வரம் வாங்கி வந்தவள் நான்
அத்தியாயம் – 5
சுந்தர் தர்ஷினியோடு வண்டியில் வந்து கொண்டிருக்க ஊரின் மத்தியில் இருக்கும் அந்த டீக்கடையை தாண்டும்போதே அங்கிருந்தவர்களின் பார்வையை பார்த்து தர்ஷினியை வண்டியில் அழைத்து வந்து தவறு செய்துவிட்டோமோ என்று மனது உறுத்த துவங்கியது.. தேவையில்லாம சும்மா போயிட்டு இருந்த பொண்ணுக்கு உதவிங்கிற பேருல உபத்திரத்தை கொடுத்திடுவோம் போல..
நான்கு தங்கைகளோடு பிறந்ததால் இது போல பெண்கள் விசயத்தில் எப்போதும் நெருப்பாக இருப்பவன் தர்ஷினியை பார்க்கவும் மனம் சற்று தடுமாறியிருக்க அப்போது அவளை தனியாக விடக்கூடாது என்பது மட்டும் குறியாக இருந்தது.. ஆனால் இப்போது யோசிக்கையில் தவறு தெரிந்தது..
வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தியவன் அடுத்த இரண்டு நிமிடத்தில் அவர்கள் தெரு முனையில் திரும்பும்போதே தர்ஷினி வீட்டில் ஒரே கூட்டம் போச்சு.. இங்க என்ன ஏழரையோ…!!
அங்கு அப்பத்தா வாசலில் அமர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க மற்ற பெண்களோ சமாதானம் செய்யும் சாக்கில் தர்ஷினியை பற்றி துருவி துருவி கேட்டுக் கொண்டிருந்தனர். இருவரையும் ஒன்றாக பார்த்து அனைவரும் குசுகுசுவென பேசத்துவங்க அப்பத்தா பேத்தியை கட்டிக் கொண்டு ஒரே அழுகை..
அவர் அருகில் சென்றவன் மெதுவான குரலில் ,”அப்பத்தா முதல்ல உங்க பேத்திய வீட்டுக்குள்ள கூட்டிட்டு போங்க.. எழுந்திரிங்க..” அவரை கைபிடித்து தூக்கியவன் உள்ளே கூட்டிவர பார்வதியோ சுந்தரை முறைத்துக் கொண்டு நின்றிருந்தார்..
“சனியன் ஒளிஞ்சிருச்சுன்னு கொஞ்சம் சந்தோசப்பட்டேன்.. மறுபடியும் கொண்டு வந்து விட்டுட்டான்.. விளங்காதவன்..!!”
[the_ad id=”6605″]
“ஆத்தா தங்கம் எங்கடா போனா. உன்ன காணாம அம்மாச்சி பயந்துட்டேன்தா..”
“ப்பச் சும்மா வாக்கிங் போனேன் கிரான்மா..”
“வாகுங்கா அது எங்கன இருக்கு.. அதுக்கு எதுக்கு ஒராளா போன.. நம்ம டிரைவர்கிட்ட சொன்னா காருலயே கூட்டிட்டு போய் விடுவாருல்ல.. நல்ல வேளை சுந்தரு நீயும் அதுக்குத்தான் போனியாப்பு.. அதுக்காக காலையில காப்பி தண்ணி கூடவா குடிக்காம போவாக.. நம்ம லெட்சுமி கன்னு போட்டுச்சேன்னு அங்கன செத்த நேரம் நின்னுட்டேன்.. ம்கூம் அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தவர்.. அது சரித்தா நீயேன் பேராண்டியோட சட்டைய போட்டிருக்க..??”
தர்ஷினி ஒன்றும் சொல்லாமல் அறைக்குள் செல்ல, சுந்தரோ, “அது ஒன்னுமில்லப்பத்தா அவங்க கீழ விழுந்திட்டாங்க.. அதுல சேலை கொஞ்சம் கிழிஞ்சிருச்சு அதான் என் சட்டையை கழட்டி கொடுத்தேன்..”
