இந்துவை நினைத்துக் கொண்டே தளர்ந்து போய் தன்னுடைய அறையில் படுத்திருந்த இன்பனுக்கு மனமெல்லாம் ரணமாய் வலித்தது.
அவன் செய்த காரியத்தின் விளைவு இப்போது பூதாகரமாய் தெரிந்தது. தன்னுடன் சரிக்கு சரி வாயாடும் இந்துவை இப்போது அவனால் திமிர் பிடித்தவள் என்று நினைக்க முடியவில்லை. அவளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்க “இன்பா வெளிய வா பா. சம்பந்தி வீட்ல இருந்து வந்திருக்காங்க”, என்று அழைத்தாள் அம்பிகா.
சம்பந்தி என்றதும் இந்துவின் வீட்டினர் என்று எண்ணிய இன்பனுக்கு இந்து நடந்த அனைத்தையும் கிரி மற்றும் குணசேகரனிடம் சொல்லியதால் அவர்கள் சண்டையிட தான் வந்திருக்கிறார்கள் என்ற எண்ணம் தான் வந்தது.
கடவுளே எல்லாரையும் எப்படி எதிர்க் கொள்ளப் போறேன் என்று பயத்துடன் வெளியே வந்தான். அங்கே அவனுக்கு நிச்சயம் செய்திருந்த மஞ்சுவின் பெற்றோர்கள் தான் வந்திருந்தார்கள்.
“இவங்க தானா?”, என்று நிம்மதியானவன் “வாங்க”, என்று சொல்லி விட்டு சீனிவாசன் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.
மஞ்சு மற்றும் இன்பனின் திருமண விஷயம் பற்றி பேச தான் வந்திருந்தார்கள். அவர்கள் அவனுடைய திருமணத்தைப் பற்றியும் அஞ்சலி கிரியின் நிச்சயதார்த்ததைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்க இன்பனுக்கோ மனம் முழுவதும் இந்துவே இருந்தாள்.
இடையில் மஞ்சுவின் அப்பா ஏதோ கேட்டதற்கு கூட அவனால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. ஏனோ தானோவென்று அமர்ந்திருந்தான்.
அதே நேரம் கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள் இந்து. அவள் மனம் முழுவதும் விரக்தியின் உச்சத்தில் இருந்தது. மெதுவாக கடலை நோக்கி நடந்தாள். சாவை நோக்கிச் சென்று கொண்டே இருந்தாள்.
அப்போது ஒரு பெரிய அலை அவளை வாரிச் சுருட்ட தண்ணீருக்குள் அப்படியே மூழ்கி மேலே எழுந்தாள். அந்த உப்புத் தண்ணீர் அவள் வயிற்றுக்குள் இறங்க அவளோ ஆழ்ந்த மயக்கத்துக்கு சென்று கொண்டிருந்தாள்.
மஞ்சுவின் பெற்றோரிடம் இன்பன் ஏதோ பேசிக் கொண்டிருக்க அப்போது அங்கே தன்னுடைய வயதைக் கூட நினைக்காமல் ஓடி வந்த குணசேகரன் அங்கிருந்த யாரையும் கவனிக்காமல் இன்பனைத் தான் நெருங்கினார். அவருக்கு பின் கிரி உள்ளே வந்தான்.
“வாங்க சம்பந்தி, வாங்க மாப்பிள்ளை”, என்று சீனிவாசன் எழுந்து நிற்க அவர்கள் முகத்தில் இருந்த கோபத்தைக் கண்ட படி இன்பனும் எழுந்து நின்றான்.
இன்பனை நெருங்கிய குணசேகரன் அவன் சட்டையை கொத்தாக பற்றிக் கொண்டு “என் பேத்தி எங்க டா? அவளை எங்க கடத்தி வச்சிருக்க? உனக்கு நாங்க என்ன டா கெடுதல் செஞ்சோம்?”, என்று கேட்டார்.
அனைவரும் குழப்பத்தில் விழிக்க “என்ன இந்துவைக் காணுமா?”, என்று அதிர்ச்சியாக கேட்டான் இன்பன்.
