அன்று, புது விளம்பரத்திற்கான ‘கான்செப்ட் மேக்கிங் டிஸ்கஷன்’ நடந்துக்கொண்டிருந்தது.
“சும்மா ஆஸ்யூஷ்வல், எல்லாரும் பண்றமாதிரி எடுக்க வேண்டாமே!?” சுவாதி அந்த டிஸ்கஷன் ரூமில் இருந்த ஆட்களிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.
மீரா, “யெஸ் மேம்! கொஞ்சம் டிப்ரன்ட்டா செஞ்சா ஈசியா ரீச் ஆகும்…!”
அதையே இன்னும் பலரும் ஆமோதிக்க, விவேக் அஜய்யை பார்த்தான்.
எப்போதும் என்ன கான்செப்ட் என்று அவன் தான் சொல்லுவான். அதில் சில திருத்தங்களோ, சுருக்கங்களோ மட்டுமே விவாதிக்கப்படும்.
இன்றோ, ‘யாருக்கு வந்து விருந்தோ?’ என கண்ணை திறந்து வைத்து கனவுக்கண்டுக்கொண்டிருந்தவனை ஆயாசமாய் பார்த்தான் விவேக்.
‘இது தேறாது!’ என்று தெரிந்ததால், அவனை விடுத்து குருவிடம்,
“செனிட்டரி நேப்க்கின் விளம்பரத்துக்கு என்னடா புதுமையா பண்ண முடியும்? ஒரு பத்து பொண்ணுங்களை பிடிச்சு, காட்டுக்கோ இல்லனா காலேஜ் டூருக்கோ அனுப்பனும்! இவங்க பிரான்ட் நேப்கின்ஸ் யூஸ் பண்றதால அந்த பொண்ணு எல்லா குரங்கு செட்டையும் செஞ்சுட்டு ஜாலியா இருப்பா! இப்டி தானே எடுக்கணும்?” என்றான் சலித்துக்கொண்டு.
“ம்ச்! என்ன விவேக் நீ? இந்த பிரான்ட் இப்போதான் புதுசா வந்துருக்காங்க! நம்ம குடுக்குற பப்ளிசிட்டி’ல தான் அவங்க பாதி சக்சஸ் இருக்கு… விளையாடாத!” என்றாள் சுவாதி.
“நான் விளையாடல சுவா! சீரியஸா தான் சொல்றேன்! இதுல என்ன புதுமையை புகுத்துவ நீ?”
“அதை டிஸ்கஸ் பண்ணத்தான் நம்ம இங்க உட்காந்துருக்கோம்!” சற்று அதட்டலாய் சுவாதி சொல்ல, ‘கப் சிப்’ ஆனான் விவேக்.
ரீனா சொடுக்கிட்டு ‘ஐடியா!?’ என்று கத்தினாள்.
அனைவர் கவனமும் அவளிடம் போக, “நம்ம ஏன் இந்த ‘ஆட்’க்கு பசங்களை யூஸ் பண்ணக்கூடாது?” என்றாள்.
“வ்வ்வ்…வாஆஆட்…?” அனைவர் முகமும் ‘அய்ய!’ என்று சுழிந்தது.
“ஏய் பைத்தியம்? நேப்கின் ‘ஆட்’க்கு எதுக்கு பசங்க?” குரு பல்லைக்கடிக்க,
“ம்ம்? லுங்கி ‘ஆட்’க்கு எதுக்கு பொண்ணுங்க வராங்களோ அதுக்கு தான்!” என்று சொல்ல, குரு வாய் அடைந்தது.
“இருந்தாலும், இது வொர்க் அவுட் ஆகும்ன்னு தோணல!” சுவாதி சொல்ல, அதுவே தான் அங்கிருந்த பலரின் எண்ணமாகவும் இருந்தது.
‘இது வேலைக்கு ஆகாது, நேரா மேலிடத்தையே பிடிப்போம்!’ என்று ரீனா, “நீ சொல்லு அஜய்! இந்த ‘ஆட்’ல பொண்ணுங்களோட பசங்களும் இருக்கட்டும்! ஜஸ்ட் டிப்ரென்ட்’டா, ஒரு புரட்சி மாதிரி இருக்கும்?” அவன் தொடையில் அடித்து கேட்க,
“புரட்டாசில எல்லாம் கல்யாணம் வைக்க மாட்டாங்க ரீனா! நம்ம வேணா ஆவணி’ல வச்சுக்குவோம்!” என்றவனை சற்றும் யோசிக்காமல், நோட்பேடை கொண்டே மண்டை மண்டையாய் அடித்தான் குரு.