சுந்தரை கன்னத்தை உருவி முத்தம் கொடுத்தவர்.. “தங்கம்ப்பு நீ… உன்ன பார்க்கையில அப்படியே உங்கப்பத்தாவ பார்க்கிற மாதிரி இருக்கு.. அதே கம்பீரம்.. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அத வெளிப்படுத்தா கொணம்.. நீ நல்லா வருவப்பு.. உங்க ஆத்தா அன்னைக்கு கோவில்ல சொன்னுச்சு உனக்கு பொண்ணு பார்த்திருக்காங்களாமே… நீ நிறைய புள்ளைக்குட்டிகளோடு சீரும் சிறப்புமா ரொம்ப நல்லாயிருக்கனும்..
இரு பேராண்டி அப்பத்தா காப்பி கொண்டாரேன்..”
“இல்லப்பத்தா வயல்ல நாத்து நட்டுட்டு இருக்காக.. அவுகளுக்கு காப்பி பலகாரம் வாங்கி கொடுக்கப் போகனும்.. நம்ம வீடுதானே இன்னொரு தரம் வாறேன்.. அவுகள இனி தனியா விடாதிக … துணைக்கு யாரையாச்சும் கூட்டிட்டு போகச் சொல்லுங்க.. நேரமாச்சு வரவாப்பத்தா..” வேட்டியை மடித்து கட்டியவன் அவரிடம் சொல்லிட்டு கொண்டு வாசலை நோக்கி நடக்க..
“எக்ஸ்கியூஸ்மி…??” தன்னை அழைக்கும் குரலில் திரும்பியவன் தர்ஷினி வேறு உடை மாற்றிக் கொண்டு தன் சட்டையோடு வர,
“இந்தாங்க.. உங்க சர்ட்… எனிவே தாங்க்ஸ்… என்னை திரும்ப இங்க கொண்டுவந்து விட்டதுக்கு..!!” வாய்தான் தேங்க்ஸ் சொல்லியது.. கண்கள் அது இல்லை என சொல்லியது.. இந்த பொண்ணோட கண்ணு சொல்றது உண்மையா இல்லை வாய் சொல்றதா… ஒன்றும் சொல்லாமல் சட்டையை அணிந்தவன்..
“வரேன்ங்க..” வாசலை நோக்கி நடக்கத் துவங்கினான்.. அவன் சட்டையில் அவளின் வாசம்.. மூச்சை இழுத்துவிட்டவனுக்குள் அப்படி ஒரு துள்ளல்…
வண்டியை தன் வீட்டுக்கு விட வாசலிலேயே தெய்வானை தன் மகனை மறித்தவர் “தம்பி வய வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு தினம் தினம் அழகம்மை அயித்த பேத்தியோட நம்ம காட்டுக்குள்ள பேசிக்கிட்டு இருக்கியாமே.. இப்பதான் நம்ம முனைவீட்டு பூவாயி அத்தாச்சி போன்ல கேட்டாக..?”
கோபத்தில் அடச்சே அதுக்குள்ள காட்டுத்தீ மாதிரி பரவிருச்சா..”ஆத்தா.. என்ன பேசுறிங்க..?? உங்க மவன பத்தி உங்களுக்கு தெரியாதா அதுவும் அந்த பொண்ணை போய் தப்பா சொல்றிங்க பாவம்தா அது..”
“அதத்தான்பு நானும் சொல்றேன்.. சும்மாவே உன்பேர இங்கன எல்லாரும் தப்பு தப்பா பேசிக்கிட்டு இருக்காங்க.. நீ சும்மா அந்த பொண்ணோட பேசினாக்கூட அது தப்பா தான்பு தெரியும்..பாவம் அந்த பொண்ணும்.. சும்மா நாமளே ஊர் வாய்க்கு அவலக் கொடுக்க கூடாது..நான் ஒன்னு சொல்றேன் தம்பி என்ன வேலை கிடந்தாலும் சரி.. இந்த வாரமே நாம வள்ளி நாத்தனாவ போய் பொண்ணு பார்க்கிறோம்.. நீ ஒன்னும் சொல்லாத சொல்லிட்டேன்..”
