இரண்டு வருடம் முடிந்திருக்க.. ஆதிரை ஆண் மகவை ஈன்றிருந்தாள். குழந்தை பிறந்த பத்தாவது நாள் பார்த்து சென்றவன்.. மீண்டும் மூன்று மாதம் கழித்து மனைவி குழந்தையை பார்க்க வந்து ஆதிரையின் வீட்டில் இரண்டு நாள் தங்கியிருந்து சென்றிருந்தான்.
வாரம் நான்கைந்து முறையாவது வீடியோ காலில் பேசிடுவான்.. இப்படியாக மீண்டும் மூன்று மாதம் முடிந்த பின்னே கர்ணனோடு வந்தான் அதிரூபன். ‘அப்பா..” என ஓடி வந்த மொழியாளை அள்ளிக்கொண்டவன்.. ‘பெரியப்பா டா.” என கர்ணனை அறிமுகம் செய்தான்.
‘எந்த பெரியப்பா ப்பா.?” என மூன்றரை வயது மொழியாள் தெளிவாய் கேட்டாள். ‘நம்ம பெரியப்பா டா..” என்க.. ‘ப்பா.. பெரிய்ய்ய அப்பா..” என தன் கைகளை விரித்து காட்டி சிரித்தாள் மொழியாள்.
ரூபனின் குரலில் வெளியே வந்த ஆதிரை.. ‘வரேன்னு ஒரு ஃபோன் செய்தா என்னவாம்..?” என முறைத்தாள் கணவனை. ‘பட்டம்மா அப்பா..” என சந்தோசித்தவள்.. ‘ப்பா.. உள்ள தங்கம்..” என அழைத்து சென்றாள் தன் தம்பியை காட்ட..
கர்ணனை கண்டு சந்தோசித்தவள்.. ‘நல்லாயிருக்கிங்களா மாமா.. பாரின்லயிருந்து எப்போ வந்திங்க.?” என விசாரித்தபடி தண்ணீர் கொடுத்தாள்.
‘நல்லாயிருக்கியா ஆதி..?” என கேட்டவன் ஆதிரையின் கேள்விக்கு பதிலளிக்காமல் இருக்கவும்.. ‘நேரா இங்கதான் வந்திங்களா.? குழந்தையைப் பார்;க்கவா..? தூங்கிட்டிருக்கான்.. உள்ள வாங்க மாமா..” என்றாள் மகிழ்வாக.
‘குழந்தை எழுந்ததும் பார்த்துக்கலாம் ஆதி..” என்றான். கணேசன் கனகா கர்ணனின் நலம் விசாரிக்க.. ஆதிரை.. ‘மொழியாள்மா அப்பாவ தம்பிய தூக்கிட்டு வர சொல்லுடா..” என்றாள்.
‘பட்டம்மா அப்பா அழுக்கு..” என உள்ளிருந்து பதில் கொடுத்த மொழியாள் குழந்தையை தொட விடவில்லை ரூபனை.
சிரிப்போடு உள்ளே சென்றவள்.. ‘போய் குளிங்க..” என்க.. ‘நானும் கர்ணாண்ணாவும் ஒரு மணி நேரம் முன்னதான் சென்னைல குளிச்சிட்டு வந்தோம்..” என்றான் சலிப்பாக.
‘பட்டுக்காக முகம் கையாவது கழுவி டிரெஸ் மாத்திட்டு வாங்க..” என பணித்து குழந்தையோடு வெளியே வந்தாள். பத்து நிமிடத்தில் முகம் கழுவி உடை மாற்றி வந்தவன்.. ‘இப்போ தம்பியை தொடலாமாடா பட்டு..?” என்றான்.
‘ம்..” என மொழியாள் சம்மதம் தெரிவிக்க.. தன் தங்கத்தை சற்று நேரம் கொஞ்சி பிறகு பட்டுவை கொஞ்சி.. ‘எல்லாருக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு..” என்றான்.
அதிரூபன் கர்ணன் இருவரும் உண்டு முடித்த ஒரு மணி நேரத்தில் ரூபன் சொன்னது போல மொத்த குடும்பமும் வந்திருக்க.. பரஸ்பர நல விசாரிப்புக்கு பின்.. தன் மொபைலில் உள்ள படத்தை தொலைகாட்சியில் ஒளிபரப்பினான்.
அதில் கர்ணன் வித்யாசமான கெட்டப்பில் கம்பீரமாய் தோற்றமளிக்க.. ‘இது யார்ங்க..? நம்ம கர்ணா மாமா மாதிரி..” என புலம்பியவள் சந்தோசத்தோடு ரூபனைப் பார்க்க.. ஆம் என்பதாய் தலையசைத்தான்.
