கேப்பில் ஏறி அமர்ந்த வராஹினிக்கு அப்போதும் மனமேயில்லை. எதையோ அப்படியே விட்டுவிட்டு செல்வதைப் போல் உணர்ந்தாள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல், எதையோ இழந்தது போல் இருந்தது அவளின் மனம்.
“இப்படியே இருந்தா..? அடுத்து என்ன பண்ண போற வராஹி..?” என்றது அவளின் மனம்.
“என்ன பண்றது..? நேரா வீட்டுக்குப் போக வேண்டியது தான். வேற வழியில்லை. எது வந்தாலும் இனி சமாளிச்சு தான் ஆகணும். எப்படியோ கல்யாணம் நின்னு போய்டுச்சுல்ல. இப்போதைக்கு அதுவே பெரிய விஷயம்..” என்று தனக்குத் தானே பதில் சொல்லிக் கொண்டாள்.
“அவங்க இருக்குற ஸ்பீட்க்கு நாளைக்கே எல்லா ஏற்பாட்டையும் பண்ணினாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை.. எதுவா இருந்தாலும் யோசிச்சு பண்ணு வராஹி..” என்றது மனம்.
“இனி யோசிக்க என்ன இருக்கு..? குருவும் கடைசி நேரத்துல காலை வாரி விட்டுட்டான். இவங்களுக்குத் தெரியாம இந்த இரண்டு நாள் இருந்ததே பெரிய விஷயம். இப்ப போலீஸ்கிட்ட போனவங்க, அடுத்து என்ன வேணும்ன்னாலும் பண்ணுவாங்க. இனி இங்க இருந்து சமாளிக்கிறது தான் புத்திசாலித் தனம்..” என்று உறுதியாக நினைத்துக் கொண்டாள்.
அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவளின் போன் ஒலித்தது. புது எண்ணில் இருந்து அழைப்பு வர அவளுக்கு யோசனையாக இருந்தது.
“யாரா இருக்கும்..?” என்று யோசித்துக் கொண்டே போனை ஆன் செய்து காதில் வைத்தாள்.
“ஹலோ..!!” என்றாள் வராஹினி.
“என்ன திரும்பி வந்துட்ட போல..” என்றது எதிர்முனை குரல். அந்த குரலில் இருந்தே பேசுவது யார் என தெரிந்து போய்விட்டது வராஹினிக்கு.
“ஆமா, திரும்பி தான் வந்துட்டேன். இப்ப அதுக்கு என்னாங்குற..?” என்றாள் எரிச்சலாக.
“என்கிட்டே நீ எரிச்சலாவே பேசக் கூடாது வராஹினி..”என்றது எதிர்முனை குரல்.
“அப்படித்தான் பேசுவேன்..! நீ என்ன செய்வ..? உன்னால என்ன செய்ய முடியும். முதல்ல நீ யாரு..? என்னைக் கேள்விகேட்க..?” என்றாள் கோபமாக.
“நான் யாருன்னு தெரிஞ்சுகிட்டு இப்ப என்ன பண்ண போற..? இப்போ என்ன பண்ற, வந்த வழியே திரும்பி போய்டு. அது தான் உனக்கு நல்லது..” என்றது அந்த குரல்.
“முடியாது.. இப்ப என்னாங்குற..?” என்றாள்.
“நல்ல முறையில சொல்லும் போதே கேட்டுக்கணும். பின்னாடி வர்றதை யாரு அனுபவிக்கிறது..? நீ போற கேப் நம்பர் முதற்கொண்டு, நீ இப்போ எங்க போய்கிட்டு இருக்கன்ற வரைக்கும் எனக்குத் தெரியும். நீ சொன்ன இடத்துல கேப் கண்டிப்பா நிற்காது…பார்க்குறியா..?” என்றது அந்த குரல்.
“ஸ்டாப் இட்..! நீ எதுக்காக இப்படி பண்ற..?” என்றவள்,
“டிரைவர் வண்டியை நிறுத்துங்க..” என்று அவள் சொல்லியும் அந்த டிரைவரின் காதில் செய்தி விழுந்ததாகவே தெரியவில்லை.
