செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 10_1
கோமலால், அவள் கண்கள் காண்பதை அவளால் நம்ப முடியவில்லை. அவள் முன் நிற்பது மூர்த்தியே தான்! ஆனால் ஏன்? எப்படி? எதற்கு? இவருக்கு என்னைத் தெரியுமா?
எது எப்படியோ.. அவனைப் பார்த்ததும் உள்ளுக்குள் ஒரு நிம்மதி.
சுவரோடு சுவராய் நின்றிருந்தவளைப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தான். இன்னும் நடப்பது எதுவும் அவள் மூளைக்கு உரைக்கவில்லை போலும். அதிர்ச்சியும் பயமும் நிம்மதியும் என்று முகத்தில் கலவையான உணர்வுகள்.
இனி அவன் பார்த்துக்கொள்ளுவான் என்று தோன்றியதோ என்னவோ.. கையிலிருந்த ஆணி இரண்டும் தன்னால் கீழே விழுந்தது. ஏன் எதிரில் நிற்பவனை நம்ப வேண்டும்? அவன் மரியாதையான தோற்றமாக இருக்கலாம். ஒரு நாள் முழுவதும் அவன் பின் இரண்டு பெண்கள் சுற்றித் திரிந்த பின்னும் ஒருத்தியிடமும் பல்லைக் காட்டவில்லை என்ற குணத்தால் இருக்கலாம்.. அன்று முழுவதும் அவள் ஏதேதோ சிந்தனையினால் ஈர்க்கப் பட்டதின் விளைவாகவும் இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் உள்ளுக்குள், அவனைப் பார்த்த நொடியே ஒரு நம்பிக்கை வந்தது உண்மை. அனைத்துக்கும் மேல், அவள் கலங்கிய கண்ணைப் பார்த்ததும் தேடி வந்து நிற்கிறானே.. இன்றைய நிலையில் அது மட்டுமே அவளுக்கு போதுமானதாய் போனது.
‘மருத்துவமனை சென்றவன் இவர் கையில் எப்படிச் சிக்கினான்?’ கௌரவ் காணச் சென்ற மருத்துவன் ஏற்கனவே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பதை எப்படி அவன் அறிய நியாயமில்லையோ, அதே போல் அவனுக்காக அங்குக் காவல்துறை காத்து நின்றதையும் அவன் அறிய நியாயமில்லை!
கடிவாங்கிய எலி, நேரே சென்று பொறியில் அகப்பட்டு கொண்டது.
வேட்டியை மடித்துக் கட்டி, போட்டிருந்த ஐம்பொன் காப்பை மேல் ஏற்றி விட்டு கொண்டே வந்தவன் பார்வை முழுவதும் அவள் முகத்தில் தான். அவன் பல்லைக் கடித்து கோபத்தை அடக்குவது தெரிந்தது.
[the_ad id=”6605″]
இரவு தூங்காமல் சிவத்திருந்த விழிகளும், அவளை அறைந்து விடும் கோபத்தைப் பல்லை கடித்து கட்டுப்படுத்திக் கொண்டிருந்த கடின முகமும்.. இடது கை வலது கையிலிருந்த காப்பை மேல் நோக்கி இறுக்க.. இரு கைகளிலும் புடைத்து நின்ற நரம்பும், அவனின் கோபத்தின் அளவை அவளுக்கு உணரவைத்தாலும் பெண்ணுக்குப் பிடிபடவில்லை.. ஏன் தன் மேல் இவருக்கு இத்தனை கோபம் என்று.
நின்றிருந்தவளைப் பார்த்துக்கொண்டே பாதி செத்துக் கிடந்தவனைக் கொத்தாய் அள்ளியவன், எதிரில் நின்றிருந்தவளை பார்த்துக்கொண்டே ‘பளார்’ என்று ஒற்றை அறை விட.. பெண் சுவரோடு புதைந்தே போனாள்.
இந்த அறை அவளுக்கா? பெண்ணுக்கு மூச்சு விடவும் மறந்தே போனது.
