வராஹினி, தான் பார்ப்பதை அந்த டிரைவர் கவனிக்கும் வரை அவரை பார்வையால் பின்தொடர்ந்து கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் இவள் பார்ப்பதை அவரும் பார்த்துவிட, பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும், முகத்தில் லேசான பதட்டம் இருந்ததை கண்டு கொண்டாள் வராஹினி. ஆனால் அந்த நபரோ தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.
‘இந்த ஆளு தான் அந்த ஆளா..? இல்லை, நம்ம தான் தப்பா நினைச்சுட்டு இருக்கோமா..?’ என்று யோசிக்க,
“இல்ல வராஹி..! கண்டிப்பா இது அந்த டிரைவர் தான். எப்படி இந்த முகம் மறக்கும்..? இப்ப என்ன பண்றது..?” என்று யோசித்தவள்,
“அர்ஜூன் சார்..! அர்ஜூன் சார்..” என்றாள் வேகமாய்.
“இப்ப எதுக்கு இப்படி கத்துற..? என்ன விஷயம்?” என்றான்.
“அதோ..! அங்க பாருங்க… அந்த ஆளு தான்.. அன்னைக்கு நான் ஏறின கேப்ல இவரு தான் டிரைவர். என்னை பிளாக் மெயில் பண்ண ஆளுக்கும், இந்த ஆளுக்கும் கண்டிப்பா தொடர்பு இருக்கணும். ஏன்னா..? அவன் போன்ல என்கிட்டே சொன்னதை, இந்த ஆளு செஞ்சாரு..” என்றாள் பதட்டத்துடன்.
அவளின் பேச்சில் ஒரு நிமிடம் பக்கென்று இருந்தது அர்ஜூனுக்கு. அடுத்த நொடி அதை மறைத்தவன்,
“உனக்கு பைத்தியம் முத்தி போய்டுச்சுன்னு நினைக்கிறேன். அவரு பல வருஷமா நம்ம கம்பெனி டிரைவரா வேலை பார்க்குறார். அவரு எப்படி கேப் ஓட்டியிருக்க முடியும்..?” என்றான் கொஞ்சம் குரலை உயர்த்தி.
“இல்லை சார்.. நிஜமாவே இவரு தான்..அன்னைக்கு…” என்று அவள் மீண்டும் சொல்ல வர,
“நீ சொல்ற மாதிரியே இவர் தான் அன்னைக்கு வந்தாருன்னு வச்சுக்குவோம். அன்னைக்கு நீ என்கூட தான வந்த. அப்போ நான் அவரைப் பார்த்திருப்பேன்ல. ஆனா, நான் பார்க்கலையே..? அவர் கண்டிப்பா என்னைப் பார்த்திருப்பார்ல.. அவரும் பார்க்கலையே. நீ வேற யாரையோ பார்த்துட்டு அது இவர் தான்னு மனசை போட்டு குழப்பிகிட்டு இருக்க..” என்றான் அர்ஜூன்.
‘ஆமால்ல..! அப்படின்னா, அன்னைக்கு அர்ஜூன் சாரும் இவரை பார்த்திருக்கணுமே..? நான் தான் மறந்துட்டேனோ.. இவங்க கம்பெனி டிரைவர் எப்படி கேப் டிரைவரா இருக்க முடியும்..ச்ச்ச..ச்ச்சா.. இருக்காது..’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
“போகலாமா..?” என்றான் அர்ஜூன்.
“ங்கான்..! இப்பவேவா..? இங்க கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாமே..! டாடி எல்லாம் இருக்காங்க..” என்று மென்று முழுங்கினாள்.
“உனக்கு இங்க இருந்து உறவாடனும்ன்னு ஆசை இருந்தா.. இருந்து பேசிட்டு வந்தாலும் சரி, இல்லை அவங்களோடவே கிளம்பி போனாலும் சரி. நான் கிளம்புறேன்..” என்றான் அர்ஜூன் கொஞ்சம் கோபமான குரலில்.
