசு கேட்க….. மகளை மீண்டும் கட்டிலில் படுக்க வைத்த பத்மா, “அவளுக்குத் திரும்பக் காய்ச்சல் வந்துடுச்சுங்க.” என்றதும், மகளை ஒரு பார்வை பார்த்தவர், திரும்பி தன் சின்ன மகனிடம் “நம்ம டாக்டரை வர சொல்லு.” என்றார்.
அன்பரசு அறைக்குள் சென்றதும், “எப்ப பாரு இதே தொல்லை…. இந்த வீட்ல நிம்மதியா தூங்க கூட முடியலை….” என அந்த வீட்டின் மருமகள் கீதா முனங்க.
Advertisement
“அன்னைக்கே சொன்னேன் இவளையும் முடிச்சிருக்கணும்.” என்றான் மூத்தவன் நவநீத கிருஷ்ணன்.
அவன் சட்டையைப் பற்றிய பத்மா, “என் பொண்ணு எதுக்கு டா சாகனும். கொஞ்சம் கூட இறக்கம் இல்லாம பேசுறியே… இதே நீ பெத்த பொண்ணா இருந்த இப்படிப் பேசுவியா?”
“எங்க பொண்ணு ஒன்னும் உங்க பொண்ணு மாதிரி ஒழுக்கம் கெட்டு போக மாட்டா…”
காதலித்தவனையே திருமணம் செய்து கொண்டது ஒழுக்கம் கெட்ட செயலா? எனக் கேட்க நினைத்தவர், அதை எல்லாம் இந்த வீட்டில் பேசிவிட முடியாது என்பதால்…. அமைதியாகி விட்டார்.
அவருக்காகத்தான் கயல்விழியை உயிரோடு விட்டு வைத்திருப்பதே…. இல்லையென்றால் என்றோ அவள் கதையும் முடிந்து இருக்கும்.
மறுநாள் நந்தா அலுவலகத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த போது… அவனைப் பார்க்க இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். அவரையும் தன்னோடு அழைத்துக் கொண்டு சென்றான்.
சிறிது தூரம் சென்றதும், அவர்களை ஒரு வாகனம் பின் தொடருவதைக் கவனித்து விட்டான்.
“கொஞ்சம் வேகமா போங்க…” என ஓட்டுனரை பார்த்து சொன்னவன், ஒரு வளைவுக்கு அடுத்து வந்த கிளை சாலையில் வாகனத்தை விடச் சொன்னான்.
வளைவு இருந்த காரணத்தால்… பின்னே வந்தவர்கள் அவன் கிளை சாலையில் திரும்பியதை கவனிக்க வில்லை. சற்றுத் தூரம் சென்றுதான் முன்னே சென்ற வாகனத்தைக் காணவில்லை என்று காரை திருப்பிக் கொண்டு வந்தனர்.
கார் அருகில் வந்ததும் தான் கவனித்தனர். சாலையில் ஓரம் தனது வாகனத்தில் இருந்து நந்தா இறங்கி நின்றிருப்பதை. அவன் அவர்களுக்காகவே காத்திருக்கிறான் என நன்றாகப் புரிந்தது.
இப்போது என்ன செய்வது, இறங்கி ரெண்டில் ஒன்று பார்ப்போமா… இல்லை பின்வாங்குவோமா என அவர்கள் யோசிக்கும்போதே… நந்தா துப்பாக்கியை எடுத்து நீட்டி இருந்தான்.
வேறு வழி இல்லை அவர்களுக்கு, காரை நிறுத்த…. உடன் வந்த இன்ஸ்பெட்டர் மற்றும் ஓட்டுனர் இருவரும் சேர்ந்து, அவர்களை வெளியே இழுத்து ரோட்டில் மண்டி போட வைத்தனர்.
ஜீப்பில் இருந்து கயிறு எடுத்து வந்து நான்கு பேரின் கைகளையும் பின்னால் சேர்த்து கட்டி வைத்தனர்.
வாக்கி டாக்கியில் ஏற்கனவே தகவல் கொடுத்திருக்க.. ரோந்து செல்லும் வாகனம் வந்து அவர்களை ஏற்றிக்கொண்டு அருகில் இருந்த காவல் நிலையம் சென்றது.
நந்தாவும் அவர்கள் வாகனத்தில் அவர்களைத் தொடர்ந்து சென்றான். அங்கே காவல் நிலையத்தில் வைத்து அவர்களை விசாரித்தனர்.
“யாரு அனுப்பியது?” என்று கேட்டதற்கு அவர்களுக்குத் தெரியவில்லை…
இவர்கள் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள், நேரில் எல்லாம் இவர்கள் யாரையும் சந்திக்க மாட்டார்கள்… எல்லாவற்றிற்கும் வேறு ஆள் இருப்பார்கள் என்று தெரியும்.
