இரயில் புறப்படும் அறிவிப்பைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்கெல்லாம் பச்சைக் கொடி அசைக்கப்பட, பாம்பே(பம்பாய்) தாதரிலிருந்து மெட்ராஸ்(மதராஸ்)-சிற்கு செல்லும் இரயில் மெல்லப் புறப்பட தயாரானது.
ஜன்னல் வழியே பல கைகள் வெளியில் நின்றுக் கொண்டிருந்த சொந்தங்களுக்கும் நண்பர் கூட்டத்திற்கும் கையசைக்க அவர்கள் பங்கிற்கு வெளியே நின்றிருந்த ஜனக்கூட்டமும் கையசைத்து உள்ளிருந்த சொந்த பந்தங்களை வழி அனுப்பிக் கொண்டிருந்தது.
கடைசி நேரம் இரயில் ஏற நினைப்பவர்களுக்கு அந்த கூட்ட நெரிசலைத் தாண்டி ஏறுவது சவாலான விஷயம் தான். ஆனால் அவனுக்கு அப்படி ஒன்றும் இல்லை போலும்.
கிளம்பிய இரயிலோ… வழியை அடைத்து நின்றிருந்த கூட்டமோ அவனை நிறுத்துவதாய் தெரியவில்லை.
இரயில் பெட்டியின் கதவுகள் திறந்திருக்க.. அந்த வழி மட்டும் தான் அவன் இலக்காய் இருக்க, அந்த திறந்திருந்த கதவின் வழி, ப்ளாட்ஃபார்ம் முடியும் தருவாயில் அவன் வேகம் பிடித்திருந்த இரயிலில் ஏறினான்.
பிரயாணப்படுபவன் கையில் பெட்டியோ முதுகில் பையோ எதுவும் இல்லை. சுமப்பதற்கு சுமைகள் இல்லை என்றாலும்.. சுகமான சுமைகள் இதயம் முழுவதும் இருந்து கனக்கத்தான் செய்தது.
போட்டிருந்த வெள்ளை வேட்டி சட்டையும், கையிலிருந்த காப்பும் தான் அவனின் உடைமை. தீர்க்கமான பார்வையும், அழுத்தமான உதடும், முறுக்கி விட்ட மீசையும் அவனைத் தனியே நிறுத்திக் காட்டும்.
முன்பெல்லாம் அடிக்கடி அவன் இடது ஆட்காட்டி விரலால் மீசையை மேல் தூக்கிவிட்டுக் கொள்வான்… கர்வமாய்! அவன் அதை முறுக்கிவிடும் அழகே தனி. ஆனால் அந்த பழக்கம் அவனை விட்டுச் சென்று வருடம் ஒன்றாகிறது. இன்று அந்த மீசை மேல் அவனுக்கு நாட்டமும் இல்லை… கர்வமும் இல்லை!
[the_ad id=”6605″]“உங்க மீசை அழகா.. இல்ல நீங்க அத தூக்கிவிடுற ஸ்டைல் அழகான்னே தெரியலையே..? இன்னும் ஒரு தரம் செய்யுங்களேன்..”, என்பாள் அவள். அதற்காகத் தான் இன்னும் அதை வைத்திருக்கிறான்.
அவன், மூர்த்தி. முப்பதுகளின் மத்தியிலிருக்கிறான். பார்த்தால் நாற்பதைத் தொட்ட நலுங்கிய தோற்றம். மெலிந்து கருத்திருந்தான். முகமோடு உடலும் களைத்து போயிருந்தது.
வாசலில் நின்றிருந்த முதியவர் அவனை கூர்ந்துப் பார்த்தார். தெரிந்த முகம் ஆனால் பிடிபடவில்லை அவருக்கு. நேரம் பிடித்தது அவனை அடையாளம் காண. அவன் நொடி பொழுதில் கண்டுக்கொண்டான், அவரை.
காற்றில் கலைந்த கேசத்தை கை கொண்டு படிய வைத்தான். அடர்த்தியாயிருந்த முடி அடர்த்தி குறைந்து நெற்றி ஏறி இருந்தது. ஒன்றிரண்டு வெள்ளை கம்பியும் எட்டி பார்க்க ஆரம்பித்துவிட்டிருந்தது.
