“நீயின்றி நானில்லை..” எனும் நிலையில் இருந்தான் அர்ஜூன். அந்த நிமிடம் வரை அவளன்றி அணுவும் அசையவில்லை அவனுக்கு. பிணக்குகள் தானே பிணைப்பை அதிகப் படுத்துகின்றன. பிணக்குகளுக்கு பின் மலரும் காதலும், அன்பும் தனித்துவமானது. அவளையே காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்கள் தூக்கத்திற்கு கெஞ்ச, அவள் அருகில் இருக்கிறாள் என்ற ஆனந்ததுடனே உறங்கிப் போனான் அர்ஜூன்.
நடு ஜாமத்தில் முழிப்பு வந்த வராஹினிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அவனுக்காக காத்திருந்து, அப்படியே உறங்கிவிட்டது பிறகு தான் புரிந்தது. விடிவிளக்கின் ஒளியில் சுற்றும் முற்றும் பார்த்தவள், சோபாவிற்கு அருகில் பார்க்க, அங்கே அர்ஜூன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவனைப் பார்த்தது தான் மாயம், மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்த அனைத்து எண்ணங்களும் அணிவகுத்து நிற்க, அந்த தூக்கத்திலும் நடந்த விஷயங்கள் நினைத்து கண் கலங்கியது அவளுக்கு.
அந்த மங்கிய இருளும் அவளுக்கு பயத்தைக் கொடுக்க, அவனுக்கு அருகில் சென்று, அவனை இறுக்கி அணைத்தபடி படுத்துக் கொண்டாள்.அந்த இறுக்கம் அவள் மன இறுக்கத்திற்கு மருந்தாய் அமைந்தது என்னவோ உண்மை. அவன் நெஞ்சில் தலை வைத்துப் படுத்திருந்தவளுக்கு, அவனின் இதயத் துடிப்பு தெளிவாய் கேட்க, மேலும் அவனுள் புதைந்து போனாள். உறக்கத்திலும் அவளை உணர்ந்து கொண்டானோ என்னவோ, அவனின் தூக்கம் லேசாக கலைய, அப்போது தான் புரிந்தது அவனுக்கு, அது கனவில்லை, நிஜமாகவே அவள் தன்னருகில், தன் நெஞ்சில் தலை வைத்திருக்கிறாள் என்று.
ஏனோ பேரானந்தமாக இருந்தது அவனுக்கு.தூக்கம் கலைந்தாலும், தூங்கிக் கொண்டிருப்பவனைப் போல், கண்களைத் திறாக்காமல் இருந்தான். எங்கே கண்களைத் திறந்தால் தள்ளிச் சென்று விடுவாளோ என்ற பயம் தான் அவனுக்கு.
“சாரி ..” என்றாள் மெதுவாக. அவன் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்து அவள் போக்கில் பேசிக் கொண்டிருந்தாள். பஞ்சு குவியலாய் ஒருத்தியை கைகளுக்குள் வைத்துக் கொண்டு, எதுவுமே உணராதவன் போல் இருக்கும் கொடுமையெல்லாம் தனக்கு மட்டும் தான் போல என்று நொந்து கொண்டான் அர்ஜூன்.
அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், என்ன நினைத்தாலோ… திடீரென்று அவன் முகமெங்கும் முத்தமிட, சொக்கித்தான் போனான். அவளின் அருகாமை அர்ஜூனுக்கு பேச முடியாத ஒரு இன்ப அவஸ்தையாக மாறிக் கொண்டிருந்தது.
வராஹினியோ தன்னுடைய உணர்வுகளை எப்படி கடத்துவது என்று தெரியாமல், முத்தத்தின் மூலம் கடத்திக் கொண்டிருந்தாள் அவளின் முழு மனதையும்.