‘எப்படிங்க.? மாமா..?” என விழி விரித்தவள்.. “உங்களுக்கு நடிக்க தெரியுமா.?” என ஆர்ப்பரித்தாள் ஆதிரை.
ராஜாத்தி காஞ்சனா இளங்கோவென மொத்த குடும்பத்திற்கும் பெரும் அதிர்ச்சியென்றாலும் அனைவருக்கும் சந்தோசமே.
கர்ணன்.. ‘இந்த கேரக்டருக்கு புதுமுகம் தேடிட்டிருந்தாங்களாம்.. ரூபன் என் போட்டோவை அனுப்பியிருக்கான்.. அவங்க நேர்ல வர சொல்லவும் வந்தேன்.. போட்டோ சூட் எடுத்து பார்த்தவங்க.. நடிக்க தெரிஞ்சா இந்த கேரக்டருக்கு பர்பெக்டா இருப்பேன்னாங்க.. ட்ரை பண்ணினேன்.. நடிக்க தெரியும்போலன்னு ஒத்துக்கிட்டாங்க.. நடிச்சும் முடிச்சாச்சி.. நாளை படம் ரிலீஸ் ஆகுது..” என்றான் ஆர்பாட்டமில்லாமல்.
‘வாவ்.. சூப்பர் மாமா..” என சந்தோசித்தாள் ஆதிரை.
அதிரூபன்.. ‘இந்த படம் டீசர் பார்த்ததுக்கப்புறம் கர்ணாண்ணாக்கு இன்னும் நாலு படம் புக்காகியிருக்கு.. எல்லாம் முக்கியமான ரோல்..” என்றான் பெருமையாக.
‘இனி கர்ணன் குழந்தைகளையும் என்னையும் விட்டுட்டு வெளிநாடு போகத்தேவையில்ல..” என ஆனந்த கண்ணீர் வடித்தார் ராஜாத்தி.
கர்ணன்.. ‘ஏம்மா பசங்களையும் லீவ் போட்டுட்டு கூட்டிட்டு வர சொன்னனே..?” என்றான் ஏமாற்றமாக.
‘இப்படினு தெரிஞ்சிருந்தா கூட்டிட்டு வந்திருப்பேன் கர்ணா.. பரிச்சை நெருங்கும் நேரத்துல எதுக்கு லீவ் போடனும்னு ஸ்கூல் அனுப்பிட்டேன்..” என்றார்.
‘சரி விடுங்க.. ஸ்கூல் விடறதுக்குள்ள வீட்டுக்கு போய்டலாம்..” என்றான்.
‘அப்போ போன முறை வந்து போனப்ப நீ பாரின் போகலயா கர்ணா.?” என்றார் இளங்கோ.
‘போகல மாமா.. வந்ததே படம் நடிக்கத்தான்.. எனக்கு நடிப்பு வருமா.? இல்ல ரிஜக்ட் பண்ணிடுவாங்களான்னு முழுசா தெரியாததால யார்கிட்டயும் சொல்லல..” என்றான்.
பின்பு மதியம் போல் அனைவரும் கிளம்பியிருக்க.. குழந்தைகளோடும் தூக்கத்தோடும் பகல் பொழுதை செலவிட்டவன்.. நீண்ட நெடிய மாதங்களுக்கு பிறகு தனதறையில் ஆதிரைக்காக காத்திருந்தான்.
குழந்தை பிறந்து ஐந்தாவது மாதத்தில் கணவன் வீடு வந்த ஆதிரை.. பட்டு பாரபட்சமாய் நினைத்திட கூடாதென தன் மகனையும் கனகா அறையில்தான் படுக்க பழக்கியிருந்தாள். மாரியப்பனும் ஆதிரையும் ஹாலில் படுத்துறங்குவர். குழந்தை அழும் நேரம் எழுந்து பசியாற்றி வருவாள் ஆதிரை.
தற்போது குழந்தைக்கு ஆறு மாதம் முடிந்திருக்க பழம் இட்லியோடு இரவு நேரங்களில் பசும்பாலும் கொடுக்க பழக்கியிருந்தனர்.
மருமகளின் தவிப்பறிந்து.. ‘ஆதி போய் படு.. தங்கம் ரொம்ப தேடினானா எழுப்பறேன்..” என்றார் கனகா.
‘இல்லத்தை.. குழந்தைங்க தூங்கினதுக்கப்புறம் போறேன்..” என குழந்தைகள் தூங்கும் வரை அவர்களோடு இணைந்திருந்து தூங்கிய பின்னே வெளியே வந்தாள்.