“நடிக்காத டா. நீ தான் அவளைக் கடத்திருக்க? என் பேத்தியை எங்க கிட்ட கொடுத்துரு”
“சத்தியமா நான் ஒண்ணும் செய்யலை”
“பொய்யா சொல்ற?”, என்று கேட்ட படி அவர் அவனுடைய இரு கன்னத்திலும் அரைய மற்ற நேரமாக இருந்திருந்தால் அங்கே இன்பன் என்ற அரக்கன் உருவாகி இருப்பான். இப்போதோ அவர் கொடுத்த அத்தனை அரையையும் அமைதியாக வாங்கிக் கொண்டிருந்தான் இன்பன்.
“ஐயோ சம்பந்தி என்ன ஆச்சு? அவனை விடுங்க. என்ன தான் ஆச்சு? மாப்பிள்ளை என்ன தான் ஆச்சு? எதுக்கு உங்க தாத்தா என் மகனை அடிக்கிறார்?”, என்று சீனிவாசன் கேட்க அவர்களுக்கு டீ எடுத்து வந்த அம்பிகாவும் நடப்பதைக் கண்டு பதறிப் போனாள்.
“எங்க தாத்தாவா இருக்க போய் தான் இந்த கேவலமானவனை அடிச்சிட்டு இருக்கார். எனக்கு இருக்குற ஆத்திரத்துக்கு உங்க மகனைக் கொன்னு போட்டுருவேன். எங்க அக்காவை கடத்தி வச்சிருக்கான். எங்க அக்காவை விடச் சொல்லுங்க. உங்களுக்கு கோடிப் புண்ணியமா போகும்”, என்றான் கிரி.
“என்ன இந்துவை காணுமா? இன்பா என்ன டா இதெல்லாம்?”, என்று அம்பிகா கேட்க அப்போது அங்கே வந்த அஞ்சலியும் நடப்பதைக் கண்டு திகைத்துப் போனாள்.
மஞ்சுவின் பெற்றோரோ திகைப்பு மற்றும் குழப்பத்தின் உச்சத்தில் இருந்தார்கள். “இன்பா என்னப்பா இதெல்லாம்? என்ன தான் நடக்குது இங்க?”, என்று கேட்டார் சீனிவாசன்.
“அப்பா நிஜமாவே நான் ஒண்ணும் செய்யலைப்பா”, என்று சொன்ன இன்பன் தன்னுடைய கழுத்தில் படிந்திருந்த குணசேகரனின் கையை எடுத்து விட முயற்சி செய்தான்.
அவன் கழுத்தை மேலும் இறுக்கிப் பிடித்தவர் “பொய் சொல்லாத டா. ஏற்கனவே என் பேத்தியைக் கடத்தி அவ வாழ்க்கையையே நாசம் பண்ணினவன் தானே நீ? இன்னைக்கும் நீ தான் கடத்திருக்க?”, என்று மீண்டும் அவனை அடித்தார்.
“சத்தியமா நான் இந்துவைக் கடத்தலை. அவளை நிஜமாவே காணும்னா சீக்கிரம் போலீஸ் ஸ்டேஷன் போகலாம் வாங்க”, என்றான் இன்பன்.
“இன்பன் தயவு செஞ்சு கேக்குறேன். என் அக்கா எங்கன்னு சொல்லிரு. உன் தங்கச்சியைத் தான் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன்ல? அப்புறம் எதுக்கு என் அக்காவைக் கடத்தி வச்சிருக்க? நீ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு வந்திருக்க. பக்கத்து வீட்ல உள்ளவங்க சொல்லிட்டாங்க. எங்க அக்காவை திருப்பிக் கொடுத்திரு”, என்றான் கிரி.
“மாப்பிள்ளை நீங்க சொல்றது எல்லாம் உண்மையா? எங்க இன்பன் இப்படி எல்லாம் செய்ய மாட்டான் பா”, என்றார் சீனிவாசன்.
