செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 01_1
சுமார் 30 வருடங்கள் முன்:
‘சொட்டு நீரைக் கண்ணில் காட்டாயோ’ என்று ஏங்கித் தவித்த மழை நீர் காணா பரந்து விரிந்த வறண்ட நிலப்பரப்பு. மதிய வேளை என்பதால் வெப்பக் காற்று அனலாய் வீச, வீசயக் காற்று சும்மா செல்லாது தூசியையும் சருகையும் வாரிக் கொண்டு நாலா திசைக்கும் பறக்கடித்துக் கொண்டிருந்தது.
அதிக மரங்களில்லை. இருந்த சிலதும் உடைமுள்ளாய் போக.. காற்றில் மிச்ச மீதி இருந்த ஈரப்பதமும் காணாமல் போயிருக்க.. உஷ்ணம் இன்னும் அதிகமாய் தாக்கியது.
குருவிகளின் கீச்சொலிகளோடு மரத்தடியில் விளையாட வேண்டிய பிள்ளைகளின் சிரிப்பும் பஞ்சமாய் போக.. பாலை வனம் போல் காட்சியளித்தது அந்த கிராமம்.
அதிக ஆள் நடமாட்டம் இல்லை என்றாலும் வீடுகள் இருக்கத்தான் செய்தது, அங்கொன்றும் இங்கொன்றுமாக.. ஒழுங்கின்மையாய் சிதறி கிடந்தது.
காய்ந்து நின்ற செடியும் புல்லும் காற்றுக்கு ஆடிக்கொண்டிருக்கும் இந்த நிலப்பரப்பு, மகாராஷ்டிராவில் பாலைவனம் போல் காணப்படும் கிரமங்களில் ஒன்று.
காய்ந்து போன கிரமம் அவல நிலையில் காணப்பட, அங்குள்ள குடிசைகளும் தான்.
கொஞ்சம் தள்ளி இருக்கும், ஓர் அழுக்கு குடிசையை நோக்கி தூசி பறக்க.. பிடரி இடிக்க ஓடிக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். குச்சியான, சட்டை காணா வெளிறிய தேகம். இடுப்பில் நிற்க முடியாமல் பாவாடை போல் தொங்கிக் கொண்டிருந்த அரை நிக்கரை ஏந்திக்கொண்டிருந்தது, இடுப்பைச் சுற்றிக் கட்டியிருந்த கருப்பு கயிறு. இது அவன் அடையாளமில்லை… அங்கிருந்த பிள்ளைகளின் நிலை அது.
‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’, இந்த பாலைவனத்திற்கும் பொருந்தும். இவன் ஒருவனின் செருப்பில்லா தூசி படிந்த கால்களும், ஒட்டிப் போன வயிறும், காய்ந்த உதடும், பரட்டை தலையுமே போதும் அந்த ஊரில் செல்வச் செழிப்பை உணர்த்த,
“அக்கா.. அக்கா..” மராட்டியில் கத்திக் கொண்டே ஓடி வந்தவன், ஒற்றை அறை குடிசை வாசலில் குனிந்து நின்று மூச்சு வாங்க உரக்கக் கத்தினான்.
“அக்கா..”
மராட்டியில் அவன் வீறிட..
[the_ad id=”6605″]
குடிசையின் தகரக் கதவை நகர்த்தி வைத்து வாசலுக்கு வெளியே வந்தாள் அந்த ‘அக்கா’.
செம்பட்டை முடியும், மராட்டியருக்கான பாரம்பரிய உடையும், கை நிறைய வளையல்களும், கருத்த குச்சி உடலும், எலும்பும் தோலுமாக அவள் இருப்பாள் என்ற எண்ணம், அவளைப் பார்த்ததும் பொய்த்துப் போனது.
கண்ணை எப்படிக் கசக்கிப் பார்த்தாலும் அவள் பேரழகி தான். தமிழ் பெண் போல் புடவை உடுத்தியிருந்தாலும் தமிழச்சி போலில்லை.
பார்ப்பவரை உருக்கிவிடும் அவள் வெண்பனி தேகமும், விழுங்கத் தோன்றும் பளிங்கு முகமும் அதன் வசீகரிக்கும் அம்சங்களும்.. வழவழப்பான அடர் கூந்தலும், உடல் செழுமையும், மேனி பளபளப்புமே காட்டிக் கொடுத்தது இந்த இடத்திற்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று. இத்தனைக்கும் அவள், கொளுத்தும் வெயிலுக்கு வாடி வதங்கித் தான் போயிருந்தாள்.
“என்னையா கூப்பிட்ட?” ஹிந்தியில் கேட்டுக்கொண்டே மூச்சு வாங்க வந்து நின்றவனை கண் சுருக்கி பார்த்தாள்.