வளைகாப்பு முடிந்து ஒன்பதாவது மாதத்தில் தாய் வீடு சென்ற ஆதிரைக்கு.. நீண்ட நெடிய மாதத்திற்கு பின் கணவனோடான தனிமை வழக்கம்போல் படபடப்பை கொடுக்க தயங்கியபபடிதான் உள்ளே வந்தாள்.
‘பட்டு..” என அணைத்துக்கொண்டான் மனைவியை. ஆனால் பெண்டாளும் எண்ணமெல்லாம் இல்லை. தன்னை புரிந்த பின்னே ஆதிரை தன் அருகாமையை எந்தளவிற்கு தேடுவாள் என அறிந்தும்.. சூழ்நிலை காரணமாக நீண்ட மாதம் ஆதியை தவிக்க வைத்த தவிப்போடு அணைத்திருந்தான்.
நீண்ட நேரம் அணைப்பிலிருந்தவள் பிறகு விலகி.. ‘என்ன.? வழக்கத்துக்கு மாறா இன்னைக்கு உங்க ஹார்ட் பீட் அதிகமா கேக்குது..” என்றாள் சிரிப்போடு.
‘ஹா..ஹா.. அப்படியா.? ரொம்ப அதிகமா கேக்குதா.? எதாவது செய்து அதை சமன் செய்யேன்..” என்றான் கொஞ்சலாக.
‘என்ன செய்தா குறையுமோ செய்துக்கோங்க..” என சிவந்து தலைகுனிந்தாள்.
‘ம்ஹ_ம்.. அப்படியா.?” என ஆதியின் முகம் நோக்கி குனிந்து கேட்டான் குறும்பாக.
வெக்கத்தில் மேலும் சிவந்தவள்.. வழக்கம்போல் சுவற்றுப் புறம் திரும்பி நிற்கவும்.. அருகே வந்தவன்.. ‘பட்டுக்கு ஒரு தம்பி போதும்.. அதெல்லாம் இப்போ வேணாம்.. பேசிட்டிருக்கலாம் வா..” என கைப்பிடித்து அழைத்து வந்து கட்டிலில் அமர்த்தினான்.
ஆதிரை அமைதியாய் இருக்க.. ‘என்ன சொல்லி உன் மொழியாளை சமாளிச்ச.?” என தானே ஆரம்பித்தான்.
ஆதிரை கருவுற்றிருக்கும்போதே அத்தனை கேள்வி எழுப்பும் மொழியாளை சமாளிப்பது பெரும் கஷ்டம் என ரூபனிற்கு தெரிந்துதான் இருந்தது. ஆனால் எதுவும் செய்ய முடியாத சூழலில் சிக்கிக்கொண்டான்.
‘எப்படியோ நான் இல்லாமலே சமாளிச்சிட்ட..” என்றான் பெருமையாக.
‘வார வாரம் மாமாவும் அத்தையும் பட்டுவை கூட்டிட்டு என்னை பார்க்க வந்திடுவாங்க.. அதுல கொஞ்சம் சமாதனம் ஆனா.. எனக்குத்தான் இந்த கேப்புல என்னை வெறுத்துடுவாளோன்னு ரொம்ப பயமாகிடுச்சி.. நல்ல காலம் அப்படி எதுவும் ஆகல..” என்றாள் நிம்மதியோடு.
‘ம் என்னோட ரெண்டு பட்டுகளும் ரொம்ப சமத்து..” என கன்னத்தில் முத்தமிட்டான்.
‘கர்ணா மாமா குழந்தைங்க அம்மாவும் இல்லாம அப்பாவும் பக்கத்தில இல்லாம ரொம்ப கஷ்டப்படுறாங்கனு நான் புலம்புனதுனால இப்படி செய்திங்களா.?” என்றாள் பெருமையாக.
‘அதுவும் ஒரு காரணம்.. ஆனா கர்ணாண்ணாக்கு திறமையில்லனா இது சாத்தியமேயில்ல.. நானே எதிர்பார்க்காத அளவுக்கு சூப்பரா கோவப்ரேட் செய்தார். டைரக்டருக்கு ரொம்ப திருப்தி.. இனி கர்ணாண்ணா என்னை விட பிஸி ஆகிடுவாங்க.. இந்த படம் வந்ததுக்கப்புறம் பிரபலம் ஆகிடுவாங்க..” என்றான் பெருமையாக.