“இப்ப எதுக்காக இப்படி பண்ற..? நான் தான் கல்யாணத்தை நிறுத்திட்டேனே..! இன்னும் ஏன் என்னை டார்ச்சர் பண்ற..?” என்று கத்த ஆரம்பித்தாள்.
“எனக்கு அது போதாது. நீ இந்த சென்னையில இருக்கவே கூடாது..!” என்றது அந்த குரல்.
“நீ என்ன லூசா..? என்னோட படிப்பு இங்க தான் இருக்கு. அதை விட்டுட்டு எப்படி போக முடியும். நீ சொன்னதுக்காக பயந்துகிட்டு ஒன்னும் நான் இங்க இருந்து போகலை. எனக்கு நிஜமாவே கல்யாணம் பிடிக்கலை, அதான் போனேன். ஆனா, நான் உனக்கு பயந்து தான் இப்படி செஞ்சேன்னு நினைச்சு ரொம்ப ஓவரா போற..? நான் யாருன்னு தெரியும்ல..? என் பேமிலி பேக்ரௌன்ட் என்னன்னு தெரியும்ல..?” என்றாள் வராஹினி தைரியமாய்.
“அது தான் நல்லா தெரியுதே. எவ்வளவு பணம் இருந்தாலும், அந்த ரஞ்சன் பின்னாடியே உன் குடும்பம் அலையுதே. இதெல்லாம் எதுக்காக..? இன்னும் பணத்தை சேர்க்கவா..?” என்றது அந்த குரல்.
“எங்ககிட்ட இல்லாத பணமா..?” என்றாள் கோபமாய்.
“தேவையில்லாததை பேசாத..! அந்த டிரைவர் மறுபடியும் நீ எந்த இடத்துல ஏறினியோ அங்கேயே இறக்கி விடுவான்.அங்க ஒரு கார் உனக்காக வெயிட் பண்ணும். அதுல ஏறி, எங்க இருந்து வந்தியோ அங்கயே போய்டு. நான் சொல்ற வரைக்கும் நீ இங்க வரக்கூடாது. மீறி இங்க இருக்கனும்ன்னு நினைச்சா நடக்க போற விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை..” என்றது அந்த குரல்.
“முடியாது…!” என்றாள்.
“முடியனும்..இறங்க மாட்டேன்னு அடம் பிடிச்சா, அடுத்து நீ எங்கயுமே இறங்க முடியாது” என்றது அந்த குரல். போன் கட்டாகியிருக்க,
“டிரைவர் நான் சொன்ன அட்ரஸ்க்கு போங்க..!” என்றாள் வராஹினி. ஆனால் அந்த டிரைவரோ மீண்டும் அவளை ஏற்றிய இடத்திற்கே கூட்டிக் கொண்டு சென்றார்.
வேகமாய், குருவிற்கு போன் செய்தாள். ஆனால் அவனின் எண்ணிற்கு லைன் போகவில்லை.
“இப்ப என்ன பண்றது..? பேசாம அண்ணாவுக்கே போன் பண்ணலாமா..? இப்போதைக்கு அவன் மட்டும் தான் எனக்கு ஹெல்ப் பண்ண முடியும். என்ன..? பார்த்த உடனே கோபப்பட்டு அடிச்சாலும் அடிப்பான். வாங்கிக்க வேண்டியது தான்.. அது தான் நமக்கு சேப்டி..” என்று எண்ணியவள், பிரஜேஷின் நம்பருக்கு அழைத்தாள். இரண்டு மூன்று முறை அழைத்தும் லைன் கிடைக்காமல்,நான்காவது முறையில் அழைப்பை எடுத்தான் பிரஜேஷ்.
“ஏய்..! எங்க இருக்க வராஹி. மரியாதையா வீட்டுக்கு வந்து சேரு. எங்க மானத்தை வாங்கனும்ன்னே இப்படி பண்ணுவியா..?” என்று எடுத்த எடுப்பில் பேச ஆரம்பித்தான் பிரஜேஷ்.
“அண்ணா..! நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளேன்..! நான் இப்போ இங்க சென்னையில தான் இருக்கேன். பிரைவேட் ட்ராவல்ஸ் பஸ் நிக்கிற இடத்துக்கு நீ உடனே வாயேன்..” என்றாள்.