அவனை பேசவிடாமல் அவரே பேசிவிட்டு செல்ல ‘என்னங்கடா கொடுமை இது ஒரு உதவிக்கு வண்டியில கூட்டிட்டு போனதுக்கா இந்த கொடுமை.. அடப்பாவிங்களா வதந்திய இப்படி தீயா பரப்பி விடுறாங்களே..’
‘டேய் சோனமுத்தாஆஆஆ அந்த பொண்ணை சைட்டா அடிச்ச.. மாட்டினடா மவனே.. விட்டா அடுத்த வாரமே கல்யாணத்த வைச்சிருவாங்க போலயே..’ இவனோ மனசாட்சியிடம் ‘கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜங்கு ஜங்குன்னு ஆடுச்சாம் அது மாதிரி இருக்கு நீ பண்றது.. மத்தவங்க பண்றதக்கூட நான் பொறுத்துக்குவேன்.. உன்னத்தான் என்ன பண்ண போறேன்னு தெரியல..’
சாப்பிட்டாமலே வண்டியை வயலுக்கு திருப்பியவன் ‘அந்த பொண்ணு இனிமே நேருக்கு நேரா வந்தாக்கூட நாம நிமிர்ந்து பார்க்க கூடாது.. பாவம் அது சும்மாவே ஒரு மார்க்கமாத்தான் இருக்கு.. இந்த பிரச்சனை வேற ஏன் தேவையில்லாம..!!!’
நாற்று நடும் வேலை தீவிரமாக நடைபெற ஒரு வயலில் மட்டும் கரும்பு பயிரிடலாம் என நினைத்திருந்தான்.. தங்கள் பெரிய தோட்டத்தை சீர்படுத்தி வாழை பயிரிடுவதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருந்தது..
அங்கு நடக்கும் வேலைகளை மேற்பார்வையிட்டு கொண்டிருந்த சுந்தரை பார்க்கையில் ராமையாவிற்கு பெருமைதான்.. எந்த செயலில் இறங்கினாலும் முழு ஈடுபாட்டோடு செய்வது, எதையும் தன்னிடம் கலந்து ஆலோசித்து எங்கும் எதிலும் மரியாதையோடு நடத்துவது.. இவரும் தான் எப்போதும் உள்ளதுபோல அமைதியாக மகனின் செயல்களை மட்டுமே பார்வையிட்டார்..
[the_ad id=”6605″]
இரண்டு நாட்களுக்கு முன் வயலில் ஏதேட்சையாக அண்ணனை பார்க்க அவரே வலிய வந்து பேசியிருந்தார்..
சுந்தரை புகழ்ந்து பேசியவர் தன் மகன்களின் கெட்ட நடத்தையையும், அவர்களுடைய பழக்க வழக்கங்களையும் பற்றி சொல்லி புலம்ப எப்போதும் போல ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தவரோ தன் ஆத்தாவைதான் தெய்வமாய் மனதிற்குள் கும்பிட்டார்.. அவரின் ஆசியும் அறிவுரையும்தான் தன் மகன் இந்தளவிற்கு முன்னேற காரணம் என்பதை அறிந்தவராயிற்றே..
அன்று இரவு சுந்தர் சாப்பிட்டு கொண்டிருக்க தெய்வானை தன் மகனிடம் அமர்ந்தவர், “தம்பி வார வெசாலக்கிழமை நாம குடும்பமா மதுரைக்கு போறோம்பு..?”
“மதுரைக்கு ஏத்தா அதுவும் குடும்பமா.. எனக்கு வயக்காட்டுல கொஞ்சம் வேலையிருக்கு அதோட..??”
“அட இருப்பு நான் சொல்லிருரேன்.. நம்ம வள்ளி இருக்காள்ல.. அவளோட சின்ன மாமனாரோட கொழுந்தியா பேத்திக்கு கல்யாணம்.. நம்மள குடும்பமா வரச் சொல்லி பத்திரிக்கை வைச்சிட்டு போயிருக்காக..??”
