Skip to content
Post Views: 4,820
அத்தியாயம் – 9
கயல்விழி உள்ளே மண்டபத்தில் உட்கார்ந்து இருந்தாள். அவளிடம் சென்ற பத்மா, “உன் வீட்டுக்காரர் நாம கொடுத்த நகைகளையும், பணத்தையும் வாங்கலை. நீ போட்டிருக்கிறதே போதும்னு சொல்லிட்டார்.”
“தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் நகையைப் போட்டிருப்பேன். நீதான் போடவே விடலை.” என்றவர்,
Advertisement
தன் கழுத்தில் கையில் இருந்த நகைகள் சிலவற்றைக் கழட்டி மகளுக்குப் போட, வேண்டாம் எனக் கயல் மறுக்க… அதைப் பார்த்துக் கொண்டே குழலியும், தாரணியும் வந்தனர்.
அவர்களைப் பார்த்ததும், “இது என்னோட நகைகள், எங்க அம்மா வீட்ல போட்டது. நான் என் மகளுக்குத் தரலாம் இல்ல…” பத்மா சொல்ல…. குழலி எதுவும் சொல்லவில்லை. புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்.
“நான் கைகுள்ளயே வச்சு வளர்த்திட்டேன். உலகமே தெரியாது, நீங்கதான் பார்த்துக்கணும்.” சொல்லிவிட்டுப் பத்மா கண்கலங்க. இப்போது குழலி பேசினார்.
Advertisement
“இனிமேல் எனக்கு மூன்னு இல்லை நாலு பிள்ளைங்க. நான் நல்லா பார்த்துப்பேன். அதோட நந்தா நல்லா பார்த்துப்பான். உங்க பொண்ணே வேணும்னு கல்யாணம் பண்றான்.”
Advertisement
குழலி பேசுவதைக் கேட்க, பத்மாவுக்குச் சந்தோஷமாக இருந்தது.
Advertisement
“இப்படியெல்லாம் திடிர்ன்னு ஒருநாள்ள மகனுக்குக் கல்யாணம் பண்ண யாரும் ஒத்துக்க மாட்டாங்க. ரொம்ப நல்ல இடம் அமைஞ்சிருக்கு. நீ இன்னும் சின்னப் பிள்ளை இல்ல… பொறுப்பா இருக்கணும்.” பத்மா தன் மகளிடம் சொல்ல… அவள் சரியென்று தலையசைத்தாள்.
அங்கே வந்த நந்தா, கயல்விழியைப் பார்க்க, அப்போது அவளும் அவனைப் பார்த்தாள்.
இதற்கு முன் இவள் இவ்வளவு நகையா போட்டிருந்தாள் என்று யோசித்தவனுக்குக் கிடைத்த விடையோ மகிழ்ச்சியாக இல்லை.
வேண்டாம் என்று சொல்லிய பின்னர் இவ்வளவு நகை போட்டிருந்தால், பிறகு தான் சொன்னதற்கு என்ன மரியாதை என்ற கோபம் எழுந்தது. அதை அவனது முகமே காட்டிக்கொடுக்க, அது அங்கிருந்த எல்லோருக்குமே புரிந்தது.
“அம்மா கிளம்பலாம்.” என யாரின் முகத்தையும் பார்க்காமல் அவன் சொல்லிவிட்டு சொல்ல… கயல்விழி சில நகைகளைத் தவிர மற்றதை கழட்டி பத்மாவிடம் கொடுத்து விட்டாள்.
நகையால் பிரச்சனை வேண்டாம் என நினைத்த பத்மாவும், அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. ஆனால் அவர் முகம் வாடிவிட்டது.
கோவிலில் இருந்து அப்படியே நந்தாவின் இருப்பிடத்துக்குக் கிளம்பி விட்டனர். கயல்விழியோடு அவளது துணிகள் இருந்த பெட்டி மட்டும் வந்தது.
