கடம்பன் குன்று
பகுதி – 2
போகர் தன் குருவான காலங்கி முனிவரின் கட்டளையை ஏற்று சீன தேசம் சென்று அங்கிருக்கும் மக்களுக்கு மருத்துவம், யோகம், ஜோதிடம் போன்ற கலைகளை பயிற்றுவித்து வந்தார்.
ஒரு முறை சீன தேசத்து மக்களுக்கு தான் கடுந்தவம் மூலம் கற்றுணர்ந்த காயகற்பம் என்ற வித்தையை கற்பித்துக் கொடுக்க நினைத்தார் போகர். காயம் என்ற உடலை, கல்பம் என்ற நீண்ட கால அளவில் நோய்களின்றி பராமறிக்கும் வித்தையே இந்த காயகற்பம் ஆகும்.
நமது வாழ்வில் சீரான உடற்பயிற்சி, சத்தான உணவு, யோகம் ஆகியவற்றைக் கடைபிடித்து வயது, மூப்பு, நோய் தீண்டா வண்ணம் நமது உடலை கட்டிக் காக்க சித்தர்கள் கடைபிடிக்கும் காயகற்ப முறையை தனது சீடர்களுக்கு சொல்லிக் கொடுத்து அனைவருக்கும் பயன்படும் வண்ணம் செய்திடுதல் வேண்டும் என்று போகர் எண்ணினார்.
போகர் சீன தேசத்தைச் சேர்ந்தவர், போ-யாங் என்ற பெயர் பெற்றிருந்த போகர், தன்னைக் காண வந்த மக்களுக்கு அன்று மூலிகைகளின் பயங்களை பற்றிய செய்திகளைக் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அவர் உருவாக்கிய மூலிகைச் சாற்றை பருக கொடுத்தார் போகர்.
“இதென்ன வித்தியாசமான சாறாக இருக்கிறதே” என்று அச்சம் கொண்ட மக்கள் எவருமே அவர் கொடுத்த மூலிகை மருந்தை குடிக்கத் தயக்கம் காட்டினர்.
ஆனால், போகரின் கூட்டத்தில் அமர்ந்திருந்த யூ என்னும் இளைஞன் மட்டும் போகரின் மூலிகைச் சாற்றை தைரியமாக உட்கொண்டான்.
மூலிகையை அருந்திய சில நொடியிலேயே, “நெஞ்செல்லாம் எரிகிறதே! எரிகிறதே” என்று கதறிய யூ, அப்படியே தரையில் விழுந்து உயிர் நீத்தான். இதைக்கண்ட மக்கள் போகரை ஏசினர். ஆனால் போகரோ தன் தவ வலிமையாலும், உயிர் நீத்தாரை திரும்ப உயிர்தெழச்செய்யும் வித்தையாலும் யூவை உயிர்பித்தார்.
“மற்றவர்கள் என்னை நம்பாத பொழுது, துணிந்து என் மூலிகையை குடித்திருக்கிறாய். என்ன காரணம் யூ?” என்று வினவினார் போகர்.
“நான் உங்களை நம்புகிறேன் ஐயனே. உங்களை என் மானசீக குருவாக நினைத்து தினமும் தாங்கள் சொல்லிக் கொடுத்த யோகங்களைச் செய்கிறேன்” என்று பணிவுடன் பதிலளித்தான் யூ.
நன்னடத்தையும், பணிவும் அமைதியான பேச்சும் கொண்டிருந்த யூவை போகருக்கு மிகவும் பிடித்துப் போனது.
“இனி என்னுடனேயே பயணித்து, என் பிரதான சீடனாக நீ இருப்பாய்.” என்று மொழிந்த போகர், சீனாவில் இருந்து இந்திய தேசம் வரும் பொழுது தன் சீடனான யூவையும் உடன் அழைத்து வந்தார்.
தனக்குத் தெரிந்திருந்த வித்தைகள் அனைத்தையுமே தன் நம்பிக்கைக்குறிய சீடனான யூவிற்கும் சொல்லிக் கொடுத்தார் போகர்.