அவர் சொன்ன உறவுமுறையில் கண்கள் கட்ட, “ஆத்தா.. இவ்வளவு கிட்டத்து உறவுக்கு கண்டிப்பா குடும்பமா போய்தான் ஆகனும்..!! அப்படியே ஒரு லாரி பிடிச்சிட்டு வாறேன்.. நம்ம ஆடு ,மாடு கோழி எல்லாத்தையும் அள்ளி போடுங்க.. அதுகளும் நம்ம குடும்பம்தானே..வரட்டும் பாவம்..”
சுந்தரி வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க… “போ தம்பி.. அவுக உன் எல்லா தங்கச்சிக கல்யாணத்துக்கும் வந்திருக்காக அப்ப நாம போவ வேணாமா.. நம்மூருல அவுக சொந்தபந்தம் நிறைய பேர் இருக்காகப்பு.. அவுக எல்லாருக்கும் பத்திரிக்கை கொடுத்திருக்காக.. எல்லாரும் போகும் போது நாம மட்டும் போகாட்டா அது என்ன மரியாதை.. காசு, பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும்.. ஆனா சொந்தபந்தம் கிடைக்காது..
[the_ad id=”6605″]
அதோட வள்ளி போன் பண்ணியிருந்தா அந்த கல்யாணத்துக்கு அவ நாத்தனாரையும் கூட்டிட்டு வருவாளாம்.. நாமளும் எல்லாருமா போனா பொண்ணையும் பார்த்த மாதிரி இருக்கும்.. அதோட உன்னை அவுக சொந்தத்தில நிறைய பேருக்கு தெரியாதுல.. இப்ப அறிமுகமான மாதிரியும் இருக்கும்..சௌந்தரம், நாயகி எல்லாருக்கும் பத்திரிக்கை கொடுத்திருக்காங்களாம்.. அதான் எல்லாருமே ஒன்னு சேருறோம்.. ஒருவாக்குல இந்த பொண்ணு பார்க்கிற சடங்க முடிச்சிருலாம் நீ என்னப்பு சொல்ற..??”
“இதுல நான் சொல்ல என்னத்தா இருக்கு..அதான் தங்கச்சிகளும் நீங்களும் சேர்ந்து எல்லா முடிவும் எடுத்திட்டிகளே அப்புறம் என்ன ஒப்புக்கு ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டு.. அப்புக்கிட்டயும் கலந்துக்கோங்க.. ஏட்டி நீயென்ன படிக்காம எங்க வாயவே பார்கிறவ.. போட்டி…??”
“போண்ணே.. ஆத்தாவ வைய முடியாம என்னைய வையிறியாக்கும்.. நான் படிச்சிட்டுத்தான் இருந்தேன்.. என்ன என்ர காது மட்டும்தான் அங்கன திரும்பி இருந்திச்சு..!!”
“அங்கன வந்தேன் அந்த காத கழட்டி தனியா கொடுத்திருவேன் பார்த்துக்க..படி..”
அண்ணன் அதட்டவும் வேகமாக புத்தகத்திற்குள் தலையை கொடுத்திருந்தாள்..
மறுநாள் காலை பதினோறு மணியிருக்கும் .. இன்று வேறு வயலில் நடவுபணி நடந்து கொண்டிருக்க சுந்தர் அங்கேயே ஒரு மரநிழலில் நின்றிருந்தான்.. இத்தனை வருடங்கள் குத்தகைக்கு விட்டிருந்த நிலங்களை இப்போதுதான் திருப்பியிருந்தான்…
அப்படியே தன் கவனம் எல்லாம் வேலையில்தான் அதோடு தன் செல்லில் ஏதோ படித்துக் கொண்டிருந்தவன் சாதாரணமாக நிமிர இரண்டு வயல்கள் தள்ளி தர்ஷினியும் ராஜாவும் வந்து கொண்டிருந்தார்கள்.. தர்ஷினியை பார்க்கையில் சிரிப்பு.. அந்த வரப்பில் ஏதோ கம்பி மேல் நடப்பது போல் அப்படி பயத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தாள்..
