செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 13
பம்பாய் தாதரிலிருந்து புறப்பட்ட மெயில், ஊர்ந்து ஊர்ந்து ஒருவழியாய் மெட்ராஸ் சென்ட்ரலை மாலை நான்கு மணி போல் வந்தடைந்தது. சலசலக்கும் மக்கள் கூட்டம். பல தரப்பட்ட மக்கள். பல தரப்பட்ட தமிழ் உச்சரிப்பு. தமிழ் மண்ணை விட்டுச் சென்று பதிமூன்று மாதங்களை எட்ட சில நாட்களே இருக்க இன்று மீண்டும் அதே மண்ணில் கால் பதிக்கும் பாக்கியம் துளசிக்கு. ஒரு இனிய உணர்வு. தாய் மண்ணை காண முடியாமல் ஏங்கி கிடப்பவரால் மட்டுமே அதை உணரமுடியும். அந்த சுகத்தை, அந்த சிலிர்ப்பைத் துளசி உணர்ந்தாள்.
சோர்வெல்லாம் எங்கு போனது? சட்டென்று ஒரு உற்சாகம் வந்து ஒட்டிக் கொண்டது.
சலசலக்கும் தமிழ் பேச்சுக்கள்.. பல மொழியில் ப்ளாட்ஃபார்ம் அறிவிப்புகள்.. பல தரப்பட்ட மக்கள்.. அந்த மக்கள் அலையில் அடித்துச் செல்லப் பட்டாள். அவளின் பெட்டியையும் மூர்த்தியே தூக்கிச் சென்றிருக்க.. கையில் துக்கி செல்ல எதுவும் இல்லை. சுமக்க பாரமில்லை என்றதும் இருக்கைகளையும் வீசிக் கொண்டே நடந்தவள்.. வருவோர் போவோர் வாய் பார்த்துக் கொண்டே நடந்தாள்.
“வழிய பாத்து போயே மா.. வந்துடுச்சு கண்ண தலைக்குப் பின்னால் வச்சுக்கிட்டு!” அவள் இடித்த கூலி, வள்ளென்று விழுந்தான். ஒருவழியாகச் சுற்றம் உணர்ந்தாள்.
அவள் தொடர்ந்த வெள்ளை வேட்டியைப் பார்த்தாள். ‘ஐயோ.. இது அவரில்லையே..’ அவள் தொடர்ந்த வெள்ளை வேட்டி எங்கே போனது? எப்பொழுது வேட்டி மாறியது? அதைத் தானே பார்த்துக் கொண்டே நடந்தாள்? எல்லா பக்கமும் சுற்றிப் பார்த்தாயிற்று அவளின் மூர்த்தி சார் மட்டும் அவள் கண்ணில் படவே இல்லை. “மூர்த்தி சார்..” வாய் தந்தியடித்தது.
“மூர்த்தி சார்?” நாலா திசையும் பார்த்தாயிற்று அவனைக் காணவில்லை.
விடமாட்டேன் என்றாரே? எங்குச் சென்றார்? கையை பிடித்து நடந்திருக்க வேண்டுமோ? என்ன செய்ய?
ஈர்த்த கூட்டம் இப்பொழுது பிடிக்கவில்லை. மக்கள் நெரிசல் எரிச்சலைக் கிளப்பியது. அவரை பற்றி எதுவும் தெரியாது… எங்குப் போய் தேட?
அழுகை முட்டி கொண்டு வர, வரவா என்று கண்ணுக்குள் நீர் நின்று கொண்டு வெளியே வரத் துடித்தது. திருவிழாவில் தொலைந்த குழந்தையே தான்.
“மூ..ர்த்..தி சா..ர்?”
மூர்த்தியை தவிர யார் யாரோ அவளிடம் வந்தனர்… “என்ன மா.. யார தேடுற? அட்ரெஸ் சொல்லு நான் கூட்டிட்டு போறேன்” என்று.