அவளின் வாயிலிருந்து புறப்பட்ட இரண்டு வார்த்தையே காட்டிக் கொடுத்தது ஹிந்திக்கும் அவளுக்கும் வெகு தூரமென்று!
அவள், கோமல். பெயருக்கு ஏற்றார் போலவே உடலும் உள்ளமும் அழகான அனிச்சம் மலரைப் போன்றவள்! வட இந்திய மென்மைக்கும் தமிழ் வசீகரத்திற்கும் பதினேழு வருடம் முன் பிறந்த பட்டு தேவதை.
ஒருவனோடு காதல் வயப்பட, அவனோடு வீட்டை விட்டு வந்துவிட, கிடைத்த வாகனம் எல்லாம் பிடித்து ஊரெல்லாம் பத்து நாள் சுற்றித் திரிந்து, மூன்று நாள் முன் ஒருவழியாய் அவன் இங்குக் கூட்டி வந்திருந்தான்.
இங்கு வந்து சேர்ந்த பின், இது தான் முதல் முறை அவனைத் தவிர வேறு ஒரு ஜீவனிடம் பேசுவது. பேசுவது என்பது தவறான வார்த்தை. ஏனென்றால் ஒருவர் பேசும் மொழி மற்றவருக்குப் புரியாத நிலை. எதிரில் நிற்பவனுக்கு புரிந்த அளவு கூட அவன் மொழி அவளுக்குப் புரிந்து கொள்ள முடியாத நிலை.
அந்த இடமும் அங்குள்ள மக்களும் அவளுக்கு சற்று புதுமையாகத் தான் தெரிந்தனர். அவள் கிராமத்தில் திருமணமாகி பெண் வந்தால், உற்றார் உறவினர் ஊர் ஜனம் என்று புதுப்பெண்ணை வந்து பார்த்தும்.. சென்றும்.. என்று அந்த வீடே வாரங்களுக்குக் களைக்கட்டும். அவள் இங்கு வந்து மூன்று நாளாகியும் ஒரு ஜீவன் அவளைப் பார்க்கவும் இல்லை.. பேசவும் இல்லை. இத்தனைக்கும் இது அவன் சொந்த ஊர் என்றான். இருப்பவர்கள் பலரும் அவனுக்கு உறவு என்றான். என்ன உறவோ? என்ன சொந்தமோ? அவளுக்கு விளங்கவில்லை!
பெற்றவர் நிழல் கூட இல்லாதவளுக்குச் சொந்தங்கள் பற்றித் தெரியவில்லையோ?
[the_ad id=”6605″]
அழகிய தமிழ் நாட்டுக் கிராமத்தில் அப்பா வழி தாத்தா வீட்டில் பட்டாம் பூச்சியாய் உலகமறியா சிறுமியாய் சுற்றித் திரிந்தவளுக்கு பெற்றவர்கள் நினைவு அதிகமில்லை.
அப்பா ராஜன், அம்மா மிர்னாலினி என்ற வரை தான் அவள் அறிந்திருந்தாள்.
“நீ அப்படியே உன் அம்மா மாதிரி பாக்க. கண்ணும் முடியும் என்னை மாதிரி… உன் தாத்தா மாதிரி சுறுசுறுப்பு… உன் அப்பா மாதிரி மென்மையான மனசு உனக்கு. உன் அப்பா… சத்தமா கூட பேச மாட்டான்..”, பாட்டி கூறுவார் அவளிடம்.
அப்பா அவளோடு இல்லை என்றாலும் அப்பாவின் இளம் பருவம் பற்றி அனைத்தும் தெரியும். பாட்டிக்கு அம்மா பற்றித் தெரிந்திருக்கவில்லை.. அதனால் அவளுக்கும் ஒன்றும் தெரியவில்லை.
ராஜனின் கனவு, அரசாங்க வேலை. கடுமையான உழைப்பின் பலனாய் தில்லியில் வேலை.
“உன் அப்பா அப்படி நல்லா படிப்பான். உன்ன மாதிரியே. பெரிய உத்தியோகம். ஆசையா போகட்டான்னு கேட்டு நின்னான். என்ன சொல்ல? போய்ட்டு வாடா ராசான்னு அனுப்பி வச்சேன்… இப்போ, அங்கேயே இருந்துட்டான். கொள்ளிப்போடவாது வந்தா சரி தான்..”, பாட்டி சலிப்போடு கூறிய வார்த்தைகள்.
“கொஞ்ச வருஷம் மா… வந்திடுவேன்… நம்ம மண்ண விட்டு எங்க போயிட போறேன்” என்று கூறிவிட்டுச் சென்றவர் தான்.. ஏனோ சொந்த மண்ணுக்கு வரவே இல்லை.
