காதல் இருந்துச்சான்னு கேட்டா, எனக்கு சரியா தெரியலை. ஆனா உன்னை எதுக்காகவும் இழக்கக் கூடாதுன்னு உள் மனசுல ஒரு எண்ணம். முதல்ல என்னோட பிளானே, ரஞ்சனுக்கு பேசி முடிச்ச பொண்ணை கடத்துறது மட்டும் தான். அது கூட அவனால தான். சும்மா இருந்த என்னை அவன் தான் உசுப்பேத்தினான். உனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லைன்றது அன்னைக்கு பஸ்ல நீ சொல்லி தான் எனக்குத் தெரியும். அதுவரைக்கும், நான் மிரட்டுனதுனால தான் நீ வீட்டை விட்டு போனன்னு நான் நினைச்சுட்டு இருந்தேன். பஸ்ல உன்னைப் பார்த்த பிறகு தான் ஏதோ எனக்குள்ள ஒரு எண்ணம். ஆனா, அதோட தீவிரம் அப்போ எனக்குத் தெரியலை…” என்றான்.
“அப்பறம் எப்போ தெரிஞ்சது..?” என்றாள் ஆர்வமாய்.
பஸ்ஸை விட்டு இறங்குன உடனே, உன்கிட்ட கோபமா பேசிட்டு கிளம்புனாலும், என்னவோ எனக்குள்ள குறையற மாதிரி பீல் இருந்தது. ஆக்சுவலி, அன்னைக்கு அந்த டிரைவர் அங்கிள் தான் உன்னை கடத்த வந்தவரே. அப்பறம் என்னமோ என் மனசு கேட்கலை. அதான் நான் மறுபடியும் கால் பண்ணேன். உனக்கு ஹெல்ப் பண்ற மாதிரியே வந்தேன். எல்லார் முன்னாடியும் நீ என்னை லவ்வர்ன்னு சொல்வன்னு எனக்கு நல்லா தெரியும். நானும் அதையே பாலோ பண்ணலாம்ன்னு தான் இருந்தேன். அன்னைக்கு உன்னை பார்த்த உடனே ரஞ்சன் பார்வையும், அதுல இருந்த தீவிரமும் தான் என்னை யோசிக்க வச்சது. வர்றது வரட்டும்ன்னு உன் கழுத்துல தாலியை கட்டிட்டேன்.
அதுக்கு பிறகு என் மனசுக்குள்ள குற்ற உணர்ச்சியா இருந்தது. எங்களோட ஈகோல உன்னோட வாழ்க்கையை அழிக்கிறோமோன்னு. அதுவும் நீ படிச்சுட்டு இருக்குற பொண்ணுன்னு தெரிஞ்ச உடனே என் மேலேயே அப்படி ஒரு கோபம் எனக்கு…” என்றான் அர்ஜூன்.
“அதெல்லாம் உங்களோட கற்பனை வாத்தி… எனக்குத்தான் உங்களை ஏற்கனவே ரொம்ப பிடிக்குமே. அதனால தான் அன்னைக்கு பஸ்ல கூட உரிமையா தோள் சாஞ்சேன்..” என்றாள்.
“எனக்கு அது பின்னாடி தான் தெரிஞ்சது. குருவும், மிதிலாவும் காலேஜ்ல பேசிட்டு இருந்ததை எதேச்சையா கேட்டேன். இருந்தாலும் அன்னைக்கு நீ ரொம்ப ஓவரா தான் நடிச்ச..” என்றவன் சிரிக்க,
“ஹி..ஹி..! அது வந்து.. ஏற்கனவே காலேஜ்லயே நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசர்ன்னு கேள்வி பட்டிருக்கேன். நான் வந்து எப்பவும் போல உட்கார்ந்து, நீங்க கோபப்பட்டு மாறி உட்கார்ந்துட்டா… அதான் வேற வழியே இல்லாம அங்க உட்கார்ற மாதிரி உட்கார்ந்தேன்…நீங்க பிளான் போட்டு வந்தது எனக்கெப்படி தெரியும்.. அவ்வளவு நெருக்கடியான நிலைமையிலும், என் மனசுக்குள்ள தேவதைகள் எல்லாம் டான்ஸ் ஆடினாங்க.. உங்களைப் பார்த்த உடனே. அதை முகத்தில் காட்டாம இருக்க நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும்” என்றாள்.
“உனக்கு அந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு முதல்லயே தெரிஞ்சிருந்தா, நான் இவ்வளவு சிரமப் பட்டிருக்க வேண்டாம்..” என்றான் சிரிப்புடன்.