“எங்க அக்கா கிடைக்கிற வரைக்கும் நீங்க என்னை மாப்பிள்ளைன்னு சொல்லாதீங்க. எங்க அக்கா கண்ணுல கிடைச்சா தான் நான் உங்க மாப்பிள்ளை. அப்புறம் என்ன சொன்னீங்க, உங்க பையன் இப்படி எல்லாம் செய்ய மாட்டானா? அஞ்சு வருசத்துக்கு முன்னாடி உங்க மகன் என்ன கேடி வேலை செஞ்சான்னு தெரியுமா?”, என்று கேட்ட கிரி அஞ்சலி புறம் திரும்பி “எங்க அண்ணன் என்ன பண்ணினான்னு அடிக்கடி கேப்பியே? உங்க அண்ணன் என்ன செஞ்சான் தெரியுமா? எங்க விவசாய நிலத்தைக் கேட்டான். எங்க அக்கா தர முடியாதுன்னு சொன்னதுக்கு அவளை கடத்திட்டு போய்ட்டான். ஒரு நாள் நைட் முழுக்க அவளை கடத்தி வச்சு அடுத்த நாள் காலைல கொண்டு வந்து விட்டான். அப்ப எங்க அக்கா நிலைமையை யோசிச்சு பாரு. நைட் முழுக்க ஒத்தைல அநாதை மாதிரி அவளைக் கட்டி வச்சு…. சே… இவன் எல்லாம் மனுசனா? அது கூட பரவால்ல. கடத்துனவன் அவளை ஒண்ணும் செய்யலைன்னு நினைச்சு இவனை மன்னிச்சு விட்டுறலாம். ஆனா இவன் அடுத்த நாள் காலைல அவளை கொண்டு வந்து வீட்ல விட்டதுக்கு ஊர்க்காரங்க எல்லாம் அவ எவன் கூடவோ இருந்துட்டு வந்தாங்குற மாதிரி பேச வச்சிட்டான். அந்த ஊர் முழுக்க எங்க அக்காவை என்ன எல்லாம் பேசினாங்க தெரியுமா? கடைசில என்னையும் தாத்தாவையும் கொன்னுருவேன்னு மிரட்டி இடத்தை அவ கிட்ட இருந்து எழுதி வாங்கிட்டான். அந்த ஊர்க்காரங்க எங்க அக்காவை பேசின பேச்சுல அங்க இருக்க முடியாம வேற ஊருக்குப் போய்… எல்லாமே இவனால தான்…”, என்று கிரி முடிக்க அனைவரும் இன்பனா இப்படி என்று அதிர்ந்து போனார்கள்.
“அண்ணா நீயாண்ணா இப்படி செஞ்சது? உன் கூட பிறந்தவ நான் இருக்கும் போது இன்னொரு பொண்ணுக்கு உன்னால எப்படி இப்படி செய்ய முடிஞ்சது?”, என்று கேட்டாள் அஞ்சலி.
“எங்க மகனா இப்படின்னு என்னால நம்பவே முடியலையே? ஏண்டா உனக்கு இப்படி புத்தி போச்சு? உன்னையா நான் இந்த வயித்துல பெத்தேன்?”, என்று அழுத படி கேட்டாள் அம்பிகா.
“என்னை விட பெரிய அளவுல இவன் சாதிச்சப்ப என் மகன்னு பெருமை பட்டேன். ஆனா இவன் மத்தவங்க உயிரை குடிச்சு பெரிய ஆளா வந்திருக்கான்னு இப்ப தானே தெரியுது?”, என்று சொன்ன சீனிவாசன் இன்பனை நெருங்கி “இப்பவாது உண்மையை சொல்லு டா. அந்த பொண்ணை எங்க மறைச்சு வச்சிருக்க?”, என்று கேட்டார். அனைவரின் முன்னிலையிலும் கூனி குறுகி நின்ற இன்பன் “அப்பா சத்தியமா இந்துவை நான் கடத்தலைப்பா”, என்றான்.
“நீ தான் அவங்க வீட்டுக்கு போனதா சொல்றாங்களே டா?”
“அவ கிட்ட மன்னிப்பு கேக்க தான் பா போனேன். ஆனா கடத்தலை”
“மன்னிப்பா? இப்ப எதுக்கு அவ கிட்ட நீ மன்னிப்பு கேக்கணும்? வேற என்ன தீங்கு அந்த பிள்ளைக்கு செஞ்ச?”, என்று கேட்டார் சீனிவாசன்.