வாழ்வில் ஒரு முறை பட்டது போதாதா? நின்ற இடத்தில் அப்படியே நின்றுவிட்டாள். ‘வருவார் கண்டிப்பாகத் தேடி வருவார்’ என்று அப்படியே நின்றுவிட்டாள்.
“வேடிக்கை பார்த்து முடிச்சிட்டியா? போலாமா?” என்று குருநகையோடு வந்து நின்றான்.
அழுகைக்கு நடுவே கோபம் எட்டிப் பார்த்தது. “வேணும்னே விட்டுட்டு போயிட்டு இப்போ என்ன? நான் ஒண்ணும் வரல.. போங்க. நான் அப்படியே காணாம போறேன்…” கையை மார்புக்குக் குறுக்காக கட்டிக்கொண்டே முறுக்கி கொண்டாள்.
“நீ என் பின்னாடி தானே வந்திட்டு இருந்த… நீ காணம்னதும் நீ தான் என்னைக் கழட்டி விட்டுட்டன்னு நினைச்சேன்..”
“பேச்ச பாரு பேச்ச… கழட்டி விட்டுடேனாம். விட மாட்டேன்னு சொல்லிட்டு.. வந்து சேரதுக்குள்ள என்னை தொலைக்க பாத்தீங்க?” அழுகையும் கோபமும் கலந்த குரலில் ஏறிட்டாள்.
“அட.. இது என்ன வம்பா போச்சு… நீ வாய பிளந்துக்கிட்டு எங்கேயோ பராக்கு பார்த்துட்டே போய்ட்டு என்னை சொல்லுறது கொஞ்சம் கூட நியாயமே இல்ல!” அவன் வம்பிழுத்தான்.
கண்ணை உருட்டி முறைத்தாள். “ஓ… தொலைச்சது வேற இல்லாம என் மேலயே பழி போடுறீங்களா?”
“நீ குழந்த இல்ல.. உன்ன நீ தான் பார்த்துக்கணும். யாரையும் நம்பி உன்ன ஒப்படைக்கக் கூடாது! என் கூடத் தான் வரேன்னு தெரியும்.. ஏன் என்னைப் பத்தி எதுவும் தெரிஞ்சுக்கல? தெரிஞ்சுக்கணும். சுத்தி முத்தி நடக்கிறதைக் கண் பாக்கும் போது மூளையும் வேலை செய்யணும். குருட்டாம் போக்கில வாழ கூடாது”
‘தொலைஞ்சே போயிருக்கலாமோ?’ என்று எண்ணும் அளவிற்கு லெக்சர் செய்தான்! அவள் காதில் இரத்தம் மட்டும் வரவில்லை.
“ஓய்.. இப்போ எதுக்கு இந்த முழி முழிக்கிற? காத எதுக்கு தொட்டுப் பார்த்த? மண்டையில என்ன ஓடுது?”
“ஒண்ணும் இல்லியே…” என்றாள் மிடுக்காய்
“நம்ம ரெண்டும் பேரும் ஒரு அக்ரிமென்ட் போடலாமா?”
நடந்து கொண்டிருந்தவன் அவள் முகம் நோக்கி நிற்க..
புடவை முந்தி நுனி கையில் சிக்கித் தவிக்க, “என்ன?” என்றாள்.. முகத்தை ஒரு முழத்திற்குத் தூக்கி பிடித்துக் கொண்டு..
“இன்னையில இருந்து நான் உன் கிட்ட எதையும் மறைக்க மாட்டேன். பொய் சொல்ல மாட்டேன். நீயும் என் கிட்ட உன் மனசை மறைக்கக் கூடாது?”
அடுத்த நொடியே.. “மாட்டேன்..” என்றாள்
“சரி போ!” என்றான்
“என்ன சரி?” அதற்கும் சண்டைக்கு வந்தாள்
“உனக்கு உண்மை பேசத் தைரியம் இல்ல. கூட்டிட்டு வந்த என் மேலையும் நம்பிக்கை இல்ல… அதனால் மாட்டேன்னு சொல்ற! தைரியம் இல்லாத சின்னப் பொண்ணு கிட்ட எதிர்பார்த்து இருக்கக் கூடாது! அது தான் சரி சொன்னேன்.” சீண்டினான்
“நான் ஒண்ணும் சின்ன பொண்ணு இல்ல. எனக்குத் தைரியம் இல்லன்னு யார் சொன்னா? எல்லாம் நிறையவே இருக்கு!”