“கொஞ்சம் குனியிங்க மூர்த்தி சார்.. இப்படி விறைப்பா நின்னா, நான் எப்படி தலை வாருவேன்?”, அவன் காலில் நின்று கொண்டு கண்ணாடி வளையல் குலுங்க.. அவள் அவனுக்கு தலை வார.. அவள் விழாமல் இருக்க அவளை இடையோடு கட்டி கொண்ட நாட்கள் அவன் இதழை விரிய வைத்தது. அவள் கை அவன் தலையை வருட இவன் பார்வை அண்ணாந்திருக்கும் அவள் வசீகர முகத்தை வருடும்.
அவன் உதட்டோர லேசான புன்னகையைப் பார்த்ததும் முதியவருக்குத் தெரிந்துவிட்டது போலும்.
“நீங்களா தம்பி…? ஆளையே அடையாளம் தெரியலை. எப்படி இருக்கீங்க?” முதியவர் கேட்டார் அவனிடம்.
அவர், பதிலை எதிர்பார்த்து அவன் முகம் நோக்க.. கீற்றுப் புன்னகையே பதிலாக வந்தது.
அவன் பதிலளித்துவிட்டான், அதை எப்படி வேண்டுமென்றாலும் அவர் எடுத்துக் கொள்ளலாம்.
“ட்ரெயின் போனா.. அடுத்ததில ஏறலாம் இல்லையா…? ஏன் தம்பி இப்படி ட்ரெயின் வேகம் எடுத்த பிறகு.. உயிரைப் பணயம் வஞ்சு இதில ஏறணுமா?”
இம்முறை அவர் பதில் எதிர்பார்த்தாரா? தெரியவில்லை. ஆனால் அவன் பதிலுரைத்தான்.
“இல்லங்க… இத நான் மிஸ் பண்ண முடியாது. என் துளசி எனக்காக காத்திட்டு இருப்பா… போகணும்!” என்றான். இந்த ஒரு வருடத்தில் அவன் பேசிய மிக நீளமான வரி இது தான்.
அந்த ஒற்றை வரி பதிலில் என்ன இருந்ததோ தெரியவில்லை.. அவன் அடிமனது வரை குளிர்ந்து தித்தித்தது. அவன் உச்சரித்த பெயராக இருக்கும்!
இந்த இரயிலைத் தவற விட்டால் மதராசிலிருந்து அவன் ஊருக்கு செல்லும் அடுத்த இரயிலையும் பிடிக்க முடியாது. துளசியை இருதினங்களில் பார்க்கமுடியாமல் போய்விடுமே. அதனால் அவன் ஓடும் ரயிலில் ஏறவேண்டியதாய் போனது.
நாளை மறுநாளோடு ஒரு வருடம் முடிந்துவிடும், அவளை அங்கு விட்டு வந்து! தோட்டத்தின் கடைசியிலிருந்த மகிழ மரத்தடியில் விட்டு வந்தான். பரந்து விரிந்து பூத்துக் குலுங்கும் மரம். துளசிக்கு மகிழம் பூ மிகவும் பிடிக்கும். அதன் அடியில் இருவாட்சி வளர்த்து, மரத்தில் படரவிட்டிருந்தாள்.
அவளுக்காகவே மரத்தைச் சுற்றி அகலமான திண்டு கட்டியிருந்தான். அங்கு அமர்ந்து தான் பூ தொடுப்பாள். மலர்ந்தும் மலரா பாதி மலரை அவள் தொடுக்க அவன் தான் சூட்டிவிடுவான்.
மரத்தடியில் இரண்டு மலர்களின் மணத்தில் அவள் மயங்க, அவன், அவள் மணத்தில் மயங்கி நிற்பான்.
“என்ன வாசம் துளசி?” அவள் தொண்டைக் குழியில் இதழ் பதித்த அன்று கேட்டான். அவள் தொண்டைக் குழியில் என்ன தான் இருக்குமோ தெரியாது.. அங்கு இதழ் பட்டதும் தன்னை மறந்து அவளோடு அவனும் கிறங்கிப் போவான். விட்டால் அங்குப் புதைந்தும் போவான்.
“பன்னீர் ரோஜா எண்ணை வாசம்”, என்றாள், செம்மை படர்ந்த முகத்தோடு. பன்னீர் ரோஜா, அவள் நிறத்தை அன்று பார்த்திருந்தால் வெட்கி நாணி ஓடியிருக்கும்.