யூவிற்கு இயல்பாகவே வேகமாக கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் இருந்தது. அதிலும், குளிர்ந்த நீரைக் கொண்டு காட்டில் உலாவும் புலிகளைத் தன் வசப்படுத்தி அவற்றின் மேல் ஏறி வலம் வரும் வித்தையும் கைவரப் பெற்றிருந்தார்.
ஒரு முறை தன் குரு, போகர், “தண்ணீர் வேண்டும் யூ” என்று வினவ, வேகமாக, புலியின் மீது ஏறிச் சென்று தண்ணீர் கொணர்ந்தான் யூ. அன்றிலிருந்து புலியின் மேல் சென்று தண்ணீர் (பாணி) கொண்டு வந்த யூவை “புலிப்பாணி” என்று செல்லமாக அழைக்கத் துவங்கினார் போகர்.
இப்படியாகப்பட்ட, என்றுமே தன் குருவின் கட்டளையை மீறி எதையும் செய்திராத புலிப்பாணி, “மூன்று சிலைகள் செய்யப் போகிறோம்” என்று சொல்லிவிட்ட தன் குருவின் ஆணையை ஏற்று “ஏன்? எப்படி?முன்னர் சொல்லவில்லையே” என்ற கேள்விகள் எதுவும் எழுப்பாமல், மூன்று சிலைகளுக்குத் தேவையான விஷ்ணுகிரந்தி, சலிச்சிகை, மண்செவிக்கள்ளி, கோகொட்டை, கும்பிலி, கருநொச்சி, நாவமல்லிக்கீரை போன்ற அரிய மூலிகைகளைச் சேகரிக்கும் பணியை தன் சீடர்களுக்குப் பகிர்ந்தளித்தார்.
செங்குத்தான பாறைகளின் இடுக்கில் வளரும் அமுதுபுஷ்பம், சிறுகுறிஞ்சான் போன்ற சற்றே அபாயமாக சேகரிக்கப்படவேண்டிய தாவரங்களைத் தானே கொணரச் சென்றார் புலிப்பாணி என்று பெயர் பெற்றிருந்த அந்த சீன தேசத்து இளைஞன் யூ.
இப்படியாக ஒன்பது ஆண்டுகள் இரவும் பகலும், காடு மேடுகளில் அலைந்து மூலிகைகளைச் சேகரித்த புலிப்பாணி, போகர் செய்யப் போகும் மூன்று சிலைகளுக்கும் தேவையான அனைத்து பொருட்களையும் கொணர்ந்தார்.
போகர், ஹரிகேசபர்வதத்தில் வேதிகை ஊற்றின் அருகே அமையப்பட்டிருந்த அந்த தீப வடிவிலான குகையில் அமர்ந்து குழந்தை வேலைப்பரின் சிலையினை வடிக்கத் துவங்கினார்.
போகரின் குகையில் இருந்து இருபதடி கீழே அமையப்பட்டிருந்த சமதளத்தில் மற்ற 81 சித்தர்களும் குடில் அமைத்து தேவையான உதவிகளைச் செய்து கொண்டிருந்தனர்.
வேலை செய்யும் சித்தர்களுக்கு உதவியாக, சுள்ளி பொருக்கி வர, இடத்தைப் பெருக்கி சுத்தம் செய்ய, தண்ணீர் கொணர என எடுபிடி வேலைகளைச் செய்யவென அச்சிறுவனும் அவனது தம்பியும் புலிப்பாணி சித்தரால் நியமிக்கப்பட்டிருந்தனர்.
மூத்தவன் பெயர் கர்ணன். புலிப்பாணியாரின் ஏவல்களை சிரமேற்கொண்டு துரிதமாக செய்து முடிக்கும் பாங்கு கொண்ட அமைதியே வடிவான பாலகன். ஆனால் அவன் தம்பி, விகர்ணனுக்கு நிறைய வாய்துடுக்கு உண்டு. அவன் மனதில் எண்ணற்ற கேள்விகள் உதித்தவண்ணமே இருக்கும்.
“அண்ணா, இவர்கள் வேலை செய்வதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது அல்லவா? குகைக்குள் அமர்ந்திருக்கிறாரே அவர் தான் தலைமை சித்தரா அண்ணா?”
“ஆம், அவர் பெயர் போகர்.”