அடுத்த இரண்டு ‘பளார்’களில் அவன் செவிப்பறை என்னானதோ..? இவள் காது கிழிந்தது.
கௌரவ் வாய் கிழிந்து இரத்தம் வழிந்துக் கொண்டிருக்க.. ‘தொப்’பென்று கீழே விழுந்தான். வாங்க வேண்டியதெல்லாம் வாங்கிவிட்டிருப்பான் போலும். அவனிடம் அசைவில்லை.
“எவனாவது ரெண்டு மிட்டாய் வாங்கி தரேன்னு கூப்பிட்டா போய்டுவியா? அறிவில்லையா உனக்கு?” சத்தம் காதுக்குள் ‘கொய்ங்..’ என்றது.
என்ன பதில் சொல்ல வேண்டும்? ‘மிட்டாய்க்கு ஒன்றும் வரவில்லையே?’ அவள் குற்றம் அவளுக்கு தெரியாதா? சொல்லிவேறு காட்ட வேண்டுமா? அவனை பாவமாய் பார்த்து வைத்தாள்.
இருவருக்கும் இடையே, கீழே கிடந்தவன் மேல் இவன் கால் இறங்க.. உடல் சற்று தள்ளிப் போய் விழுந்தது.
“ஊரு பேரு தெரியாதா கண்ட நாய் உன்ன பார்த்து பல்ல காட்டி காலேஞ்-ல சேத்துவிடுறேன்னு கூப்பிட்டா கூட கிளம்பிடுவியா? யோசிக்க மாட்டியா? உன்னால உன் அப்பன் கூட இருக்க முடியலனா சித்தி வீட்டுக்குப் போக வேண்டியது தானே? வாய்ல கொழுக்கட்டையா வச்சிருந்த? உன்ன கல்யாணம் பண்ணிக்க ஒருத்தன் ஆசையா காத்திருந்தானே… அவன பத்தி யோசிக்காம கண்ட தெரு நாய்க்கு கழுத்தை நீட்டி இருக்க..? அறிவ அடமானம் வச்சிட்டியா? வரக் கோபத்துக்கு உன்ன… உன்ன… உன்ன…”
கண்ணை இறுக்கி மூடிக் கொண்டான்.. கை நெற்றியை அழுத்தித் தேய்த்துக் கொண்டிருக்க.. பார்த்து நின்றவளுக்குக் கண் குளமாக ஆரம்பித்தது. இதெல்லாம் ஏன் முன்னமே அவளுக்குத் தோன்றவில்லை. சித்தி அவளை பாரமாய் நினைத்திருக்கவே மாட்டார்களே… சொட்டை மண்டை தனக்காகக் காத்திருந்தானா? இவருக்கு எப்படி அவனைப் பற்றித் தெரிந்ததாம்? இவர் வாத்திக்குச் சொந்தமோ? ஐயோ..! என்னையும் அடிப்பாரோ?
கண் திறந்தான். எதிரே சுவருக்குள் புதைந்து கொண்டிருந்தாள். கண்ணில் குளம் கட்ட ஆரம்பித்தது. அவன் அருகில் நெருங்கி நின்றிருக்கவே.. முகம் பார்க்கவேண்டி அண்ணாந்து பார்த்து நின்றாள்.
பயத்தில் அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. ஏமாந்து போன அவமானம் ஒருபக்கம். ‘வாழ வேண்டிய வாழ்க்கையை முழுவதுமாக நாசம் செய்துவிட்டேனே..’ தவறிழைத்துவிட்ட குட்டி பெண்ணாய் மாறிப்போனாள்.
[the_ad id=”6605″]
முட்டி நின்ற கண்ணீரும்.. துடித்துப் பிதுங்கிய உதடும்.. சிவத்த கன்னமுமாய் நிற்பவளைக் கண்டால் கல்லும் கரையுமே! இவன் என்ன ஆவான்? வேரோடு சாய்ந்தே போனான்!