அப்படியே மெதுவாக பார்வையை தன் வயலுக்கு திருப்ப பெண்கள் அனைவரும் தன்னைத்தான் ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. ‘ஆத்தி எல்லாம் ஒன்னு கூடிருச்சுகளே.. டேய் சோனமுத்தா எக்காரணத்தை கொண்டும் பார்வையை மட்டும் அந்த பக்கம் திருப்பிறாத..’ குதிரைக்கு கடிவாளம் போட்டாற்போல தன் வயலை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க தர்ஷினி எந்த பக்கம் போனால் என்று கவனிக்கவில்லை..
ஒரு பத்து நிமிடங்கள் சென்றிருக்கும்.. நேரமாகவும் அவர்களை சாப்பிட்டு வேலைப்பார்க்கும் படி சொல்ல பெண்கள் அனைவரும் வரப்பில் ஏறியிருந்தனர்.. அதில் ஒரு பெண், “சுந்தரு நீயும் வாப்பு சாப்பிட…??”
[the_ad id=”6605″]
“இல்லைங்க அத்தாச்சி ஆத்தா காலையில கேப்பக்கூழ் கிண்டியிருந்தாங்க.. அது சாப்பிட்டதே வயிறு புல்லாயிருக்கு.. அண்ணே வெளிநாட்டுல இருந்து எப்போ வாராகளாம்..”
[the_ad id=”6605″]
“எங்க சுந்தரு.. இந்தா அந்தான்னு இழுத்துக்கிட்டே இருக்காக வர மாட்டேங்கிறாகளே..”
“அத்தாச்சி அண்ணன்தான் மாசாமாசம் பணம் அனுப்புறாகளே அப்புறமும் ஏன் நீங்க இந்த வேலைக்கெல்லாம் வாரிக.. வீட்ல சொகுசா இருக்கலாம்ல..!!”
“என்னப்பு இப்படி கேட்டுட்ட..?? ரெண்டு பொம்பள பிள்ளைகள வைச்சிருக்கேன்.. இப்ப விக்குற விலைவாசிக்கு நானும் இப்படி ஏதோ வேலைக்கு போய் ஒரு சீட்டுகீட்ட போட்டு வைச்சாத்தானே நகை நட்ட வாங்க முடியும்.. ஏதோ என்னால முடிஞ்சது… பாவம் உங்க அண்ணனும் எம்புட்டு நாளைக்குத்தான் இப்படி கஷ்டப்படுவாரு..?”
அதற்குள் அவனுக்கு போன் வர, அவனும் சிரித்தபடி ,”சரி அத்தாச்சி நீங்க போய் சாப்பிடுங்க நான் இந்தா வாறேன்..” ஆஸ்திரேலியாவில் இருந்து அவன் ரூம்மேட் போன் செய்திருக்க அவனும் பேசிக் கொண்டே சற்று தூரம் வந்திருந்தான்..
அந்த பெரிய கண்மாயின் தண்ணீர் மடை வழியாக மற்ற வயல்களுக்கு போய் கொண்டிருக்க அந்த மடையின் மேல் அமர்ந்திருந்தாள் தர்ஷினி.. அந்த பெரிய கண்மாயையே பார்த்துக் கொண்டிருக்க தண்ணீர் தளும்ப தளும்ப கிடந்தது.. காற்றின் வேகத்திற்கு அந்த மடையின் மேல் மோதிவிட்டு செல்ல ஆழமும் சற்று அதிகம்தான்..
காலை அந்த தண்ணீருக்குள் விட்டிருக்க அவள் காலில் அணிந்திருந்த தங்க கொலுசு பளிச்சென தெரிந்தது.. சேலையை லேசாக தூக்கி விட்டிருந்தாள்..அவள் நிறத்திற்கு அந்த கொலுசு இன்னும் அழகு சேர்த்திருந்தது..
ஒரு கன்னத்தில் கைவைத்து அந்த நீரையே விடாது பார்த்துக் கொண்டிருக்க சுந்தருக்கு தன்னை தவிர வேறு யாரோ தர்ஷினியை பார்ப்பது போல தோன்றவும் சட்டென பார்வையை நாலாபக்கமும் சுழலவிட்டவன் அவனுக்கு எதிர்புறம் அவன் பெரியப்பா மகன் வேலு நின்று தர்ஷினியையே வெறித்துக் கொண்டிருந்ததை பார்த்தான்.. அவன் வெறித்த பார்வையே சொன்னது அவன் மனதை.. அவன் மெல்ல மெல்ல அவள் புறம் அடியெடுத்து வைத்து வந்துகொண்டிருக்க..