“ஓ, அங்கிருந்து அவர் என்ன வேண்டுமென்று வாய்திறவாமல் எப்படிக் கேட்கிறார்? அவர் வாய்திறவாமல் கேட்பது எப்படி இங்கிருக்கும் புலிப்பாணியாருக்குப் புரிகிறது?” என்று ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தான் 8 வயது பாலகன் விகர்ணன்.
“பேசாமல் அவர்கள் சொல்லும் வேளைகளை மட்டும் தவறில்லாமல் செய்து முடி விகர்ணா? ஏன் உனக்குத் தேவையில்லாத விஷயத்தைப் பற்றி கேள்விகள் எழுப்புகிறாய்?” என்று தன் தம்பியை கடிந்து கொண்டான் 10 வயது கர்ணன்.
“இவர்கள் எல்லாரும் சேர்ந்து சிலை செய்கிறார்களே. அதை ஏன் மூலிகைகளைக் கொண்டு சிலை செய்திடுதல் வேண்டும்? சிலை என்றாலே அதை கற்களைக் கொண்டு தானே வடிப்பர்? ஏன் மூலிகைகளை உபயோகிக்கின்றனர்” என்று விடாமல் கேள்விகள் கேட்பான் விகர்ணன்.
“பேசாமல் இரு விகர்ணா? உன் வெட்டிபேச்சு அவர்கள் காதில் விழுந்துவிடப் போகிறது”
“இல்லை அண்ணா. புலிப்பாணியார் தன் சீடரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ஏதேணும் சந்தேகம் மனதில் தோன்றினால் அவற்றை மற்றவரிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டுமாம். கேள்விகள் கேட்க பயந்து கொண்டு வாயை மூடிக் கொள்வது அறிவீனமாம்.”
“விகர்ணா, நமக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன தம்பி! வா, புடம் போடுவதற்கு வறட்டிகள் ஏற்பாடு செய்திட வேண்டும் என்று புலிப்பாணியார் கேட்டிருக்கிறார். ஊருக்குள் சென்று பசுஞ்சாணம் கொண்டு செய்த வறட்டிகள் கொணர வேண்டும். வா செல்லலாம்.”
“இல்லை அண்ணா, மூலிகைகளை இவர்கள் உரலில் இடித்து சாறாக்குகிறார்களே அது திரவம் போலல்லவா இருக்கிறது. அதைக் கொண்டு எப்படி கெட்டியான சிலை வடிக்க இயலும்? என் சந்தேகத்தை நிவர்த்தி செய்யேன் அண்ணா” என்று விடாமல் வாதாடிக் கொண்டே வந்தான் விகர்ணன்.
விகர்ணனின் பேச்சு, அவனது தமையனான கர்ணனுக்கு கோபத்தைக் கூட்டியிருந்தது, “பேசாமல் என்னுடன் வருகிறாயா இல்லையா? எனக்கு உதவி செய்ய விருப்பம் இல்லையெனில் அமைதியாக எங்கேணும் என்று அமர்ந்திரு. என்னை தொந்தரவு செய்யாதே” என்று கடினமாகக் கூறிய கர்ணன், வறட்டிகளைச் செய்ய ஆயத்தம் ஆனான்.
தன் தமையன் திட்டிவிட்ட கோபத்தில் இருந்த விகர்ணன், அண்ணனின் பின்னால் செல்லாமல், சற்று தூரம் கால் போன போக்கில் நடந்து புற்கள் மண்டியிருந்த அச்சிறு பாறையின் மீது சோகமாக அமர்ந்து கொண்டான். அந்தப் பாறையின் கீழே படுத்திருந்த புலிப்பாணிச்சித்தரின் புலிவாகனத்தை விகர்ணன் கவனிக்கவில்லை.
“கேள்விகள் கேட்காமல் இருப்பது அறிவீனம் என்று புலிப்பாணியார் சொன்னார் தானே. அதனால் நானும் என் மனதின் சஞ்சலங்களைக் கேட்டது ஒரு பிழையா? எதற்கு இப்படி கோபம் கொள்கிறார் அண்ணா” என்று புலம்பிக் கொண்டே இருந்த விகர்ணனின் பேச்சைக் கேட்டுக் கொண்டு படுத்திருந்த புலி மெல்ல நகைத்தது.