கோபம் தான் அவனுக்கு. நியாயமான கோபமும் கூட! விளையாட்டாக அன்று திருமண வீட்டில் அவள் வார்த்தைகள் விட்டிருந்தாலும், அவனுக்காகப் பார்த்த பெண்ணின் வார்த்தைகள் அவை! விதையாய் அந்த வார்த்தைகள் இதயத்துக்குள் விழுந்து அது வேர்விட்டு.. கொடியாகப் பற்றிப் பிடித்து இதயத்தை உள்ளும் புறமுமாகச் சுற்றிப் பிடித்துப் பூத்துக் குலுங்கி விட்டதே..
காதலில் விழுந்த அன்றே அவளை மனைவியின் ஸ்தானத்தில் வைத்துவிட்டானே.. காதலி விட்டுச் சென்றால், அவளை மறக்க வேறு ஒருத்தியைத் திருமணம் செய்யலாம். மனைவி விட்டுச் சென்றால்? அந்த கோபம் தான் அவன் கண்ணில். அவள் கண்ணீர் கண்டபின் கனன்று கொண்டிருந்த கோபம் இருந்த தடம் தெரியாமல் பொசுங்கிப் போனது.
வீட்டை விட்டு முன் பின் தெரியாதவனோடு வந்தது தவறுதான். தவறே செய்தாலும் துடித்து நிற்பது அவன் துளசியாயிற்றே.. ‘துளசி..’ என்று மனம் அவளோடு கதறியது.
‘அழாத துளசி…’ இழுத்து அணைத்துக் கொள்ளத் துடித்தாலும் இரண்டடி பின் நகர்ந்தான். மனம் ஏகமாய் வலித்தது. அவன் மனைவியாய் நினைத்துக் கடந்த நான்கு மாதம் முன் வரை அவளோடு மனதில் வாழ்ந்தவனுக்கு மனம் கதறிக் கொண்டு துடித்தது. உருக்குலைந்து நிற்பது அவன் பாதியாயிற்றே.
தாத்தா இறந்த செய்தி கேட்டு.. அவன் ஊர் வந்து சேரும் முன், என்ன தான் அவள் அப்பாவின் மனைவிக்கு அவசரமோ…? அவகாசம் இன்றி கிளம்பத் துடித்துக் கொண்டிருந்தாள் மாதுரி. மூர்த்தியின் பெற்றோர் இறுதிச் சடங்கிற்கு வந்திருக்க, இவன் வந்து சேரும் முன் எல்லாம் முடிந்திருந்தது.
அன்று பார்த்தான் அவன் துளசியை. வாடிப்போயிருந்தாள். அழுது அழுது ஓய்ந்திருந்தாள். கண்ணீர் இல்லை.. அவ்வப்போது கேவல் மட்டுமே வந்து போனது. எழில் சித்தி மடியில் படுத்திருந்தாள். அவள் மடியில் தலை வைத்து அவள் கருப்பனும்.. தலை கோதி அழுதுகொண்டே அவள் சுந்தரியும் இருக்க, இவனால் அருகில் செல்லமுடியா நிலை. இன்னும் ஒரு மாதத்தில் பரிசம் போடுவதாய் இருந்தது. எல்லாம் முடிந்து போனது என்று அவனுக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தால்.. அவள் அப்பா கூட்டிப் போகப் போவதாய் பேச்சு ஆரம்பிக்கவும் மணமுடிக்கக் கேட்டிருப்பான்.
திருமணம் பற்றிப் பேசும் தருணமல்ல என்பதால் அந்த பேச்சு பேசப்படவில்லை. பெற்றவன் அழைத்துச் செல்ல நிற்கும் போது யார் என்ன கூற முடியும்? எப்படியும் கல்லூரிக்குச் சென்று படிப்பாள் என்று நினைத்துவிட்டான்.
ஆறு மாதமாகியும் எந்த பேச்சும் ஆரம்பிக்காமல் போகவும் முத்து மீண்டும் எழில் வீட்டில் பேச.. இன்னும் ஆறு மாதம் போகட்டும், பதினெட்டு முடிந்ததும் திருமணத்திற்கு முன் தினம் நிச்சயம் வைத்துக்கொள்ளலாம் என்று ராஜன் கூறிவிட்டார். எல்லாம் அதன் போக்கில் போகவும் மூர்த்திக்கு அவளைப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் மட்டும் தான்.
