எவ்வளவு தாமதமாக உறங்கினாலும், அதிகாலையிலேயே விழிப்பு வந்தது வராஹினிக்கு. மிதிலாவின் திருமண நினைப்பு மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்ததாலோ என்னவோ, சீக்கிரமே எழுந்து விட்டிருந்தாள். எழுவதற்கு முயற்சி செய்தாள் அவ்வளவே..! அர்ஜூன் தான் அவளை விடாமல் இறுகி அணைத்துக் கொண்டு படுத்திருந்தானே..! எங்கிருந்து அவள் எழுந்து கொள்வது.
“யோவ் வாத்தி..! இம்புட்டு லவ்வையும் மனசுக்குள்ள வச்சுகிட்டு என்னம்மா சீன் போட்ட நீ..? உன்னோட முறைப்பு என்ன? உன்னோட விறைப்பு என்ன..? உன்னோட கோபமென்ன..? ஆனா இப்ப பாரு.. இப்படி பொட்டிப் பாம்பா அடங்கிட்டியே ராசா.. இதுவும் நல்லாத்தான் இருக்கு… தூங்குறப்ப கூட நீ இம்புட்டு அழகா இருக்கக் கூடாது…” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
“நீயும் நான் தூங்குறப்ப கூட இப்படி சைட் அடிக்கக் கூடாது..” என்றவன், சிரித்தபடி கண்விழிக்க,
“என்னைய சின்னப் பிள்ளை,சின்ன பிள்ளைன்னு வாய்ல சொல்லிட்டு, இப்படி என்னை மயக்கி, தனியா தள்ளிட்டு வந்து இப்படி மேட்டரை முடிச்சுட்டிங்களே வாத்தி..! இதை நான் எங்க போய் சொல்லுவேன்… யார்கிட்ட சொல்லுவேன்..!..” என்று மீண்டும் கத்த,
“அடிப்பாவி..! யாரு நீ சின்ன பிள்ளை..!” என்றான் நம்பாத பாவனையுடன்.
“ஆமா.. நான்தான்..! நீங்க கூட அப்படி தான சொன்னிங்க..” என்றாள்.
“தெரியாம சொல்லிட்டேன்டி..!உன்னைய சின்னப் பிள்ளைன்னு சொன்னது என்னோட தப்புத்தான். ஆனா, நைட் நடந்ததையெல்லாம் யோசிச்சா, சின்ன பிள்ளை மாதிரி தெரியலை..!” என்றான் அர்ஜூன் நமட்டு சிரிப்புடன்.
அவனை முறைத்தவளுக்கு வெட்கம் வந்து தொலைக்க,
“உங்களை..!” என்று அவள் துரத்த, அவன் போக்குக் காட்டவென்று.. அடுத்து வந்த மணித்துளிகளும் அவர்களின் பிணைப்பிற்கு இணையாய் நின்றது. உலகத்தையே வென்று விட்டதைப் போன்ற மகிழ்ச்சி இருவரின் முகத்திலும்.
ஒருவழியாக திருமணத்திற்கு தயாராகினர். வராஹினி எப்போதும் போல் பட்டுசேலையை கையில் வைத்துக் கொண்டு படாத பாடு பட்டுக் கொண்டிருக்க,
“மே ஐ ஹெல்ப் யு..!” என்றான் குறும்பு பார்வையுடன்.
“ஆணியே பிடுங்க வேண்டாம்..” என்றாள் செல்ல முறைப்புடன்.
“என்ன கொடுமை இது..! அன்னைக்கு நான் மாட்டேன்னு சொல்ல சொல்ல நீ கட்டி விடனும்ன்னு அடம்பிடிச்ச.. இன்னைக்கு நானே ஹெல்ப் பண்றேன்னு சொல்றேன், இப்போ வேண்டாம்ன்னு சொல்ற… இந்த பொண்ணுங்களே இப்படித்தான்..” என்று அழகாய் சலித்துக் கொண்டான்.
அவள் அவனை முறைக்க, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அழகாய் முன் கொசுவத்தை எடுத்துக் கொடுத்தான்.
“இன்னைக்காவது நான் சொருகி விடலாமா..?” என்றான் குறும்புடன்.
“இன்னைக்கும் நானே சொருகிப்பேன்..!” என்று தலையை வெட்டியவள், அதை அழகாய் சொருக, அவனோ சிரித்துக் கொண்டே கீழே மடிப்புகளை சரி செய்து கொண்டிருந்தான்.
ஏற்கனவே அர்ஜூன் பைத்தியமா இருக்குற என்னை நீங்க இன்னும் பைத்தியமா ஆக்குறிங்க வாத்தி..” என்றாள் கண்களில் நிறைந்த காதலுடன்.
“என்னை பேர் சொல்லி கூட கூப்பிடு.. எனக்கு பிரச்சனையில்லை. ஆனா, இந்த வாத்தியை மட்டும் விட்ருடி..” என்றான் அர்ஜூன்.
“அதெப்படி..! அதை சொல்லும் போது தான் ஒரு கிக்கே இருக்கு..” என்றாள்.
“உன்னை..!” என்றவனுக்கும் கொஞ்சம் வெட்கம் வந்திருக்க வேண்டும்.
திருமண வீட்டில் அவர்களை ஜோடியாக பார்த்த குருவிற்கு இன்னமும் நம்பமுடியவில்லை. அதிலும் வராஹினியின் முகம் முழுவதும் இருந்த வெட்கமும், முகச் சிவப்பும், அவள் அணிந்திருந்த பட்டுப் புடவையும் அவளை ஜொலிக்க வைத்துக் கொண்டிருந்தது.