“சாப்பிடாம கூட போனா எப்படி அர்ஜூன்? நீ கல்யாணத்துக்கு மட்டும் வரலை. உனக்கும் இன்னைக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கு. போட்டோகிராபர்கிட்ட சொல்லி, உங்க ரெண்டு பேரையும் செப்பரெட் ஸ்டில்ஸ் எடுக்க சொல்லியிருக்கேன். அதை எடுத்துட்டு, சாப்பிட்டு, நல்ல நேரத்துல தான் கிளம்பனும்..” என்று உறுதியாக சொல்லிவிட்டார் கார்த்திகேயன்.
‘இவரு வேற நேரங்காலம் தெரியாம..? இப்போ அவசியம் இந்த போட்டோ செஷன் தேவைதானா..?’ என்று முகத்தை கடுகடுவென்று வைத்திருந்தான் அர்ஜூன்.
“இதெல்லாம் வாழ்க்கையில ஒரு தடவை தான் நடக்கும் அர்ஜூன். உனக்கு தான் ரெண்டு தடவை நடந்திருக்கு. முதல் தடவை வேணும்ன்னா மிஸ்ஸாகி இருக்கலாம். இந்த முறை அப்படி நடக்காது. உனக்கு கனவுகள் இல்லைன்னாலும், அந்த பொண்ணுக்கு இருக்கும் தானே…அந்த பொண்ணோட கனவுகளை அழிக்கிற உரிமை உனக்கு இல்லைன்னு நினைக்கிறேன்..” என்றான் கார்த்திகேயன், அவனின் மனதைப் படித்தவராய்.
“மாமா..! கண்டிப்பா இவர் உங்களை மாதிரி தான். நீங்களும் ரொம்ப அழுத்தம், இவரும் ரொம்ப அழுத்தம்…” என்றாள் வராஹினி.
“அது தான் அப்பப்போ சேர மாட்டேங்குதுமா..” என்று சிரித்து விட்டு சென்றார் கார்த்திகேயன்.
“என்ன கிண்டலா..?” என்றான் பல்லைக் கடித்தபடி.
“கண்டிப்பா இல்லை சார்..! நிஜமாவே உங்கப்பாவும் வயசுல உங்களை மாதிரி தான் இருந்திருக்கணும். அதைத்தான் சொன்னேன்…” என்றாள்.
“எல்லாம் என் நேரம்..” என்றான்.
“இல்லை..நம்ம நேரம்..” என்று சிரித்தாள்.
கார்த்திகேயன் சொன்னபடி போட்டோகிராபர் இவர்களை போட்டு பாடாய் படுத்திக் கொண்டிருந்தார்.
‘சார் இப்படி நில்லுங்க சார்… தோளில் கை போடுங்க சார்… அவங்களை அணைச்ச மாதிரி நில்லுங்க சார்…’ என்று நிஜமாவே அர்ஜுனுக்கு சோதனையை கொடுத்துக் கொண்டிருந்தார். முதலில் கடமைக்கே என்று செய்தவன், அவளின் அருகாமையில் தன்னை இழக்கத் தொடங்கி, போட்டோகிராபர் எதிர்பார்த்ததை விட சிறப்பான போஸ் எல்லாம் கொடுத்தான். அதிலும் ரஞ்சன் அவர்களைப் பார்த்து பல்லைக் கடிக்க, அதைப் பார்த்த அர்ஜூனுக்கு இன்னமும் அவனை வெறுப்பேத்த வேண்டும் என்ற எண்ணம் தான்.
“இப்ப எடுங்க..” என்றான் மலர்ந்த சிரிப்புடன். அவனின் சிரிப்பில் அவளும் மயங்கிப் போக, அதை புகைப்படத்தில் அடக்கியிருந்தார் அந்த கலைஞர்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சன்,
“மாம்..! என்ன நடக்குது இங்க..? இவன், நான் கடுப்பாகனும்ன்னே இதெல்லாம் பண்றான். கல்யாணத்தை கூட நிம்மதியா பண்ண விடலை…எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை. போட்டோவும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம்..” என்று மாலையைக் கழட்டி சுமித்ராவின் கையில் திணித்துவிட்டு சென்று விட்டான். ரூபிணி அவனை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை.