“ஒரு முத்தத்துக்கு நான் அவ்வளவு யோசிச்சேன்… இவ என்ன இந்த போடு போடுறா..? ஆனா, இது கூட ஒரு கிக்கா, நல்லாத்தான் இருக்கு அர்ஜூன். காதலிக்கப் படுறதுல கூட இவ்வளவு சந்தோசம் கிடைக்குமா என்ன..?” என்று நினைத்தவன், தூக்கத்தில் அணைப்பவன் போல், அவளை இறுக்கி அணைத்துக் கொள்ள, அவனில் சந்தோஷமாக புதைந்து கொண்டவள், மீண்டும் உறங்கிப் போனாள்.
“என் தூக்கத்தை கெடுத்துட்டு எப்படி தூங்குறா பாரு..” என்று செல்லமாய் அலுத்துக் கொண்டவனுக்கு, மனதிற்குள் அப்படி ஒரு நிறைவு. அந்த நிறைவு விடியலை நோக்கி காத்திருந்தது.
நன்றாக விடிந்த பிறகு தான் கண்விழித்தாள் வராஹினி. முழித்தவள் சோபாவில் இருக்க…
“என்ன..? அர்ஜூன் சார் இங்க இருந்தாரே..? ஆளைக் காணோம்..?” என்று யோசித்தபடி அவனைத் தேடித் போக, அவனோ அவனுடைய அறையில் உறங்கிக் கொண்டிருந்தான்.
‘இல்லையே, அங்க ஹால்ல தான படுத்திருந்தார். நானும் நைட் அவர் பக்கத்துல தான படுத்திருந்தேன். ஒரு வேளை அது கனவா..?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
“இல்லை, கண்டிப்பா கனவு இல்லை..!” என்றாள் உறுதியாக.
“உனக்கு வேற வேலை இல்லை. இப்ப இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியமா..? உன்னைப் பார்த்தா என்ன சொல்லப் போறாரோ.. அதை முதல்ல யோசி..” என்றது மனம்.
இவள் புலம்பல்களை கேட்டாலும் கேட்காதவன் மாதிரி… அப்போது தான் தூக்கத்தில் இருந்து எழுபவனைப் போல் எழுந்தான் அர்ஜூன். எழுந்தவன் அங்கு ஒருத்தி நிற்பதையே சட்டை செய்யாமல் பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான்.
“என்ன இவரு..? என்னைக் கண்டுக்காம போறாரு..?” என்று வாய்விட்டு புலம்ப,
“ரைட்டு..! அவர் வந்த உடனே காலைப் பிடிச்சுட வேண்டியது தான்..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வெளியே வந்த அர்ஜூன் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு சாதரணமாக நடமாடினான்.
“அர்ஜூன் சார்..!” என்றாள் தயக்கமாக. அவன் அமைதியாக இருக்கவும்,
“சார்…ஏங்க…” என்றாள் மீண்டும். பிறவி செவிடன் போல் நடந்து கொண்டான் அர்ஜூன்.
“வாத்தி… காது கேட்குதா இல்லையா..? நான் போனது தப்புத்தான். அதுக்காக இப்படி முகத்தைத் திருப்பனும்ன்னு அவசியமில்லை..” என்றாள் வராஹினி.
“உன்னை போக சொன்னதும் நானில்லை… வர சொன்னதும் நானில்லை..” என்றான் பட்டென்று.
“அப்போ, நான் ஏன் வந்தேன்னு கேட்குறிங்களா..?நானா வந்ததுல உங்களுக்கு இளக்காரம்..” என்றாள் கண்கள் கலங்க.
“ஒரு காரமும் இல்லை. காலையிலேயே எதுக்கு கண்ணைக் கசக்குற. நீ தான் அவ்வளவு டயலாக் பேசுன..?” என்றான் அர்ஜூன்.
“தப்புத்தான்..!” என்றாள் அவன் கண்ணை நேராக பார்த்தபடி. அவளின் நேர் பார்வையைத் தான் அவனால் எதிர்நோக்க முடியவில்லை. அவளை நேராகப் பார்த்தாலே பாகாய் உருகும் மனதை அடக்க வழி தெரியாமல் தான் இப்படி போக்கு காட்டிக் கொண்டிருக்கிறான்.
“தப்புத்தான்னு சொல்லிட்டா எல்லாம் சரியாகிடுமா..?” என்றான்.