இரண்டு நாட்கள் முன்தான் பெரியப்பா அண்ணன்களை பற்றி சொன்னதை தந்தை சொல்லியிருந்தார்.. நடையை சற்று வேகமாக எடுத்து வைத்தவன்.. “ஹாய் தர்ஷினி..” அவளை வந்தடைய.. அவள் கண்கள் சற்று கலங்கியிருந்ததோ.. சட்டென மறுபக்கம் திரும்பியவன் சேலை தலைப்பால் கண்ணீரை துடைத்து கொண்டாள்..
இவனை பார்க்க அந்த பார்வையே சொன்னது அவன் வந்ததை அவள் விரும்பாததை.. “ஹாய்…” அந்த பார்வை அவனுக்கு புரிந்தாலும்,
[the_ad id=”6605″]
“ராஜா எங்க.. ?? தனியா உங்கள விட்டுட்டு எங்க போனான்..?”
“அவனோட ஸ்கூல்மேட் யாரோ வந்தாங்க.. அங்க பேசிட்டு இருக்கான்..”
“வாங்களேன் அந்த பக்கம் நடந்து போகலாம்..” அவளை வற்புறுத்தி அழைத்து வர வேலு அவர்கள் இருவரையும் குரோதத்துடன் பார்த்து பாலாவுக்கு போன் செய்ய..
“என்னடா மச்சான்..??”
“எங்க இருக்க..??”
“தோப்புலதான்டா.. வா சரக்கடிச்சிட்டு இருக்கேன்.. நீயும் வாரியா..??”
“டேய் நான் புரளிய கிளப்பிவிட்டது இப்ப உண்மையாகிரும் போல..?”
“என்னடா தலையும் இல்லாம வாலும் இல்லாம பேசுர..?”
“அதான்டா இந்த சுந்தரு பயலும் உன் அத்த மகளும் ஒன்னா திரியுறாகளே அதச் சொன்னேன்..”
“அட ஏண்டா நீ வேற மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற.. நான் நல்லா விசாரிச்சிட்டேன்.. அதெல்லாம் ஒன்னுமில்லயாம்.. அவனுக்கு வேற இடத்தில பொண்ணு பார்த்து முடிச்சிட்டாங்களாம்..”
“இருந்தாலும் உங்க அப்பாத்தாவுக்கு இம்புட்டு ஏத்தம் ஆகாதுடா.. எங்க அப்பு, ஆத்தா ரெண்டுபேரும் பொண்ணு கேட்டு வந்ததுக்கு மொகரையில அடிச்ச மாதிரி பொண்ணு இல்லைன்னு சொல்லிருச்சாம்.. நீயும்தானடா அதுக்கிட்ட பேசுறேன் எடுத்துச் சொல்றேன்னு சொன்ன..??”
“என்னன்னு தெரியலடா எங்கவீட்டு பெரிசு ரொம்பத்தான் பண்ணது.. என்ன கண்டுக்கிச்சோ என்னமோ.. பேத்திய அப்படியே பொத்தி பொத்தி வைக்கிது நானும் இந்த பத்து நாளா சின்ன கேப்பாச்சும் கிடைக்குதான்னு பார்க்கிறேன்.. முடியல.. நேத்து நான் சரக்கடிச்சிட்டு மட்டையாகிட்டேன்.. அந்த நேரம் அவ வாக்கிங் போயிருக்கா.. முழிச்சிருந்தா நல்லா லட்டு மாதிரி சான்ஸ மிஸ் பண்ணியிருக்க மாட்டேன்.. அதான் வருத்தத்தில சரக்கடிச்சிட்டு இருக்கேன்..”
“டேய் இப்பவும் இந்த பொண்ணு தனியாத்தான்டா அவனோட பேசிட்டு இருக்கா..?”