இதையெல்லாம் பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்த அர்ஜூனுக்கு, முதன் முறையாக அப்படி ஒரு மகிழ்ச்சி மனதிற்குள்.
அதற்குள் அர்ஜூனின் ஒருவர் பேச்சிற்கு வர, அவரிடம் பேசிக் கொண்டிருந்தான் அர்ஜூன்.
“வராஹி..!” என்று கல்பனா அருகில் வரவும்,
“சொல்லுங்கம்மா..!” என்றாள் முகம் முழுவதும் பூரிப்புடன்.
“உன்னை இப்படி பார்க்க மனசுக்கு சந்தோஷமா இருந்தாலும், அது நீடிக்குமான்ற கவலை தான் எனக்கு.. எதுக்கும் நீ கொஞ்சம் சுதாரிப்பா இருந்துக்கோ..” என்றார்.
“என்ன சொல்ல வரீங்க..?” என்றாள் புரியாத பாவனையுடன்.
“அர்ஜூன் என்னதான் வெளிய தன்னை சந்தோஷமா காட்டிகிட்டாலும், இது அர்ஜூனோட உண்மையான முகம் இல்லை. நீ நினைக்கிற மாதிரி நிஜமாவே உன் மேல பிரியப்பட்டு நடந்துக்கிற மாதிரி தெரியலை. எது நடந்தாலும், உனக்கு நான் இருக்கேன். அதை எப்பவும் மறக்கக் கூடாது..” என்றார் கல்பனா.
“நீங்க அவரை தப்பா புரிஞ்சுட்டு பேசறிங்கம்மா. அவர் அப்படியெல்லாம் கிடையாது. நிஜமாவே அவர் ரொம்ப நல்லவர்..” என்றாள் வராஹினி.
‘நீ சின்ன பொண்ணு வராஹி. இன்னும் உனக்கு மனுஷங்களை படிக்கத் தெரியலை. உன்னோட வாழ்க்கை நல்ல முறையில இருந்தா ஒரு அம்மாவா எனக்கு சந்தோசம் தான். அது உன் கையில தான் இருக்கு…’ என்றார் கல்பனா.
அவரின் பேச்சில் இருந்த உள்குத்து எதுவும் புரியாத வராஹினி, வெகுளியாய் தலையை ஆட்டி வைத்தாள். ஆனால் மனதிற்குள் ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது. சற்று நேரத்திற்கு முன்பு தான் அந்த நெருடல் கூட ஆரம்பித்தது. அவள் சொன்ன அந்த டிரைவர் அர்ஜூனிடம் ஏதோ பேச வர, அதை அவன் கண்களால் தவிர்த்ததையும், ஏதோ செய்தி சொன்னதையும் உணர்ந்து கொண்டாள். அப்போது அது பெரிதாக தெரியவில்லை. கொஞ்சம் நிதானமாக யோசித்தால், அவளுக்கு எல்லாமே குழப்பமாக இருந்தது.
அந்த டிரைவரை பிடித்தால் உண்மை தெரிந்து விடும் என்று அவள் உள் மனம் அவளுக்கு உணர்த்தியது. அவரைத் தேடிக் கொண்டு சென்றவள், அவரைக் காணாமல் முழித்தாள்.
“யாரை தேடிட்டு இருக்க..? என்னையா..?” என்ற ரஞ்சனின் குரலில் விதிர்விதிர்த்து திரும்பினாள்.
“உன்னைத் தேடி நான் வரவேண்டிய அவசியம் இல்லை..” என்றாள் பட்டென்று.
“பழசைப் பத்தி பேசத் தேவையில்லை. உன்கிட்ட எனக்கு எந்த பேச்சுமில்லை..” என்று நகரப் போனாள்.
“என்கிட்டே பேச ஒண்ணுமில்லை சரி, உன் புருஷன் கிட்ட பேச மட்டும் நிறைய இருக்கோ…அப்படியே அவனைப் பார்த்த உடனே உருகி வழியற..” என்றான்.
“என் புருஷன் நான் வழியறேன்.. அதுல உனக்கு என்ன கஷ்ட்டம்..” என்றாள் வெடுக்கென்று.