“வேற என்ன பண்ணனும்..? நான் தான் நைட் சாரி கேட்டேனே..” என்றாள் .
“என்னது? நைட்டு சாரி கேட்டியா..? நல்ல கதையா இருக்கே.. சோபாவை ஆக்கிரமிச்சு நல்லா தூங்கிட்டு இருந்த. நீ எப்போ சாரி கேட்ட..?” என்றான் புருவத்தை உயர்த்தியபடி.
“அது வந்து…. நீங்க அங்க..நான் பக்கத்துல…சாரி..” என்று திணற,
“என்ன சொல்ல வர்ற இப்போ..? காலையிலையே டென்சன் பண்ணாம கிளம்பு வராஹினி..” என்றான் அர்ஜூன், கொஞ்சம் வரவழைத்துக் கொண்ட கடுப்புடன்.
‘அப்போ நைட்டு நடந்ததெல்லாம் கனவா கோபால்…’ என்ற ரீதியில் அவள் குழம்பிப் போய் நின்றாள். அவளின் குழம்பிய முகத்தைப் பார்த்தவனுக்கு குதூகலமாய் இருந்திருக்க வேண்டும். மந்தகாசமாய் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
“இன்னும் எதுக்கு நிக்கிற..?” என்றான்.
“இந்த வீட்ல எனக்கு நிற்க கூட உரிமையில்லையா..?” என்றாள் வராஹினி.
“யார் சொன்னது..? நீ.. நிற்கலாம், நடக்கலாம், ஓடலாம்.. ஏன் படுத்து கூட உருளலாம்..ஆனா, அதையெல்லாம் ஓரமா நின்னு செய்யணும். இப்படி நடு வீட்ல நின்னு பண்ண கூடாது..” என்றான் கிண்டலாய்.
“இவருக்கு இப்படியெல்லாம் பேச வருமா என்ன..?”என்று அவள் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, அவனோ அதையும் கண்டு கொள்ளாமல் இருந்தான்.
“நான் திரும்பி வந்ததுல உங்களுக்கு விருப்பமில்லாத மாதிரி தோணுது..” என்றாள்.
“நான் ஆமான்னு சொன்னா என்ன செய்றதா உத்தேசம்..?” என்றான் திரும்பி நின்று.
அவனை நேருக்கு நேராய் முறைத்தவள்,
“ஆமான்னு சொன்னாலும் இனி திரும்பிப் போற உத்தேசமெல்லாம் எனக்குக் கிடையாது…” என்று ஒரு வெட்டு வெட்டியவள், போகும் போது அவனை வீம்புக்கென்றே நெஞ்சோடு இடித்து விட்டு சென்றாள்.
“காலையிலேயே மனுஷனை உசுப்பேத்துறா…” என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க,
சென்றவள் திரும்பி நின்று,
“யோவ்..! வாத்தி.. நான் ஏதோ புரியாம போயிட்டேன். தப்புன்னு தெரிஞ்ச உடனே திரும்பவும் வந்துட்டேன். கணக்கு அவ்வளவு தான்.. அதையே மனசுல வச்சுட்டு, என்னை எப்ப பார்த்தாலும் முறைக்கிறது, அப்படியே கோபத்துல புசு புசுன்னு மூச்சு விடுறது, பல்லைக் கடிக்கிறது.. இந்த வேலையெல்லாம் வச்சுகிட்டிங்க… இப்பவாவது இடியோட தான் விட்டேன். அடுத்து அடி, கடி எல்லாமே கிடைக்கும். பார்த்து ஜாக்கிரதை..” என்று சிலுப்பிக் கொண்டு போனாள்.
அவள் கொஞ்சம் வருத்தபட்டு அவனிடம் மீண்டும் சாரி கேட்பாள்… அந்த சாக்கில் அவளை சமாதானப் படுத்தலாம் என்று நினைத்திருந்த அர்ஜூனுக்கு, அவளின் பேச்சைக் கேட்ட பிறகு எங்காவது முட்டிக் கொள்ளலாம் போல் வந்தது.