அதில் கனவு கலைந்து நிஜத்துக்கு வந்தவனோ, “ஏன்டா அடிக்குற?” என்ற அலற,
“இங்க என்ன பேசிட்டு இருக்கோம், நீ என்ன பேசிட்டு இருக்க? வேலை’ன்னு ஒன்னு இருக்கு… நம்ம பொழப்பையும் அப்ப அப்ப பார்க்கணும்!” என்று சொல்ல,
“அதுக்கு தான் நீங்க இருக்கீங்கள்ள… பாருங்க!” என்றான் அஜய்.
“டேய்…. நானெல்லாம் ஆயிரத்தெட்டு வேலையை அக்குள்’ல சுமந்து சுத்திக்கிட்டு இருக்கேன்… இதுல நான் உன் வேலையும் வேற பாக்கனுமோ?”
“நீ ‘காதோல்’ பண்ணப்போ நான் பாத்தேன்ல… இப்போ நான் பண்ணும்போது நீ பாரு!” என்றவன்,
“ஓ காட்… மாது வர நேரம் ஆச்சு! பை காய்ஸ்!” என சொல்லிவிட்டு நிற்காமல் ஓடினான்.
இருவரும் சந்திக்க ஆரம்பித்து வெற்றிகரமாக பதினைந்து நாட்கள் கடந்திருந்தது. இன்னமும் மாதங்கவதனாவை பற்றிய சொந்த விவரங்கள் ஒன்றையும் அஜய் தெரிந்துக்கொண்டிருக்கவில்லை.
குறைந்தபட்சமாய், அவள் எதற்கு தினமும் இந்த ட்ரெயினில் வருகிறாள்? என்ன வேலையாய் இருக்கும்? என்றுக்கூட அவனுக்கு தெரியாது! அவன் கேட்டதும் இல்லை.
தெரிந்துக்கொள்ள வேண்டும் என நினைத்தாலும், அவளிடம் கேட்க தயக்கமாய் இருக்கும். மாறாக, அவன் தன்னை பற்றிய அத்தனையும் சொல்லுவான், பதிலுக்கு ஒரு மரியாதைக்கு வேண்டியாவது அவள் தன்னுடையதை பகிர்வாள் என்று!
அவளோ சளைக்காமல் அவன் பேச்சை கேட்ப்பாளே ஒழிய, தெரியாமல் கூட தன்னைப்பற்றி பேச மாட்டாள்.
‘இதுக்குமேல இன்டைரெக்ட் செட் ஆவாது! நேரா கேட்டுட வேண்டியது தான்!’ என அவன் முடிவு செய்தபோது,
“ஹே, லேட் ஆகிடுச்சு இன்னைக்கு!” என்று மூச்சு வாங்க வந்து நின்றாள் அவள்.
“ரிலேக்ஸ்! இன்னும் பைவ் மினிட்ஸ் இருக்கு!”
ஆசுவாசமாய் அமர்ந்தவள், “நீங்களும் உட்காருங்க!” என்று அவளுக்கு பக்கத்து இருக்கையை காட்ட, அதற்கே அய்யா ஃப்ளாட்டு…!
கவனமாய் துளியும் உரசாமல் தள்ளி அமர்ந்தான்.
“ஆபீஸ் விட்ட மாறி டெய்லி இதே டைம் வந்துடுறீங்க? உங்களுக்கு எப்படியும் ஷூட்டிங் முன்னப்பின்ன இருக்கும் தானே?” என்றாள்.
சொல்லவா முடியும்? உன்னை கரெக்ட் பண்ணதான் என் பொழப்பை விட்டுட்டு இப்படி நாய் பொழப்பு பார்க்கிறேன் என்று!!!?
சிரித்து வைத்தான்.
“அது, சூட் முன்னப்பின்ன தான் இருக்கும்! நான் வீட்டுக்கு போய் ரெப்ரெஷ் ஆகிட்டு திரும்ப செட்டுக்கு போய்டுவேன்!” என்றான்.
‘ஜஸ்ட் ரெப்ரெஷ்’ ஆக, முக்கால் மணி நேர விரயமும், அலைச்சலும் அவசியமா என்று தோன்றியது அவளுக்கு. ஆயினும் கேட்டுக்கொள்ளவில்லை.
அவளே நூலெடுத்து கொடுத்திருக்க அதை பற்றி தொடர்ந்தான் அஜய்.
“நீங்க என்ன வொர்க் பாக்குறீங்க? ஐ மீன்… நான் இவ்ளோ வருஷமா இப்டிதான் போக வர இருக்கேன்… உங்களை பார்த்ததே இல்லையே… அதனால கேட்குறேன்!”