சட்டென சிரிப்புச் சத்தம் எழ திடுக்கிட்டு எழுந்த விகர்ணன், “யாரது? யார் சிரித்தது?” என்று பயத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே வினவினான்.
“நான் தான் சிரித்தேன்” என்று புலி திரும்ப மொழிந்தது. எங்கிருந்து சப்தம் வருகிறது என்று தேடிய விகர்ணன், சப்தம் எழுந்த பாறையின் பின்னால் சென்று பார்க்க, அங்கே புலி படுத்திருந்தது.
“நீ, நீயா பேசினாய்?” என்று ஆச்சர்யத்துடன் வினவினான் விகர்ணன்.
“ஆம். நான் தான் பேசினேன்” என்று பதிலுரைத்தது புலி.
“ஓ. உனக்கு மனிதர்களின் பாஷை பேசத் தெரியுமா? அதிசயமாக இருக்கிறதே!”
“இதில் என்ன அதிசயம். என் எஜமானின் குருநாதர், போகர், வழியில் உலாத்திய காட்டுப் பூனையையே வேதம் ஓதச் செய்த சித்தர். அவர் சீடரான புலிப்பாணியின் வாகனம் நான் பேசுவது என்ன பெரிய விஷயம்?” என்று வினவியது புலி.
“ஆனாலும், நீ இத்தனை நாட்களில் ஒரு முறை கூட பேசவில்லையே? எதனால்?” என்று பயம் நீங்கப் பெற்ற விகர்ணர், பாறையின் கீழே புலிக்கு இணையாகத் தானும் அமர்ந்து கொண்டு வினவினான்.
“பேசுவதற்கு எந்த அவசியமும் நேரவில்லை. அதனால பேசவில்லை.” என்றது புலி.
“இப்போது மட்டும் என்ன அவசியம் வந்தது நீ பேசும் அளவிற்கு” என்று தன் குண்டு கன்னங்களில் குழி விழ வினவிய விகர்ணனின் கண்களில் குறும்பு மின்னியது.
இதைக் கேட்ட புலி திரும்பவும் நகைத்தது. “உன் புலம்பல் மொழிகள் கேட்டதும் சிரிப்பு தோன்றியது. அதனால் தான் உன் கேள்விகளுக்கு பதிலக்கலாம் என்று எண்ணினேன்”
“ஏன் என் புலம்பலுக்கு என்ன? அது தான் அண்ணா என் கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் என்னை ஏசிவிட்டாரே. அதை எண்ணி உனக்கு சிரிப்பு வந்ததா”
“இல்லை சிறுவனே! உன் கேள்விகளை எண்ணிச் சிரித்தேன். இங்கே நடந்து கொண்டிருக்கும் மாபெரும் செயல் என்னவென்றே அறியாமல் நீ புலம்புவது கேட்க எனக்கு வேடிக்கையாக இருந்தது. அதனால் சிரித்தேன்.” என்றது புலி.
“அப்படி என்ன மாபெரும் விந்தையான செயல் இங்கே நடக்கிறது? நிறைய சித்தர்கள் சேர்ந்து சிலை செய்கிறார்கள். அவ்வளவு தானே!”
“என்ன அவ்வளவு தானே என்று கேட்டுவிட்டாய். இச்சிலைகளின் மகிமை பற்றியும் இதைச் செய்பவர்களின் மகிமை பற்றியும் உனக்குத் தெரிவில்லை போலிருக்கிறதே!”
“அதெல்லாம் எனக்கென்ன தெரியும்? என் அண்ணன் கர்ணன் என்னை தண்ணீர் சேர்ந்த அழைத்து வந்தான். அவனுடன் வந்து உதவ வேண்டும் என்றும், அவன் ஏவும் வேலைகளை முகம் கோணாமல் செய்ய வேண்டும் என்றும் எங்கள் அன்னையின் கட்டளை வேறு. அதனால் தான் வந்தேன்” என்றான் விகர்ணன்.
“சரி. உன் மனதில் நிறைய கேள்விகள் தோன்றின அல்லவா? அவற்றிற்கான விடைகளைக் கண்டறிய நீ முயற்சிக்கவில்லையா?”