ஆனால் அதுவும் அவனுக்குப் பிடித்து தான் இருந்தது. தன்னிடம் கெஞ்ச, கொஞ்ச, மிரட்ட, வழிய என்று அனைத்திற்கும் ஒரு உறவு இருப்பது அவ்வளவு சுகமாக இருந்தது அவனுக்கு.
நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருக்க, விடுமுறை முடிந்து வராஹினியும் கல்லூரி இறுதியாண்டு செல்லத் தொடங்கி ஒரு மாதம் ஆகியிருந்தது.
முன்போல் இல்லையென்றாலும், அவர்கள் உறவில் அதற்கு மேல் ஒரு பிணைப்பை அர்ஜூன் உருவாக்கவில்லை. அவளின் அருகாமையை ரசிக்க நினைத்தவன், அவளை ருசிக்க நினைக்கவில்லை போலும். வராஹினியும் அவன் அருகில் இருப்பதே பெரிய சுகம் என்று எண்ணிவிட்டாள். கவனம் முழுவதையும் படிப்பில் திருப்பி விட்டிருந்தான் அர்ஜூன். அவனுக்கும் வேலைகள் விடாமல் அவனை உள்ளிழுக்க, அதில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தான்.
ரஞ்சன் இப்போது ரூபினியின் கட்டுப்பாட்டில் இருந்தான். அவளிடம் அவனின் எந்த வேலையும் எடுபடவில்லை. கடைசியில் அடங்கிய காளையாகிப் போனான். அதற்காக குணமெல்லாம் மாறி நல்லவனாக மாறிவிட்டான் என்று சொல்ல முடியாது. இப்போது வரை அர்ஜூன் அவனுக்கு ஆகாதவன், பிடிக்காதவன் தான். அர்ஜூனுக்கும் அப்படியே. இவர்களின் உறவை யாராலும் கடைசி வரை சமப்படுத்த முடியாது.
அன்று காலேஜ் மரத்தடியில் அமர்ந்தவளுக்கு ஒரே யோசனை. அவளின் அருகில் இருந்த மிதிலா அவளையே பார்த்துக் கொண்டிருக்க, வராகினியோ அவளின் உலகத்தில் மூழ்கிப் போயிருந்தாள்.
“மனசே சரியில்லை மிதிலா..! என்னவோ எதுவுமே என்கிட்ட இல்லாத மாதிரி ஒரு பீல்..” என்றாள்.
“ஏன் அப்படி சொல்ற..?” என்றாள் புரியாமல்.
“இந்த அர்ஜூன் சார் மனசுல என்ன நினைக்கிறார்ன்னு கண்டுபிடிக்கவே முடியலை. எனக்கு என்னமோ பயமா இருக்கு..” என்றாள்.
“நீயென்ன லூசா..? அவரை நினைச்சு உனக்கென்னடி பயம்..? அவர் உன் புருஷன் தானே..” என்றாள்.
“அது தான் பயமே..! ஏற்கனவே என்னோட படிப்பு முடிஞ்ச உடனே டிவேர்ஸ் பண்ணிக்கலாம்ன்னு சொன்னார். ஆனா, அப்பவே நான் மாட்டேன்னு சொல்லிட்டேன். அதுக்கு அப்பறம் நடந்த சின்ன பிரச்சனையில அம்மா வீட்டுக்கு போயிட்டு, திரும்பி வந்தேன். அப்பவும் அவர் சரியா எதுவும் பேசலை. இதோ… ஒரு மாசத்துக்கும் மேல ஆயிடுச்சு. இப்போ வரைக்கும் காலையில பார்த்தா குட்மார்னிங்… நைட் குட்நைட்.. இப்படித்தான் போகுது வாழ்க்கை… ஒருவேளை அவருக்கு முன்னாடி சொன்ன கண்டிஷன்ஸ் எல்லாம் மனசுல இருக்குமோ… அதனால தான் விலகி விலகிப் போறாரோன்னு தோணுது மிதிலா..” என்றாள் அடைபட்ட குரலுடன்.