‘அந்த அரவிந்தனை என்னனு மிரட்டுனிங்க.? பொறுப்பா அவன் தங்கைக்கு அவனே நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வச்சிருக்கானாம்.. அம்மா சொன்னாங்க.. கல்யாணத்துக்கு அம்மாக்கு பத்திரிக்கை கூட வச்சானாம்..” என்றாள் துப்பறியும் பார்வையோடு.
‘ஏய்.. எல்லாத்துக்கும் நான்தான் காரணமா.?” என ரூபன் நழுவ.. ‘உங்களைத் தவிர யார் என்ன சொன்னாலும் அவன் திருந்த மாட்டான்.. அதுவும் அம்மாக்கு பத்திரிக்கை வச்சிருக்கான்னா அது உங்க பயம் இல்லாம சாத்தியமே இல்ல..” என்றாள் திடமாக.
தன்னை கண்டு கொண்டாள்.. இனி உண்மையை வாங்காமல் விடமாட்டாள் என்றுணர்ந்து.. ‘ஒழுங்கா நல்ல பையனா பார்த்து தங்கைக்கு கல்யாணம் செய்து வைக்கிறியா.? இல்ல நானா ஒரு மாப்பிள்ளை பார்த்து கட்டி வச்சி மொத்த சொத்தையும் கனிகாக்கு எழுதி வைக்க வைக்கட்டுமானு கேட்டேன்.. பையன் பயந்துட்டு தீயா வேலை செய்து ஆறே மாசத்துல கல்யாணத்தை முடிச்சிட்டான். ஆனா அத்தைக்கு பத்திரிக்கை வக்கிறதெல்லாம் உண்மையா நான் சொல்லல..” என்றான்.
‘ஒரு பத்து நாள்.. அதுக்கப்புறம் ஒரு ஆறேழு நாள் வேலையிருக்கு.. அதுக்கப்புறம் இரண்டு மாசம் இங்கதான் இருப்பேன்..” என்றான் சந்தோசமாக.
தானும் சந்தோசித்தவள்.. ‘என் ஹார்ட் பீட் கேக்கலயா.?”என்றாள் மைய்யலாக.
‘நல்லா கேக்குது.. ஆனா..” என கன்னத்தில முத்தமிட்டு.. ‘இப்போதைக்கு இது போதும் படு..” என்றான்.
‘நீங்க பயப்பட தேவையில்ல.. பட்டுக்கு ஒரே தம்பிதான்.. ப்ளானிங் செய்துக்கிட்டேன்..” என்றாள் கிசுகிசுப்பாக.
‘ஏய்.. டாக்டர் வீக்கா இருக்க.. இப்போதைக்கு வேணாம்தான சொன்னாங்க.? எப்போ செய்த.? ஏன் என்கிட்ட சொல்லல.?” என்றான் படபடப்பாக.
‘உங்களை விட்டு அவ்வளோ சீக்கிரம் போக மாட்டேன்ற நம்பிக்கையில வேற டாக்டர்கிட்ட செய்துகிட்டேன்.. இங்க வந்ததுக்கப்புறம்னா திரும்பவும் மொழியை பிரியனும்.. இப்போலாம் ரொம்ப விபரமாகிட்டா.. அடுத்த வருசம் ஸ்கூல் சேர்த்தனும்..
அதான் அங்க இருக்கும்போது கையோட முடிச்சிடலாம்னு செய்துகிட்டேன்.. உங்க தங்கத்துக்கு மூனு மாசம் ஆகும்போது வந்து போனிங்கள்ல.? அதுக்கடுத்த நாள்தான் ஹாஸ்பிட்டல் போனேன்..” என்றாள்.
‘செக்கப்லாம் சரியா போனியா.? டாக்டர் என்ன சொன்னாங்க.?”
‘அச்சோ.. அதெல்லாம் சரியாதான் போனேன்.. எல்லாம் சரியா இருக்கு.. இத்தனை பேர் மாஞ்சி மாஞ்சி என்னை கவனிச்சிக்கும் போது எனக்கென்ன கவலை..” என்றாள் கோபமாக.
ரூபன்.. ‘ஆப்ரேசன் செய்து மூனு மாசம்தான ஆகுது.? பேசாம தூங்கு..” என தானும் கடுகடுத்து லைட்டை அணைத்து படுக்க.. ‘என் ஹார்ட் பீட்டை சரிசெய்தாதான் தூங்குவேன்..” என ஆதிரை கணவனை அணைத்தாள்.
‘ப்;ச்.. ஆதி..” என அதிரூபன் மனைவி புறம் திரும்ப.. ‘ப்ச் அதி..” என இவள் இன்னும் நெருங்கி படுக்க.. அதற்கு மேல் தாளமுடியாதவனாய் மனைவியை அணைத்தான்.