“கேள்விகளுக்கு விடைகள் வேண்டும் என எண்ணித்தானே என் தமையனிடம் வினவினேன். அவன் எதுவும் கூற மறுக்கிறானே. உனக்குத் தெரிந்தால் நீ கூறேன்.”
“ஆகட்டும். எனக்கு என்னவோ இன்று உன் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தோன்றுகிறது. சரி உன் கேள்விகள் என்ன?மறுபடியும் கேள்” என்று விகர்ணனின் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாரானது புலி. புலி தன் கேள்விகளுக்கு பதிலளிப்பதாகச் சொன்னவுடன் விகர்ணனுக்கு பெரும் ஆனந்தம் உண்டாயிற்று. நிமிர்ந்து அமர்ந்து கொண்டவன், புலியிடம் தன் மனதில் தோன்றிய கேள்விகளைக் கேட்கலானான்.
“இந்த மூலிகைகளைக் கொண்டு சிலை எப்படிச் செய்வார்கள். கற்களில் தானே சிலை வடிப்பார்கள். இங்கானால் மூலிகைகளைக் கொண்டு செய்கிறார்களே ஏன்?” என்று தன் முதல் கேள்வியைக் கேட்டான் சிறுவன் விகர்ணன்.
புலியும் தனக்குத் தெரிந்த பதிலைச் சொல்லத் துவங்கியது. “கற்களால் செய்யும் சிலைகளைப் போல் இந்த மூலிகை சிலைகள் இருக்காது. இவற்றை நவபாஷாண சிலைகள் என்று சொல்கிறார்கள். நவம் என்றால் ஒன்பது. பாஷாணம் என்றால் விஷம். அதாவது ஒன்பது விதமான விஷங்களைக் கொண்டு செய்யப்படும் சிலைகள் இவை.” என்றது புலி.
“என்னது விஷங்களா? விஷங்கள் மனிதர்களுக்கு ஆபத்தானவை அல்லவா? அவற்றைக் கொண்டு ஏன் சிலை செய்கிறார்கள்?”
“விஷங்கள் ஆபத்தானவை தான். அவற்றை பக்குவமான முறையில் பிரித்தெடுக்க ஒரு பெரும் செயல் உள்ளது. அது சித்தரகசியம். மூலிகைகளை அரைத்து, கூழாக்கி, அவற்றை வேகவைத்து, பின்பு ஒன்பது தடவை வடிகட்டி, அவற்றை புடம் போட்டு அணுக்களாகப் பிரித்து பின் சிலைகளாகக் கட்டுவர்.”
“இதனால் என்ன பயன்?” என்றான் விகர்ணன்.
“இப்படிச் சரியான முறையில் விகிதம் மாறாமல் உருவாக்கப்படும் நவபாஷாண சிலைகள் மிகுந்த மருத்துவ குணம் படைத்தவை. அவற்றின் மீது கொட்டப்படும் அபிஷேக நீரும், பாலும் கூட மருந்துவ குணம் கொண்டதாக மாறிவிடும். அந்நீரையோ பாலையோ பருகுபவர்களுக்கு தீராத பல நோய்கள் தீரும்.”
“அப்படியா? ஆச்சர்யமாக இருக்கிறதே? மேலும் சொல் கேட்போம்.” என்று ஆர்வமாக வினவினான் விகர்ணன்.
“அப்படிப் பிரித்தெடுக்கையில் மூலிகைகளில் இருந்து நச்சுக்காற்றும், விஷ அணுக்களும் வெளிப்படும். அதனை சுவாசிக்க உடனே உயிர் துறக்கும் அபாயம் உள்ளது. அதனால் அவற்றை சுவாசிக்காமல் இருக்க, நிறைய உள்மூச்சு அடக்கும் பயிற்சி மேற்கொண்டு பின்னரே சிலைகளாகக் கட்டுவார் போகர்.” என்று சொல்லியது புலி.
“போகர் தான் இந்த சிலைகளைச் செய்தவரா?”