எப்போதும் பெண்கள் புகுந்த வீட்டிற்குக் கிளம்பும் போது இருக்கும் பாச போராட்டம் எல்லாம் அங்கு இல்லை.
கிருஷ்ணனும் கீதாவும் முன்பே அங்கு இருந்து சென்று இருந்தனர். வாசு மிச்சம் மீதி இருந்த சாமான்களை ஆட்களை வைத்து வண்டியில் ஏற்றிக்கொண்டு இருந்தான்.
அன்பரசு முகத்தில் இருந்து ஒன்றும் கண்டுகொள்ள முடியவில்லை. பத்மாவுக்கு மகளைப் பிரியும் வருத்தம் இருந்தாலும், எந்தச் சூழ்நிலையில் இந்தத் திருமணம் நடந்தது என்றும் நினைவு இருந்தது. அதனால் மகளைச் சந்தோஷமாகவே வழி அனுப்பினார்.
கயல்விழிக்கு தன் அம்மாவை தவிர, மற்றவர்களைப் பிரிந்து செல்லும் வருத்தமும் இல்லை. அதே நேரத்தில் புகுந்த வீட்டிற்குச் செல்லும் சந்தோஷமும் இல்லை. பொதுவாக ஒரு தலையசைப்புடன் அவள் விடைபெற்றாள்.
காரின் பின் இருக்கையில் கயல்விழியின் அருகே நந்தாவும், மறுபக்கம் குழலியும் அமர்ந்து கொண்டனர். வருண் காரை ஓட்ட… அவன் அருகில் தாரணி இருந்தாள்.
மற்றொரு காரில் நந்தாவுடன் நேற்றில் இருந்து உடனிருந்த நண்பர்கள் இருவரின் குடும்பமும் வந்தது. எல்லோரும் நேராக நந்தா தங்கி இருக்கும் வீட்டிற்குச் சென்றனர். வீடு பெரிதாக வசதியாக இருந்தது.
விருந்தினர்களுக்குக் குளிர்பானம் கொடுக்க… அவர்கள் சிறிது நேரத்திலேயே கிளம்பி விட்டனர். தான் உபயோகிக்கும் அறைக்குள் சென்ற நந்தா, காக்கி உடையில் வெளியே வந்தான்.
“இன்னிக்கும் வேலைக்குப் போகனுமா நந்தா?” குழலி கேட்க,
“ஒரு முக்கியமான வேலை இருக்கு மா. நீங்க எல்லாம் ரெஸ்ட் எடுங்க. நான் கொஞ்ச நேரத்தில வந்திடுறேன்.” எனச் சொல்லிவிட்டு விரைந்தவன், வீடு வர இரவு பத்து மணி ஆகிவிட்டது.
அவனுக்குக் கதவை திறந்து விட்ட குழலி மகனை முறைத்தார்.
“சாரி மா…லேட் ஆகிடுச்சு.” எனச் சங்கடமாகப் புன்னகைத்தவன், வீட்டிற்குள் வந்து பார்த்த போது, வீடு நிசப்தமாக இருந்தது.
“எல்லோரும் தூங்கிட்டாங்களா?” எனக் கேட்டவன், குழலி அலுப்பாக இருப்பதைப் பார்த்து, கைகழுவிவிட்டு சாப்பிட அமர்ந்தான்.
உணவை அள்ளி வாயில் வைத்ததுமே சொல்லிவிட்டான். “இது சமையல்காரம்மா சமைச்சது போல இல்லையே… நீங்க பண்ணீங்களா மா?”
“ஆமாம்.”
“கயல் சாப்பிட்டாளா?”
“பரவாயில்லை அவளைக் கூட நியாபகம் இருக்கு. நீ பண்றது எதுவும் சரியில்லை நந்தா. கல்யாணம் பண்ணி அந்தப் பொண்ணைக் கூடிட்டு வந்து விட்டுட்டு உடனே போயிட்ட. பாவம் அந்தப் பொண்ணு.”