அவர்களைக் காவலில் வைக்கச் சொன்ன நந்தா…. அங்கிருந்து தன் அலுவலகத்திற்குக் கிளம்பினான். அன்று இரவு வெகு நேரம் சென்றே வீடு திரும்பினான்.
இரவு படுத்ததும் கயல்விழி நியாபகமாகவே இருந்தது. அவனுக்கு அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. எப்படிப் பார்ப்பது என்று யோசித்தவனுக்கு ஒரு வழியும் புலப்படவில்லை.
மறுநாள் காலை பேச்சியின் கிராமத்தில் இருந்து அன்பரசு வீட்டிற்குச் செல்லும் வழியில்….. ஆள் நடமாட்டம் இல்லாத இடமாகப் பார்த்து, நந்தா அவனின் காரில் உட்கார்ந்து கொண்டு இருந்தான். அவன் காக்கி உடையில் இல்லை… சாதாரண உடையில்தான் இருந்தான்.
அவளை அன்பரசு வீட்டில் பாரத்ததை வைத்து, அந்த நேரத்தை கணக்கிட்டு வந்திருந்தான்.
அவனுக்குப் பேச்சியைப் பிடிப்பதை தவிர வேறு வழியில்லை…. அவள் மூலமாகத்தான் கயல்விழி பற்றித் தெரிந்துகொள்ள முடியும் என நினைத்தான்.
சிறிது நேரத்தில் சைக்கிளில் பாடுப்படியபடி பேச்சி வந்தாள். அவளைப் பார்த்ததும் நந்தா காரில் இருந்து இறங்கி நின்றான்.
திடிரென்று அவனைப் பார்த்ததும் பேச்சிக்கு வெட்கமாகப் போய்விட்டது. நந்தாவும் சிரித்து விட்டான்.
அவனைப் பார்த்ததும் பேச்சி சைக்கிளில் இருந்து இறங்கி நின்றாள்.
“உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். உன் பேரு?”
“பேச்சியம்மாங்க அய்யா.”
“ஊர்ல எல்லோரும் சவுக்கியமா?”
“ம்ம்… நல்லா இருக்காங்க. இப்ப யாரும் சாராயம் காய்ச்சுறது இல்லைங்க.” என அவள் கூடுதல் தகவல் சொல்ல…
“நல்லது. அப்புறம் எத்தனை வருஷமா அன்பரசு வீட்ல வேலை பார்க்கிற?”
“வீட்ல இல்லைங்க அய்யா… பின்னாடி இருக்கிற மாட்டு தொழுவத்துலதான் வேலை பார்க்கிறேன். அது ஒரு ரெண்டு வருசம் இருக்குமுங்க.”
“ஓ…. அவங்களுக்கு ஒரு பொண்ணு கூட இருக்கு இல்ல?”
“ஆமாம் கயல்விழி அக்கா….”
“அவங்க உனக்கு ப்ரண்டா?”
“ஐயோ இல்லைங்க முன்னாடி பேசுவாங்க… இப்ப என்கிட்டே பேசுறது கூட இல்லை.”
“அவங்க என்ன படிக்கிறாங்க?”
“முன்னாடி காலேஜ் போனாங்க… அப்புறம் உடம்பு சரியில்லைன்னு வீட்லதான் இருக்காங்க.”
“ஓ... அவங்க வேற எங்கையும் வெளிய போகவே மாட்டாங்களா?”
“அவங்க அம்மாவோட கோவிலுக்குப் போவாங்க.”
“எந்தக் கோவில்?”
“அது அவங்க குலதெய்வ கோவில்….”
“அப்ப வேற யாரும் அங்க போகக் கூடாதா?”
“அப்படி இல்லை…. ஆனா அவங்க ஆளுங்க மட்டும் தான் போவாங்க.”
மேலும் கோவில் எங்கே இருக்கிறது… எந்தத் தினம் செல்வார்கள் என எல்லா விவரமும் கேட்டுக்கொண்டான்.
“சரி நான் வரேன்.” எனக் கிளம்பியவன், நின்று அவளைத் திரும்பி பார்த்து, “நீ இப்படித்தான் யாரு நின்னு பேசினாலும் பேசுவியா…” எனக் கேட்க…
“இல்லை… நீங்கன்னு தான் நின்னேன்.” என்றாள் பேச்சி.
“யார்கிட்டயும் இப்படி நின்னு பேசக்கூடாது என்ன?”
அவன் அக்கறையாகச் சொல்ல.. பேச்சி சரி என்பதாகத் தலையசைத்தாள்.
“ஆமாம் நீ ஸ்கூல் போகலையா?”