“இதென்னடி புதுக்கதையா இருக்கு..?” என்றாள் மிதிலா.
“இது புதுக்கதை எல்லாம் கிடையாது. ரொம்ப பழைய கதை. நானும் பொறுமையா இருக்கேன். ஆனா, கொஞ்ச நாளா என்னோட பொறுமையும் போய்கிட்டே இருக்கு..” என்றாள்.
“படிக்கிற உன்னை தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு கூட நினைச்சிருக்கலாம்..” என்றாள் மிதிலா.
“நான் அப்படியும் யோசிச்சேன்..! ஆனா, ஏதோ ஒன்னு அவர் மனசுல இருக்கு. அது என்னன்னு தான் தெரியலை..” என்றாள்.
“டிவேர்ஸ் பன்றதுன்னாலும் உன்னோட சம்மதமில்லாம எதுவும் பண்ண முடியாது. அர்ஜூன் சார் அப்படிப்பட்டவரும் கிடையாது. நீயா எதையாவது நினச்சு, குழப்பிக்காத..” என்றாள் மிதிலா.
“மூளைக்கு புரியுது. ஆனா, மனசு தான் ஏத்துக்க மாட்டேங்குது. இப்பல்லாம் பேச்சு கூட குறைஞ்சு போய்டுச்சு..” என்றாள்.
“சரி சரி.. உன்னோட சோக கீதத்துல என்னோட மெகந்தி பங்க்ஷனுக்கு வராம இருந்துடாத. நான் நாளைக்கு கண்டிப்பா காலேஜ் வர மாட்டேன். அடுத்து மூணு நாள் காலேஜும் லீவு தான். கண்டிப்பா அர்ஜூன் சாரோட நீ வந்துடனும்..” என்றாள் மிதிலா.
“நீயாவது இன்ஜினியரிங் முடிச்சுட்டு மேரேஜ் பண்ண வேண்டியது தானடி..” என்றாள்.
மிதிலாவிற்கும் திருமணம் ஏற்பாடாகியிருந்தது. மாப்பிள்ளை வீட்டில் திருமணத்தை முடித்துவிட்டு படித்து கொள்ளட்டும் என்று சொல்ல, மிதிலாவின் வீட்டிலும் நல்ல சம்பந்தத்தை விட மனமில்லாமல் சம்மதம் சொல்லியிருந்தனர்.
வகுப்பிற்கு வரும் போதே கோபத்துடன் தான் வந்தான் அர்ஜூன். வந்தவன் பாடத்தை ஆரம்பிக்க, வராஹினியோ அவனைப் பார்க்கும் வேலையை ஆரம்பித்தாள். அவள் அர்ஜூனின் மனைவி என்று அங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும்.
தெரிந்து கொண்டே வம்பு செய்யும் ஒரு கூட்டமும் இருந்தது. அவர்களுக்கு எப்போதுமே வராஹினி மேல் பொறாமையுண்டு. அவளுக்கு பின்னால் அமர்ந்து அவளின் கோபத்தைக் கிளப்புவதும், அதில் வராஹினி கோபத்தில் கத்துவதும், அர்ஜூன் அவளைக் கத்தி கிளாசை விட்டு வெளியே அனுப்புவதும் வாடிக்கையாக நடந்து கொண்டிருந்தது. அன்றும் அப்படித்தான்.
“அர்ஜூன் சார்க்கு இந்த ஷேர்ட் செம்மையா இருக்குல்ல.. அவர் ஹேர் ஸ்டைலை பாரேன்.. இன்னைக்கு செம்ம ஹேன்ட்சமா இருக்காருல்ல..என்ன சொல்லு, அவருக்கு இந்த ராஹினி கொஞ்சம் ஓவர் தான். அவரோட மேன்லி லுக் எங்க..? இந்த ராஹினி லுக் எங்க..?” என்று பின்னால் இருந்தவள் வராஹினியின் பொறுமைக்கு பொங்கல் வைத்துக் கொண்டிருந்தாள்.