“தேங்க்ஸ் பார் யுவர் காம்ப்ளிமென்ட் குரு..” என்றான் அர்ஜூன்.
அதே நேரம் ரூபிணியுடன் அங்கு வந்தான் ரஞ்சன்.
“இவன் எங்க இங்க..?” என்றான் அர்ஜூன்.
“மாப்பிள்ளை வீட்டு சைட் அங்கிளுக்கு பழக்கம்ன்னு சொன்னாங்க சார்..!” என்றான் குரு.
ரஞ்சனைப் பார்த்த உடன், வராஹினி இயல்பாகவே அர்ஜூனை நெருங்கி நின்று கொள்ள, அதை அர்ஜூனும் உணர்ந்தானோ என்னவோ, அவளை தோளோடு அணைத்துக் கொண்டான்.
“என்னமோ இவனுக்குத் தான் பொண்டாட்டி இருக்குற மாதிரி பில்டப் குடுப்பான்… ஏன் எங்களுக்கெல்லாம் இல்ல..” என்று மனதிற்குள் நினைத்த ரஞ்சன்…ரூபிணியை தோளோடு அணைத்து கொண்டு வர,
“என்ன உலக அதியசமா இருக்கு..?” என்று நினைத்த ரூபிணி அப்போது தான் அர்ஜூன்-வராஹினியை கவனித்தாள்.
“ஹோ..! அதான் இப்படி பன்றானா..? நீ கடைசி வரைக்கும் திருந்தவே மாட்ட..” என்று முனுமுனுத்தாள்.
“தீயா வேலை செய்றோம்..! அவனுக்கு முன்னாடி குழந்தை பெத்துக்கிறோம்..” என்றான்.
“அறிவு கெட்டவனே..! அர்ஜூன் கிட்ட எவ்வளவு நல்ல விஷயம் இருக்கு. அதைப் பார்த்து என்னைக்காவது போட்டி போட்ருக்கியா..? உன்னை நம்பி நாளைக்கு பிள்ளைப் பெத்துகிட்டு, அந்த பிள்ளை கிட்ட நான் செருப்படி வாங்கவா..?” என்றாள் வெடுக்கென்று.
“என்னடி வாய் நீளுது..?” என்றான்.
“உண்மைதான்..! உன்னோட பிள்ளை உன்னை மாதிரியே பிறக்காதுன்னு என்ன நிச்சயம்..? நான் சொன்னது தான், முதல்ல மனுஷனா மாறு. பிஸ்னஸ்ல கவனத்தை கொண்டு போ. அது வரைக்கும் நீ நினைக்கிற எதுவும் நடக்காது.. இது கல்யாண வீடு. இதுக்கு மேல என்னைய பேச வைக்காத. எனக்கா என்னைக்கு நீ சரியா இருக்கேன்னு தோணுதோ, அன்னைக்குத் தான் குழந்தையை பத்தியே யோசிப்பேன்..” என்றாள்.
“இதெல்லாம் ரொம்ப ஓவர்டி..” என்றான் ரஞ்சன்.
“நான் சொல்றதை சொல்லிட்டேன். அதுக்குமேல உன்னோட இஷ்ட்டம்..” என்று சொல்லிவிட்டு அவள் அமைதியாக, அர்ஜூன்-வராஹினி அந்யோநியத்தை பார்த்தவனுக்கு, மனதிற்குள் கொஞ்சம் வெறுமையாகக் கூட இருந்தது.
ரூபிணி- ரஞ்சன் ஜோடி முன்னமே கிளம்பி விட, அர்ஜூன்- வராஹினி கிளம்ப மதியத்திற்கு மேல் ஆனது.
“என்னாச்சு ராஹினி..” என்றான் அர்ஜூன்.
“டயர்டா இருக்கு…” என்றாள்.
“தூக்கம் வந்தா தூங்கு..!” என்றான் அர்ஜூன்.
“டயர்டா இருக்கு. ஆனா, தூக்கம் வரலை…” என்றாள்.
“என்னாச்சு..?”
“மனசு முழுக்க சந்தோசம் மட்டுமே இருக்கு. அதனால தானோ என்னவோ, இவ்வளவு அலுப்புலையும் தூக்கம் வரலை..” என்றாள்.
“உன்னோட சந்தோஷத்துக்கான காரணத்தை நான் தெரிஞ்சுக்கலாமா..?” என்றான் காரை ஓட்டிக் கொண்டே.
“நீங்க தான்..!” என்றாள் யோசிக்காமல்.
அவன் அவளைப் பார்க்க,
“ஆமா.. நீங்கதான்..! உங்களுக்கு என்னைப் பிடிக்கலையோன்னு நான் எவ்வளவு நாள் வருத்தப் பட்டிருப்பேன். அதெல்லாம் இல்லைன்னு தெரியும் போது வர்ற சந்தோசம் இருக்கு பாருங்க. அதெல்லாம் சொன்னா புரியாது. அனுபவிச்சாதான் புரியும்..” என்றாள்.
“ரைட்டு..” என்று சிரித்தான் அர்ஜூன்.
“உங்களுக்குள்ளேயும் காதல் இருந்திருக்கு. ஆனா நீங்கதான் வெளிய காட்டாம ரொம்ப ஸ்டெடியா இருக்குற மாதிரி நடிச்சிருக்கிங்க..” என்று முறைத்தாள்.