நமுட்டு சிரிப்போடு “அப்போ நீ சரி சொல்லு!” என்றான்
“ம்ம்.. சரி சரி” என்றாள். போனால் போகட்டும் என்ற முகபாவம்.
“என்ன சரி?”
“மனச மறைக்காம உண்மை பேசறேன்… ஆனா உங்கட்ட மட்டும் தான்!” என்றாள் சுரத்தை இல்லாமல்.
சிரித்துக்கொண்டான். சின்ன பெண். உண்மையிலேயே விபரம் தெரியவில்லை. இவள் வயது பிள்ளைகளோடு பழக விட வேண்டும்!
மீண்டும் நடக்க அரம்பிதவன், “சரி… இப்போ சொல்லு?” என்று அவள் முகம் பார்க்க..
“அதுக்குள்ளயேவா.. பச்.. என்ன சொல்லணும்?” சத்தம் பாதி தான் வெளி வந்தது.
“ஏதோ என்னைப் பத்தி நினைச்சியே அத!”
“அது அது… வந்து…” வந்த பாதி சத்தமும் நின்றே போனது
“வந்து?” ஊக்குவித்தான்.
“பச்! எனக்கு இந்த அஃரிமென்டே பிடிக்கல!” பெரிதாக மூச்சை இழுத்துவிட்டு, “என்னை பார்த்துப்பேன்னு சொல்லிட்டு என்னைத் தொலைக்க பார்த்தீங்களே.. தொலைக்க பார்த்தீங்கன்னு கவலைப் பட்டேன். அப்புறம் நீங்கத் தப்பு செஞ்சிட்டு, என் காதில இரத்தம் வர அளவுக்கு அட்வைஸ் வேற! இதுக்கு என்னை தொலைச்சிருக்கலாம்னு நினைச்சேன்”
அழகாய் ஆர்ப்பாட்டம் இல்லாமல் சிரித்தான். கன்னத்தில் குட்டி குழி தெரிய.. அந்த குழியில் மெதுவாய் மூழ்கிப் போக ஆரம்பித்தாள்.
அவனைப் பிடித்தது. அதனால் அவன் கன்னக்குழி சிரிப்பு பிடித்தது. அதனால் அந்த சிரிப்பில் இணையப் பிடித்தது. இணைந்துக் கொண்டே அந்த கன்னக்குழியில் மூழ்கத் தோன்றியது. இது அனைத்துமே அவள் நினைவோடு இருக்கையில் நடந்தாலும், அவன் மேல் இருக்கும் ஆர்வத்தை மட்டும் மனம் ஒத்துக் கொள்ளவேயில்லை.
சத்தம் எழுப்பி சிரித்து வருடம் ஒன்றாகியிருந்தது. அவனோடான கவலையில்லா பேச்சு பிடித்தது. அவனைப் போல் சத்தம் போட்டு சிரிக்கப் பிடித்தது. அவனோடு இருந்தால் எல்லாமே பிடித்தது. வாழவும்! அவளின் பிடித்தம் அவள் கண்ணில் பளிச்சிட்டது.
மக்கள் நெரிசல் எல்லாம் தாண்டி வெளியே வந்திருந்தனர்.
“ஆட்டோல போகலாமா?” கேள்வியாய் அவளைப் பார்க்க
“எங்க போறோம்?” அவள் கேள்வியாய் அவனைப் பார்த்தாள்.
“நம்ம வீட்டுக்கு?”