“தப்புதான் மா…என் வேலை அப்படி என்ன பண்றது?”
“சரி சீக்கிரம் சாப்பிடு.”
நந்தா விரைந்து சாப்பிட்டு முடித்ததும், குழலி படுக்கச் சென்றுவிட, தன் அறைக்கு வந்த நந்தா, அங்கே கட்டிலில் கயல் இல்லாததைப் பார்த்து ஏமாற்றம் அடைந்தான்.
“உனக்கு ரொம்பதான் டா ஆசை.” எனத் தன்னைப் பற்றியே கிண்டலாக நினைத்தவன், கட்டிலின் மறுபுறம் வர… அங்கே தரையில் பாய் விரித்துக் கயல்விழி படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவளைத் தனது அறையில் பார்த்ததும் இன்பமாக அதிர்ந்தான். அவள் அருகில் தரையில் மண்டியிட்டு அமர்ந்தவன், அவள் முகத்தையே ஆசை தீர பார்த்து ரசித்தான்.
தன் மனைவியோடு சல்லாபிக்கும் காலம் இப்போது இல்லை என அவன் அறிவான். ஆனால் அவளோடு ஒரே அறையில் இருப்பதே மனதிற்குச் சந்தோஷமாக இருந்தது.
சிறிது நேரம் சென்று குளித்து உடைமாற்றி கட்டிலில் ஏறி படுத்தவன், மனைவியைப் பார்த்தபடியே உறங்கி போனான்.
நள்ளிரவில் கயல்விழியின் அலறல் சத்தம் கேட்டு பதறி அடித்து எழுந்து விளக்கை போட்டான். அவன் பார்க்கும்போது கயல் சுவர் ஓரமாக அமர்ந்து இருந்தாள். பார்வையில் அவ்வளவு பயம்.
“கயல்” நந்தா அழைக்க….அவனைப் பார்க்க அஞ்சியவள் போல் கண்களை மூடிக்கொண்டாள்.
சத்தம் கேட்டு குழலியும் அங்கு வந்துவிட்டார். நந்தா அறைக்கதவை தாழிடவில்லை. அதனால் அவர் நேராக அறைக்குள் வர… அவரைப் பார்த்ததும் அவரிடம் கோழிக்குஞ்சாகக் கயல்விழி ஒண்டிக்கொண்டாள்.
அவளை அனைத்து ஆறுதல் படுத்தியவர், “என்ன டா?” எனக் கேட்க, அதைப் பார்த்தபடி வருண் அறை வாசலில் நின்று இருந்தான்.
“ஒரே ரத்தம்.” என்று சொல்லி கயல் அவள் முகத்தையும், உடலையும் அழுத்தி அழுத்தி துடைக்க…. அவள் என்ன கனவு கண்டிருப்பாள் என நந்தாவுக்குப் புரிந்தது.
“ரத்தமா? இல்லையே…. நல்லா கண்ணைத் திறந்து பாரு.” குழலி சொல்ல… கயல்விழி இன்னும் கண்ணை இறுக மூடிக்கொண்டாள்.
“நந்தா, முகம் பார்க்கும் கண்ணாடி எடுத்திட்டு வா.” என்றவர், அவன் எடுத்து வந்து கொடுத்த கண்ணாடியை அவள் முன்பு காட்டினார்.
“நீயே கண்ணாடியில பாரு. எங்க ரத்தம்?” அவர் சொல்ல… மெல்ல கண் திறந்து பார்த்தவள், பிறகு வேகமாகக் கண்ணாடியை வாங்கி அதில் தன்னை ஆராய்ந்தாள்.
ரத்தம் இல்லை என்பது தெளிவான பிறகே அமைதியானாள். ஆனால் குழலியை விடவில்லை. வருண் அவள் குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.