“இந்த நேரத்துல..” என்று பல்லைக் கடித்தவன்,
“நீ அங்கயே இரு. நான் இப்ப உடனே நம்ம டிரைவரை அனுப்புறேன்..” என்றான் பிரஜேஷ்.
அவன் அப்படி சொல்லிவிட்டு வைத்தாலும், அவளுக்கு மனதிற்குள் ஏதோ ஒன்று நெருடியது.
“நம்மளைத் திருப்பி அனுப்பனும்ன்னு நினைக்கிறவங்க, நாம பஸ்ஸை விட்டு இறங்குனப்பவே, அனுப்பியிருக்கலாமே..? எதுக்காக கேப் வச்சு இவ்வளவு தூரம் போய், திரும்ப வந்து..” என்று அவளுக்கு எதுவுமே புரியவில்லை. ஒன்று மட்டும் உறுதியாக தெரிந்தது, அவளை எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று.
“பிரஜேஷ் கிட்ட நடந்த எல்லாத்தையும் சொல்லிடனும். இதுக்குமேல இப்படியே இருந்தா, அது நல்லதுக்கு இல்லை..” என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அந்த டிரைவர் காரை நிறுத்தியிருந்தான். அவள் அவசரமாய் காரின் கதவை திறந்து கொண்டு வெளியேறினாள்.
“யாரும் வந்து உங்களைக் கூட்டிட்டு போக முடியாது. அங்க பாருங்க..” என்றான் டிரைவர்.
அங்கே, போனில் சொன்ன கறுப்புக் கலர் கார், காருக்கு வெளியே ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பேர் தயாராய் இருந்தனர். அவர்களை மிரண்டு பார்த்தாள் வராஹினி.
“என்ன செய்வது..?” என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் இவளை நோக்கி வந்து கொண்டிருக்க, அவளுக்கு ஒரு நிமிடம் எதுவும் புரியாத நிலை.
அவர்கள் இவளை நெருங்குவதற்குள், அவர்களுக்கும், வராஹினிக்கும் இடையில் வந்து நின்றது அந்த கார்.
அதில் சட்டென்று பயந்து இரண்டெட்டு பின் வாங்கினாள் வராஹினி. காரின் கண்ணாடி இறக்கப்பட, உள்ளே இருந்த அர்ஜூனைப் பார்த்து ஒரு நிமிடம் திகைத்தாலும், அடுத்த நிமிடம் அவளறியாத ஒரு மகிழ்ச்சி வந்து மனதில் ஒட்டிக் கொண்டது.
“நீங்க எப்படி..?” என்றாள் ஆச்சர்யமாய்.
“இப்போ இது ரொம்ப முக்கியமா..? வந்து ஏறு..” என்றான் அர்ஜூன்.
அவள் ஒரு நிமிடம் யோசித்துக் கொண்டு நிற்க, அவளை எரிச்சலுடன் பார்த்தான் அர்ஜூன்.
வர இஷ்ட்டம் இல்லைன்னா, நான் கிளம்புறேன். ஏன்னா..? எனக்கு நிறைய வேலை இருக்கு..” என்றான் கடுப்புடன்.
“கண்ணுக்குத் தெரியாத பேய்கிட்ட அகப்படுறதை விட, கண்ணுக்குத் தெரிஞ்ச பிசாசுகிட்ட அகப்படுறது எவ்வளவோ மேல்..” என்று நினைத்தவள், பிறகு எதையும் யோசிக்காமல் காரில் ஏறினாள். அவள் காரில் ஏறவும், அவளை நோக்கி வந்த இருவரும் பின்வாங்கி, யாருக்கோ போன் செய்தனர்.
காரில் ஏறி அமர்ந்தவளுக்கு இன்னமும் நடந்ததை நம்ப முடியவில்லை.
“ஏன் சார்..? நீங்க அதுக்கு பர்ஸ்ட்டே எனக்கு லிப்ட் குடுத்திருக்கலாம்” என்றாள் குறையாய்.
“போறவங்க, வர்றவங்களுக்கு லிப்ட் குடுக்குறது தான் என் வேலையா..?” என்றான் பட்டென்று.