“என் ஆபீஸ் வீட்டுக்கு பக்கத்துலையே இருக்கு! அங்கேயே தான் வொர்க் பார்ப்பேன்! இங்க, இந்த ஏரியாவுல ஒரு கிளைன்ட்! நேர்ல வந்து செஞ்சு தரணும்ன்னு ரொம்ப கேட்டுக்கிட்டாங்க! என் பிரன்ட்’டோட அப்பா வேற! சோ மறுக்க முடியாம ஒரு மாசமா வந்துட்டு இருக்கேன்!”
இவ்வளவு சொன்னவள் ‘என்ன வேலை?’ என்று சொல்லவில்லை.
“ஓ!” என்றவன், “என்ன வேலை?” என்றான்.
“ஷ்… அதை சொல்லாம, மத்ததெல்லாம் சொல்லிட்டு இருக்கேன் பாருங்களேன்!” என்றவள், “நான் ஆடிட்டர்!” என்றாள்.
“ஓஓஓ…!!!”
எப்படியோ ஒரு முக்கிய விவரம் கிடைத்துவிட்ட சந்தோசத்தில், ‘ஓ’ க்கூட ‘ஓஹோ’ என்று வந்தது.
மனதில் அவசரமாய் கணக்கிட்டவன், “நாங்கக்கூட எங்க கம்பெனிக்கு ஒரு நல்ல ஆடிட்டர் வேணுன்னு ரொம்ப நாளா தேடுறோம்!” என்று சொல்ல,
“அடடா! என்ன ஒரு ரெண்டு நிமிஷமா தேடிருப்பீங்களா?” என்று அவள் கேட்டதே, ‘உன் லட்சணம் தெரிந்துவிட்டது’ என சொல்லாமல் சொல்லியிருந்தது.
‘பொய்’ என்றா சொல்ல முடியும்?
சிரித்து வைத்தான். அதுதானே வெகு சுலபமாய் வருகிறது அவனுக்கு.
அவளும் மௌனமாய் சிரிக்க, “ஆஃபர் அக்செப்ட் பண்ணலாமே?” என்றான் அவன்.
“என்ன ஆஃபர்?”
“அதான் எங்க கம்பெனிக்கு ஆடிட்டரா…?”
“சீரியஸா தான் கேட்குறீங்களா?”
“நிஜமா தாங்க!” பேசிக்கொண்டிருக்கும்போதே மழை துளிர்க்க ஆரம்பித்தது.
அதைக்கண்டதும் எழுந்து விரைந்தவள், ரயில் இன்னமும் வந்திராத வெளிப்புறத்தில் கரம் நீட்டி சிதறும் துளிகளை ஏந்தி ஏந்தி விளையாட, சில நாட்கள் முன்னே அவன் எடுத்த விளம்பரம் போலே தோன்றியது அவனுக்கு.
‘ச்ச! அந்த பொண்ணுக்கு பதிலா இவளையே போட்டுருக்கலாம்! ‘ஆட்’ இன்னும் நல்லா வந்துருக்கும்!’ என தொழில் மூளை நினைக்க, காதல் மனமோ,
“ஏங்க… இங்க வாங்க…!! அட வாங்கங்க!” என கத்தி கத்தி அவளை அழைத்தது.
விளையாட விடாமல் அவன் அழைத்ததில் முகத்தை தூக்கிக்கொண்டு வந்தவள், “சொல்லுங்க” என்றாள்.
“இப்படி மழைல எல்லாம் நனையாதீங்க! கரைஞ்சுடுவீங்க!” சீரியஸாய் அவன் சொன்னதும் வாய்ப்பொத்தி சிரித்தவள்,
“நீங்க நல்லா காமெடி பண்றீங்க!” என்றாள்.
சொன்னவனுக்கோ, ‘ஏதே? காமெடியா!?’ என்றானது.
குருவிடம் சொன்னால் கலாய்ப்பானே என்று விவேக்கிடம் சொல்லி சொல்லி மாய்ந்துப்போனான்.
“இந்த ‘பிக்அப்’ லைனை எதாவது ‘ஆட்’ல போட்டுருந்தா கூட சக்சஸ் ஆகிருக்கும்டா! இவக்கிட்ட சொன்னதுக்கு ‘காமெடி’ன்னு சொல்லிட்டு போறா!”
“மச்சி! நீ விடு! இப்படி படிப்படியா போறதெல்லாம் உன் வயசுக்கு சரி வராது! நேரா நாளைக்கு போய் ‘ஐ வில் மேரி யூ… வில் யூ மேரி மீ?’ன்னு கேட்டுடு!” என்று விவேக் சொல்ல, யோசித்துப்பார்த்த அஜய்க்கும் அதுவே சரியென தோன்றியது.