அவளைச் சமாதானம் செய்து குழலி படுக்க வைக்க…. “நீங்களும் இங்கயே இருங்க.” என்றவள், அவரின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
நந்தாவும் வருணும் ஹாலில் வந்து உட்கார்ந்தனர். இத்தனை சத்தத்துக்கும் தாரணி எழுந்து வரவில்லை.
சாதரணமாகவே அவள் உறங்கும் போது எழுப்புவது கடினம். அதுவும் முன்தின இரவு தூக்கம் இல்லாததால்…. அலுப்பில் நன்றாக உறங்கி இருந்தாள்.
“ரொம்பப் பயந்து போய் இருப்பா போலிருக்கே. இப்ப என்ன டா பண்ண போற?” வருண் கேட்க,
“சரி பண்ணிடலாம். நீயும் போய்ப் படு.” என அவனை அறைக்குள் அனுப்பியவன், அங்கயே உட்கார்ந்து சிறிது நேரம் யோசித்துக் கொண்டு இருந்தான்.
அவன் திரும்ப அறைக்குள் வந்த போது, கயல்விழி உறங்கி இருந்தாள். அவள் பக்கத்தில் குழலி அமர்ந்து இருந்தார். தானும் சென்று அவர்கள் அருகில் உட்கார்ந்தவன், கயல்விழியின் நெற்றியை மிருதுவாக வருட…. அவளின் உடல் சுடுவதை உணர்ந்தான்.
“லேசா ஜுரம் இருக்குமா…” என்றவன் எழுந்து, அவளை ஒரு குழந்தையைப் போல் தூக்கி சென்று கட்டிலில் படுக்க வைத்தான்.
“நீங்களும் இவ பக்கத்திலேயே படுத்துக்கோங்க மா.” என்றவன், மற்றொரு அறையில் சென்று படுத்துக் கொண்டான்.
காலையில் எழுந்ததுமே நந்தா சென்று தன் மனைவியைப் பார்க்க… அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள். குழலியுமே உறங்கிக் கொண்டு இருந்தார். அவர்கள் உறக்கத்தைக் கெடுக்காமல் வெளியே வந்துவிட்டான்.
நந்தா அவனே ஒரு காபி போட்டு குடித்துவிட்டு, கயல்விழியின் வீட்டிற்குத் தொலைபேசியில் அழைத்தான்.
அன்பரசுதான் எடுத்தார். அவரிடம் தான் பத்மாவிடம் பேச வேண்டும் என்றதும், அவர் போன்னை தன் மனைவியிடம் கொடுத்துவிட்டு விலகி நின்று பேசுவதைக் கவனித்தார்.
“நல்லா இருக்கீங்களா அத்தை.”
“நல்லா இருக்கேன் மாப்பிள்ளை. அங்க எல்லோரும் சவுக்கியமா?”
“கயலுக்குத்தான் லேசா காய்ச்சல் அடிக்குது. நீங்க எந்த டாக்டர்கிட்ட பார்ப்பீங்க?” என்றதும், பத்மா விவரம் சொல்ல,
“சரி நான் பார்த்துகிறேன்.” என நந்தா போன்னை வைக்கச் செல்ல,
“நான் வந்து கயலை பார்க்கட்டுமா?” எனப் பத்மா அவனிடம் அனுமதி கேட்க,
“உங்க பெண்ணை நீங்க வந்து பார்க்கிறதுக்கு என்னை ஏன் கேட்குறீங்க? நீங்க வாங்க.” என நந்தா போன்னை வைத்து விட்டான்.
அவன் குளித்துக் கிளம்பி வந்தபோதுதான் வீட்டினர் ஒவ்வொருவராக எழுந்து வந்தனர்.
கவலையாகப் பார்த்த மகனிடம், “இப்ப காய்ச்சல் இல்லை. எழுந்து குளிக்கப் போயிருக்கா.” எனக் குழலி தகவல் சொல்ல..
“சரிமா பார்த்துக்கோங்க, சீக்கிரம் வந்திடுறேன்.” எனச் சொல்லிவிட்டு வெளியே சென்றான்.