“கஷ்ட்டம் எனக்கில்லைம்மா..! உனக்குத்தான். அவன் உன்னைப் பிடிச்சு கல்யாணம் பண்ணினான்னு நினைக்கிறியா.. நெவர், என்னைப் பழிவாங்குறதா நினைச்சு தான் உன்னை கல்யாணம் பண்ணியிருக்கான். அது உன்னோட மரமண்டைக்கு என்னைக்கு உரைக்கும்ன்னு தான் தெரியலை…” என்றான் ரஞ்சன்.
“தேவையில்லாம அவரைப் பத்தி பேசுற வேலை வச்சுக்காத..” என்றாள்.
“பாருடா..! உண்மையை சொன்னா உனக்கு கோபம் வருது. இப்போ என்னை வெறுப்பேத்தனும்ன்னு தான, போட்டோவுக்கு உருகி உருகி போஸ் குடுத்தான். இனி என்னை வெறுப்பேத்த தான் உன் கூட வாழுவான். உன் மேல ஒரு துளி கூட அவனுக்கு காதலும் இல்லை, கத்தரிக்காயும் இல்லை…” என்றான் ரஞ்சன்.
அவன் சொன்னது அவள் மனதை லேசாக குழப்பியிருக்க வேண்டும். அவனை வெறும் முறைப்புடன் கடந்து வந்து விட்டாள். ஆனால் மனதில் இருந்த குழப்பம் இன்னும் கூடிக் கொண்டே போனது. அர்ஜூனைப் பார்த்தாள். அவன் இன்னமும் பேசிக் கொண்டிருந்தான். அங்கு ஒரு இருக்கையில் அமர்ந்தவளுக்கு, அர்ஜூனை சந்தித்த நொடி முதல், இந்த நொடி வரை அனைத்தும் நிழல் படமாய் கண்ணில் ஓடியது.
‘பஸ்ல இருந்து இறங்குனேன்… அர்ஜூன் சார்கிட்ட தான் லிப்ட் கேட்டேன். முதல்ல முடியாதுன்னு சொல்லிட்டு போய்ட்டார். அப்பறம் கேப்ல ஏறினேன். அந்த பிளாக்மெயிலர் கிட்ட இருந்து போன் வந்தது…அந்த டிரைவர் காரை திருப்பினார். சரியா அந்த நேரத்துக்கு எப்படி அர்ஜூன் சார் அங்க இருந்தார். அதுவும் அவ்வளவு நேரம் யாருக்காக காத்திருந்தார்..? இவங்க கம்பெனி டிரைவர் எதுக்காக கேப் ஓட்டனும்..? எதுக்காக என்னைக் கடத்த வந்திருக்கணும்..? ரஞ்சன் கடத்த சொல்லியிருப்பானோ..? என்று யோசிக்க,
அவன், நம்மளைக் கடத்த வேண்டிய அவசியமே இல்லையே. எப்படி யோசித்தாலும், அவளுடைய எல்லா சந்தேகமும் அர்ஜூனிடமே வந்து நின்றது.
“போன் பண்ணி பிளாக்மெயில் பண்ணது யாரு..?” என்று யோசித்தாள்.
“அது ஏன் அர்ஜூனா இருக்கக் கூடாது..?” என்றது மனம்.
“அவரா இருக்க வாய்ப்பில்லை. அவர் ஏன் என்னை பிளாக்மெயில் பண்ணனும்..? அவருக்குத் தான் என்னை யாருன்னே தெரியாதே..?” என்றாள்.
“அப்படின்னு நீதான நினைச்சுகிட்டு இருக்க..? உனக்கும் அர்ஜூனுக்கும் சம்பந்தமில்லை. ஆனா, ரஞ்சனுக்கும் அர்ஜூனுக்கும் சம்பந்தம் இருக்கே. ரஞ்சன் சொன்ன மாதிரி அர்ஜூன் ஏன் இதை பிளான் பண்ணி பண்ணியிருக்கக் கூடாது..?” என்று தவறான நேரத்தில், சரியாக யோசித்தாள் வராஹினி.
“போகலாமா…?” என்ற அர்ஜூனின் குரலில் கலைந்தாள். அவளின் முகத்தில் இருந்த குழப்பத்தைக் கண்டு கொண்டான் அர்ஜூன் .