அவனுக்கு என்னமோ பன்னீர் ரோஜாவிற்குக் கூட மணம் குறைவு என்று தான் தோன்றும்.
ஏதோ அவள், அவன் முன் இருப்பது போல் கண்மூடி மூச்சை உள்ளிழுத்து கொண்டான்.
‘என் துளசி’ மனம் பறைசாற்றியது.
[the_ad id=”6605″]சீக்கிரம் வந்துவிடுவதாய் துளசியிடம் சத்தியம் செய்திருந்தான். சென்றே ஆகவேண்டும். அவளை ஏமாற்ற முடியாது. வாடிவிடுவாள். அவனின் அனிச்சம் பூ அவள்!
“குழந்த நல்லா இருக்காளா தம்பி? பார்த்து எத்தன வருஷம் ஆச்சு!” முதியவர் பேச, மீண்டு வந்தவன், மீண்டும் புன்னகையை மட்டுமே பதிலாய் தந்தான்.
அவன் அப்படி தான்.. அவரிடம் அதிகம் பேசியதில்லை. அதனால் முதியவர் பதிலுக்குக் காத்திருக்கவில்லை.
அவர் துளசியைத் தான் குழந்தை என்றார். அவள் முகம் அப்படி தான் இருக்கும், அதனால்!
முகம் மட்டுமா? குணமும் அப்படி தான். கள்ளம் கபடம் தெரியாது. எதற்கும் அவன் முகம் பார்த்து நிற்பாள்… மூன்று வயது பிள்ளைபோல், கண்ணில் நீர் தேக்கி, உதடு பிதுக்கி அவனைப் பார்க்க… புயலில் தாக்கப்பட்ட மரமாய் அவள் கடலடியில் வேரோடு சாய்ந்து விழுவான். அவன் கோடையின் மழை அவள்… அவன் துளசி!
இம்முறை பெரியவரும் அவனும் எதிர் எதிரே அமரவில்லை.
“பாப்பாவ விசாரிச்சதா சொல்லுங்க தம்பி”, கூறியவர் சென்றுவிட்டார்.
இவனுக்கான இடத்தை தேடிப் பிடித்து ஜன்னல் அருகே கண் மூடி அமர்ந்து கொண்டான். இப்படி தான் அன்றும் அமர்ந்திருந்தான். அவன் மடியில் அவன் துளசி தலை சாய்த்திருந்தாள். இன்று அவன் மடியில் அவளில்லை. அவள் மடி தேடித் தான் சென்று கொண்டிருக்கிறான்.
இன்றைய மும்பை… அன்றைய பம்பாய். அங்கிருந்து மதராஸ் என அழைக்கப்பெற்ற சென்னையை நோக்கி ஒரு பயணம். அவனின் கடைசி பயணமுமாக இருக்கலாம்.
இனி பம்பாயில் அவனுக்கு வேலையில்லை.
மதராஸ் வந்து அடுத்த இரயிலும் ஏறிவிட்டான், அவன் சொந்த ஊர், மலையடிக்குச் செல்ல. தமிழ்நாட்டின் தெற்கு மூலையிலிருந்த அழகான மலை அடிவாரம்.
முன் போலவே அமைதியாய் அமர்ந்து கொண்டான். எதிரில் ஆட்கள் இருந்தாலும்.. அவர்களை அவன் பார்த்தாலும்.. ஒருவரும் அவன் சித்தத்தில் பதியவில்லை.
அவள் அவன் வானம்… அதில் அவன் ஒரு காற்றாடி.. அவள் நினைவுகளில் இலக்கில்லாமல் பறந்து கொண்டிருந்தான்.
யாரிடமும் பேசவில்லை. ஜன்னல் வழி இரவு முழு நிலவைப் பார்த்தான். அவன் துளசி அதை விட அழகு. களங்கமற்ற அவன் துளசியைக் களங்கமான நிலவோடு ஒப்பிடலாமா? அவனுக்கு அது பிடிக்காதே..
“முழு நிலா.. மூர்த்தி சார்! என்ன ஒரு அழகு?” அன்றொரு நாள் துளசி கூறினாள், மொட்டை மாடியில் தென்னங்கீற்றின் இடையே தெரிந்த நிலவைப் பார்த்து.