“இருக்காதுடா சுத்தி பாரு எங்கனயாச்சும் எங்க பங்காளி பயலுக நிப்பானுக.. அந்த பெரிசு ரொம்ப பண்ணுது பார்க்கிறேன் நானா அதுவான்னு..?”
வேலு பார்வையை நாலாப் பக்கமும் சுழற்ற ராஜாவை பார்க்கவும் வந்தவழியே திரும்பி போனான்..
கையில் செருப்பை வைத்துக் கொண்டு தர்ஷினி அடிமேல் அடி வைத்து வந்து கொண்டிருக்க சுந்தருக்கு சிரிப்பு.. “இப்படி நடந்தா நாளைக்குள்ள வீட்டுக்கு போயிருவிங்க..??”
லேசாக புன்னகைத்தவள் “இல்ல நீங்கல்லாம் எப்படி சென்டர்ல கரெக்டா நடக்குறிங்க.. எனக்கு ஒரு கால ஸ்டிரைட்டா வைச்சா அடுத்த கால் அந்த பக்கம் போகுது..”
அவள் கால்களை பார்த்தவன் நல்ல ரோஸ் நிறத்தில் அதிலோடிய பச்சை நரம்புகள் அப்படியே தெரிந்தது.. பட்டு போல் மென்மையா இருக்குமோ..”என் கையை பிடிச்சுக்கிட்டு பயப்படாம வாங்க..?” அவள் கையை தன் கையில் பிடித்தவன் அவளை வழிநடத்தி கூட்டிப் போனான்..
தங்கள் வயலிலும் அடுத்தடுத்த வயலிலும் வேலைப்பார்த்த பெண்கள் இவர்களை பார்த்ததை இவர்கள் கவனிக்கவில்லை.. சுந்தருக்கு தர்ஷினியை விழாமல் பிடித்து கூட்டிப் போவதே பெரிதாக இருந்தது.. பாதி வழியிலேயே ராஜா வந்து இவர்களோடு சேர்ந்து கொள்ள அவனிடம் இவளை ஒப்படைத்த பிறகுதான் சுற்றுப்புறமே உணர்ந்தான்..
[the_ad id=”6605″]
புதன் கிழமை காலை தன் பேத்தியை அழைத்த அப்பத்தா, “ஆத்தா தங்கம் நல்ல பட்டுச் சேலையா ரெண்டு எடுத்து வைச்சுக்கோத்தா..?”
அவரை கேள்வியாக பார்க்க,
“ஒன்னுமில்லத்தா நாளைக்கு மதுரையில ஒரு கல்யாணம்.. நாம இன்னைக்கு போய்ட்டு நாளைக்கு வருவோம்..”
“நான் வரலை கிரான்மா.. நீங்க மட்டும் போய்ட்டு வாங்க ஒன்டேதான.. நான் அட்ஜஸ்ட் பண்ணி இங்கயே இருந்துக்குறேன்..”
“எதுக்குத்தா இங்கன ஒத்தாளா இருக்கேங்கிற.. வா நாலு மனுச மக்கள பார்த்தாதான் நல்லாயிருக்கும்.. இந்த மாப்பிள்ள பையன் யாருன்னா உங்க தாத்தாவோட சின்னத்தா இருக்காகளே அவங்க பேத்தியோட நாத்தனார் மவன்.. ரொம்ப நல்ல பழக்கம் நல்ல வசதியானங்களும் கூட.. ஆனா ஆளுக தரம் தெரிஞ்சவங்கத்தா..
இந்த நாலு சுவத்தையே எம்புட்டு நேரம் பார்த்துட்டு இருப்ப.. வா கல்யாணம் முடியவும் அப்படியே மீனாட்சி சொக்கரையும் ஒரு பார்வை பார்த்துட்டு வருவோம்… ஒரு நாளு சுளுவா ஓடிரும்..” அதை இதை பேசி ஒருவழியாய் தர்ஷினியோடு மதுரைக்கு கிளம்பியிருந்தார்.. அங்கு மதுரை மீனாட்சியும் சொக்கநாதரும் இவர்களுக்கு ஒருவழிகாட்ட காத்திருந்தனர்.!!