“இவர் கொஞ்சம் அவசரப் படாம இருந்திருக்கலாம்..! கொஞ்சம் நல்ல பிகரே கிடைச்சிருக்கும்..” என்று மீண்டும் வம்பிழுக்க, அவ்வளவு தான்… ராஹினியின் பொறுமை பறந்தது.
“அமைதியா இரு வராஹி..” என்று மிதிலா சொல்ல சொல்ல கேட்காமல்,
“ஏன்..? நீ கூட ட்ரை பண்ணேன். சார் இப்ப கூட அவைலபிள் தான். நான் வேணும்ன்னா ரெக்கமென்ட் பண்ணவா..?” என்றாள் கோபமாக.
“வராஹினி..! வாட் இஸ் திஸ்.. இதென்ன கிளாஸ் ரூமா..? இல்லை உன்னோட வீடா..” என்றான் அர்ஜூன் கோபமாக.
“ஆமா, எப்ப பார்த்தாலும் இவனுக்கு நான் பேசுறது மட்டும் தான் கண்ணுக்குத் தெரியும். வந்துட்டான்.. உலகத்துலேயே இவன் தான் பெரிய இந்த வாத்தியார் மாதிரி…” என்று மனதிற்குள் நினைத்தவள், மரியாதையெல்லாம் காற்றில் பறக்க விட்டிருந்தாள்.
“இப்ப என்ன சார்..? அடுத்து என்னைய வெளிய போக சொல்லுவிங்க. அதை நானே பண்ணிடுறேன். இதென்ன புதுசா..?” என்று பின்னால் இருந்தவர்களையும், அவனையும் முறைத்தவள் அந்த கிளாசில் இருந்து வெளியேறினாள்.
“மனசுல பெரிய மன்மதன்னு நினைப்பு. அவளுக அவரை சைட் அடிக்கிறாங்கன்னு தெரிஞ்சும் அப்படியே தெரியாதவர் மாதிரியே நடிப்பார். நடிக்கத்தான செய்வார்.. பொண்டாட்டி பார்க்கிறதையே தெரியாத மாதிரி நடிக்கிறவருக்கு இதெல்லாம் என்ன புதுசா..? இதுல என்னைய வேற கத்த வேண்டியது. இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்றேன்..” என்று உறுதி எடுத்துக் கொண்டாள்.
கிளாஸ் முடிந்த உடன், அந்த வம்பு செய்யும் மாணவிகளை வெளியே அழைத்தான் அர்ஜூன்.
“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க..? நானும் போனா போகுதுன்னு பார்த்தா, ரொம்ப எல்லை மீறிட்டு இருக்கீங்க. நீங்கதான் தினமும் அவளை வார்த்தையால உசுப்பேத்துறிங்கன்னு எனக்கு ஒன்னும் தெரியாம இல்லை. உங்களுக்கு இது தான் லாஸ்ட் வார்னிங். இன்னொரு தடவை கிளாஸ்ல இப்படி நடந்து கிட்டிங்க… உங்க பேரண்ட்ஸ்கிட்ட இன்பார்ம் பண்ண வேண்டியது வரும்.. மைண்ட் இட்..!” என்றவன்…
“அன்ட்..ஷீ இஸ் மை வைப்.. அவ எப்பவுமே எனக்கு பேரழகி தான். அது உண்மை தான்னு உங்களுக்கும் தெரியும். அந்த லூசுக்குத் தான் தெரியலை… அதனால நீங்க தப்பிச்சிங்க..” என்றபடி சென்றான். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த குரு கோவிந்தனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
வீட்டிற்கு சென்ற பிறகும் கோபமாகத் தான் இருந்தாள். அர்ஜூன் அன்று கொஞ்சம் லேட்டாக வர, வந்த உடனே பிடித்துக் கொண்டாள்.
“உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க..? இனிமேல நான் இந்த காலேஜ்ல படிக்கிறதா இல்லை. எனக்கு டிசி குடுங்க. நான் வேற எங்கையாவது ஜாயின் பண்ணிக்கிறேன்…” என்றாள்.