“ஏதாவது பிரச்சனையா..? முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு..?” என்றான் அர்ஜூன்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்.!” என்றாள்.
“அப்போ கிளம்பலாமே..!” என்றான்.
“ம்ம்..!” என்றவள், எதுவும் பேசாமல் அவனுடன் சென்றாள்.
காரில் அவள் அமைதியாக வர, அவளின் அமைதி கண்டு அர்ஜூனுக்கு யோசனையாக இருந்தது.
“இப்ப எதுக்கு அமைதியா வர்ற..? நானும் அப்ப இருந்து கேட்கிறேன்..? என்ன பிரச்சனை உனக்கு..?” என்றான்.
“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை சார். உங்களுக்குத் தான் பிரச்சனை. இத்தனை நாள் எப்படியோ..? இனி நான் தான் உங்க மனைவி. இது எல்லாருக்கும் தெரிஞ்சு போய்டுச்சு. இனி காலேஜ்லயும் எல்லாருக்கும் தெரிஞ்சு போய்டும்..” என்றாள்.
“இது தான் உன்னோட கவலையா..? ஏற்கனவே ஒரு பிளான் போட்ட மாதிரி இதுக்கும் ஒரு பிளான் போட்ருவோம்..” என்றான் எதார்த்தமாக.
“இப்படி பிளான்லையே வாழ்க்கையை ஒட்டிடலாம்ன்ற எண்ணமா உங்களுக்கு..?” என்றாள்.
“உன்னோட பேச்சே ஒரு மாதிரி இருக்கு..? என்ன விஷயம்..?” என்றான்.
“நிஜமாவே உங்களுக்கு என்னை முன்னமே தெரியாதா சார்..?” என்றாள்.
“ஏன் கேட்குற..?”
“ஏன் கேட்குறேன்னா..?மண்டபத்துல என்னைப் பைத்தியம்ன்னு சொன்னிங்கல்ல…பைத்தியம் நானில்லை. நீங்க தான் என்னை பைத்தியமாக்கியிருக்கிங்க. அந்த டிரைவர் தான் அன்னைக்கு நான் பார்த்தது. என்னால எப்படி அந்த முகத்தை மறக்க முடியும்…?” என்றாள்.
“சரி..! நீ சொல்ற மாதிரி அவராவே இருந்தாலும், இப்ப நான் என்ன செய்யணும்ங்கிற..? அவரைக் கூப்பிட்டு கேட்கவா..?” என்றான்.
“அது என்ன தேவைக்கு சார்..? அவர் எதையோ சொல்ல வந்ததையும் பார்த்தேன். அதுக்கு நீங்க கண்ணுல காட்டுன ஜாடையையும் பார்த்தேன்..” என்றாள் விரக்தி சிரிப்புடன்.
“அவர் நம்ம கம்பெனி டிரைவர். எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். நீ தேவையில்லாம முடிச்சு போடுற..?” என்றான் அர்ஜூன் எரிச்சலுடன்.
“தேவையில்லாம முடிச்சு போடலை சார்… அன்னைக்கு நீங்க எப்படி சரியான நேரத்துக்கு அங்க இருந்திங்க..?” என்றாள்.
அவள் யோசிக்க மறந்த விஷயம்…. அவன் யோசிக்க விடாமல் செய்திருந்த விஷயம் இன்று விடிந்திருக்கிறது.
“உனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு நீ என்னையவே கேள்வி கேட்குறியா..?” என்றான்.
“நான் கேள்வி கேட்கலை சார்..! உறுதியாவே சொல்றேன். என்னை போன்ல பிளாக் மெயில் பண்ணது நீங்கதான்.. நீங்களா இருக்கத் தான் வாய்ப்பு அதிகமிருக்கு. என்னோட கேள்வியெல்லாம் எதுக்காக இப்படி பண்ணிங்க அப்படின்றது தான்..” என்றாள்.
அவள் சொன்னதை காதில் வாங்கினாலும், அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. அதற்குள் வீடு வந்திருக்க, ஜோடியாய் வந்தவர்களை வரவேற்க, ஆரத்தியுடன் நின்றிருந்தார் மாலா.