“ஆம். அதிலும், அவர் தன் குருவின் ஆணைப்படி விரைவில் திரும்ப சீன தேசம் செல்லவிருக்கிறார். அதனால், இப்பொழுது செய்து கொண்டிருக்கும் குழந்தை வேலப்பர் சிலையினை வேகமாக வடிவமைத்துக் கொண்டிருக்கிறார். சிலையின் முகத்தை தீட்சண்யமாக வடிவாக செய்து முடித்துவிட்டார். அதற்குள் அவருக்கு சீன தேசம் செல்ல அழைப்பு வந்துவிட்டது. அதனால் துரிதகதியில் சிலையின் உடலை வடிவமைக்கிறார் என்றும், முகம் வடிவாக அமைய பெற்ற அளவிற்கு உடல் அமையவில்லை என்றும் கேள்வி.”
“அடடா! மெதுவாக அழகாக சிலையை வடிக்காமல் அவசரகதியில் செய்யக் காரணம் என்ன புலியே?”
“அவரது குரு காலங்கி நாதர், உடனே சீனதேசம் வரும் படிக்கு கட்டளை இட்டிருக்கக் கூடும். அதனால் இருக்கலாம்.”
“அப்படியா? போகர் சென்றுவிட்டால் பின்பு இங்கிருக்கும் பணிகள் என்னாவது புலியாரே? இவற்றை யார் செய்து முடிப்பார்கள்?”
“போகர் சீன தேசம் சென்று விரைவில் திரும்பிவிடுவார். அது வரையிலும் இங்கிருக்கும் பணிகளை என் எஜமானர் புலிப்பாணியார் திறம்பட செய்துமுடிப்பார்.”
“ஓ. இப்போது செய்து கொண்டிருப்பது குழந்தை வேலப்பர் சிலை அல்லவா? தண்டாயுதபாணி சிலை செய்தாகிவிட்டதா புலியாரே?”
“இல்லை. போகர் சீன தேசம் சென்று திரும்பிய பின்னரே ஆண்டி கோலத்தில் இருக்கும் மூன்றரை அடிகள் கொண்ட தண்டாயுதபாணி சிலையும், சற்றே சிறிய அளவிலான ஒரு அடி உயரம் கொண்ட ராஜஅலங்கார சண்முகர் சிலையும் செய்யப்படப் போகின்றன.” என்றது புலி.
“போகர் சீன தேசம் செல்லும் சமயம், உன் எஜமானர், புலிப்பாணிசித்தர் மற்ற சிலைகளைச் செய்து முடிப்பாரா?”
“இல்லை சிறுவனே. விஷவாயுக்களைக் சுவாகிக்காமல் உள்மூச்சு எடுத்து நாட்கணக்கில் மூச்சடக்கி செய்யப்படவேண்டிய வேலை இது. அதனால் சிலை செய்யும் பொறுப்பு போகரைச் சேர்ந்ததே ஆகும்.தன் குருவிற்குத் தேவையான அனைத்து சிஷ்ருஷைகளையும் செய்வது மட்டுமே என் எஜமானரின் பொறுப்பு” என்று கூறிய புலியை நன்றியுடன் ஏறிட்டான் விகர்ணன்.
புலி அமைதியாக சிறுவன் விகர்ணனை பார்த்தபடிக்கு அமர்ந்திருக்க, தூரத்திலிருந்து, விகர்ணனின் தமையன் கர்ணனின் அழைப்பொலி கேட்டது.
“தம்பி, விகர்ணா! எங்கிருக்கிறாய்? தம்பி?” என்று தன் தமையனின் குரல் கேட்ட விகர்ணன், தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து கொண்டான்.
தன் கேள்விகளுக்கு பதிலளித்த புலியை நன்றியுடன் ஏறிட்ட சிறுவன் விகர்ணன், “உன் விளக்கங்கள் என் சந்தேகத்தை பெருமளவு குறைத்துவிட்டன புலியாரே. மிக்க வந்தனம். நான் விடைபெறுகிறேன். மீண்டும் ஏதேணும் ஐயம் தோன்றினால் தவறாது உன்னிடம் விடைகள் தேடி வருவேன். என் வணக்கத்தை ஏற்றுக் கொள் புலியே” என்று கூறி மீண்டுமெரு முறை வணங்கிவிட்டு தன் அண்ணனின் குரல் வந்த திக்கை நோக்கி நடக்கலானான்.