ராஜன் தில்லியில் அரசாங்க வேலையில் இருந்த சமயம்.. அவர் இளமைக் காலத்தில், தில்லியின் புறநகர்ப் பகுதியில் அவரோடு வேலை பார்த்த ஒருவரின் திருமணத்திற்குச் சென்றிருக்க.. திருமணத்தன்று மணமகனின் அப்பா இறந்து விட.. அந்த பழி பெண்ணின் ‘ராசி’ மேல் வந்து விழுந்தது.
நிமிடத்தில் மணப்பெண் ராசியற்றவள் என முத்திரை குத்தப்பட்டாள்.. மாப்பிள்ளை வீட்டார் வாயில் அவலாய் அவள் விழ… பெண்ணின் உடன் பிறப்பு குரல் உயர்த்த.. சின்ன வாக்குவாதம் கலவரமாக மாற.. வெட்டுக் குத்து வரைச் சென்றது.
எல்லாம் அடங்கிய நேரம் இரு பக்கமும் சேதம். அதில் அதிக சேதாரம் மணப்பெண்ணிற்கு. அவளின் ஒரே உறவான அண்ணனும் வெட்டப் பட்டிருக்க அவள் தனித்துப் போனாள். ‘ராசி இல்லாதவள்’ என்ற பெயரோடு வாழ்வதே அந்த காலங்களில் கடினம். அதிலும் இருந்த ஒரு சொந்தமும் இல்லாமல் தவித்து நின்றாள்.
இருந்த பிடிப்பும் இல்லாமல் போக… அவள் ராசி தான் இருகுடும்பத்தையும் சாய்த்தது என்ற சொற்கள் அவளைத் துளைக்க.. வாழ்க்கை வெறுத்து தன்னை மாய்த்துக் கொள்ள நின்றவள் கழுத்தில் தாலி கட்டி தன்னோடு பெற்றோர் வீட்டிற்கு கூட்டி வந்தார் ராஜன்.
ராஜன் பெற்றோர் தமிழ் நாட்டில்… ஓர் கிரமத்திலிருந்தாலும் மகனின் நடந்து முடிந்த திடீர் திருமணத்தை எதிர்க்கவில்லை. ஆசை ஆசையாய் வளர்த்த ஒரே மகன்.. அவனை என்ன சொல்ல முடியும்? அதுவும் பெண் ஏதோ தேவலோகத்து ரம்பை போல் இருந்தால்?
ஊரே வாய் பிளந்து பார்த்தது புதுப்பெண்ணை.
அதிர்ந்து கூட பேசமாட்டார் ராஜன். வசீகர முகம் மட்டும் அல்ல… அவர் மனமும் அப்படி தான். மிருதுவான உள்ளம் படைத்தவர். மிர்னா மனம் அவர் மேல் சாய அதுவே போதுமானதாய் இருக்க அவரோடு எளிதில் ஒன்றிக் கொண்டாள்.
மண வாழ்வு எல்லா இன்பத்தையும் ராஜன்-மிர்னா தம்பதியினருக்கு அள்ளி தர.. காதல் வாழ்வின் பலனாய் கையில் தவழ்ந்தாள் கோமல்.
தாய் பால் ருசி மறக்கும் முன் தாய் இல்லாமல் போக மகளை தனியே வளர்க்க முடியாமல், தனக்குப் பழக்கப்பட்ட பக்கத்துவீட்டிலிருந்த பெண்ணை வேலையில் அமர்த்தினார். அவளும் பெற்றவள் போல் தான் காலையிலிருந்து மாலை வரை குழந்தையை பார்த்துக்கொண்டாள்.
தனக்கு ‘திருமணம் நிச்சயிக்கப் பட போகிறது’ இனி மகளைப் பார்த்துக்கொள்ள முடியாதென்று கோமலைக் கட்டி அணைத்து அழுதவளை அவள் பெற்றவர் சம்மத்தோடு மணம் புரிந்தார் ராஜன்.
அதுவரை உயிராய் நேசித்த குழந்தையை, ஏனோ தாயாய் வந்தபின் மாதுரிக்கு பிடிக்கவில்லை. ராஜன் மகளைக் கொஞ்சுவதோ.. மகளோடு நேரம் செலவழிப்பதோ அவளுக்குப் பிடிக்கவில்லை. யார் விதைத்த விஷமோ… ‘தனக்கு மட்டும் தான் ராஜன்’ என்ற எண்ணம் அவளுக்குள் மரமாய் முளைத்து விஷ கனிகளை ஏந்தி நின்றது.
[the_ad id=”6605″]
அவள் வயிற்றில் சிசு உருவாக, வீட்டில் சண்டை வெடித்தது.