“அது இல்லை தான் சார். ஆனா, தெரிஞ்ச பொண்ணுன்ற முறையில, நீங்க எனக்கு இந்த உதவியை பண்ணியிருக்கலாம்..” என்றாள்.
“தெரிஞ்ச பொண்ணா..? அதுவும் நீயா..?” என்றவன் நக்கலாக சிரித்துக் கொண்டான்.
“உனக்கு ஹெல்ப் பண்ணேன் பாரு.. என்னை சொல்லணும்..” என்ற அர்ஜூன் அதற்கு மேல் அவளிடம் பேசவில்லை. அவனிடம் பேசிக் கொண்டு வந்த நினைப்பில், அங்கு பிரஜேஷிடம் சொன்ன விஷயம் மறந்து போனது. அவன் காரை அனுப்புவான் என்பதும் மறந்து போனது.
அவள் வீட்டு டிரைவர் வந்து பார்த்த போது, அங்கு யாரையும் காணாமல், விஷயத்தை பிரஜேஷ்க்கு போன் செய்து சொல்லியிருந்தார்.
“சார்..! மேடம் இங்க இல்லை சார்..!” என்றார் அந்த டிரைவர்.
“நல்லா பாருங்க..! அங்க இருக்கிறதா தான் சொன்னா..” என்றான் பிரஜேஷ்.
“நான் நல்லா பார்த்துட்டேன் சார். மேடம் இங்க இல்லை. நானும் கொஞ்ச நேரம் இங்கயே வெயிட் பண்ணியும் பார்த்துட்டேன் சார்..” என்றார் அந்த டிரைவர்.
“இருங்க, அவளுக்கு கால் பண்ணிட்டு உங்களுக்கு கூப்பிடுறேன்..” என்ற பிரஜேஷ், கோபத்தில் பல்லைக் கடித்தான். வராஹி மொபைலுக்கு அவன் போன் செய்ய , அழைப்பு சென்று கொண்டே இருந்தது. ஆனால் எடுக்கப்பட வில்லை. அவள் கேப்பில் இருந்து இறங்கும் பதட்டத்தில் போனை சீட்டிலேயே விட்டிருந்தாள்.
“என்னாச்சு பிரஜேஷ்..?” என்றான் ரஞ்சன்.
“ரிங் போகுது. எடுக்க மாட்டேங்கிறா ரஞ்சன்..” என்றான் பிரஜேஷ்.
“நான் தான் சொல்லலை.. அவ நம்மளை சுத்தல்ல விடனும்ன்னு முடிவு பண்ணி தான் இப்படியெல்லாம் பண்றா. அது தெரியாம நீ தான் இப்ப எல்லாரோட தூக்கத்தையும் கெடுத்து இப்படி ஹால்ல உட்கார வச்சிருக்க..?” என்றார் ரஞ்சன்.
“இல்லை ரஞ்சன்..! அவ எனக்கு கால் பண்ணது உண்மை. அவ குரல் கூட கொஞ்சம் பதட்டமா தான் இருந்தது..” என்றான் பிரஜேஷ்.
“வராஹி பதட்டமா பேசியிருக்கான்னு சொல்ற. அடுத்த நிமிஷம் நீ கிளம்பி போயிருக்க வேண்டாமா..? இப்படி பொறுப்பே இல்லாம டிரைவரை அனுப்பி விட்டிருக்க..?” என்று சத்தம் போட்டார் மோகன் குமார்.
“டாட்..! நாம ரஞ்சன் வீட்ல இருக்கோம். இங்க இருந்து அங்க போக இரண்டு மணி நேரம் ஆகும். நம்ம வீட்ல இருந்து ஒன் அவர் தான். அதான் டிரைவருக்கு கால் பண்ணி போக சொன்னேன்..” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.
“இயர்லி மார்னிங்.. டிராபிக் இல்லாம இருந்திருக்கும். நீயே இங்க இருந்து போயிருக்கலாம். அவளுக்கு என்ன பிரச்சனையோ..?” என்ற மோகன் குமாருக்கு மனம் முழுவதும் பயமும், கவலையும் அப்பிக் கொண்டது.