வீடா? மூர்த்தியை, திருமணத்தில் பார்த்திருக்கவே அவர்கள் ஊரின் சுற்றுவட்டாரத்திலிருக்கும் ஏதேனும் ஒரு கிராமமாக இருக்கும் என்று எண்ணினாள். அவன் தோரணை, கம்பீரம், தோற்றம் எதுவுமே பட்டணத்தான் போலில்லை. மெட்ராஸ்சிலிருந்து பேருந்தோ, ரயிலோ பிடித்தால் தானே ஊர் போய்ச் சேர முடியும்! ஆட்டோ ரிக்ஷாவிலா? பெண்ணிற்கு மலைப்பாய் போனது.
“அது எப்படி ஆட்டோலேயே போக முடியும்? ரொம்ப தூரம் இல்லையா?”
“ரொம்ப எல்லாம் இல்ல.. பக்கம் தான். மிஞ்சி போனா இருபது நிமிஷம். வீட்டில இருக்கலாம். மைலாப்பூர்” என்றான்.
“என்ன பூர்? மைலாப்பூரா? நீங்க மெட்ராஸ்சா?” கண் ஏகத்திற்கும் விரிந்தது.
“இங்க தான் தனியா தங்கியிருக்கேன். அம்மா அப்பா எல்லாம் சொந்த ஊர்ல தான் இருக்காங்க!”
“தனியாவா? பயமா இல்லியா?”
சிரித்தான். “வா.. ஆட்டோல ஏறு! முதல்ல ஒரு ஹோட்டல்ல போய் டிபன் சாப்பிட்டுட்டு, சூடா ஃபில்டர் காபி குடிச்சுட்டு வீட்டுக்கு போலாம்!”
கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்கும் சேர்த்தே வயிற்றை நிரப்பினாள். ‘என்ன நினைப்பாரோ’ என்ற கட்டமெல்லாம் தாண்டியிருக்க.. மூக்கு முட்ட உண்டாள்.
“காபி செம்ம சூப்பர் மூர்த்தி சார். இத மாதிரி நான் குடிச்சதே இல்ல..” ருசித்து ரசித்துக் குடித்தாள். அவள் முகம் பார்த்தால்.. குடிக்க வேண்டாம் என்று நினைப்பவர் கூட மனதை மாற்றி குடித்துவிட்டே செல்வார்.
“நீ சொல்லவே வேண்டாம்.. உன் கண்ணே சொல்லுதே..”
“ஒரு வாழ்க்கை மூர்த்தி சார்… வகை வகையா சாப்பிடணும். ஆசை படும் போது எல்லாம் சாப்பிட்டே இருக்கணும். என்ன சாப்பிட்டாலும்.. எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு நிறையவே கூடாது. மனசு மட்டும் நிறைஞ்சு போகணும்… அனுபவிச்சு ரசிச்சு.. ருசிச்சு பொறுமையா சாப்பிடணும். இதோ இந்த காரமான மொறுமொறு வடையும்… அது கூடவே ஆவி பறக்கிற இந்த கசப்பும் இனிப்பும் கலந்த காப்பியும்.. அமோகம் மூர்த்தி சார். மூக்கும் நாக்கும் கண்ணும் கொடுத்து வச்சது மூர்த்தி சார்.” கண்சொக்கி அவள் பேச.. அவனும் சொக்கித் தான் போனான்.
பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையைப் பார்ப்பது போல் பார்த்து வந்தாள். கண்ணும் வாயும் திறந்தது. பெரிய விஸ்தாரமான சாலை. அம்பாசிடர், பிரிமியர் பத்மினி தவிர காண்டசா கிளாசிக்கும் செல்ல கண் ஏகத்திற்கும் விரிந்தது.
“எனக்கு இந்த கார் ரொம்பப் பிடிக்கும் மூர்த்தி சார். கப்பல் ரோட்டில மிதக்கிற மாதிரி இருக்கில்ல? கண்ண பறிக்குது மூர்த்தி சார். இதோட படம் எல்லாம் கிழிச்சு என் ரூம்ல ஒட்டி வச்சிருப்பேன். பாட்டி கூட திட்டுவாங்க. அதுக்காக எல்லாம் படத்தைக் கிழிக்க முடியுமா சொல்லுங்க?”