நான்கு மாதம் முன் சத்யன் நிச்சயதார்த்ததிற்கு பாம்பே வந்தவன், துளசியை பார்க்கத் தில்லி சென்றான். கேட்ட செய்தி அவனைக் கற்சிலையாய் மாற்றியது.
“பெண் காதலனோடு ஓடிப் போனாள்!” என்றாள் மாதுரி! ஏழு மாதம் தானே இங்கிருந்தாள்? அதற்குள் வீட்டை விட்டு ஓடிப் போகும் அளவு காதலா? அவனால் நம்ப முடியவில்லை.
ஒரு வாரம் தான் பழக்கம் என்றாலும் மூர்த்திக்கு அவன் துளசியைத் தெரியாதா? சாத்தியம் இல்லை என்றது மனது. அவர்கள் தவறாய் பேசுவது அவன் மனைவியைப் பற்றி என்று எப்படி சொல்லுவான்?
“ஒருவன் ஏமாற்றிக் கூட்டிச் செல்லும் வரை நீங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” கர்ஜித்தான்.. “பெண் இங்கு இருக்க முடியாமல் சென்று விட்டாளா? என்ன கொடுமை செய்தீர்கள்?” என்று கேள்வி தொடுத்தான். அவன் மனதளவில் தான் அவள் மனைவி என்பதால் அவனுக்குப் பதில் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் அங்கு ஒருவருக்கும் இல்லை. இவனின் எந்த கேள்விக்கும் ராஜன் பதில் சொல்லும் நிலையிலில்லை.
[the_ad id=”6605″]
விசாரித்து பார்த்தாயிற்று. ‘அவள் கௌரவ் என்ற நேர்மையானவனோடு இசைந்து பழகியதாய்’ புத்தகக் கடை சொந்தக்காரர் கூறினார். கோவில் பூசாரி ‘அவள் கண்ணீரை அந்த அன்பானவன் துடைத்ததாய்’ கூறினார். முக்கு தெருவில் இஸ்திரி போடுபவன்.. ‘புத்தகக் கடையில் வேலை பார்த்த ஒழுக்கமானவன் சென்ற மாதம் தான் அவள் கழுத்தில் கருப்பு மணியிட்டு மனைவியாக்கினான்’ என்றான். நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.
கௌரவ் அவள் சம்மதத்தோடே அவளை அழைத்துச் சென்றிருக்க.. மூர்த்தி செய்ய அங்கு ஒன்றுமில்லாமல் போனது. தன் மனைவி கழுத்தில் மற்றவன் தாலியைப் பார்க்கும் சக்தி இல்லை அவனுக்கு. ஓய்ந்தே போனான் மூர்த்தி.
அடுத்த ரயில் ஏறி அவன் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டான். அன்று தொலைந்து போனது அவன் கன்னத்துக் குழி. சிரித்த முகாமாய் வலம் வந்தவன் சிரிப்போடு பேச்சையும் மறந்து போனான். நல்ல பழக்கம் சொல்லித் தர வேண்டிய மனிதன் புகைபிடிக்க ஆரம்பித்தான். அவளைத் தூக்கி போடவும் முடியாமல்… மறக்கவும் முடியாமல், அவள் நினைவைப் புகையால் நிரப்பிக் கொண்டிருந்தான் நேற்று வரை.
“தப்பு என் மேல தான். படிக்கிற சின்ன பொண்ணு என்ன அவசரம்ன்னு விட்டுடேன்.” வாய்குள் முணுமுணுத்துக் கொண்டே, தலையை இடம் வலமாக ஆட்டியவன்.. “வா.. போகலாம்” கூடவே கூட்டிகொண்டு வாசல் பக்கம் திரும்ப உள்ளே நுழைந்தான் தடியன். நடக்க ஆரம்பித்தவள் நின்று விட்டாள்.