முதல் முறை வந்த போது…அவளுக்கு அவன் ஆரத்தி எடுத்த ஞாபகம் அவள் நினைவடுக்கில் வந்து போக, காலையில் இருந்து ஏற்பட்ட குழப்பத்தில் காரணமே இல்லாமல் கண்கள் கலங்கியது.
‘உன் புருஷன் என்னைப் பழி வாங்கத் தான் உன்னை கல்யாணம் பண்ணினான். அவனுக்கு உன்மேல காதலெல்லாம் துளி கூட கிடையாது..’ என்ற ரஞ்சனின் வார்த்தைகள் அவள் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது.
“ரொம்ப பொருத்தமான ஜோடி.. இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க பாப்பா..” என்றார் மாலா.
“அப்போ இத்தனை நாள் இவ அழகா இல்லையா மாலாக்கா..?” என்றான் அர்ஜூன் சிரிப்புடன். வராஹினிக்கு அவன் சிரிப்பு புத்திக்கு எட்டவில்லை.
“இத்தனை நாள் அழகுன்னா, இன்னைக்கு இந்த பட்டுப் புடவையில பேரழகு தம்பி..” என்றார் மாலா.
“இருக்காதா பின்ன..? புடவை செலக்சன் இந்த அர்ஜூனோடது ஆச்சே..” என்றான். இவர்கள் பேசிய எதுவும் அவள் காதில் விழவில்லை. அவள் ஒரு தனி உலகத்தில் இருந்தாள்.
“என்னாச்சு பாப்பா..? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு..?” என்று மாலா அவள் கையைப் பிடித்து கேட்கவும் தான் நினைவிற்கு வந்தாள்.
“அதெல்லாம் ஒன்னுமில்லைக்கா..!” என்றாள்.
“பூஜை ரூம்ல விளக்கேத்துமா..” என்று மாலா சொல்ல, அனைத்தையும் கடமையே என்று செய்தாள்.
‘இப்ப எதுக்கு இப்படி குழப்பிக்கிற..? எப்படி கல்யாணம் பண்ணியிருந்தாலும் அர்ஜூன் உன்னோட புருஷன். நீயும் அதைத் தான ஆசைப் பட்ட.. பிறகு ஏன் என்னமோ குடியே முழுகிப் போன மாதிரி முகத்தை வச்சுகிட்டு இருக்க..?’ என்று அவள் மனம் அவளை அதட்ட, ஓரளவு தெளிந்தாள்.
‘இந்த பிரச்சனைக்கெல்லாம் இன்னைக்கே ஒரு முடிவு கட்டுறேன்..’ என்று மனதிற்குள் தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்துக் கொண்டாள்.
அன்று இரவு, அவளுக்கு ஆயிரம் புத்திமதிகள் சொல்லிவிட்டு சென்றிருந்தார் மாலா.
அர்ஜூன் அவனின் அறைக்குள் ஏதோ வேலையாக இருக்க… ஒரு முடிவுக்கு வந்தவள், அவனின் அறைக்குள் சென்றாள். அவன் அவளை கவனித்தானில்லை.
“ம்ம்க்கும்..!” என்றாள் வேண்டுமென்றே. அதில் நிமிர்ந்தவன்,
“ஹேய் ராஹினி..! நீ இன்னும் தூங்கலை.. ஆமா என்ன இந்த பக்கம்..?” என்றான். அவன் அப்படி எதுவும் நடக்காததைப் போல் பேசியதைப் பார்த்த வராஹினிக்கு கோபம் கரையைக் கடக்கக் காத்துக் கொண்டிருந்தது.
“சும்மாதான்..! நமக்கு இன்னைக்குத் தான முறைப்படி கல்யாணம் நடந்திருக்கு. அதனால இன்னைக்கு என்ன சடங்கு நடக்கணுமோ.. அதுவும் முறைப்படி நடக்கனுமாம், மாலாக்கா சொல்லிட்டு போனாங்க..” என்றாள் வேண்டுமென்றே.