“ஒண்ணு அவ… இல்ல நான். முடிவு பண்ணுங்க” என்றுவிட்டாள்.
ஒரு அளவுக்கு மேல் தாங்கமுடியாமல் அவரும், “என் மக மேல நீ காட்டின அன்புனால தான் நீ வந்த. அவளுக்கு அம்மாவா இருந்தா இரு இல்லேனா போ” என்று சொல்லிவிட்டார்.
மகளுக்காக தான் மணந்தார். அவளுக்கும் அது தெரியும். மகளுக்காக என்றாலும் மணந்த அன்றிலிருந்தே மனைவியை எதற்கும் தவிக்க விடவில்லை. அன்பாய் தான் பார்த்துக் கொண்டார். மனைவியாகத் தான் எல்லா உரிமையோடும் உலா வந்தாள். ஏனோ அது போதவில்லை அவளுக்கு.
“போ” என்று சொன்னாலும் அதை அவர் வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை.. சண்டையில் உதிர்த்த வார்த்தை. ராஜன் எதிர்பார்க்கவில்லை அன்று அலுவலகத்திலிருந்து வெறும் வீட்டிற்குத் தான் வருவாரென்று.
மகள் பக்கத்து வீட்டில் அழுது கொண்டிருக்க.. மனைவி அவள் பெற்றவர் வீட்டிற்கும் செல்லாமல் அனாதைப் போல் தெருவில் அமர்ந்திருந்தாள். தெருவே அவர்களை வேடிக்கைப் பார்க்க.. கேவலமாய் போனது.
ஏதேதோ சொல்லி அவளை அழைத்து வந்தார். தினம் தினம் பிரச்சினை வெடித்தது. வயிற்றுப் பிள்ளையோடு மாதுரி கையை கிழித்துக் கொண்டு மருத்துவமனையில் படுக்கும் வரை சண்டை நீடித்தது.
“உன் மகளை விடு இல்லை என்னைச் சாக விடு!” என்று விட்டாள்.
வயிற்றில் பிள்ளையோடு இருக்கும் தன் மனைவியை எப்படி விட? மனைவி போல் மகள் அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. மகளை விட்டுவிட்டார். மனமில்லாமல் தான்… ஆனால் விட்டுவிட்டார்.
என்ன வயதானாலும் நம் உதவிக்கு வருவது பெற்றவர்கள் தானே… அவருக்கும் அப்படி தான். கைக்குழந்தையோடு நின்ற ராஜனை வாரி அணைத்துக் கொண்டனர் அவர் பெற்றவர்கள்.
ஒரு வயது கூட முடியாத இரட்டை பல் காட்டி சிரித்து, “ப்ப..” என்று கன்னத்தை எச்சில் படுத்திய இளம் குருத்தை மனம் கனக்க அன்னையின் கையில் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். அன்பு மனைவியின் மரணம் அவரை பாதி கொன்றதென்றால்… இருவரையும் உரித்து வைத்த மகளைப் பிரியவும் மனிதன் தளர்ந்தே போனார். இரண்டாவது திருமணம் தவறோ என்ற எண்ணம் எழாமல் இல்லை. ஆனால் வாழப்பழகிக்கொண்டார்.
வற்றிப் போயிருந்த வெண்பஞ்சு மேகம் கொழு கொழு மேனியோடும் கெக்கப்பிக்க சிரிப்போடும் தாத்தா பாட்டி மனதைக் கொள்ளையடித்தாள்.
வருடத்திற்கு ஒரு முறை மகளை வந்து பார்த்துச் செல்வார் ராஜன். நெஞ்சு நிரம்பப் பாசம் இருந்தும் காட்டிக்கொண்டதே இல்லை. இரண்டு வார்த்தை சேர்ந்தார்போல் பேச மாட்டார் மகளிடம்.
[the_ad id=”6605″]
எங்குப் பேசினால்.. தன்னை வெளிப்படுத்தினால்.. அவர் பாசம் வெளிப்பட்டால்.. மகள் அப்பா என்ற உறவைத் தேடிவிடுவாளோ என்ற காரணத்திற்காகவே பாசத்தை உள்ளுக்குள் போட்டுப் புதைத்தார்.
மாதுரி நல்லவள் தான்.. அவள் கணவனுக்கும் அவள் குழந்தைகளுக்கும். நடுவே ஒருவரையும் வரவிடமாட்டாள். விஷம் தடவிய பேச்சு எதிரில் இருப்பவரைக் கொன்றே போட்டுவிடும். அதனாலேயே மகளை தன்னோடு அழைத்துக் கொள்ள நினைத்ததே இல்லை.
எது எப்படியோ… அம்மா இல்லை. அப்பா இருந்தும் இல்லை என்ற நிலை அந்த பச்சிளம் குழந்தைக்கு.