“நீங்க வந்து வான்னு கூப்பிட்டாலே நான் வந்திருப்பேன். இவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்க வேண்டாம்..” என்றவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
“இப்படி ஒருத்திகிட்ட நான் மாட்டிட்டு முழிக்கணும்ன்னு விதி இருக்கும் போது, அதை யாரால மாத்த முடியும்..” என்றவனை அவள் கிள்ளி வைக்க,
“எதுக்குடி கிள்ளி வைக்கிற..?” என்றான்.
அவனை முறைத்தவள்…’மாட்டிட்டு முழிக்கிற ஆளைப் பாரு..!’ என்றாள்.
“நான் எப்பவும் உண்மையை தான் பேசுவேண்டி..” என்றான்.
“பாவம் அந்த ரூபிணி..! ரஞ்சன்கிட்ட மாட்டிகிட்டு முழிக்க போறாங்க..” என்றாள்.
“நீ வேற அவன் தான் வசமா மாட்டியிருக்கான்…” என்றவன், அவர்கள் ஒன்றாக படித்தது முதல், பிரஜேஷ் அவனுக்கு உதவி செய்தது, பிரஜேஷின் பிளான், அவனைத் தூண்டிவிட்ட கல்பனாவின் பிளான்… ஆஸ்திரேலியாவில் அவர்கள் ஆடிய ஆட்டம் என்று அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தான் அர்ஜூன். வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.
“என் அண்ணன் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கலை..” என்றாள் வருத்தமாய்.
“அது அவனா செய்யலை. எல்லாமே உங்க அம்மா தூண்டுதல் தான். இனி சரியாகிடுவான். இதுல நீ கவலைப் படுறதுக்கு ஒண்ணுமே இல்லை..” என்றான்.
“நான் எப்படி அவங்க வயித்துல பொறந்தேன்..?” என்றாள்.
“சிம்பிள் ராஹினி. எல்லாரும் ஒரே மாதிரி இருக்கணும்ன்ற அவசியம் இல்லை. ஏதோ ஒரு தேவைக்காகத் தான் நாம ஒருத்தருக்கு ஒன்னு செய்றோம். அது மனித இயல்பு. இங்க நூறு சதவிகதம் நல்லவங்கன்னு யாரையும் சொல்ல முடியாது. குறையில்லாத மனுஷங்க, மனசுல அழுக்கில்லாத மனுஷங்கன்னு யாருமே இல்லை. அது எல்லை மீறும் போது தான், தவறு தப்பாகிடுது. பிஸ்னஸ் பீப்பிள் கல்யாணம் பண்றதே பிஸ்னஸ் நோக்கத்தோட தான். இதுல உங்க அம்மா மட்டும் விதி விலக்கில்லை. நம்மை மாதிரி அவங்களும் ஆக முடியாது. அவங்களை மாதிரி நம்மளும் ஆக முடியாது. நமக்குத் தான் நாம. எப்பவும் நமக்கு நம்ம சரியா இருந்தா எல்லாமே சரியா நடக்கும்…” என்றான் அர்ஜூன்.
அவனின் பேச்சைக் கேட்ட வராஹினி… கொட்டாவி விட,
“தூக்கம் வரலைன்னு சொன்ன..?” என்றான்.
“எங்க..? நீங்க வாத்தியார்ன்னு அப்பப்போ ப்ரூவ் பண்றிங்க. இப்படி பேசியே கிளாஸ் எடுத்தா தூக்கம் தான் வரும்..” என்றாள்.
“அடிங்க..!” என்றவன், அவள் தன்னருகில் இழுத்துக் கொண்டான்.
“ஐ லவ் யு புருஷரே..” என்றாள் அவன் சட்டை பட்டனை திருகிக் கொண்டே.
“மனுஷனை கார் ஓட்ட விடக் கூடாதுன்ற முடிவுல இருக்க போல..” என்றவன், அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான். அந்த இறுக்கத்தில் அவனின் காதலும் சொல்லாமலேயே புரிந்தது அவளுக்கு.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு…
அவர்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் அமர்ந்திருந்தனர், ரஞ்சனும்-ரூபிணியும்.
அர்ஜூனின் கையால் பட்டத்தை வாங்கிக் கொண்டிருந்தாள் வராஹினி. ஐந்து மாத கர்ப்பத்தில் வயிறு லேசாக மேடிட்டிருந்தது.
“ஏண்டி..! அவன் குழந்தை பெத்துப்பான்னு சொல்லி சொல்லியே என்னை ஒரு வழியாக்கிட்ட. நானும் அதை நம்பி, இப்போ பொண்ணு பிறந்து ஆறுமாசம் ஆச்சு. ஆனா, அர்ஜூன் பொண்டாட்டி இப்பதான் பிரக்நென்ட்டாவே இருக்கா..” என்றான் ரஞ்சன்.
“இப்போ இது ரொம்ப முக்கியமா..? எப்படியும் நீ தான முதல்ல அப்பா ஆன. அந்த வகையில் நீதான் பர்ஸ்ட்..” என்றாள்.