“எல்லாம் என்னையவே குறை சொல்லுங்க..!அவ வீட்டை விட்டு போகாம இருந்திருந்தா, இப்போ இவ்வளவு பிரச்சனையில்லை. அவ ஒருத்தினால இப்ப எத்தனை பேருக்கு சிக்கல், வருத்தம்,அவமானம் எல்லாம்…இதையெல்லாம் நீங்க சொல்ல மாட்டிங்க..?” என்றான் பிரஜேஷ்.
“அவ உன் தங்கச்சி” என்றார் மோகன்.
“யார் இல்லைன்னு சொன்னது. ஆனா, அவ அப்படி நடந்துக்கலை..” என்றான் பிரஜேஷ்.
“நீங்க சண்டை போடுற நேரமா இது. முதல்ல அவளைத் தேடுற வழியைப் பாருங்க..” என்றார் கல்பனா.
“ரஞ்சன்..! உனக்கு அந்த பொண்ணே தான் வேணுமா..?” என்றார் சுமித்ரா முதன் முறையாக.
“கண்டிப்பா எனக்கு வராஹினி வேணும்மா. அதுக்காக நான் என்ன வேணும்ன்னாலும் செய்வேன்..” என்றான் ரஞ்சன். அவனின் உறுதியைப் பார்த்து திகைத்துப் போய் நின்றனர் கார்த்திகேயன்-சுமித்ரா தம்பதியினர்.
அதே நேரம் அவனின் பதிலைக் கேட்ட மோகன் குமார்- கல்பனா தம்பதியினருக்கும், அவர்களின் மகன் பிரஜேஷிற்கும் அப்படி ஒரு நிம்மதியாக இருந்தது.
இவர்கள் இங்கே அவளைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருக்க, மொபைலை தவற விட்டதை அறியாமல் அர்ஜூனைப் பற்றி அறிவதில் முனைப்பு காட்டிக் கொண்டிருந்தாள் வராஹினி.
அமைதியாக காரை ஒட்டிக் கொண்டிருந்தவனின் முகத்தில் இருந்து அவளால் எதையும் அறிய முடியவில்லை.
“நீங்க என்ன பண்றிங்க…?” என்றாள் பேச்சை ஆரம்பிக்க வேண்டுமே என்று.
“நான் என்ன பண்றேன்னு தெரிஞ்சு நீ என்ன பண்ண போற..?” என்றான் அர்ஜூன்.
“தெரிஞ்சுக்கலாமேன்னு கேட்டேன். இவ்வளவு தூரம் ஹெல்ப் பண்றிங்க. நாளைக்கு ஒரு நன்றி சொல்ல கூட உங்களைத் தேடக் கூடாது இல்லையா..? அதுக்காகத் தான் கேட்டேன்..” என்றாள்.
“உன்னோட நன்றியே எனக்குத் தேவையில்லாதது. நீ எங்க போகணும். சொன்னா, நான் டிராப் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்..” என்றான் அர்ஜூன்.
“அது வந்து என்னோட வீட்டுக்குத்தான்…” என்று அவள் சொல்லும் போது தான் ஞாபகம் வந்தது.
“அச்சோ…என் அண்ணாகிட்ட இன்பார்ம் பண்ணியிருந்தேன். ஆனா, உங்க கூட வந்துட்டேனே..?” என்றவள் தலையில் கைவைக்க,
“அவசரம் எல்லாம் இல்லை. நீங்க சரியான நேரத்துக்கு அங்க வந்துட்டிங்க. இல்லைன்னா, இந்நேரம் என் பாடு ரொம்ப திண்டாட்டம் ஆகியிருக்கும். அதான் உடனே வந்துட்டேன்..” என்று சில விஷயங்களை மறைத்து சொன்னாள். போனில் மிரட்டுவது யார் என்று அவளுக்கே தெரியாத போது, அவனிடம் எப்படி சொல்வது.
“எந்த விஷயத்தையும் நீ ஒழுங்கா பண்ண மாட்டியா..?” என்றான்.
“எனக்கு இருக்குற பிரச்சனை உனக்கென்ன தெரியும். பதட்டத்துல விட்டிருப்பேன்..” என்று மனதிற்குள் நினைத்தவள், அதை வெளியே சொல்லவில்லை. சொன்னால் அங்கயே இறக்கி விட்டு போய்விடுவான் என்று அவளுக்குத் தெரியும்.