“முடியாது தான்!” அவனும் இதே வேலை எல்லாம் செய்தவன் தானே..
என்ஃபீல்டும், ஜாவா செவிப்பறையைக் கிழிக்க… “செம்..ம வண்டி மூர்த்தி சார். சத்தம் சூப்பரா இல்ல.. அப்பிடியே அதுல உக்காந்து ஊர் எல்லாம் சுத்தணும் மூர்த்தி சார்..” என்றாள் சிறுபிள்ளையாய் கைகொட்டி.
“ம்ம்ம்… போலாம்” வாக்கு கொடுத்தான்.
“மூர்த்தி சார்… இங்க கூட எல்லாரும் சைக்கிள் ஓட்டுறாங்க பாருங்களேன். நான் கூட செம்ம ஸ்பீடா ஓட்டுவேன். சுந்தரி என்னை ஒரு நாள் கூட தோக்கடிச்சதே இல்ல தெரியுமா?” பெருமை பீத்தினாள். வாய் மூடாமல் பேசினாள். அவனும் ஆர்வமாய் கேட்டான்.
அவளின் சின்ன சின்ன வாக்கியத்திலும் அத்தனை உயிர்ப்பு. முகத்தில் ஒரு பூரிப்பு. மீண்டும் பழைய சிட்டு குருவியாய் மாறிக்கொண்டிருந்தாள். கண் சாலையிலிருந்து இப்படி அப்படி நகரவே இல்லை. வாகனங்கள் அவளை வெகுவாய் கவர்ந்தது.
“இங்க ரைட் திரும்பிடுங்க.. நாலாவது வீடு.” ஆட்டோ-ரிக்ஷா ஓட்டுநருக்கு வழியைக் கூறியவன்.. “இந்த தெருல தான் வீடு இருக்கு துளசி” என்றான். பிரதான சலையிலிருந்து கிளை சாலைக்குள் வண்டி திரும்பியது.
அகலமான செம்மண் சாலை. சாலையின் இருபுறமும் குல்மோகர் மரங்கள். தெரு முனையில் பெட்டிக் கடை ஒன்று. அதன் மரத்தடியில் இஸ்திரி வண்டியும் இஸ்திரி காரரும்… அவர் மனைவியோடு கதை பேசிக்கொண்டே இஸ்திரி போட்டு கொண்டிருந்தார்.
சீரான வரிசையில் வீடுகள். அனைத்துமே தனி வீடுகள், சிலது சிறியதும் சிலது பெரியதுமாக மதில் சுவற்றிற்குள் அடக்கம் ஒடுக்கமாக அடங்கியிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக காலி மனைகள். காலி மைதானத்தில் கிரிக்கெட் ஆட்டம் களைகட்டியது.
தெருவில் சில வாண்டுகள் கோடு கிழித்து பாண்டி விளையாடிக் கொண்டிருக்க, பார்த்தவளுக்குக் குதூகலம் தாளமுடியவில்லை.
ஆட்டோ-ரிக்ஷா ஒரு வீட்டின் முன் நின்றது. இரண்டு அடுக்கு மாடி வீடு.
“சார்… தள்ளுங்க…” என்று ஒரு வாண்டு அவனுக்கு பெடல் கூட எட்டாத பெரிய சைக்கிள் ஒன்றில் குரங்கு பெடல் அடித்து சென்றுகொண்டிருந்தான்.
“எனக்கும் ஓட்டணும் மூர்த்தி சார்.. அவன் கேட்டா கொடுப்பானா?” கண்களில் நட்சத்திரங்கள் மின்ன ஆசைகளை எல்லாம் அவளை அறியாமலே அவனிடம் கொட்டினாள்.