“அவங்க ஆயிரம் சொல்லுவாங்க..! நீ அதையெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காதமா. நீ உன்னோட ரூம்க்கு போய் ரெஸ்ட் எடு ராஹினி. எனக்கு வேலையிருக்கு. ஆங்..அப்பறம் என்னதான் கல்யாணம் நடந்தாலும், நீ எனக்கு மனைவியா இருக்கனும்ன்னு அவசியமில்லை. நான் முன்னமே சொன்னது தான்.. உன்னோட படிப்பு முடிஞ்ச பிறகு, உனக்கு எது சரின்னு படுதோ அதை செய்யலாம். அதுக்கு தடையா நான் இருக்க மாட்டேன்..!” என்றான்.
“அதை என் முகத்தைப் பார்த்து சொல்லுங்க..” என்றாள்.
“எப்படி சொன்னா என்ன..?” என்றான்.
“நான் கார்ல வரும் போது கேட்ட கேள்விக்கே இன்னும் நீங்க பதில் சொல்லலை. இப்போ புதுசா ஒன்னு. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி என்னை டார்ச்சர் பண்ணுவிங்க..?” என்றாள் கோபமாய்.
“நான் உன்னை டார்ச்சர் பண்றேனா..? நல்ல ஜோக்..” என்றான்.
“இல்லையா பின்ன..? ஒன்னுக்கு ரெண்டு தடவை கல்யாணம் பண்ணுவிங்க. அப்பறம் கேட்டா, உன் இஷ்ட்டம்..பிரிஞ்சி போறதுன்னா..போய்க்கோ அப்படின்னு சொல்லுவிங்களா..? என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு..? என்னோட வாழ்க்கையில எல்லா முடிவையும் நீங்க எடுத்துட்டு, கடைசியா..நீங்க எதுலையும் தலையிடாத மாதிரி, என்னமோ எல்லா சுதந்திரமும் எனக்கே குடுத்த மாதிரி , தியாகி ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்கீங்க..?” என்றாள் மூச்சு வாங்க.
“நான் ஒரு அர்த்தத்தில் சொன்னா, நீ ஒரு அர்த்தத்தில் எடுத்துக்கிற ராஹினி..இது நல்லதுக்கு இல்லை..” என்றான் அர்ஜூன்.
“நல்லதுக்கு இல்லைதான்..! எனக்கு உண்மை தெரிஞ்சாகனும்.. எதுக்காக என்னை கல்யாணம் பண்ணிங்க..? அந்த ரஞ்சன் கூட நீங்க போட்டி போட, நான் தான் பகடைக்காயா..? எனக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கும்ன்னு தெரியாது..? அதுல எல்லா உணர்வுகளும் இருக்கும்ன்னு தெரியாது..? சொல்லுங்க, நீங்கதான என்னை பிளாக்மெயில் பண்ணது, நீங்கதான என்னை கார்னர் பண்ணது..? தானா வந்து ஹெல்ப் பண்ற மாதிரி நடிச்சது எல்லாமே நீங்க தான… இப்படி என்னோட வாழ்க்கையில எல்லாத்துலையும், நீங்க.. நீங்க… நீங்க மட்டும் தான். ஆனா, திரும்பி பார்த்தா வாழ்க்கை மட்டும் தான் இல்லை..” என்றாள் ஆவேசமாக.
அர்ஜூன் அப்போதும் அமைதியாக இருக்க, அவனின் செல்போனை பட்டென்று பிடுங்கியவள், அவளின் தொலைந்து போன செல்போன் எண்ணை அதில் டயல் செய்ய, அதில் அவள் பெயருக்கு பதில் பிளான் ஏ என்று வந்தது.
அதை அவன் முகத்துக்கு நேராக காட்டியவள்…
“என்னோட பழைய மொபைல் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சது. அதுவும் எப்படி சேவ் பண்ணி வச்சிருக்கிங்கன்னு பாருங்க. இதுல இருந்து தெரியலை, எனக்கு போன் பண்ணது நீங்கதான்னு…இப்பவாவது உண்மையை சொல்லுங்க..” என்று அவள் கத்த,
“ஆமாடி..! நான் தான் உனக்கு போன் பண்ணி பிளாக்மெயில் பண்ணேன். அந்த டிரைவரும் நான் சொன்னதைத் தான் செஞ்சார். இப்ப அதுக்கு என்னாங்குற…?” என்றான் கோபமாக.