“ஆமா, கல்யாணம் பிடிக்காம ஓடி வந்ததா சொன்ன. போலீஸ்க்கு பயந்து என்னை ஹஸ்பண்டா கூட நடிக்க வச்ச. இப்ப என்னடான்னா உங்க வீட்டுக்கு போகணும்ன்னு சொல்ற…? இதுக்கு ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்..?” என்றான் அர்ஜூன்.
“நான் இதுக்கு ஏற்கனவே பதில் சொல்லிட்டேன். கல்யாணத்தை நிறுத்தனும். அதனால வெளிய போனேன். அதுவும் நின்னுடுச்சு. மறுபடியும் வந்து என் பிரண்ட் குருவை என் லவ்வர்ன்னு சொல்லி, தப்பிக்கலாம்ன்னு பார்த்தேன். அதுலயும் மண்ணு விழுந்திடுச்சு. இனி வெளிய இருந்து ஒன்னும் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சி போய்டுச்சு. அதான் வீட்டுக்குள்ள இருந்தே சமாளிக்கலாம்ன்னு முடிவு பண்ணி போறேன்..” என்றாள்.
“என்னை ஒருத்தன் மிரட்டுறான். இனியும் வெளிய இருந்தா எனக்கு ஆபத்து. அதான் வீட்டுக்கே திரும்பிப் போறேன்..” என்ற விஷயத்தை மட்டும் அவனிடம் சொல்லவில்லை.
“உங்க போன் கொஞ்சம் தரீங்களா..? என் அண்ணாவுக்கு கால் பண்ணிட்டு தரேன்..” என்றாள்.
“நான் என்னோட பொருளை யாருக்கும் தர்றதில்லை..” என்றான் அர்ஜூன்.
“சார், நான் என்ன வச்சுக்கவா கேட்டேன். ஒரு கால் பண்ணிட்டு தந்திடுறேன்..” என்றாள் வராஹினி. எரிச்சலுடன் போனை கொடுத்தான் அர்ஜூன்.
அதில் வேகமாக பிரஜேஷின் நம்பரை டயல் செய்ய, உடனே எடுத்தான் அவன்.
“ஹலோ..!”
“அண்ணா, நான் வராஹினி..” என்றாள்.
“இது யாரோட நம்பர் வராஹி. உன்னோட மொபைல் எங்க..? எங்க இருக்க..? டிரைவர் நீ அங்க இல்லைன்னு சொல்றார்..?” என்றான் வரிசையாக.
“அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன். போன் மிஸ்சாகிடுச்சு. நான் வந்துட்டு இருக்கேன்…அதை உனக்கு சொல்லிடலாம்ன்னு தான் கூப்பிட்டேன்..” என்றாள்.
“நீ ரஞ்சன் வீட்டுக்கு வந்திடு..” என்றான் பிரஜேஷ்.
“நான் எதுக்காக அங்க வரணும்..? என்னால அங்கெல்லாம் வர முடியாது. நான் நம்ம வீட்டுக்குப் போறேன்..” என்றாள்.
“சொன்னதை செய் வராஹி. உன்னால ஏற்கனவே இங்க பிரச்சனை. நாங்க எல்லாரும் இங்க தான் இருக்கோம். நீ நேரா இங்க தான் வர்ற. வரணும்..” என்றான் பிரஜேஷ்.
“அவங்க வீட்ல என்ன பண்றிங்க..? கல்யாணம் தான் நடக்கலையே. இன்னும் எதுக்காக அங்கயே இருக்கீங்க..? அந்த வீடு எங்க இருக்குன்னும் தெரியாது. அப்படியே தெரிஞ்சாலும் என்னால வரவும் முடியாது…” என்றாள்.
“நான் இந்த நம்பருக்கு லொக்கேஷன் அனுப்புறேன். வந்து சேர். இல்லைன்னா என்னை நீ மனுஷனா பார்க்க மாட்ட..” என்றான்.