“பத்தாவது வரை படிச்சேன். அய்யா வீட்ல வேலைக்கு ஆள் வேணும்னு சொல்லி நிறுத்திட்டாங்க.”
“இவனுங்களைத் தவிர எவனும் முன்னுக்கு வரக் கூடாதுன்னு எண்ணம்.” என நினைத்தவன், “நான் உங்க வீட்ல பேசுறேன். நீ அடுத்த வருஷம் ஸ்கூலுக்குப் போற.” என்றான் அழுத்தமாக.
அவன் அப்படிச் சொன்னதும் அவள் முகம் பளிச்சிட, “நன்றிங்க அய்யா…” என்றாள்.
“என்னது அய்யாவா? வேண்டாம் மா, நீ என்னை அண்ணான்னு வேணா கூப்பிடு.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.
கிராமத்து வெள்ளந்தியான பேச்சிக்கு, அவன் தன்னுடன் நின்று பேசியதே, ஆச்சர்யமாக இருந்தது. அதோடு அண்ணன் என்று வேறு அழைக்கச் சொல்ல…
“பார்க்க ஹீரோ மாதிரி இருக்காங்க. இவங்க எனக்கு அண்ணனா…” எனச் சந்தோஷமாக உணர்ந்தாள். அதே சந்தோஷத்தோடு சைக்கிளை மிதித்துக்கொண்டு வேலைக்குச் சென்றாள்.
அந்த வாரம் வெள்ளிக்கிழமை எதேச்சையாக வருவது போல் நந்தா கோவிலுக்குச் சென்றான். கயல்விழி அவள் அம்மாவோடு எப்போதும் போல் கோவிலுக்கு வந்தாள்.
உடன் வந்த ஆட்கள் வெளியவே நின்றுகொள்ள….. இவர்கள் இருவர் மட்டுமே உள்ளே வந்தனர். தெரிந்தவரோடு பத்மா நின்று பேச…. கயல்விழி கோவிலுக்குள் சென்றாள்.
சிகப்பு நிற பாவடை ரவிக்கைக்கு நீல நிறத்தில் தாவணி அணிந்து இருந்தாள். தலையைத் தளர பின்னி நெற்றியில் கருப்பு நிற பொட்டு மட்டுமே வைத்திருந்தாள். அதற்கே பார்த்ததும் மனதில் ஒட்டிக்கொள்வது போல் இருந்தாள்.
அவள் மட்டுமே உள்ளே வருவதைப் பார்த்த நந்தா அவளை நோக்கி சென்றான்.
“ஹலோ… என்னைத் தெரியுதா?” என அவன் குரல் கேட்டு கயல்விழி அப்போதுதான் அவனைப் பார்த்தாள்.
அவனை எதிர்பாராததால் திகைத்துப் போய்ப் பார்த்தவள், “உங்களுக்கு ஒன்னும் ஆகலையே?” என வாய்விட…
முதலில் நந்தாவுக்கு ஒன்றும் புரியவில்லை…. மீண்டும் அவள் சொன்னதை நினைத்து பார்த்தவனுக்குப் புரிந்து விட்டது.
“உன் அப்பாதான் என்னை அடிக்க ஆள் அனுப்பினதா?” அவன் சரியாகக் கேட்டு விட…. கயல்விழியின் முகம் வெளுத்தது.
“டேய் மாமா… இது உன் வேலைதானா… உனக்கு அப்புறம் இருக்கு.” என நினைத்தவன்,
“எனக்கு எதுவும் ஆகாதது, உனக்குச் சந்தோஷமா வருத்தமா… அதை முதல்ல சொல்லு?” என அவன் புன்னகைத்தபடி கேட்க… நந்தாவை பார்த்து முறைத்த கயல்விழி அவனைச் சுற்றிக்கொண்டு சென்றாள்.
அப்போது பத்மா உள்ளே வர…. நந்தாவும் விலகி சென்றான். அவனை முதலில் யாரோ என்று பார்த்தவர், “நீங்களா… நல்லா இருக்கீங்களா…” எனக் கேட்க…
“நல்லா இருக்கேன்.” என்றான் நந்தா.
அந்த நேரம் பூசாரியும் உள்ளே வர… அவர்கள் சாமி கும்பிட சென்றனர். நந்தா சாமி கும்பிடும் போதுதான் கவனித்தான், கயல்விழியின் முகத்தில் அமைதியே இல்லை… அவள் பதட்டமாகவே இருப்பது போல் தோன்றியது.
‘இவளுக்குள்ள அப்படி என்ன ஓடுது?’ என நினைத்துக் கொண்டான். பூசாரி கற்பூர தீபத்தைக் காட்ட… அதைக் கண்களில் ஒற்றிக்கொண்ட கயல்விழி, வெறும் திருநீறு மட்டுமே எடுத்துக் கொண்டாள்.