அவன் பார்க்க போனது கயல்விழிக்கு மருத்துவம் செய்த வைத்தியரை. பார்த்ததுமே அவர் அனுபவம் வாய்ந்தவர் எனத் தெரிந்தது.
அவன் தன்னை அறிமுகம் செய்துகொள்ள. “தெரியுமே, நம்ம கயல் பெண்ணைக் கல்யாணம் பண்ணி இருக்கீங்கள்ள… கேள்விப்பட்டேன்.” என்றவர், அவனைப் பார்த்து புன்னகைக்க.
“ஆமாம் இப்ப கயல் விஷயமாத்தான் உங்களைப் பார்க்க வந்தேன். எனக்கு அவளைப்பத்தி எல்லாமே தெரியும். அவளுக்கு எந்த மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுக்கணும். அதைப் பத்தி உங்ககிட்ட பேசிட்டுப் போகத்தான் வந்தேன்.” என்றான்.
“இங்க பாருங்க சார். அந்தப் பொண்ணுக்குப் பாதிப்பு மனசுக்குள்ள. ஆனா வைத்தியம் பண்றது என்னமோ உடம்புக்கு. அப்புறம் எப்படிச் சரி ஆகும் சொல்லுங்க?”
“ஏற்கனவே கயல் ரொம்ப இரக்க சுபாவம். அந்தப் பையன் சாவேன்னு மிரட்டினதும், கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா. அவள் எங்க மனசு மாறிட போறாளோன்னு, அவன் அவசரமா கூடிட்டுப் போய்த் தாலியை கட்ட…. இவங்க வீட்ல விஷயம் தெரிஞ்சு, அவ கண்ணு முன்னாடியே அந்தப் பையனை வெட்டிட்டாங்க.”
“சினிமாவுல வெட்டு குத்து வந்தாலே, கண்ணை மூடிக்கிற பொண்ணு அது. நேர்ல பார்த்தா கேட்கவும் வேணுமா? அதோட மனசாட்சியும் உள்ள பொண்ணு, அதுதான் குற்ற உணர்வும் சேர்ந்து இப்படி ஆகிடுச்சு.”
“நானும் நிறையத் தடவை சொல்லிட்டேன். நீங்க ஒரு மனநல மருத்துவர்கிட்ட காட்டணும்ன்னு. ஆனா விஷயம் வெளிய வந்திடுமோன்னு, அவங்க வீட்டு ஆளுங்க நான் சொல்றதையே காதுல வாங்க மாட்டேங்கிறாங்க.”
“நானும் போய்க் காய்ச்சலுக்கு ஒரு ஊசியைப் போட்டுட்டு வந்திடுவேன். ஆனா இப்படியே விடுறது நல்லது இல்லை. சீக்கிரம் டாக்டரை பார்த்தா நல்லது.”
“சரி டாக்டர், ரொம்பத் தேங்க்ஸ். நான் கிளம்புறேன்.”
“எனக்குத் தெரிஞ்ச டாக்டர் யாரையாவது சிபாரிசு பண்ணவா?”
“வேண்டாம், நான் அவளை மெட்ராஸ்க்கு கூடிட்டுப் போய்க் காட்டிகிறேன்.”
“அது இன்னமும் நல்லது. கயல் இப்ப இருக்கிற நிலைக்கு, இடம் மாற்றம் ரொம்பவே தேவை. அதோட பழி வாங்குறேன்னு எவனாவது கிளம்புவான். இன்னும் நிறைய ஜாதி வெறி பிடிச்சவங்க இருக்காங்க. எதுக்கும் பத்திரமா பார்த்துக்கோங்க.”
“தேங்க்ஸ் டாக்டர் வரேன்.” என்றவன், ஒரு முடிவுடன் தன் அலுவலகத்திற்குச் சென்றான்.
error: Content is protected !!