அவன் முறைக்க,
“உங்களுக்கு இப்படி முறைக்கத் தான் தெரியும். வேற என்ன தெரியும். அவங்க என்னெல்லாம் பேசுறாங்க தெரியுமா..? ஆனா, நான் திருப்பி பேசுனா தப்பு. எல்லார் முன்னாடியும் என்னை அவமானப்படுத்துறதே உங்களுக்கு வேலையா போச்சு..” என்று கண்கள் கலங்க அவள் பேசிக் கொண்டிருக்க…
“லூசு மாதிரி பேசாத வராஹினி..!” என்றான் அர்ஜூன்.
“நான் லூசு தான்..! லூசா இருக்கப் போய் தான லூசாட்டம் பேசுற உங்க கூட இருக்கேன்..” என்றாள்.
“யாரு நான் லூசா..? ஏண்டி சொல்ல மாட்ட..?” என்றான்.
“அவங்க சொல்ற மாதிரி உங்களுக்கு நான் மேட்ச் இல்லைன்னு நினைக்கிறிங்களோ என்னவோ..? அதான் எப்ப பார்த்தாலும் ஒட்டாம திரியறிங்க..” என்றாள்.
“எந்த ஒட்டுதலை சொல்ற இப்போ..” என்றவன், அவளை நெருங்கி நின்று…
“இந்த ஒட்டுதல் போதுமா..?” என்றான்.
“ங்கான்..!” என்று அவள் பார்த்திருக்க,
அவளை இழுத்து தன்மேல் போட்டவன்…”இந்த ஒட்டுதல் போதுமா..?” என்று கேட்க, அவளுக்குத் தான் பேச்சே வராமல் நக்கு ஒட்டிக் கொண்டது.
“என்னடி பேச்சையே காணோம்..! இவ்வளவு நேரம் விடாம பேசிட்டு இருந்த..?” என்றான்.
“நீங்க இப்படியெல்லாம் பண்ணினா எப்படி பேச்சு வரும்..?” என்றாள்.
“அப்போ இப்படி பண்ணினா தப்புங்கிற..?” என்றவன் அவளை விட…
“நான் எப்போ அப்படி சொன்னேன்..!” என்று அவள் வேகமாய் சொன்ன விதத்தில் அவனுக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது. அவள் அவன் சிரிப்பதை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்க,
“உனக்கு என்ன பிரச்சனை..? யார் என்ன சொன்னாலும், எப்படி உன்னை சீண்டினாலும், நீ தான் எனக்கு பொண்டாட்டி. அதை யாராலும் மாத்த முடியாது. அதே மாதிரி, எனக்குப் பிடிச்ச என்னோட பேரழகியும் நீதான். அவங்க உன்னை கோபப்படுத்தனும்ன்னு தான பேசுறாங்க. நீ கோபப்படாம இதை கூலா ஹேண்டில் பண்ணியிருந்தா, அவங்களே தன்னால அடங்கிருப்பாங்க..” என்றான்.
அவள் தலையை ஆட்ட,
“என்ன புரியுதா..?” என்றான்.
“நீங்க இப்படி சொல்லி புரிய வச்சிருந்தா எப்பவோ புரிஞ்சிருக்கும்..” என்றாள் அவன் சட்டை பட்டனை திருகியபடி.
அவன் அணைத்திருப்பதை தான் சொல்கிறாள் என்று புரிந்தவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பை அடக்க முடியவில்லை.
‘இவ என்னை ஒழுங்கா இருக்க விட மாட்டா போல இருக்கே..!’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே.. எக்கி அவன் இதழ்களில் முத்தமிட்டவள்,
“வாத்தி… அவளுங்க சொன்ன மாதிரியே நீங்க ஹேண்ட்சம் தான்..! அதுவும் என்னோட ஹேண்ட்சம். அதான் அவங்க பேசுனா பொறாமை வருது…!” என்றவள், அவனிலிருந்து விலகி ஓடி விட்டாள்.
“சரித்தான்..! இந்த லூசு என்னை கூடிய சீக்கிரம் லூசாக்கிடும்..!” என்று மந்தகாசமாய் சிரித்துக் கொண்டு நின்றான்.