பூசாரி நந்தாவுக்குக் காகிதத்தில் மடித்த திருநீறு, குங்குமமும் மற்றும் கொஞ்சம் பூவும் கொடுத்தார்.
கோவிலை சுற்றும் போது பத்மா முன்னே சென்று விட…. கயல்விழியின் அருகே வந்த நந்தா, “நீ குங்குமமே எடுத்துக்கலை… இதை வச்சுக்கோ…” எனப் பூசாரி கொடுத்த பிரசாதத்தை அவளிடம் கொடுத்து விட்டுச் சென்றான்.
கையில் இருந்த குங்குமத்தையும் பூவையும் பார்த்த கயல்விழிக்குக் கண்கள் கலங்க, தன்னைச் சமாளித்துக் கொண்டு நடந்தாள். அவன் கொடுத்ததைக் கோவில் பிரகாரத்திலேயே வைத்து விட்டாள்.
அவர்கள் கோவிலில் இருந்து கிளம்பிய போது இருட்டி விட்டது. அவள் சோர்ந்து போய் நடக்க… செல்லும் அவளையே பார்த்த நந்தாவுக்கு, கண்டிப்பாக இவளுக்கு எதோ பிரச்சனை இருக்கிறது என்று நினைத்தான்.
இவளுக்கு என்ன ஒரு பத்தொன்பது வயது இருக்குமா… அந்த வயதுக்கு ஏற்ற துள்ளளோ, துடிப்போ அவளிடம் இல்லை.
அவர்கள் கார் கிளம்பி சென்றதும், அவன் கோவில் மண்டபத்திலே உட்கார்ந்து விட…. வேறு யாரும் இல்லாததால், அந்தப் பூசாரியும் வந்து அவனுக்குப் பக்கத்தில் இடைவெளி விட்டு அமர்ந்தார்.
“எப்படி இருந்த பொண்ணு? இன்னைக்கு இப்படி இருக்கே…” என அவர் வருத்தமாகச் சொல்ல…நந்தா அவரைப் புரியாமல் பார்த்தான்.
பூசாரி அவனிடம் கயல்விழியைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்.
“தம்பி நான் சொன்னதை இப்ப யார்கிட்டயும் சொல்லிடாதீங்க… விஷயம் வெளிய பரவிட்டதுன்னு தெரிஞ்சிட்டா, அந்தப் பெண்ணைக் கொலை கூடப் பண்ணிடுவாங்க.”
“அந்தப் பொண்ணு இவ்வளவு தூரம் நடமாட்டிகிட்டு இருக்கிறதுக்குக் காரணமே அவங்க அம்மாதான்.”
நந்தாவுக்கு இப்போது அவளைப் புரிந்து கொள்ள முடிந்தது.
காயம் பட்டவர்களுக்குக் காயம் ஆறியதும் மறந்து போகும். ஆனால் காயப்படுத்தியவர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் ஆறாது.
நம்மால் இப்படி ஆகிவிட்டது என்ற குற்ற உணர்வே அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும். இப்போது கயல்விழியும் அந்த நிலையில்தான் இருந்தாள்.
அன்று இரவு தாரணி உறங்கியதும் வருண் நந்தாவை அழைத்தான்.
“டேய் அந்தப் பொண்ணை அதுக்குப் பிறகு பார்த்தியா?”
“நான் அன்னைக்கு எதோ ஆர்வக்கோளாறுல சொன்னேன்… நீ இன்னும் அதைப் பிடிச்சிட்டு இருக்கியா…” நந்தா சமாளிக்க…
“நீ என்கிட்டே சொல்றன்னா… உன்னை அந்த அளவுக்கு அந்தப் பொண்ணு பாதிச்சிருக்கான்னுதான் அர்த்தம். சும்மா சமாளிக்காத…”
நந்தாவும் அதற்கு மேல் மறைப்பதாக இல்லை…
“எஸ் பார்த்தேன்.” என்றவன், அந்தப் பூசாரி சொன்னதையும் சொன்னான்.
“இப்ப என்னடா பண்ணப் போற? அந்தப் பெண்ணை அப்படியே விட்டுடுவியா?”
“என் தங்கையோ தம்பியோ தப்பு பண்ணா நான் விட்டு விடுவேனா... அவங்க வாழ்க்கையைச் சரி பண்ண தானே பார்ப்பேன். அதே போலத்தான் அவளும் எனக்கு. நான் அவளை விட மாட்டேன்.”
“எனக்கு அவதான்னு நான் முடிவு பண்ணிட்டேன்.” நந்தா உறுதியாகச் சொல்ல… அந்தப் பக்கம் கேட்ட வருணுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
error: Content is protected !!