“இருந்தாலும் ஒரு சந்தோசம் வரவே இல்லையே..?” என்றான்.
“எப்படி வரும்..? இப்படி ஈகோ பார்த்தே வாழ்க்கையை ஒட்டுனா சாவு வந்தாலும் சந்தோசம் வராது. நீ என்னைக்கு திருந்துறன்னு நானும் பார்க்குறேன்..” என்றாள்.
“இங்க வந்தும் அவனை திட்டிட்டே இருக்கனுமா ரூபிணி..?” என்றார் சுமித்ரா.
“நான் திட்டவே இல்லை. வேணும்ன்னா, உங்க பையனை தனியா கூட்டிட்டு போய் பாசப் பயிரை வளர்த்துட்டு வாங்க. இவன் திருந்துறதுக்கு முன்னாடி நீங்க திருந்தனும். அப்பத்தான் இவன் வழிக்கு வருவான்..” என்றாள் ரூபிணி.
“ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா வராஹினி. அர்ஜூன் இவ்வளவு சந்தோஷமா இருந்து நான் பார்த்ததே இல்லை. இப்பல்லாம் அவன் முகத்துல அப்படி ஒரு மகிழ்ச்சி..” என்றார் கார்த்திகேயன்.
“நான் ஒண்ணுமே பண்ணலை மாமா…! சொல்ல போனா அவரால தான் நான் இன்னைக்கு சந்தோஷமாவும், உயிர்ப்போடவும் இருக்கேன்..” என்றாள்.
அவரின் அருகில் வந்த அர்ஜூன்,
“ரஞ்சன் கொஞ்சம் பொறுப்பான மாதிரி தான் தெரியுது. நீங்க அவனுக்கும் சில பொறுப்புகளை குடுங்க. இனி அவன் தடம் மாற வழியில்லை. அவனோட பொண்ணு முகத்தைப் பார்த்தாலே, அவனுக்கு வேற எந்த எண்ணமும் வராது..” என்றான் அர்ஜூன்.
“உண்மைதான் அர்ஜூன்..” என்றவர்,
“நீங்களும் நம்ம வீட்டுக்கு வரலாமேப்பா..” என்றார்.
“அது சரி வராதுப்பா. நாம எப்பவும் போல இப்படியே இருப்போம். உங்களுக்கு தோணினா, நீங்க அங்க வந்து இருங்க. அதுக்கு நான் மறுப்பு சொல்ல மாட்டேன். ஆனா, நான் எடுத்த முடிவுல எந்த மாற்றமும் இல்லை..நாங்க நாங்களாவே இருக்கோம்..” என்றான்.
“ஏங்க.. மாமா..!” என்று வராஹினி இழுக்க,
“நான் எல்லாரோட நல்லதுக்காகவும் தான் சொல்றேன் ராஹினி. சில விஷயங்களை யாராலையும் மாத்தவும் முடியாது. மாறவும் முடியாது.” என்றான்.
“எனக்கும் தான்ப்பா..” என்றாள். கல்பனா வருவதை அவள் விரும்பவில்லை. பிரஜேஷ் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தான். கல்பனாவை வரக்கூடாது என்று உறுதியாக சொல்லி விட்டாள் வராஹினி.
“கிளம்பலாம ராஹினி..!” என்றான்.
“ம்ம்..!” என்றவள் கொஞ்சம் சோர்வாய் நடக்க,
“முடியலைன்னா, நான் தூக்கிக்கவா..?” என்றான்.
அந்த அளவுக்கு ஒண்ணுமில்லை என்றவள், அவனுடன் நடக்க, அதைப் பார்த்தவர்களுக்கு மனம் நிறைந்து போனது.
சில மாதங்களில் அர்ஜூனை உரித்து வைத்ததைப் போல் ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் வராஹினி. ஏனோ பிரசவத்தில் அவளை விட அவன் துடித்தது தான் அதிகம். மீண்டும் புதிதாய் பிறந்தது போன்ற மாயை அவனுக்கு.
அந்த இளம் தளிர் பிஞ்சை கையில் வாங்கும் போது, அவன் உணர்ந்த உணர்வுகளை வார்த்தைகளால் வடிக்க இயலாது.
“தேங்ஸ்டி..!” என்று அவளை அணைத்து முத்தமிட்டவனுக்கு, வாழ்க்கையே முழுமையடைந்ததைப் போல் இருந்தது. ஒரு கையில் குழந்தையும், மறுபுறம் மனைவியும் இருக்கும் அந்த ஆனந்தத்தை விட, வேறென்ன வேண்டும் அவனுக்கு. அவளே அவனின் துணையாகிப் போனதில், அவன் விரும்பிய குடும்ப உறவையும், காதலையும் , மகிழ்ச்சியையும் தெவிட்ட தெவிட்ட அவனுக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள் வராஹினி.