“இங்க பக்கத்தில சைக்கிள் கடை இருக்கு துளசி. ஒரு ரூபா கொடுத்தா.. ரெண்டு மணி நேரத்துக்கு, வாடகைக்குச் சைக்கிள் கொடுப்பான். வாங்கி ஓட்டலாம்”
கிராமத்தில் தான் அப்படி என்றால்.. இங்குமா? பெண்ணுக்கு குஷி தாங்கவில்லை.
பூட்டை விடுவித்து இரும்பு கேட்டை திறந்து உள்ளே நுழைந்து கொண்டே, “வா… இது தான் நம்ம வீடு. ஒரு ரெண்டு நாள்ல உனக்கு ஹாஸ்டல் பார்க்கிறேன். அது வரைக்கும் உனக்கு வேற வழியே இல்ல… என் கையால தான் சாப்பிடணும்!”
“நீங்க சமையல் எல்லாம் செய்வீங்களா?” விழி விரித்துக் கேட்டாள்.
“அது என்ன கம்பசூத்திரமா? எல்லாத்தையும் ஒரே மாதிரி தான் செய்யணும்! எண்ணைய ஊத்தணும்.. தாளிக்கணும்.. வெங்காயம் வெட்டி போடனும்.. தக்காளி வதக்கணும்… காய போட்டு.. உப்பு.. மஞ்சள், மிளாகப் பொடி.. மல்லிப்பொடி தூவணும்! அவ்வளவு தான்! சிலதுக்கு புளிதண்ணி ஊத்தணும்” என்றான்.
வாய் பிளந்து கேட்டாள்.
“என்ன வாய பிளந்துட்ட… உனக்கு சமையல் தெரியும் தானே?”
‘ஹீ ஹீ ஹீ’ இளித்து வைத்தாள். “நல்லா சமைச்சு கொடுத்தா ரொம்ப நல்லா சாப்பிடுவேன். சுமாரா சமைச்சா ஓரளவுக்குத் தான் நல்லா சாப்பிடுவேன்” ஆனந்தமாய் ஆரம்பித்து சோக ராகத்தோடு முடித்தாள்.
அது இரண்டு அடுக்கு மாடிக் கட்டிடம். கீழ் தாளத்தில் இவன் இருக்க மாடியில் வேறு குடித்தனம் இருந்தனர்.
“கீழ நம்ம வீடு. மாடில அம்புஜம் மாமி! ரொம்ப நல்ல மாதிரி! இப்போ அவங்க பொண்ணு வீட்டுக்கு போயிருக்காங்க. அடுத்த மாசம் வருவாங்க.”
வீட்டைத் திறந்தவன், “முதல் தரம் வரியே.. ஆரத்தி எடுக்கணுமே… எப்படினு தெரியல. எதுக்குன்னும் தெரியாது. அதுல என்ன போடணும்? ஒண்ணும் தெரியல! என்ன பண்றது?” விழித்தான்.
“ஒண்ணும் வேண்டாம் மூர்த்தி சார்.. உள்ள போலாம் வாங்க” மறைக்க முடியாத குதூகலம் உள்ளுக்குள்.
“சரி… வலது கால எடுத்து வச்சு வா..”
பார்த்ததும் பிடித்துப் போனது. பார்க்காவிட்டாலும் அவளுக்கு பிடித்து போகும், மூர்த்தியின் இருப்பிடம் என்பதால்! அவள் இருப்பிடத்திற்கு வந்த நிம்மதி.
கருப்பு, வெள்ளை, பழுப்பு நிற சிப்ஸ் கொண்ட மொசைக் தரை. பெரிய ஹால்.. முப்பத்தி இரண்டு பற்களையும் காட்ட செய்த நீள மர ஊஞ்சல். இரண்டு படுக்கையறை, அடுக்களை. அடுக்களை கதவை திறந்தால் பொது பயன்பாட்டிற்கான இடம்.. ரெட் ஆக்சைட் தரை! அதன் ஒரு மூலையில் கழிவறை. வெளிச்சுவர் காற்றோட்டத்திற்காக முட்டிவரை சுவராகவும் மேல் முழுவதும் கிரில்லாலும் அடைத்து வைத்திருந்தனர். மூடியிருந்த கதவைத் திறந்தால், கிணறு, துவைக்கும் கல், தண்ணீர் பிடித்து வைக்கத் தொட்டி, ஒரு ஓரத்தில் குளியலறை.