“இப்ப மட்டும் என்ன..? நீ மனுஷனாவா இருக்க..? உனக்கு கூடப் பிறந்த தங்கச்சியை விட அவன் அப்படி என்ன உசத்தியா போய்ட்டான். விருப்பமில்லாத பொண்ணை கட்டாயப்படுத்தி காரியம் சாதிக்கிற அவனெல்லாம் மனுஷனே கிடையாது… என்னால அங்க வர முடியாது..” என்றாள் உறுதியாக.
“அது என்னோட போன்..!” என்றவன், அதை படக்கென்று பிடுங்கிக் கொண்டான்.
“சப்ப விஷயத்துக்கு குடும்பமே ஏன் இப்படி சீன் போடுறிங்க..? எனக்கு பிடிக்கலை, முடியாதுன்னு..ஸ்ட்ரெயிட்டா சொல்லிட்டு.. அடுத்த வேலையை பார்த்துட்டு நிம்மதியா இருந்திருக்கலாம். அதை விட்டுட்டு, கல்யாணத்தப்ப ஓடிப் போறது, அதை மறைக்க பொய்யா சில கேரக்டர்சை நடிக்க வைக்கிறது, அதை மறைக்க இன்னொரு பொய்…இப்படி பொய் மேல பொய் சொல்றதுக்கு ஜம்முன்னு ஒரே வார்த்தையில முடிச்சுடலாம்..” என்றான் அர்ஜுன்.
“உங்களுக்கு என்ன சார்.. ஈசியா சொல்லிடுவிங்க. எல்லாமே நம்ம நாட்ல வாய் வார்த்தை தான் சார். எல்லாமே பெண்களை மையமா வச்சு தான் இயங்குது. முப்பதாம் நூற்றாண்டு வந்தாலும் கூட, பெண்களுக்கு முழு உரிமையும் கிடைக்கப் போறதுமில்லை. அப்படி கிடைச்சாலும் இந்த சமூகம் அதை அங்கீகரிக்கப் போறதுமில்லை…” என்றாள் கேலியாய்.
அவன் அப்படி சொல்லவும் அவளுக்கு பட்டென்று கண்கள் கலங்கியது. அவன் சொன்னது எவ்வளவு உண்மை. கல்பனா ஒரு போதும் அவளுடைய உணர்வுகளை புரிந்து கொண்டது கிடையாது. புரிந்து கொண்டிருந்தால் இவளுக்கு இந்த நிலைமையே வந்திருக்காது. எல்லாமே சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று நினைத்து சில நேரங்களில் பிள்ளைகளின் உணர்வுகளைக் கொல்லும் பெற்றோர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
“இடையிலையே விட்டுட்டு போற பழக்கம் எனக்கு எப்பவும் கிடையாது. ஒரு வேலையை எடுத்தா அதை முடிச்சுடுவேன்..” என்றான் அர்ஜூன்.
அவள் வீட்டு முகவரியை சொன்னாள் வராஹினி. அவள் சொல்லவும் அவளை முறைத்தான் அர்ஜூன்.
“எதுக்கு முறைக்கிறிங்க..?” என்றாள்.
“பின்ன என்ன..? நீ சொல்ற அட்ரஸ்க்கு போகணும்ன்னா, வந்த வழியே தான் போகணும். அதைக் கூட கவனிக்காம கார்ல வந்துகிட்டு இருக்க..? என்ன பொண்ணு நீ..? என்ன தைரியத்தில் இப்படி வர்ற..?” என்றான் கோபமாய்.
“அவங்க கிட்ட மாட்டக் கூடாதுன்னு ஏறிட்டேன்..” என்று நினைத்தவள்,
“உங்கமேல இருக்குற நம்பிக்கை தான் சார்..!” என்றாள்.
“இது பேச்சுக்கு வேணும்ன்னா நல்லா இருக்கும் வராஹினி. ஆனா, எல்லா நேரமுமே எல்லாரும் நம்பிக்கையானவங்களா இருக்க மாட்டாங்க..! என் வீடு இங்க பக்கத்துல தான் இருக்கு. எனக்கு அங்க சில திங்க்ஸ் எடுக்கணும். எடுத்துட்டு, மறுபடியும் வந்து தான் உன்னை டிராப் பண்ணனும்..” என்றான் அர்ஜூன்.