“அப்போ..! எல்லாமே உங்க பிளான் படி தான் நடந்தது இல்லையா..? இத்தனை நாள் நான்தான் லூசு மாதிரி இருந்திருக்கேன். நீங்க என்னை லூசாக்கி வச்சிருந்திருக்கிங்க…? என்னைய தெரியவே தெரியாத மாதிரி என்னமா ஆக்ட் குடுத்திங்க? அதுவும் நான் படிக்கிற பொண்ணுன்னு தெரியவே தெரியாதாம்..? என்னங்க சார் உங்க நடிப்பு” என்றாள்.
“ராஹினி நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளு..!ரஞ்சனுக்கு பார்த்திருக்கிற பொண்ணுன்னு மட்டும் தான் தெரியும். அது நீதான்னு எனக்குத் தெரியாது. அது தான் உண்மை. சொன்னாலும் சொல்லாட்டியும் நான் உன்னை முன்ன பின்ன பார்த்தது இல்லை..” என்றான் அவனும் கோபமாக.
“காலையில இருந்து உங்களுக்கும் அந்த டிரைவருக்கும் சம்பந்தமே இல்லைன்னு பொய்… இப்போ தெரியவே தெரியாதுன்னு பொய் சொல்றிங்க..? எங்கம்மா, ரஞ்சன் எல்லாரும் சொன்ன மாதிரி, என்ன திட்டத்தோட என்னை கல்யாணம் பண்ணிங்க..? ஒருவேளை என்னை ஏதாவது பண்ணி.. அது மூலமா ரஞ்சனை பழி வாங்கத் திட்டம் போட்டிங்களா..?” என்று கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிக் கொண்டிருந்தாள்.
“நான் சொல்றதைக் கேட்கப் போறியா.. இல்லையா..?” என்று அவன் பேசிக் கொண்டிருக்க, அவளானால் அவள் போக்கில் பேசிக் கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழந்தவன், அவளை இழுத்து அணைத்து, அவளின் இதழ்களை சிறை செய்திருந்தான். பேசிக் கொண்டிருந்தவளின் இதழ்களுக்கு பூட்டுப் போடும் வித்தையைக் கற்றிருந்தானோ என்னவோ..? அந்த இதழ்களின் சிறைப் பிடிப்பில் அவள் மூர்ச்சையாகி நிற்க, மெல்ல அவள் இதழ்களில் கரைந்து தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தான் அர்ஜூன். அவள் மனதில் இருந்த கேள்விகள் ஆவியாகி இருக்க, அவளின் நெஞ்சாங்கூடு சுவாசத்திற்காக ஏங்கி நின்றது. அவள் இடையில் பதிந்திருந்த அவன் கைகளின் வெம்மையில் பாகாய் உருகிக் கொண்டிருந்தவள், பட்டென்று அவனைத் தள்ளி விட, அவளையும் இழுத்துக் கொண்டே விழுந்தான் அர்ஜூன். தனக்கு மேல் கிடந்தவளை அவன் இம்மியும் அசைய விடாமல் பிடித்திருந்தவன்..ஒரு மோன நிலையில இருந்தான். காலையில் இருந்து அவன் அடக்கியாண்ட உணர்வுகள் எல்லாம் இப்போது பேயாட்டம் ஆடத் தொடங்கியிருந்தது.
அவளின் அர்ஜூன் மயக்கம் கொஞ்சம் தெளிந்து, தன்னிலை அடைந்தவள், அவனில் இருந்து ஆக்ரோஷமாய் எழுந்தாள்.
“செஞ்ச பிராடு வேலையெல்லாம் பத்தாதுன்னு, இப்போ இந்த சீப்பான டெக்னிக் வேற… எங்கம்மா அப்பவே சொன்னாங்க..” என்று பொரிந்து கொண்டிருந்தாள்.
அவளின் ‘எங்கம்மா’வில்… விருட்டென்று எழுந்த அர்ஜூன் மீண்டும் பழைய அர்ஜூனாகிப் போனான்.