அவளுக்கான அறையில் அவள் பெட்டியை வைத்தவன், “அந்த பெட் ரூம் என்னது. வீட்டுல இருந்து வரும்போது இதுல தான் தங்கிப்பாங்க. உனக்கு இது ஓக்கேவா?”
“ம்ம்” என்றாள், வேகத் தலையசைப்போடு.
“தண்ணி இழுத்து பாத் ரூம்ல வச்சு தரேன்.. குளிச்சு ரெடி ஆகரியா? வெளியில போலாம்?” என்றதும் ஆவலோடு தலையசைத்தாள்.
“நான் நான்… நான் தான் இழுப்பேன்…” கிணற்றங்கரையில் ஒரே ஆட்டம்…
“இந்த பக்கெட் வேண்டாம்.. இது இது.. இல்ல அது!” பாடாய்ப் படுத்தி எடுத்தாள்.
இரண்டு முறை சறுக்கியும் விழுந்தாள். குளிக்கச் செல்லும் முன்னே பாதி நனைந்தும் போனாள். மடித்துக் கட்டிய வேட்டியும்.. கை வைத்த பனியனும் நனைந்த போதும் கோபப்படவில்லை. அவன் எதற்குமே அவளைக் கடியவில்லை. தாத்தாவை மிஞ்சினான் செல்லம் கொஞ்சுவதில்.
‘மூர்த்தி சார்’ என்ற உருவம் பச்சை மரத்தில் ஆணி வைத்து கொஞ்சம் கொஞ்சமாகக் கீறி வரைந்த உருவம் போல் துளசியின் ஆழ் இதயத்தில் வேரூன்றி ஆழமாகப் பதிந்து கொண்டிருந்தது.
கிளம்பி வந்து அவன் முன் நின்றவள் ஆர்வமாய் கேட்டாள், “எங்க போறோம்?” என்று.
“உனக்கு ஹாஸ்டல் பாக்க. எனக்கு தெரிஞ்ச ஒருதங்க வெளியில தங்கி காலேஜ் வருவாங்க… அவங்க ஸ்டே பண்ற இடத்தில கேட்டு பார்ப்போம்..”
‘விடுதியா?’ ஆவலோடு வந்தவள் முகம் விழுந்து போனது. உள்ளுக்குள் அடிப்பட்ட உணர்வு.. ‘விருப்பமில்லை’ என்று கூற முடியுமா? மூர்த்தியோடு இருக்க முடியாதா?
அவள் முகபாவம் படிக்கத் தெரிந்தவன் கேட்டான்.. “என்ன ஆச்சு?” என்று
“இப்போ தானே வெளியில இருந்து வந்தோம்… வேண்டாம் மூர்த்தி சார்.. இங்கேயே இருப்போம். நாளைக்குப் போவோமா?” என்று சமாளித்தாள்.
“வந்து மூணு மணி நேரம் ஆச்சு துளசி!”
“ஆமா மூர்த்தி சார்… இருட்ட ஆரம்பிச்சிடுச்சு. நாளைக்கு போலாமே..”
அவனாவது அவளை விடுவதாவது.. “நம்ம அஃரிமென்ட் நினைவிருக்கா துளசி.. என் கிட்ட உன் மனச மறைக்கக் கூடாது!”
“எப்போவும் எல்லாம் சொல்ல முடியாதே மூர்த்தி சார்!” முந்தானை ஆட்காட்டி விரலில் சுற்றிச் சுற்றி இழுபட்டது.
“சரி.. எப்பவும் வேண்டாம். இப்பொ என்னைப் பார்த்து சொல்லு!”
அண்ணாந்து எதிரிலிருந்தவன் முகத்தைப் பார்த்தாள், “சொன்னேனே மூர்த்தி சார்.. இன்னைக்கே வேண்டாம்.”