“உன்ன விடவா துளசி…” என்றான் அவள் மடி சாய்ந்து, அவள் பஞ்சு கையை கன்னத்தில் வைத்துக்கொண்டு! இன்று மனம் ஏங்கியது அவள் மடி சாய. மேகம் மீது படுத்தால் இப்படி தான் இருக்கும் என்று நினைத்து லயித்த காலம் அது.
இரவு முழுவதும் கண்ணயரவே இல்லை. மனம் முழுவதும் அவள் தான். தூக்கம் எங்கிருந்து வரும்? அவளைச் சேரும் பேராவலில் தூக்கம் என்ற ஒன்றை மறந்திருந்தான். அதை அவன் மறந்து வருடம் ஒன்றாகிவிட்டது என்பது தான் உண்மை.
துளசியிடம் சென்ற பின் நிம்மதியான நித்திரையில் ஆழலாம். இன்னும் சில மணி நேரப் பயணம் தான், விடியலில் அவன் தோட்டத்தை அடைந்துவிடுவான்.
அவன் துளசி அவனுக்காகக் கண்டிப்பாக அங்கு காத்திருப்பாள். இனி அவர்களை யார் பிரிப்பது? அவன் தனித்திருக்கக் காரணம் இல்லை.
இரயில் மிதமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. அவன் எண்ணங்களும்.
பல வருட எண்ணங்கள் பசுமையாய் அவனை நிறைத்தது.
[the_ad id=”6605″]ஒரு வருடப் பிரிவு! மூடிய இமைகளின் நடுவே ஒரு சொட்டு நீர் எட்டிப் பார்த்தது. கூடவே மூடியிருந்த இமைக்களின் நடுவே அவள் வந்துவிட்டாள்.
புன்னகை முகமாய், “மூர்த்தி சார்” என்றாள். கண்டிக்கும் தோரணை. அவன் இதழும் தன்னால் விரிந்தது. எதற்கும் ‘மூர்த்தி சார்’ தான்! ஆனால் பல விதமாய் அதை உச்சரிப்பாள். அந்த அழைப்பில்… அந்த உச்சரிப்பிலேயே அவனுக்கு அவள் மனம் புரிந்து போகும்.
‘துளசி’ துள்ளிக் குதித்த மனம் அவளை மட்டும் தான் நினைத்தது.
அவன் துளசி.. அவன் ஜீவனின் அச்சாணி. அவளின்றி அவனில்லை. ஒரு வருடமாய் வெறும் மூச்சு விடும் கூடாய் சுற்றித்திரிந்தான். எல்லாம் ஒரே ஒரு காரணத்திற்காக!
காரணம் முடிந்தது. உயிரைத் தேடிச் சென்று கொண்டிருக்கிறது உடல்.
இரயில் ஏதோ ஒரு நிலையத்தில் நிற்கவும், வயது பெண்ணொருத்தி, “சார்.. கொஞ்சம் கால்ல எடுங்களேன்… கீழ இருக்கப் பெட்டி எடுக்கணும்”, என்றுவிட்டு அவன் முகம் பார்த்து நின்றாள்.
வயது பெண். தனிமையில்.. இரவு நேரத்தில்.. இரயிலில் பயணப்படுவதை பார்த்தான். என்ன நினைத்தானோ.. நீண்ட மூச்சோடு, சாய்ந்து அமர்ந்திருந்தவன் மெல்ல நிமிர்ந்து அமர்ந்தான்.
கால்களை நகர்த்தவும் பெட்டையை எடுத்தவள், “தாங்க்ஸ் சார்”, என்றுவிட்டு சென்றாள். அவனிடமிருந்து ஒரு தலையசைப்பு மட்டும் தான்.
மீண்டும் இரயில் கிளம்பியது.
அவனும் அவன் எதிரில் ஒரு இளம் தம்பதியினர் மட்டுமே அந்த இடத்தில். புதுமண தம்பதியினராய் இருக்க வேண்டும்… அவள் முகப்பொலிவும், கண்ணில் கனவும், இதழ் கடித்த நாணச் சாயலும், புது மஞ்சள் சரடும் காட்டிக் கொடுத்தது.
“மாமா..” என்றாள், அவள் கணவன் கையை சுரண்டிக்கொண்டே. அவன் அவள் புறம் திரும்ப, நெளிந்து கொண்டே அவள் ஏதோ கூறினாள் அவன் காதில்.