“அது தான் ஏன்? கிளம்பி வந்துட்டு வேண்டாம் சொன்னா என்ன அர்த்தம்?”
“வந்த உடனே என்ன வெளியில தள்ளி கதவ சாத்தாதீங்க மூர்த்தி சார்..”
கண்ணில் நீர் கோர்த்துவிட்டது. குனிந்து நின்றுகொண்டாள். ‘என்ன பேசிவிட்டாய் துளசி? உன் மூர்த்தி அப்படிச் செய்வானா?’
“துளசி…”
“ம்ம்..”
“என்னை பாரேன்..”
“முடியாது. என்னை துரத்தறீங்க! நான் இப்போ தான்.. உங்கள பாத்தபிறகு தான் சந்தோஷமா இருக்கேன்… திரும்பவும் தனியா அனுப்பறீங்க?”
கேட்ட அவனுக்குத் தான் எப்படி உணரவேண்டும் என்றே தெரியவில்லை. அவனிடம் அவளுக்கு நிம்மதி பிறப்பதைக் குறித்து மகிழவா? வயது பெண்ணோடு தனித்து இருப்பது, ஊர் வாய்க்கு அவலாய் போகப் போவதை நினைத்து வருந்துவதா? அவனுக்கு அவள் பெயர் எங்கும் அடிபட்டுவிட கூடாது. அவளை அழவிடவும் முடியாது.
“சரி இன்னைக்கு வேண்டாம். கடைக்குப் போகலாமா?”
“ம்ம்ம்..” தலையசைக்க
“கொஞ்சம் சிரிச்ச முகமா தான் சொல்றது.. சும்மா சும்மா இப்படிக் குட்டி பாப்பா மாதிரி கண்ண உருட்டி, உதட துருத்தி என்னை ஏமாத்த கூடாது.”
வீட்டை பூட்டிக்கொண்டே அவன் வெளியே நடக்க… பின்னோடு வந்தவள், “இல்ல மூர்த்தி சார். கண்ண உருட்டி ஏமாத்த மாட்டேன்..” கையால் வாயை மூடி கிளுக்கினாள்.
நடந்து கொண்டிருந்தவன் முகத்தில் கன்னக் குழி எட்டிப் பார்த்தது. “நில்லு வரேன்” என்றவன், வந்தான் ‘பட பட’ என்று செவிப்பறை கிழிய.. அவன் ஜாவா பைக்கில்.
வந்தவனைப் பார்த்தாள்.. முப்பத்தி இரண்டு பற்களையும் காட்டி, கண்ணில் நட்சத்திரம் ஜொலிக்க!
“ஏறிக்கோ..” என்றான், கன்னக் குழி தெரிய அவனுக்கே உண்டான ஸ்டைலோடு.. மீசையை மேல் ஏற்றிவிட்டுக் கொண்டே.
அவனைப் பார்ப்பாளா.. வண்டியைப் பார்ப்பாளா? வண்டியை மெல்ல வருடினாள். “எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மூர்த்தி சார். ஆசை தான்.. ஆனா ஏறினது இல்லியே… பயமா இருக்கு”
“ஏறு பயம் போய்டும்..” என்றான்.
முந்தியை இடுப்பில் சொருகிக்கொண்டு.. ஏறினாள். ஒரு கை பின்னால் இருக்கும் கம்பியைப் பிடிக்க ஒரு கை மூர்த்தியின் தோளில் பதிய…
பைக் கிளம்பும் முன்னே, உயிரில் சாரல் அடிக்க.. உடலில் தென்றல் தீண்ட.. மனம் ஆனந்தத்தில் திளைக்க.. அவன் சுற்றியிருந்தான் பூமியை நூறு முறை, மூர்த்தி அவன் துளசியின் கரம் பிடித்து!
பகவான் பேசுவதில்லை
அட பக்தியும் குறைவதும் இல்லை
காதலி பேசவுமில்லை
என் காதல் குறைவதும் இல்லை
மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்…