“வா” என்று கூறிவிட்டு எழுந்து நடந்தவன் பின்னோடு அவளும் பேசிக்கொண்டே சென்றாள்.
துளசியும் இப்படி தான் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பாள். சாப்பிடும் வேளை கூட பேசிக்கொண்டே தான் சாப்பிடுவாள். அவனும் அவளோடு பேசுவானே.. இப்படி அளந்தளந்தெல்லாம் அவளிடம் பேச முடியாது.
ஒரு வருடம் முன் அவன் நெஞ்சில் தலை சாய்த்துக்கொண்டே துளசி பேசியது ஏதோ இன்று பேசியது போல் இன்னும் மனதில் வரி மறக்காமல் ஒலித்தது.
இரு உள்ளங்கைகளையும் திறந்து பார்த்தான். இரத்தக் கறை இல்லை. கை சுத்தமாகத் தான் இருந்தது.
சரியாக பதினொரு மாதத்தில் இருபத்தி நான்கு அரக்க உயிர்களை எடுத்த கைகள். தயவு தாட்சணியம் இன்றி ஒவ்வொரு ஓநாய்களையும் தேடிப்பிடித்து வேட்டையாடி கொன்று குவித்தான். களைகளை என்ன பிடுங்கினாலும் அது மீண்டும் முளைக்கும் என்று தெரியும். அதற்காக தன் வீட்டு செடியை விழுங்க நினைக்கும் களைகளையாவது பிடுங்கித் தானே ஆக வேண்டும்? அதனால் கடலளவு கிருமிகள் இருந்தாலும் கையளவு, பாதிப்பை ஏற்படுத்திய கிருமிகளை… அழித்துவிட்டான். நேற்று தான் வெறி அடங்கியது.
கண்ணை மீண்டும் மூடிக்கொள்ள..
“மூர்த்தி சார்…”, அது துளசியின் சத்தம். மாம்பழ கொட்டைக்குள் இருக்கும் வண்டாய் அவள் சத்தம் என்றும் அவனுள் ரீங்காரம் இட்டுக் கொண்டேதான் இருக்கிறது.
“நீங்க இல்லாம நான் நல்லாவே இல்ல மூர்த்தி சார்!”, அவனைப் பார்க்காமல் போனால் அப்படி தான் கூறுவாள்.
இம்முறை அவனும் கூறிக்கொண்டான், “நான் கூட துளசி!”, என்று!
“இன்னும் ரொம்ப நேரம் ஆகுமா மூர்த்தி சார்?” அவள் தனிமையில் தவித்தால் வரும் கேள்வி இது!
“இதோ துளசி…. வந்துட்டேன்..” சொல்லிக் கொண்டான்.
இரயில் தடதடக்க அவன் மனம் அமைதியாய் இருந்தது. வருடங்கள் முன், முதல் முறை அவளைப் பார்த்த நாளுக்கு மனம் ஊர்ந்து சென்றது.
அன்று அவள் பதினாறு வயது அழகிய தேவதை. இல்லை, இல்லை.. அழுக்கு பரட்டை குட்டி ஒன்று ஆட்டுக் குட்டி பின் ஓடிக்கொண்டிருந்தது. அவளே தான்.. அவன் துளசி!
அவள் பின்; அன்று அவன் மனமும், இன்று அவன் மூச்சுக் காற்றும்!
மிக நீளமான அவன் பயணம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. தோட்டத்தை அடைந்தான்.. மகிழமும் இருவாட்சியும் கொட்டி கிடக்க, அவள் மணம் மனதை நிறைத்தது. அவளை உணர, தொண்டைக் குழியில் இதழ் பதிக்க அவசியம் இருக்கவில்லை.
அங்கு தான் அவன் துளசி சலனமில்லாமல் அமைதியாய் காத்திருந்தாள்.
“மூர்த்தி சார்” அவள் குரல் ஒலிக்க… காத்திருந்தவள் அருகே சென்றான்.
“துளசி” என்றான்… அடைத்து இம்சித்திருந்த மூச்சுக் காற்று நிம்மதியாய் வெளிவந்தது.
அவன் செம்புலம். மூர்த்தியை தன்னுள் புதைத்து.. முற்றிலும் ஆட்கொண்ட நீர்த்துளி, அவள்.
அவள், மூர்த்தியின் துளசி!
நீர்த்துளியை சேர்ந்தது செம்புலம்!